Saturday, October 24, 2015

யார் மூலம் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பலாம்?

logo

சரித்திர காலம்தொட்டே, ‘‘திரை கடலோடியும் திரவியம் தேடு’’ என்பது தமிழர்களின் வாழ்வு முறையாக இருந்து இருக்கிறது. இப்போது பல ஆண்டுகளாக ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்கிறார்கள். இதில் படித்தவர்கள் மட்டுமல்லாமல், படிக்காதவர்களும் அடங்குவார்கள். அரபு நாடுகளில் கட்டுமானப்பணி போன்ற பல பணிகளுக்கு முறைசாரா தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல தொடங்கியபிறகு, கிராமப்புறங்களில் ஏராளமான குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்த நிலையில் இருந்து வளமான நிலைக்கு சென்றன. எனவே, ஏழை குடும்பங்களில் யாராவது ஒருவர் அரபு நாடுகளுக்கு சென்றால், அவர்கள் அங்கு சம்பாதித்து பணம் அனுப்புவார்கள், நாம் வசதியான நிலையில் வாழலாம் என்ற கனவுடன் இருப்பதையெல்லாம் விற்றுவிட்டு, போதாக்குறைக்கு கடன் வாங்கி அனுப்புகிறார்கள். பலர் இவ்வாறு அனுப்பும்போது, அரசு நிர்வாகங்கள் அல்லது அரசு அங்கீகாரம் இல்லாத ஏஜெண்டுகள் மூலமாக செல்வதால் பணமும் நிறைய கொடுக்கவேண்டியது இருக்கிறது, சொன்ன வேலையோ, சொன்ன சம்பளமோ கிடைக்காமல் திக்கு தெரியாத நாட்டில் போய் அவதிப்படுகிறார்கள். தப்பித்து தமிழ்நாட்டுக்கு திரும்பிவிட்டால் போதும் என்று தவிக்கிறார்கள். இதில் வீட்டு வேலைக்கு செல்லும் தாய்க்குலத்தின் பாடுதான் பரிதாபம். சொல்லொண்ணா துயரத்தில் நரக வேதனையை அனுபவிக்கிறார்கள்.

சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற கஸ்தூரி என்ற பெண், அவர் வேலைபார்த்த வீட்டு பெண்ணால் வலது கை வெட்டி துண்டிக்கப்பட்டதாகக்கூறி, அங்கு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அந்த பெண்ணோ, ‘நான் வெட்டவில்லை, கஸ்தூரி 3–வது மாடியில் இருந்து சேலையைக்கட்டி தப்பித்துச்செல்ல கீழே இறங்கும்போது, ஜெனரேட்டர் மீது விழுந்ததால் கை துண்டிக்கப்பட்டுவிட்டது’ என்கிறார். விசாரணையில், கஸ்தூரியும் முறையான அனுமதிபெற்று சவுதிக்கு வேலைக்கு செல்லவில்லை என்கிறார்கள். அதாவது, வீட்டுவேலைக்கு செல்லும் அனுமதி இல்லாமல் சென்றிருக்கிறார் என்று தகவல்கள் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சவுதி அரேபியாவில் வீட்டுவேலைகள் செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆட்கள் அனுப்புவதற்காக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், 5 லட்சத்துக்கும்மேல் அங்கு பணியாற்ற இந்தியாவில் இருந்து செல்லமுடியும். அரசின் நிறுவனங்கள் அல்லது அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலமாக வேலைக்கு செல்பவர்களுக்கு, தூதரகம் மூலமாக அனைத்து பாதுகாப்பும் இருக்கும். ஆனால், போலி ஏஜெண்டுகள் அல்லது அரசின் அங்கீகாரம் இல்லாத ஏஜென்சிகள் மூலமாக முறையான விசா இல்லாமல் செல்லும்போதுதான் அனைத்து பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டு வேலைக்காக செல்ல விரும்பும் தமிழர்கள், போலி ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறவேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசால் 30–11–1978 அன்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால், தொடங்கி இத்தனை ஆண்டுகளாகியும், இந்த நிறுவனத்தின் மூலமாக 2014–2015 வரை 8,469 பேர்களே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கேரளாபோல, தமிழ்நாட்டிலும் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அல்லது அரசின் அங்கீகாரம்பெற்ற நிறுவனங்கள் மூலம்தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பவேண்டும். அவர்களின் பாதுகாப்பான பணிக்கு இந்த நிறுவனங்கள்தான் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கவேண்டும். அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இன்னும் தீவிரமாக இயங்கவேண்டும். இந்த ஆண்டில் ஏராளமானவர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி முத்திரை பதிக்கவேண்டும்.

Friday, October 23, 2015

ஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா? கவலை எதுக்கு... அரிசி இருக்கு!...vikatan

ஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா? கவலை எதுக்கு... அரிசி இருக்கு!

யுத பூஜை அன்று அனைவரும் கார், பைக்கை எல்லாம் குளிப்பாட்டுவார்கள் என தெரிந்ததோ என்னவோ, என் செல்லக்குட்டி ராகவன், காலையிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் என் ஸ்மார்ட் போனை குளிப்பாட்டிட்டான்.

விளைவு, போனுக்கு ஜலதோஷம், எனக்கு வீட்டிலேயே பூஜை... போன் ஆன் ஆகுது, Incoming call வருது; ஆனா touch screen work ஆகலை; Touch screen work ஆகாம போன்ல எதையுமே பண்ண முடியல; Phone ஐ unlock கூட பண்ண முடியலை;

திருதிரு-னு முழிச்சுட்டு இருக்கும் போதுதான் ஆபத்பாந்தவன் Google - ஞாபகம் வந்தது. 

இப்படி போன் தண்ணீரில் நனைந்து விட்டால், phone back cover, sim card, memory card, battery எல்லாத்தையும் கழற்றி விட்டு, ஒரு air lock cover-ல அரிசிய போட்டு, அதுக்கு phone-ஐ போட்டால், phone-க்குள் இருக்கும் தண்ணீரை அரிசி உறிஞ்சி விடுமாம். அரிசியால LCD Screen க்கு பின்னால் இருக்கும் தண்ணீரை கூட உரிஞ்ச முடியும் என்று Google கூறியது.
air lock cover-க்கு எங்கே போவது என நினைக்கையில், "பேசாம phoneஐ அரிசி பாத்திரத்துக்குள்ளேயே போட்டுட்டா என்ன?" என அம்மா கேட்க, phoneஐ அரிசி பாத்திரத்துக்குள் போட்டு புதைச்சுட்டு, 'திக்திக்' மனதோட அரை மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தேன்.

WOW... Touch Screen இப்போ நல்லா ஒர்க் ஆகுது. உடனே outgoing calls போகுதா, key pad work ஆகுதா, music play ஆகுதா-னு எல்லாம் செக் பண்ணிணேன். Rear Camera lensல தண்ணீர் திரை போல தெரிந்தது. மறுபடியும் அரை மணி நேரம், அரிசியின் உதவி தேவைப்பட, இப்போ என் phone- perfectly alright.

எதிர்பாராம உங்களில் யாராவது மழையில் போனுடன் நனைந்து விட்டால், இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என நினைத்து Share செய்தேன்.

-உமாதேவி கணேசன்

அமராவதிக்கு வாழ்த்துகள்!

Dinamani


By ஆசிரியர்

First Published : 23 October 2015 12:58 AM IST


புதிய மாநிலத்தை உருவாக்குவதைக் காட்டிலும் மிகக் கடினமான வேலை புதிய தலைநகரம் அமைப்பது. புது தில்லி, சண்டீகர் போன்ற நகரங்களுக்குப் பிறகு, இந்தியாவில் புதிதாக ஒரு தலைநகரை உருவாக்கும் பொறுப்பும், பெருமையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குக் கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டவுடன், ஹைதராபாத் நகரை பத்து ஆண்டுகள் வரைதான் பொதுத்தலைநகராக பயன்படுத்த முடியும் என்ற நிலையில், ஒரு புதிய இடத்தைத் தலைநகராகத் தேர்வு செய்து, வசதிகளை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு ஆந்திர மாநில முதல்வருக்கு ஏற்பட்டது. குண்டூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் என, தற்போதைய நகரங்களில் ஒன்றையே தலைநகராகத் தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பும், அப்பகுதி சார்ந்த மக்களின் அழுத்தமும் இருந்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்தார் சந்திரபாபு நாயுடு.

கிருஷ்ணா நதிக்கரையோரம் குண்டூர்- விஜயவாடாவுக்கு இடையே அமராவதியில் 32 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமையவிருக்கும் தலைநகருக்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. பூமிபூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். பத்து ஆண்டுகளில் இந்த நகரை, அதாவது சந்திரபாபு நாயுடுவின் மொழியில் சொன்னால், இந்தியாவின் சிங்கப்பூரை, அமைத்துவிட வேண்டும் என்ற தீவிரத்துடன் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. ஒரு தலைநகருக்கான அலுவலகம், சட்டப்பேரவை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான வீடுகள் ஆகியவற்றை அமைக்க அதிகபட்சம் 1,000 ஏக்கர் போதும் என்றார்கள். புதிய இடத்தில் மரங்கள் வெட்டப்படும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்த்தன. நான்கு போகம் காணும் விளைநிலம் பறிக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் எதிர்த்தன. 58 தாலுகாக்களைச் சேர்ந்த 500 கிராம மக்கள் வெளியேற வேண்டுமா என்று கேள்வி எழுந்தது. எல்லா எதிர்ப்புகளையும் மீறித்தான் இந்த நகரம் இப்போது அடிக்கல் விழாவைக் கண்டுள்ளது.

இதற்கு அடிப்படைக் காரணம், ஆந்திர மாநிலத்தின் தற்போதைய நகரங்கள் எவையுமே, விரிவு செய்யப்பட முடியாதவை. தேவையெனில் ஒரு துணை நகரை, அலுவல் சார்ந்து அமைக்கலாமேயொழிய, ஒரு தலைநகராக மாற்றமடைவது எந்த நகரிலும் சாத்தியமில்லை. ஆகவேதான் சந்திரபாபு நாயுடுவின் இந்த முயற்சி முதல் வெற்றியைக் கண்டுள்ளது. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை அளிக்க நாயுடு உறுதி அளித்துள்ளார்.

அமராவதி வெறும் அரசு நிர்வாகத்துக்கான நகரமாக மட்டுமே இருக்காது. அது பொருளாதார நகரமாக, மக்கள் நகரமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன், வணிக வளாகங்கள் மட்டுமன்றி, இயற்கை சார்ந்த நீர்த் தடாகங்களுடன் ஒரு சிங்கப்பூர் போல, ஹாங்காங் போல இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிடுகிறார். இதற்கான பெருநகரத் திட்டத்தை சிங்கப்பூர் நிறுவனங்கள் அளித்துள்ளன. சந்திரபாபு நாயுடு நினைப்பது போலவே இந்த நகரம் அமைந்துவிட்டால், ஆசியாவிலேயே சிறந்த நகரமாக இது அமையும்.

இந்தியாவின் முக்கிய நகரங்கள், குறிப்பாக, மாநிலத் தலைநகரங்கள் பல நூற்றாண்டு பழைமையானவை. அவற்றில் சாலைகளை விரிவுபடுத்துவது என்றால், தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களின் இருப்பிடங்களை அழிக்க வேண்டியதாக இருக்கும். நூறடிச் சாலைகளையும், அறுபது அடிச் சாலைகளையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்த நிலையில் நவீன நகரங்கள் புதிதாக அமைக்கப்படுவது மட்டுமே நடைமுறை சாத்தியமாக இருக்கும்.

அதனால், சந்திரபாபு நாயுடு திட்டமிடுவது போல, புதிதாக உருவாக்கப்படும் நகரங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் திட்டமிடப்படாமல், அடுத்த 100 ஆண்டுகளுக்கான நகரமாகத் திட்டமிடப்பட வேண்டும். ஏனெனில், இந்தியாவில், எல்லா தலைநகரங்களும் மக்கள் நெரிசலாலும், கட்டட விதிமுறை மீறல்களாலும் சுருங்கிக் கிடக்கின்றன.

சென்னையிலும் இதே நிலைமைதான். சாலைகளை அகலப்படுத்தும் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஏற்கெனவே இருந்த சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டன. கூவமும் அடையாறும் சுருங்கிப் போய் சாக்கடையாகின. கழிவுநீர் ஓடைகள்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை.

தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், தலைநகரைத் திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று சொன்னபோது, அவரது எண்ணம் காவிரியோரம் ஒரு புதிய தலைநகரை உருவாக்க வேண்டும் என்பதுதான். ஒருவேளை அவரது கனவும்கூட ஒரு சிங்கப்பூர் நகரமாக இருந்திருக்கக்கூடும். குறைந்தபட்சம், பல அலுவலகங்களின் தலைமையிடத்தை திருச்சிக்கு மாற்றுவதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் ஏளனங்களால் அவர் அதைக் கைவிட நேர்ந்தது.

இன்று இந்தியாவின் அனைத்து தலைநகரங்களின் நிலையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உருவெடுத்துள்ளது. இந்தியாவின் தலைநகரங்கள் அனைத்தும் அதிகார மையங்களின் இருப்பிடமாக வலுப்பெற்ற போதிலும், மக்கள் வாழத் தகுதியற்ற, சுகாதார வசதிகளே இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.

எல்லா மாநிலங்களிலும் புதிய தலைநகரை உருவாக்குதல் சாத்தியமில்லை என்றாலும், இணையத்தால் அலுவலகங்கள் நடத்த முடியும் எனும் சூழலில், பல அரசுத் துறை அலுவலகங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் தலைநகரின் இறுக்கத்தைத் தளர்த்த முடியும். ஒரே இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் வைத்திருப்பது இனியும் இயலாது.

அமராவதி ஒரு சிங்கப்பூர் ஆக வாழ்த்துகள்.

பருப்பு விலை என்னாச்சு?

logo

1967–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டங்களில், ‘‘பக்தவச்சலம் அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சு?, வெங்கட்ராமன் அண்ணாச்சி, வெங்காயம் விலை என்னாச்சு?’’ என்ற கோஷங்கள்தான் பெரிதும் எழுப்பப்பட்டன. அந்த வகையில்தான், சமீபகாலங்களாக அரிசி விலை கட்டுக்குள் இருந்தாலும், பருப்பு, உளுந்து விலை விண்ணை தொட்டுவிடுவேன் என்று பயங்காட்டிக்கொண்டு இருக்கிறது. வெங்காயம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இந்தியா முழுவதிலும் பருப்பு விலை மற்றும் உளுந்து விலை உயர்வுதான் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. நேற்று சென்னையில் துவரம் பருப்பு விலை ஒரு கிலோவுக்கு ரூ.210 ஆகவும், பாக்கெட் துவரம் பருப்பு விலை ரூ.225 ஆகவும், உளுந்தம் பருப்பு ஒரு கிலோ விலை ரூ.180 ஆகவும், பாக்கெட் உளுந்தம் பருப்பு ரூ.200 ஆகவும் இருந்தது.

ஓட்டல்களில் 2 இட்லி வாங்கி நிறைய சாம்பார் ஊற்றி பிசைந்து சாப்பிட்ட காலம் எல்லாம் போயே போய்விட்டது. இப்போது சிறிய ஓட்டல்களில்கூட சாம்பாரை தூக்குவாளியில் கொண்டுவந்து ஊற்றுவதில்லை. சிறிய கிண்ணங்களில் கொண்டுவந்துதான் தருகிறார்கள். பருப்பு வடை, உளுந்த வடையின் அளவெல்லாம் சிறியதாகிவிட்டது. சாம்பார் வடையை ஓட்டல்களில் காணவேயில்லை. வருமானம் குறைந்த வீடுகளில் இப்போதெல்லாம் சமையலில் சாம்பார் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. இரண்டு சிறிய மீன்களைப்போட்டு குழம்பு வைத்துவிடலாம் என்றே நினைக்கிறார்கள். மீன் விலை குறைந்துவிட்டது. மத்தி மீன் கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும், கெண்டை மீன் கிலோ 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரையிலும் என்று தொடங்கி பல மீன்கள் கைக்கு எட்டும் விலையிலேயே இருக்கிறது.

துவரம் பருப்பு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் விளைவதில்லை. மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மட்டும்தான் விளைகிறது. பருவமழை பொய்த்ததாலும், சாகுபடி பரப்பு 12.5 லட்சம் ஹெக்டேர் குறைந்ததாலும், சாகுபடி செய்த நிலங்களில் விளைச்சல் குறைந்துவிட்ட காரணத்தாலும், சராசரி உற்பத்தி 10.66 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டில் ஒரு கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தி, இந்த ஆண்டு ஒரு கோடியே 72 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் பருப்பின் தேவை ஆண்டுக்கு ஏறத்தாழ 2 கோடியே 30 லட்சம் டன்னாகும். இந்த பற்றாக்குறையை சரிசெய்ய வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யவேண்டும், அல்லது சாகுபடி பரப்பை உயர்த்தவேண்டும். இப்போது 5 ஆயிரம் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் டன் வரப்போகிறது. இன்னும் 10 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது என்கிறார்கள். இதெல்லாம் நிச்சயமாக போதாது. இன்னும் இருமாதங்களுக்கு பருப்பு தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். இன்னும் விலை உயர்ந்தால் மக்களால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. கப்பலில் இறக்குமதி செய்வதற்கு பதிலாக, அவசர அத்தியாவசியம் கருதி, விமானம் மூலம் இறக்குமதி செய்ய பரிசீலிக்கவேண்டும். அடுத்த ஆண்டுக்கு இப்போதே திட்டமிடவேண்டும். சாகுபடி பரப்பை உயர்த்தவேண்டும். இந்த மாநிலங்களில்தான் விளையும் என்ற நிலையை மாற்றி, அனைத்து மாநிலங்களிலும் சீனா, இஸ்ரேல் நாடுகளைப்போல, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி துவரை பயிரிடவேண்டும். மொத்தத்தில், ரெயில்வே பட்ஜெட்போல, வேளாண்மைக்கும் தனி பட்ஜெட் போட்டு, அனைத்து பயிர்களையும் திட்டமிட்டு பயிரிடவேண்டும்.

Tuesday, October 20, 2015

பெண் எனும் பகடைக்காய்: சிறகடிக்கும் ஒற்றைப் பறவைகள்! ..........பா.ஜீவசுந்தரி

Return to frontpage

தனது இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளத்தின் மீது ஆச்சி மனோரமா மிதந்து சென்ற காட்சி நம் வாழ்நாள் முழுவதும் மறக்காது. அநேகமாக அண்மைக் காலங்களில் பெண் ஆளுமை ஒருவரின் இழப்புக்காக இவ்வளவு மக்கள் வெள்ளம் திரண்டதில்லை.

பொதுவாகத் தங்கள் அபிமான ஆண் நடிகர்கள் அல்லது அரசியல் தலைவர்களுக்கே இது போன்ற பெரும் வெள்ளம் திரளும். ஆனால், ஆச்சிக்குத் திரண்ட கூட்டம் சிந்திக்க வைக்கிறது. அவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நகைச்சுவை நாயகியாக நடித்தவர் என்பதாலா அல்லது ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் என்பதாலா, அல்லது பழக மிகவும் இனியவராக, யார் மீதும் தவறாக ஒரு சொல் கூறாதவராக, யாரிடமிருந்தும் ஒரு சொல் கேளாதவராக வாழ்ந்து அனைவரிடமும் நட்பு பேணியதாலா?

அவரது இழப்பிலிருந்து மீள முடியாமல் அவரை அறிந்தவர்கள் கூறிய அஞ்சலிக் குறிப்புகள் அனைத்திலும் ஓர் உண்மை இருந்தது. அவர் ஒற்றைப் பறவையாக வாழ்ந்தவர். அவர் ஏற்ற பாத்திரங்கள் இனித்ததைப் போல அவரது சொந்த வாழ்க்கை இனிப்பானதல்ல. சோகங்கள், துயரங்கள், துரோகங்கள் இவற்றைச் சந்தித்துக்கொண்டேதான் அவர் மக்களுக்கு மகிழ்வூட்டிக்கொண்டிருந்தார்.

தோல்வியை எதிர்கொள்வதன் சவால்கள்

ஒரு பெண் தன் மண வாழ்க்கை தோல்வியுறும்போது எதிர்கொள்ளும் துன்பங்கள் அவ்வளவு எளிதான வையல்ல. அதிலும் குழந்தைகளுடன் தனித்து விடப்படும்போது அவர்களுக்கு அன்பும் ஆதரவும் தந்து அரவணைக்கக்கூடிய பெற்றோர், உடன் பிறந்தவர்களின் அண்மை மிக அவசியம். தன் கையே தனக்குதவி என வாழ நேரும்போதும் பொருளாதார பலம் பெற்றால்தான் பாதிக் கிணறு தாண்டியவர்களாவார்கள். அது துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் அவர்களுக்கு அளிக்கும். அவர்களின் பெரும் பலமும் அதுவே.

உற்றவர்களின் ஆதரவு இல்லாதபோது அக்கறை என்ற பெயரில் உள்ளே புகும் நபர்கள், சாய்ந்துகொள்ளத் தமக்குத் தோள் கொடுப்பதாக நினைத்து மயங்கி மீண்டும் சரிவை நோக்கித் தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம். உண்மையிலேயேயே மாறாத அன்பும் அக்கறையும் கொண்டவர்களும் இல்லாமல் இல்லை. ஆனால், இவர்கள் அக்கறையானவர்கள்தானா என்பதைக் கண்டுகொள்வதற்குள் காலம் குப்புறத் தள்ளிவிட்டுக் குழியும் பறித்துவிடுகிறது. ஆச்சிக்கு தாயாரின் உற்ற துணை, அசலான நண்பர்கள் பலரின் ஆதரவு இருந்தது.

பல ஆண்டுகளின் முன் சென்னைப் புறநகரில் 25 கி.மீ தாண்டிக் குடியிருந்தபோது, அன்றாடம் மின்சார ரயிலில் பயணித்து அலுவலகம் வர வேண்டும். அதில் பெண்கள் பெட்டி என்பது பலவிதமான கூட்டுக் கலவைகளும், உணர்வுகளும், வண்ணங்களும் நிறைந்த அனுபவத்தைக் கொடுக்கும். தலைவிரி கோலமாக, இடுப்பில் குழந்தை, குழந்தைக்கான உணவு, உடை அடங்கிய பை, ஹேண்ட்பேக் சகிதம் ஓடி வந்து ரயிலைப் பிடிக்கும் ஒரு பெண்ணை தினமும் நாங்கள் சந்திப்போம்.

அந்த ஒரு மணி நேர ரயில் பயணத்தில் ஒவ்வொரு பெண்ணும் மற்றவருக்கு உற்ற தோழியாய், தாயாய் உருமாறி பரஸ்பரம் உதவிக்கொள்வோம். குழந்தைக்கு ஒரு பெண் சோறூட்டுவதற்குள், தலைவிரி கோலமாய் வந்தவள் கூந்தலைச் சீவி முடித்து சிங்காரித்திருப்பாள். மற்றொரு பெண் அந்தக் குழந்தைக்கு உடையுடுத்தி, அலங்காரம் செய்வாள். அதிகாலை முதல் வீட்டு வேலைகள், சமையலை முடித்துவிட்டுச் சாப்பிட நேரமில்லாமல் வரும் பெண்கள் தங்கள் சாப்பாட்டுக் கடையை அங்குதான் முடிப்பார்கள். வாய்க்குப் பிடித்ததை சமைத்துச் சாப்பிட முடியாத, வயிற்றுப் பிள்ளையுடன் வரும் ஒரு கர்ப்பிணிக்காக, அவள் விருப்பம் அறிந்து சமைத்து எடுத்து வந்து கொடுக்கும் அன்பு அதன் உச்சம்.

சென்ட்ரல் ஸ்டேஷன் வருவதற்குள் இத்தனையும் நடந்து முடிந்திருக்கும். பின் அவரவர் வழி, அவரவர் பாடு.

மாலை வீடு திரும்பும் போதும் இதே காட்சி. உதிரியாக வாங்கி வரும் பூ தொடுத்து முடிக்கப்பட்டிருக்கும்; அடுத்த நாள் சமையலுக்கான கீரைக்கட்டுகள் பல கைகளின் உதவியோடு ஆய்ந்து முடிக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிகள் எப்போதும் காணக்கூடியவை. மின்சார ரயிலில் அன்றாடம் பயணிக்கும் அத்தனை பெண்களுக்கும் இது அத்துப்படி. அதே அன்பு, பிரியம், வாத்ஸல்யத்துடன் இப்போதும் அம்மாதிரி நட்பும் பயணமும் தொடர்கின்றன. ஒரு மணி நேரப் பயணத்தில் கிடைக்கும் இந்த மாதிரியான அன்பும், ஆதரவும் வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவளுக்கு எல்லா இடங்களிலும் கிடைத்துவிட்டால் ஒற்றைப் பெண் எதையும் சாதிப்பாள்.

குழந்தைகளை வளர்க்கும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறு மாதிரியானவை. ஒருவருக்கொருவர் அவர்களே எதிரிகள், அவர்களே நண்பர்கள் என இரட்டை அவதாரம் எடுக்க வேண்டும். அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப கொஞ்சம் தாமதமானாலும் பயம் அடிவயிற்றில் உருக்கொள்ளும். குழந்தை என்ன செய்கிறானோ / செய்கிறாளோ என்ற கவலை வேலைகளின்போது கவனத்தைச் சிதறடிக்கும். பள்ளிப் பருவம் தாண்டும்போது வேறு மாதிரியான பயங்கள். வளரிளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளைக் கையாள்வதில் மிகுந்த பொறுமையையும் எச்சரிக்கை உணர்வையும் கைக்கொள்ள வேண்டும். பின் கல்லூரிப் படிப்பு தாண்டும் வரை பயம், பயம், பயம்தான்.

ஒரு குழந்தை மட்டும் கொண்டுள்ள பெற்றோர் எதிர்கொள்ளும் அச்ச உணர்வு மிக நியாயமானது. தன் வாழ்க்கைதான் இப்படியானது, தன் குழந்தைகள் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என நினைக்காத பெற்றோர்கள் யார் இங்கு? ஒற்றைப் பெண் எப்போது இங்கு சாதனையாளராகிறாள்? அவள் பொருளாதார ரீதியாகத் தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து, குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்து, அவர்களுக்கான எதிர்கால வாழ்க்கையை நல்ல விதமாக அமைத்துக் கொடுக்கும்போதுதான் அவளுக்கான சவால் நிறைவு பெறுகிறது.

இதில் எது ஒன்றில் சறுக்கினாலும் அவள் தோல்வி கண்டவளாகவே சமூகத்தால் புறம் தள்ளப்படுவாள். ஆனால், பொருளாதாரம் எனும் கடிவாளம் அவர்கள் கையிலேயே இருக்க வேண்டும், அப்போதுதான் மரணத்தின்போதும் அவள் வாழ்க்கையை வென்றவளாகிறாள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் ..... ஒய்.ஆண்டனி செல்வராஜ்



மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் மொத்தம் 2,626 படுக்கைகள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 2,600 முதல் 2,800 உள் நோயாளிகளும், 9,000 வெளி நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி 100 வெளி நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் பணிபுரிய வே ண்டும். அதன்படி, ராஜாஜி மருத் துவமனையில் தினமும் வரும் 9,000 வெளிநோயாளிகளுக்கு குறைந்தபட்சம் 90 செவிலியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், செவி லியர் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த சுகாதார சமூக செயற்பா ட்டாளர் ஆனந்தராஜ் கூறியது:

இந்திய மருத்துவக் கவுன் சில் நிர்ணயித்துள்ளபடி போது மான செவிலியர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியவில்லை. 1,200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி யாற்ற வேண்டும். ஆனால், இங்கு 338 நிரந்தர செவிலியர்கள், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 81 டெபுடேஷன் செவிலியர்கள் உட்பட 420 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் 49 வெளிநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. ஒரு பிரிவுக்கு 2 செவிலியர்கள் வீதம் 98 செவிலியர்கள் கட்டாயம் பணி யாற்ற வேண்டும். ஆனால், 49 செவிலியர்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றனர். பொது வார்டில் 8 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என விதி உள்ளது. அனேக பொது வார்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு 3 அல்லது 4 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

செவிலியர்களுக்கு வார விடுமுறை மற்றும் இதர விடுமுறை என்று கழித்தாலும், சராசரியாக ஒவ்வொரு ஷிப்டிலும் 60-லிருந்து 80 நோயாளிகளுக்கு 3 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகளில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இங்கு 3 அல்லது 4 செவிலியர்கள் மட்டுமே ஒரு ஷிப்டில் பணியில் உள்ளனர்.

பல வார்டுகளில் 150-க்கும் மேற்பட்ட படுக்கைகளுக்கு, ஒன்று அல்லது இரண்டு செவிலியர்கள் மட்டும் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர். பிரசவ வார்டில் அறுவை சிகிச்சை முடிந்தபிறகு தாய்மார்களை, குழந்தைகளுக்கு பால் ஊட்ட பழக்குவது, வலி உள்ளிட்ட இதர பிரச்சினைகளை கேட்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

ஒரு செவிலியரே 150-க்கும் மேற்பட்ட பெண்களை கவனிப்பதால், தரமற்ற மருத்துவச் சேவையே நோயாளிகளுக்கு கிடைக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘போதுமான செவிலியர்கள் உள்ளனர்’

இதுகுறித்து மருத்துவமனை டீன் ரேவதியிடம் கேட்டபோது, மருத்துவமனையில் மூன்று ஷிப்டுகளிலும் போதுமான செவிலியர்கள் பணிபுரிகின்றனர். டெபுடேஷன் மூலமும் தேனி, சிவகங்கை வெளி மாவட்டங்களில் இருந்தும் செவிலியர்கள் இங்கு வந்து பணிபுரிகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது 7400 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தினசரி 2 பேர் வீதம் சராசரியாக மதுரை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்து வருகின்றனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி செவிலியர்கள் பணியாற்றுவது சாத்தியமில்லாதது. போதுமான செவிலியர்களைக் கொண்டு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கி வருகிறோம் என்றார்.

மொபைல் பரிவர்த்தனை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?..

Return to frontpage


கோப்புப் படம்

சமீப காலமாக மொபைல் போன்கள் கிட்டத்தட்ட மணிபர்ஸ்களைப் போல உருமாற்றம் அடைந்துள்ளன. மொபைல் வாலட்டுகள் இந்த வசதிகளை அளிக்கின்றன. நமது வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பதைப்போல மொபைல் வாலட்டில் வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம்.இப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என்கிறபோது இன்னும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது.

நவீன வசதிகள் வளர வளர மனிதனின் சோம்பேறித்தனமும் கூடவே வந்து விடுகிறது. செல்போன் வராத காலங்களில் லேண்ட்லைன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் தொலைபேசி எண்களை எழுதி வைத்திருக்கும் ஒரு டைரியையும் கூடவே தூக்கிக் கொண்டு செல்வோம். செல்போன் வந்த பிறகு இது போன்ற எண்களை குறித்து வைக்கும் வேலைகளுக்கு விடை கொடுத்து விட்டோம். குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் காலத்தில் செல்போன் எண்களை மாத்திரமல்ல, அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்துக்கொள்ளும் பல வசதிகளும் வந்துவிட்டன. இங்குதான் சிக்கல் தொடங்குகிறது.

சாதாரண செல்போன் யுகத்தில் செல்போன் தொலைந்துவிட்டால் பெரிய பாதிப்புகள் இருந்திருக்காது. அதிகபட்சமாக போனை இழப்போம். அதில் சேமித்து வைத்துள்ள தொலைபேசி எண்கள் கிடைக்காமல், நமது தொடர்புகளை இழப்போம். சில அரிதான சம்பவங்களில் சிம் கார்டு மூலம் சில அசௌகர்யங்கள் ஏற்படலாம். அதாவது இது முழுக்க செல்போனோடு சம்பந்தபட்டதாகத்தான் இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் வருகை

ஆனால் ஸ்மார்ட்போன்கள் காலத்தில் இவ்வளவு சாதாரணமாக இந்த விஷயத்தைக் கையாள முடியவில்லை. செல்போன் பயன்படுத்துபவரின் தனிப்பட்ட தகவல்களும் சேர்ந்தே போய்விடுகிறது. குறிப்பாக பல்வேறு தேவைகளுக்கான செயலிகளை பயன்படுத்தும் இந்த நாட்களில் செல்போன் என்பது மிகவும் பாதுகாப்புக்குரிய முக்கிய பொருளாகவே மாறிவிட்டது.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களை பெரும்பாலானோர் மொபைல் மூலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். தவிர இ-காமர்ஸ் நிறுவனங்கள் மொபைல் செயலி மூலமான விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகின்றன.

இந்த வகையிலான பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக செயலி களில் நமது தனி விவரங்களை ஒரு முறை பதிவு செய்துவிட்டால் போதும். செல்போன் மூலமாக அந்த தளத்துக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுக்க தேவையில்லை.

இது போன்ற வசதிகள் காரணமாகத்தான் செல்போன் தொலைந்து போகாமல் இருக்க கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியிருக்கிறது.

டிஜிட்டல் மணிபர்ஸ்

தவிர தற்போது நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பல செயலிகள் வந்துவிட்டன. பெரும்பாலானவர்கள் இதை பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். குறிப்பாக வங்கிகளின் நெட் பேங்கிங் வசதிகளிலிருந்து தற்போது மொபைல் பேங்கிங் சேவைகளுக்கு மாறி வருகின்றனர். மேலும் சில வங்கிகள் மற்றும் செயலிகள் செல்போன் மூலம் கிரெடிட் கார்டு தகவல்களை சேமித்து வைத்து, இதன் மூலம் பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட இதர வர்த்தகச் சேவைகளையும் வழங்கி வருகின்றன.

அதாவது சமீப காலமாக மொபைல் போன்கள் கிட்டத்தட்ட மணிபர்ஸ்களைப் போல உருமாற்றமும் அடைந்துள்ளன. மொபைல் வாலட்டுகள் இந்த வசதிகளை அளிக்கின்றன. நமது வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பதைப்போல மொபைல் வாலட்டில் வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம்.

இப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள் ளலாம் என்கிறபோது இன்னும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது.

சரி இது போன்ற சூழ்நிலைகளில் செல்போன் தொலைந்து விடுகிறது என்றால் என்ன செய்வது? சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்பது அடுத்த கட்டம்தான். அது நமது தனிப்பட்ட விவரங்களை தவறாக கையாளப்படுவதிலிருந்து பாதுகாப்பளிக்கும். ஆனால் மொபைல் போன் கிட்டத்தட்ட ஒரு பர்ஸ் போல இருப்பதால் இதில் இருக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட்டால் என்ன செய்வது ? இதுதான் தற்போதைய நிலையில் மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம்.

இது தொடர்பாக மொபைல் சர்வீஸ் மற்றும் செல்போன் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மொபைல் வாலட் பயனாளிகளிடமும் பேசினோம்.

ஸ்மார்ட்போன்களில் தற்போது கிடைக்கும் வசதிகளைப் போல பல மடங்கு வசதிகள் தினசரி அப்டேட் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் போன்களின் பாதுகாப்பு என்பது முழுக்க முழுக்க தனிநபர்களின் பாதுகாப்பு சார்ந்ததாகவே இருக்கிறது.

பொதுவாக ஸ்மார்ட் போன்களை இயக்குவதற்கு ரகசிய குறியீடு உள்ளதுபோல அமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். என்றாலும் செல்போன் தொலைந்து போனால் ரகசிய குறியீடுகளை எடுக்க முடியாது என்றில்லை. மொபைல் சாப்ட்வேர் தெரிந்தவர்கள் அதை ஓப்பன் செய்துவிட முடியும். எனவே சிம்கார்டு மட்டும் செயலிழக்கச் செய்துவிட்டால் போது மானதல்ல என்பதை உணர வேண்டும்.

மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் செயலிகளின் பாஸ்வேர்டுகள்.

பொதுவாக வங்கிச் செயலிகளில் பயன்பாடுகளை பொறுத்த வரை ஒவ்வொருமுறை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர் எண் மற்றும் ரகசிய எண் கேட்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் என்னதான் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகள் கொடுத்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதாவது வாலட்டில் வைக்கும் பணமோ, கிரெடிட் கார்டு தகவல்களோ 100 சதவீதம் பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது என்கின்றனர்.

மொபைல் வாலட்டுகளுக்கு நுழைய பாஸ்வேர்டு தனியாகத்தான் உள்ளிட வேண்டும். இதை அவ்வப்போதும் கொடுக்கலாம். அல்லது 24 மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை என்கிற வகையிலும் செட்டிங்குகள் இருக்கிறது. இந்த இரண்டாவது வகையில் செட்டிங் செய்திருப்பவர்களது மொபைல் போன் வாலட்டில் பணம் இருந்தால் எளிதாக எடுத்துவிட முடியும் என்கின்றனர்.

டிஜிட்டல் பரிவர்த்தனை

சமீப காலத்தில் மொபைல் வாலட் முறையிலான டிஜிட்டல் பரிவர்த் தனை நடவடிக்கைகளை அரசாங்கமும் ஊக்குவித்து வருகிறது. இந்த வகை யிலான சேவைகளுக்கு அனுமதி வழங்குவதில் புதிய நிறுவனங் களும் இறங்குகின்றன. ஏனென் றால் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனை நடவடிக்கைகள் தனிநபர் களது கணக்கில் முழுமையாக வந்துவிடு கிறது. இதில் சட்ட விரோத பண பரிவர்த் தனைகளுக்கு வாய்ப்பே இல்லை என்பதால் அரசு ஊக்குவிக்கிறது.

ஆனால் மொபைல் வாலட்டில் அதிகமான பணத்தை வைத்துக் கொள்ளாமல் அவ்வப்போது தேவைக்கு ஏற்ப கிரெடிட்கார்டு அல்லது டெபிட் கார்டிலிருந்து பணத்தை பரிமாற்றம் செய்து கொண்டு வாலட் மூலம் பயன்படுத்தலாம். இதுவரை வாலட் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவில்லை. ஆனால் இனி நடக்காது என்றும் சொல்ல முடியாது என்கின்றனர் இவர்கள்.

ஒவ்வொரு புதிய வசதியும் மனிதனை மேலும் சோம்பேறியாக்குவது என்கிற பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அதை உறுதிபடுத்துவதுபோலத்தான் மொபைல் பயன்பாடு உருவாகி யுள்ளது. அதே சமயத்தில் நவீன கண்டுபிடிப்புகள் மனிதனை மேலும் நவீன மனிதனாக்குகிறது என்பதையும் மறுக்க முடியாது.

நாம் நவீன மனிதனாக இருக்கும் அதே வேளையில் சோம்பேறியாகவும் மாறாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்போனுக்கு பாதுகாவலர் நீங்கள்தான்.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...