Tuesday, February 27, 2018


மேலும் 5 நகரங்களில் பாஸ்போர்ட் சேவை மையம்: தலைமை தபால் நிலையங்களில் திறக்கப்படுகிறது

By DIN | Published on : 27th February 2018 03:24 AM |

தமிழகத்தில் விழுப்புரம், விருதுநகர், கடலூர்,நாகர்கோவில்,திருவண்ணாமலை ஆகிய 5 நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
இது குறித்து தபால்துறை சென்னை மண்டலத் தலைவர் ஆர்.ஆனந்த் கூறியது:

தபால்துறையின் சென்னை நகர மண்டலத்துக்கு உள்பட்ட விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதியும் திருவண்ணாமலையில் மார்ச் 1-ஆம் தேதியும் இந்த சேவை மையம் தொடங்கப்படுகிறது.

இதேபோல கடலூர், விருதுநகரில் செவ்வாய்க்கிழமை, நாகர்கோவிலில் புதன்கிழமை, பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழக தபால்துறை வட்டத்தில் சேவை மையங்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்கிறது.

இந்த மையங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்த்தல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறும். பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடக்கும் அனைத்து நடைமுறைகளும் இங்கு நடைபெறும்.
இதற்காக வெளியுறவுத் துறையினரும், தபால் துறையினரும் இணைந்து பணியாற்றுவார்கள். இந்த மையங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள் தொலைவில் செல்லாமல் அருகிலேயே அணுகலாம். அவர்களின் நேரம் சேமிக்கப்படும்.

இங்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டது. இந்த சேவை மையங்கள் மூலமாக, சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயன் பெறலாம்.
இது தவிர, பாஸ்போர்ட் சேவை மையங்கள் திண்டுக்கல், சிவகாசி, ராமநாதபும், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய நகரங்களில் பாஸ்போர்ட் மையங்கள் அமைப்பதற்கு தபால்துறையினரும், வெளியுறவுத்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

By DIN | Published on : 27th February 2018 08:27 AM

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

நாகூர் தர்காவில் 461ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 17- ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. தர்காவில் இருந்து தாபூத்து எனப்படும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு புறப்பட்டது. ஊர்வலத்தை முன்னிட்டு பொதுமக்கள் சாலையோரங்களில் நின்று ஆண்டவரை வழிபட்டனர்.

சந்தன கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நாகூர் தர்காவை வந்தடைந்தது. பாத்தியா ஓதிய பின்னர், சந்தனக்கூட்டில் இருந்து ஹஜரத் ஒருவர் சந்தனக்குடத்தை தர்காவிற்குள் கொண்டு சென்று, தர்காவில் உள்ள நாகூர் ஆண்டவர் சமாதியில் தூஆ ஓதி சந்தனம் பூசப்பட்டது. நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
ஒரு பிரபலத்தின் மரணத்தால் கவனமிழந்த 8 வயது சிறுவனின் கொடூரக் கொலை! நடிகர் பிரசன்னா ட்விட்டரில் ஆவேசம்!

By உமா | Published on : 26th February 2018 04:44 PM |

சமூக வலைதளங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ட்விட்டரில் தங்கள் படங்களைப் பற்றியும் ரசிகர்களை சந்திக்கும் ஓரிடமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள் நடிகர்கள். இவற்றுடன் சமூக கருத்துகளையும் சிலர் பதிவு செய்வதுண்டு. அவர்களுள் நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் பிரசன்னா குறிப்பிடத்தக்கவர்கள்.

அண்மையில் விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் அடையாளம் தெரியாத கும்பலால் ஆராயி என்பவரும் அவரது இரண்டு பிள்ளைகளையும் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதில் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெல்லம்புத்தூர் எனும் கிராமத்தில் ஆராயி என்பவர் 13 வயது மகள் தனம், மற்றும் 9 வயது மகன் சமயன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

சனிக்கிழமை இரவு (24 பிப்ரவரி) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, ஆராயி மற்றும் அவரது குழந்தைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். மூவரும் பலத்த காயங்களுடன் தலை, கழுத்து ஆகிய இடங்களில் தாக்கப்பட்டும் கத்தியால் வெட்டப்பட்டும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட கிராமத்தினர் உடனடியாகப் போலீசாருக்கு ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அரகண்டநல்லூர் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான் எனத் தெரிந்தது.

பலத்த காயங்களுடன் ஆராயி மற்றும் தனம் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவன் இறந்தது, சந்தேக மரணம் என காவல்துறையினர் முதலில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் ஆராயியின் உறவினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் அதனை கொலை வழக்காக பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் படுகாயம் அடைந்த சிறுவனின் தாய் ஆராயிக்குத் தெரிந்த நபர் ஒருவர், இரவு குடிபோதையில் 14 வயது மகளிடமும் தவறாக நடக்க முயற்சிக்கையில் அதனை தடுக்க முயன்ற போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக காவல் துறையினர் நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஒரு பிரபல நடிகையின் மரணத்தால் மட்டுமே இந்தச் செய்தி மறக்கப்பட்டதா அல்லது வேறு காரணமா? மதுக்களும், ஆராயிகளும், வன்புணர்வுகளும் நாளும் நடந்தேறும் நம் ஊரைச் சீர் செய்யாமல் சிரியாவை நினைத்து உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது? என்று தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார் பிரசன்னா.

சாமானியர்களுக்கானதா வங்கிகள்?

By ஆர். வேல்முருகன் | Published on : 27th February 2018 01:29 AM

இப்போதெல்லாம் செல்லிடப்பேசிகளுக்கு வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை, உங்களுக்குக் கடன் அட்டை வேண்டுமா, தனிநபர் கடன் வேண்டுமா என்று கேட்டுத்தான். அழைக்கும் பெண்களோ தங்களது வசீகரப் பேச்சில், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், எவ்வளவு ஊதியம் என எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு எங்கள் அலுவலகத்தில் இருந்து ஆள்களை அனுப்புகிறோம். விண்ணப்பத்தில் மட்டும் கையெழுத்திடுங்கள் என்பார்கள்.

அந்த அலுவலகத்தில் இருந்து ஒருவர் வந்து விண்ணப்பத்தில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு சென்றுவிடுவார். அதன் பிறகு பத்திரிகையாளர், வழக்குரைஞர், போலீஸாருக்குக் கடனோ அல்லது கடன் அட்டைகளோ தருவதில்லை என்பார்கள். இதுதான் பொதுவாக நடப்பது.
சாதாரண மக்கள் யாராவது குறைந்தது ஒரு வாரமாவது சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் கெஞ்சிக் கூத்தாடி கடன் பெற்றுவிட்டால் அதற்குள் முதல் தவணை வந்துவிடும்!

எப்படியோ எல்லாவற்றையும் மீறிக் கடன் பெற்று, ஏதாவது ஒரு பிரச்னை காரணமாக ஒரு தவணை கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால் அதற்கு அந்த வங்கியில் போன் செய்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்போம் பாருங்கள், அது மோசமான அனுபவம். தவணை தவறியதற்கு அபராதம், வட்டிக்கு வட்டி வேறு.

வங்கி அதிகாரிகள் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் கடன் கொடுக்க முடியும் என்ற நிலை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வங்கிகள் என்று இருந்த நிலை மாற்றப்பட்டு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் காரணம் வங்கிச் சேவை சாதாரண மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
இன்றைய சூழ்நிலையில் வங்கிகளின் சேவை கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் தேவை. முன்பிருந்ததை விட இப்போது வங்கிச் சேவையை அனைவருமே பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

யாரோ ஒருவருக்குக் கொடுத்த பணத்தை வசூலிக்க இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ரூ.50, ரூ.100 செலுத்தும் வாடிக்கையாளர்கள் சராசரிக்கும் குறைவான தொகையைத் தங்கள் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தார்கள் என்பதற்காக விதித்த அபராதக் கட்டணம் மூலம் ஈட்டிய தொகை கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை ரூ.1771 கோடி. இது வங்கியின் இரண்டாவது காலாண்டின் நிகர லாபத்தை விடக் கூடுதல் என்பது கசப்பான உண்மை.

சாமானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூடக் கண்டுகொள்ளாத பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் தொழிலதிபர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடனை அள்ளிக் கொடுத்திருக்கிறது என்று இப்போது தெரிய வருகிறது. ஒரு சாமானியனுக்கு சில ஆயிரங்கள் கடன் தரும்போதே உத்தரவாதம் அளிப்பவரும் நேரில் வங்கிக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று வற்புறுத்தும் வங்கி மேலாளர்கள், வங்கி அதிகாரியின் உத்தரவாதக் கடிதம் என்ற முறையை ஏற்றுக் கொண்டு பல நூறு கோடிகளை அள்ளி வீசியது எப்படி?

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றின் வேலூர் கிளையில் நண்பர் ஒருவர் வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கியிருந்தார். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடனை ஒரு தவணை கூடத் தவறாமல் செலுத்தி வருகிறார். அவருக்கு திடீரென ரூ.50 ஆயிரம் கூடுதல் கடன் தேவைப்பட்டது.
வங்கிக்குச் சென்று கேட்டபோது, 'உங்களை விடக் கூடுதலாக ஊதியம் பெறுபவர் உத்தரவாதம் அளித்தால் கடன் தருவதாக' கூறினார். இத்தனைக்கும் பல லட்சம் மதிப்புள்ள வீடு சொற்பத் தொகைக்கு அந்த வங்கியில் அடமானத்தில் இருப்பது மேலாளருக்கும் தெரியும். அதை எடுத்துச் சொன்ன பிறகுதான் மேலாளர் கடன் தந்தாராம்.

நண்பரின் சொத்து அடமானத்தில் இருக்கும்போது கூடுதலாக ரூ.50 ஆயிரத்துக்கே இத்தனை பிரச்னை என்றால், ஆயிரக்கணக்கிலான கோடி முறைகேடு நடந்தது எப்படி என்பது அந்த அதிகாரிகளுக்குதான் வெளிச்சம்.
தேர்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு ஊழல் அரசியல்வாதிகளுக்குக் கிடுக்கிப்பிடி போட சிறிய அளவிலாவது முயற்சி நடந்து வருகிறது. ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் தேர்தலில் போட்டியிடத் தடை, தேர்தலில் நிற்கும் வேட்பாளரின் உறவினர்களுடைய சொத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று புதிய பரிந்துரை - போன்ற முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு உள்ள விதிமுறைகள் போல, வங்கி அதிகாரிகளுக்கும் சொத்து தொடர்ôன விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும்.

வங்கிப் பணியில் சேரும் ஒவ்வொரு அதிகாரியின் சொத்து மதிப்புகளையும் பெற்றுக் கொண்டு அவர் பணியில் இருந்து விலகும்போது சொத்து மதிப்பைச் சரிபார்க்க வேண்டும்.

வருமானத்துக்கு அதிகமான சொத்து இருந்தால் அவரைப் பணி நீக்கம் செய்து கூடுதல் வருமானத்தில் வாங்கிய சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமும் அனைவருக்கும் இருக்கும்.
ஆனால் ஒன்று, சாதாரண மக்களுக்குத் தேவையான கடனுதவிகளை வங்கி நிர்வாகங்கள் தைரியமாகச் செய்யலாம். ஏனெனில் சாமானியர்கள் வெளிநாடுகளுக்குத் திட்டமிட்டுத் தப்பிப்பதில்லை. சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட சாமானியர்கள் யாரும் தாங்கள் கடனாளியாகச் சாவதை விரும்புவதில்லை என்பது உண்மை.
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் தேர்வு மையத்துக்குச் செல்லலாம்: மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களுக்கு தாங்கள் வைத்திருக்கும் பஸ் பாஸ் மூலம் செல்லலாம் என சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திங்கள்கிழமை அக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மார்ச் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வும், மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வும் நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ளும், பள்ளி மாணவ-மாணவிகள் வைத்துள்ள இலவச பேருந்து பயண அட்டையைப் பயன்படுத்தி தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்கப்படுவர். 


சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துனர்கள், ஓட்டுநர்கள் இத்தகைய மாணவர்களை பேருந்தில் பயணிக்க அனுமதிக்குமாறு ஏற்கனெவே உத்தரவிடப்பட்டுள்ளது. 


மேலும் வருவாய் உதவி மேலாளர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு மேற்படி உத்தரவு குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கி, பள்ளி நேரங்களில் எக்காரணம் கொண்டும் பேருந்துகளை நிறுத்தி காலம் தாழ்த்தாமல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எவ்வித இடையூறுமின்றி பயணம் செய்யும் வகையில் பேருந்து இயக்கிட ஏதுவாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt
சரண்விடுப்பு முழுவதும் வருமான வரி வரம்புக்கு உட்பட்டதே..

  February 25, 2018


தற்போது சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் தொகைக்கு வருமான வரி இல்லை என்று பரவி வருகிறது. அதற்கு 10E பிரிவு G.O வையும் பதிவிடுகின்றனர். 10E ல் குறிப்பிடப்படும் சலுகைகள் பணி ஓய்வு பெறுபவர்களுக்கானது. அதில் பணி ஓய்வு பெறும் ஒருவர் கடந்த பத்தாண்டுகளில் சேமித்து வைத்த சரண்விடுப்பு ஆண்டுக்கு 30 நாட்கள் உச்சவரம்பு என 10 ஆண்டுகளுக்கு 300 நாட்களுக்கு மட்டுமே வரி விலக்கு உண்டு. (தமிழக அரசை பொருத்தவரை ஓய்வு பெறுபவர் அதிகபட்சம் 240 நாட்கள் மட்டுமே பணமாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது). மற்றபடி service ல் உள்ளவர்கள் பெறும் சரண்விடுப்பு முழுவதும் வருமான வரி வரம்புக்கு உட்பட்டதே ஆகும்.
தங்கம்போல ஜொலிக்க… மஞ்சள்!

on February 17, 2018



தங்கம்போல ஜொலிக்க… மஞ்சள்! டாக்டர் வி. விக்ரம்குமார் பெண்களுக்கு நோய்கள் ஏற்படாமல் தடுத்ததில் மஞ்சளுக்கு நெடுங்காலமாக மிகப் பெரிய பங்கு உண்டு. மாதவிடாய் நாட்களில் உண்டாகும் கிருமிகளை அழிக்கவும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் முறை பயன்பட்டிருக்கிறது. உடலில் தேவையில்லாமல் முளைக்கும் ரோமங்களை இயற்கையான முறையில் நீக்க மஞ்சளைத் தவிர சிறந்த பொருள் வேறெதுவுமில்லை. கிருமிநாசினி செய்கை கொண்டது என்பதால், தோல் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமையும் மஞ்சளுக்கு இருக்கிறது. பாடல் உணர்த்தும் உண்மை 'மஞ்சள் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமோடு' எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் உடலில் ஏற்படும் நாற்றம், தோல் நோய்கள், சில வகையான கப நோய்கள் போன்றவை நீங்கும் என்பதை உணர்த்துகிறது. மஞ்சள் குளியலால் தலைபாரம், தலைவலி குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

 'மஞ்சள் தேய்த்துக் குளிப்பது அநாகரிகமான செயல்' என்று இன்றைய தலைமுறையினர் கருதும் நிலையில், அதன் பயன்களை முந்தைய தலைமுறையிடம் கேட்டால் மஞ்சளின் மகிமை குறித்து நமக்குப் புரியும். மஞ்சளை அரைத்து, அதைக் குளிப்பதற்குப் பயன்படுத்தும் வயதான பாட்டிகளின் தோல் ஆரோக்கியத்தை இன்றும் நம்மால் கண்கூடாகப் பார்க்க முடியும். மேனிக்கு மருந்து இன்றைய நகரவாசிகள் சமையல் தவிர்த்து மஞ்சளை வேறு எதற்கும் பயன்படுத்தாத நிலையில், மஞ்சள் குளியல் முறை மீண்டும் உயிர் பெற்றால், தங்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து பெண்கள் தப்பித்துக்கொள்வதற்கு, நல்லதொரு பாதுகாப்புக் கவசம் கிடைக்கும். தோலில் பாதிப்பு உண்டாகாமல் 'பள பள'வென ஜொலிக்கும் தேகத்தைப் பெற, மஞ்சள் தேய்த்துக் குளிப்பது பயன் தரும் என்பதை 'பொன்னிறமாம் மேனி புலால் நாற்றமும் போம்' என்ற பாடல் வரியின் மூலம் விளக்குகிறார் சித்தர் அகத்தியர். மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் தோல் புத்துயிர் பெறுவதோடு, தேகத்தில் உருவாகும் வியர்வை நாற்றமும் மறையும் என்பதுதான் இதன் பொருள். மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், தோல் சுருக்கம் ஏற்படுவது தள்ளிப்போவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் தேய்த்துக் குளித்து வருவதால் பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் தீவிரமடையாது. ஈரமான இடங்களில் தொடர்ந்து இருப்பதால் உண்டாகும் சேற்றுப் புண் வராமலும் தடுக்கப்படும்.

 மஞ்சள் நீரூற்றின் மகிமை பெரும்பாலான வடநாட்டுத் திருமணங்களில், மணமக்களுக்கு 'மஞ்சள் பூச்சு' நிகழ்வு தவறாமல் இடம்பெறுகிறது. கிருமிகளை அழிப்பதும், முகப்பொலிவை உண்டாக்குவதும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதும்தான் 'மஞ்சள் பூச்சு' செய்வதன் விஞ்ஞானப் பின்னணி. தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கும் மஞ்சள் நீரூற்று விழாக்களின் பாரம்பரியத்திலும் நோய்களை அழிக்கும் அறிவியல் உள்ளது. தேங்காய்ப் பாலோடு மஞ்சள் கலந்து குளிக்கும் வழக்கம் மலையாள மக்களிடம் இன்றளவும் தொடர்கிறது. கலப்பட மஞ்சள்! மஞ்சள் போலவே மணமிக்க கஸ்தூரி மஞ்சளையும் குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். இதை அரைத்து உடலில் தேய்த்துக் குளிப்பதால், உடலில் உண்டாகும் சிறுசிறு கொப்பளங்கள், அரிப்பு, கரப்பான் எனப்படும் ஒரு வகையான தோல் நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. முகப் பருக்களில் கிருமி சஞ்சாரம் ஏற்படுவதும் தடுக்கப்படும். குளித்து முடித்த பிறகு நல்ல வாசனையையும் கொடுக்கும். சில கடைகளில் கிடைக்கும் மஞ்சள் தூளில் மரத் தூள், மாவுப் பொருள் போன்றவற்றைக் கலப்படம் செய்துவிடுகின்றனர். 'வெளியில் பூசிக் குளிப்பதற்குத் தானே, கலப்படம் இருந்தால் என்ன?' என்று சாதாரணமாக இருந்துவிடக் கூடாது.

கலப்பட மஞ்சளை உட்கொள்வதால் மட்டுமல்ல, வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தினாலும் உடலுக்குப் பாதகம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. தரமற்ற மஞ்சள் நிச்சயமாகத் தோலுக்குப் பாதிப்புகளை உண்டாக்கும். 'மஞ்சள் தேய்த்துக் குளிப்பது தோலுக்குப் பாதகமானது' என்று தவறாகப் பிரசாரம் செய்துவிட்டு, கிருமிநாசினி கிரீம்களிலும், பாடி லோஷன்களிலும் மஞ்சளின் சாரத்தை வணிக நிறுவனங்கள் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள். நம்மில் பலரும் வெறும் விளம்பரங்களுக்கு மயங்குகிறோம்! இனிமேலாவது உண்மைப் பலன்களுக்கு மயங்குவோம். கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

NEWS TODAY 2.5.2024