Friday, June 23, 2023

NEWS TODAY 23.03.2023
































 

வாக்குறுதிகளில் கவனம் தேவை

வாக்குறுதிகளில் கவனம் தேவை

DINAMANI 

முன்னோர் அடிக்கடி பயன்படுத்திய ஒரு சொலவடை"அரைக்காசு உத்தியோகமானாலும் அரண்மனை உத்தியோகம்' என்பதாகும்.
இதற்கு முக்கியமான காரணம், அரசு ஊழியர் ஒருவரின் மாத ஊதியம் மாதத்தின் முதல் நாளிலேயே வழங்கப்பட்டுவிடுவதுதான். தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் அந்தந்த மாதத்தின் இறுதி வேலைநாளிலேயே அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அவருடைய ஊதியம் வரவு வைக்கப்படுகின்றது. இதன் மூலம் அந்த ஊழியர்களை நம்பியிருக்கும் குடும்பங்களுக்கான வரவு செலவுகளை திட்டமிடுவதிலும் அத்திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏதும் இல்லாமல் இருந்துள்ளது. அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியமும் இவ்வாறே சரியான நேரத்தில் வழங்கப்பட்டதன் மூலம் அம்மூத்த குடிமக்களின் சமூகப் பாதுகாப்பு பேணப்பட்டு வந்திருக்கிறது.

தற்பொழுது இந்த நிலைமை மாறிக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. வட இந்தியாவில் உள்ள ஹிமாசல பிரதேசத்தின் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த பதினையாயிரம் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய கடந்த மாத (மே) ஊதியம் இம்மாதம் பதினான்காம் தேதி வரை வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. கரோனா தீநுண்மிப் பரவல் சமயத்தில் அம்மாநில ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் இன்றுவரை சரிசெய்யப்படவில்லை என்று அம்மாநில அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். விரைவில் அனைவருக்கும் மே மாத ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அம்மாநில அரசின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதனால், அரசு ஊழியர்களின் அமோக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாகுறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் மாநில அரசிடம் இல்லை என்பதே உண்மை.

ஏற்கெனவே எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் அம்மாநிலம் தற்பொழுது ஆயிரம் கோடி ரூபாயை ஓவர் டிராஃப்ட் ஆகப் பெற்றுள்ளது எனவும், மேலும் பத்தாயிரம் கோடி ரூபாய் கிடைத்தால்தான் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மே மாத ஊதியத்தை வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர அம்மாநில அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், பொதுப்பணித் துறை பணிகளுக்கான செலவினங்கள் என்று மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரட்ட வேண்டியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட அம்மாநில ஆளும் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டு ஒன்றுக்கு இருபதாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதற்கிடையில், நமது மத்திய - மாநில அரசுகளின் கடன் வாங்கும் உச்சவரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் ஐந்து சதவிகிதத்தில் இருந்து மூன்றரை சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இக்காரணத்தால் ஹிமாசல பிரதேச அரசினால் போதிய கடனைத் திரட்ட முடியாத நிலைமை உள்ளது. ஹிமாசல பிரதேசம் காட்டிய வழியில் பயணிக்க மேலும் சில மாநிலங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் முந்நூறு யூனிட் மின்சாரம் இலவசம் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளைக் கொடுத்துள்ள பஞ்சாப் மாநில அரசுக்கு அவற்றை நிறைவேற்ற சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. நமது அண்டை மாநிலமான கர்நாடகம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய், குடும்பம் ஒன்றுக்கு இருநூறு யூனிட் இலவச மின்சாரம், வீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலையைக் குறைத்தல் போன்ற பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் தொகை அறுபதாயிரம் கோடி ரூபாய் என்று ஒரு கணக்கீடு கூறுகின்றது. தமிழகத்திலும் காலங்காலமாக பல்வேறு இலவச வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அவற்றை நிறைவேற்ற கோடிக்கணக்கில் பணம் செலவிடப் பட்டும் வருகிறது. இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி போன்றவற்றை ஈடுகட்டுவதற்கான மானியத்தொகை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இருந்தாலும், புலிவாலைப் பிடித்த கதையாக இச்சலுகைகள் முடிவின்றி நீண்டுகொண்டே செல்கின்றன. ஹிமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கான ஊதியம் தாமதப்படுவது என்பது எல்லை மீறிய வாக்குறுதி அரசியலால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றே. இத்தகைய போக்கு நீண்ட கால நோக்கில் நமது மாநில நிர்வாகங்களை மீளாக்கடனில் மூழ்கடித்துவிடும். இந்நிலையில், எப்படியும் தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நிதி ஆதாரத்தை அதிகரிக்கவும், அந்நிதி ஆதார எல்லைக்குள் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்துத் தேர்தலை எதிர்கொள்ளவும் நமது அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டுப் பிறகு திணறுவதைக் காட்டிலும், தகுதியுள்ள ஏழைகள், நடுத்தர நிலையிலுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு மட்டும் உரிய சலுகைகளை வழங்குவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாநிலங்களின் பொருளாதார சுயசார்புக்கு முக்கியத்துவம் தர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Dailyhunt

 

ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை

ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை

ய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்த கடிதத்தை அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகள், சென்னையில் உள்ள சம்பளம் வழங்கும் அதிகாரி ஆகியோருக்கு, கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் கே.விஜயேந்திர பாண்டியன் அனுப்பியுள்ளாா். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- ஓய்வூதியதாரா்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்தை யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இருந்து ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் எடுக்கப்பட்டு, அவா்களுக்கு மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையில் புகைப்படம் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில், அடையாள அட்டையில் தங்களின் புகைப்படத்துடன், துணைவரின் புகைப்படத்தையும் ஒட்டி புதிதாக அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான தகுந்த படிவங்களை ஓய்வூதியதாரா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஒளிவருடல் செய்யப்படுவதுடன், புகைப்படங்களும், தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன்பின்பு, பயனாளிகளே தங்களுக்கான அடையாள அட்டையை மின்-அட்டையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

படிவங்கள் விநியோகம்: காப்பீடு அடையாள அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்தவும், புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும் யுனெடைட் இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குரிய வரையறுக்கப்பட்ட படிவங்களை அனைத்து கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலகங்களில் அளிக்கும்படி அந்த நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரா்கள் ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை அளிப்பதற்கான நோகாணலுக்காக கருவூல அலுவலகங்களுக்கு வருவா். அப்போது, அந்தப் படிவங்களை அவா்களிடம் அளித்து பூா்த்தி செய்து பெறலாம்.

இந்தப் படிவங்களின் அடிப்படையில், அடையாள அட்டையில் ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் திருத்தப்படுவதுடன், புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும். இதன்பின்பு, மின்-அடையாள அட்டையாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தப் பணியை மேற்கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென உள்ள காப்பீட்டு அதிகாரியை, கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலா்கள் தொடா்பு கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அவா்களிடம் இருந்து ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை விவரங்களைத் திருத்தம் செய்வது மற்றும் புகைப்படத்தை ஒட்டுவதற்குரிய தகுந்த படிவங்களைப் பெற வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கும் போது உரிய ஒப்புகைச் சான்றினை பெற வேண்டியது அவசியமாகும். இதனை அத்தியாவசியமான பணியாகக் கருதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் கே.விஜயேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
Dailyhunt

 

NEWS TODAY 22.03.2023


























 

NEWS TODAY 2.5.2024