Friday, February 20, 2015

ரயில் இருக்கு.. ஆனா பெட்டியக் காணோமே.. பயணிகளின் தவிப்பு



சென்னை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரான ஏற்காடு சூப்பர் பாஸ்ட் ரயிலில் ஊழியர்களின் அஜாக்ரதை காரணமாக ஒரு பெட்டியே இணைக்கப்படாமல், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

அடிக்கடி ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏற்கனவே இந்த அனுபவம் நேர்ந்திருக்கலாம். என்றாலும் இதனை சொல்லித்தானே ஆக வேண்டும்.

விஷயம் என்னவென்றால், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 3 பெட்டி இணைக்கப்படவில்லை. அந்த பெட்டியில் பயணிக்க முன் பதிவு செய்த பயணிகள் ரயில் முழுவதையும் பல முறை சுற்று வந்தும் எஸ் 3 பெட்டியை காணாமல் தவித்துப் போயினர்.

பிறகு இது குறித்து டிக்கெட் பரிசோதகருக்கு தெரிவிக்கப்பட்டு, அவசர அவசரமாக ஊழியர்கள் எஸ் 3 பெட்டியை மாட்டியுள்ளனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகவே வண்டி புறப்பட்டுள்ளது.

எஸ் 3 பெட்டியில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தான் திண்டாட்டமாகப் போய்விட்டது.

போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!





கடந்த ஜனவரி 27 ஆம் தேதி கரூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர், மது போதையில் பள்ளி உடையோடு போதையில் மயங்கி கிடந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருச்சி ஜங்ஷன் பகுதியில் நேற்று மாலை போதையில் ஒரு பெண் ரோட்டில் மயங்கி கிடந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய கரூர் மாணவர், கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றபோது போதையின் உச்சத்தால் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். பள்ளி சீருடையில் மாணவர் ஒருவர் போதையில் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த மாணவனை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் அவரால் எழ முடியவில்லை. இதையடுத்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து அந்த மாணவனை அழைத்துச் சென்றனர்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதும், உடனே அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த அந்த மாணவரிடமும், அவரது பெற்றோரிடமும், பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். அத்தோடு, பள்ளிக்கு ஒழுங்காக வராமை, பள்ளிச் சீருடையில் மது அருந்தி போதையில் மயங்கி கிடந்தது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அந்த மாணவரை நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருச்சி ஜங்சன் பகுதிகளில் நேற்று மாலை சிவகாமி என்ற பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போதையில் நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்து கிடந்தார். போலீஸாரும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். நீண்ட நேரத்திற்கு பின் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண், கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் சரக்கு வாங்கி குடிப்பது வழக்கமாம். நேற்று காசு அதிகமாக கிடைத்ததால் கொஞ்சம் ஓவராக போயிடுச்சு என்று போதை தெளியாமல் உளறி இருக்கிறார். சமூகத்தின் அடித்தளமாக விளங்கும் பெண்களும் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்களே என்று அங்கிருந்தவர்கள் கூறிச் சென்றனர்.

புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது...

இந்தியாவில் 1950-60களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் 19.5 சதவீதம். இதுவே, 1981-86-க்கு இடையே பிறந்தவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோர் 74.3 சதவீதம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மேலும் மது மட்டுமல்லாமல், எந்தவொரு கெட்டப் பழக்கமும் வீட்டிலிருந்தே துவங்குகிறது என்கிறார்கள் ஆய்வர்கள்.

தற்போதெல்லாம் பிறந்த நாள், திருமணம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு என எதற்கெடுத்தாலும் நண்பர்களுக்கு 'பார்ட்டி' கொடுப்பது என்பது ஒரு கட்டாய நிகழ்வாகவே உள்ளது. அதிலும் அந்த பார்ட்டிகளில் முக்கிய இடம் பிடித்திருப்பது மதுபானம்தான்.

மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மதுக்கடைகளின் விற்பனை மற்ற நாட்களைவிட நான்கு மடங்கு அதிகரிக்கிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோர் பணிபுரியும் இடம், வீடு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், சுற்றத்தாரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

உலக அளவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றும், இவர்களில் 12-25 வயதில் உள்ளோர் அதிகம் உள்ளனர் என்றும், நகர்ப்புறங்களிலேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில், இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, போக்குவரத்து பணியில் ஈடுபடுவோர், தெருவோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

உலக அளவில் போதை பொருட்களை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சமாம் (15 முதல் 64 வயது). இதுமட்டுமல்லாமல், 25 கோடியே 10 லட்சம் பேர் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்தி இருக்கிறார்களாம். கடந்த 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சகத்தின் நேஷ்னல் சர்வே நிறுவனம் 4,648 பெண்களிடம் நடத்திய ஆய்வில் 8 சதவிகித பெண்கள் போதையால் சீரழிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தோராயமாக, 6.25 கோடி பெண்களில் 10 லட்சம் பெண்கள் நாடுமுழுக்க குடி பழக்கத்திற்கு அடிமையாக ஆரமித்துள்ளார்கள் என எச்சரித்துள்ளது. உலக அளவில் நடைபெறும் தற்கொலைகளில் 50 விழுக்காடு மது குடிப்பதனாலோ அல்லது போதைப்பொருட்களாலோ ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்கள். இதில், இளம் வயது தற்கொலைகளே அதிகமாக காணப்படுகிறது.

மது பழக்கம் நமது சமூகத்தையே சீரழித்து வருகிறது. மதுவினால் தங்களது தாலிக்கு ஆபத்து வருகிறது என்று மதுக்கடைகளை மூட போராட்டம் நடத்தும் பெண்களில் ஒரு பிரிவினரே, தற்போது தாராளமாக மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று போதையில் தள்ளாடும் பெண்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

அரசாங்கம் தனது வருமானத்திற்காக மதுக்கடைகளை தாராளமாக திறந்து வைத்துள்ளதால் முதலில் ஆண்கள் மதுவிற்கு அடிமையானார்கள். அது வேகமாக வளர்ந்து தற்போது மாணவர்கள் மற்றும் பெண்களிடமும் பரவி அவர்களையும் சீரழிக்க ஆரம்பித்துள்ளது. விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவருவதே இதற்கான தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சி.ஆனந்தகுமார்

கோணங்கள் 17 - தினசரி கல்யாண விருந்து!...கேபிள் சங்கர்



சினிமா என்றதும் நடிகர்கள், வசூல், வெற்றி ஆகியவற்றைவிட, சுவாரசியமான விஷயம் சாப்பாடு. மென்பொருள் நிறுவனங்களில் நவீன கேண்டீன்களில் அது கிடைக்கும் என்றாலும், அதற்குரிய பணத்தை அவர்களின் சம்பளத்தில் பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள். உலகிலேயே சாப்பாடும் போட்டு, சம்பளமும் கொடுக்கிற ஒரே இடம் சினிமாவாக மட்டுமே இருக்கும். பத்திரிகைகளில் ஆகட்டும், ஊடகமாகட்டும், எம்.ஜி.ஆர். தன்னுடன் நடிக்கும், வேலை பார்க்கும் அனைவருக்கும் தனக்குக் கிடைக்கும் சாப்பாடே கிடைக்க வேண்டும் என்று சொல்வாராம். அஜித் படப்பிடிப்பின்போது பிரியாணி செய்து போடுவார் என்பது சினிமா பக்கத்துக்கு எப்போதும் சூடான செய்தி.

காலையில் டீ, காபி, சிற்றுண்டி வகையில் இட்லி, தோசை, வடை, கோதுமை உப்புமா, ராகி, பூரி மசால், அல்லது சென்னா மசாலா, மூன்று வகை சட்னி, வடைகறி, இத்துடன் பழைய சோறு வெங்காயமும் கிடைக்கும். இதற்கெனத் தனிக் கூட்டம் ஒன்று உண்டு. இது துணை நடிகர்கள் உள்ளிட்ட பொதுப்பிரிவினருக்கு. தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர்களுக்குத் தனி.

உணவுக் குழு படப்பிடிப்புத் தளத்துக்குக் காலையில் வந்தவுடன் இளநீரில் ஆரம்பிப்பார்கள். குடிப்பதற்கு கேன் தண்ணீர். இட்லி கொஞ்சம் சின்னதாய், வெள்ளையாய், பூப்போல இருக்கும். சில சமயங்களில் காலையில் அசைவப் பிரியர்கள் கூட்டத்தில் இருந்தால் சிக்கன் குழம்போ, பாயாவோ நிச்சயம் வெளியிலிருந்து வாங்கி வைக்கப்படும்.

வெயில் காலமாயிருந்தால் மதிய உணவு இடைவேளைக்கு முன் பொதுப் பிரிவினருக்கு மோர், சிறப்புப் பிரிவினருக்குப் பழச்சாறு/ குளிர்பானம் தரப்படும், இது தவிர காபி டீ என்பது பட்டியலில் வராமல் எப்போதும் கிடைத்துக்கொண்டேயிருக்கும். மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளையென்றால் பதினோரு மணிக்கே தயாரிப்பாளர் தயாராகிவிடுவார்.

மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்த உணவுகளைப் பிரிப்பது என்பது ஒரு பெரிய வேலை. பொதுப் பிரிவினருக்கு அடுத்த நிலையில், இரண்டாவது உதவி இயக்குநர் மற்றும், மற்ற தொழில்நுட்ப உதவியாளர்களை மூன்றாம் நிலையில் வைப்பார்கள். இரண்டாம் நிலையில் முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இருப்பார்கள்.

ஒரு பொரியல், கூட்டு, கலந்த சாதம், அப்பளம், சாம்பார், மோர்க் குழம்பு (அ) காரக்குழம்பு, ரசம், மோர் எனச் சைவ வகைகளும், உடன் ஒரு சிக்கன் குழம்பு அல்லது மீன் குழம்பும் பொதுப் பிரிவினருக்கு மதிய உணவாகக் கிடைக்கும். சமயங்களில் ஊறுகாய்க்குப் பதிலாக பீட்ரூட்டுடன் மிளகாயை வைத்து அரைத்துக் கொடுக்கப்படும் சட்னி அட்டகாசமாய் இருக்கும். இரண்டாம் நிலைப் பிரிவினருக்கு இதே அயிட்டங்களுடன் விருப்பத் தேர்வாக மேலும் ஒரு குழம்பு வேறு ஏதாவது பொறித்த அசைவ உணவு சேர்ந்திருக்கும்.

முதல் நிலையில் இருப்பவர்களுக்கு இரண்டு மூன்று அசைவ அயிட்டங்கள், சப்பாத்தி, தால், நல்ல சாதம், அப்பளத்துடன் கொஞ்சம் சிப்ஸ் எனப் பிரித்து வைப்பார்கள். இடங்களுக்கு ஏற்பப் பரிமாறும் முறையில் கொஞ்சம் கொஞ்சமாய் மரியாதையும், கூடும்.

மதிய சாப்பாடு முடிந்த மாத்திரத்தில் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு டீ, காபி களேபரங்கள் ஆரம்பமாகிவிடும். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது போல் கொஞ்சம் அதிகமாய்ச் சாப்பிட்டவர் களுக்கென்றே எலுமிச்சை டீ போட்டுத் தருவார்கள். அதை அருந்திய மாத்திரத்தில் நிச்சயமாய் தூக்கம் போய்விடுவது உறுதி. பிறகு படப்பிடிப்பு முடியும்போது ஒரு இனிப்பு, காரத்தோடு முடிப்பார்கள். அது சுவீட் பணியாரம், மசால் வடையாய் இருக்கலாம்.

அல்லது காராசேவுடன், உதிரி பூந்தியாகவும் இருக்கலாம். வழக்கமாய் மாலையோடு படப்பிடிப்பு முடிந்துவிடும். சமயங்களில் இரவு படப்பிடிப்பு தொடரும் போது இரவு உணவும் அதே போல வந்துவிடும். சப்பாத்தி, இட்லி, சட்னி, பரோட்டா, குருமா, சமயங்களில் இடியாப்பம், நான், சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என தகுதி வாரியாய்ப் பிரித்துக் கொடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் தயிர் சாதம் நிச்சயம் உண்டு.

படப்பிடிப்பின் போது உணவு என்பது கல்யாண வீட்டின் பரபரப்பு போன்றது. தயாரிப்பாளர், பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பரிமாறுதல் என்பது மாப்பிள்ளை வீட்டார் கவனிப்பு போல. கொஞ்சம் கூடக் குறைந்து இருந்தால் பஞ்சாயத்து ஆரம்பமாகிவிடும். இந்தப் பொறுப்பை வகிப்பவர்களை ‘புரொடொக்‌ஷன்’என்று அழைப்பார்கள். இவர்களது வேலை படக் குழுவில் இருப்பவர்களுக்கான உணவு மற்றும் தண்ணீரை அவர்கள் இருந்த இடத்திலேயே கொடுத்துப் பரிமாறுவது மட்டுமே. ஒரு சாப்பாட்டுக்குக் குறைந்தபட்சம் 125 ரூபாயிலிருந்து 250 ரூபாய்வரைகூட ஆகும்.

படப்பிடிப்புக்கு என்றே சமையல் செய்து கொடுக்கும் மெஸ்கள் சாலிகிராமம் முழுவதும் நிறைய உள்ளன. காரக்குழம்பை வைத்துப் பார்த்தாலே சொல்லிவிடலாம் யார் மெஸ்ஸிலிருந்து சாப்பாடு வந்திருக்கிறது என்று. பெரும்பாலும் ஒவ்வொரு படத்துக்கும் புரொடக்‌ஷன் பார்ப்பவர்களுக்கும் மெஸ்களுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் இருக்கும். இவர்கள் தரும் உணவைத் தவிர, சைடு டிஷ்ஷாக சிக்கன், மட்டன், டிபன் வகையறாக்களை ஓட்டலிருந்தும் வாங்கி வரச் சொல்லுவார்கள்.

உதாரணமாகப் பிரபல அசைவ உணவகங்களிலிருந்து விதவிதமாய் உணவு வாங்கி வரச் சொல்லி எல்லாவற்றிலும் செல்லமாய் ஒரு கடி கடித்துச் சாப்பிடும் ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நடிகர் பிரபு படப்பிடிப்பில் இருந்தால் அவரது வீட்டிலிருந்து உணவு சமைத்து வந்துவிடுமாம். அதுவும் ஊர்வன, பறப்பன, என வகை வகையாய். சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டால் நாக்கில் நீர் ஊறும்.

இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே.

நடிப்பைத் துறந்த படைப்பாளி!...பிரதீப் மாதவன்

‘காரைக்கால் அம்மையார்’ படப்பிடிப்பில் சிவகுமார், ஸ்ரீவித்யா, ஏ.வி.எம். ராஜன் ஆகியோருக்கு காட்சியை விளக்குகிறார் ஏ.பி.என்.

நடிகர் திலகத்தின் திரைப் பயணத்தின் மைல்கல்லாக அமைந்த படங்கள் பல. அவற்றில் நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மூன்றையும் அவரது ரசிகமணிகள் தலையில் தூக்கி வைத்துச் சீராட்டியிருக்கிறார்கள். இந்தப் படங்களின் கர்த்தா ஏ. பி. நாகராஜன். தமிழ் நாடகம் தந்த நல்முத்து இவர். புராணத்தை மட்டுமே வைத்துக் காலம் தள்ளிக்கொண்டிருந்த தமிழ் நாடகத்துக்குள் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்திப் புது ரத்தம் பாய்ச்சியவர்கள் டி.கே.எஸ் சகோதரர்கள்.

இவர்களது மதுரை பால சண்முகானந்த சபா நாடகக் குழுவில் பயிற்சி பெற்று உருவானவர்தான் ஏ.பி. என். அன்று இளம் சிறுவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்து அவர்களைப் பெண் வேடங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதுபோன்ற நாடக சபாக்களில் சுட்டுப்போட்டாலும் பெண் பிள்ளைகளைச் சேர்க்க மாட்டார்கள். மதுரை பால சண்முகானந்த சபா பின்னாளில் டி. கே. எஸ் நாடக சபா என்று பெயர் மாறியபோது அதில் பத்து வயதுச் சிறுவனாகச் சேர்த்துவிடப்பட்டார் ஏ. பி. நாகராஜன். அவரைச் சேர்த்துவிட்டவர் அவருடைய பாட்டி மாணிக்கத்தம்மாள்.

கொங்குச் சீமையின் தமிழ் விளக்கு

ஈரோடு மாவட்டத்தில் அக்கம்மாபேட்டை என்ற சிற்றூரில் பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்த்தார். பாட்டி சிறந்த கதைசொல்லியாக இருந்தார். கதையின் இடையிடையே பாடியும் காட்டுவார். இப்படிப் பாட்டி சொன்ன இதிகாசக் கதைகளைக் கேட்டு வளர்ந்த நாகராஜன் பாட்டி பாடிக்காட்டிய பாடல்களைக் கிளிப்பிள்ளை போலத் திரும்பிப் பாடலானார்.

அவரது திறனறிந்தே டி.கே.எஸ். நாடகக்குழுவில் சேர்த்துவிட்டார் பாட்டி. தனது பதினைந்தாவது வயது முதல் ஸ்திரி பார்ட்டுகளில் நடிக்க ஆரம்பித்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ்பெற்ற சமூக நாடகமாக விளங்கியது ‘குமாஸ்தாவின் பெண். அதில் கதாநாயகியாக நடித்த நாகராஜனுக்கு மற்ற சபாக்களில் ஸ்திரி பார்ட் போட அழைப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் தனது இருபதாவது வயதில் பெண் வேடங்களில் நடிக்க விருப்பமின்றிச் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். அங்கே நாகராஜனுக்கு நண்பர்களாகக் கிடைத்தவர்கள் சிவாஜி கணேசனும், காக்கா ராதாகிருஷ்ணனும். ஏற்று நடிக்கும் தனது கதாபாத்திரங்களுக்கான வசனத்தைக் கதைக்குத் தக்க, தாமே திருத்தி மாற்றி எழுதிக்கொண்டார். இதனால் நாடகாசிரியர்களுடன் நாகராஜனுக்குக் கடும் கருத்துப் பிணக்கு ஏற்பட்டது. சில வருடங்களுக்குப் பின்னர் சக்தி நாடக சபாவிலிருந்தும் வெளியேறித் தனது 25வது வயதில் பழனி கதிரவன் நாடக சபா என்ற தனி சபாவைத் தொடங்கினார்.

ஏ.பி. என்னின் ‘நால்வர்’ நாடகம் புகழ்பெறத் தொடங்கியது. இந்த நாடகத்தை சங்கீத பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. இதற்காக நாடகக் கதையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து திரைக்கதை வசனம் எழுதினார் நாகராஜன். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையில் தஞ்சை ராமைய்யா தாஸ் பாடல்கள் எழுதிய இந்தப் படத்தில், கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

படம் வெற்றிபெற்றது. கதாநாயகனாகச் சிறந்த நடிப்பைக் கொடுத்தது மட்டுமல்ல, நல்ல வசனமும் எழுதியதற்காகப் பாராட்டப்பட்டார். அடுத்து வந்த ஆண்டுகளில் பெண்ணரசி (1955), நல்லதங்காள் (1955) ஆகிய படங்களில் கதாநாயகனாகத் தொடர்ந்ததோடு தான் நடிக்கும் படங்களுக்குத் தொடர்ந்து அழுத்தமாகவும் ஈர்க்கும் விதமாகவும் வசனம் எழுத ஆரம்பித்தார் ஏ.பி. நாகராஜன். இதனால் அவருக்குத் திரைக்கதை வசனம் எழுத வாய்ப்புகள் குவிந்தன. இயக்குநர் கே. சோமுவின் படக்குழுவில் எழுத்தாளராக நிரந்தரமாக இடம் பிடித்தார். நடிப்பைத் துறந்து படைப்பை கைகொண்டார்.

வார்த்தை வேந்தர்

நாடக வசனங்களின் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. நாடக வசனங்களின் சாயலே திரைப்பட வசனங்களிலும் தாக்கம் செலுத்தியபோது கொங்கு வட்டார வழக்கில் ‘மக்களைப் பெற்ற மகராசி’(1957) படத்துக்கு வசனம் எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ஏ.பி.என். ‘டவுன்பஸ்’, ‘நான் பெற்ற செல்வம்’ஆகிய படங்களின் வெற்றியில் அவரது வசனங்கள் முக்கிய இடத்தை எடுத்துக் கொண்டன. அடுத்த ஆண்டே கே.சோமு இயக்கத்தில் ராமராவ் ராமனாகவும் சிவாஜி பரதனாகவும் நடித்த ‘சம்பூர்ண ராமாயணம்’(1958) படத்துக்கும் வசனம் எழுதினார் நாகராஜன்.

இந்தப் படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி பரதன் பேசும் வசனங்களைக் கவனித்து “பரதனின் பாசத்தை மிகவும் ரசித்தேன்” என்று பாராட்டினார். இதனால் ஏ.பி. நாகராஜனின் புகழ் பரவியது. ராஜாஜி பரதனைப் பாராட்டினார் என்றால் அந்தப் படத்தில் ராவணனை இசைக்கலைஞனாகப் பெருமைப்படுத்தி எழுதியதை ம.பொ.சி பாராட்டினார். மா.பொ.சியின் வழிகாட்டலில் அவரது தமிழரசுக் கழகத்தில் இணைந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டினார்.

புதுமைகளின் காதலர்

சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணன் வேடத்தைப் பத்து தலையுடன் அரக்கன்போலச் சித்தரிக்க வேண்டாம் என்று இயக்குநர் சோமுவுக்கு எடுத்துக் கூறிய ஏ.பி. நாகராஜன், புராணக் கதைகளைப் படமாக்கினாலும், வரலாற்று, சமூகக் கதைகளைப் படமாக்கினாலும் அவற்றில் தொழில்நுட்பப் புதுமைகளையும் நிகழ்காலத்தின் நடப்புகளை வசனத்திலும் புகுத்தத் தவறவில்லை. சிவாஜி – சாவித்திரி நடிப்பில் உருவான ‘ வடிவுக்கு வளைகாப்பு’(1962) படத்தின் மூலம் இயக்கத்தில் கால் பதித்தார் ஏ.பி. என். அதன்பிறகு சிவாஜியுடன் அவர் இணைந்து பணிபுரிந்த பல படங்கள் தமிழ்சினிமாவுக்கு முக்கியப் படங்களாக அமைந்தன.

சிவாஜியின் 100-வது படமாகிய ‘நவராத்திரி’யில் (1964) அவருக்கு ஒன்பது மாறுபட்ட வேடங்களை உருவாக்கினார். அந்தக் காவியத்தைக் கண்டு தமிழ்த் திரையுலகமும் தமிழ்மக்கள் மட்டும் வியக்கவில்லை. அப்படத்தைக் கண்ட ஐரோப்பிய நடிகர்கள் நடிகர் திலகத்தை அமெரிக்காவுக்கு அழைத்தனர். அடுத்த ஆண்டே அவரது இயக்கத்தில் 1965-ல் ‘திருவிளையாடல்’ வெளியானது. சிவன், பார்வதி, முருகன், விநாயகர், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்துக் கதாபாத்திரங்களும் பேசிய சுத்தமான எளிய செந்தமிழ், தமிழ் மக்களின் நாவில் அரைநூற்றாண்டு காலம் நடனமாடியது. சிவபெருமானுடன் வறிய புலவன் தருமியின் வாக்குவாதம் தமிழகமெங்கும் நகைச்சுவை ரசவாதம் செய்தது.

திருவிளையாடலைத் தொடர்ந்து, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமலை தென்குமரி, அகத்தியர், காரைக்கால் அம்மையார் உள்படப் பல புராணப் படங்களை மிக உயர்ந்த உரையாடல் தமிழில் எடுத்தார் ஏ.பி.நாகராஜன். இவரது சாதனை மகுடத்தில் ‘தில்லானா மோகனாம்பாள், தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘ராஜராஜசோழன்’ஆகியவை உண்டு . இந்தியாவுக்கு வெளியே விருதுபெற்ற முதல் தமிழ்த் திரைப்படத்தை எடுத்தவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

நடிகர் திலகம் சிவாஜியை வைத்துப் பல படங்களை இயக்கிய இவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம், ‘நவரத்தினம்’. அதுவே அவரது கடைசிப் படம். 1977-ல் நாகராஜன் மறைந்து விட்டாலும் அவரது திரைத் தமிழ், தமிழ்த் திரை இருக்கும் வரை மறையப்போவதில்லை.

பாரதி ஆனந்த்.....மினி பஸ் மெட்டுகள்..!குயிலோசையின் பரிபாஷைகள்... அதிகாலையின் வரவேற்புகள்'

கோப்புப் படம்

வெகு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது நேர்ந்த அனுபவம் இது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது பளபளவென விடிந்திருந்தது. பேருந்தில் இருந்து இறங்கியவுடனேயே சுவாசத்தில் நிரம்பியது மல்லிப்பூ வாசனை. திண்டாரமாகக் கட்டப்பட்டிருந்த மல்லிகையை பார்த்துக்கொண்டே வெளியே வந்தால் ஆட்டோ அண்ணேமார்கள் பையை பிடித்து இழுக்காத குறையாக ச

வாரி கூப்பிட்டுக் கொண்டிருந்தனர். சரி ஏறிவிடலாமா என்று நினைத்த போது கேட்டது அந்தப் பாடல்.

'புத்தும் புது காலை... பொன்னிற வேளை...' எஸ்.ஜானகியின் குரல் காற்றில் மிதந்துவர, கால்கள் அந்த திசைக்கு திரும்பின. மினி பஸ் ஒன்றில் அந்தப் பாடல் பாடிக்கொண்டிருந்தது. அது நான் செல்ல வேண்டிய ஏரியாவுக்கு செல்லும் பேருந்தே என்பது மகிழ்ச்சியளித்தது.

அம்மா வீட்டுக்குச் செல்ல மாநகரப் பேருந்தில் சென்றால் 20 நிமிடங்களே ஆகும். ஆட்டோ அண்ணே 15 நிமிடத்தில் இறக்கிவிட்டு விடுவார். ஆனால், மினி பஸ் செல்ல 45 முதல் 50 நிமிடங்கள் ஆகும். தெரிந்தே ஏறினேன், மினிபஸ் பாடல்களுக்காக.

'குயிலோசையின் பரிபாஷைகள்... அதிகாலையின் வரவேற்புகள்' வரிகள் இசைத்தபோது இடம் பார்த்து அமர்ந்து கொண்டேன். அந்தப் பாடல் இனிதே நிறைவு பெற்றது. மனதை வருடும் மெட்டுக்களுக்காகவே என் மனம் மினி பஸ்ஸில் ஏறச் சொல்லியிருந்தது என்பதை உணர்ந்தேன்.

அதற்குள் ஸ்கூல், காலேஜ், பூ மார்கெட்டில் இருந்து திரும்பிய பூக்கார அக்கா, பழ வியாபாரி, இன்னும் பலர் பஸ்சில் ஏறினர். பஸ் புறப்பட்டது. பாட்டுகள் தொடர்ந்தன. 'அடி ஆத்தாடி இள மனசொன்னு' என்ற ராகம் பாடியபோது மனது கடற்கரைக்கு நொடிப்பொழுதில் சென்றுவிட்டது.

மலை உச்சியில் ரேகாவும், கடற்கரையில் சத்யராஜும் நிற்க பாரதிராஜாவின் கேமரா அவர்கள் இருவருக்கும் மாறி, மாறி ஷாட் வைத்திருந்ததும், அலை ஏற்றத்திற்கும், சறுக்கிற்கும் ஏற்றவாறு அந்தப் பாடலை இசையமைத்த ராஜாவின் ஞானத்தையும் மனம் சிலாகித்தது. ஆஹா...எத்தனை சுகம் அது.

பஸ் வளைவில் திரும்பும்போது மரக்கிளைகள் சில ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும். ஜன்னல் ஓரத்தில் இருந்தால் சற்று நகர்ந்து கொள்ள வேண்டும். வளைவில் திரும்பியபோது ஒலிக்கத் துவங்கியது "பூ மாலை ஒரு பாவையானது". அந்தப் பாடலில், சாமிகூட ஆடத்தான், சக்தி போட்டிபோடத்தான்.. அம்பாள் பாடு என்ன ஆனது அந்தரத்தில் நின்றே போனது என்ற வரிக்கு மட்டும் ஆண்கள் சிலர் அவ்வளவு மகிழ்ச்சியோடு பின்பாட்டு பாடினர். அவர்கள் அப்படித்தான் என நினைத்துக் கொண்டேன். முழுப்பாடலை நானும் என் மனதுக்குள் முணுமுணுத்தேன். ஆனால், அவர்கள் அந்த வரிக்கும் பின்பாட்டு பாடியது உருத்தியது.

பயணம் முழுவதும், யாரும் யாருடனும் வெட்டியாக முறைத்துக் கொள்ளாமல், கன்டெக்டர் சில்லறைக்காக சளைத்துக் கொள்ளாமல், போனில் வெட்டிப்பேச்சு பேசுவதைகூட சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கக் கூடிய அளவிற்கு 'வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது'; பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம், என் கண்மணி..என் காதலி... எனை பார்க்கிறாள், சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா, பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம், மலேசியா வாசுதேவனின் குரலில் பூவே இளைய பூவே..வரம் தரும் வசந்தமே... மலர் மீது தேங்கும் தேனே..எனக்கு தானே... எனக்கு தானே.. என பாடல்கள் அடுத்தடுத்து விருந்து படைக்க வீடும் வந்துவிட்டது.

இறங்கி தெருவில் நடந்தபோதும், பாடல்கள் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தன. பொதுவாக மதுரை மினி பஸ்களின் ஸ்பெஷாலிட்டியே இந்தப் பாடல்கள்தான். பெரும்பாலும் கன்டெக்டர்கள்தான் டி.வி.டி.க்களை போடுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் ரசனை, காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற மாதிரி பாடல்களை இசைப்பது இவர்கள்தான் நவீன ஆர்.ஜெ.க்களுக்கு முன்னோடியோ என நினைக்கத் தோன்றுகிறது.

அலுங்கி, குலுங்கி வரும் மினி பஸ் உடலில் சிறு வலியை தந்தாலும் கூடவே நிவாரணியாக வருகிறது பாடல்கள். இசையின் சக்தி அது. இரவு 7 மணிக்கு மேல் மினி பஸ் பயணம் இன்னும் சுகமாக இருக்கும் அவற்றில் இசைக்கப்படும் சுகராகங்களால். இன்றும் சென்னையில் காலை கே.கே.நகரில் இருந்து பனகல் பார்க் வரை ஷேர் ஆட்டோவில் அதே பாடல்கள் இசைப்பதை கேட்டிருக்கிறேன். ஆனால் நகரத்தின் பரபரப்பு, வாகன் நச்சரிப்பு, திடீரென் முளைக்கும் டிராபிக் ஜாம் பாடல்களை காது மடலில் மட்டும் தெறித்து ஓடச் செய்கிறது.

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?"

உலகக்கோப்பை: வில்லனை வீழ்த்தினால் இந்திய வெற்றி நிச்சயம்...!



இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுமே...உலகக் கோப்பைத் தொடரில் நமது அணி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் வரும் 22ஆம் தேதி இந்தியா - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மோதலும் பலத்த எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

உலகக் கோப்பையை பொறுத்த வரை, தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியைதான் சந்தித்துள்ளது. இதனால் இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க அணியை இந்திய அணி எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்த போட்டியை பொறுத்த வரை இந்தியாவின் வெற்றிக்கு உலை வைப்பராக இருப்பவர் ஹாசீம் ஆம்லாதான் என்பது கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பு. அதற்கேற்றார் போல்தான் இந்திய அணிக்கு எதிராக அவரது பேட்டிங் ரிக்கார்டும் உள்ளது. இந்திய அணிக்கு எதிரான 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆம்லா, இரண்டு சதமும் 5 அரைசமும் அடித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான அவரது சராசரி ரன் விகிதம் 57.45 ஆகும். எனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆம்லாவின் விக்கெட்டை மிக விரைவில் வீழ்த்துவதில்தான் இந்திய அணியின் வெற்றி அடங்கியுள்ளது.

உலக பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஆம்லா உள்ளிட்ட 10 வீரர்கள், நடப்பு ஐ.பி.எல். சீசனுக்கான ஏலத்தில் பங்கு பெற்றனர். மற்ற அனைவரும் ஏலம் எடுக்கப்பட இவர் ஒருவர்தான் இன்னும் ஏலம் எடுக்கப்படாமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெக்கல்லம் ருத்திரதாண்டவம்: 12 ஓவரில் நியூசிலாந்து வெற்றி!



வில்லிங்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை துரத்தியடித்த நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

வில்லிங்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, என்னமோ இமாலய இலக்கை நிர்ணயிக்கிற மாதிரி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்கள் இயான் பெல் 20 ரன்களிலும், மொயின் அலி 8 ரன்களிலும் சவுத்தி பந்தில் போல்டானார்கள்.

கேப்டன் மோர்கன் 41 பந்துகளில் 17 ரன்களை எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இறுதியில் 33 ஓவர்களில் சுருண்ட இங்கிலாந்து 123 ரன்களை மட்டுமே இலக்காக வைத்தது.

சவுத்தி 9 ஓவர்களில் 33 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது உலகக் கோப்பையில் மூன்றாவது சிறந்த பந்து வீச்சாகும். இதற்கு முன், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மெக்ராத் 15 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிட்செல் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மெக்கல்லமும், குப்திலும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினர். அதிலும் மெக்கல்லமின் அதிரடியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கதி கலங்கிதான் போனார்கள். 18 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் மெக்கல்லம் 50 ரன்களை கடந்தார். இதற்கு முன் கனடா அணிக்கு எதிராக 20 பந்துகளில் இதே மெக்கலம்தான் அரை சதமடித்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை அவரே இன்று தகர்த்தார். தொடர்ந்து சரவெடி ஆட்டம் ஆடிய மெக்கல்லம் 25 பந்துகளில் 77 ரன்களை அடித்து வெளியேறினார்.

பின்னர் குப்திலும் 22 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் வெற்றிக்கு தேவையான 124 ரன்களை 12.2 ஓவர்களிலேயே அடித்து முடித்தனர். இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்ஆப்ரிக்க அணி வங்கதேச அணி எடுத்திருந்த 109 ரன்களை 12 ஒவர்களில் எட்டியதுதான் உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நியூசிலாந்து முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணி 2 பந்துகள் அதிகமாக எடுத்துக் கொண்டதால் அந்த சாதனையை நியூசிலாந்து கோட்டை விட்டது.

இத்துடன் நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை ஈட்டியுள்ளது. ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து முதல் அணியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

NEWS TODAY 2.5.2024