Thursday, November 13, 2014

வங்கிகளும் ஊழியர்களும்!

வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த அதே வேளையில், அரசு வங்கிகளில் அரசுப் பங்கு 52% ஆகக் குறைக்கப்படும் என்றும் இதன் மூலம் அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

வங்கி ஊழியர்களின் போராட்டம் அரசை இத்தகைய முடிவுக்குத் தள்ளியதா அல்லது அரசு இத்தகைய முடிவை எடுத்ததால்தான் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்தனவா என்ற கேள்விக்கு பதில் கிடைப்பது அரிது. அப்படியே பதில் சொல்வதாக இருந்தாலும், மழுப்பலாக, சந்தை தீர்மானிக்கும் என்று மட்டுமே சொல்ல முடியும்.

வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் இந்திய வங்கிகள் நிர்வாகத்துக்கும் இடையே தீர்வு காணப்படாத ஒரே பிரச்னை ஊழியர்களின் சம்பளம் மட்டுமே! 25% ஊதிய உயர்வு தர வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன. வேண்டுமானால் 23% ஆக குறைத்துக்கொள்கிறோம் என்கின்றன. ஆனால், இந்திய வங்கிகள் நிர்வாகம் இதற்கு இணங்க மறுக்கிறது. 11% ஊதிய உயர்வு மட்டுமே சாத்தியம் என்கிறது.

வங்கி நிர்வாகம் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளும் ஊழியர் எண்ணிக்கையும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் மிக அதிகம். அதனால், ஓர் ஊழியர் மூலம் வங்கி அடையும் சராசரி லாபம் என்பது தனியார் வங்கிகளைவிட, அரசு வங்கிகளில் குறைவாக இருக்கிறது. ஆனால், தனியார் வங்கி ஊழியர்கள் அரசு வங்கி ஊழியர்களுக்கான (ஊதியத்தின் மூலமாக ஏற்படும்) செலவோ, சராசரியாக ஓர் ஊழியருக்கு 5.6 லட்சமாகத்தான் இருக்கிறது. ஓர் ஊழியர் மூலம் வங்கிக்குக் கிடைக்கும் உழைப்பு பலன் (புரடக்டிவிடி) தனியார் வங்கியில் அதிகமாகவும் அரசு வங்கிகளில் குறைவாகவும் இருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கியில் (2010 ஆண்டு கணக்கின்படி) ஓர் ஊழியரால் கிடைக்கும் பலன் ரூ.44 லட்சம். ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.41 லட்சம். ஆனால், அரசு வங்கிகளில் ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரைதான். இதுதவிர, அரசு வங்கிகளின் ஓய்வூதியக் கடமைகள் தவிர்க்க முடியாதவை.

தனியார் வங்கிகளில் திறமையில்லாத நபர் பணியமர்த்தப்பட்டிருந்தால், அல்லது உழைப்பைத் தர மறுக்கும் ஊழியர்களை நீக்கிவிட முடிகிறது. அரசு வங்கிகளில் அதற்கு வாய்ப்பே இல்லை.

ஊழியர் சங்கங்கள் இதை ஏற்பதில்லை.

மேலும், இன்றைய வணிக அலுவல்கள் இணையத்தின் மூலம் நடைபெறுவது அதிகரித்து வரும் நிலையில், கிராமங்களில் உள்ளவர்கள் பணத் தேவையை ஏ.டி.எம். மூலமும் மற்ற சேவைகளை நகர, புறநகர வங்கிக் கிளையில் நேரடியாகவும் பெற்றால் மட்டுமே தனியார் வங்கிக்கு இணையாக நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்

படுத்த முடியும் என்று அரசு வங்கிகள் நிர்வாகம் நம்புகிறது. அதற்கு, நிறைய வங்கிக் கிளைகளை மூட வேண்டியிருக்கும். பணியாளர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியிருக்கும். புதிதாக ஊழியர்களை நியமிப்பதை நிறுத்திவைக்க வேண்டியிருக்கும். இவற்றை செய்வதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

அரசு வங்கி ஊழியர்களில் தனிநபர் மூலம் கிடைக்கும் வருவாய் அல்லது உழைப்பு பலன் (புரடக்டிவிடி) தனியார் வங்கிகளுக்கு இணையாக உயராத நிலையில், 25% ஊதிய உயர்வு என்பது வங்கி நிர்வாகத்துக்குச் சாத்தியமில்லை என்பது நிர்வாகங்களின் வாதம்.

அரசு கொடுக்கும் வேளாண் கடன், கல்விக் கடன், தொழில் கடன் உள்ளிட்ட எல்லா கடன்களும் அரசு வங்கிகள் மூலம்தான் தரப்படுகின்றன. ஆகவே, அரசு வங்கிகளுக்கு நட்டம் ஏற்படுவதும், வருவாய் குறைவாக இருப்பதும் இயல்புதான். ஆனால், அரசு வங்கிகளில் தொழில்களுக்குத் தரப்பட்டு, திரும்பி வாராத கடன்தொகையைக் கணக்கிட்டால் அதன் அளவு மிக அதிகமாக இருக்கும். பிணை இல்லாமல், தொழிலுக்கான சந்தை இருக்கிறது என்பதை வல்லுநர்கள் மூலம் தீர்மானிக்காமல், வெறும் நம்பிக்கை அடிப்படையில் கடன் கொடுப்பதும், அரசியல்வாதியின் நெருக்கடிக்கு ஆளாவதும் அரசு வங்கிகளில்தான் அதிகம்.

வங்கியின் இயக்குநர்கள் குழுவில் அரசியல் சார்பில் யார் யாரையெல்லாமோ நியமிப்பதை எதிர்த்தும், தனிநபர்களின் தொழில் திட்டத்துக்கு பல நூறு கோடி ரூபாய் கடன் வழங்குவதை எதிர்த்தும் வேலைநிறுத்தம் செய்ய முன்வராத வங்கி ஊழியர்கள், தங்கள் நலனுக்காக மட்டும் வேலைநிறுத்தம் செய்வது எந்த வகையில் நியாயம்?

52 சதவீதப் பங்குகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை தனியாருக்கு விற்கும் அரசின் முடிவை பிறகு எவ்வாறு தடுக்க முடியும்?

Source: Dinamani

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...