Thursday, June 1, 2017

மாநில செய்திகள்
சுவாதி கொலை வழக்கு சினிமா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் டி.ஜி.பி. அலுவலகத்தில் தந்தை மனு



சுவாதி கொலை வழக்கு சினிமா படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சுவாதியின் தந்தை மனு கொடுத்தார்.
ஜூன் 01, 2017, 03:45 AM

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு இதே ஜூன் மாதம் தமிழகத்தை உலுக்கிய படுகொலை சம்பவம், சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்தது. சுவாதி என்ற பெண் என்ஜினீயர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை புழல் மத்திய சிறையில் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.

அத்துடன் இந்த வழக்கும் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் சுவாதி கொலை வழக்கு என்ற தலைப்பில் சினிமா படமாக இந்த வழக்கு உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெய சுபஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம், இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முன்னோடி காட்சிகள் (டிரெய்லர்) பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

தடை கோரி தந்தை மனு

இந்த நிலையில், இந்த படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும், தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து, கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நேற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

மனு கொடுத்து விட்டு, பத்திரிகையாளர்கள் யாரையும் சந்திக்காமல் அவர் சென்று விட்டார். இந்த படம் வெளிவந்தால், எனக்கும், எனது குடும்பத்திற்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும், எனது முன் அனுமதி இல்லாமல் இந்த படம் தயாரிக்கப்படுவதாகவும் மனுவில், சந்தான கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

போலீசாரும் எதிர்ப்பு

சுவாதி கொலை வழக்கு படத்தின் முன்னோடி காட்சிகளில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த படத்தை வெளியிட போலீஸ் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ராம்குமாரை போலீசார் கைது செய்தபோது, அவர் தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் போலீசார்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்ததாக புகார் சொல்லப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய சம்பவம், இந்த சினிமா படத்தில், போலீசார் ராம்குமாரின் கழுத்தை அறுப்பது போன்ற காட்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு போலீஸ் தரப்பில் இப்போதே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி தனிக்கோட்டில் டி.டி.வி.தினகரனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று வழங்கப்படுகிறது.

ஜூன் 01, 2017, 04:45 AM

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்குள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய நீதிமன்ற காவல் வருகிற 12–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை ஏற்கனவே தனிக்கோர்ட்டு நிராகரித்துவிட்டது.ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான இரு தரப்பு வாதங்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்தது. அந்த மனுக்கள் மீது புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பூனம் சவுத்ரி தெரிவித்து இருந்தார்.

இதனால் தீர்ப்பை அறிந்துகொள்வதற்காக தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரியின் கோர்ட்டு அறையில் நேற்று டெல்லி போலீஸ் தரப்பிலும், தினகரன் தரப்பிலும் ஆவலுடன் கூடி இருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு கோர்ட்டு தொடங்கியதும், தீர்ப்பை தட்டச்சு செய்ய வேண்டிய உதவியாளர் விடுப்பில் உள்ளதால் நாளைக்கு (இன்று) தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

எனவே ஜாமீன் மனுக்கள் மீது இன்று (வியாழக்கிழமை) நீதிபதி தீர்ப்பை வழங்குகிறார். தினகரனுக்கும், மல்லிகார்ஜூனாவுக்கும் ஜாமீன் கிடைக்குமா? இன்று தெரிந்துவிடும்.
தலையங்கம்
ஆற்றல் உள்ளவர்களை கொண்டுவரும் அவசர சட்டம்



பழங்கால சீன முதுமொழி ஒன்று இன்றும் உலகம் முழுவதும் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான கருத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஜூன் 01, 03:00 AM

பழங்கால சீன முதுமொழி ஒன்று இன்றும் உலகம் முழுவதும் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான கருத்தை எடுத்துக்காட்டுகிறது. ‘‘ஒரு ஆண்டைப்பற்றி நீ திட்டமிட வேண்டும் என்றால், நெல் பயிரிடு, 10 ஆண்டு களைப்பற்றி திட்டமிட வேண்டும் என்றால், மரக்கன்றுகளை நடு, 100 ஆண்டுகளைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் மக்களுக்கு கல்வி புகட்டு’’ என்பதுதான் அந்த முதுமொழி யாகும். அந்தவகையில், ஒரு சமுதாயத்தின் உயர்வே கல்வியில் இருக்கிறது. அதிலும் உயர்கல்விதான் தனிநபரின் வாழ்க்கையின் வாசலையும் திறந்து வைக்கிறது. சமுதாய முன்னேற்றத்தின் வழியைக்காட்டுகிறது. இதில், பல்கலைக்கழகங்களின் பணி மிகவும் இன்றியமையாதது. ஒரு பல்கலைக்கழகத்தின் உயர்வோ தாழ்வோ அதற்கு தலைமை தாங்கி நடத்தும் துணைவேந்தர்கள் கையில்தான் உள்ளது.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்பது பழமொழி. பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் இது பொருந்தும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டும். ஆனால், சமீப காலங்களாக பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்திலும் ஒருசில பல்கலைக்கழக துணைவேந்தர்கள்மீதும் நிறைய ஊழல் புகார்கள் கூறப்பட்டன. ஊழல் புகாரில் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, அப்பழுக்கு இல்லாத கல்வியாளர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்துவந்தது. இந்தநிலையில், பல்கலைக்கழக வேந்த ரான தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மிகவும் துணிச்சலாக தேர்வுக்குழுவால் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்ட 3 பேர்களையும் நேர்முகத்தேர்வு வைத்து தேர்வு செய்தார். மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் இவ்வாறு நேர்முகத்தேர்வு வைத்துத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேர்வுக்குழு பரிந்துரை செய்த 3 பேர்களையும் நிராகரித்தார். அடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக பி.பி.செல்லத் துரையும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பி.துரைசாமியையும் நியமனம் செய்தார். இந்த நியமனம் செய்த அன்றே கவர்னர், எதிர்காலத்தில் நியமிக்கப்பட இருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் தகுதி மற்றும் தேர்வுக்குழு அமைக்கும் காலவரையறை எல்லா வற்றையும் வைத்து ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தார். இதன்படி, ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே தேர்வுக்குழு அமைக்கப்படவேண்டும். செனட் மற்றும் சிண்டிகேட் பிரதிநிதிகள் தேர்வு 2 மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும். இந்த தேர்வுக்குழு அமைக்கப்பட்டு 4 மாதங்களுக்குள் பெயர்கள் பரிந்துரைக்கப்படவேண்டும்.

துணைவேந்தரின் பதவிகாலம் முடிவதற்கு ஒரு நாளைக்கு முன்போ அல்லது முடிந்த உடனோ புது துணைவேந்தரின் பெயரை கவர்னர் வெளியிடுவார்.
ஆக, எதிர்காலத்தில் துணைவேந்தர் பதவி காலியாகவே இருக்காது. தேர்வுக்குழுவும், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அரசு சார்பில் பிரதிநிதியாக ஓய்வு பெற்ற முதன்மை செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவர் அல்லது புகழ்வாய்ந்த கல்வி நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக சிறப்புவாய்ந்த கல்வியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். இதுபோல, யார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்பதற்கும், பல்கலைக்கழக மானியக்குழு நிர்ண யித்துள்ள தகுதிகளே தமிழகத்துக்கும் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. இந்த அவசர சட்டம் பிறப்பித்த உடனேயே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதாவை கவர்னர் நியமித்துவிட்டார். ஆக, இனி தமிழ் நாட்டில் உள்ள துணைவேந்தர்கள் எல்லோரும் அப்பழுக் கற்ற, ஆற்றல் அதிகம் உள்ள, தொலைநோக்கு பார்வை கொண்ட, தமிழ்நாட்டில் கல்லூரிகளின் கல்வித்தரம் எல்லாம் உயர்த்தவல்ல சிறந்த கல்வியாளர்களாகத்தான் இருப்பார்கள். அதற்கு இந்த அவசர சட்டம் வழிகாட்டிவிட்டது என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்.
மாநில செய்திகள்
ரஜினிகாந்த் ஆலோசனை அரசியலுக்கு வருவது குறித்து கருத்து கேட்கிறார்


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து முக்கிய அரசியல் பிரமுகர்களிடமும், நடிகர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.

ஜூன் 01, 2017, 05:15 AM
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை திரட்டி, “சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்றும், போருக்கு அனைவரும் தயாராக இருங்கள்” என்றும் அதிரடி அறிவிப்பு வெளியிட்டதால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாகி இருக்கிறது. ரஜினிகாந்தை சந்தித்து பேசிய அவரது நண்பர் ராஜ்பகதூர், தமிழருவி மணியன் ஆகியோரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று உறுதிப்படுத்தி உள்ளனர்.

அரசியலுக்கு முன்னோட்டமாக ஒன்றிய, நகர, மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரசிகர் மன்ற அமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ரஜினிகாந்த் ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறும் ரசிகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.

கருத்து கேட்பு

காலா படப்பிடிப்பு மூன்று, நான்கு மாதங்களில் முடிவடைந்து விடும் என்றும், அதன்பிறகு அரசியலுக்கு வருவது குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தனது நலம் விரும்பிகள், அரசியல் பிரமுகர்கள், மூத்த நடிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரிடம் நேரிலும், போனிலும் ரஜினிகாந்த் கருத்து கேட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.

காலா படப்பிடிப்புக்காக மும்பை புறப்படுவதற்கு முன் தனது வீட்டில் பலரை இது தொடர்பாக அவர் சந்தித்து கருத்து கேட்டார். அப்போது சிலர் நீங்கள் கட்சி தொடங்கினால் அதில் சேர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆந்திராவில் தனி கட்சி தொடங்கி அனுபவப்பட்ட தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோரிடமும் போனில் கருத்து கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரஞ்சீவி-அமிதாப்பச்சன்

சிரஞ்சீவி அரசியல் ஆசையில் பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் தோல்வி அடைந்ததும் காங்கிரசில் கட்சியை இணைத்து மத்திய மந்திரி பதவியை பெற்றார். தனி கட்சி தொடங்குவதால் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அவரிடம் ரஜினிகாந்த் விவாதித்ததாக தெரிகிறது.

நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரிடம் தனி கட்சி ஆரம்பித்தால் மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும்? என்று கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் தற்போது காலா படப்பிடிப்புக்காக மும்பையில் முகாமிட்டு இருப்பதால், அமிதாப்பச்சன் மற்றும் அங்குள்ள அரசியல் பிரமுகர்களிடமும் கட்சி ஆரம்பிப்பது குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி

இதற்கிடையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அவரை வளைத்து போட்டு கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி உள்ளன. பா.ஜ.க, ரஜினி கூட்டணிக்கு ஆர்வமாக இருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்று உள்ளன. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

குடும்ப சூழ்நிலைக்கேற்ப வேறு வேலை தேடுவது தவறில்லை : உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்31மே2017 23:46

மதுரை: 'குடும்ப சூழ்நிலையை கருதி, தற்போதுள்ள வேலையைவிட, வேறு நல்ல வேலையைத் தேட முயற்சிப்பதில் குறை காண முடியாது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்க்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும்,' என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்துார் அருகே ராணி மகாராஜபுரம் மகேஸ்வரி. பிளஸ் 2 முடித்துள்ளார். கணவர் இறந்துவிட்டார். மனவளர்ச்சி குன்றிய 2 குழந்தைகள் உள்ளனர். ராணி மகாராஜபுரம் இந்து துவக்கப் பள்ளியில் உதவி சமையலர் பணியில் மகேஸ்வரி சேர்ந்தார். சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்கு அறிவிப்பு வெளியானது. மகேஸ்வரி விண்ணப்பித்தார். வலவிளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சத்துணவு அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். உதவி சமையலர் பணியை ராஜினாமா செய்வதாக, துாத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார்.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. பணி விதிகளை மீறியுள்ளார் எனக்கூறி, மகேஸ்வரியின் ராஜினாமாவை துாத்துக்குடி கலெக்டர் நிராகரித்தார்.

மகேஸ்வரி,'கலெக்டரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை உதவி சமையலர் பணியிலிருந்து விடுவித்து, சத்துணவு அமைப்பாளர் பணியில் சேர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
அரசுத் தரப்பில்,'மனுதாரர் ஏற்கனவே வேறு பணியில் உள்ளார். சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. உதவி சமையலர் பணி ராஜினாமா கடிதத்தை பின்தேதியிட்டு மனுதாரர் அனுப்பியுள்ளார். அது எங்களுக்கு தாமதமாக கிடைத்தது. சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

நீதிபதி உத்தரவு: மனுதாரர் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், அதிகாரிகளிடம் அனுமதிபெறவில்லை; விதிகளை மீறியுள்ளார் என்பது சரியே. ஆனால், அறியாமையால் செய்ததை கடுமையான செயலாக பார்க்கக்கூடாது. இதுபோன்ற வழக்குகளில் சந்தர்ப்ப சூழ்நிலையை, கருத்தில் கொள்ள வேண்டும். நடுநிலையாகத்தான் நீதி வழங்க முடியும்.
மனுதாரரின் 2 குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியுள்ளனர். குடும்ப சூழ்நிலையை கருதி, தற்போதுள்ள வேலையைவிட, வேறு நல்ல வேலையைத் தேட மனுதாரர் முயற்சித்துள்ளார். இதில் குறை காண முடியாது. இதனால் யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லை.
கலெக்டரின் கடிதத்தை பார்க்கையில், மனுதாரர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது தெரிகிறது. அறியாமையால் செய்த தவறை, முக்கியக் குற்றமாகக் கருத முடியாது.

மனுதாரர் தகுதியானவராக இருந்தால், சட்டரீதியான தடை ஏதுவும் இல்லாதபட்சத்தில் மனுவை பரிசீலித்து, சத்துணவு அமைப்பாளர் பணி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, தற்போதைய உதவி சமையலர் பணிக்கு எவ்வித இடையூறும்
அதிகாரிகள் ஏற்படுத்தக்கூடாது என்றார்.
ஆள் இல்லாமல் ஓடிய ரயில் இன்ஜினால் பரபரப்பு

பதிவு செய்த நாள்31மே2017 22:54




திருச்சி: பழுதான ரயில் இன்ஜினை இழுத்து சென்ற, மாற்று இன்ஜினில் ஆள் இல்லாமல், 10 கி.மீ.,க்கு மேல் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சியிலிருந்து காலை, 6:10 மணிக்கு, கரூர் செல்லும் பயணிகள் ரயிலை இழுத்துச் செல்ல வந்த, இன்ஜின் பழுதடைந்தது. இதையடுத்து, மாற்று இன்ஜின் மூலம் அது, மாற்றுப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மாற்று இன்ஜினில் பழுது ஏற்பட்டது. அதன் டிரைவர், இறங்கி சரி பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த இன்ஜின் எதிர்பாராதவிதமாக நகர துவங்கியது. இதனால், இரு இன்ஜின்களும் ஆள் இல்லாமல் ஓடத் துவங்கின. இதைப்பார்த்த டிரைவர், அவற்றை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு, பிளாட்பாரத்தில் நின்ற அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கியில் தகவல் கொடுத்துள்ளார். அதற்குள் இன்ஜின் வேகமெடுத்து, 30 கிலோமீட்டர் வேகத்தில், கரூர் மார்க்கத்தில் ஓடத்துவங்கியது. இதையடுத்து பாலக்கரை, கோட்டை ரயில் நிலையங்களில் வழித்தடங்கள் நேராக்கப்பட்டு, இன்ஜின்கள் விபத்தில்லாமல் செல்லவும், எதிரே எந்த ரயிலும் வராமலும் பார்த்துக் கொள்ளப்பட்டது. பின், கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கட்டைகளை வைத்து, இன்ஜின்களை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இன்ஜின்கள் நிற்கவில்லை. ரயில்வே தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஒருவர், கோட்டை ரயில் நிலையத்தில் வேகமாக ஓடிச் சென்று, முதல் இன்ஜினில் ஏறி விட்டார். 

சிறிது நேரம் போராடி, குடமுருட்டி பாலம் தாண்டிய பின், ரயில் இன்ஜின் மேடான பகுதியில் மெதுவாக சென்றபோது, சாதுர்யமாக தடுத்து நிறுத்தி உள்ளார். இரு ரயில் இன்ஜின்கள் ஆள் இல்லாமல், 10 கி.மீ.,க்கு மேல் ஓடியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எதிரே எந்த ரயிலும் வராமல் தடுக்கப்பட்டதால், பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.

இன்ஜினியரிங் படிப்பதில், தமிழக மாணவர் களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.

இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற் பதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. அதில், இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.50 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட, 30 ஆயிரம் பேர் குறை வாக பதிவு செய்துள்ளனர்; அதே நேரத்தில், கலை, அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க் கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, மே, 1 முதல், 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முடிந்தது. இதில், 1.50 லட்சம் பேர், கவுன்சிலிங் கில் பங்கேற்க முன்வந்துள்ளனர். கடந்த ஆண்டு, 1.84 லட்சம் பேர் பதிவு செய்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 30 ஆயிரம்

பேர் குறைவாக விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம், மாணவர்களிடம் இன்ஜி., படிக்கும் ஆர்வம் குறைந்திருப்பது தெரிய வந்துள் ளது. இன்ஜி., முடிக்கும் மாணவர்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் வேலை வாய்ப்பு குறைந்துள் ளது தான் இதற்கு காரணம். ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்குறைப்பில் இறங்கி உள்ளன.

அப்படியே வேலை கிடைத்தாலும், பி.பி.ஓ., என்ற வெளிநாட்டு நிறுவனங்களுக் கான, 'அவுட் சோர் சிங்' பணியாகத் தான் இருக்கிறது. அவற்றிலும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே, பல ஆண்டுகளுக்கு பணியில் நீடிக்கும் வாய்ப்பும், சம்பள உயர்வும் கிடைக்கிறது.

மற்றவர்களுக்கு, பணியில் சேர்ந்து, சில ஆண்டுகள் ஆகிவிட்டால், சம்பளம் குறைக்கப் படுவதுடன்,'லே ஆப்' முறையில் வெளி




யேற் றப்படுகின்றனர். அதனால், இன்ஜி., படிப் பில்ஆர்வம் குறைந்து,வணிகம், பொருளியல் மற்றும் ஆசிரியர் பணிக்கான கலை, அறிவி யல் படிப்புகளில், மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தமிழக பாடத்திட்டத்திலும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்திலும், வணிகவியல் பிரிவில்,அதிக மாணவர்கள் படித்ததும், இன்ஜி., மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் என,கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்
.
நிர்வாக ஒதுக்கீட்டில் ஆர்வம்

கடந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 97 ஆயிரம் இன்ஜி., இடங்கள், காலியாக இருந்தன. இந்த ஆண்டு, காலியிடங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை எட்டும் என தெரிகிறது.

கவுன்சிலிங் கில், தாங்கள் விரும்பும் கல்லுாரி யில், விரும் பும் பாடப்பிரிவு கிடைக்காது என்பதால், பல மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட் டில், நேரடியாக, 'அட்மிஷன்' பெற்றுள்ளனர். பல இன்ஜி., கல்லுாரிகள், நன்கொடையை குறைத்துக் கொண்டதும், இதற்கு முக்கிய காரணம்.

- நமது நிருபர் -

NEWS TODAY 22.04.2024