Wednesday, November 12, 2014

தேவையை மீறுகிறதா நமது செலவு பழக்கம்?

மீபத்தில் எனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு மூலையில் ஓர் உடற்பயிற்சி இயந்திரத்தை மூட்டை கட்டி வைத்திருந்தனர். ஏன் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டேன்.
''இது ஆன்லைன் மூலம் ஒரு பொருள் வாங்கியபோது ஆஃபர் விலையில் கிடைத்தது. வீட்டு உபயோகப்பொருள் வாங்க ஆன்லைனில் தேடியபோது, அந்தப் பொருளின் விலையோடு கொஞ்சம் கூடுதலாகப் பணம் கட்டினால் இந்த இயந்திரமும் தருவதாகச் சொன்னார்கள். எனவேதான் வாங்கினோம். ஆனால், வாங்கிய நாளிலிருந்து இதைப் பயன்படுத்தவே இல்லை'' என்றனர். தேவைப்படாத பொருளுக்கு எதற்குப் பணத்தை விரயம் செய்தீர்கள் என்றால், சரியான பதில் இல்லை.

இதைப்போல இன்னொரு அனுபவமும் சமீபத்தில் கிடைத்தது. நண்பர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் மனைவி ஒரு தையல் இயந்திரம் வாங்கி வந்திருந்தார். இத்தனைக்கும் அவருக்கு தையல் தொழில் தெரியாது. இனி, தையல் கலையைக் கற்றுக்கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டால், இல்லை என்று சொன்னார்கள். பிறகு ஏன்தான் இந்த தையல் இயந்திரத்தை வாங்கினீர்கள் என்று கேட்டேன். ''எனது தோழி ஒருத்தி வைத்திருக்கும் எல்லா பொருட்களும் நானும் வைத்திருக்கிறேன். அவளுக்கு தையல் தெரியும், எனக்கு தையல் தெரியாது, என்றாலும் அவள் வாங்கிவிட்டாள் என்பதற்காக நானும் வாங்கினேன்'' என்றார். இந்தப் பதிலை கேட்டபோது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

நமது பொருளாதாரப் பழக்கவழக்கம் சமீப காலங்களாக மிகப் பெரிய மாற்றம் கண்டுவருகிறது என்பதைத்தான் இந்த இரு சம்பவங்களும் எடுத்துச் சொல்கின்றன. நுகர்வு மோகம் அதிகரித்து வருவதுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். மேலும், மக்களின் சேமிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

 தீவிரமான நுகர்வு பழக்கத்தின் விளைவு என்னவாகிறது? வாங்குகிற பொருள் நமக்குப் பயன்படுமா என்பது குறித்து சிந்திப்பதில்லை. அதற்குக் கொடுக்கும் விலை சரியானதுதானா என்பதை ஆராய்வதும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, நான் செய்கிறேன் என்கிறது இந்தத் தலைமுறை.

நமது பொருளாதாரப் பழக்கவழக்கம் பெருமளவில் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது. நமது மக்கள் தங்களது வருமானத்தில் சேமிப்புக்கும் ஒரு முக்கியமான இடத்தை ஆரம்பக் காலந்தொட்டே கொடுத்து வருகின்றனர். இதைக் குடும்பச் சேமிப்புப் பழக்கம் என்பார்கள்.

இந்திய பொருளாதாரத்தின் முக்கியமான தூண் இந்தக் குடும்பப் பொருளாதார அமைப்புதான். எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்றாலும், அதன் பயன்பாடு என்ன, அது எவ்வளவு நாட்களுக்கு உழைக்கும், அந்தப் பொருளுக்குக் கொடுக்கும் மதிப்பு சரியானதுதானா என்பதை ஆராய்ந்த பிறகே செலவு செய்வார்கள்.

அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, அமெரிக்க மக்கள் அதிகக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்டாததுதான். அப்போது அமெரிக்காவில் பலரும் தங்கள் வருமானத்தைவிடவும் அதிகமாகக் கடன் வாங்கியிருந்தார்கள். தங்களது தேவைக்கும் அதிகமான நுகர்வு பொருட்களை வாங்கி அடுக்கி இருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அமெரிக்கா நிதி நெருக்கடியில் சிக்கியது.

ஆனால், அந்த நெருக்கடி நிலையிலும் இந்திய பொருளாதாரத்துக்குப் பெரிய பாதிப்பில்லை. காரணம், நமது இந்திய பொருளாதாரத்தின் சேமிப்பும் யோசித்து யோசித்துச் செலவு செய்யும் குணமும்தான்.

இதைத் தாண்டியும் இப்போதெல்லாம், ஆஃபர்களுக்காகப் பொருட்கள் வாங்குவதும், அடிக்கடி பர்ச்சேஸ்செய்வதும் ஹாபி என்கிற மாதிரி நமது செலவு பண்புகள் மாறி வருகிறது. நமது செலவுப் பழக்கம் ஏன் இப்படி மாறிவருகிறது என நிதி ஆலோசகர் சுபாஷினி அவர்களிடம் கேட்டோம்.

''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப மக்களின் பொருளாதாரப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றம் தவிர்க்க முடியாது. என்றாலும், இப்படியான நுகர்வுப் பழக்கம் நமது இந்திய பொருளாதாரத்துக்குப் புதியது. பொருளையோ, சேவையையோ எதை வாங்கினாலும் அது நமக்கு முற்றிலும் பொருத்தமானதா, பயன்படுத்துகிறோமா என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை கவனித்து வாங்கும் பண்பு நம்மிடம் உள்ளது.

அடிக்கடி ஷாப்பிங் செல்வது மனநிறைவு கொடுக்கிறது என்றாலும், அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன என்பதை யோசிக்க வேண்டும். வருமானத்தில் இத்தனை சதவிதம்தான் இதர செலவுக்கு ஒதுக்க முடியும் என்றால், அந்த வரம்புக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மனதுக்கு நிறைவு தருகிறது என்பதற்காக எல்லா வரம்புகளையும் கடந்தால் நெருக்கடிகள் வருவதைத் தவிர்க்க முடியாது.

வருமானத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்யும் குடும்பத்தில் இதுபோன்ற சிக்கல்கள் இருக்காது. திட்டமில்லாமல் செலவு செய்தால் அவசரத்துக்கு மருத்துவச் செலவுக்குகூட திண்டாட்டமாகிவிடும். மன திருப்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், அதற்காக என்ன விலை கொடுக்கிறோம் என்பதைப் பார்க்காமலேயே வாங்கிவிட முடியாது.

நமது குடும்ப வருமானத்திலிருந்து செலவு செய்யத் திட்டமிடும்போது, ஒவ்வொன்றுக்கும் இத்தனை சதவிகிதம் என பிரித்துக்கொள்ள வேண்டும். கடன்களுக்கும், ஓய்வுக்காலத் திட்டமிடலுக்கும் முதன்மை கொடுங்கள். அதற்கடுத்து சேமிப்பு, வீட்டுச் செலவுகள், மருத்துவம், குழந்தைகள் கல்வி என்று பிரித்துக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு மூன்றாவதாகத்தான் திட்டமில்லாத செலவுகளுக்கு ஒதுக்க வேண்டும்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைகள் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால், அந்தத் தேவை அப்போதைக்கு அத்தியாவசியமா என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் செலவு வீட்டில் உள்ள அனைவருக்கும் பயன்படுமா என்பதை அலச வேண்டும். குறிப்பாக, வீட்டுக்கு ஏசி இருந்தால் நன்றாக இருக்கும் என யோசிக்கிறீர்கள். இது தேவையா, அத்தியாவசியமா என்பது உங்களின் மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கு உட்பட்டது. ஆனால், நிதித் திட்டமிடல் இல்லாமல் இந்தச் செலவு செய்தால் பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டிக்கொள்வீர்கள்.

நமது அடிப்படை தேவை என்ன, எந்த அடிப்படையில் பொருளை வாங்குவது என்பது குறித்த குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ளும்போதுதான். நமது பணத்துக்கும் பங்கமில்லாமல், மனதுக்கும் நிம்மதியாகப் பொருட்களை வாங்க முடியும்" என்றார்.

ஒரு போன் வைத்திருப்பது தேவையாக இருக்கிறது. ஆனால், இன்றைய தலைமுறை இரண்டு போன்களை ஒரே சமயத்தில் வைத்திருப்பதும், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை போன் மாடல்களை மாற்றிக்கொண்டிருப்பதும் நமது செலவு பழக்கத்தின் சிறந்த அறிகுறியா என்பதை யோசிக்க வேண்டும்.

- நீரை.மகேந்திரன்

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...