Saturday, October 27, 2018

வற்றவில்லை பாலியல் ஆறுகள்

By தி. இராசகோபாலன் | Published on : 27th October 2018 03:05 AM |

பாலியல் வன்முறைகள் இன்றைக்குப் போல் என்றைக்கும் பெருக்கெடுத்து ஓடியதில்லை எனலாம். தொடக்கப்பள்ளியில் கல்வியைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களில் சிலர், கலவியைச் சொல்லித் தரத் தொடங்கிவிட்டார்கள். அதனால் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் முகத்திரை கிழிக்கப்பட்டு மானபங்கப்பட்டு நிற்கின்றனர்.
பல்கலைக்கழகங்களில் பாலியல் வன்முறை ஓர் அங்கீகரிக்கப்பட்ட பாடமாகவே அரங்கேற்றப்படுகிறது. பேராசிரியர்களும் துணை வேந்தர்களும் கூச்சநாச்சம் இன்றி பந்தியில் அமர்வது, பாலியல் விருந்தில் மட்டுமே! 

கல்விக் கழகங்களில் பால பாடமாக இருக்கும் பாலியல் வன்முறையில் சிக்கிய குட்டி ஆடுகள்தாம் வெட்டப்படுகின்றனவே தவிர, ஓநாய்கள் இன்னும் ஓலமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அரசு அலுவலகங்கள், பலரும் நடமாடுகின்ற இடமாக இருப்பதால், பாலியல் வன்முறைகளுக்கு வாய்ப்புகள் குறைவு. மேலும், பெண்பாலரின் நோக்கம் அறியாமல் வழிசல் விடும் ஆடவர் திலகங்கள் உரிய அவமானங்களை வாலாட்டியவர்களிடமே பெற்று விடுவதால், பாலியல் வன்முறை அரசு அலுவலகங்களில் ஒரு கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கிறது எனலாம். அரசு ஊழியர்கள் வாகனங்களில் பயணிக்கும்போதுதான், அவர்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்தக்கூடிய சம்பவங்கள் நேருகின்றன.
கலைத்துறையிலே தொன்றுதொட்டுக் கலப்பு கலாசாரம் உண்டு என்றாலும், அக்காலத்தில் அது பெரிதுப்படுத்தப்படவில்லை. காரணம், இணக்கம் உள்ளவர்களே கலப்பு கலாசாரத்தில் ஈடுபட்டதால், அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. பால் வியாபாரத்தில் தண்ணீர் கலப்பதை எவ்வாறு தடுக்க முடியாதோ, அது போல கலைத்துறையிலும் கலப்பு கலாசாரத்தைத் தவிர்க்க முடியாது. 

பாலியல் வன்முறை இன்று மத பீடங்களில் பாம்புபோல் படமெடுத்து ஆடுகின்றது. மத பீடத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை, மடாலயங்கள் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களைப் பாதுகாப்பதற்கே பெரிதும் முயலுகின்றன. அதனால் பாவமன்னிப்பு வேண்டி வருபவர்களே, பாவ மன்னிப்புத் தருகின்றவர்களுக்குப் பாவமன்னிப்புத் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. மதபீடங்களின் துவராடைகள் சில அப்பாவி ஆடுகளின் கழுத்தை நெரிப்பதால், பாலியல் வன்முறை, அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறது.
பாலியல் வன்முறை மற்ற துறைகளைக் காட்டிலும், அரசியல் கூடாரங்களிலும், அதிகார மையங்களிலும் ஏகோபித்து நடந்து கொண்டிருக்கிறது. சட்டம் அவர்களுடைய கரங்களிலே இருக்கின்ற காரணத்தால், பாலியல் வன்கொடுமைகளில் உச்சத்திற்கே அவர்களால் செல்ல முடிகிறது. உதாரணத்திற்கு 1970-களில் உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் முதல்வராக இருந்த ஒருவருடைய லீலையைச் சொல்லலாம் (மறைந்து விட்ட அவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை).

இரண்டு மாநிலங்களில் முதல்வராக இருந்த அவர், பின்னர் ஆந்திர மாநில ஆளுநரானபோதும் தம்முடைய பாலியல் பரிபாலனத்தை நிறுத்தவில்லை. அதனால், அவர் மேலதிகாரத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடைசியாக அவரிடத்து மரபணு சோதனைகளை நிகழ்த்தி, மருத்துவர்கள் நிரூபித்த பிறகுதான், பாவத்தின் சம்பளங்களைப் பெற்றுக் கொண்டார்.
காமம் வேட்டை நாய் போன்றது. அதற்குரிய இரையை அது பற்றுகின்ற வரையில் அதன் வேகம் அடங்காது. எனவேதான், தேசியக்கவி பாரதியார், "மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு' எனப் பாடினார். ரோம சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பதற்கு ஜுலியஸ் சீசர், ஆண்டனி, லிபிடஸ் ஆகிய மூன்று பெரும் தளபதிகளும் மூன்று திசைகளை நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால், கிளியோபாட்ராவின் மேல் கொண்ட மோகத்தால் மூன்று பேரும், கிளியோபாட்ராவின் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள். அதனை ஷேக்ஸ்பியர், "ரோம சாம்ராஜ்ஜியத்தின் மூன்று பெரும் தூண்களாகிய மூவரும் ஒரு பெண்ணின் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்' என எழுதினார்.

1960-களில் இங்கிலாந்தில் ஹெரால்ட் மாக்மில்லன் என்பவர் பிரதமராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த புரொபியூமா, உலகப் பேரழகியும் உளவாளியுமான ஹெலன் கீலரிடம் கள்ளக்காதல் கொண்டிருந்தார். கீலர், வல்லரசுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களோடு உறவாடி, அந்த நாட்டுப் பாதுகாப்பு இரகசியங்களை உளவாய்ந்து, அடுத்த நாட்டுக்குச் சொல்லக்கூடியவள். புரொபியூமா - கீலர் பாலியல் உறவுகள், இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சிகளுக்குத் தெரிய வரவே, அவர்கள் அதனைக் காட்டி ஹெரால்ட் மாக்மில்லனின் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். 

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் உடைய இராவணன் ஒரு "கற்பின் கனலி'யின்மேல் கொண்ட காமத்தால், களப்பட்டான். அதனால், இறந்து கிடக்கின்ற இராவணனைப் பார்த்து, அவனுடைய இளவல் வீடணன், "உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தா' என ஏசினான். இன்னோர் இளவலான கும்பகருணனும், "சிட்டர் செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்' என இராவணனை எச்சரித்தான். மற்றைய குற்றங்கள் ஒருவனுடைய நிகழ்காலப் பெருமைகளை மட்டுந்தான் அழிக்கும். ஆனால், காமம் ஒருவன் வாழ்நாள் முழுமையும் சேர்த்து வைத்த புகழையும் பெருமையையும் கொன்றுவிடும்.காமத்தின் கொடுமையையும் சீரழிவையும், சீத்தலைச் சாத்தனார் இயற்றிய "மணிமேகலை'யைப்போல், வேறு எந்த நூலும் எடுத்துச் சொல்லவில்லை எனலாம். சங்க காலத்திலும், காப்பிய காலத்திலும் பரத்தையர் ஒழுக்கத்திலும் சிற்றின்பத்திலும் மூழ்கிச் சீரழிந்த சமுதாயத்தைக் கண்டிப்பதற்காகவே, சாத்தனார் மாதவியையும் மணிமேகலையையும் துறவி ஆக்குகின்றார். ஆடவர் சமுதாயத்தின்மேல் கொண்ட ஆத்திரத்தின் காரணமாகவே இருவரையும் பெளத்த துறவிகள் ஆக்குகிறார். மேலும், இல்லற வாழ்வியலையே "தீத்தொழில்' எனப் பேசவும் செய்கிறார், சீத்தலைச் சாத்தனார்.

ஆடவர் கண்டால் அகலமுடியாத பேரழகையுடைய மணிமேகலையின் மேல் மையல் கொள்ளுகின்றான், அரசிளங்குமாரனாகிய உதயகுமாரன். அவள் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து செல்லுகின்றான். பல வழிகளில் அவனிடமிருந்து தப்பிக்கின்றாள் மணிமேகலை. அவனோ "மணந்தால் மணிமேகலை; அன்றேல் மரணதேவி' எனக் கூறிக்கொண்டு ஒருதலைக் காதலினாலேயே வெட்டுப்பட்டுச் சாகின்றான். 

மணிமேகலை துறவியானாலும், உதயகுமாரனுடைய நேசத்தை எண்ணியபொழுது, அவன் மேல் மணிமேகலைக்கு ஆசை பிறக்கின்றது. துறவியான பிறகும் உதயகுமாரன் மேல் மணிமேகலையின் நெஞ்சம் அலைபாய்வதை வைத்துச் சாத்தனார், "இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை' என்பார். இது ஒவ்வொரு ஆடவருடைய நெஞ்சிலும் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வரி ஆகும்.
இன்றைக்குப் பாலாறாகப் பாலியல் வன்முறைகள் பெருக்கெடுத்ததற்கு, நம்மிடையே இராமகிருஷ்ணப் பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிகத் தலைவர்கள் இல்லாமல் போனமையும் ஒரு காரணமாகும். பரமஹம்சர் திருமணத்திற்குப் பிறகு சாரதாமணி அம்மையாரைப் பராசக்தியின் அம்சமாகவே பார்க்கத் தொடங்கியதுடன், அவரை வழிபடவும் ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் பேச்சில் விருப்புற்று வந்த நிவேதிதாவை, அவர் ஒரு சகோதரியாகவே பார்க்கத் தொடங்கினார். அமெரிக்கா சென்றபோதும் அங்குள்ள பெண்களை "சகோதரிகளே' என்றுதான் அழைத்தார்.

கல்விக்கூடங்கள் ஒரு காலத்தில், கலைக்கூடங்களாக இருந்தன. ஆசிரியர்களுக்கு ஒரு சுதர்மம் இருந்தது. இப்பொழுது ஊதியத்தை எண்ணியே ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்கள் அதிகமாகிப் போனதால், கல்விக்கூடங்கள் சர்க்கஸ் கொட்டகைகள் ஆகிவிட்டன.
காந்தியடிகள், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தியாகவுள்ளம் கொண்ட தலைவர்கள் இருந்ததால், இந்தத் தேசம் புண்ணிய பூமி ஆயிற்று. "இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தால்தான் திருமணம்' என வைராக்கியம் கொண்ட தலைவர்கள் பலர் வாழ்ந்தார்கள்.

இந்திய நாட்டில் பாலியல் வன்முறைகள் ஒழிய வேண்டுமென்றால், குடும்பங்கள் கோயில்களாக மாற வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.கல்வி நிலையங்கள் கெளரவர்களின் கூடாரமாக மாறாமல், பாண்டவர்களின் புண்ணிய பூமியாக மாற வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் பாலியல் வியாபாரிகளின் ஆதிக்கத்திற்குக் கீழ் வராமல், இராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும்.
பாலாறு வறண்டு கிடக்க, பாலியல் ஆறுகள் பெருகி ஓடும் அவலத்துக்கு யார் அணை கட்டுவது? சந்தைப் பொருளாதாரமும் நுகர்வோர் கலாசாரமும் நமது அடிப்படைப் பண்பாட்டு விழுமியங்களை அகற்றிவிட்டு, சிம்மாசனம் ஏறிவிட்டிருக்கின்றன. மேலை நாட்டு கலாசார மோகத்திலும் நாகரிகத்திலும் மயங்க முற்பட்டிருக்கிறோம். கண்களை விற்று சித்திரம் வாங்கி மகிழும் மனநிலையில் மாற்றம் ஏற்படாதவரை, வற்றிவிடாது பாலியல் ஆறுகள்.

கட்டுரையாளர்:பேராசிரியர் (ஓய்வு).
1 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அமல்

Added : அக் 26, 2018 23:36

ஒரு லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, மின் வாரியம், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திஉள்ளது.மின் வாரியத்தில், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் என, 86 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஓய்வுபெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. மாதம் ரூ.180நிரந்தர ஊழியர்களுக்கு, மின் வாரியம் சார்பில், மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது. அத்திட்டம், ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர், ஐக்கிய சங்க பொதுச்செயலர், சுப்ரமணியன் கூறியதாவது:மருத்துவ காப்பீட்டிற்காக, பணியில் உள்ள ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து, மாதம், 180 ரூபாயை, நிர்வாகம் பிடித்தம் செய்கிறது. இதன் வாயிலாக, ஊழியர்கள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 4 லட்சம் ரூபாய் வரை, மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீடு பெறலாம்.சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு, 7.50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். தமிழக அரசு, பணியில் உள்ள ஊழியர்களை போல், ஓய்வூதியதாரர்களுக்கும், சமீபத்தில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியது.பிடித்தம்அதை ஏற்று, மின் வாரியமும், தற்போது, ஓய்வூதியதாரர்களுக்கு, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இது, நவ., முதல் அமலுக்கு வரும். இதற்காக, ஓய்வூதியத்தில், மாதம், 380 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நமது நிருபர் -


தீபாவளி விடுமுறை எத்தனை நாள்: ஆசிரியர்கள் தவிப்பு

Added : அக் 26, 2018 23:13

தீபாவளி பண்டிகை, வரும், 6ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பள்ளி விடுமுறை எத்தனை நாட்கள் என, தெரியாமல், அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும், வரும், 6ம் தேதி, செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்று ஒரு நாள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் திங்கள் கிழமையும் விடுமுறை கிடைத்தால், சனிக்கிழமை முதல், செவ்வாய் கிழமை வரை, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், தீபாவளிக்கு தொடர் விடுமுறை எடுத்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அவர்களுக்கு, செவ்வாய் கிழமை மட்டுமே விடுமுறை என்பதால், ஊருக்கு செல்வதா, வேண்டாமா என, குழப்பத்தில் தவிக்கின்றனர்.திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க, தலைமை ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 'இவ்வாறு அறிவித்தால், ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறைக்கு ஈடாக, சனிக் கிழமைகளில் அரைநாள் வகுப்பு நடத்தி, சமப்படுத்தி கொள்ளலாம்' என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.இதற்கு, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்து, திடீர் விடுமுறைக்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, தீபாவளிக்கு விடுமுறையை நீட்டித்தால், பாடங்கள் நடத்துவது தாமதமாகும்.சில ஆசிரியர்கள் மட்டும், விடுமுறை எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். மாணவர்களோ, பெற்றோரோ, பள்ளியை நடத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதையே அதிகம் விரும்புகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
நவ., 1 முதல், 3 நாட்களுக்கு தொடர் மழை

Added : அக் 27, 2018 04:00



'தமிழகம், புதுச்சேரியில், நவம்பர், 1 முதல், மூன்று நாட்கள் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது' என, தனியார் வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

பருவமழை தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவக்காற்று துவங்கியுள்ளது. இன்னும் நான்கு நாட்களில், இந்த காற்று வலுப்பெற்று, மழையாக மாறும். வரும், 29ல், வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது, வட மேற்கில் நகர்ந்து, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், 30ம் தேதி முதல், கனமழையாக பெய்யும். இந்த மழை, வடகிழக்கு மாநிலங்களில் ஓயும் நிலையில், தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில், தொடர் மழை பெய்யும். வரும், 31ம் தேதி வரை, தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை இல்லை. இவ்வாறு, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதேநேரத்தில், 'நவம்பர் முதல் வாரத்தில் மிதமாகவும், அதன்பின், இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யும்' என, வானிலை மையத்தின் நீண்ட கால கணிப்பில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில், தனியார் வானிலை ஆய்வு அமைப்பினர் வெளியிட்ட கணிப்பில், 'வரும், 1ம் தேதி அதிகாலை முதல், 3ம் தேதி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், ராமேஸ்வரத்தில், 7 செ.மீ., மழை பதிவானது.

- நமது நிருபர் -
கெடு!

சி.பி.ஐ., இயக்குனர் மீதான
விசாரணையை 2 வாரத்தில் முடியுங்க
லஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு உத்தரவு


புதுடில்லி,:கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட, சி.பி.ஐ., இயக்குனர், அலோக் வர்மா மீதான புகார்கள் குறித்து, இரண்டு வாரங்களில், சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் கண் காணிப்பு ஆணைம் விசாரணை நடத்த வேண்டும்; தற்காலிக இயக்குனராக நியமிக் கப்பட்டுள்ள, நாகேஷ்வர ராவ், கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



முக்கிய புலனாய்வு வழக்குகளை விசாரித்து வரும், சி.பி.ஐ., அமைப்பின் இயக்குனராக, அலோக் வர்மா பதவி வகித்து வந்தார். இவருக்கு அடுத்து, இரண்டாம் நிலையில், சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக, ராகேஷ் அஸ்தானா பதவி வகித்தார்.டில்லியைச் சேர்ந்த, மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர், மொயின் குரேஷி தொடர்பான வழக்கை, அஸ்தானா உத்தரவுப்படி, சி.பி.ஐ.,யில், டி.எஸ்.பி., யாக உள்ள தேவேந்திர குமார் விசாரித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தொழில் அதிபரான, சதீஷ் ஸனாவிடம், சிறப்பு இயக்குனர் அஸ்தானா, 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.லஞ்சம் வாங்கினார் இது குறித்து, அஸ்தானா கூறுகையில், 'லஞ்சம் தரப்பட்டது உண்மை; அந்த பணத்தை, அலோக் வர்மா தான் வாங்கினார்' என, குற்றம் சாட்டி னார்.அதிகார போட்டியால், அலோக் வர்மாவும், அஸ்தானாவும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, அமைச்சரவையின் நியமன குழு, சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டது. சி.பி.ஐ., தற்காலிக இயக்குனராக, நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், அலோக் வர்மா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில்

ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, ''அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா மீதான புகார்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடத்த போதிய அவகாசம் தரப்பட வேண்டும்,'' என்றார்.

மீறுவது முறையாகுமா?

அலோக் வர்மா சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பாலி எஸ்.நாரிமன், கூறியதாவது:சி.பி.ஐ., இயக்குனர் பதவியில், அலோக் வர்மா இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய தேர்வு குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதை மீறுவது முறையாகுமா?இவ்வாறு அவர் கூறினார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அலோக் வர்மா மீது, மத்திய அமைச்சரவை செயலர், ஆக., 24ல், புகார்கள் தெரிவித்து, குறிப்பு எழுதியுள்ளார். அது தொடர்பாக, சி.வி.சி., நடத்தும் விசாரணையை, உச்ச நீதிமன்றத் தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஏ.கே.பட்நாயக் கண் காணிப்பார். இந்த விசாரணையை, இரு வாரங் களில் முடிக்க வேண்டும். சி.பி.ஐ., தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஷ்வர ராவ், கொள்கை முடிவு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கக் கூடாது.

அவர், சி.பி.ஐ.,யில் வழக்கமான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.அக்., 23 முதல், இன்று வரை, நாகேஷ்வர ராவால் எடுக்கப்பட்ட, பணி இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து முடிவுகள் குறித்த பட்டியல், மூடிய உறையில், அடுத்த விசாரணை நடக்கும் நாளான, நவ., 12ல், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பின், வழக்கு குறித்து தக்க உத்தரவு பிறப்பிக்கப் படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற நடவடிக்கையால் உண்மை, நிலை நாட்டப்பட்டு உள்ளது. பின்வாசல் வழியாக, சி.பி.ஐ.,யை கைப்பற்ற முயன்ற, மோடி அரசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சி.பி.ஐ.,யின் சுதந்திரத்தில் தலையிட முயன்றோர் முகத்தில் பலமான அடி விழுந்துள்ளது. மோடி அரசின் கைப்பொம்மையாக, சி.வி.சி., செயல்பட முடியாது.
ரந்தீப்சுர்ஜேவாலாகாங்., செய்தி தொடர்பாளர்'

சி.பி.ஐ.,யின் புகழை காப்பாற்ற நடவடிக்கை'

சி.பி.ஐ., விவகாரம் தொடர்பாக, மத்திய நிதிய மைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது:சி.பி.ஐ., அமைப்பில்,

சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்களால், அதன் நம்பகத்தன்மைக்குஇழுக்கு ஏற்பட்டுள்ளது. தனியொரு நபருக்காக, ஆதரவாகவோ, எதிராகவோ அரசு செயல்படாது. சி.பி.ஐ.,க்கு உள்ள நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதில் தான், அரசு அக்கறை காட்டுகிறது.

சி.வி.சி., அளித்த பரிந்துரை அடிப்படையில், சி.பி.ஐ., இயக்குனர்கள் மீதான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.அலோக் வர்மா மீதான புகார்கள் குறித்து, இரு வாரங்களில், சி.வி.சி., விசாரணையை முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, மிக நல்ல முடிவு.இவ்வாறு அவர் கூறினார்.

டில்லியில் போராட்டம்:

காங்., தலைவர் கைது

சி.பி.ஐ., இயக்குனராக பதவி வகித்த அலோக் வர்மாவிடம் இருந்து அதிகாரங்கள் பறிக்கப் பட்டதை கண்டித்து, டில்லியில் நேற்று, சி.பி.ஐ., தலைமையகம் அருகே, காங்., தலைவர் ராகுல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரை, போலீசார் கைது செய்து, வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது:

ரபேல் விமான ஒப்பந்தம் வாயிலாக கிடைத்த, 30 ஆயிரம் கோடி ரூபாயை, அனில் அம்பானியின் பாக்கெட்டில், பிரதமர், 'டிபாசிட்' செய்துள்ளார்.இதிலிருந்து அவர் தப்பியோட லாம். ஆனால், உண்மையை மறைக்க முடியாது. சி.பி.ஐ., இயக்குனரை நீக்குவதால் எதுவும் ஆகிவிடாது. உண்மை ஒரு நாள் கட்டாயம் வெளிவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

ராகுலை, லோதி ரோடில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு சிறிது நேரம் அமர வைத்திருந்தனர்; பின், அவரை விடுவித்தனர். இதுபோல், நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகங்கள் முன், காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.
'18 பேரை காவு கொடுத்து சுயேச்சையான தினகரன்'

Added : அக் 27, 2018 01:50

சென்னை, ''ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை காவு கொடுத்து விட்டு, தினகரன், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாகி விட்டார்,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, உறுப்பினராக இல்லாத ஒருவர், தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள, தன்னை அதிகார வளையத்திற்குள் கொண்டு வர செயல்பட்டார். தமிழகத்தின் எந்த மூலையிலும், இரட்டை இலை சின்னத்தில், ஓட்டு கேட்காதவர், தினகரன். அவர் பேச்சை கேட்டதால், எதை இழக்கக் கூடாதோ, அதை இழந்து, 18 பேரும் துன்பத்தில் இருக்கின்றனர்.தோற்பது அனுபவம் என்கிறார். ஏனெனில், அவருக்கு எந்த இழப்பும் கிடையாது. 18 எம்.எல்.ஏ.,க்களை காவு கொடுத்துவிட்டு, அவர், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாகி உள்ளார். அவர், இவர்களை காப்பாற்றுவாரா; இழந்த பதவியை பெற்றுத் தருவாரா?தற்போது, தினகரன் அணியில் குழப்பம் வந்துள்ளது. 'நடுத்தெருவில் நிறுத்தி விட்டீர்களே; இது நியாயமா' என, பதவி இழந்தவர்கள் கேள்வி எழுப்புவதால், பதில் கூற முடியாமல், தினகரன் திணறி வருகிறார். துன்பம் வந்தாலும், சிரிப்பது போல் காட்டிக் கொள்ளும், அவர் வாழ்க்கை சிரிப்பாய் போய் விட்டது.தினகரனிடம் இருப்போர், அ.தி.மு.க., வர நினைத்தால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு, உதயகுமார் கூறினார்.
சென்னை: தீபாவளிக்கு ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்

Added : அக் 26, 2018 19:32




சென்னை: தீபாவளி நெரிசலை தவிர்க்கும விதமாக சென்னையில் இருந்து ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து கும்பகோணம் ,தஞ்சை மற்றும் அதை தாண்டிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து திருச்சி வேளாங்கண்ணி, மதுரை நெல்லை, செங்கோட்டை, பண்ருட்டி ,விழுப்புரம் , சேலம், கோவை, பெங்களூரு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படுகிறது.

பூந்தமல்லி பஸ்நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் ஆரணி, ஆற்காடு வேலூர், தருமபுரி ,ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. கே.கே.நகர் பணி மனையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

ஆம்னி பஸ்கள்

கோயம்பேடு மார்க்கெட் E சாலையில் இருந்து இயக்கப்படும். மதுரவாயல் பறவழிச்சாலை, 100 அடி சாலையில் இருந்து வடபழனி நோக்கி செல்ல ஆம்னி பஸ்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...