Thursday, November 29, 2018

30 மூட்டைகளில் பணம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மேலும் 20 மூட்டைகளில் கத்தரித்து கட்டி வீசப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்: போலீஸார் தீவிர விசாரணை

Published : 28 Nov 2018 10:02 IST

சென்னை



மாதவரத்தில் மேலும் 20 மூட்டைகளில் கத்தரித்து கட்டி வீசப்பட்ட பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.

மாதவரத்தில் மேலும் 20 மூட்டைகளில் கத்தரிக்கப்பட்ட நிலையில் ரூ.500, ரூ. 1,000 நோட்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி "பண மதிப்பிழப்பு" நடவடிக்கையை மேற்கொண்டார். அதன்படி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அனுமதியும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னையை அடுத்த மாதவரம் புழல் ரெட்டேரி அருகே ஆட்டுச் சந்தை பகுதியில் குப்பைகள் கொட்டும் இடத்தில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுகள், சிறு சிறு துண்டுகளாக கத்தரிக்கப்பட்டு, 30 மூட்டைகளில் கட்டி நேற்று முன்தினம் வீசப்பட்டு இருந்தன.

புழல் போலீஸார் இதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை அதே இடத்தில் மீண்டும் 20 மூட்டைகளில் பழைய ரூ.500, ரூ. 1,000 நோட்டுகள் சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து வீசப்பட்டு இருந்தன. இதையும் தற்போது போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் பழைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதை வீசிச் சென்றது தொழில் அதிபரா? கட்சி நிர்வாகியா அல்லது வேறு யாரேனுமா? என்று போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பணத்தை வீசிச்சென்றவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மனைவியை தவிக்கவிட்டால் பாஸ்போர்ட் ரத்து, போலீஸ் நடவடிக்கை, வேலையிழப்பு: ‘மனம்போல்’ வாழும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு எதிராக புதிய சட்டம்

Published : 28 Nov 2018 16:25 IST

புதுடெல்லி



மனைவியை இந்தியாவில் தவிக்கவிட்டு விட்டு வெளிநாடு தப்பிச் சென்று அங்கு மனம்போல் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

வெளிநாடுளில் வசிக்கும் இந்தியர்கள் பலர் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு அவர்களை கைவிட்டுவிட்டு செல்லும் சம்பவங்கள் நீண்டகாலமாகவே நடந்து வருகின்றன. தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் இதுபோன்று வெளிநாடு வாழ் இந்தியர்களால் கைவிடப்படும் மனைவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இந்தியாவில் மனைவியை விட்டு விட்டு அவர்களை விவாகரத்து செய்யாமல் தாங்கள் வாழும் நாட்டில் வேறு பெண்ணுடன் அவர்கள் சேர்ந்து வாழ்கின்றனர். இந்த விவரம் தெரியாமல் கணவன் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் பல ஆண்டுகளை பெண்கள் கழித்துவிடும் சூழல் உள்ளது.

குறிப்பாக ஏழை மற்றும் கல்வியறிவற்ற நிலைமையை பயன்படுத்திக் கொண்டு பெண்களை திருமணம் செய்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் கைவிடும் சூழல் இருப்பதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் அமைச்சகம் கூறி வருகிறது.

இதையடுத்து இந்த முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிகிறது. இதுதொடர்பாக வெளியுறவு, உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஹைதராபாத்தில் கூறியதாவது:

மனைவியை கைவிட்டுவிட்டு, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும். இதுபோன்ற புகாருக்கு ஆளாகுபவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்படும். அவர்கள் சார்ந்த மாநில போலஸாரால் நோட்டீஸ் வெளியிடப்பட்டு அதன் விவரம் அவர்கள் வசிக்கும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவை அனைத்தையும்விட, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கும் நாட்டின் உள்ள இந்திய தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய தூதரகம் சார்பில் அந்த நாட்டு அதிகாரிகள், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் புதிய சட்டத்தில் விதிமுறைகள் இடம் பெறும் .

இவ்வாறு அவர் கூறினார்.

4 நாள் வேலைநிறுத்தம் அரசு டாக்டர்கள் அறிவிப்பு

Added : நவ 28, 2018 22:46


சென்னை :ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, நான்கு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, அரசு டாக்டர்களின் கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துஉள்ளது.தமிழகத்தில், அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 20 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு கோரி, தமிழக அரசு டாக்டர்கள் போராடி வருகின்றனர்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, செப்., 21ல், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.அப்போது, சுகாதாரத் துறை அதிகாரிகள், டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், ஊதிய உயர்வு தொடர்பாக, ஆய்வு செய்ய, கமிட்டி அமைத்தனர்.கமிட்டி வாயிலாக உரிய தீர்வு கிடைக்காத நிலையில், டிச., 4ல், பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். புயல் காரணமாக, போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

அதற்கு பதிலாக, டிசம்பரில், நான்கு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில், ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:டிச., 4, 12 ஆகிய தேதிகளில், புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு; டிச., 13ல், அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.டிச., 27 முதல், 29ம் தேதி வரை, மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை

Added : நவ 28, 2018 22:31

சென்னை :அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுகிற மறுநாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால், ஓய்வு பெற்றவர்களுக்கும், அதை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு மறுநாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்படும்போது, அது, அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தது.இந்நிலையை மாற்ற, ஓய்வு பெறுகிற அடுத்த நாள், ஊதிய உயர்வுஅறிவிக்கப்பட்டால், அந்த உயர்வு சம்பளத்தை, ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க, அரசு ஆணையிட்டுள்ளது.அதேபோல், ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டாலும், அதைவழங்கலாம் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறப்பு சான்று: டிச.1 முதல் அமல்

Added : நவ 28, 2018 22:21 |

கம்பம்: அரசு மருத்துவமனைகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க தனி அலுவலரை பொதுச்சுகாதாரத்துறை நியமனம் செய்துள்ளது.
டிச., 1 முதல் அமலுக்கு வருகிறது.அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகள் பிறந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். தற்போது அந்த நடைமுறையை மாற்றி, அரசு மருத்துவமனைகளில் பொதுச்சுகாதாரத்துறை தனியாக அலுவலர் ஒருவரை நியமனம் செய்துள்ளது.குழந்தை பிறப்பு சான்றிதழை இவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். குழந்தை பிறந்து ஓராண்டுக்குபின்பும், பெயர் வைத்திருந்தாலும் வைக்காமல் இருந்தாலும் சான்றிதழ் பெற முடியும்.ஆனால் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியில் தான் சான்றிதழ் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே நாளில் பெய்த ஒரு மாத மழை : தத்தளிக்கிறது சிட்னி

Added : நவ 29, 2018 05:54



சிட்னி: ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில், நேற்று ஒரே நாளில், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டியதை விட, அதிகமாக மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, வெள்ளத்தில் சிட்னி தத்தளிக்கிறது.
பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான ஆஸ்திரேலியாவில், மிகப் பெரிய நகரமாக, சிட்னி உள்ளது. இந்த நகரில், நேற்று காலை துவங்கிய கனமழை, இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. கன மழையால், சிட்னி நகர சாலைகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 

சிட்னியில், நவம்பர் மாதத்தில், 84 மி.மீ., மழை பெய்வது வழக்கம், ஆனால், சிட்னியில், நேற்று ஒரே நாளில், 106 மி.மீ., மழை பெய்துள்ளது. சிட்னி நகரில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்தின் ஓடுபாதையில் நீர் சூழ்ந்ததால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள், வேறு நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. 'அடுத்த இரண்டு நாட்களுக்கு, கன மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மாநில செய்திகள்

கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திய சென்னை மாணவி தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்துகிறார்




கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திய சென்னை மாணவி, பெற்றோருடன் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்துகிறார்.

பதிவு: நவம்பர் 29, 2018 04:15 AM
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர். அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு குடும்பத்துடன் வந்து தங்கினார். இவரது மனைவி வனிதா, இவர்களுக்கு கிருபா, கவுசல்யா, கவுரி என 3 மகள்கள் உள்ளனர்.

இதில் கிருபா சிறு வயதில் இருந்தே டாக்டருக்கு படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இவர் பிளஸ்-2 தேர்வில் 980 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

பின்னர் புனேவில் ஒரு வருடம் படித்து அங்கிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வந்தார். அங்கு முதலாம் ஆண்டு படிக்க மட்டுமே ரூ.5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.

ஆனால் மேற்கொண்டு கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கிருபா தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சென்னை வந்து விட்டார். தற்போது பழனிசாமி வீதிவீதியாக சென்று டீ விற்று வருகிறார். இந்த நிலையில் டாக்டர் படிப்பை பாதியில் விட்ட கிருபா, பழவந்தாங்கல் பகுதியில் தள்ளுவண்டியில் பெற்றோருடன் சேர்ந்து டிபன் கடை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து கிருபா நிருபர்களிடம் கூறுகையில், ‘டாக்டருக்கு படிக்க ஆசை இருந்தாலும் மேற்கொண்டு பணம் கட்ட முடியாததால் பெற்றோருடன் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்துகிறேன். மேற்கொண்டு படிக்க ஆசையாக இருக்கிறது. ஆனால் பணம் இல்லை. ஒரு நாள் என் ஆசை நிறைவேறும்’ என்று கூறினார்.

NEWS TODAY 2.5.2024