Tuesday, June 30, 2015

மொட்டையம்மாள் சைக்கிள் கடை!



வீட்டில் நிம்மதியாக உட்கார்ந்து ஓய்வெடுக்க வேண்டிய வயதில் சைக்கிள் கடை நடத்திவருகிறார் 85 வயது மொட்டையம்மாள். திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இவர், தள்ளாத வயதிலும் தளராத நிர்வாகத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறார்.

உடல் தளர்ந்துபோனாலும் உள்ளத்தில் உறுதி இருந்தால் எந்த வயதிலும் எந்த வேலையையும் திறம்படச் செய்ய முடியும் என்பதை மொட்டையம்மாள் நிரூபித்துவருகிறார். தடி ஊன்றி நடந்தாலும், அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் சுயமாகச் சம்பாதித்துத் தன் சொந்தக் காலில் வைராக்கியத்துடன் வாழ்கிறார். வேலை வேலை எனத் தேடி வெறுப்படைந்து மூலையில் உட்காரும் இளைஞர்கள், மொட்டையம்மாள் பாட்டியிடம் வாழ்க்கைப் பாடம் படிக்கலாம்.

மொட்டையம்மாளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் வேலம்மாள். ஆனால் மொட்டையம்மாள் என்றால்தான் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிகிறது. பொழுது புலர்ந்ததும் காகம் கரைகிறதோ இல்லையோ, மொட்டையம்மாள் கண்விழித்துவிடுகிறார். சுறுசுறுப்பாகச் சைக்கிள் கடையைத் திறந்து உட்கார்கிறார். கால் வண்டி, அரை வண்டி, முக்கால் வண்டி, முழு வண்டி சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார். கூலிக்கு ஆள் வைத்து சைக்கிள்களைப் பழுது பார்க்கிறார். பஞ்சர் பார்க்கிறார். இதன் மூலம் கிடைத்த வருவாயில் இந்தக் காலத்துக் குழந்தைகளை மகிழ்விப்பதற்காகக் குட்டி சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்கிறார். பேரக்குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

எதிர்பாராத திருப்பம்

“எனக்கு 17 வயசுல கல்யாணம் நடந்தது. கல்யாணமாகி 35 வருஷமா குழந்தையில்லை. நாங்க வேண்டாத தெய்வமில்லை. எங்க மனக்குறை ஒரு பக்கம்னா கேள்வி கேட்குறவங்களுக்குப் பதில் சொல்லி மாளாது. கடைசில என் மனக்குமுறலைத் தீர்த்துவைக்கிற மாதிரி என் மகன் பிறந்தான்” என்று கடந்த காலத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். மொட்டையம்மாளின் மகனுக்கு 15 வயதாகும்போது அவருடைய கணவன் இறந்துவிட, நட்டாற்றில் நிற்பதுபோலத் தவித்திருக்கிறார். வருமானம் இல்லாத நிலையில் மகனை வளர்த்து ஆளாக்கத் தனியாளாகப் போராடியிருக்கிறார்.

கரை சேர்த்த கடை

என்ன செய்வது என்று தலையில் கைவத்து அழுவதைவிட எதைச் செய்தால் வண்டியோடும் என்று மொட்டையம்மாள் யோசித்தார். நேர்மையாகச் செய்யும் எந்தத் தொழிலும் தாழ்ந்ததில்லை என்று நினைத்த அவர், ஆரம்பத்தில் விறகுக் கடை வைத்து நடத்தினார். சமையல் எரிவாயு வந்த பிறகு, விறகுக் கடையில் வியாபாரம் முடங்கியது. அப்போதும் மொட்டையம்மாள் சோர்ந்துபோகவில்லை. வைக்கோல் கடை வைத்து நடத்தினார். அதில் வந்த வருமானம் கைக்கும் வாய்க்குமே சரியாக இருந்தது.

“என் குடும்ப நிலையைப் பார்த்துட்டு சொந்தக்காரர் ஒருத்தர் அவர் நடத்துன சைக்கிள் கடையை என்கிட்டே கொடுத்தார். அப்போ கடையில நாலு சைக்கிள் மட்டும் இருந்துச்சு. அதை வாடகைக்கு விட்டு, வந்த வருமானத்துல குடும்பம் ஓரளவு கஷ்டமில்லாம நகர்ந்துச்சு. சாப்பாட்டுக்குப் போக மிச்சமான பணத்துல சின்ன சைக்கிளை வாங்கி வாடகைக்கு விட்டேன். கொஞ்ச நாள்ல பஞ்சர் ஒட்டவும் கத்துக்கிட்டேன். சைக்கிள் ரிப்பேர் பார்ப்பேன்” என்கிறார் மொட்டையம்மாள்.

தற்போது மூப்பின் காரணமாக இவரால் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அதனால் ஆள் வைத்து சைக்கிள் ரிப்பேர் பார்க்கிறார்.

இவரது சைக்கிள் கடைக்குப் பக்கத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் தண்டபானி, “நாமளே கடை திறக்கக் காலையில லேட்டா வருவோம். ஆனா இந்தம்மா காலைல ஆறு மணிக்கெல்லாம் கடை திறந்துடுவாங்க. ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் கடையை அடைப்பாங்க. வரவு, செலவுல கறாரா இருப்பாங்க. ஒரு பைசாகூட விட்டுக் கொடுக்க மாட்டாங்க. ஆனா கஷ்டம்னு யாராவது வந்துட்டா உதவி செய்வாங்க. இந்த வயசுலயும் பாட்டிக்கு நல்ல ஞாபகச் சக்தி, கண் பார்வை தெளிவாக இருக்கு” என்று மொட்டையம்மாள் பாட்டியின் புகழ் பாடுகிறார்.

நினைவுச் சின்னம்

ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அவரை பஞ்சம், துவரை பஞ்சம் ஏற்பட்டபோதும் மொட்டையம்மாளின் குடும்பம் வசதியாக இருந்திருக்கிறது. ஆனால் இடையில் எதிர்பாராதவிதமாக வறுமைக்கு ஆட்பட்டபோது இந்த சைக்கிள் கடைதான் மொட்டையம்மாளுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. அந்த நினைவால்தான் இன்றும் இந்தக் கடையை விடாமல் நடத்தி வருகிறார்.

“வீட்ல சும்மா இருக்கப் பிடிக்கலை. அதுவும் இல்லாம கையில நாலு காசு சம்பாதிக்க இந்த வயசுல வேறு பொழப்பும் தெரியலை. அதான் பழக்கப்பட்ட இந்தச் சைக்கிள் கடையை நடத்துறேன். முன்னால, ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம்னு வருமானம் வரும். அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு. இன்னைக்கு, கூலி ஆளுக்குப் போக ஒரு நாளைக்கு 300 ரூபாய் கையில நிக்கறதே பெருசு. சில நாள் ஒண்ணுமே கிடைக்காது. அந்தக் காலத்துல பழநிக்கு சைக்கிள்லதான் யாத்திரை வருவாங்க. அப்பல்லாம் நிறைய பேர் பஞ்சர் ஒட்ட, ரிப்பேர் பார்க்க வருவாங்க.

நிறைய காசு கிடைக்கும். இன்னைக்கு யாரு சைக்கிள்ல வர்றாங்க? கார், பஸ்ஸுல வந்துட்டு போறாங்க. முன்னாடிலாம் ஒரு சைக்கிள்கூட கடையில சும்மா நிக்காது. இன்னைக்கு, வாடகைக்குப் போவாம சும்மாவே எல்லா சைக்கிளும் நிக்குது. வருமானமே இல்லை” என்று தற்போது தான் சந்திக்கும் சவால்களை அடுக்குகிறார் மொட்டையம்மாள். இருந்தாலும் இந்தக் கடையைத் தன் அடையாளமாகவே கருதுகிறார்.

“நானும் தினமும் ஆபீஸ் போறா மாதிரி வெள்ளென கிளம்பிடுவேன். சில நேரம் மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போவேன். முடியலைன்னா கையில சாப்பாட்டை எடுத்துக்கிட்டு வந்துடுவேன். சொல்லிக்கிற மாதிரி வருமானம் இல்லாட்டியும் கடை நடத்துறது சந்தோசமா இருக்கு. இந்தக் கடை மூலமா பெரிய அளவுல வருமானம் இல்லைன்னாலும், என் நிம்மதிக்காக என் மகன் ஒண்ணும் சொல்ல மாட்டான். எனக்கு ஒரே ஒரு ஆசைதான். ஆயுசு முழுக்க இந்த சைக்கிள் கடை நடத்தணும்” என்று சொல்கிறார் மொட்டையம்மாள்.

திவாலாவதில் இருந்து தப்புமா கிரீஸ்?

Return to frontpage

இன்று உலகம் முழுவதும் கொண்டாடும் ஒலிம்பிக் போட்டியை உலக நாடுகளுக்கு வழங்கிய கிரேக்கம் எனப்படும் கிரீஸ் மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

இந்த ஆண்டுக்குள் சர்வதேச செலாவணி நிதியத்துக்கு 970 கோடி யூரோவை செலுத்தியாக வேண்டும். குறிப்பாக வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் சர்வதேச செலாவணி நிதியத்துக்கு (ஐஎம்எப்) 173 கோடி டாலர் (150 கோடி யூரோ) கடனை திரும்ப செலுத்த வேண்டும். இதைச் செலுத்தாவிட்டால் கிரேக்கம் திவாலாகிவிடும்.

இவ்வாறு கிரேக்கம் திவாலாவதைத் தடுப்பதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள நாடுகள் அந்நாட்டுக்கு கடன் அளித்து அதை நெருக்கடியிலிருந்து மீட்க திட்டமிட்டுள்ளன.

இதற்காக கடந்த ஒரு வாரமாக பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் நடத்திய 10 சுற்று பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை.

இதனி டையே கடன் வழங்கும் நாடுகள் விதிக்கும் நிபந்தனைகள் குறித்து கருத் தொற்றுமை எட்டுவதற்காக ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளார் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிபிராஸ்.

கிரீஸ் நிதி நெருக்கடியில் சிக்கியது எப்படி?

வீட்டைப் போலத்தான். வரவு எவ்வளவு என்று தெரியாமலேயே கடன் வாங்கி செலவு செய்தால் என்னவாகுமோ அதே பிரச்சினைதான் கிரீஸுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. மன்னராட்சி யிலிருந்து மாறி ராணுவப் புரட்சிக்கு உள்ளாகி 1970-களில் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய கிரீஸ், தற்போது நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

டாலருக்கு மாற்றாக ஒரு வலுவான கரன்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் யூரோ. 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டமைப்பில் 19 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் சிறிய நாடான கிரிஸும் ஒன்றாகும். இந்த நாடுகள் அனைத்தும் யூரோவை பயன்படுத்துகின்றன.

டாலருக்கு நிகரான யூரோவின் மாற்று மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக சரியத் தொடங்கியது. இதனால் 2010-ம் ஆண்டிலிருந்தே நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது கிரீஸ்.

கிரீஸுக்கு 2,400 கோடி யூரோவை கடனாக வழங்குவது குறித்துதான் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தொகையை விடுவிக்க வேண்டுமென்றால், சில நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று கடன் வழங்க முன்வரும் நாடுகள் வலியுறுத்துகின்றன.

அரசு செலவுகளைக் குறைக்க வேண்டும், ஓய்வூதிய வயதை அதிகரிக்க வேண்டும் (தற்போது கிரிஸீல் ஓய்வு பெறுவோர் வயது 57 ஆகும்), ஓய்வூதியத் தொகையைக் குறைக்க வேண்டும், வரி விதிப்பு அளவை அதிகரிக்க வேண்டும் என்பன முக்கியமான நிபந்தனைகளாகும்.

இந்த நிபந்தனைகளை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து விவாதிப் பதற்குத்தான் ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளார் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிபிராஸ்.

ஒருவேளை கடன் வழங்கும் நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காமல் போனால் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும்.

இதனால் ஐஎம்எப்-க்கு வழங்க வேண்டிய கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாமல் போகும். நாடு திவாலாகிப் போகும். இந்த ஆண்டுக்குள் சர்வதேச செலாவணி நிதியத்துக்கு 970 கோடி யூரோவை செலுத்தியாக வேண்டும். அதில் ஒரு பகுதி தவணையான 150 கோடி யூரோவை இம்மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்தியாக வேண்டும். ஒருவேளை நிதி வழங்கும் நாடுகள் அளிக்கும் நிபந்தனையை கிரீஸ் ஏற்றுக் கொண்டால் இத்தவணையை திரும்பச் செலுத்த ஒரு மாதம் அவகாசம் அளிக்கக்கூடும்.

ஒருவேளை நிபந்தனையை கிரீஸ் ஏற்கவில்லையென்றால், கூட்டமைப் பிலிருந்து கிரீஸ் வெளியேறுவதைத் தடுக்க வேண்டாம் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்விதம் வெளியேறினால்தான், உண்மை நிலையை கிரீஸ் உணரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம், கிரீஸ் வெளியேற அனுமதித்தால் அது தங்கள் கூட்ட மைப்புக்கு பலவீனமாக அமைந்துவிடும் என்று ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.

உலக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கிரீஸின் பங்களிப்பு வெறும் 0.3 சதவீதம்தான். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சினை ஐரோப்பிய நாடுகளை மட்டுமல்ல பிற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ஒருவேளை கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேறினால், அதைத் தொடர்ந்து இதேபோன்ற நிதி நெருக் கடியில் இருக்கும் இத்தாலி, போர்ச் சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் வெளியேறும் நிர்பந்தம் உருவாகும். அது ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பை மேலும் பலவீனமடையச் செய்யும்.

ஐரோப்பிய வங்கிகள் வழங்கிய கடன் அளவில் கிரீஸ் நிறுவனங்களுக்கு அளித்த தொகை ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாகும். இருந்தாலும் கிரீஸ் வெளியேறும் பட்சத்தில் அது சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேறினால் அங்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி உருவாகும். ஏற்கெனவே வங்கிகளிலிருந்து ரொக்கத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருத்து எடுத்துச் செல்கின்றனர். ஏடிஎம்கள் பலவும் வறண்டு போய்விட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் 28 சதவீத அளவுக்கு அங்கு அதிகமாக உள்ளது. இதனால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

மெட்ரோ ரயில்: சிறப்பு அம்சங்கள் என்ன?




* மெட்ரோ ரயில் உயர்நிலைப் பாதை மற்றும் சுரங்கம் வாயிலாகச் செல்வதால் ரயில் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

* தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதால், நடைமேடையை அடைந்தபின் ரயில் முழுவதும் நின்ற பிறகே கதவு திறக்கும், மூடும். எனவே, ரயில்களில் படியில் நின்று பயணம் செய்வது முற்றிலும் தடுக்கப்படும்.

* பயணத்தின்போது ஏதேனும் சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால், ரயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

* பொருட்களை வைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பெங்களூர் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில்களில் இல்லை.

* ஒவ்வொரு பெட்டியிலும் தலா 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* அவசர காலத்தின்போது ஓட்டுநர்களுக்கு தகவல் தர சிறப்பு பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவிகள், தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ரயிலின் செயல்பாட்டை தமது அறையில் இருந்தபடியே ஓட்டுநர் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

* ரயில்கள் தடம் புரளாமல் இருக்க ரயில் பாதைகளில் தரமான சிறிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 90 சதவீதம் மெட்ரோ ரயில்கள் தடம்புரள வாய்ப்புகளே இல்லை.

பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதி

* மெட்ரோ ரயில் பெட்டிகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பயணிகளுக்கும் அதிநவீன பாதுகாப்பு மற்றும் வசதிகள் அளிக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களின் வரைபடம் அனைத்து பெட்டியிலும் இருக்கும்.

* ஒரு மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 350 பேர் வீதம் ஒரு ரயிலில் 1,400 பேர் பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக சராசரியாக 35 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்படும்.

* கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பயணம் நேரம் 19 நிமிடங்களாக இருக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பின்னர், மக்கள் தேவைக்கு ஏற்றவாறு 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

* அதிகபட்சமாக 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க முடியும்.

கட்டண விவரம்:

மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும்.

*ஆலந்தூர் - ஈக்காட்டுதாங்கல்: ரூ10

*ஆலந்தூர் - அசோக்நகர்: ரூ.20

*ஆலந்தூர் - வடபழநி: ரூ.30

*ஆலந்தூர் - அரும்பாக்கம்: ரூ.40

*ஆலந்தூர் - சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம்: ரூ.40

*ஆலந்தூர் - கோயம்பேடு: ரூ.40

ரயில் பயண கால அட்டவணை:

*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்படும்.

*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.40 மணிக்கு இயக்கப்படும்.

*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6.03 மணிக்கு புறப்படும்.

*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.03 மணிக்கு இயக்கப்படும்.

எத்தனை ரயில்கள்?

*தினசரி கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 95 ரயில்கள் இயக்கப்படும்.

*அதேபோல் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 97 ரயில்கள் இயக்கப்படும்.

*நாளொன்றுக்கு மொத்தம் 192 ரயில்கள் இயக்கப்படும்.

*ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும்.

*அதிகபட்சமாக மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இருமார்க்கத்திலும் இலக்கை 19 நிமிடங்களில் சென்றடையும்.

*ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 விநாடிகள் ரயில் நின்று செல்லும்.

இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டிவனம்- - தி.மலை சாலையில் 3ம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை : செஞ்சி கோர்ட் அதிரடி உத்தரவு


செஞ்சி: 'திண்டிவனம்- - திருவண்ணாமலை இடையேயான சாலை, தேசிய நெடுஞ்சாலை அல்ல; மரண சாலை' என வேதனை தெரிவித்த, செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, இச்சாலை வழியாக, வரும், 3ம் தேதி வரை, உள்ளூர் வாகனங்கள் தவிர, வெளியூர் வாகனங்கள் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்.

புதுச்சேரி - -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை யில் (எண்- 66) திண்டிவனம் முதல், கிருஷ்ணகிரி வரை உள்ள, 178 கி.மீ., சாலையை, 7 மீட்டர் அகலத்திலிருந்து, 10 மீட்டராக மாற்றும் பணி, கடந்த, 2012ம் ஆண்டு, மே மாதம் துவங்கியது. 24 மாதங்களில் முடிய வேண்டிய பணி, நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், பாதி பணி கூட முடியவில்லை.

தினமும் விபத்துகள்

நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கான்ட்ராக்ட் எடுத்த, 'டிரான்ஸ்ட்ராய்' நிறுவனம் பணிகளை நிறுத்தியுள்ளது. இந்த சாலையை அகலப்படுத்துவதற்காக வெட்டிய பள்ளங்களும், வெட்டி எடுத்த தார் சாலையையும் அப்படியே உள்ளது. இதனால், தினமும் விபத்துக்கள் நடக்கின்றன. இதை கண்டித்து, ஆங்காங்கே, பொது மக்கள் மறியல் செய்தனர். செஞ்சியில், மூன்று மாதம் முன், வழக்கறிஞர்கள், சாலை மறியலும், நீதிமன்ற புறக்கணிப்பும் செய்தனர்; ஒரு நடவடிக்கையும் இல்லை!

தடை கோரி மனு

இதையடுத்து, செஞ்சியை சேர்ந்த அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில், செஞ்சி பார் அசோசியேஷன் தலைவர் மணிவண்ணன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர், செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், 'பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்தும் வகையில், தினமும் விபத்துகள் நடக்கும் இந்த சாலை, போக்குவரத்திற்கு தகுதி இல்லாமல் இருப்பதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.

மறந்த இறையாண்மை

இந்த மனுவை விசாரித்து, நீதிபதி வெங்கடேசன் பிறப்பித்த இடைக்காத உத்தரவு:

ஒவ்வொரு மனிதனை காப்பாற்றுவதும், அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதும், மனித உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதும் அரசின் இறையாண்மை பணியாகும்.

இந்த இறையாண்மை பணியை செய்ய, மாவட்ட நிர்வாகம் தவறியுள்ளது. தினமும், முதியோர், பள்ளி மாணவர்கள், நோயாளிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல், கஷ்டத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகின்றனர் என்பது, இம்மனு மூலம் தெரிகிறது.

26 பேர் உயிரிழப்பு

இந்த சாலையை பயன்படுத்தியதால், செஞ்சி, சத்தியமங்கலம், காவல் எல்லையில் மட்டும், 26 பேர் இறந்துள்ளனர்; 95 பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். திருவண்ணாமலைக்கு, பவுர்ணமியன்று வரும் பக்தர்கள், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல், இச்சாலையை பயன்படுத்துகின்றனர். மூன்றாம் தேதி வரை தடைதிண்டிவனம் - தி.மலை இடையேயான சாலை, தேசிய நெடுஞ்சாலையல்ல; மரண சாலை என்றே குறிப்பிடலாம்.

எனவே, திண்டிவனம், தீவனுார், வல்லம், செஞ்சி, ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், கீழ்பெண்ணாத்துார், சோமாசிபாடி, திருவண்ணாமலை வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், உள்ளுர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அவசர கால வாகனங்கள் தவிர, வேறு வெளியூர் செல்லும் வாகனங்கள், வரும், 3ம் தேதி வரை செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு, நீதிபதி தெரிவித்துள்ளார்.







இன்று பவுர்ணமி: பக்தர்கள் திண்டாட்டம்!

பவுர்ணமி தினமான இன்று, சென்னையில் இருந்து பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. வேலுார், காஞ்சிபுரம், விழுப்புரம் வழியாக, தி.மலைக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்!

சென்னை மாநகரத்தின் சரித்திரத்தில் அதிமுக்கியத்துவம் பெறும் இரண்டு நாள்களாக 1931 ஏப்ரல் 2-ஆம் தேதியும், 2015 ஜூன் 29-ஆம் தேதியும் திகழும். முந்தையது, அன்றைய சென்னை ராஜதானியின் ஆளுநர் சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லியால், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே மின்சார ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்ட நாள்

. அடுத்தது, தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் நாள்.

மின்சார ரயில் சென்னையின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்காத நிலையில், அதிவேகமாக அதிகரித்து வரும் மக்கள் பெருக்கத்துக்குப் போக்குவரத்து வசதிகள் ஈடுகொடுக்க முடியாத நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை சற்று ஆறுதலளிக்கும் என்று நம்பலாம்.
முதல் கட்டமாக ஆலந்தூரிலிருந்து கோயம்பேடு வரையிலுமான மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரை மற்றொரு வழித்தடத்திலும் அடுத்தகட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்க இருக்கிறது. இதுவரை ரூ.10,751.94 கோடி செலவில் தொடங்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை, சென்னை மாநகரத்தின் கட்டமைப்பு வசதிக்குப் புதிய பரிமாணத்தையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
1931-இல் தொடங்கப்பட்ட மின்சார ரயில் சேவையின் பயனால் சென்னை மாநகரம் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளிலும் பரந்து விரிந்து வளர்ந்தது என்றால், 2015-இல் தொடங்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை மின்சார ரயில் இல்லாத பகுதிகளை இணைப்பதுடன் கணிசமாகச் சாலை நெரிசலைக் குறைக்கவும் உதவும். அதுமட்டுமல்ல, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுக்கு மெட்ரோ ரயில், மின்சார ரயில், பெட்ரோலிய எரிவாயு பயன்பாடு ஆகியவை மட்டுமே விடையாக இருக்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. அரசுப் பேருந்துகளும், சிற்றுந்துகளும், ஷேர் ஆட்டோக்களும் இருந்தும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ற அளவுக்கு பொதுப் போக்குவரத்தின் எண்ணிக்கையும், தரமும் அதிகரிக்காமல் இருப்பதும் மிகப்பெரிய காரணம்.
73 லட்சம் மோட்டார் வாகனங்கள் உள்ள தலைநகர் தில்லியைவிட, 37 லட்சம் வாகனங்கள் உள்ள சென்னைதான் பரப்பளவு சார்ந்த விகிதப்படி, சாலையில் அதிக வாகனங்கள் காணப்படும் நகரமாகத் திகழ்கிறது. தில்லியில் 30,000 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் கி.மீட்டருக்கு 245 வாகனங்கள் என்றால், வெறும் 1,800 கி.மீ. நீளமேயுள்ள சென்னை நகரத்தின் சாலைகளில் கி.மீட்டருக்கு 2,093 வாகனங்கள் காணப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?
பெட்ரோல், டீசல் விலை உயர்வு சென்னையைப் பொருத்தவரை வாகனங்கள் வாங்குவதில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நாள்தோறும் தமிழகத்தில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில் 25% வாகனங்கள் சென்னையின் சாலைகளில்தான் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, மோட்டார் வாகனங்களில் கணிசமானவை இரண்டு சக்கர வாகனங்கள் என்றாலும்கூட, அதிநவீனமான பெரிய கார்கள், பேருந்துகள் போன்றவை அதிக அளவில் செல்வதற்கு ஏற்ப சாலைகள் சென்னை மாநகரில் விரிவுபடுத்தப்படவில்லை, விரிவுபடுத்துவது சாத்தியமும் இல்லை.
தனியார் மோட்டார் வாகனங்கள் போதாதென்று, சென்னையைச் சுற்றிலும் செங்கல்பட்டு, அரக்கோணம் வரையில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் வாகனங்கள் வேறு சென்னை நகரின் வீதிகளில் நூற்றுக்கணக்கில் வளைய வருகின்றன. வங்கிகள் வரைமுறையே இல்லாமல் மோட்டார் கார்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும் கடன் அளிப்பதன் விளைவாக, சொந்தமாகக் காரோ, இரு சக்கர மோட்டார் வாகனமோ வைத்திருப்பது என்பது நடுத்தர மக்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும்கூட ஒரு கெüரவப் பிரச்னையாகி விட்டிருக்கும் நிலைமை.
உலகில் மிக அதிகமாக வாயு மாசுவால் பாதிக்கப்பட்டிருக்கும் 20 நகரங்களில், இந்தியாவில்தான் 13 நகரங்கள் இருக்கின்றன. அதில் சென்னையும் அடங்கும். அதற்குக் காரணம், மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் பெட்ரோலியப் புகை. நகர்ப்புறத்திலுள்ள 40% குழந்தைகளின் நுரையீரல்கள் பலவீனமாக இருப்பதாக சுகாதாரப் புள்ளிவிவரம் கூறுகிறது.
போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் வாயுமாசு, வாகனங்கள் வாங்கியதால் ஏற்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் கடன் சுமை இவற்றுக்கு எல்லாம் ஒரே தீர்வு பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதுதான். அதிநவீன வசதிகளுடன்கூடிய, மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம், மேலைநாடுகளில் காணப்படுவது போல பணக்காரர்களும்கூட சொந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் நிலைமை ஏற்படும்.
அடுத்த கட்டமாக தில்லியில் உள்ளதுபோல, ஆட்டோ, வாடகைக் கார், பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள், குறிப்பாகத் தனியார் கல்லூரிப் பேருந்துகள் கட்டாயமாக சி.என்.ஜி. எரிவாயுவில்தான் இயக்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் முதல் முயற்சியாகச் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை இருக்கட்டும்!

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு "நாக்' உயர் தரம் அளிப்பு

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்குத் தேசிய தர அங்கீகாரக் குழு (நாக்) உயர்த்தப்பட்ட தர மதிப்பீட்டை வழங்கியது.
இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்ற தேசிய தர அங்கீகாரக் குழு புதிய தரமாக 3.54 புள்ளிகளை வழங்கியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வந்த தேசிய தர அங்கீகாரக் குழு மூன்றாவது சுற்று தரம் வழங்கலில் 3.3 புள்ளிகள் அடிப்படையில் "ஏ' தகுதியை வழங்கியது. அந்தக் குழு வழங்கிய தரப்புள்ளிகள், தகவல்கள் குறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மேல்முறையீடு செய்தது. அதன்படி, மேல்முறையீட்டுக் குழு நான்கு அடிப்படைகளில் தன்னுடைய மதிப்பீட்டைத் திருத்தி அமைத்தது.
பாடம் தொடர்பான கூறுகள், ஆய்வு உரையாடல்கள், விரிவாக்கம், பயிற்றுவித்தல் கற்றல், புதியன படைத்தல், சிறந்த நடைமுறைகள் போன்றவற்றை அக்குழு கருத்தில் கொண்டது.

மேல்முறையீட்டுக் குழுத் தன்னுடைய மதிப்பீட்டை 3.54 என்பதைத் திருத்தி அமைத்தது. மேலும், நிகழாண்டு மே 11ஆம் தேதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு இறுதியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் புதிய மதிப்பீடான 3.54, "ஏ' தரம் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசுப் பல்கலைக்கழகங்கள், அனைத்து தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களையும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் விஞ்சி முன்னிலையில் உள்ளது.

கணவரின் பெற்றோர் இறந்ததாகக் கூறி வாரிசுச் சான்று பெற்ற மருமகள்!

உயிரோடு இருக்கும் தங்களை இறந்துவிட்டதாகக் கூறி மருமகள் பெற்ற வாரிசுச் சான்றிதழை மாற்றித் தரக்கோரி மாமனார், மாமியார் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அவர்களுக்கு உடனடியாக வாரிசுச் சான்றிதழ் மாற்றித்தரப்பட்டது.
மதுரை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான்(57). இவரது மனைவி சாரா பானு(51). இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் கடைசி மகனான அப்துல் ரஹ்மான்(26) கடந்தாண்டு டிசம்பர் 13-இல் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
இதையடுத்து வாரிசுச் சான்றிதழ் கோரி அப்துல் ரஹ்மானின் தந்தை ஷாஜகான் மதுரை வடக்கு வட்டாட்சியரை அணுகியுள்ளார். ஆனால், அதற்கு முன்பே அப்துல் ரஹ்மானின் மனைவி மும்தாஜ் பேகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசுச் சான்றிதழ் பெற்றுவிட்டதாகவும், அதில் தனது மாமனார் ஷாஜகான், மாமியார் சாரா பானு இறந்துவிட்டதாகத் தவறான தகவல்களையும் அவர் தெரிவித்து இருப்பதும் தெரியவந்தது.
இதையறிந்த ஷாஜகான், சாரா பானு ஆகியோர் சான்றிதழை மாற்றித்தரக் கோரி கடந்த 15 நாள்களாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அலைந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க திங்கள்கிழமை வந்தனர்.
இந்நிலையில் உயிரோடு இருப்பவர்கள், இறந்துவிட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் பரவியது.
தகவலறிந்த வடக்கு வட்டாட்சியர் ராமன், இருவரையும் அழைத்து விசாரித்தார். பின்னர், உடனடியாக திருத்தம் செய்யப்பட்ட வாரிசுச் சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து மதுரை வடக்கு வட்டாட்சியர் ராமன் கூறியது: வாரிசுச் சான்றிதழ் வழங்கும் பிரிவு ஊழியரின் கவனக்குறைவு காரணமாக சான்றிதழ் பதியும்போது மாமனார், மாமியார் இறந்துவிட்டதாக வாரிசுச் சான்றிதழில் எழுதப்பட்டுவிட்டது. அதை திருத்தி உடனடியாகப் புதிய வாரிசு சான்றிதழ் அளிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.

NEWS TODAY 2.5.2024