Thursday, November 6, 2014

கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை

தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே

சொல்

பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?

மூளையில் எப்போது
முள்முளைத்து உனக்கு?

மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே

நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்

சாகவில்லை
நீயே அழுகிறாய்

கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை

உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?

மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?

உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா

அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்

உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்

பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?

வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பியபோது

கைந்நிறையப் பூக்கள்

இப்போதென்ன...
பைந்நிறைய
சவப்பெட்டி ஆணிகள்...?


வாழ்க்கையோடு
உடன்பாடு

மனிதரோடுதான்
முரண்பாடா?

மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி


  • கவிஞர் : வைரமுத்து

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...