Thursday, March 1, 2018

மூட்டுவலிக்காரர்கள் கவனத்துக்கு...

2018-02-28@ 15:16:59


நன்றி குங்குமம் டாக்டர்

எலும்பே நலம்தானா?!

மூட்டு வலி என்பது முதுமையில் மட்டுமே வரக் கூடிய பிரச்னை அல்ல; இப்போது இளம்வயதிலேயே பலரும் அதனால் அவதிப்படுகிறார்கள் என்பதையும், முட்டியில் ஏற்படுவது மட்டுமே மூட்டுவலி அல்ல என்பதையும் கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம். அதேபோல் மூட்டுவலிக்காரர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான 25 விஷயங்களையும், அவர்களுக்கான உணவுமுறையையும் இப்போது தெரிந்துகொள்வோம்...

1. மூட்டுவலி அதிகமாக இருந்தால், இரண்டு நாட்கள் முழுமையாக ஓய்வெடுங்கள்.

2. மூட்டில் வலிக்கும் இடத்தில் ‘ஐஸ் பேக்’ மூலம் ஒத்தடம் கொடுங்கள்.

3. மூட்டுவலி இருக்கும்போது எந்த காரணத்தைக் கொண்டும் மூட்டில் சூடாக ஒத்தடம் கொடுத்து விடக்கூடாது. வலி குறைந்த பின்பு சுடுநீரில் முக்கிய துணியைப் பிழிந்து, மூட்டைச் சுற்றி வைக்கலாம்.

4. மூட்டு வலி இருந்தாலும் முழுமையாக முடங்கிவிடக் கூடாது. எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அரை மணி நேரம் மிதமான வேகத்தில் நடப்பது நல்லது.

5. மூட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் எந்த வேலையையும் செய்யாதீர்கள்.

6. நீங்கள் அதிக எடை கொண்டவராக இருந்தால், உங்களுக்கு மூட்டு வலி வர வாய்ப்பிருக்கிறது. அதனால் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறையுங்கள்.

7. அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பதை தவிர்த்திடுங்கள். ஒரு காலை ஊன்றிக் கொண்டு இன்னொரு காலை மேலே தூக்கி வைத்தபடியும் வேலை பார்க்க ேவண்டாம்.

8. உட்கார்ந்திருந்தே அதிக நேரம் வேலை செய்ய வேண்டாம். சப்பணம் போட்ட நிலையிலும் அதிக நேரம் உட்காரக் கூடாது. இத்தகைய செயல்கள் மூட்டிற்கு அதிக அழுத்தம் கொடுக்கும்.

9. அதிக நேரம் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டால், முதலில் ஒரு காலுக்கு அதிக அழுத்தம் கொடுத்து நின்றபடி, அடுத்த காலுக்கு ஓய்வு கொடுங்கள். பின்பு அடுத்த காலுக்கு அழுத்தம் கொடுத்து விட்டு, முதல் காலுக்கு ஓய்வு கொடுங்கள். இவ்வாறு இரு கால்களையும் ‘ரிலாக்ஸ்’ செய்யுங்கள்.

10. வீடு மற்றும் அலுவலகத்தின் தரை பளபளப்பாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தால் நடக்கும்போது மூட்டுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த நெருக்கடியை சமாளிக்க பொருத்தமான செருப்பு அணிந்து கொண்டு நடந்து செல்லுங்கள்.

11. வாக்கிங் செல்லும்போது பொருத்தமான ஷூ அணிந்து கொள்ளுங்கள்.

12. உட்கார்ந்திருந்து விட்டு எழுந்திருக்கும்போது, பலமான எதையாவது ஒன்றை பிடித்துக் கொண்டு எழுந்திருங்கள். அவ்வாறு எழுந்தால் மூட்டுக்கு அதிக பளு ஏற்படாது.

13. நடக்கும்போதும், விளையாடும்போதும், Knee cap பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் அது தேவையில்லை.

14. மூட்டு வலி இருக்கும் போது ‘வெஸ்டர்ன் டாய்லெட்’டைப் பயன்படுத்துவது நல்லது.

15. மூட்டுவலியை உணரும்போது மாடிப்படிகளில் ஏறி இறங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

16. தூங்கும்போது கால்களை மடக்காமல் மூட்டுக்களை நீட்டிக் கொள்ளுங்கள்.

17. இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகிறவர்கள் மூட்டு வலி இருக்கும்போது ‘கிக் ஸ்டார்ட்’ செய்வதை தவிர்க்கவும்.

18. கார் ஓட்டுபவர்கள் தொடர்ச்சியாக அதிக நேரம் கார் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

19. புகைப்பிடித்தல், மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடுங்கள்.

20. டாக்டரின் ஆலோசனை பெற்று எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.

21. உணவில் காய்கறி, பழம், கீரைகளை அதிகம் சேருங்கள்.

22. டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டும் சாப்பிடுங்கள்.

23. சுயமாக நடக்க முடியாவிட்டால், ஊன்றுகோல் பயன்படுத்துங்கள்.

24. போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள்.

25. வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.

மூட்டு வலி உள்ளவர்களுக்குத் தேவையான உணவுகள்மூட்டு வலி இருப்பவர்கள் தங்கள் உடல் எடையில் அதிக கவனம் கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரித்தால் மூட்டு வலியும் அதிகரிக்கும். அவர்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.

* உயர்ந்த வெப்பநிலையில் வறுத்த, பொரித்த, சுட்ட உணவுகளில் வீக்கத்தை உருவாக்கும் ரசாயனத்தன்மை தோன்றும். அவைகளை சாப்பிட்டால் மூட்டு வலி அதிகமாகும். ஆகவே, அத்தகைய உணவுகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்.

* மூட்டு வலி இருப்பவர்களின் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். தினமும் குறைந்தது 12 கப் தண்ணீராவது பருக வேண்டும்.

* மூட்டு வலி இருப்பவர்களின் உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் சத்து மிக அவசியம். அது பழங்கள், காய்கறி, கீரை வகைகளில் இருக்கிறது. கூடவே உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாதுச் சத்துக்களும் அதில் இருக்கின்றன. உடலில் உள்ள வீக்கங்களை குணப்படுத்தும் சக்தி ஆன்டி ஆக்சிடென்டுக்கு இருக்கிறது.

* சிறுபயறு, கடலை, பெரும்பயறு போன்றவைகளை முளைவிட வைத்து சாப்பிடலாம்.

* நெல்லிக்காய், ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி, திராட்சை பழம் போன்றவைகளில் வைட்டமின்-சி சத்துள்ளது. இவைகளை சாப்பிட்டால் எலும்புகளும், தசையும் பலப்படும். உடலின் பலத்திற்கு கொலாஜன் மற்றும் கனெக்டிவ் திசு உற்பத்தி அவசியமாகும். வைட்டமின்-சி சத்துள்ள உணவுகள் அதற்கும் துணை புரியும்.

* எலும்பு பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் Glycosaminoglycans என்ற ரசாயன பதார்த்தம் மிக அதிக அளவில் உள்ளது. வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பான பொருள் இதுதான். எலும்பு பலத்தை உருவாக்கும்.

இந்த ரசாயன பதார்த்தம் செம்பருத்தி பூவிலும் இருக்கிறது. வெண்டைக்காயை கூட்டு, குழம்பு, சூப் செய்து அடிக்கடி பருகுங்கள். செம்பருத்தி பூவில் ரசம் வைத்தும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். செம்பருத்தி பூ ரசம், மூட்டு வலியால் அவதிப்படுகிறவர்களுக்கு மிக நல்லது.

* மூட்டு தொந்தரவால் அவஸ்தைப்படுகிறவர்கள் ‘சூப்’ வகைகளை தினமும் இருவேளை பருகலாம். சிக்கன் சூப், முருங்கை இலை சூப் போன்றவை
சிறந்தது.

* கால்சியம் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, சிறுவகை மீன்கள், கொள்ளு, எள், கீரை வகைகளில் கால்சிய சத்து அதிகம் இருக்கிறது.

* இறால் போன்ற தோடு கொண்ட மீன் வகைகளை மூட்டு வலியுள்ளவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* பூண்டு மற்றும் வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது எலும்புகளை பலப்படுத்தும். அதற்கு அதில் இருக்கும் சல்பர் சத்து காரணமாகும்.

* சிறு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, கம்பு, எள் போன்ற தானியங்களில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மூட்டுகளின் வீக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அவை கீல்வாத வலியையும் குறைக்கும். வேகவைத்த பயறு
வகைகளை சாப்பிடுவதும் நல்லது.

* மீன்களில் இருக்கும் வைட்டமின்-டி சத்து எலும்பு பலத்திற்கு ஏற்றது. இதற்கு மத்தி மீன் சிறந்தது.

* பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவைகளுக்கு எலும்பு பலத்தை அதிகரிக்க உதவும்.

* புரதச்சத்து அதிகமுள்ள இறைச்சி வகைகளை அதிகம் உண்ண வேண்டும். அதிக புரதம், எலும்புகளில் ஏற்கனவே இருக்கும் கால்சியத்தை வெளியேற்றி எலும்புகளின் பலத்தை குறைத்து விடும். அதனால் இறைச்சி வகைகளை குறைந்த அளவில் மட்டும் சாப்பிடுங்கள்.

* நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

* அதிக அளவில் காபி, டீ பருகினால் எலும்பின் வலிமை குறையும்.

* சோடா மற்றும் குளிர்பானங்கள் பருகுவதை அடியோடு நிறுத்தி விடுங்கள். ஏன் என்றால் அதில் இருக்கும் பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளில் இருக்கும் கால்சியம் சத்தை உடலிலிருந்து வெளியேற்றிவிடும்.

( விசாரிப்போம்! )

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி
ஜெயேந்திரர் உடலுக்கு காலை 7 மணிவரை மக்கள் அஞ்சலி செலுத்தலாம்: சங்கர மடம் அறிவிப்பு


2018-03-01@ 01:03:38



சென்னை: உடல்நலக்குறைவால் உயிரிழந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் பூதவுடலுக்கு இன்று காலை 7 மணிவரை அஞ்சலி செலுத்தலாம் என காஞ்சி சங்கர மட ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர் தெரிவித்துள்ளார். இது குறித்து சங்கர மட நிர்வாகி சுந்தரேச அய்யர் தெரிவித்ததாவது: ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் காலை 7 மணி வரை சங்கர மடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் சன்னியாசிகள் நல்லடக்கம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளின்படி பூஜைகள் 11 மணிவரை நடைபெறும்.

அதன்பிறகு 11.30 மணியளவில் மகா பெரியவர் சந்திரசேகரேந்திரர் சமாதிக்கு இடது புறம் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றார். மேலும் இந்தச் சடங்குகள் அனைத்தும் முடிந்தபிறகு அடுத்த மடாதிபதி தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மக்களை தேடி வந்த சங்கராச்சாரியார்:
குடியரசு தலைவர் முதல் பணக்காரர்கள்.,விஐபிகள்தான் சங்கர மடத்தை தேடி வருவது வாடிக்கை. சங்கராச்சாரியார்கள் முக்கிய கோயில்கள், நிகழ்வுகளுக்காக வெளியில் செல்வதும் நடக்கும். சந்திரசேகரர் வரை அதுமட்டுமே வழக்கம். ஆனால் சங்கராச்சாரியர் ஒருவர் மக்களை தேடி வந்தார் என்றால் அது ஜெயந்திரர் மட்டும்தான். சந்திரசேகரர் மூப்பு காரணாக மட பொறுப்புகளை ஜெயந்திரர் கவனிக்க ஆரம்பித்ததும் அந்த மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன.

அதுமட்டுமல்லாமல், சாதியை கருத்தில் கொள்ளாமல் எளிய மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள கோயில் குடமுழுக்கு, விழாக்களிலும் ஜெயந்திரர் பங்கேற்றார். அதற்கான நிதி உதவிகளையும் சங்கரம் மடம் செய்திருக்கிறது.அதுமட்டுமின்றி ‘ஜன கல்யாண் ஜன ஜாக்ரன்’ அமைப்பை தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்துள்ளார். ஒரு காலத்தில் இந்த அமைப்பின் மூலம் வாங்கிய ஆட்டோக்கள் தான் காஞ்சிபுரத்தில் அதிக அளவில் ஓடிக் கொண்டிருந்தன.


ஏப்ரல்-15 ம் தேதியுடன் ஏர்செல் நெட்வொர்க் மூடல்: டிராய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2018-02-28@  21:30:10

மும்பை: ஏப்ரல்-15 ம் தேதியுடன் ஏர்செல் நெட்வொர்க்கை மூட உள்ளதாக டிராய் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் MNP மூலம் வேறு நெட்வொர்க்கிற்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.500 கொடுத்தால் உடனே ஆதார் புகைப்படம்

Added : மார் 01, 2018 01:42

குரோம்பேட்டை: பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில், புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்கி, ஆதார் புகைப்படம் எடுப்பதால், முறையாக விண்ணப்பிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தினுள், ஆதார் புகைப்படம் எடுக்கப்படுகிறது. அங்கு, புதிதாக புகைப்படம் எடுப்பது, முகவரி மாற்றம், சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு புகைப்படம் எடுத்தல் ஆகிய பணிகள் நடக்கின்றன.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், அவர்களுக்கு ஒரு தேதி கொடுக்கப்படும். அந்த தேதியில் சென்று, புகைப்படம் எடுத்து கொள்ளலாம். தற்போது, குழந்தைகளுக்கு புகைப்படம் எடுக்க அதிகமானோர் வருகின்றனர்.நகராட்சி அலுவலகத்தில் சுற்றித்திரியும் புரோக்கர்கள், லஞ்சம் வாங்கிக்கொண்டு, உடனடியாக புகைப்படம் எடுக்க, ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.பெயர் உள்ளிட்ட மாற்றங்களுக்கு, 250 ரூபாய், புதியதாக புகைப்படம் எடுக்க, 400 முதல், 500 ரூபாய் வரை, லஞ்சம் வாங்கும் புரோக்கர்கள், கவுன்டர்களில் உள்ள ஊழியர்களுக்கு, ஒரு தொகையை கொடுத்து, உடனடியாக வேலையை முடிக்க ஏற்பாடு செய்கின்றனர்.நீண்ட துாரத்தில் இருந்து வருபவர்கள், வசதி படைத்தவர்கள், பணத்தை கொடுத்து, காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். இதனால், முறையாக விண்ணப்பிக்கும் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.காலையில் இருந்து மாலை வரை, அங்கேயே காத்திருக்க வேண்டியுள்ளது. புரோக்கர்களின் அட்டகாசத்தை பார்த்தும், கேள்வி கேட்க முடியாமல், பலர், பல மணி நேரம் காத்திருந்து, புகைப்படம் எடுக்கின்றனர்.புரோக்கர்களும், அவர்களுக்கு உடந்தையான ஊழியர்களும் இருக்கும் வரை, இதை கட்டுப்படுத்த முடியாது. எனவே, உயர் அதிகாரிகள் இவ்விஷயத்தில், கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் : வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

Added : மார் 01, 2018 01:30

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனத்திற்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக (டி.எம்.இ.,) தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். எட்வின் ஜோவை நியமித்த அரசாணையை தனி நீதிபதி ரத்து செய்தார். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.நீதிபதிகள், 'எட்வின் ஜோவை டி.எம்.இ.,யாக நியமித்த அரசாணை மற்றும் ரேவதியை டி.எம்.இ.,யாக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்கிறோம். தகுதி, திறமை, பணி மூப்பின்படி மறு பரிசீலனை செய்து, டி.எம்.இ.,யை அரசு நியமிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். ரேவதி தாக்கல் செய்த மனுவில், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர்ராதாகிருஷ்ணன் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.மீண்டும் டி.எம்.இ., யாக எட்வின் ஜோ நியமிக்கப்பட்டதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

நேற்று ரேவதிக்கு பணி நிறைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி.எஸ்.இ., விதிகளுக்கு டில்லி ஐகோர்ட் தடை

Added : மார் 01, 2018 01:19

புதுடில்லி: 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான தகுதி, விதிகள் குறித்து, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு, டில்லி உயர் நீதிமன்றம், இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.'நீட்' தேர்வு எழுத, அதிபட்ச வயது வரம்பு, பொது பிரிவினருக்கு, 25; எஸ்.சி., - எஸ்.டி., உள்ளிட்ட பிரிவினருக்கு, 30 என, சி.பி.எஸ்.இ., சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது. மேலும், திறந்தநிலை பள்ளியில் படித்தோர், உயிரியலை கூடுதல் பாடமாக படித்தோர், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் 2 தேர்வை முடிக்க, இரு ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் எடுத்தோர், பள்ளியில் சேராமல் தனியாக படித்தோர், 'நீட்' தேர்வு எழுத தகுதி அற்றவர் என, அறிவிக்கப்பட்டது.வரும் கல்வியாண்டில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, 9ம் தேதி கடைசி நாள்.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வகுத்த விதிகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சஞ்சீவ் கன்னா, சந்தர்சேகர் அடங்கிய அமர்வு, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிக்கைக்கு, இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மே 16ல் பிளஸ் 2 ரிசல்ட்

Added : மார் 01, 2018 01:39

தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது; ஏப்., 5ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், மே 16ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.தேர்வின் போது சோதனையிட, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவியரை, பறக்கும் படையில் உள்ள பெண் கண்காணிப்பாளர்கள் தான் சோதனையிட வேண்டும்.தேவையின்றி மாணவர்களை சந்தேகப்பட்டு, அவர்கள் தேர்வு எழுதும் நேரத்தை வீணாக்கி விடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளை கண்டறிந்தால், உடனே, அவர்களிடம் வாக்குமூலம் வாங்கி, உரிய ஆவணங்களுடன் தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

NEWS TODAY 2.5.2024