Monday, August 10, 2015

ஆயிரம் தொழில் செய்திடுவீரே!

கால மாற்றத்துக்கு ஏற்ப, நமது பழக்கவழக்கங்களும் மாறிவிட்டன. கூட்டுக் குடும்பங்கள் தனித்தனிக் குடும்பங்களாக உருமாறிவிட்டன. குலத் தொழில் முறை அழிந்து வருகிறது.
"கால் காசுன்னாலும் கவர்மெண்ட் காசு வாங்கணும்னு' சொல்வார்கள். அது இப்போது குதிரைக் கொம்புதான். 100 காலிப் பணியிடத்துக்கு பல்லாயிரம் பேர் போட்டியிடுகின்றனர்.
வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்ற ஒவ்வொருவரும் ஒரு தொழிலையோ, ஒரு பணியையோ செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது குழந்தைப் பருவத்திலேயே, எதிர்காலத்தில் என்ன பதவியை அடைய வேண்டும் என்பதைப் பெற்றோர் அக் குழந்தையின் மனதில் பதிய வைக்
கின்றனர்.
இப்படி ஒவ்வொருவரும் தமது கனவை நனவாக்க முயற்சிக்கும்போது, இறுதியில் ஒரே பட்டியலில் லட்சக்கணக்கானோர் சேர்ந்து விடுகின்றனர். தேவையோ சில இடங்கள். விரும்புவோரோ பல ஆயிரம். இதில் சாமர்த்தியசாலிகள், திறமைசாலிகள் தமது கனவை நனவாக்கிக் கொள்கின்றனர். மீதமுள்ளோரின் கனவு பகல் கனவாகிறது. இந்த சமுதாயம் அவர்களுக்குச் சூட்டும் கூடுதல் பட்டம் "வேலையில்லா பட்டதாரி'.
வேலைவாய்ப்பு இல்லாததால், அவரது மனம் வேறு வழியை நாடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையை இழக்கிறார். சிந்தனைகள் மாறுகின்றன. இதில் சிலர் சமூக விரோதச் செயல்களில் இறங்கு
கின்றனர்.
2009-இல் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் 9.4 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருந்தனர் அல்லது தனது தகுதிக்கேற்ற வேலை அவர்களுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-இல் இது 10.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்துவந்த ஆண்டுகளிலும் இது ஏறுமுகமாகவே உள்ளது.
நாட்டின் மக்கள்தொகை சுமார் 127 கோடி. அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லை. பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஆலைகளில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களை விரிவுபடுத்த பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்கின்றனர். ஆனால், அவை உரிய காலத்தில் செயல்பாட்டுக்கு வருவதில்லை. அன்னிய முதலீடுகள் வருவதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள்.
வேலையில்லாத் திண்டாட்டம் என்பது வளர்ந்த நாடுகளிலும் உள்ளது. மக்கள்தொகை அதிகமுள்ள நம் நாட்டில் மனித ஆற்றல் கொட்டிக் கிடக்கிறது. அந்த ஆற்றலை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால், அது ஆபத்தில் முடியும்.
வீடுகளில் சோம்பிக் கிடக்கும் மனித ஆற்றலை முறையாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம். உள்ளது. 'An Idle mind is a Devil's Workshop' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்து வருகிறது. மக்கள்தொகை பெருக்கமும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
தற்போது அரசு வேலையையோ அல்லது தனியார் நிறுவனத்தில் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ ஓர் இளைஞர் எதிர்பார்த்திருக்கும் நிலையில், அந்த வேலை கிடைக்கும் வரை ஏதாவது ஒரு வேலையைச் செய்வோம் என்று செய்யத் தொடங்குகிறார். ஆனால், பலருக்கு கிடைத்த வேலையைச் செய்வோம் என்ற மனநிலை இன்னும் ஏற்படவில்லை.
தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் பல்வேறு தொழில்களைச் செய்து, தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 66 சதவீதம் பேர் 18 முதல் 35 வயது வரையில் உள்ளனர். தங்களது திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று இவர்கள் மருகி வருகின்றனர். ஒரே துறையில் திறமையுள்ள அத்தகைய இளைஞர்கள் அந்தந்தப் பகுதியில் இணைந்து, முதலீடு செய்து, தொழில் நிறுவனங்களையோ, சேவை நிறுவனங்களையோ தொடங்கி, வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஏழ்மைக்கு வேலையில்லாத் திண்டாட்டமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. கிராமங்களில் இருந்து அனைவரும் நகரங்களுக்குப் படையெடுப்பதால், நகரங்களில் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அதனால், கிராமங்களில் விவசாய மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து, அதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொழில் வளம் நிறைந்திருக்கும். அதை முறையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் பட்டப் படிப்பு படித்து முடித்துவிட்டு வெளியே வருவோருக்கும், அவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புக்கும் இடையே இடைவெளி அதிகமிருக்கிறது. இதைக் குறைக்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பாடத்தில் 300 பேர் படித்து முடித்து வெளியே வருகின்றனர் என்றால், அவர்களுக்கு அந்தக் கல்லூரி அமைந்திருக்கும் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்தி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
தற்போது சென்னைக்கு அடுத்து, பிற நகரங்களான சேலம், கோவை, மதுரை, திருச்சி ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளில் பெரிய அளவிலான வளர்ச்சியை எட்டும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் கோவை நகரம் மட்டும் ரூ.25,000 கோடி முதலீட்டைப் பெறும் என்றும் கூறப்படுகிறது.
இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!
என்ற முண்டாசுக் கவியின் கனவை நனவாக்க இளைஞர்கள் சபதமேற்க வேண்டும். அக் கனவு நனவாகும் நாளே நன்னாள்.

Sunday, August 9, 2015

கோவையில் கவுன்சிலிங்: குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சென்னையில் தாயுடன் தவித்த கல்லூரி மாணவி


தகுதியும் திறமையும் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான் கிராமத்து மாணவ–மாணவிகள் பலர் வாய்ப்புகளை கோட்டை விடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி.

நேற்று காலை 6.30 மணி.

கிண்டி அண்ணாபல்கலை கழக வளாகத்தில் வழக்கம் போல் பலர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேரம்.

அப்போது தளைய தளைய புடவை கட்டிய ஒரு பெண், அவர் அருகில் அழகாக சுடிதார் அணிந்து, நேர்த்தியாக வாரப்பட்ட தலையுடன், கையில் லெதர் பேக்கையும் வைத்துக் கொண்டு திரு... திரு... என்று முழித்து கொண்டிருந்தார்கள்.

பார்த்ததுமே ஒரு கிராமத்து தாயும், மகளும் இடம் தெரியாமல் தவிக்கிறார்கள் என்பது புரிந்து விட்டது. நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களிடம் எங்கே போகணும்? என்று விவரம் கேட்டனர்.

கவுன்சிலிங்குக்கு வந்தோம் என்று அவர்கள் சொன்னதும் ‘‘என்ஜினீயரிங் கவுன்சிலிங் முடிந்து விட்டதே...’’ என்றார்கள்.

கவுன்சிலிங் முடிந்து விட்டதா? அய்யய்யோ எனக்கு இன்று காலை 8.30 மணிக்குத்தான் கவுன்சிலிங்... அண்ணா அரங்கத்தில் நடக்கிறது. நீங்கள் அந்த அரங்கம் எங்கே இருக்கிறது என்பதை மட்டும் சொல்லுங்கள் என்றார் அந்த இளம் பெண். அப்படி ஒரு அரங்கமே இங்கு இல்லையம்மா...

எங்கே, உங்கள் அழைப்பு கடிதத்தை காட்டுங்கள் பார்ப்போம் என்று அதை வாங்கி பார்த்தார்கள். அப்போதுதான் கவுன்சிலிங் இங்கு அல்ல. கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் என்பது தெரிய வந்தது.

அந்த மாணவியின் பெயர் சுவாதி. திருச்சி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர். பிளஸ்–2 தேர்வில் 1200க்கு 1017 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பி.எஸ்.சி. பயோடெக்னாலஜி படிப்பதற்காக கோவை வேளாண்மை பல்கலை கழகத்தில் விண்ணப்பித்துள்ளார். நேற்று காலை 8.30 மணிக்கு அண்ணா அரங்கில் கவுன்சிலிங்குக்கு வருமாறு அழைப்புக் கடிதம் அனுப்பி இருந்தார்கள்.

வெளியூர்களை பற்றி அவ்வளவாக அறியாத கிராமம். சுவாதியின் தாயாரும் படிக்காதவர். விவசாய வேலை செய்து மகளை படிக்க வைத்துள்ளார். அண்ணா அரங்கம் என்றதும் அண்ணா பல்கலை கழகம்தான் என்ற தவறான வழிகாட்டுதலால் அந்த ஏழைத்தாய் தன் மகளை அழைத்து கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து விட்டார்.

இடம் மாறி வந்து விட்டதை அறிந்ததும் தவித்து போனார்கள். மாணவி சுவாதியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. தனது ஆசை கனவுகள் அனைத்தும் முடிந்து விட்டது. இனி நான் படிக்க முடியாது என்று அழுது புலம்பினார்.

தவறான வழிகாட்டுதலால் வழிமாறி வந்த ஏழை மாணவியின் கல்லூரி வாழ்க்கைக்கு உதவி செய்ய நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் முன் வந்தனர்.

அப்போது நேரம் 7.30 மணி இன்னும் ஒரு மணி நேரத்தில் கோவை செல்வது எப்படி? விமான டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்ப சிலர் முன் வந்தனர்.

ஒரு அதிகாரி உடனடியாக கோவை வேளாண்மை பல்கலைகழக பதிவாளரை போனில் தொடர்புகொண்டு நடந்த விபரங்களை சொன்னார்.

அந்த மாணவியை உடனடியாக விமானம் மூலம் கோவைக்கு அனுப்பி வைப்பதாகவும் காலதாமதத்தை ஏற்றுக் கொண்டு அந்த மாணவியை கவுன்சிலிங்குக்கு அனுமதிக்கும்படி வேண்டினார். உண்மையை நிலையை அறிந்ததும் பதிவாளரும் சம்மதித்தார்.

அடுத்ததாக சென்னை விமான நிலையத்துக்கு காரும் ஏற்பாடு செய்தார்கள். தாய்–மகள் இருவருக்கும் கோவைக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்து கொடுத்தார்கள்.

கோவை விமான நிலையத்தில் இருந்தும் பல்கலைகழகத்துக்கு உடனடியாக காரில் அழைத்து செல்ல நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்தார்கள்.

காலை 10.05 மணிக்கு கோவைக்கு விமானம் புறப்பட்டது. அதோ பார் ஆகாய விமானம் என்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து ரசித்த சுவேதாவும், அவரது தாயாரும் ஆகாய விமானத்தில் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தார்கள். வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும்! ஆனால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று மனதுக்குள் எண்ணிய அவர்களுக்கு விமான பயண அனுபவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியவில்லை.

கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியுமா? கல்லூரியில் படிக்க இடம் கிடைக்குமா? என்ற கேள்விகளுடன் தாய்–மகளின் இதயங்கள் துடித்து கொண்டிருந்தன.

சரியாக 11.40 மணிக்கு விமானம் கோவையில் தரையிறங்கியது. அங்கே அவர்களை அழைத்து செல்ல சென்னை வாசிகளின் நண்பர் காருடன் தயாராக இருந்தார்.

சரியாக 12.15 மணிக்கு சுவேதாவை காரில் கோவை வேளாண்மை பல்கலை கழகத்துக்கு அழைத்து சென்றனர். பதிவாளரை சந்தித்தும் கவுன்சிலிங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன.

மதியம் 2 மணிக்கு நடந்த கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தான் விரும்பிய பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜி பாடப்பிரிவை தேர்வு செய்தார். காலையில் தொடங்கிய மன போராட்டத்துக்கு விடை கொடுத்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

திக்கு தெரியாத இடத்தில் தவித்த நேரத்தில் கடவுளின் வடிவமாக வந்து தனக்கு வாழ்வு கொடுத்த நல்ல இதயங்களை நினைத்து சுவேதா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

மனிதாபிமானம் மரத்துபோகவில்லை. வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் செய்து கொண்டிருக்கும் பெரிய மனிதர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பெயரை கூட வெளியே சொல்ல விரும்பாத அந்த பரோபகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்!

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்!

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான். இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது 'ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம்.

புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.

அதாவது, இணையதளங்களை எந்தவித வரையறைக்கும் உட்படுத்தாமல், ஒவ்வொரு தளமாக எட்டிப்பார்க்க செய்கிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, என்னை பயனுள்ள இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும் எனும் கட்டளைக்கு கீழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்வது தான் - கிளிக் செய்ததுமே தானாக ஒரு டேப் ஓபனாகி அதில் புதிய இணையதளம் தோன்றுகிறது.
இப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும், எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது; ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்வது என்பதே இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பது போலதானே. இந்த கண்டறிதலை கொஞ்சம் புதுமையான முறையில் சாத்தியமாக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’. பயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

புதிய தளங்களை இ-மெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம். டான் வாக்கர் மற்றும் மாட் கார்பெண்டர் ஆகிய இரு மென்பொருளாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தளம் தான் இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.



இணையதள முகவரி: http://randomusefulwebsites.com/

24-hour ordeal ends, 173 passengers of Dhaka airlines fly back to Muscat TNN | Aug 9, 2015, 05.26 AM IST

RAIPUR: The more than 24-hour ordeal of 173 odd passengers of United Bangladesh Airlines flight (UBD 585), which had made an emergency landing at Raipur airport on Friday evening came to an end on Saturday evening as an alternate flight (S2-AEH) arrived from Dhaka to take them to Muscat.

According to officials, the alternate aircraft from Dhaka arrived at 7.30 PM, exactly 24 hours after the emergency landing. At the time of filing of this news report, final preparations were being made at airport for departure of the flight.

Airport officials had to work overtime to make arrangements of food and stay of these stranded passengers. They were accommodated at first floor waiting room of terminal building.

Though customs officials were summoned to the airport last night soon after arrival of the aircraft, none of the passengers were allowed to leave airport building, as they did not had Indian visas. The flight was on its way from Dhaka to Muscat when it made an emergency landing at airport after one of its engines stopped working.

Officials said that arrangements were made for foreign exchange at airport to enable passengers to buy eatables and other necessities from shops.

Though arrangement of food was made for passengers, many of them preferred to buy their own stuff.

Meanwhile, residents of Bemetara village recovered a piece of iron, suspected to be part from the engine of flight UBD 585 in a field. Officials confirmed that the recovered piece is being brought to Raipur for verification.

Officials said that arrangements were made for foreign exchange at airport to enable passengers to buy eatables from shops.

Saturday, August 8, 2015

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் எண்: மத்திய அரசு முடிவு

Dinamani

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், பிற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் ஆதார் எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
வெளிநாடுவாழ் இந்தியர்கள், பிற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உள்பட இந்திய மண்ணைச் சேர்ந்த அனைவருக்கும் ஆதார் எண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளைச் செய்து முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி: இதனிடையே, அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கூறியதாவது: இறக்குமதி செய்யப்பட்ட தரை விரிப்புகளை இந்தியாவில் வர்த்தகம் செய்ய அனுமதி கோரி பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து அன்னிய முதலீடுகள் ஊக்குவிப்பு வாரியம், அதற்கு கடந்த ஏப்ரலில் ஒப்புதல் வழங்கியது. அலுமினியப் பொருள்கள் மீதான சுங்க வரி தொடர்பாக இந்திய அலுமினிய சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.
சர்க்கரை ஏற்றுமதி: ஏற்றுமதி தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், அமெரிக்காவுக்கு 8,000 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த மாதம் 21-ஆம் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 6,101 டன்னும், அமெரிக்காவுக்கு 8,071 டன்னும் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பியூர் டயட் இந்தியா, சுமிந்தர் இந்தியா ஆர்கானிக்ஸ், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் அந்நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்து வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Friday, August 7, 2015

பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!

காரில் ஒரு பக்கம் உங்கள் மனதுக்கு பிடித்தவர் அமர்ந்திருக்க, மறுபக்கம் வங்காளக்கடலை ரசித்தபடியே பயணம் செய்யும் அழகிய அனுபவத்தை தரக்கூடியது கிழக்கு கடற்கரை சாலை.
குறைந்த செலவில் வார விடுமுறையை நிறைவாக கொண்டாட விரும்புவர்களுக்கு ஈ.சி.ஆர் ஒரு வரப்பிரசாதம். ஒரு காரும், நான்கு நண்பர்களும் இருந்தால்போதும், காலை முதல் மாலை வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் ஈ.சி.ஆரில் டிரிப் அடித்துக்கொண்டிருக்கலாம். 

நெருக்கடியான சென்னை சாலைகளில் பயணம் செய்து அலுப்பானவர்கள், விசாலமான, காற்றோட்டமான, இயற்கை எழில் கொஞ்சும் ஈ.சி.ஆரை பார்த்தால் குழந்தையை போல துள்ளி குதித்துக்கொண்டு கார் ஓட்ட ஓடிவருவார்கள். 

திருவான்மியூரில் ஆரம்பித்து முட்டுக்காடு படகு குழாம், மாமல்லபுரம், புலிக்குகை, கடப்பாக்கம் கோட்டை, மரக்காணம் உப்பளம் என வழியில் உள்ள இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு கலாச்சார நகரமான புதுவையில் இரவில் தங்கிவிட்டு, மறுநாள் மீண்டும் சென்னை நோக்கி செல்வது. இதுதான் ஈ.சி.ஆரில் டிரிப் அடிக்கும் பொரும்பாலான இளைஞர்களின் உற்சாக திட்டமாக உள்ளது.  ரோட்டுக்கடை முதல் அரேபியன் ரெஸ்டாரண்ட் வரை ஈ.சி.ஆரில் இடம்பெறாத உணவகங்களே இல்லை. இவ்வளவு ரம்மியமான கிழக்கு கடற்கரை சாலைக்கு வேறு சில பெயர்களும் உள்ளது. அது, ‘‘கிழக்கு கலவர சாலை’’. 

இருவழி சாலையான ஈ.சி.ஆரில் வாரவிடுமுறை நாட்களில் மட்டும்  சுமார் 15,000 வாகனங்கள் கடப்பதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். அதே சமயம் வாரவிடுமுறை நாட்களில் ஈ.சி.ஆரில் ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்காமல் இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு நாளுக்கு நாள், அங்கு சாலை விபத்துகளில் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. 

சாலை விபத்து என்பது தாங்கிக்கொள்ள முடியாத சோகம், இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு. ஆனால் இன்னொரு சாரருக்கு ஈ.சி.ஆர் சாலையில் நடக்கும் விபத்து, 'வியாபாரம்’.
வாரவிடுமுறை நாட்களில் ஈ.சி.ஆரில் விபத்து நடக்காதா என்று ஏங்கி காத்திருக்கிறது அந்த கழுகு கூட்டம். விபத்தில் சிக்குபவர்கள் இந்த கழுகுக்கூட்டங்களிடமும் சிக்கி சின்னாபின்னமாவதுதான் கொடுமையின் உச்சம். 

ஈ.சி.ஆர் சாலையில் சில சமூக விரோத கும்பல் இரண்டு அணிகளாக பிரிந்து,  விபத்து நடக்கும் பகுதிகளில் கண்கொத்தி பாம்பு போல காத்திருப்பார்கள். விபத்து ஏதேனும் நடந்தால் காவல்துறைக்கு தகவல் செல்வதற்கு முன் இந்த கும்பலின் காதுகளுக்கு இன்ஃபார்மர்கள் மூலம் விஷயம் போய்விடும்.

சம்பவ இடத்திற்கு தனிதனியாக செல்லும் இந்த கும்பலில் ஒரு பிரிவினர், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு சாதகமாகவும், மற்றொரு பிரிவினர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் பஞ்சாயத்து பேசுவார்கள். விபத்தை ஏற்படுத்தியவர்கள் 'நாங்கள் காவல்துறை மூலம் பேசிக்கொள்கிறோம்' என்றாலோ அல்லது அவர்கள் பெரிய இடம் என்று தெரியவந்தாலோ இந்த கும்பல் பின்வாங்கிவிடும்.
அதேசமயம் விபத்துக்கு காரணமானவர்கள் தவறான உறவுமுறையினர் அல்லது பெண்தோழிகளுடன் வரும் கல்லுாரி மற்றும்  ஐ.டி  ஊழியர்கள் போன்றவர்களாக இருந்தால், அவர்கள் இந்த விவகாரம் காவல்துறைக்கு செல்வதை விரும்பமாட்டார்கள். 

விஷயம் வெளியே தெரிந்தால் தங்கள் மானம் போய்விடும் என்பதால், அவர்கள் பெரும்பாலும் பேசும்  தொகையை கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே விரும்புவார்கள். இத்தகையவர்கள்தான் இந்த கும்பலுக்கு லட்டு போன்றவர்கள். ‘‘போலீசுக்கு போனா உங்க பணமும் நேரமும்தான் வீணாகும். இங்கயே பேசி முடிச்சிட்டு போங்க. நாங்கதான் உங்க பக்கம் இருக்கோம்ல’’ என்று இரண்டு தரப்பையும் மூளைச் சலவை செய்வார்கள்.
எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இந்த விபத்தை பூதாகரப்படுத்துவது போன்று பேசி, அவர்களின் பயத்திற்கு தக்கபடி வசூலித்து, வசூலித்த தொகையில் சொற்ப தொகையை மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துவிட்டு பறந்துவிடுவர். பாதிக்கப்பட்டவர் காவல்நிலையங்களுக்கு சென்றாலும், அவர்களின் புகார் அங்கு எடுபடாது. காரணம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு 'உரிய மரியாதை' செய்யப்பட்டுவிடுவதே.

இதற்கு ஒத்துவராதவர்களை மிரட்டுவதும், அடிப்பதும் கூட சகஜமாக நடக்கும். விவரம் அறியாத பல இளைஞர்கள் காவல்துறைக்கு போனா வம்பு என்று எண்ணிக்கொண்டு இந்த கும்பலிடம் பணத்தை இழக்கிறார்கள். ஈ.சி.ஆரில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளை இந்த கும்பல்தான் பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கிறார்கள். உயிரிழப்பு போன்ற சம்பவங்களில் இந்த கும்பல் தலையிடுவதில்லை.

பொன், பொருளை பறிக்க ஒரு கும்பல் என்றால், பெண்ணை பறிக்கவும் ஒரு கும்பல் மரக்காணம் பகுதியில் உள்ளது. பெண்களை அபகரிக்க காத்திருக்கும் இந்த கும்பலின் முதல் குறி வெளியூர் வாகனங்கள்தான். வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்களில் காதலர்களோ, கணவன் மனைவியோ தனியாக சென்றால் பின் தொடர்வது இந்த கும்பலின் வாடிக்கை. மரக்காணம் பகுதியை தாண்டி கடலும், உப்பளமும் சூழ்ந்த தனிமை பகுதியில் ஓய்வு எடுக்க வெளியூர் ஜோடிகள் காரை விட்டு இறங்கினால், அந்த கும்பலிடம் சிக்குவது உறுதி.
அப்படி இறங்கும் ஜோடிகளிடம் இருந்து பணம், பொருளை பறிப்பது ஒரு பக்கம் என்றால், சமயங்களில் குடும்ப பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கடந்த மாதம் அப்படி சிக்கிய ஜோடி ஒன்றை,  இந்த கும்பல் மிரட்டி, கணவனை மட்டும் விரட்டிவிட்டிருக்கிறார்கள். பயந்து ஓடிய கணவன் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். 

ஆனால் அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இரு தினங்களுக்கு பின் ஒதுக்குப்புறமான உப்பளம் ஒன்றின் அருகே, அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் அந்த பெண்.
இப்படியும் கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. பணம், பொருட்களை இழக்கும் வெளியூர்வாசிகள் தப்பித்தால் போதும் என்று எந்த புகாரும் அளிக்காமல் சென்றுவிடுகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்கள் மரக்காணம் பகுதியில் அடிக்கடி நடந்தாலும் வெளிய தெரிவதே இல்லை. இந்த சம்பவங்கள் வெளிவராமல் இருப்பதற்கு காவல்துறையும் ஒரு காரணம். 

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க சென்றால், போலீஸார் கேட்கும் வசவு வார்த்தைகள் காது கூச வைக்கும் அளவு இருக்கும். போலீஸாரின் இந்த அலட்சியமே போக்குதான் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வருவதற்கு காரணம்.

கிழக்கு கடற்கரை சாலை பாதுகாப்பான சாலையாக மாற வேண்டும்....!

- ஆ.நந்தகுமார்
படங்கள்: 
தே.சிலம்பரசன்

Thursday, August 6, 2015

ஆபாசத்தை வேரறுப்போம்

Dinamani

வகுப்பறைக்குள் செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பார்த்த சில மாணவிகள் மீது தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக அண்மையில் செய்தி வெளியானது. அந்த மாணவிகளின் பெற்றோரை அழைத்து ஆசிரியர்கள் எச்சரித்து அனுப்பினர். அந்தப் பெற்றோரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?
கல்லூரி மாணவ, மாணவிகளின் நிலைமை இன்னும் மோசம். இணைய வசதியுடன் கூடிய செல்லிடப்பேசி இல்லாத கல்லூரி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். எந்த அதிநவீன வசதியும் நன்மையும், தீமையும் கலந்ததுதான்.
இணைய வசதியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவோரைவிட, கேளிக்கைக்கும், பாலுணர்ச்சித் தூண்டுதலுக்கும் பயன்படுத்துவோரே அதிகம் பேர்.
இங்குதான் கட்டுப்பாடுகளும், சட்டங்களும் தேவையாகின்றன. குறிப்பாக, பாலியல் வன்முறைக் குற்றங்களில் கைது செய்யப்பட்ட பலர், செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பார்த்ததே குற்றமிழைக்கத் தூண்டியதாக வாக்குமூலம் அளித்துவரும் நிலையில், அதன் இணையப் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைப்பது அவசியமாகியுள்ளது.
பாலுணர்ச்சி உயிர்களுக்குப் பொதுவானது. ஆனால், மனிதன் மட்டுமே பாலுறவை விஷமத்தனமான கேளிக்கையாக்கி இருக்கிறான். அந்தரங்கமாக நடைபெற வேண்டிய பாலுறவைப் பதிவு செய்து அதை வர்த்தகமும் செய்கிறான். இதற்கு உதவுகின்றன ஆபாச இணையதளங்கள்.
பாலுறவைத் தூண்டும் இலக்கியங்களும், திரைப்படங்களும் இதற்கு முன்னரும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை வயது வந்தோர் மட்டுமே, அதுவும் குற்ற உணர்ச்சியுடன் தனியே படிக்கவும் பார்க்கவும் செய்தனர்.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சியான ஆபாச விடியோ பேழைகளும்கூட ரகசியமாகவே ரசிக்கப்பட்டன.
ஆனால், நவீன செல்லிடப்பேசிகளின் வருகை நமது வெட்கமின்மையை வெளிப்படுத்தும் கருவியாகிவிட்டது. பயணிகள் சூழ்ந்த பேருந்திலும், ரயிலிலும்கூட செல்லிடப்பேசியில் சிலர் ஆபாசப் படம் பார்க்கிறார்கள்.
இந்த ஆபாசப் படத்தைப் பார்க்கும் செயலே அடுத்த நிலையில் பலாத்காரத்துக்கும் இட்டுச் செல்கிறது. 2012-ஆம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் பலவந்தப்படுத்தப்பட்ட நிர்பயாவின் அவலத்துக்குக் காரணமான குற்றவாளி ஒருவன், தான் பார்த்த ஆபாசத் தளமே தன்னை மிருகமாக்கியது என்று சொன்னதை மறக்க முடியுமா?
இன்று உலக அளவில் கோடிக்கணக்கான ஆபாச இணையதளங்கள் இருப்பதாக புள்ளிவிரங்கள் கூறுகின்றன. செல்லிடப்பேசியில் இவை திறந்தவெளியில் இலவசமாகவே கிடைக்கின்றன.
எனவேதான், கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுத்தார். மிக மோசமான 850 ஆபாச இணையதளங்களைப் பட்டியலிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அவர், இந்தத் தளங்களால் இளைய சமுதாயம் சீரழிக்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, "இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமானது. இந்த விஷயத்தில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?' என்று கடந்த ஜூலை 8-ஆம் தேதி கேள்வி எழுப்பினார். தவிர, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையுடன் ஆகஸ்ட் 10-இல் பதிலளிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, மத்திய அரசு 857 ஆபாச இணையதளங்களைத் தடை செய்தது. தொலைதொடர்புத் துறையின் கட்டளைக்கு இணங்கி, மேற்படி இணையதளங்களை இணைய சேவை அளிக்கும் நிறுவனங்கள் (ஐ.எஸ்.பி.) முடக்கியுள்ளன. இதற்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆபாசத் தளங்கள் கருத்துரிமையின் சின்னம் என்று சிலர் முழங்குகிறார்கள். பெண்களை போகப் பொருளாகச் சித்திரிப்பதுடன் பாலியல் குற்றங்களுக்கும் வழிவகுக்கிற ஆபாசத் தளங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களைப் பற்றி என்ன சொல்வது?
உண்மையில், அரசு மிகவும் மென்மையான நடவடிக்கையையே எடுத்துள்ளது. இப்போதும்கூட சமூகக் கட்டுப்பாடுகளை மீறாத யூ-டியூப் போன்ற தளங்கள் தடுக்கப்படவில்லை. சிலரது ஆட்சேபங்களை ஏற்று பல இணையதளங்களின் முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தவிர, மெய்நிகர் கணினி இணையத் தொழில்நுட்பம் (வி.பி.என்.) மூலமாக விருப்பமுள்ளவர்கள் தங்கள் வயதை உறுதி செய்து, இத்தளங்களைக் காண்பதை அரசு தடுக்கவில்லை.
இப்போதைய பிரச்னை என்னவென்றால், பருவ வயதை எட்டாதவர்களும் கூட மிக எளிதாக செல்லிடப்பேசியில் ஆபாசத் தளங்களை எந்தக் கட்டுப்பாடும் இன்றிக் காண முடிவதுதான். எனவே, அரசின் இந்த நடவடிக்கையை பெண்ணியவாதிகளும், பண்பாட்டை நேசிப்பவர்களும் ஆதரிக்க வேண்டும்.
பொதுத் தளத்தில் எழும் கூக்குரல்களின் எண்ணிக்கை ஆபாசத் தளங்களுக்கு சாதகமாகிவிட்டால், அரசு தனது நிலையிலிருந்து பின்வாங்கிவிடும்.
இப்போதும்கூட நீதிமன்ற உத்தரவால்தான் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஆபாசத் தள விவகாரத்தில் அரசு விலகியிருக்க வேண்டும் என்ற கருத்துப் பிரசாரம் செய்யப்படும் நிலையில், எதிர்காலத் தலைமுறையினரின் நலனை விரும்பும் அனைவரும் அரசின் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும்.
பிஞ்சிலேயே வெம்பிவிடும் வாலிப வயோதிக அன்பர்களாக நமது இளைஞர்கள் மாறாமல் தடுக்க வேண்டுமானால், பெண்களின் மாண்பு காக்கப்பட வேண்டுமானால், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதையும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களையும் ஓரளவு தடுக்க வேண்டுமானால், இத்தகைய இணையதளங்களை கட்டாயம் முடக்கத்தான் வேண்டும்.

NEWS TODAY 2.5.2024