Tuesday, July 5, 2016

சுவாதி கொலையில் தொடர்பு இல்லை: உண்மையான குற்றவாளியை தப்ப வைக்க போலீஸ் முயற்சி- ராம்குமார் பகீர் By: Mayura Akilan Updated: Tuesday, July 5, 2016, 13:54 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-murder-case-ramkumars-files-bail-petition-257413.html

சென்னை: சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என் மீது போலீஸ் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ராம்குமார் ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 24ம் தேதியன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.30 மணியளவில் பணிக்கு செல்வதற்காக காத்திருந்த இளம்பெண் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் ஜூலை 1ம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நலம் தேறியதும், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். ராம்குமாரிடம், எழும்பூர் குற்றவியல் 14வது நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) நேற்று விசாரணை நடத்தினார். பின்னர், ராம்குமாருக்கு ஜூலை 18ம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பித்தார். ராம்குமார் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உடல்நலம் தேறிய உடன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்குமார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். செங்கோட்டை போலீசார், ஐ.பி.சி., 309 கீழ் ராம்குமார் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை போலீசாரின் விசாரணை முடிந்த பின், செங்கோட்டை அழைத்து வரப்படும் அவன், மீண்டும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார். இதன் மூலம் கொலை வழக்கில் அவனுக்கு கிடைக்கும் தண்டனையுடன், தற்கொலை முயற்சி வழக்கில் கூடுதலாக 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்படுகிறது. சுவாதி கொலை வழக்கில் ஜாமீன் கோரி ராம்குமார் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது செய்துள்ளனர். சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே என்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை சம்பவம் நடைபெறவதற்கு 2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை சம்பவத்தில், குற்றவாளி ராம்குமார்தான் உறுதியாக கூறி வந்த நிலையில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-murder-case-ramkumars-files-bail-petition-257413.html

தற்கொலைக்கு முயலவில்லை; போலீஸாருடன் வந்தவர்களே கழுத்தை அறுத்தனர்: ஜாமீன் மனுவில் தகவல்

First Published : 05 July 2016 01:05 PM IST

சென்னை: சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்படும் போது, தான் தற்கொலைக்கு முயலவில்லை என்று ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், நெல்லை செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் ஜூலை 1ம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில், ராம்குமார் தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று  வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. காவல்துறையினருடன் வந்தவர்களே ராம்குமாரின் கழுத்தை அறுத்துள்ளனர்.
சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுவாதி கொலை செய்யப்படுவதற்கு முன்வே, அவரை யாரோ தாக்கியதாக தகவல்கள் வெளிவந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எங்களுக்கு வந்த அறிவுரையின்படி ராம்குமாருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளேன் என்றும் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

சுவாதி கொலைக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை: ராம்குமார்

Dinamani

சென்னை: சுவாதி கொலைக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று நெல்லையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது செய்துள்ளனர்.

சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே என்னை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொலை சம்பவம் நடைபெறவதற்கு 2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை சம்பவத்தில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

என்னை கொன்று விடுவீர்களா? : ஆம்புலன்சில் அலறிய ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை பாளையங்கோட்டை மருத்துவமனையிலிருந்து சென்னை அழைத்து வரும்போது பீதியுடன் இருந்த விவகாரம் வெளியே கசிந்துள்ளது.


 

 
அதாவது, ஆம்புலன்சில், மருத்துவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட பலத்த பாதுகாப்போடு ராம்குமார் சென்னை அழைத்து வரப்பட்டார். அன்று இரவு முழுவதும் ராம்குமார் தூங்கவே இல்லையாம். தன்னை எங்கே போலீசார் தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் பீதியுடன் முழித்தே இருந்தாராம். 
 
அதனைக் கண்ட மருத்துவர்கள் “நீ ஏம்பா முழிச்சிருக்கே.. தூங்கு” என்றார்களாம். ஆனால் ராம்குமாரோ “என்னைக் கொன்று விடுவீர்களா சார்? என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். ஒரு புள்ளையை கொன்று விட்டு உனக்கென்னடா உயிர் பயம். கம்முனு தூங்கு” என்றார்களாம் போலீசார்.
 
ஆம்புலன்ஸ் வண்டி திருச்சியை தாண்டிய போது, மரண பீதியில் உறைந்து போயிருந்தாராம் ராம்குமார். சென்னை வந்தபின்தான் ஓரளவு இயல்பான நிலைக்கு வந்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

பார்வை: வினுப்பிரியாக்கள் பிழைத்திருப்பதே குற்றமா?

பிருந்தா சீனிவாசன்

THE HINDU TAMIL
கொலை செய்வதைவிடக் கொடூரமானது அமைதிகாப்பது. ஒரு பெண்ணைப் படுகொலை செய்வதற்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை அவளை அவளே படுகொலை செய்துகொள்ளத் தூண்டுவது. அப்படித் தூண்டப்பட்டுத் தன்னையே மாய்த்துக்கொண்டிருக்கிறார் சேலம் வினுப்பிரியா. முகநூலில் பதிவிட்டிருந்த வினுப்பிரியாவின் புகைப்படத்தை யாரோ ஒருவர் மார்ஃபிங் செய்து அநாகரிகமாக வெளியிட, அவமானம் தாங்காமல் தன்னைத் தானே கொலை செய்துகொண்டார் வினுப்பிரியா.

வினுப்பிரியாவின் மரணத்துக்கு அவரது புகைப்படத்தை அநாகரிகமாக வெளியிட்ட நபர் மட்டும்தான் காரணமா? அதுபோன்ற படங்களைத் தேடித்தேடிப் பார்க்கிறவர்களுக்கும், பகிர்கிறவர்களுக்கும் இதில் பங்கு இல்லையா? இப்படி அவமானத்துக்குள்ளாகும் பெண்ணைத் தரக்குறைவாகப் பார்க்கும் சமூகம் இதில் சம்பந்தப்படவில்லையா? பொதுவெளியில் பகிரப்படும் தகவல்களால் ஏற்படுகிற நெருக்கடிகளைச் சமாளிக்கும் மனோதிடத்தை நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறோமா?

இதுபோன்ற சம்பவங்களின்போது குடும்பம் பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறதா? முதலில் பெற்றோருக்குப் போதிய விழிப்புணர்வு இருக்கிறதா? பாதிக்கப்படும் பெண்ணைக் குறித்து இந்தச் சமூகம் முன்வைக்கும் சித்திரம் நாகரிகமானதா? அந்தப் பெண் மீது வீசப்படும் அவதூறுகளும் பழிச்சொற்களும் அவளுடைய நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சிதைக்காதா? மக்களிடையே சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு இருக்கிறதா? சைபர் குற்றப் பிரிவில் தரப்படும் புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்படுகிறதா? வினுப்பிரியாவின் மரணம் இப்படிப் பல்வேறு கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறது.

வெளிப்படும் வக்கிரம்

உலகமயமாக்கலும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நல்லது கெட்டது அனைத்தையும் நம் உள்ளங்கைக்குள்ளேயே கொண்டுவந்துவிடுகின்றன. அவற்றில் வக்கிரம் நிறைந்த குப்பைகள் அதிகம். விவசாயம் பொய்த்துப்போன கிராமங்களில்கூட இன்று ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி செழிப்புடன் இருக்கிறது. இணையப் பயன்பாடு அதிகரித்த பின் இணையவழி நடக்கும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது.

ஒவ்வொரு குற்றத்திலும் ஒரு பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவளது எதிர்காலம் சிதைக்கப்படுகிறது. அவளது வாழ்வு மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. பெண்ணின் உடல் புனிதமானதாகவும் பெண்ணின் செயல்கள் அனைத்தும் நம் பண்பாட்டின், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பிரகடனப்படுத்தப்படுகிற சமூகத்தில் அந்த உடலை வைத்தே ஒரு பெண்ணைச் சாய்ப்பது ஆணுக்கு எளிதாகிறது. அவளது நடத்தை சார்ந்த குற்றச்சாட்டை வைத்தாலே போதும்,

அவள் முடங்கிப்போக. அப்படியும் முடங்கவில்லையெனில் இருக்கவே இருக்கின்றன அநாகரிகச் செயல்பாடுகள். வெட்டு, கொலை, அமிலவீச்சு ஆகியவற்றைவிட ஒரு பெண்ணின் அந்தரங்கத்தைக் கடைவிரிப்பது ஆண்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. நம் சமூகச் சூழலில் அது பெண்களுக்கு மரணத்தைவிடக் கொடுமையான தண்டனையாகவும் அமைகிறது.

இணைந்து போராட வேண்டும்

“நம் சமூக அமைப்பில் இருக்கிற குறைபாடு இது” என்கிறார் இளந்தமிழகம் அமைப்பைச் சேர்ந்த பரிமளா. “பஸ்ஸில் ஒருவன் தன்னை உரசினால், அதை வெளியே சொல்லக்கூடத் தயங்குகிற பெண்கள் அதிகம். காரணம் பெண்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு நம் சமூகத்தில் எந்த உரிமையும் இல்லை. படிக்கும் படிப்பு, அணியும் உடை, வாழ்க்கைத்துணை என்று சகலமும் அடுத்தவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவனை வேண்டாம் என்று நிராகரிக்கக்கூட ஒரு பெண்ணுக்கு நம் சமூகத்தில் உரிமையில்லை” என்று சொல்லும் பரிமளா, பெண்ணின் மீது திணிக்கப்படும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் சமூகக் கட்டுகளையும் எதிர்த்துப் பெண்கள் கேள்வி கேட்க வேண்டும் என்கிறார்.

“இது யாரோ ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இது நேரலாம். பெண்ணின் அங்கம் கொஞ்சம் வெளிப்பட்டாலே அவளது ஒழுக்கம் கெட்டுவிட்டது என்று சமூகம் வகுத்துவைத்திருக்கிறது. இதற்கு எதிராகப் பெண்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். தவறு செய்கிறவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்” என்கிறார் அவர்.

தற்கொலை தீர்வல்ல

தற்காலிகப் பிரச்சினைக்காக மரணம் என்னும் நிரந்தர முடிவை நோக்கிச் செல்வது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவ நிபுணர் லக்ஷ்மி விஜயகுமார். சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனரான இவர், ஒரு பெண் தன் மீது வைக்கும் நம்பிக்கையே தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் என்கிறார்.

“ஒவ்வொரு பெண்ணும் தன் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைக்கணும். நாம் செய்யாத தவறுக்காக, நாம் ஏன் சாக வேண்டும் என்ற தெளிவு வேண்டும். வாழ்வில் எந்தச் சிக்கலும் இல்லாதபோது துணிச்சலுடன் இருப்பதைவிட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும்போதுதான் துணிச்சலுடன் இருக்க வேண்டும்.

வெளியே சொல்ல முடியாத பிரச்சினையாக இருந்தால் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். பிறகு பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பகிர்ந்துகொள்கிறபோது பிரச்சினை பாதியாகிவிடும்” என்று சொல்லும் லக்ஷ்மி விஜயகுமார், இது போன்ற குற்றங்கள் அதிகரிக்க ஊடகங்களும் முக்கியக் காரணம் என்கிறார்.

“எந்தத் திரைப்படமாக இருந்தாலும் அதில் பெண் என்பவள், ஆண் அனுபவிக்க வேண்டிய ஒரு பண்டமாகவே காட்சிப்படுத்தப்படுகிறாள். பெண்ணின் விருப்பு, வெறுப்புக்கு அங்கே இடமில்லை. ஒருவனை வேண்டாம் என்று மறுக்கும் உரிமையும் அவளுக்கு இல்லை. ஆரம்பத்தில் மறுக்கிற பெண்ணையும் எப்படியாவது மசியவைப்பதுதான் ஆண்மை என்று கேவலமாகச் சித்தரிக்கப்படுகிறது. இதைப் பார்த்து வளர்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்தச் சிந்தனைதானே இருக்கும்? அனைவருக்கும் சமூகப் பொறுப்பு வேண்டும்” என்று சொல்கிறார் அவர்.

எப்படி வளர்க்கிறோம் பிள்ளைகளை?

சமீபகாலமாக இள வயதுத் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்லும் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், “பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோபலத்துடன் குழந்தைகளை வளர்க்கிறோமா?” என்று கேட்கிறார்.

“படிப்பு, மதிப்பெண் எல்லாமே இரண்டாம்பட்சம்தான். சிக்கல்களை, பிரச்சினைகளை எதிர்கொள்கிற பக்கு வத்தைச் சொல்லித் தருவதுதான் முக்கியம். ஃபேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி தங்கள் படங்களை மாற்றுகிறவர்களும் எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருப்பவர்களும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். தன் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இப்படிச் சமூக ஊடகங்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று சொல்லும் பிருந்தா ஜெயராமன், ஒரு பிரச்சினை வெடிக்கும்போது அந்த நேரத்தில் குரல்கொடுத்துவிட்டு அடங்கிப் போவதைவிட அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரை களத்தில் நிற்க வேண்டும் என்கிறார்.

“புகார் கொடுத்ததுமே விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம். ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பும் கடமையும் அவசியம். சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் அவற்றின் முடிவு குறித்து காவல்துறை சமூகப் பொறுப்புடன் தானே முன்வந்து அறிவித்தால் பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்” என்கிறார் பிருந்தா ஜெயராமன்.

வினுப்பிரியாவின் தற்கொலை மட்டுமல்ல, சுவாதியின் படுகொலை, ராயப்பேட்டையைச் சேர்ந்த மூன்று பெண்களின் கொலை என்று சமூகத்தில் நடக்கிற கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிற பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் ஆர்வமாக இருக்கிறோமா? குறைந்தபட்சம் நம் கண்ணெதிரில் நடக்கிற குற்றத்தையாவது தட்டிக் கேட்டிருக்கிறோமா? ஒரு பெண்ணைப் பற்றிய அவதூறு செய்தி வந்ததும் அதை அடுத்தவருக்கு ஃபார்வேர்ட் செய்யாமல் இருந்திருக்கிறோமா?

குற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்றால் அதை காவல்துறைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோமா? பெண்களை சக மனுஷியாக, உயிரும் உணர்வும் கொண்ட ஒரு பிறவியாக நினைக்கவாவது முயற்சித்திருக்கிறோமா? நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கச் சொல்லித் தந்திருக்கிறோமா? இவற்றுக்கான பதில்களில்தான் வினுப்பிரியாக்கள் பிழைத்திருப்பதும் அடங்கியிருக்கிறது.

Monday, July 4, 2016

மகளை கொன்றவனுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும்: சுவாதி பெற்றோர் கோரிக்கை Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-s-parents-seek-death-penalty-their-daughter-killer-257324.html

சென்னை: மகளை கொடூரமாக கொலை செய்த கொலையாளிக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சுவாதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை கொடூரமாக கொலை செய்யப்பட்டார் சுவாதி. இந்த கொலை வழக்கில் , குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராம்குமாரின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு என்னமாதிரியான தண்டனை கிடைக்கும் என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. சுவாதியின் பெற்றோர், மகளை கொன்ற குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் செங்கோட்டையில் இருந்து இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம்குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், இந்த வழக்கில் அவருக்கு என்ன என்ன தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என சட்ட நிபுணர் அஜிதா தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டியில், இந்த வழக்கில், குற்றவாளியாக கருதப்படும் நபர் கிடைத்துள்ளார். அவருக்கே ஏற்பட்ட ஒரு தலைக் காதலால் கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்காகவும் கொலை செய்துள்ளாரா? குற்றவாளிக்கு வேறு யாரேனும் உதவி செய்துள்ளனரா? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பதெல்லாம் முழுமையான புலன் விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும். அதற்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் இப்போது மாவட்டந்தோறும் மகிளா நீதிமன்றங்கள் உள்ளன. சென்னையிலும் மகிளா நீதிமன்றம் உள்ளது. மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கினை விரைவாகவும் துரிதமாகவும் வழக்கை நடத்த வாய்ப்புள்ளது. ஒரு மாதத்திற்குள்ளோ இரு மாதத்திற்குள்ளோ தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ள ஒரு வழக்குதான் இது. பொதுமக்களை மிகவும் பாதிக்க வைத்த கொலை சம்பவம் அனைவர் கவனமும் இந்த வழக்கின் மீது இருக்கிறது. இவர்தான் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டால், மரணதண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர் அஜீதா கூறினார். இந்த கொலை பணத்திற்காகவோ அல்லது பாலியல் வன்முறையுடன் சேர்ந்து செய்ப்படவில்லை. அதனால் மரணதண்டனை அளிக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்படலாம். காதல் அல்லது ஒரு தலைக்காதலால் கொலை செய்யப்பட்டிருப்பதால், ஆயுள் தண்டனையோ அல்லது இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்க வாய்ப்புள்ளதது என்றும் கூறியுள்ளார் அஜீதா.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-s-parents-seek-death-penalty-their-daughter-killer-257324.html

பேட்டி! சுவாதி கொலை: சூளைமேடு மக்கள் பேட்டி

DINAMALAR

கடன் சொல்லி சாப்பிட்டான்

சூளைமேடு, சவுராஷ்ட்ரா நகர், 8வது தெருவில் உள்ள, 'மதர்ஸ் கிச்சன்' உணவகத்தில், இரண்டரை ஆண்டாக பணியாற்றி வருகிறேன். எதிரே இருக்கும் விடுதியில் இருந்து, பலர் உணவு அருந்த வருவர். சுவாதி கொலை சம்பவம் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன், இரவு, 8:00 மணியளவில் ராம்குமார் சாப்பிட வந்தான்.

நுாறு ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு, பணம் தராமல் சென்றுவிட்டான். அதனால், அவன் முகம் எனக்கு ஞாபகத்தில் இருந்தது. கொலை நடந்த பின், போலீசார் ஒரு புகைப்படத்தை காண்பித்து என்னிடம் விசாரித்தனர். அந்த புகைப்படத்தில் முகம் தெளிவாக இல்லாததால் அடையாளம் காட்ட முடியவில்லை.

தற்போது, வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து தான், அடையாளம் தெரிந்து கொண்டேன். அரபு நாடுகளில் தண்டனை கொடுப்பது போல் ராம்குமாருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
மகேஷ், 24, உணவக ஊழியர்.

* நாங்கள் பார்த்தது இல்லை

நான் மூன்று ஆண்டாக இந்த விடுதியில் தங்கி இருக்கிறேன். செக்ரியூட்டி முதல் ஐ.டி., துறையில் வேலை பார்ப்பவர்கள் வரை இங்கு தங்கியுள்ளனர். விடுமுறை நாட்களில் பலரை சந்தித்து பேசி பழக்கம் ஏற்படுவது உண்டு.

ஆனால், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், இந்த விடுதியில் தான் தங்கியிருந்தான் என்பது, இன்று காலை தான் எனக்கு தெரிந்தது. மூன்று மாதங்கள் இந்த விடுதியில் அவன் தங்கியுள்ளான். ஆனால், இதுவரை அவனை, நானும் என் நண்பர்களும் பார்த்தது இல்லை.மோகன், 26, தனியார் நிறுவன ஊழியர்


* உடன் தங்கிய முதியவர்

நான் நான்கு ஆண்டாக இந்த விடுதியில் தங்கி இருக்கிறேன். சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம் குமாரும் இந்த விடுதியில் தான் தங்கியுள்ளான்; அவனை நாங்கள் யாரும் பார்த்தது இல்லை. அவனுடன், செக்ரியூட்டி வேலை பார்க்கும், முதியவர் ஒருவர் தங்கியுள்ளார். அவர், எங்கே என்றும் தெரியவில்லை.

இந்த கொலையில் மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை, போலீசார் தான் விசாரிக்க வேண்டும். விடுதியில் தங்கியிருந்த ஒருவன் கொலைக்காரன் என்பது அதிர்ச்சியாக உள்ளது.
சதீஷ் ராஜா, 27,ஓட்டுனர்.


* தக்க தண்டனை தர வேண்டும்

சவுராஷ்ட்ரா நகர், எப்போதும் பரப்பாக இருக்கும். தற்போது, மழைநீர் கால்வாய் பணி நடைபெறுவதால், சற்று நிசப்தமாக உள்ளது. விடுதியில் தங்கியிருக்கு பலரை எனக்கு தெரியும். எனினும், ராம்குமாரை நான் பார்த்தது இல்லை. கொலைகாரனுக்கு

தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.சரவணன், 32, எலக்ட்ரீசியன்.

* போலீசாருக்கு நன்றி

கொலைக்காரன் சூளைமேடு பகுதியில் தங்கியிருந்தான் என, போலீசார் விசாரணையில் தெரிய வந்ததால், எங்களிடம் புகைப்படத்தை காட்டி விசாரித்தனர். 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். துரிதமாக செயல்பட்டு கொலைக்காரனை கைது செய்த, போலீசாருக்கு நன்றி.தீன தயாளன்,70, விடுதிக்கு பக்கத்தில் வசிப்பவர்.

* ரோந்து பணி முக்கியம்

விடுதியில் தங்கியிருந்த ஒருவன், கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, ரோந்து பணியை போலீசார்தீவிரப்படுத்த வேண்டும்.அன்பு, 28, விடுதிக்கு பக்கத்தில் வசிப்பவர்.

* பயமாக இருக்கிறது

ஒரு ஆண்டுக்கு முன், இந்த விடுதியில் பணியாற்றினேன். இதுபோன்றசம்பவத்தை இந்த விடுதியில் தங்கியிருந்தவர்கள் செய்ததில்லை. இந்த சம்பவத்தால், விடுதியின் அருகில் வசிப்பதற்கே பயமாக உள்ளது. ஒருதலை காதல் அல்லது காதலாக இருந்தாலும், ஒரு உயிரை எடுப்பது தவறு. அந்த கொலைகாரணுக்கு துாக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும்.
அமுல், 44, விடுதிக்கு பக்கத்தில் வசிப்பவர்.

* கடும் தண்டனை வேண்டும்

கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றால், மூன்று மாதங்களில் ஜாமினில் வந்து விடுகின்றனர். சிறைக்கு சென்றதால், தங்களை பார்த்து அனைவரும் பயப்பட வேண்டும் என, ரவுடியாக மாறி விடுகின்றனர். தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையாக வழங்க வேண்டும். தண்டனையில் இருந்து, யாரும் தப்பிக்க முடியாத அளவுக்கு சட்டத்தை மாற்ற வேண்டும்.முரளி, 45, ஆட்டோ ஓட்டுனர்.

* தவறான நட்பு வட்டாரம்

'மீடியா'க்களில் வெளியிடப்படும் செய்திகள், சினிமா காட்சிகள் இன்றைய இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளன. அவை பெரும்பாலான நேரங்களில், தவறான மனநிலையை உருவாக்குகின்றன. சென்னையை பொறுத்த வரையில், பலர் விடுதியில் தங்கி வேலை செய்ய வேண்டியுள்ளது.

அங்கு தவறான நட்பு வட்டாரத்தில் சிக்கும் இளைஞர்களின் மனநிலை மாறி விடுகிறது. ராம் குமார் படித்துள்ளான், அவனை கொலை செய்ய துாண்டியது என்ன; மனதளவில் அவன் பாதிக்கப்பட்டுள்ளனா என்பதை கண்டறிய வேண்டும். மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
பள்ளியில் பெண்களுக்கு, தற்காப்பு கலைகளை அரசு கற்று தர வேண்டும். பெண்கள் போதை பொருள் அல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
ஒரு சம்பவம் நடைபெற்ற பின், கண்காணிப்பு கேமரா மற்றும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு மாதம்

Advertisement

கடந்த பின், அனைத்து பயனற்று போய் விடுகிறது. ரோந்து பணியில் கூட போலீசார் ஈடுபடுவதில்லை. இந்த முறைகள் மாற்றப்பட்டால் இதுபோன்ற தவறுகள் தடுக்கப்படலாம்.மணி அற்புத ராஜ், 29; தனியார் நிறுவன ஊழியர்.

* படம் இல்லை

* 'பேக்' மாட்டிய ஆண்களால் பயம்

நான்கு பேரும் கல்லுாரியில் படிக்கிறோம். தினமும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தான், கல்லுாரிக்கு செல்வோம். சுவாதி அக்கா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, எங்கள் பெற்றோர், இரண்டு நாட்கள் கல்லுாரிக்கு அனுப்பவில்லை.

இப்போதல்லாம் தனியாக செல்ல பயமாக உள்ளது. 'பேக்' மாட்டிக்கொண்டு அருகில் வரும் ஆண்களை பார்த்தாலே பயமாக உள்ளது. பொது இடங்களில் கண்காணிப்பு கேமராவை அரசு பொருத்த வேண்டும். ஆண் போலீசாருடன் மகளிர் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். வீட்டை விட்டு, நாங்கள் தனியாக வெளியே வருவது, இந்த சமுதாயத்தில் எங்களுக்கு பிரச்னை எழும்போது, காப்பாற்ற தந்தைகளும், அண்ணன்களும் இருப்பார்கள் என்ற தைரியத்தால் தான்.

இந்த சம்பவத்தை அடுத்து அந்த தைரியம் எங்களுக்கு இல்லை. யாரையும் நம்ப கூடாது என்ற மனநிலைக்கு வந்து விட்டோம். எங்களை நாங்களே காத்து கொள்ளும் தற்காப்பு கலைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.கல்லுாரி மாணவியர்.

* இரு தரப்பிலும் தவறு

பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நண்பர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். நம்பகத்தன்மை இல்லாத நபர்களுடன், 'சாட்டிங்' செய்யக்கூடாது. வளரும் பருவத்தில் இருக்கும், இரு பாலினத்தவரையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். சுவாதி கொலையில், இரு தரப்பிலும் தவறு இருக்க வாய்ப்பு உண்டு.
சாந்தி, அரசு ஊழியர்.

* நீர்த்து போக கூடாது

இரு தரப்பிலும் தவறு இருக்கலாம். நண்பர்களாக பேசும் அளவுக்கு பெற்றோர் பிள்ளைகளிடம் பழக வேண்டும். டில்லி நிர்பயா வழக்கு போல் பரப்பரபாக பேசப்பட்டு நீர்த்து போக கூடாது. சுவாதியை கொலை செய்தவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை, இதுபோல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எத்தனை பேர் சேர்ந்து கொலை செய்தாலும், கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும்.சுவாதியின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்
* காதல் ரயில் நிலையம்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் மக்கள், காதலர்கள் நிறைந்து காணப்படும். காதலில் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளின் போது, வாய் சண்டை போட்டு கொள்வர்; மறுநாள் சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருப்பர். காதலர்களுக்கே பெயர் போன ரயில் நிலையத்தில் கொலை நடந்தது, இன்றுவரை அதிர்ச்சியாக உள்ளது.சின்னய்யா, 70, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள எஸ்.டி.டி., பூத் ஊழியர்.

NEWS TODAY 2.5.2024