Friday, December 2, 2016

இனி எல்லாம் e-wallet தான்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!


கார்டில் சம்பாதித்தாலும் கைநிறைய சம்பாதிக்கிறான் என சொல்வதுதான் நம்ம ஊரு ஸ்டைலு. இனி, அது கொஞ்சம் கஷ்டம் தான். பணத்தின் வாசனையை நுகர்வது குறைந்துதான் ஆக வேண்டும். கேஷ்லெஸ் இந்தியா தான் இனி இலக்கு என அரசு முடிவு செய்தபின் அதை பற்றி நாமும் தெரிந்து கொள்ளதான் வேண்டும். அதில் முக்கியமானது E- Wallet

21-ம் நூற்றாண்டின் சமீபத்தைய வங்கிப் பரிவர்த்தனைகளில் சாதனை என்றால் அது e-wallet தான். அதிலும் பேடிஎம் (Paytm) அசாதாரணமான சேவைகளை வழங்கி முன்னிலை வகிக்கின்றன. ஒரு இ-வேலட்டுக்கு, நம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அனுப்பிக் கொள்ள வேண்டும். அதன் பின் ரீசார்ஜ் செய்ய, பொருட்களை வாங்க, மின்சார கட்டணங்கள் செலுத்த, பயண டிக்கெட்டுகள் புக் செய்ய, நம் நண்பர்களுக்கு ரீசார்ஜ் செய்ய என்று அனைத்தையும் ஒரு சில க்ளிக்குகளில் செய்து விடலாம்.

e-wallet 3 வகை இருக்கின்றன.

1 .க்ளோஸ்டு வேலட்டுக்கள் :
ஒரு நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக தன்னுடைய பொருட்களை மட்டுமே வாங்க ஒரு e-wallet பயன்படுத்தி வந்தால் அதற்கு பெயர் குளோஸ்ட் வாலட். இந்த e-wallet களில் வங்கிக் கணக்குகள் மூலம் பணத்தை செலுத்தினால் அந்த நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக ஜபாங், ஃப்ளிப்கார்ட் மற்றும் மேக் மை ட்ரிப் போன்றவைகளை சொல்லலாம். இந்த வகை வேலட்டுகளில் ஒரு முறை பணத்தை செலுத்திவிட்டால் அந்த நிறுவனத்தின் சேவைகளாகவோ அல்லது பொருளாகவோ தான், நம் காசை செலவழிக்க வேண்டி இருக்கும். பணத்தை திரும்ப எடுக்க முடியாது.

2. செமி குளோஸ்டு இ வேலட்டுக்கள் :
இந்த இ-வேலட்டுக்களில் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை ஏற்றிய பிறகு, பணம் செலுத்திய e-wallet நிறுவனம் எந்த நிறுவனங்களோடு எல்லாம் ஒப்பந்தம் செய்திருக்கிறதோ அந்த நிறுவனங்களில் எல்லாம் நம் e-wallet பணத்தை செலுத்தி பொருட்களை வாங்கலாம் அல்லது சேவைகளை பெறலாம். அப்படி செலவு செய்ய முடியவில்லை என்றால் தாராளமாக நம் வங்கிக் கணக்குகளுக்கே பணத்தை திரும்ப அனுப்பிக் கொள்ளலாம். உதாரணமாக : பேடிஎம், எஸ்.பி.ஐ பட்டி, மொபிக்விக் போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம்.

இந்த வகையான வேலட்டுகளில் கூடுதல் வசதி என்னவென்றால் நாம் வேலட்டில் இருக்கும் பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் எந்த வங்கிக் கணக்கிற்கு வேண்டுமானாலும் சரியான வங்கிக் கணக்கு மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி கோட்களை அளித்தால் பரிமாற்றம் செய்துவிடலாம். இதில் ஒவ்வொரு வேலட்டுகளும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கமிஷனாக எடுத்துக் கொள்கிறது.

சமீபத்தில் குளோஸ்ட் வேலட்டுகளில் இருந்து செமி குளோஸ்டாக மாறிய நிறுவனம் ஓலா மணி. இந்த நிறுவனத்தின் இ-வேலட்டுக்களில் பணம் செலுத்தினால் அது நேரடியாக அவர்களின் டாக்ஸி அல்லது ஆட்டோ சேவைகளை மட்டுமே பயன்படுத்தி கழிக்க முடியும் என இருந்தது. ஆனால் தற்போது நம் போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது தொடங்கி, டோனினோஸ் பீட்சா, புக் மை ஷோ என்று பல சேவைகளை பயன்படுத்த முடிகிறது.

3. ஓப்பன் வேலட்டுக்கள் :
ஒரு e-walletல் செலுத்தப்படும் பணத்தை, செமி குளோஸ்ட் வேலட்டுகளைப் போல குறிப்பிட்ட நிறுவனங்களின் சேவைகள் அல்லது பொருட்களை வாங்குவது போலவே இருக்கும். இந்த வகையான வேலட்டுகளை இந்தியாவில் ஆர்பிஐ-ன் அனுமதி பெற்ற வங்கிகள் தான் செய்ய முடியும். உதாரணமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் டெபிட் கார்டுகள். இந்த வகையில் மட்டும் தான் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை கையில் எடுக்க முடியும்.



டிரெண்ட் :
தற்போதைக்கு செமி குளோஸ்ட் e-wallet தான் டிரெண்டில் இருக்கிறது. வழக்கமாக இது போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி மொபைல் ரீசார்ஜ், பள்ளி, கல்லூரி கட்டணங்களை செலுத்துவது, உணவகங்களில் செலவு செய்வது, பஸ், ரயில் & விமான டிக்கேட்டுகளை புக் செய்வது, மாதம் தோறும் செலுத்தும் இன்ஷூரன்ஸ் பிரீமியங்கள், குடிநீர் வாரிய வரி, லேண்ட் லைன் போன் கட்டணங்கள், இணையத்திற்கான செலவுகள், டிடிஹெச் ரீசார்ஜ் செய்வது, போன்றவைகள் தான் தற்போதைய டீமானிட்டைசேஷனுக்கு முன் செய்யப்பட்டு வந்தது. இப்போதும் பெரும்பாலான செமி குளோஸ்ட் வேலட்டுகள் மூலம் இவைகளை செய்ய முடிகிறது. டிமானிட்டைசேஷனுக்கு பிறகு பெட்ரோல் பங்குகள் தொடங்கி, பெட்டிக் கடைகள் வரை பேடிஎம் மூலம் பணத்தை பரிமாற்றிக் கொள்வது சகஜமாகி வருகிறது.

கேஷ் பிக்-அப் :
இதில் மொபிக் விக் என்கிற நிறுவனம் ஒரு படி மேலே சென்று கேஷ் பிக் -அப்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை தற்போது டெல்லி, ஜெய்பூர் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தி இருக்கிறது. காலை 10 - மாலை 6 மணி வரை கேஷ் பிக் - அப் செய்யப்படுகிறது. ஒரு நபர் நாம் இருக்கும் இடத்திற்கு வந்து பணத்தை வாங்கி கொண்டு செல்கிறார். அவர் வாங்கிய உடனேயே, நம்மிடம் இருந்து வாங்கிய தொகை நம் வேலட்டில் வரவு வைக்கப்படுகிறது. கேஷ் பிக் -அப் செய்ய எந்த கட்டணமும் இல்லை.

கேஷ் டெபாசிட் :
கிராமப் புறங்களில் இன்று வரை ஒரு பிரபலமான விஷயம் பணத்தை டெபாசிட் செய்வது. அதையும் மொபிக்விக் அறிமுகப்படுத்தி இருக்கிறது. கேஷ் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் அருகில் எந்த இடங்களில் எல்லாம் டெபாசிட் செய்யலாம் என்று ஒரு பட்டியலை காட்டுகிறது. அந்த இடத்திற்குச் சென்று டெபாசிட் செய்து நம் e-wallet பேலன்ஸை அதிகரித்துக் கொள்ளலாம். அதோடு வழக்கம் போல டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாகவும் பணத்தை வேலட்டில் செலுத்தலாம்.

அரசு அலட்சியத்தால் பறிபோன 18 உயிர்கள்... திருச்சி வெடி விபத்தின் பின்னணி..!

vikatan.com

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த டி.முருங்கப்பட்டி கிராமத்தில் இயங்கிவந்த 'வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ்' எனும் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில்பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உயிரிழந்த 18 பேரின் உடல்களும் இந்த விபத்தில் சிதறிபோனது. மூன்று சிதறிய உடல்களை தவிர மற்ற உடல்களை அடையாளம் கூட காண இயலாத கோரத்தை இந்த விபத்து ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு இறுதி சடங்கு கூட நடத்த முடியாமல், இறந்தவர்களின் உறவினர்கள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எப்படி வந்தது இங்கே வெடிமருந்து ஆலை?

திருச்சி மாவட்டம், துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் பச்சமலை அடிவாரத்தை குறிவைத்து மாந்தோப்பு வைப்பதாக கூறி சேலத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 1996-ம் ஆண்டு இந்த இடத்தை வாங்கினார். ஆனால் மாந்தோப்ப்புக்கான எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த இடத்தில் வெடிமருந்து குடோன் அமைக்க அனுமதி கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.

அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அதை துளியும் கண்டுகொள்ளாமல் அனுமதி கொடுத்தது அரசு. அனுமதிக்காகவே இந்த ஆலை நிர்வாகம் பணத்தை வாரி இறைத்ததாகவும் சொல்லப்படுகிறது.



அலட்சியப்படுத்திய அரசு...

மக்கள் அஞ்சியபடியே, கடுமையான சிக்கல்களை இந்த ஆலை ஏற்படுத்தியது. ஆலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த பகுதியின் நிலத்தடி நீர் மாசடைந்து, விவசாயமும் பொய்த்துப் போனது. தாசில்தார் துவங்கி கலெக்டர் வரை பொதுமக்கள் புகார் கொடுக்காத இடமில்லை. இந்த ஊரின் பிரச்னையை யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த மாதம் கூட இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கிறார்கள். ஆனால் பதிலில்லை. மக்கள் தன்னெழுச்சியாக திரளும் போதெல்லாம், கண் துடைப்புக்காக ஆய்வு நடத்தி, அதன் பின்னர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என்பது தொடர்கதையாகி விட்டது. இந்த சூழலில் தான் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது.

விவசாயம் பொய்த்துப்போனதால் வேலையிழந்த தொழிலாளர்கள் பலர், ஆபத்து தான் என தெரிந்திருந்தும் இந்த ஆலைக்கு வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். டி. முருங்கப்பட்டி மட்டுமல்லாது கொப்பம்பட்டி, செங்கட்டு, நாகநல்லூர், பாதர்பேட்டை, சேலம் மாவட்டம் செங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட்’ முறையில் வேலை செய்து வருகிறார்கள்.



விபத்து ஏற்பட்ட நேரத்தில்...

சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த வெடிமருந்து ஆலை. கல்குவாரிகள், சுரங்கங்கள், ராட்சத பாறைகள் உடைப்பதற்கான வெடிமருந்துகள், டெட்டனேட்டர்கள் இங்கு தயாரிக்கப்பட்டு, உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது. வேதிப்பொருட்களை கொண்டு தான் இந்த வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மிக கவனமாக கையாள வேண்டும். வெப்பநிலை, உயர் அழுத்தம் என அனைத்திலும் மிக கவனமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும். அப்படி அஜாக்கிரதையால் நிகழ்ந்த விபத்து தான் இது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

நேற்று அதிகாலை வெடிமருந்து தயாரிப்பு பணி யூனிட் 2ல் நடந்து கொண்டு இருந்தது. இரவு தயாரிக்கப்பட்ட வெடிமருந்து கலவையை அடுத்த யூனிட்டுக்கு எடுத்துச்செல்வதற்காக காலை 7.20 மணி அளவில் 17 தொழிலாளர்கள் வந்தனர். வெடிமருந்துகளை கொண்டு செல்ல சரக்கு ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தியபோது தான் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பயங்கரமான சத்தத்துடன் நிகழ்ந்தது அந்த விபத்து. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விபத்தின் அதிர்வு, சத்தமும் உணரப்பட்டது. ஆலையின் ஒரு பகுதி வெடித்துச் சிதற ஆலை தீப்பற்றி புகை மண்டலமாக மாறியது அந்த இடம். ஆலையின் இரண்டுமாடி கட்டடம் முழுவதுமாக இடிந்து, வெடிவிபத்து ஏற்படுத்திய 20 அடி பள்ளத்தில் புதைந்தது. ஆலையின் ஒரு பகுதியில் நடந்த விபத்தினால், மற்ற பகுதியில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்ன நடந்தது என தெரியாமல் பதறியபடி வெளியேறினர்.

சிதறிய உடலும் கூட கிடைக்கவில்லை...

கொட்டும் மழை ஒரு பக்கம், வெடி விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம் ஒரு பக்கம் என மீட்பு பணியை தாமதமாக்கியது. வெடித்துச் சிதறிய ஆலையில் பணியாற்றிய தொழிலாளார்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கை, கால்கள் கொத்துக்கொத்தாக கிடந்தன. இரவு 9 மணி வரை இறந்தவர்கள் பட்டியலை உறுதி செய்யமுடியாமல் மாவட்ட நிர்வாகம் தடுமாறியது.

மறுபுறம் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் சோகத்தில் செய்வதறியாமல் தவித்தனர். கொட்டும் மழையிலும் இறந்தவர்களின் உடலையாவது தரமாட்டார்களா என சோகத்துடன் காத்திருந்தனர். இரவு நேரமாகி விட்டதால் மீட்பு பணியை கைவிட்டார்கள். 3 உடல்கள் மட்டுமே சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 18 பேர் இந்த விபத்தில் இறந்ததாகவும், அனைவரது உடலும் சிதறியதால் யாருடைய உடலையும் மீட்க முடியவில்லை என சொல்லப்பட்டது.

குடும்பத்தில் ஒருவரை பலி கொடுத்த சோகத்தில் இருந்தவர்களும், உடலும் கிடைப்பது சிக்கல் தான் என்ற அறிவிப்பு இன்னும் சோகத்தில் ஆழ்த்தியது. விபத்தில் 11 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அமைச்சர் மீது செருப்பு, கற்கள் வீச்சு...

விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களை பார்த்த பொதுமக்கள் கொந்தளித்தனர். "எத்தனை முறை மனுக்கொடுத்தோம். ஒரு முறைகூட வந்து பார்க்கல. இப்போ எதுக்கு வந்தீங்க. செத்துபோனவங்க உடல் இருக்கா இல்லையான்னு பார்க்கவா?" என வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு பதற்றம் ஏற்பட்டது.

மக்களின் கோரிக்கையை அப்போதும் கூட மதிப்பளிக்காமல் இருக்க ஆவேசமடைந்த மக்கள், அமைச்சர் மீதும் அதிகாரிகள் மீதும் செருப்பு, கற்களை வீசினர். "தொழிலாளர்களின் உயிரை பறித்த வெடிமருந்து தொழிற்சாலையை இடித்து தரைமட்டமாக்க வேண்டும். பலமுறை மனு அளித்தும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்தில் இவ்வளவுபேர் பலியாகி உள்ளார்கள். உடனே தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இனி இந்த பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது," என கோரினர்.

இனியாவது ஆலையை மூடுவாங்களா?

இதையடுத்தே இந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நம்மிடம் பேசிய ஊர் மக்கள், "கடந்த 15 வருஷமா இந்த ஆலையே கூடாதுன்னுதான் போராடுகிறோம். ஆனால் பல அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு ஆலைக்கு சாதகமாக செயல்படுறாங்க. இந்த அலட்சியம் தான் இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்தியிருக்கு. இந்த ஆலையில் வேலை செய்பவர்களும், பலியானவர்களும் படிக்காதவர்கள். இவர்களை பணியில் அமர்த்தி, உயர் வேதிப் பொருட்களை கையாள வைத்துள்ளார்கள். இந்த விபத்தையும் எதையாவது சொல்லி மூடி மறைத்துவிட்டு, மீண்டும் இந்த ஆலையை இயக்கினால் இந்த பகுதியே நாசமாகும்," என்றார்கள்.

அரசு அலட்சியத்துக்கு கொடுத்த விலை 18 உயிர்கள். இனியாவது மக்களைப்பற்றியும், மக்கள் நலனைப்பற்றியும் கவலைப்படுமா அரசு?

சி.ய.ஆனந்தகுமார்,

அதீத ஆர்வம்! ஓயாத உழைப்பு! குன்றாத உற்சாகம்! ஏனென்றால், அவர் கருணாநிதி!

vikatan.com

தி.மு.க தலைவர் கருணாநிதியின் அரசியலோடு நேரெதிராக ஒருவர் முரண்பாடலாம். அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தலாம். அதிகாரத்தில் இருந்தபோது அவர் நடந்துகொண்ட முறைகளில், இன்றுவரை ஆத்திரம் இருக்கலாம். அவருடைய மதிநுட்பம், நகைச்சுவை உணர்வு, தன்முனைப்பு, தனிநபர் துதிபாடல் குறித்து, கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், யாருக்கும்... ஏன் கருணாநிதியை பரமவைரியாக நினைப்பவர்களுக்கும் கூட அவருடைய உழைப்பு, உற்சாகம், ஆர்வம் குறித்து எந்தக் கேள்வியும் இருக்க முடியாது. எந்த விமர்சனத்தையும் அவர்களால் வைக்க முடியாது. ஒவ்வொரு நொடியையும் அவர் உழைத்தே கழிப்பார். கருணாநிதிக்கு எதற்கும் நேரம் இல்லாமல் போனதே இல்லை. அந்த உழைப்புத்தான், 93-வயதிலும், அவர் நினைத்ததை செய்வதற்கான நேரத்தை அவர் வசம் வைத்துக் கொண்டே இருந்தது.

2 மாதங்களுக்கு முன் கருணாநிதி...

“தலைவர் கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஓய்வில் இருக்கிறார். எனவே, அவரைப் பார்க்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம்” என்று கடந்த அக்டோபர் 25-ம் தேதி, அறிவாலயத்தில் இருந்து அறிக்கை வந்தது. அதன்பிறகுதான், அவர் தனது அன்றாட வேலைகளில் இருந்து பிசகினார். ஆனால், அந்த அறிக்கைக்கு முன்புவரை, கருணாநிதி உற்சாகமாக உழைத்துக் கொண்டே இருந்தார்.

93 வயதில் கருணாநிதியின் ஒருநாள்!

கருணாநிதிக்கு தற்போது 93 வயது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய செயல்பாடுகளை அவர் கொஞ்சம் குறைத்துக்கொண்டார். ஆனால், எதையும் உதறித் தள்ளிவிடவில்லை. காற்றைப்போல் கருணாநிதி இயங்கிக் கொண்டே இருந்தார். அவருடைய ஒருநாள், காலை 5 மணிக்கு ஆரம்பித்துவிடும். வீட்டில் இருந்து 5.30 மணிக்கு அறிவாலயம் சென்றுவிடுவார். முன்பு நடைப்பயிற்சிக்காக அறிவாலயம் சென்றவர், நடக்கமுடியாமல் போனதற்குப் பிறகு, அறிவாலயம் செல்வதை நிறுத்தவில்லை. நடக்க முடியாவிட்டால் என்ன? சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டே, அறிவாலயத்தை தினமும் காலையில் சுற்றி வந்தார். நடைபயிற்சியால் கிடைக்கும் உற்சாகத்தை அவருக்கு இந்தப் பழக்கம் கொடுத்தது. காலையில் நிரம்பியிருக்கும் புதிய காற்றை சுவாசித்துக் கொண்டு, கைகளை அசைத்து, அவரால் முடிந்த அளவில் சில யோகா பயிற்சிகளை செய்து கொண்டிருந்தார். பயிற்சி முடிந்ததும், அங்கு வைத்தே பத்திரிகைகள் அனைத்தையும் படித்துவிடுவார். தொலைக்காட்சி செய்திகளை அங்கேயே பார்த்துவிடுவார். அந்த நேரத்திலேயே, அன்று கொடுக்க வேண்டிய அறிக்கை அவர் மனதில் பிறந்துவிடும்.



150 நேர்காணல்கள்... 84 பைல்கள்

கருணாநிதி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை ஏறக்குறைய நிறுத்திவிட்டார். மிக முக்கியமான திருமணங்கள், கட்சிப்பொதுக்கூட்டம், மாநாடுகள், ஆர்ப்பாட்டம் தவிர வேறு எதிலும் நேரில் சென்று கலந்து கொள்வதில்லை. ஆனால், வீட்டுக்கு வரும் தொண்டர்களை சந்திக்காமல் அவர் திருப்பி அனுப்பியதில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரையிலும், நாள்தோறும், 100 முதல் 150 அப்பாயின்ட்மென்ட்களை பார்த்துக் கொண்டிருந்தார். திருமணத்துக்கு வாழ்த்து வாங்க வருபவர்கள், வெளியூர்களில் இருந்து வரும் கட்சிக்காரர்களுக்கு இதில் முன்னுரிமை. அதுபோல,

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை தினமும் கண்டிப்பாக அறிவாலயம் வந்துவிடுவார். அங்கு வந்து, அறிக்கை தயார் செய்து கலைஞர் தொலைக்காட்சிக்கும் முரசொலிக்கும் முதலில் அனுப்பிவிடுவார். அதன்பிறகு, அறிவாலயத்தில் இருக்கும் பைல்களைப் பார்ப்பார். கட்சிக்காரர்களின் கோரிக்கைகள், மாவட்டச் செயலாளர்கள் பஞ்சாயத்து தொடர்பான பைல்களைப் பார்த்து, அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வை வலியுறுத்துவார். அறிவாலயத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான உத்தரவுகள் கொடுப்பார். தேவைப்பட்டால், அப்போதே சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசிவிடுவார். தேவை இருந்தால், நேரில் வரச் சொல்வார். கடைசியாக அவர் அறிவாலயம் வந்து, பைல்களைப் பார்த்தபோது, ஒரே நாளில் 84 பைல்களைப் பார்த்து, அதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். அதன்பிறகு, தான் கொடுத்த அறிக்கைகள், தொலைக்காட்சியின் மதிய நேரச் செய்திகளில் எப்படி வருகிறது என்று பார்த்துவிடுவார். அவர் நினைத்தது வரவில்லை என்றால், கலைஞர் தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்டு திருத்தம் சொல்வார்.



அறிவாலயம் டூ சி.ஐ.டி காலனி

அறிவாலயத்தில் இருந்து கிளம்பி, மதியத்துக்கு மேல், சி.ஐ.டி காலனி வீட்டுக்குப்போவார். மதிய உணவு அங்குதான். அரை மணிநேரத் தூக்கம் கண்டிப்பாக இருக்கும். அதன்பிறகு மாலை தேவைப்பட்டால் மற்றொருமுறை அறிவாலயம் வருவார். இல்லையென்றால் நேராக கோபாலபுரம் சென்றுவிடுவார். அங்குபோய், அவர் கதை வசனத்தில் வெளியாகும் ராமானுஜர் தொடரைப் பார்ப்பார். அடுத்தவாரம் ஒளிபரப்பாகும் தொடர், ஒருவாரத்துக்கு முன்பே கருணாநிதிக்கு வந்துவிடும். அதைப் பார்த்துவிட்டு அதில் திருத்தம் இருந்தால் சொல்வார். இதற்கிடையில், தென்பாண்டிச் சிங்கம் தொடருக்கான கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

தயாளு அம்மாளுக்கு தனியாக நேரம்!

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கடந்த சில ஆண்டுகளாக அல்சைமர் எனும் ஞாபக மறதிப் பிரச்னையில் இருக்கிறார். அதுபோல, அவருக்கு வாயில் உமிழ் நீர் சுரப்பது குறைந்துவிட்டது. அது செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது. கோபாலபுரம் வீட்டில் கீழ் தளத்தில்தான் தயாளு அம்மாளின் அறை இருக்கிறது. மேல்தளத்தில் கருணாநிதியின் அறை இருக்கிறது. தினமும் தயாளு அம்மாளுடன் பேசிக்கொள்ளும் கருணாநிதி, அவரையும் உற்சாகப்படுத்துவார். அவருக்கு நினைவு திரும்பும் நேரங்களில், அவரிடம் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருப்பார்.

அதன்பிறகு, இரவு செய்திகள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை சிறிது நேரம் பார்ப்பார். இப்போது புழக்கத்தில் இருக்கும் ரிமோட்களில் ஏகப்பட்ட ஆப்ஷன்கள். அதை கையாள்வதில் கருணாநிதிக்கு சிக்கல் இருந்தது. அதற்காக அவருடைய செல்போனில் ஒரு ஆப் டவுன்லோடு செய்து வைத்திருந்தார். அதைப் பயன்படுத்தி செல்போனில் இருந்தே, சேனலை மாற்றிப் பார்ப்பார். அதன்பிறகு, இரவு உணவை முடித்துவிட்டு மறுநாள் வெளிவரும் முரசொலியின் ‘பைனல்’ பார்த்துவிட்டு, திருத்தம் சொல்வார். இரவு அவர் தூங்குவதற்கு 11.30 மணிக்குமேல் ஆகிவிடும். இந்த நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் சாதரணமானவையாகத் தோன்றலாம். ஆனால், 93 வயதில் கருணாநிதி இந்த நிகழ்ச்சி நிரலை, கட்டுக்கோப்பாக கடைபிடிப்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான், அதில் மறைந்து இருக்கும் ஆச்சரியம் புரியும்.



எதையும் தாங்கும் இதயம்!

கருணாநிதியின் ஆஸ்தான மருத்துவர்களில் ஒருவர். அவரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதனுக்கு வயதான காலத்தில் இதயம், கிட்னி, சர்க்கரைநோய், ரத்தக் கொதிப்பு போன்றவற்றால்தான் பிரச்னைகள் உருவாகும். கருணாநிதிக்கு இந்த 4 பிரச்னைகளும் இல்லை என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். இருதயத்தில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உண்மையில், எதையும் தாங்கும் இதயம்தான் அவருடையது. அதனால்தான், தனது செல்லமகள் கனிமொழி கைது செய்யப்பட்டபோது, “இப்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்ன கருணாநிதி, “ஒரு மகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்குமோ... அப்படி இருக்கிறது'' என்று உடையாமல் பதில் சொன்னார். அவருடைய சிறுநீரகங்கள் இப்போதும் நன்றாகச் செயல்படுகின்றன. அவருக்கு சர்க்கரை நோய் கிடையாது. ரத்தக் கொதிப்பும் கிடையாது.

32 வயதில் ஹார்ட் அட்டாக், 35 வயதில் பி.பி., சுகர் என்று கேள்விப்பட்ட இன்றைய தலைமுறைக்கு இது மிகப்பெரிய ஆச்சரியம் அளிக்கும் விஷயம்தான். இத்தனைக்கும் கருணாநிதி எம்.ஜி.ஆரைப்போல் கடுமையான உடற்பயிற்சிகள் செய்தவரில்லை. ஆனால், அப்படி உடற்பயிற்சி செய்த எம்.ஜி.ஆருக்கே உடல் ஆரோக்கியம் விஷயத்தில் கருணாநிதிக்கு கிடைத்த வரம் வாய்க்கவில்லை. கருணாநிதியின் இந்த உடல் ஆரோக்கியத்துக்கு, அவருக்கு இயற்கை கொடுத்த கொடை என்றே சொல்லலாம். எப்போதுமே அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். 15 வயதில் தொடங்கி 44 வயதுவரை அவர் கூட்டங்களுக்காக போகாத ஊர்கள் இல்லை. நடக்காத தொலைவு இல்லை. அந்த ஊர்களில் கிடைத்த சாதாரண உணவுகள், சாதாரண தண்ணீரை கருணாநிதியின் உடல் ஏற்றுக்கொள்ளும். இது கருணாநிதியின் சமகாலத்தவர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், கண்ணதாசனுக்கு வாய்க்காதது. அவர்கள் திரைத் துறையில் கோலேச்சத் தொடங்கிய பிறகு, ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவிட்டார்கள். கருணாநிதி அதில் கொஞ்சம் தள்ளியே இருந்தார்.



கடுமையான கட்டுப்பாடு! அதீத முன்ஜாக்கிரதை உணர்வு!

இயற்கையாக கருணாநிதிக்கு அமைந்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி, அவர் கடைபிடித்த கடுமையான சில கட்டுப்பாடுகளும் இயல்பாக அவருக்கு வாய்த்த முன்ஜாக்கிரதை உணர்வும், அவரை 93 வயதில் உற்சாகமாக வைத்ததற்கு முக்கிய காரணங்கள். ஒரு காலத்தில், புகை, மதுப் பழக்கங்கள் கருணாநிதிக்கும் இருந்தன. இதுபோன்ற கேளிக்கைகளில், கவிஞர் கண்ணதாசனின் கூட்டாளியாக இருந்தவர்தான் கருணாநிதி. இதை கருணாநிதியே கண்ணதாசனின் பிறந்தநாள் விழா மேடையில் பேசி உள்ளார். அதுபோல், இரவு முழுவதும் கண்விழித்து சீட்டாடும் பழக்கமும் கருணாநிதிக்கு பால்ய காலத்தில் இருந்துள்ளது. ஆனால், பொறுப்புகள் கூடக்கூட இதுபோன்ற பழக்கங்களில் இருந்து கருணாநிதி தன்னை விடுவித்துக் கொண்டார்.

‘டயட்’ என்ற வார்த்தை கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில்தான் தமிழகத்தில் பிரபலமானது. ஆனால், 50 வருடங்களுக்கு முன்பே அதைக் கடைபிடித்தவர் கருணாநிதி. அவர் 44 வயதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனாதுமே, தனது வாழ்க்கை முறையை மாற்றிவிட்டார். காலை சரியான நேரத்துக்கு உணவு, 11 மணிக்கு பழச்சாறு, மதியம் 1.30 மணிக்குள் மதிய உணவு, 3 மணிக்கு குட்டித் தூக்கம், 5 மணிக்கு சிற்றுண்டி என்று வழக்கப்படுத்திக் கொண்டார். 9 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவார்.

அசைவம் சாப்பிடாத அசைவர் கருணாநிதி!

கருணாநிதி அசைவம் விரும்பி. ஆனால், அவர் மாமிசம் சாப்பிடுவதில்லை. அவருக்கு ஆட்டுக்கறி குழம்பு பிடித்தமானது. ஆனால், அதில் உள்ள கறித்துண்டுகளை எடுத்துக்கொள்ளமாட்டார். கோழிக்கறி அறவே கிடையாது. ஆனால், மீன் நிறைய சாப்பிடுவார். இப்போதும் அவருக்கு மீன் சமைத்து முட்களை நீக்கி அடிக்கடி பரிமாறுவார்கள். அதை விரும்பி சாப்பிடுவார். கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்வார். முட்டை சாப்பிடுவார். ஆனால், அதில் மஞ்சள் கருவை தவிர்த்துவிடுவார். தாளிக்காத குழம்பு, சட்னிதான் பல காலமாக அவர் சாப்பிடுகிறார். எந்த நிலையிலும், இந்த வழக்கங்களில் இருந்து அவர் பின்வாங்கியதே இல்லை. ஆனால், இப்படி இருந்தபோதும், அவருக்கு வயிற்றில் குடல் புண் பிரச்னை ஏற்பட்டது. உடனடியாக தேசிகாச்சாரியாரை நியமித்து, பிரத்யோகமாக யோகா கற்றுக் கொண்டார். தான் விரும்பியது இல்லை என்றாலும் கவலைப்படமாட்டார். இருப்பதை, தனக்கு தகுந்ததாக மாற்றிக் கொள்வார் கருணாநிதி.



ஆர்வம்... ஆர்வம்... ஆர்வம்...

93 வயதில் உடல் தளர்ந்த நிலையிலும், கருணாநிதியை உற்சாகமாக வைத்திருந்தது, அவருடைய ஆர்வம்தான். “இப்போதும் தன் இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தான் உழைக்க வேண்டும்” என்ற கருணாநிதியின் பிடிவாதம் கொஞ்சம்கூட தளரவில்லை. 2016- சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால், ஸ்டாலினின் லகான் இன்னும் கருணாநிதியின் கைகளில்தான் இருக்கிறது. கருணாநிதியை மிஞ்சி ஸ்டாலினால், இப்போதுவரை எதையும் சாதித்துவிட முடியவில்லை. இப்போதும்கூட ஸ்டாலினுக்கு ஒவ்வொருநாளும் கருணாநிதி செக் வைத்துக் கொண்டே இருப்பார். குறிப்பாக, காலையில் மு.க.ஸ்டாலின் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியாக எதையாவது ஒரு கருத்தைத் தெரிவிப்பார். அது செய்திகளில் வந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை மங்க வைக்கும் வகையில், அதற்கு நேர் மாறாக அல்லது அதைவிட முக்கியமான ஒரு விவகாரத்தை கையில் எடுத்து, கருணாநிதி அறிக்கை விடுவார். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால், ஓ.பி.எஸ்-யிடம் முதலமைச்சர் இலாகாக்களை ஒப்படைத்தது பாராட்டத்தக்கது. நான் அதை வரவேற்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்தார். ஆனால், சிறிது நேரத்தில், கருணாநிதியிடம் இருந்து அறிக்கை வந்தது, “இது தாமதமான நடவடிக்கை. இந்த நடவடிக்கை முதலமைச்சரின் ஒப்புதலுடன்தான் நடைபெற்றதா? என்று அறிக்கை கொடுத்தார். அவ்வளவுதான், ஸ்டாலின் பேட்டி பின்னால் போனது. கருணாநிதி அறிக்கை தலைப்புச் செய்தியானது. தனக்குப்பின் கட்சியைப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள்... அறிவாலயத்தை நிர்வாகிக்க, நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்று கருணாநிதி ஒருபோதும் தன் வேலைகளில் சுணக்கம் காட்டியதே இல்லை.

பேஸ்புக், ட்வீட்டர்...

இவ்வளவு வேலைகளுக்கு இடையில் தன்னுடைய முகநூல் பக்கத்தையும் அவர் பார்த்துக் கொள்வார். அந்தப் பக்கங்களை நவீன் என்பவர் நிர்வகிக்கிறார். ஆனால், அதில் கருணாநிதியின் பதிவுகளுக்கு லைக்குகள் குறைந்தால், என்னய்யா... லைக் எல்லாம் குறையுது என்று கேட்டுத் தெரிந்து கொள்வார். எது டிரெண்டிங் செய்தி என்பது வரை அப்டேட் செய்து கொள்வார்.



ஏனென்றால்... அவர் கருணாநிதி!

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகுதான், கருணாநிதி கொஞ்சம் சொகுசு வாழ்க்கைக்குப் பழகினார். அப்போதுதான் அவருக்கும் சிறுசிறு பிரச்னைகள் வர ஆரம்பித்தன. எண்ணெய் பலகாரம் சாப்பிட்டால் மயக்கம் வர ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக கூட்டங்களில் பல மணிநேரம் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் பேசியதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பே, அவர் பேனா பிடித்து எழுதுவதை நிறுத்திவிட்டார். காரணம், தோள்பட்டையிலும் கைகளிலும் வலி வரத் தொடங்கியது. அதன்பிறகு, இப்போதுவரை அவர் ‘டிக்டேட்’ செய்யச் செய்ய உதவியாளர்கள் எழுதுகின்றனர். உடலின் எடையை தாங்கும் சக்தியை கால் மூட்டுகள் இழந்தன. உடனே, அதில் கௌரவம் பார்க்காமல், தனக்கு ஏற்றார்போல, சக்கர நாற்காலியை வடிவமைத்துக் கொண்டார். அதில் வலம்வந்து உழைத்துக் கொண்டிருந்தவரை, 2016- சட்டமன்றத் தேர்தல் தோல்வி மிகவும் பாதித்தது. அந்த வருத்தம் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது. இந்த நேரத்தில் தன்னால் பழையபடி உழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் கொஞ்சம் இருந்தது. இப்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு தன்னைப்போல சாமர்த்தியம் இல்லையே என்ற வேதனையும் இருந்தது. இந்த நிலையில்தான், அவர் மேற்கொள்ளும் பிசியோதெரபி சிகிச்சைக்காக தேய்க்கப்படும் எண்ணெய் அவர் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தியது. அதில் உருவான கொப்புளங்களால், அவர் தான் வாழ்நாளில் இருந்திடாத அளவுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக கோபாலபுரத்தில் முடங்க வேண்டியதானது. இந்தப் பிரச்னையில் இருந்து அவர் மீண்டபிறகும், அவர் ஒய்வுக்குப் போய்விடமாட்டார். அப்போதும், உற்சாகமாக உழைக்கவே பிரயத்தனப்பட்டுக்கு கொண்டிருப்பார். ஏனென்றால், அவர் கருணாநிதி.

Thursday, December 1, 2016

5 பேரை பலி வாங்கிய 'விபத்து'... இதற்குத்தானா அரசுப் பேருந்துகள்?


சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட புள்ளி விவரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னை மாநகரில் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் காலாவதியானவை. ஆயுட்காலம் முடிந்து இயக்கப்படுபவை. சென்னையில் மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் இதே நிலை தான்.

இதை கண்முன் நிகழ்த்தி காட்டியிருக்கிறது விழுப்புரம் அருகே இன்று நடந்த விபத்து. விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டார் கடுமையான காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து சரியான பராமரிப்பு இல்லாத, இயக்க தகுதியற்ற பேருந்து என்ற குற்றச்சாட்டை கூறுகிறார்கள் மக்கள். இந்த புகாரை எளிதில் கடந்து செல்ல முடிவதில்லை. காரணம். சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் தந்த புள்ளி விவரங்கள் தான்.

சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னர் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதாமல் நிறுத்த முற்பட பேருந்து நிற்கவில்லை. பேருந்தை ஓட்டுநர் வளைக்க, எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. மிக மோசமான விபத்து பேருந்து முழுமையாக சேதமடைந்திருந்தது. இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5. படுகாயமடைந்தவர் 32 பேர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலர் மிக மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணம் செய்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சவுந்தரராஜனிடம் பேசினோம். “முண்டியம்பாக்கம் தாண்டி எங்க பஸ் வந்துட்டு இருந்துச்சு. அப்போ ரோட்டோரம் ஒரு ப்ரைவேட் பஸ் நின்னு டிக்கெட் ஏத்திகிட்டு இருந்தாங்க. எங்க பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்த முடியலை. அந்த பஸ் மேல மோதாம இருக்க பஸ்சை திருப்பினார். எதிர் பக்கம் ரோட்டை தாண்டி எதிர வந்த இன்னொரு மேல பஸ் மோதீடுச்சு. நான் பின்னாடி உட்கார்ந்து இருந்ததால அதிர்ஷ்டவசமா நான் பொழைச்சேன்” என்றார் உதறலாக.

“சர்வீஸ் ரோட்டில் கவிழ்ந்த கள்ளக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட TN-32. N-3398 எண் கொண்ட வண்டி டவுன் பஸ் தரத்தில் கூட இல்லை என்பது கண் கூடாக தெரிகிறது. பல பேருந்துகள் ஆயுள் காலம் முடிந்தும் பல ஆண்டுகளாக இயக்கப்படுகின்றன. இதுவும் அது மாதிரி பேருந்தாக இருக்கும்," என பலர் சந்தேகம் தெரிவித்தனர்.



"நொறுங்கி கிடந்த பேருந்தின் பக்கவாட்டு கம்பிகள், சீட்டுகள், மேல் கூரை அனைத்தும் ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கிறது. இந்த விபத்தில் இவை எல்லாம் காணாமல் போய் இருந்தன. பயணிகள் உயிரையும் ஓட்டுநர் உயிரையும் பணையம் வைத்து தான் ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களும் இயங்கி வருகின்றன. அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கினால் உயிருக்கு நிச்சயம் உத்தரவாதமில்லை அந்த லட்சணத்தில் தான் போக்குவரத்து கழகங்கள் நடத்தப்படுகின்றன.” என்ற கோபம் விபத்தில் சிக்கிய, அதை வேடிக்கை பார்த்த... இன்னும் சொல்லப்போனால் போக்குவரத்து கழக ஊழியர்களிடமே இருந்ததை கவனிக்க முடிந்தது.

வசூலை வாரி குவிக்க அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத சாலைகள் என விபத்துகளுக்கு நிறைய காரணங்கள் உள்ளது. அதில் மிக முக்கிய ஒன்றாக இணைந்துள்ளது அரசு பேருந்துகளின் மிக மோசமான நிலை. இதன் காரணமாகவே ஆண்டு தோறும் விழுப்புரம், கடலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளால் ஏற்படும் உயிர் பலி அதிகரித்து வருகிறது. 2016 ஜனவரியிலிருந்து நவம்பர் 21 வரை விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சாலை விபத்துகளில் 710 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றன புள்ளி விவரங்கள். இதில் அரசு பேருந்துகளின் மோசமான நிலையும் முக்கிய காரணம்.

இதற்கு தானா அரசு பேருந்துகள்... இவ்வளவு தானா மக்களின் மீது அரசுக்கு இருக்கும் அக்கறை?


படங்கள் : தே.சிலம்பரசன்

* வெள்ளையாக மாற்ற வழி இருக்கு * வரி, அபராதம் முழு விவரம் * மறைத்தால் எல்லாமே பறிபோகும்

Dinakaran Daily News

* வெள்ளையாக மாற்ற வழி இருக்கு * வரி, அபராதம் முழு விவரம் * மறைத்தால் எல்லாமே பறிபோகும்

புதுடெல்லி: கருப்பு பணத்தை கணக்கில் காட்ட மத்திய அரசு கடைசி வாய்ப்பை வழங்கி உள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக ஜுன் முதல் செப்டம்பர் 30 வரை தாமாகவே முன்வந்து கருப்பு பணத்தை தெரிவிக்கும் திட்டத்தை அறிவித்தது. இதில் 45 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது. அதை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை வெளியிட்டது. இதில் 2.50 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யும் பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டும் என்று அறிவித்தது. கடைசி கட்டமாக தற்போது கருப்பு பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்தால் 50 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மீதம் உள்ள 50 சதவீத தொகையில் 25 சதவீதம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மீதி 25 சதவீத தொகையை 4 வருடம் கழித்தே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் வழிமுறைகள் வருமாறு:

நடப்பாண்டில் ஈட்டிய வருமானம்
1.கையில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.
2.நடப்பாண்டு வருமானத்தை கணக்கில் காட்டி அதற்குரிய வரியை கட்ட வேண்டும்.
3. இதில் வருமானவரி பிரச்னை ஏற்பட்டால் நடப்பாண்டில் வருமான உயர்வை கணக்கில் காட்ட வேண்டும்.கணக்கில் காட்டாத பணம் கணக்கில் இல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தால் உங்களுக்கு 4 வழிகள் உள்ளன. உதாரணமாக, 10 லட்சம் நோட்டுகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இதோ வழிகள்:

1 பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு கணக்கில் காட்டப்படாத வருமானம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
* கட்ட வேண்டிய வரி 50 சதவீதத்தின்படி 5 லட்சம்
* 25 சதவீத பணமான 2.5 லட்சத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்
* மீதம் உள்ள 25% தொகையான 2.5 லட்சத்தை 4 வருடங்கள் கழித்து பயன்படுத்தலாம்.பயன்கள்:
* உங்கள் பணத்தில் 50 சதவீதம் நீங்கள் பெற முடியும்
* இது வெள்ளையாக மாற்றப்பட்ட பணம். எந்த தேவைக்கும் தயக்கமின்றி பயன்படுத்தலாம்.
* உங்கள் பணத்தை வெள்ளையாக்க சட்ட விரோத வழிகளை நீங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லை.
பாதிப்பு:
* எதிர்காலத்தில் வருமானவரித்துறையின் பார்வையில் நீங்கள் எப்போதும் இருக்க வேண்டியது வரும்.

2 பணத்தை வங்கியில் நம்பிக்கையுடன் டெபாசிட் செய்ய வேண்டும்
* 10 லட்சம் பணத்தை தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம்.
* ஆனால் திடீரென இந்தப்பணம் எங்கிருந்து வந்தது என்று விசாரிக்கப்படும்.
* உங்களிடம் சரியான விளக்கம் இல்லாவிட்டால், இந்த 10 லட்சம் ரூபாய்க்கு கீழ்காணும் வகையில் வரி, அபராதம் இருக்கும்.
* 60 சதவீத வரியாக 6 லட்சம் பிடிக்கப்படும்
* கூடுதல்வரியாக1.50லட்சம் பிடிக்கப்படும்
* வருமான வரி அதிகாரி முடிவின் படி அபராதம் 1 லட்சம் விதிக்கப்படலாம்.
* 10 லட்சத்தில் 1.50லட்சம் கிடைக்கும்.பயன்கள்:
* ெசாற்ப பணமாவது கிடைக்கும்
* எந்தவித நோட்டீஸ் மற்றும் பிரச்னைகள் ஏற்படாது என நம்பலாம்.
பாதிப்பு:
* சிக்கினால் பெரிய பிரச்னை ஏற்படும்
* விசாரணை நடத்தப்படலாம்.

3கணக்கில் காட்ட முடியாத பணத்தை தூக்கி வீசி விடலாம்
* 50 சதவீத அபராத திட்டத்தில் பலன் பெற முடியாதவர்கள்தான் இப்படி முடிவெடுப்பார்கள்.
* இதன்படி. தூக்கி வீசப்படும் 10 லட்சத்தையும் இழக்க வேண்டியது தான்.
* அரசு மீட்க நினைக்கும் கருப்பு பணம் இதுதான்.

4 சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல்.
* இந்த முறையில் பரிமாற்றம் செய்யும் போது பிடிபட வாய்ப்பு அதிகம் உள்ளது.
* குற்றத்தை ஒப்புக் கொண்டால் 60 சதவீத வரி (30 சதவீத வரி + 30 சதவீத அபராதம்) விதிக்கப்படும்.
* 90 சதவீத வரி விதிக்கப்படும். இதில் 30 சதவீத வரி மற்றும் 60 சதவீத அபராதம் விதிக்கப்படும்.
பயன்கள்:
* எதுவுமே மிஞ்சாது.
* சட்டவிரோதம், எதிர்காலத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
* விசாரணை வளையத்தில் சிக்க வேண்டியது வரும்.

வீட்டில் சேமித்த பணமாக இருந்தால்
* பயமில்லாமல் வங்கியில் முதலீடு செய்ய வேண்டும்.
* விசாரணை வந்தால் ஏற்கனவே வருமானவரி கட்டிய ஆதாரங்களை காட்ட வேண்டும்.
* 2.50 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் செய்து விசாரணை வருமா?:
* அரசு சந்தேகிக்கும் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்.
* அனைத்து டெபாசிட் பணமும் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்படும்.

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...