Wednesday, January 7, 2015

கெளரவம் மிக்க கருப்பு அங்கி! By கோமல் அன்பரசன்

Dinamani

ஒருவர் என்னதான் வீராவேசமாகப் பேசுபவர் என்றாலும் நீதிமன்றம் என்றால் அவருக்கு பயம் வருகிறது. நீதிபதி என்றால் மரியாதை வருகிறது. யாராக இருந்தாலும் நீதிமன்றம் ஆணையிட்டுவிட்டால் அவர் கூண்டில் ஏறித்தான் ஆக வேண்டும். இன்றைக்கு அரசியலால் அனைத்தும் மலினமாகிவிட்டாலும்கூட, நீதித்துறைக்கென்று எஞ்சி இருக்கும் கெளரவம் இது.

ஆசிரியப் பணி, மருத்துவப் பணி இவற்றைப்போல புனிதத் தொழில் (நோபல் புரபொஷன்) பட்டியலில் இருந்து வழக்குரைஞர் பணி சற்றுக் கீழிறங்கியிருந்தாலும் அதற்கான மரியாதை இன்னமும் குறைந்திடவில்லை. நம்மோடு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற கறுப்பு அங்கிக்காரர்கள் பலரே இத்தகையப் பெருமைக்கும் சிறப்புக்கும் காரணகர்த்தாக்களாக திகழ்ந்திருக்கிறார்கள்; திகழ்கிறார்கள் என்பதே உண்மை.

"சட்டம் ஒரு இருட்டறை - அதில் வக்கீலின் வாதம் ஓரு விளக்கு' என்றார் அறிஞர் அண்ணா. இருட்டை அகற்றி ஒளியேற்றிய வழக்குரைஞர் ஒவ்வொருவரின் வாழ்விலும் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் ஓராயிரம் செய்திகள் இருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

நீதிமன்றத்திற்குள் அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றதும், அவற்றில் சட்டப் புத்தகங்களில்கூட இடம்பெறாத ஆயிரமாயிரம் நுணுக்கங்கள் இடம்பெற்றதும் சரித்திரத்தின் பக்கங்களில் இன்னும் படபடத்துக் கொண்டிருக்கின்றன. சில வழக்குரைஞர்கள் தங்களின் சட்டத் திறமையின் மூலம் பல நேரங்களில் போலீஸ்காரர்களையே நடுங்க வைத்திருக்கிறார்கள்.

அன்றைக்கு வழக்குரைஞர் படிப்பு என்பது ஒரு பெரிய கனவு. வழக்குரைஞர் தொழில் என்பது பெரும் கெளரவம். காலையில் பார் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு அன்று மாலையே தனி அலுவலகம் திறக்கத் துடிக்காமல், சீனியர் - ஜூனியர் உறவில் உளப்பூர்வமாக மகிழ்ந்து, அனுபவங்களைப் பெற்று மனம் நெகிழ வைத்த குருகுல வாசத்தால் வழக்குரைஞர் தொழிலில் வென்றவர்கள் ஏராளம். இதைப்போலவே, தனது ஜூனியர்களை தன் சொந்தப் பிள்ளைகளைப் போல நினைத்து அவர்களை வளர்த்துவிட்ட ஜாம்பவான்கள் ஏராளமானோர்.

வெள்ளைக்காரர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், வழக்குரைஞர் என்ற பெயரையும் கெளரவத்தையும் எட்டிப்பிடிக்க நம்மவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தெருவிளக்கின் வெளிச்சத்திலேயே படித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி ஆன முத்துசாமி ஐயர், அந்த இடத்தைப் பிடிக்க எத்தனை இன்னல்களை எதிர்கொண்டார் என்பது தெரியுமா?

இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெண்பளிங்கு கல்லில் சிலையாக இருக்கும் அவரது அற்புத வாழ்வைப் பற்றி, கருப்பு அங்கி அணிந்தவர்கள் மட்டுமல்ல, அணியாதவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளைக்கார பாரிஸ்டர்களுக்கு இந்திய வழக்குரைஞர்கள் என்றாலே இளக்காரமாக இருந்த நிலையை இவரைப் போன்றவர்கள்தான் மாற்றி இருக்கிறார்கள். நம் ஊர் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்திற்குள் காலில் செருப்புகூட அணிய முடியாத நிலை இருந்ததை இன்றைக்கு நம்மால் நம்ப முடிகிறதா?

திறமைகளை வளர்த்துக்கொண்டு, வெள்ளைக்காரனே வியக்கும் அளவுக்கு உயர்வதற்கு, அன்றைய வழக்குரைஞர்கள் போட்ட எதிர்நீச்சல், காலக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளைக்கார நீதிபதியே தனது குடும்பத்தோடு வந்து உட்கார்ந்து வாதங்களை கேட்குமளவுக்கு தனது ஆங்கிலப் பேச்சாற்றலால் வியக்க வைத்த சடகோபாச்சாரியார் போன்ற தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள் எத்தனையோ பேர்.

வழக்குரைஞர் தொழிலில் சம்பாதித்த பணத்தையெல்லாம் நமது இந்திய தேசத்தின் விடுதலைப் போராட்டத்திற்காக செலவழித்து, சொத்து இழந்து, சுகமிழந்து தியாகிகளாக, தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்ந்த வழக்குரைஞர்களின் பட்டியல் மிகப்பெரியது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியில் தொடங்கி, இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஏராளமான தலைவர்கள் வழக்குரைஞர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

காமராஜரை நமக்கு அடையாளம் காட்டிய தீரர் சத்தியமூர்த்தி, காந்தியடிகளால் "மகா புருஷர்' என்று அழைக்கப்பட்ட வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர், பின்னாளில் சட்ட அமைச்சராக இருந்த பாஷ்யம், தீண்டாமை ஒழிப்புக்காக தாழ்த்தப்பட்டோரின் கோயில் நுழைவை முன்னின்று நடத்திய மதுரை வைத்தியநாத ஐயர், திரைப்படங்களின் மூலம் விடுதலைத் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்த கே. சுப்பிரமணியம் இப்படியாக வழக்குரைஞர்கள் இல்லாவிட்டால் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டம் இத்தனை வீரியமாக நடந்திருக்காது என்று சொல்லுமளவுக்கு ஏராளமான வழக்குரைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அவ்வளவு ஏன், ஒரே ஒரு மேடைப்பேச்சு, விடுதலை உணர்ச்சியைத் தூண்டிவிட்டதாக கூறி, உலகத்திலேயே இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் ஒரு வழக்குரைஞர் என்பது இன்றைக்கும் நினைவு கூரப்பட வேண்டியதல்லவா? அவரைப் போலவே, தன்னை அழித்துக்கொண்டு தாய்நாட்டின் சுதந்திர காற்றைச் சுவாசிக்க, தியாக வடுக்களை சுமந்த வழக்குரைஞர்கள் எத்தனையோ பேர் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நமது சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் ஒரு வழக்குரைஞர்தானே? அவரது பிறந்த நாள்தானே இந்திய வழக்குரைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது!

அன்றைக்கு, அரசு வழக்குரைஞர் பதவி மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. தலைசிறந்த சட்ட நிபுணர்கள் எல்லாம் அரசு வழக்குரைஞர்களாக பணியாற்றி இருக்கிறார்கள். உணர்ச்சிகரமான இமானுவேல் சேகரன் கொலை வழக்கில், ஒருதலைச்சார்பாக செயல்படுவார் எனக்கூறி நீதிபதியையே மாற்றிய ஆளுமை வாய்ந்த அன்றைய அரசு வழக்குரைஞர் வி.எல். எதிராஜ் அத்தனை எளிதில் மறக்கப்படக்கூடியவரா?

அவரது வாதங்களும், வாழ்க்கை முறையும், என்றென்றும் பெயர் சொல்லும் சென்னை எதிராஜ் கல்லூரியும் மற்றும் ஏராளமான சமூகப்பணிகளும் சாதாரணமானவையா என்ன?

எதிராஜைப் போலவே, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு, தலைநகர் சென்னையில் எஸ்.ஐ.இ.டி என்கிற பெண்களுக்கான கல்வி நிறுவனத்தை உருவாக்கிய பஷீர் அகமது செய்யது அடிப்படையில் ஒரு வழக்குரைஞரல்லவா?

கல்லூரிகள் மட்டுமல்ல, இன்று விருட்சமாக வளர்ந்து கிளை பரப்பி நிற்கும் இந்தியன் வங்கியை உருவாக்கிய கிருஷ்ணஸ்வாமி ஐயரும், அவருக்குப் பிறகு அதனை வளர்த்தெடுத்த பாலசுப்ரமணிய ஐயரும் புகழ்க்கொடி நாட்டிய வழக்குரைஞர்களே. இந்த பாலசுப்ரமணிய ஐயர் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனே வந்திருக்காது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த நூற்றாண்டுவரை பெரும் பாவமாகக் கருதப்பட்ட விதவை மணத்திற்கு ஆதரவாகக் குரலெழுப்பி, அத்தகைய திருமணங்களை தானே முன்னின்று நடத்தியும் வைத்த சதாசிவ ஐயர் என்கிற வழக்குரைஞரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கலாமா?

திராவிட இயக்கங்களுக்கெல்லாம் முன்னோடி இயக்கமான நீதிக்கட்சிக்கே வழிகாட்டி இயக்கமான "பிராமணரல்லாதோர் சங்க'த்தை சென்னையில் உருவாக்கிய புருசோத்தம நாயுடுவும், சுப்ரமணியனும் வழக்குரைஞர்கள்தானே? சென்னை மாநகரிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வழக்குரைஞர்கள் ஏற்படுத்திய அமைப்புகளும் சங்கங்களும் சமூகப் பணிகளில் சிறப்பான முத்திரை பதித்ததை வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்திற்கு உயிரூட்டியதோடு, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்து கல்வித் துறைக்கும் பெரும் பங்காற்றிய பி.டி. ராஜன் ஒரு வழக்குரைஞர் என்பது கருப்பு அங்கிக்கு மேலும் கெளரவம் அல்லவா?

தமிழ் இலக்கியப் பரப்பிலும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு அதிகம். தமிழின் முதல் புதினத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை நீதித் துறைக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய தொண்டு மறக்கக்கூடியதா? மதத்தைக் கடந்து, மேடை தோறும் கம்பன் புகழ்பாடிய மு.மு. இஸ்மாயில் பற்றி இன்றைக்கெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாமே.

மேலை நாட்டு நூல்களுக்கு இணையாக புத்தகங்களை எழுதிய அனந்த நாராயணன் போன்று கருப்பு அங்கிகளில் உலா வந்த இலக்கியவாதிகள் பலர். பத்திரிகை உலகில் புகழ் மிக்கவர்களாக விளங்கிய சி.பா. ஆதித்தனாரும், கஸ்தூரிரங்க அய்யங்காரும் வழக்குரைஞர் தொழில் பார்த்தவர்களல்லவா?

சட்டத் தொழிலோடு சேர்த்து அரசியல், கலை, இசை என வழக்குரைஞர்களின் பங்களிப்பு இல்லாத துறை ஏது? சென்னையில் இசைத்துறையின் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும் "மியூசிக் அகாதெமி' தொடங்குவதற்கு பிள்ளையார் சுழி போட்ட கிருஷ்ணன் என்பவரும் ஒரு வழக்குரைஞர்தானே.

புகழ் மிக்க "சங்கீத நாடக அகாதெமி'யின் தலைவராக இருந்து பி.வி. ராஜமன்னார் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியரான ஏ.ராமசாமி முதலியார் வழக்குரைஞராக வென்றவர்தானே!

தன்னை நாடி வந்த நீதிபதி வாய்ப்புகளை ஒதுக்கி விட்டு வாழ்நாள் முழுக்க வழக்குரைஞராகவே இருந்த வி.வி. சீனிவாச அய்யங்கார், என்.டி. வானமாமலை போன்றோரின் கம்பீரமும் துணிவும் கருப்பு அங்கிக்குத் தனி அழகல்லவா? அதிலும் அசலான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மனித உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுக்க குரல் கொடுத்த வானமாமலையின் பணிகள் மறக்கக்கூடாதவை.

தவறு செய்தவர்களும் சரி, தவறாக வழக்கில் சிக்கியவர்களும் சரி வழக்குரைஞர்களை ஆபத் பாந்தவனாக நினைத்து அவர்கள் மீது முழு நம்பிக்கை வைக்கும் அளவுக்கு தகுதியுள்ளவர்களாக அந்தக் காலத்தில் வழக்குரைஞர்கள் இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினாலும் கூட அதிலும் ஒரு தொழில் நேர்மையைக் கடைப்பிடித்து கருப்பு அங்கிக்கு கெளரவம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒருமுறை முன்னூறு பவுன் நகைகளைக் கொண்டு வந்து வழக்குரைஞர் சுவாமிநாதன் காலடியில் வைத்தார் அந்த தஞ்சாவூர் பண்ணையார். "என்ன இது?' கம்பீரம் குறையாமல் கேட்டார் வழக்குரைஞர் சுவாமிநாதன். "தூக்குமேடைக்குப் போன என் உயிரை மீட்டு கொண்டு வந்திருக்கீங்க... அதான் சின்ன அன்பளிப்பு'. "இதோ பாருங்கோ... வழக்காடுறது என் தொழில். அதுல என் கடமையைச் செய்தேன். அதற்குண்டான பீஸ் கொடுத்திட்டீங்க... அப்புறமென்ன இதெல்லாம்... மொதல்ல எடுத்துகிட்டு கிளம்புங்க...'. ஆனால், பண்ணையார் விடுவதாக இல்லை. நகை மூட்டையை ஏற்றுக்கொண்டே தீர வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றார்.

அதனைக் கையால் தொடக்கூட விரும்பவில்லை வழக்குரைஞர் சுவாமிநாதன். எனவே, அத்தனை நகைகளையும் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கல்யாணி மருத்துவமனை அறக்கட்டளைக்கு கொடுத்துவிட்டார். இப்படி எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் வரிசை கட்டி நிற்கின்றன.

பழைய திரைப்படம் ஒன்றில் கதாநாயகி தன் கனவுகளைச் சொல்லும் பாடல் வரும். அதில் அவரின் பெரும் கனவாக சொல்லப்படுவது, "மயிலாப்பூர் வக்கீலாத்து மாட்டுப்பெண்ணாவேன்...' என்பதுதான். எப்படி ஒரு கெளரவமான வாழ்க்கையை அன்றைய வழக்குரைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?

அத்தகையவர்களின் அற்புதமான வாழ்க்கையை அந்தத் தொழிலில் இருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டாமா? சட்டப்புத்தகமாகவே நடமாடிய மேதைகளைப் பற்றி அறிய வேண்டியது அவசியமல்லவா? அப்போதுதானே, எப்படி இருந்தது வழக்குரைஞர் சமூகம் என்பதை அறிய முடியும்.

கருப்பு அங்கியை எடுத்து அணியும் போதெல்லாம் அதன் பழைய கெளரவத்தையும் சேர்த்து அணிந்து கொண்டால்தானே அதற்கென எஞ்சி இருக்கும் கெளரவத்தைக் காப்பாற்ற முடியும்.

திடுதிப்பென்று திருப்பதியில் பட்டம் வாங்கிவிட்டால் மட்டுமே வழக்குரைஞராகி விட முடியாது என்பதை சமூகத்திற்கு உணர்த்துவதும் நல்ல வழக்குரைஞர்களின் பொறுப்புதானே? காவல் துறையோடு சண்டை போடுவதும், கட்டப்பஞ்சாயத்து செய்வதும் கருப்பு அங்கிகளின் பணியல்லவே.

ஒருவர் வழக்குரைஞர் என்றால், அவருக்கு வீடு கிடையாது பெண் கிடையாது என்று முகம் சுளிக்கும் அளவுக்கு சமூகத்தின் பார்வை மாறிப்போய் இருக்கிறதே ஏன்? மக்களை விடுங்கள்.. தன்னை நம்பி வழக்காட வருபவர்களுக்குகூட வழக்குரைஞர்கள் சிலர், நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை என்கிற கசப்பான உண்மையை நாம் வேதனையோடு ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

மொத்தத்தில், விபத்து போலவோ, வேடிக்கையாகவோ வழக்குரைஞர் ஆனவர்களைக்கூட, தாங்கள் அணியும் கறுப்பு அங்கியின் கெளரவத்தைப்பற்றி சிந்திக்க வைப்பது காலத்தின் கட்டாயம்.

சினிமாவைப் போலவே, நிஜ வாழ்விலும் வழக்குரைஞர்கள் வண்டு முருகன்களாகவே சித்திரிக்கப்படுவதை மாற்ற வேண்டிய கடமை, கருப்பு அங்கி அணியும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதே உண்மை.



கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

இந்திய வம்சாவளியினருக்கு ஆதரவாக அவசர சட்டம் அமல்

புதுடெல்லி,

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியினருக்கு ஆயுட்கால இந்திய விசா அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதற்காக, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கையெழுத்துடன், இன்று அவசர சட்டம் அமலுக்கு வந்தது.

இதன்படி, வெளிநாட்டுவாழ் இந்திய குடியுரிமை பெற்றவர்களை போலவே, இந்திய வம்சாவளியினருக்கும் ஆயுட்கால இந்திய விசா வழங்கப்படும். அவர்கள் ஒவ்வொரு தடவை இந்தியா வரும் போதும், போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டியது இல்லை. குஜராத்தில், புலம் பெயர்ந்த இந்தியர்களின் மாநாடு நாளை மறு நாள் தொடங்கும் நிலையில், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 6, 2015

BUS TIMINGS FROM CMBT TO NAGAPATTINAM, THANJAVUR, KUMBAKONAM ROUTES...









COURTESY: THANKS TO TNSTC BLOG

VELANKANNI, NAGAPATTINAM TO CHENNAI BUS TIMINGS..COURTESY: TNSTC BLOG


எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் அதிரடி மாற்றம் : தரமான மருத்துவர்களை உருவாக்க மருத்துவ பல்கலை. நடவடிக்கை



தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில் எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் மருத்துவ பல்கலைக்கழகம் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி மருத்துவ மாணவர்கள் அனைத்து பாடங்களையும் ஆழமாக படிக்கும் வகையில் புதிய கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு "தியரி" தேர்வையும் குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு செய்முறைத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வை எதிர் கொள்ள வேண்டும். தேர்ச்சி பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.

இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கேள்வித்தாள்முறை, மாணவர்கள் மேலோட்டமாக படித்தாலே தேர்ச்சி பெறும் வகையிலும், குறிப்பிட்ட பகுதிகளை படிக்காமல் விட்டுவிடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக அமைந்திருந்தது.

மருத்துவப் படிப்பு என்பது மற்ற படிப்புகளைப் போலன்றி மனிதர்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது என்பதாலும், விடைத்தாள்களை திருத்தும்போது மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களை தீர்க்கும் வகையிலும் கேள்வித்தாள் முறையை மாற்றியமைக்க தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து மூத்த பேராசிரியர்கள் 15 பேர் தலைமையில் பாடவாரியாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு புதிய கேள்வித்தாள் முறை உருவாக்கப்பட்டது.

அதன்படி, முதல் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கேள்வித்தாள்களில் கேள்விகளின் எண்ணிக்கை 22-லிருந்து 13 ஆக குறைக்கப்பட்டது. அத்துடன் முன்பிருந்த அரை மதிப்பெண் முறையும் நீக்கப்பட்டது. மேலோட்டமாக படித்தாலே விடையளிக்க வகைசெய்யும் ஒரு மார்க் கேள்விகள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக சிறு விளக்கம் அளிக்கும் 3 மார்க் கேள்விகள் சேர்க்கப்பட்டன.

இந்த புதிய கேள்விமுறை முதல்கட்டமாக முதல் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிலும் முதல் ஆண்டு கேள்வித்தாள் முறை போன்றே மாற்றம் செய்துள்ளனர். கேள்விகளின் எண்ணிக்கை 22-லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே, மாணவர்களில் ஒருசாரார் புதிய வினாத்தாள் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வினாத்தாள் முறை மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஜான்சி சார்லஸ், தேர்வு காட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் சி.தர் ஆகியோர் கூறியதாவது:

எதிர்காலத்தில் நோயாளிகளை கவனிக்கக் கூடிய நாளைய மருத்துவர்களாகிய எம்பிபிஎஸ் மாணவர்கள் அனைத்து மருத்துவ பாடங்களிலும் ஆழமாக அறிவை பெற்றிருக்கிறார்களா? என்பதை சோதிக்கும் வகையில் புதிய வினாத்தாள் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய கேள்வித்தாளில் வினாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் விளக்கமாக பதில் அளிக்க முடியாமல் இருந்தது. அதை கருத்தில்கொண்டே கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மற்ற துறையினருடன் தங்களை ஒப்பிடக்கூடாது. அனைத்து பாடங்களிலும் ஆழமான அறிவு பெற்றால்தான் நாளை சிறந்த மருத்துவர்கள் ஆகி, நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நல்ல பேச்சே நமது மூச்சு.......டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்



அலுவலகம் என்பது தொழிற்சாலையோ பொது நிறுவனமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில், நிதித் துறை, மனிதவளத் துறை, தொழில் துறை, எனப் பல துறைகள் இருக்கும். அவர்களுடன் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை மட்டும் பாதிக்கப்போவதில்லை. பலருடைய எதிர்காலமும் அதைச் சார்ந்திருக்கும்.

நம்முடன் பணிபுரியும் சகநண்பர்களுடனும் மேலதிகாரிகளுடனும், நமக்குக் கீழ் பணிபுரிபவர்களுடனும் நல்ல பெயர் எடுக்கவும், நல்ல உறவுகளை வைத்துக்கொள்ளவும் தொடர்புடைய பேச்சுத் திறன் மிகவும் முக்கியம்.

இதற்கு முக்கிய அடிப்படை நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக நீங்களே புரிந்து கொள்ளுவதும், மற்றவர்களுக்கு அதைப் புரிய வைப்பதும்தான்.

மொழியின் முக்கியத்துவம்

பொதுவாகத் தொடர்புடைய பேச்சுக்கு மொழி ஒரு சாதனமாகிறது.

சிலர் வெவ்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்படலாம். வெளிநாட்டு அதிகாரிகளோடு தொடர்புகொள்ள நேரிடலாம். நாம் பேசுகிற மொழி அவர்களுக்கோ, இல்லை அவர்கள் பேசுகிற மொழி நமக்கோ தெரிந்திருக்க நியாயமில்லை. அதற்கு ஒரே தீர்வு ஆங்கிலம்தான்.

பெரும்பாலான இளைஞர்கள் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. தெரிந்தாலும் மற்றவர்கள் முன்னால் பேசப் பயப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசுவது என்றாலே நல்ல இலக்கணம் தேவை என்று நினைக்கிறார்கள்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தாய் மொழியைத் தவறாகப் பேசுவதுதான் தவறு. ஆங்கிலத்தில், தொடக்கத்தில் தவறாகப் பேசித் தவறுகளைத் திருத்திக்கொண்டு பயிற்சி செய்து பின் ஆங்கிலத்தில் ஆளுமை வளர்த்துக் கொள்ளலாம். மொழி என்பது ஒரு சாதனமே. அதைப் பேச்சாக மாற்றி, தொடர்பு கொள்ளும்போது நல்ல உறவு உண்டாகும்.

நம் தாய்மொழி நமக்கு உயர்வானதுதான். ஆனாலும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. நீங்கள் மொழிப்பற்று உடையவராக இருந்தால் உங்களுக்கு நான் யதார்த்தமாகச் சொல்வது “ஆங்கிலத்தைப் பேச்சில் வையுங்கள். தமிழை மூச்சில் வையுங்கள்.”

இப்போதிலிருந்தே சிறிது சிறிதாக ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தொடங்குங்கள். மற்றவர்களுடைய மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள். உடன் பணிபுரிபவரின் மொழியில் பேசினால் நெருங்கிய தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு.

கூர்ந்து கவனித்தல்

அடுத்தவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தல் அவசியம். அந்தக் கவனம் நம் வேலையைத் திறம்படச் செய்ய உதவும். செய்யப்போகிற வேலையில் நல்ல தெளிவு கிடைக்கும். சந்தேகத்தில் செய்கிற வேலை பல பிரச்சினைகளை உண்டு பண்ணிவிடும். நமக்குப் புரிந்துவிட்டதுபோலத் தீர்மானம் செய்துகொண்டு செய்யும் வேலையில் தவறு ஏற்பட்டால், உறவுகள் முறிந்து நம் எதிர்காலம் பாதிக்கும்.

அலுவலகத்தில், கம்யூனிகேஷன் என்பது மேலதிகாரிகளிடமிருந்து கீழ் மட்டத்துக்கும், கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்துக்கும் நடக்கும். நீங்கள் ஒருவேளை மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவுகளைப் பெறலாம். சில சமயத்தில் உங்களுக்குக் கீழுள்ளவர்களுக்கு உத்தரவுகளையோ அறிவுரைகளையோ சொல்லலாம். பொதுவாக, நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் மனதில் கொள்ள வேண்டியவை:

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்

#அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பேச நினைப்பது.

#அடுத்தவர்களைக் கடிந்துவிடுவோமோ என்று நினைப்பது.

#அலுவலக நிர்ப்பந்தங்களோ , நம்முடைய கலாச்சாரப் பாதிப்போ நம்மைத் தாக்கி, அதனால் நினைத்ததைப் பேச முடியாமல் இருப்பது.

#எதைப் பேச நினைத்தாலும் நான் இதைச் சொல்லட்டுமா என்று பயத்துடன் பேசுவது.

இந்த உணர்ச்சிகளை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது?

அலுவலகத்தில் உங்கள் உணர்வுகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்களை யாராவது புண்படுத்திவிட்டார்களா அல்லது ஏதாவது தர்மசங்கடமா அல்லது கோபமா?

#எதுவாக இருந்தாலும் இரண்டொரு வார்த்தைகளில் முடித்து விடுங்கள். குறிப்பிட்ட எண்ணத்தை மட்டும் வெளிப்படுத்துங்கள்.

#உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காதீர்கள்.

#பேசுவதற்கான நல்ல இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுங்கள்.

#நான்தான் தவறு செய்து விட்டேன், நான்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற தொனியில் பேசுங்கள்.

பொதுவாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை,

#ஒருவரிடம் பேசத் தொடங்கும் முன் நம்முடைய எண்ணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

#எதைப் பற்றிப் பேசப் போகிறோம். ஒரு திட்டத்தைப் பற்றியா அல்லது வெறும் சந்திப்பா அல்லது யாரிடமாவது தனியாகப் பேசப் போகிறோமா என்பது மனதில் தெளிவாக இருக்கட்டும்.

#நம்பிக்கையுடன் பேசுங்கள்.

#உங்களுடைய குரலும் தொனியும் ஏற்ற இறக்கங்களோடு, பேசுகின்ற பொருளுக்கு ஏற்றாற்போல இருக்கட்டும்.

#உண்மையைப் பேசுங்கள். உங்களுடைய பேச்சு நேர்மையானதாக இருக்கட்டும். எந்த உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நேர்மையாக வெளிப்படுத்துங்கள்.

#ஒரு விஷயத்தைப் பிடிக்காமல் செய்வது, வேண்டாம் என்று சொல்வது எனக்கு உடன்பாடு இல்லை, என்று சொல்வதில் தவறில்லை. “நாம் கேட்டால், நமக்குத் தெரியவில்லை என்று நினைத்துவிடுவார்களோ அல்லது பிறர் கோபப்படுவார்களோ” என்று நினைத்து விடாதீர்கள்.

#மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பளியுங்கள்.

#நான் என்ற ஈகோவை விட்டுத் தள்ளுங்கள்.

இதைக் கவனத்தில் கொண்டால் உங்களின் பணியிடத்தில் உங்களின் பேச்சு சிறப்பானதாக மதிக்கப்படும்.

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

பிரிவோம், சந்திப்போம்!.....டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்



“என் மகள் பள்ளிக்குக் கிளம்புகையில் நான் தூங்கிக்கொண்டிருப்பேன். நான் வேலையை விட்டுத் திரும்புகையில் அவள் தூங்கிக்கொண்டிருப்பாள். வாரக் கடைசியில்தான் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!” என்று கனமான வார்த்தைகள் சொல்லி விட்டு என்னை ஆழமாகப் பார்த்தார் அவர்.

“இந்த வேலையை விட முடியாது டாக்டர். அவ்வளவு கமிட்மெண்ட்ஸ் இருக்கு. எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு இந்த வேலையை விடணும்னா குறைந்த பட்சம் இன்னும் 10 வருடங்கள் ஆகும். அப்போ என் மகள் படிக்கவோ வேலைக்கோ வெளியே போயிருக்கலாம். என்ன வாழ்க்கைன்னு தெரியலை சார் இது?” என்றார்.

பிரிவுகள்

இவர் பரவாயில்லை. குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை எண்ணிப் பாருங்கள். போனில் முத்தம் கொடுத்துக் கொண்டு மெயிலிலும் வாட்ஸ் அப் வீடியோவிலும் பிள்ளைகள் வளர்வதைக் கண்டு, “வரும் போது வாங்கிட்டு வர்றேன் இல்லன்னா யார் கிட்டயாவது கொடுத்து அனுப்பறேன்” என்று பொருட்களில் அன்பையும் பகிரத் துடிக்கும் துடிப்புகளை என்னவென்று சொல்ல?

வெளி நாட்டில் மட்டுமா? நம் நாட்டிலேயே பிழைக்க மாநிலம் விட்டு மாநிலம் வருபவர் கண்களில் உள்ள ஏக்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அடுத்த முறை பாருங்கள்.

கட்டிட வேலை செய்யும் பெண்கள், மேஜை துடைக்கும் பையன்கள், காவல் காக்கும் வயதான ஆட்கள் என எல்லாரும் தங்கள் சம்பளத்தில் கணிசமான தொகையைக் குடும்பத்துடன் பேசவே செலவழிக்கிறார்கள்.

வேலை நிர்ப்பந்தங்கள்

மாதத்திற்கு 20 நாட்கள் குடும்பத்தைப் பிரியும் மனிதர்களுக்கும் குடும்பத்துக்கும் உள்ள இடைவெளி எப்படி இருக்கும் தெரியுமா? பிள்ளை அடிபட்டதைக் கூடத் தாமதித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். பள்ளியின் கூட்டங்களுக்கு போக முடியாது. என்றாவது வரும் பள்ளி விழாக்களில் பிள்ளை கலந்து கொள்வதைக் கூடப் பார்க்க முடியாது. முன்பு தந்தைகள் பட்ட அவஸ்தைகளை இப்பொழுது தாய்களும் படுகிறார்கள். அலுவலக வேலையில் இருந்துகொண்டு மகன் டியூஷனுக்குப் போனானா என்று விசாரிக்கும் அம்மாக்கள் எத்தனை பேர்?

“என் அப்பாவை எல்லாம் அவர் ரிடையர்ட் ஆனதுக்கு அப்புறம் தான் நிறைய தெரிஞ்சுக்கவே ஆரம்பிச்சேன்” என்று சொல்லும் பிள்ளைகள் நிறைய உண்டு.

முதலில் பிள்ளைகள் பெற்றோர்களைப் பிரிந்த வேதனையில் வாடுகின்றனர். பிறகு பெற்றோர்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாடுகின்றனர்.

வேலை நிர்ப்பந்தங்கள் பிரிவுகளை நிகழ்த்துகின்றன. இவை தவிர்க்க இயலாத நிதர்சனங்கள்.

தீபாவளிக்கும் கிறிஸ்மஸுக்கும் பொங்கலுக்கும் கூட வேலைக்குப் போகும் மக்கள் நிறைய இருக்கிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகளும் இல்லாத பண்டிகைகளில் என்ன விசேஷம்?

உறவின் அருமை

உள்ளூரில் தொழில் செய்து பதினெட்டு பட்டிக்குள் பெண்ணெடுத்து வாழ்ந்த கூட்டுக் குடும்பத்தில் பிரிவுகள் இந்த அளவுக்குப் பாதித்ததில்லை. படிப்புக்காகவும் வேலைக்காகவும் பயணம் செய்வது இன்றைய காலக் கட்டத்தின் இயல்பு. அதனால் இந்தப் பிரிவுகளை ஏற்றுக் கொள்ளுதல்தான் பக்குவம்.

“ஒ.கே. என்ன கருத்து சொல்றீங்க பாஸ்?” என்றால் என் விண்ணப்பம் ஒரு வரிதான். சேர்ந்து இருக்கும் அருமையை உணருங்கள்.

ஆரோக்கியத்தின் மதிப்பு நோயில் தெரியும். உறவின் அருமை பிரிவில் தான் தெரியும்.

மலிவாகக் கிடைக்கும் எதன் மதிப்பும் நமக்கு விளங்காது. நுரையீரல் செயல்படாமல் செயற்கை உறுப்பிற்கு அலையும்போதுதான் வாழ் நாள் முழுதும் சரியாய் பணி செய்த நுரையீரலின் அருமையை உணர்கிறோம்.

வந்து போகும் நண்பர்களின் அருமை யாருமில்லாமல் தனிமையில் இருப்போருக்குத் தான் தெரியும். வீட்டில் இருக்கும் போது தெரியாத மதிப்பு அதை விற்ற பிறகுதான் உணர்கிறோம்.

அது போலத்தான் சேர்ந்து வாழும் குடும்பங்களின் நிலையும். பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து வாழும்போது ஒருவர் மதிப்பு மற்றொருவருக்குப் புரிவதில்லை.

சதா அலுவல் எரிச்சலில் உள்ள அம்மாவாலோ அப்பாவாலோ தங்கள் குழந்தைகள் மேல் நியாயமான அன்பை வெளிக்காட்ட முடிவதில்லை. அதே போலப் பெற்றோர்களின் மதிப்பையும் பிள்ளைகள் அவர்கள் மறைந்த பிறகுதான் உணர்கிறார்கள்.

ரசனையே ஆரோக்கியம்

அதனால் கிடைத்த பொழுதைக் குடும்பத்துடன் குதூகலமாகக் கொண்டாடக் கற்றுக்கொள்ளுங்கள். அலுவல் வேலை, வீட்டுப் பிரச்சினைகள், இயந்திர வாழ்வின் அவசரங்கள் என்றும் இருக்கும். ஒரு பரிபூரண நாள் வந்த பின்தான் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் நாள் தான் பரிபூரணமான நாள்.

வாழ்க்கைத் துணை உயிருடன் இருப்பது, உடன் இருப்பது எல்லாம் கடவுள் கொடுப்பினை. இல்லாதவரைக் கேளுங்கள். புரியும்.

நீங்கள் விரும்பும் துணை உங்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் நினைத்ததை உங்கள் பிள்ளைகள் செய்யாமல் இருக்கலாம். நீங்கள் விரும்பிய வேலையை நீங்கள் செய்யாமல் போகலாம். ஆனால் கிடைத்ததை ஏற்று ரசிக்கத் தெரிந்தவர்தான் ஆரோக்கியமாக வாழ்கிறார்.

வாழ்க்கையின் சின்னச் சின்னத் தருணங்கள்தான் பெரிய சந்தோஷங்களைக் கொடுக்கின்றன. அதைச் சேர்ந்து கொண்டாடுங்கள்.

பிரிவுகள் உறவுகளின் உறுதியைச் சோதித்துப் பார்க்க வைப்பவை. மனிதர்களின் மதிப்பைப் புரிய வைப்பவை.

சேர்ந்து வாழும் காலத்தில் சேமித்த அன்புதான் பிரிவு காலத்தில் நிலை குலையாமல் இருக்கச் செய்யும்.

வேலை மனிதர்களைப் பயணிக்க வைக்கிறது. வாழ்க்கையைப் படிக்க வைக்கிறது. நம் வாழ்வுக்குப் பொருள் உணர்த்தும் வேலையைக் காதலிப்போம். அதன் மூலம் வாழ்வையே காதலிப்போம்.

பிரிவோம்

வேலையையும் வாழ்க்கையும் ஆற அமர விவாதித்த நாம் பிரியும் காலம் வந்துவிட்டது. நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு கருத்து சொல்லி, கேள்வி கேட்டு, அன்பு காட்டி, ஆதரவு சொன்ன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

பிரிவோம். சந்திப்போம்!

gemba.karthikeyan@gmail.com

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...