Saturday, November 21, 2015

தாயை கவனிக்காத மகன்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

Return to frontpage

தாயை கவனிப்பது மகன்களின் தார்மீக கடமை. அந்த கடமையில் தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் பொன்தேவகி (70). இவரது மகன்கள் இளங்கோவன், ராஜ்குமார், ஒரு மகள் இளமதி. மகன்கள், மகளிடம் பராமரிப்பு செலவு கோரி பொன்தேவகி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மகன்கள் இருவரும் தலா ரூ.3 ஆயிரம், மகள் ரூ.5 ஆயிரம் மாதம்தோறும் வழங்க வேண்டும் என 15.9.2014-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இளங்கோவன் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், தன் தாயார் தனது கடமைகளை சரியாக நிறைவேற்றவில்லை. தந்தையின் சொத்தை அபகரிக்க முயன்றார். ஒரு தாயார் குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றால் மட்டும் போதாது. அந்த குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். அதை தாயார் செய்யவில்லை. எனவே, அவருக்கு பரமரிப்பு செலவு வழங்க வேண்டியதில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன் விசாரணைக்கு வந்தது. இளங்கோவனின் குற்றச்சாட்டுகளை பொன்தேவகி மறுத்தார். மகன்கள் இருவரையும் வளர்த்தேன். மகள் வீட்டில் வசித்து வருகிறேன். இதனால் எனது வீட்டை மகளுக்கு வழங்கினேன். மகன் சொல்வது உண்மையல்ல என அவர் கூறினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பிள்ளைகளிடம் பராமரிப்பு செலவு கேட்டு தாய் ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்தது துரதிருஷ்டவசமானது. பெற்றோரை பிள்ளைகள் கவனிக்க வேண்டியது சட்டரீதியான, அடிப்படை உரிமையாகும். இயற்கை, தார்மீகம் மற்றும் மனித உரிமையும் ஆகும். இந்த உரிமைகளை பிள்ளைகள் வழங்க மறுக்க முடியாது. தர்மப்படி பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். அந்த கடமையில் தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கில் தாயின் கடமைகளை கூறும் மனுதாரர் அவரது கடமையை நினைத்துப் பார்க்கவில்லை.

பிறக்கும்போது குழந்தை அழுவதைக் கேட்டு மட்டுமே தாய் சிரிப்பார். மற்ற நேரங்களில் குழந்தைகள் அழுவதைப் பார்த்து தாய் சிரிப்பதில்லை. மனுதாரர் தாயாருக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். 2-வது மகன் வெளிநாட்டில் வசிக்கிறார். மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறார். அவர் தாயாருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். மகள் தனது தாயாருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்குவதாகக் கூறியுள்ளார். ஆனால் அவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் அவர் தாயாருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கினால் போதும் என நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC

  Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC 10.08.2026 The petitioner contended that his...