Sunday, October 18, 2015

பட்டப்படிப்பை முடிக்க யு.ஜி.சி., புது கெடு

'படிப்பு காலம் தவிர கூடுதலாக, மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, 'ரேங்கிங்' வழங்கப்படும்' என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி, அறிவித்துள்ளது.இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட பட்டப்படிப்புகள் படிப்போர், பல காரணங்களால், இடையில் படிப்பை விட்டாலோ, சில பாடங்களில் தேர்ச்சி அடையா விட்டாலோ, ௧௦ ஆண்டுகளுக்குள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். இந்த காலநீட்டிப்பு பல்கலைக்கு பல்கலை, கல்லுாரிக்கு கல்லுாரி மாறுபடும்.இந்த நிலையில், யு.ஜி.சி., புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'இளங்கலை அல்லது முதுகலை படிப்பில், அதற்கான கால அளவுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். முடிக்காதவர்கள், இரண்டு ஆண்டுகளில் முடிக்கலாம். அதையும் தாண்டினால், ஓர் ஆண்டு கூடுதலாக வழங்க முடியும். அதற்கு மேல் கால தாமதம் ஆனால், அந்த பட்டத்துக்கு,'ரேங்கிங்' வழங்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.இந்த அறிவிப்புக்கு கல்லுாரி ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர்கள் கூறியதாவது:எப்படியாவது படிக்க வேண்டும் என முயற்சி எடுப்போர் மட்டுமே, தேர்வை இடைவெளி விட்டு எழுதியாவது பட்டம் பெறுவர். அந்த வாய்ப்பு மறுக்கப்படுவோருக்கு இந்த உத்தரவு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

பெண் எனும் பகடைக்காய்: மதிப்பிழந்துபோன பெண் உழைப்பு ...............பா.ஜீவசுந்தரி



வீட்டுப் பணிப்பெண்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெறாத பத்திரிகைகள் ஏதும் உண்டா? உண்மையில் வீட்டு வேலை செய்யும் இந்தப் பெண்களின் நிலை நகைச்சுவைக்கு உரியது மட்டும்தானா? வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை வீட்டுப் பணிப்பெண் ஒருநாள் வேலைக்கு வராவிட்டாலும்கூட அந்த வீடு வீடாக இருக்காது. வீட்டுப்பணி என்பது நச்சரிக்கும் பணி; அதற்கு முடிவென்பதே இல்லை. எவ்வளவு வேலைகள் வளர்ந்தால்தான் என்ன? வீட்டு ஆண்கள் உதவிடவா போகிறார்கள்? அந்த மனமாற்றம் இன்னமும் இங்கு வராதது ஆகப் பெரும் சோகம். விதிவிலக்குகள் எங்கும் உண்டு.

வேலைக்குப் போகும் இல்லத்தரசிகளின் இமாலயப் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்பவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள் மட்டும்தான். பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்கித் துடைத்தல் இவை மூன்றும் மிக அவசியமான, கடினமான பணிகள். சில வீடுகளில் தேவை கருதி சமையலுக்கும் ஆட்களை அமர்த்திக்கொள்கிறார்கள். இன்னும் குழந்தையைக் கவனிப்பது, முதியோரைக் கவனிப்பது போன்றவையும் இதில் அடக்கம்.

இளக்காரமான பணி

இவ்வளவு பணிகளைச் செய்யும் பணிப்பெண்ணுக்கு ‘வேலைக்காரி’என்ற ஏளனமான ஒற்றைச் சொல் தவிர்த்து என்ன மதிப்பு இருக்கிறது? ஆண்டாண்டு காலமாக நம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்குள் செய்துகொண்டிருக்கும் இந்த வேலைகள் மீது எந்த மதிப்பும் இல்லாததே இதற்கு மூல காரணம். ஊதியம் ஏதுமின்றித் தங்கள் உழைப்பை அவர்கள் செலுத்திக் கொண்டேயிருப்பதால், அது மதிப்பிழந்து போகிறது. அதனால்தான் நாள் முழுதும் சிறுகச் சிறுக வேலைகளைக் கவனித்துக்கொண்டே ‘சும்மா’ இருப்பதாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் மனநிலையை நோக்கி ‘இல்லத்தரசிகள்’ தள்ளப்பட்டிருக்கிறார்கள். தங்கள் பணியைத் தாங்களே மதிக்காத பெண்களால் பணிப்பெண்களின் உழைப்பை எப்படி மதிப்பீடு செய்ய இயலும்? அவர்கள் கனிவோடு அணுகப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.

கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த சக மாணவியைப் பார்த்து ‘நீயெல்லாம் கரிச்சட்டி கழுவத்தான் லாயக்கு’ என்று ஆசிரியப் பெருந்தகை இட்ட சாபத்தைக் கேட்டு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவள் நான்! கரிச்சட்டி கழுவுதல் அவ்வளவு கேவலமா?

வீட்டுப் பணிப் பெண்கள் யார்?

பெரும்பாலும் முறையான பள்ளிக் கல்வியை முடிக்காதவர்கள். கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள். ஆண்களின் வருமானம் முழுமையாகக் குடும்பத் தேவைகளுக்குச் சென்று சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத குடும்பங்களிலிருந்து வருபவர் கள். ஏனென்றால், வந்தால் வீட்டுக்கு லாபம், இல்லையேல் நாட்டுக்கு என்று ‘டாஸ்மாக்’ கடைக்குச் சென்று சேரும்.

எளிதானதா வீட்டுப் பணி?

விடியும் முன்பே தொடங்கும் இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை. கணவன், குழந்தைகளுக்கான உணவு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஆறு, ஆறரை மணிக்குக் கிளம்பினால் நாலு அல்லது ஐந்து வீடுகளை முடித்துவிட்டுத் திரும்புவதற்குப் பிற்பகல் 2 அல்லது 3 மணிகூட ஆகலாம். பணி செய்யும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு திக்கில் இருக்கும். அதற்கான போக்குவரத்து அல்லது நடை நேரம் பணி நேரமாகக் கணக்கில் வராது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பவும் முடியாது. கொசுறாக அவர்கள் சொல்லும் வேலைகளை முடித்துவிட்டுத்தான் செல்ல முடியும். மாலையிலும் சில வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். மொத்தமாக வெளியில் 14 மணிநேரம், தனது வீட்டில் ஐந்து, ஆறு மணிநேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது.

பணிச் சுமையை மிஞ்சும் மன வலி

தனது நேர்மையை எப்போதுமே நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஏழ்மை நிலைதான் அதற்கும் காரணம்! நம்பிக்கையின்மை, எப்போதும் சந்தேகக் கண் கொண்டு அணுகுவது, வேலைக்குதான் வந்துவிட்டார்களே என்பதற்காக மிகவும் கீழ்த்தரமாக நடத்துவது, அவர்களுக்காகவே ‘ஸ்பெஷலாக’ தயாரித்து அளிக்கப்படும் காபி, டீ, சில வீணாய்ப்போன, எஞ்சிப்போன உணவு வகைகள், ஓயாமல் வேலைகளை ஏவிக்கொண்டே இருப்பது, விடுமுறை அளிக்க மறுப்பது இப்படிப் பல.

பிரச்சினைகளிலேயே மிகவும் சிக்கலானது, வீட்டு எஜமானர்களால் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். பெரும்பாலும் அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை; அப்படியே சொன்னாலும், உண்மை என்ன என்பது மனசாட்சிக்குத் தெரிந்தே இருந்தாலும் எந்த வீட்டு எஜமானியும் தங்கள் வீட்டு ஆணை அது கணவனோ, மகனோ, அண்ணன், தம்பியோ யாராக இருந்தாலும் விட்டுத்தரத் தயாராக இருப்பதில்லை. இங்கும் பணிப்பெண்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவாள். அவள் வேலை பறிபோகும் அபாயமும் இருக்கிறது.

பணிப்பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்றால், ஒரு சிலர் கைக்கு அகப்படும் எளிய பொருட்களை எடுத்துக்கொண்டு போவது, முன்னறி விப்பின்றி விடுமுறை எடுத்துக்கொண்டு காலை வாரி விடுதல் போன்றவை சொல்லப்படுகின்றன.

எத்தனை காலத்துக்கு இந்த வேலை?

சரி, ஒரு பெண் எத்தனை காலத்துக்கு வீட்டு வேலைகளைச் செய்து பிழைக்க முடியும்? மேலும் அளவுக்கு அதிகமான வீட்டுப் பணிகளால் ஏற்படும் உடல் பாதிப்புக்கு யார் பாதுகாப்பு? அனைத்து விதமான துணிகளையும் சலவை இயந்திரத்தில் துவைத்துவிட முடியாது. கால் மிதி, குழந்தைகளின் துணிகள், பள்ளிச் சீருடை, அதிலும் குறிப்பாக வெள்ளைத் துணிகள், சாக்ஸ் போன்றவை இவர்களின் ‘கைவண்ண’த்துக்காகவே காத்திருக்கும்.

சோப்புத் தூள், சோப்புக் கட்டிகள், பாத்திரம் துலக்கும் பவுடர், சோப்பு, சோப்பு நீர்க் கரைசல்கள் போன்ற வேதியியல் பொருட்களை நாள் முழுவதும் கையாள்வதால் அவை கைகளைப் பதம் பார்க்கின்றன. கைகள் எப்போதும் ஈரத்தில் ஊறியபடி இருப்பதால் எந்த நேரமும் வலி இருக்கிறது. சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படுகிறது. இவ்வளவு கடினமான பணிகளைச் செய்ய வேண்டுமானால் அதற்கேற்ப நல்ல சத்துள்ள உணவும் வேண்டுமல்லவா? அது இல்லாததனால் உடல்ரீதியாகவும் தளர்ந்து போகிறார்கள்.

எல்லா வீட்டிலும் எல்லா வேலைகளையும் எல்லோரும் ஏற்பதில்லை. ஏதாவது ஒரு வேலையை மட்டும் ஒவ்வொரு வீட்டில் ஏற்பது என்ற நிலையும் இருக்கிறது. அப்படியானால் எந்த வேலைக்கு எவ்வளவு ஊதியம்? வீட்டுப் பணிப்பெண்களுக்கான அமைப்புகள் இருந்தபோதும் அனைவரும் அதில் பங்கேற்பதில்லை. எத்தனையோ முறைசாராத் தொழில்களுக்கு அரசே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கிறது. அவர்களுக்கு வாரியம் அமைக்கிறது. ஈ.எஸ்.ஐ., காப்பீடு வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால் பணிப்பெண்களுக்கு இது எதுவும் இல்லை. ஊதியத்தைப் பொறுத்தவரை குத்துமதிப்பாக ஏதோ கொடுக்கப்படுகிறது.

நடப்பிலுள்ள இந்த நிலையை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பணிப்பெண் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறார். அவர்களின் பாதுகாப்பில் நமக்கும் அக்கறை இருக்கிறது.

கொசுறு



கடந்த 2009-ம் ஆண்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக ஆலோசனைக் குழு ஒன்றை அரசு நியமித்தது. வேலை செய்யக்கூடிய நகரங்களுக்கு ஏற்ப ஒரு மணி நேரத்துக்கு தலா ரூ. 25/- முதல் ரூ. 30/- வரை ஊதியமாக நிர்ணயிக்கலாம் என்று அந்தக் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. ஆனால், அரசு அதைச் செயல்படுத்தவில்லை. இப்போது ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50/- ஊதியமாக அளிக்கப்பட வேண்டுமென்று தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர்கள் இயக்கம் மீண்டும் கோரிக்கை வைத்திருப்பதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வருமா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

மனசு போல வாழ்க்கை 29: கோபத்தைக் கரைக்கலாமே? .............. டாக்டர். ஆர். கார்த்திகேயன்



கோபம் ஒரு பலவீனமான உணர்ச்சி. இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம். எரிச்சல், ஆத்திரம், கொந்தளிப்பு என எந்த உருவத்தில் வந்தாலும் கோபம் ஒரு வலிமையில்லாதவர்களின் ஆயுதம். ஆனால், நாம் கோபத்தை வீரமாகப் பார்க்க பழகியிருக்கிறோம்.

நமது ஆக்ஷன் ஹூரோக்கள் அனைவரும் கோபப்படுவார்கள். அதனால் கோபத்தை நாயக அடையாள மாக பார்க்க ஆரம்பித்தோம். வீட்டிலும் கோபப்படும் பெற்றோரைக் கண்டு அதிகம் பயந்தோம். கோபப்பட்டால்தான் காரியம் ஆகும் என்று அர்த்தப்படுத்திக்கொண்டோம். மீட்டிங்கில் பாஸ் கோபப்பட்டு கடிந்து கொண்டால் அதுதான் அதிகார தோரணை என்று வியந்தோம். போட்டியும் பொறாமையும் இயல்பு என்று ஆகிவிட்ட புது உலக நியதியில் கோபத்தை சகஜமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.

பெண் கோபம்

கோபத்தில் கொலை செய்வதும் தற்கொலை செய்வதும் செய்திகளாக வரும் போது மரத்துப்போய் வேறு சிந்தனையில்லாமல் அடுத்த பக்கம் திருப்புகிறோம். “இந்த வயசிலேயே என்ன கோபம் தெரியுமா என் பாப்பாவுக்கு?” என்று பெருமை பேசும் தாய் விரைவிலேயே அந்த குழந்தைக்குத்தான் அடிமை ஆவதை உணர ஆரம்பிக்கிறாள். “அவன் கேட்டது கிடைக்கலேன்னா வீட்டை இரண்டு பண்ணிடுவான். அவ்வளவு கோபம். அவ்வளவு பிடிவாதம்!” என்று பெற்றோர்கள் சொல்லக் கேட்பது சாதாரணமாகிவிட்டது.

என்னிடம் மன சிகிச்சைக்கு வரும் பலர் கோபத்தில் செல்போனை வீசி உடைப்பதாக சொல்கிறார்கள். கோபத்தில் நம்மிடம் சிக்கி சீரழிவது பொருட்கள் மட்டுமல்ல, மனிதர்களும் தான்.

கோபத்தின் வெளிப்பாடுகள் மாறுகின்றன. கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு அழகாய் சண்டையை ஆரம்பிப்பதில் பெண்கள் கில்லாடிகள். ஆண்கள் இந்த விஷயத்தில் புத்திசாலித்தனம் குறைந்தவர்கள். பேச்சில் ஜெயிக்க முடியாததால் இயலாமையை மறைக்க கையை ஓங்குவான். உள்ளத்தின் வன்முறையை உடல் வன் முறையாக மாற்றி விடுகிறார்கள்.

கோபத்தின் நோய்

உடலின் உள்ளே காலகாலமாய் அழுத்தி வைக்கப்படும் கோபம்தான் புற்று நோயாக மாறுகிறது என்பது லூயிஸ் ஹேயின் கூற்று. குறிப்பாக பெண்களின் மார்பக, கர்ப்பப்பை புற்று நோய்கள் எல்லாம் ஆண்கள் மேலுள்ள தீராத கோபத்தில் ஏற்படுபவை என்கிறார். தன் பெண்மைச் சின்னங்களை அழிப்பதை தன் வாழ்வில் தன்னைக் காயப்படுத்திய ஆண் அல்லது ஆண்களுக்கு தரும் தண்டனையாக உள் மனதில் அவள் பாவிக்கிறாள் என்று லூயிஸ் ஹே சொல்வது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.

கோபம் என்பது பலவீனம் என்பதை உணரும் போதே பாதி வேகம் குறைகிறது. இடம் பார்த்து வரும் கோபம் வெற்றுக் கோபம் தானே? ஒரு பக்கத்து கோபத்தை இன்னொரு பக்கத்தில் காண்பிப்பது என்ன வீரம்?

பின் “ரௌத்திரம் பழகு” என்றானே மகாகவி பாரதி? அவன் சொல்ல விரும்பியது இதுதான்: “சமூக அநீதிகளைக் கண்டால் தைரியமாகத் தட்டிக்கேள்!” கண்டவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவது ரௌத்திரம் அல்ல. சமூகக் கொடுமைகளை எதிர்க்கையில்கூட கண்ணியத்தையும் நயத்தையும் கையாள்பவர்கள் ஞானிகள். நம்மிடையே வாழும் நல்லகண்ணு போல.

கருத்தில் எதிர்நிலையில் இருந்தாலும், நடப்பவைக்கு சம்மதம் இல்லாவிட்டாலும், அதற்கு எதிராக போராடினாலும் அதை பக்குவமாகக் கையாளத் தெரிந்தவர்கள்தான் நிஜமான வெற்றியாளர்கள். காந்தி மகானுக்கு கடைசிவரை ஆங்கிலேயர்களிடம் பகையில்லை. அவர்களிடம் பேசுகையிலும் நகைச் சுவை உணர்வுக்கு குறைவில்லை.

உறவுகளில் வரும் கோபம், எதிர்பார்ப்புகள் பொய்ப்பதினால் வருபவை. சுய நலமான கோபம். “இதை உன்னை செய்ய வைக்க என்னால் முடியவில்லையே?” என்பதுதான் கரு. எல்லாவற்றையும், எல்லாரையும் தன் கட்டுக்குள் கொண்டு வர நினைப்பவர்கள் அதிகம் கோபப்படுவார்கள். வாழ்க்கையை அதன் இயல்பில் ஏற்று வாழ்பவர்கள் கோபத்தைக் கரைத்துக்கொள்கிறார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் மேலைநாடுகளில் பிரபலமாகி வருகின்றன. ஒரு உள சிகிச்சையாளன் என்பதை விட கோபத்தால் வெல்ல நினைப்பவனின் அனுபவரீதியான ஆலோசனைகள் இதோ:

கோபம் இயலாமையின் வடிவம் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொள்ளுங்கள். முடிந்ததைச் செய்யலாம். முடியாததை ஏற்றுக்கொள்ளலாம். இயலாமை உணர்வை நேரடியாக எதிர்கொள்ளும் போது கோபம் கரைந்து போகும்.

கோபம் எனும் வெடிகுண்டு

கோபம் நமக்குள் நாமே பொத்தி வைத்திருக்கும் ரகசிய வெடிகுண்டு. தூர ( யார் மீதும் படாது) எறிந்துவிடுதல்தான் உடல் நலத்துக்கு நல்லது. கோபத்தினால் ஏற்படும் வியாதிகளின் பட்டியல் மிக நீண்டது.

கோபம் உறவுகளைச் சீர்குலைக்கும். எவ்வளவு பெரிய ஒழுக்கசீலராக இருந்தாலும் எல்லா நேரமும் பிறாண்டிக் கொண்டிருப்பவரை சொந்த குழந்தைகளே அண்ட பயப்படுவார்கள். சொல்வதைக் கோபப்படாமல் சொல்லத் தெரிந்துகொள்ளுதல் மனிதர்களைச் சம்பாதித்துக் கொடுக்கும்.

எல்லாவற்றையும் மாற்ற நினைப்பதை விட எல்லாவற்றையும் ஏற்க நினைப்பது தான் மனநலத்தை பேணும். உங்கள் வாழ்க்கையை, உங்கள் உறவுகளை, உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். கோபம் இடம் தெரியாமல் காணாமல் போகும்.

“கோபத்தால் என் உடலில் ஏற்பட் டுள்ள அனைத்து பாதிப்புகளையும் வெளியேற்றுகிறேன்” என்று அஃபர்மேஷன் கூறுங்கள். உங்களை முதலில் மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாவிதமான கோபங்களும் காலத்தால் அடித்துச் செல்லப்படுபவை என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஆன்மிகப் பயணத்தில் கோபத்தை முழுமையாகக் கரைத்தல் ஒரு முக்கியமான மைல் கல். அதனால்தான் பேருண்மையை கண்ட ஞானிகள் தவக்கோலத்திலும் ஒரு புன்னகை சிந்திக்கொண்டிருப்பார்கள்.

புத்தரின் புன்னகையை விட ஒரு செறிவான புன்னகை எங்காவது உண்டோ?

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

மனசு போல வாழ்க்கை 30: அன்பும் ஆக்கிரமிப்பு உணர்வும் .... டாக்டர். ஆர். கார்த்திகேயன்



நாம் அன்பு செலுத்தும் மனிதர்கள் மீதே தொடர்ந்து வன்முறை நிகழ்த்திக் கொண்டிருப்பது வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்று.

“தெரிந்தே கெடுப்பது பகையாகும்; தெரியாமல் கெடுப்பது உறவாகும்!” என்ற கண்ணதாசன் வரிகள் இதை மிகவும் எளிமையாகச் சொல்லிவிடுகின்றன

நல்ல உள்நோக்கம்

நாம் நல்லது செய்வதாக நினைத்துச் செய்யும் பல விஷயங்களால் பாதகம் நிகழ்ந்திருக்கின்றன. “உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்” என்று ஆரம்பித்து பெற்றோர் செய்த பல காரியங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவது இயற்கை.

“பொண்ணு கம்ப்யூட்டர்தான் படிக்க ஆசைப்பட்டா. ஐ.டி கம்பெனிக்கு வேலைக்குப் போனால் என்ன செய்யறாங்கன்னுதான் சினிமாலயும் பத்திரிகையிலயும் காட்டறாங்களே. அதான் ஒரே மனசா வேண்டாம்னு சொல்லிட்டேன். வேற எந்த வேலைக்கு வேணா போம்மான்னுட்டேன்” என்று பேசிக் கொண்டிருந்த தகப்பனைப் பார்த்தேன்.

தன் மகள் மீது வைத்துள்ள மிதமிஞ்சிய அன்பினாலும் பாதுகாப்பு உணர்வாலும், தனக்குக் கிடைத்த தகவல் அறிவை வைத்துக்கொண்டு, மகள் வாழ்க்கைக்கு உதவும் என்று தான் இந்த முடிவை எடுக்கிறார். அவரின் உள் நோக்கம் உன்னதமானது. ஆனால் பாதிப்பு மகளுக்கு நிகழ்கிறது.

அறியாமையாலும் தவறான தகவலாலும் எடுக்கப்படும் பல முடிவுகளுக்குப் பின்னும் ஒரு நல்ல உள் நோக்கம் கண்டிப்பாக இருக்கும்.

ஆக்கிரமிப்பு உணர்வு

தீவிரவாதியின் செயல் தீமை செய்கிறது. ஆனால் மீட்சிக்கு அதுதான் வழி என்று நம்புகிறான் அவன். அதுதான் அவனுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. தன் உயிரையே தியாகம் செய்கிறான். உள் நோக்கம் சிறந்தது. ஆனால் செயல் தீங்கானது.

குழந்தையை அடித்து விளாசும் ஒரு தாய் ஒழுக்கத்துடன் வளர அடி அவசியம் என நம்புகிறாள். உள்நோக்கம் சிறந்தது. ஆனால் உடலாலும் மனதாலும் காயப்படும் அந்தக் குழந்தையின் வலி அந்த உள் நோக்கத்தால் மாறிவிடாது. வளர்கையில் அந்த குழந்தை அதை எப்படி எடுத்துக் கொள்ளும் எனவும் தீர்மானிக்க முடியாது.

நாம் யாரை அதிகம் துன்பப்படுத்தி யிருக்கிறோம்? தாயை. காதல் வசப்பட்டவரை. வாழ்க்கைத்துணையை. குழந்தையை. உற்ற தோழரை. இவர்களைத் தான். அளவற்ற அன்பு ஆக்கிரமிப்பு உணர்வைத் தருகிறது. என் காதலி எனக்கு மட்டும் தான் என்ற ஆக்கிரமிப்பு வந்தவுடன், “அவனுடன் அதிகம் பேசாதே” என்று தடை போட வைக்கிறது. பொறாமை கொள்ள வைக்கிறது.

விலங்கின் நியாயம்

நாம் நினைப்பது கிடைக்காதபோது சந்தேகப்பட வைக்கிறது. கோபம் வருகையில் தகாத வார்த்தைகள் பேச வைக்கிறது. என்னுடன் பேசாதே என்று தள்ளிப்போக வைக்கிறது. அன்பை வைத்துக் கொண்டு வெறுப்பைக் காட்ட வைக்கிறது. பொய் பேசத் தூண்டுகிறது. உறவுகளில் நாடகம் துவங்குகிறது.

“இவனுக்கு எவ்வளவு செய்தேன் நன்றி இருக்கா?” என்ற கணக்கு பார்ப்பது இதன் தொடர்ச்சியில்தான். “உங்களுக்கு மனசாட்சியே கிடையாது” என்று நீதிபதியாகத் தீர்ப்பு கூற வைக்கும். “ என் எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது” என்று போலி தத்துவம் பேச வைக்கும்.

தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பயத்தால் நம்மைத் தாக்கும் விலங்கின் நியாயம் புரிந்தாலும் அது விளைவை எள்ளளவும் மாற்ற முடியாது. வாழ்க்கையின் எல்லாச் சம்பவங்களுக்கும் இது பொருந்தும்.

இதன் நீதி: “உங்கள் நெருங்கிய உறவுகளுக்கு நீங்கள் இழைக்கும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் உங்கள் உள் நோக்கத்தைக் காரணமாகக் காட்டி நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது!”

பல வருஷ பழங்கதை

எவ்வளவுதான் அன்பு இருந்தாலும் அவரிடம் ஆக்கிரமிப்பு உணர்வு இருந்தால் அது கூண்டுக்குள் சிக்கியிருக்கும் உணர்வைத் தரும். எவ்வளவு நன்மைகள் செய்தாலும் நன்மை செய்தவர் சுடு சொற்கள் பேசினால் அது காயங்களைத்தான் தரும். மிகவும் சரியான நோக்கத்துக்காகத்தான் பிடிவாதம் பிடிக்கிறார் என்றபோதும் அந்த பிடிவாதம் ஒரு இறுக்கத்தைத்தான் தரும்.

“ நான் சென்னை வந்த போது காசில்லை. எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா? உனக்கு என் கஷ்டம் ஏதாவது உண்டா? படிக்கறத தவிர என்ன வேலை..?” என்று கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டிருந்த அப்பாவின் பேச்சை இடைமறித்துச் சீரியஸாகக் கேட்டான் மகன்: “பீட்சாவை ஆர்டர் பண்றோமா? இல்லப் போய்ச் சாபிடறோமா?”

நொந்து போய் என்னிடம் மீண்டும் அந்தச் சம்பவத்தை வாழ்ந்து பார்த்து மனம் உடைந்து சொன்னார் அவர். “என் அக்கறையே அவனுக்குப் புரியலை. நீங்க தான் பேசிப் புரிய வைக்கணும்!”

மகன் பளிச்சென்று பதில் சொன்னான்: “இந்தக் கதையைப் பத்து வருஷமா கேக்கறேன். புதுசா கேக்கற மாதிரி எப்படிக் கேக்க முடியும்? வெளிய போலாம்னு சொல்லிப் பேச ஆரம்பிச்சு ஒன்பது மணி ஆச்சு. ஒரே பசி. அதான் குறுக்கே பேசிக் கேட்டேன்!”

நம் நோக்கங்கள் நம் செயல்களை நியாயப்படுத்தலாம். ஆனால் செயல்களின் விளைவுகளை அவை மாற்றுவதில்லை.

எவ்வளவு நியாயமான காரணத்துக்குப் போட்டு உடைத்தாலும் கண்ணாடிக் கிண்ணம் உடையாமல் இருக்குமா என்ன?

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

அரசாங்க வேலையில் நிம்மதி இல்லையா? ....பி.செந்தில்நாயகம்



திருச்செங்கோடு காவல் அதிகாரி விஷ்ணுபிரியாவின் மரணம் பணிச்சூழல் பாதுகாப்பும் பணிச்சூழலும் தொடர்பான விவாதத்தையும் கிளப்புகிறது. அரசாங்க வேலையில் நிம்மதி இல்லை, பணிச்சூழல் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை அரசாங்க வேலையில் இருப்பவர் களுக்கு இந்த மரணம் ஏற்படுத்தலாம். இனிமேல் அரசாங்க வேலைக்குப் போகலாமா? என்று பயமும் படித்த பட்டதாரிகளுக்கு வரலாம்.

உண்மையில் அரசாங்க வேலை, பணிச்சூழல் பாதுகாப்பு நிறைந்தது மட்டுமல்ல, ஒரு சிறந்த வேலை வாய்ப்பு என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். அந்த அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு, தங்களது பணியாளர்களுக்கு, பணிச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களும், சலுகைகளையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டே இருக்கின்றன என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

பாதுகாக்கும் சட்டம்

அரசாங்க ஊழியர் தன் பணியை செய்யும்போது அந்தப் பணியை செய்யவிடாமல் பலரோ தனி ஒருவரோ இடையூறு செய்தாலோ, பயமுறுத்தினாலோ, அப்படி தடை செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் வகையில் நம் இந்திய தண்டனைச் சட்டத்தில் பல பாதுகாப்புகள் உள்ளன. பணிசெய்யும் அரசாங்க ஊழியருக்கு, சக அரசாங்க ஊழியரோ, உயர் அதிகாரிகளே கூட தொந்தரவு அல்லது கொடுமை செய்தால், அதே தண்டனைச் சட்டம் மூலம் உயர்அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்ய முடியும். அந்த அளவுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பாதுகாப்பு கொடுக்கிறது.

நீதிமன்றம் செல்லலாம்

நல்லபடியாக, நேர்மையாக பணிசெய்யும் அரசாங்க ஊழியர் ஒருவரை, உயர் அதிகாரி, வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தோடு மிரட்டினாலோ செயல்பட்டாலோ, அதற்கு மேல் உள்ள உயர்அதிகாரியிடம் புகார் செய்யலாம். உதாரணமாக, அரசாங்க வருவாய்த் துறையில், கிராம நிர்வாக அதிகாரியை மேல் அதிகாரியான தாசில்தார் வேண்டுமென்றே பழிவாங்க வேண்டும் என்று பொய்யான காரணங்களைக் கூறி மன உளைச்சலை ஏற்படுத்தினால், உடனே தக்க ஆதாரங்களுடன் தாசில்தாருக்கு அடுத்த மேல்அதிகாரியான மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார் செய்யலாம். அவரும் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட ஆட்சியர், அதற்குமேல், அரசாங்கத்தின் துறைவாரியான செயலர்கள், அதற்குமேல் அமைச்சர்கள், அவர்களும் உங்கள் புகாருக்குத் தேவையான நீதியை வழங்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம்.

விதிமுறைகள்

அரசு வரையறை செய்துள்ள விதிகளின்படி தன்னுடைய பணியை அரசாங்க ஊழியர் ஒருவர் செயல்படுத்த எந்தத் தடையும் கிடையாது, சட்டவிதிகளின் படி பணி செய்யக்கூடிய ஊழியரை பழிவாங்குவது, கொடுமைப்படுத்துவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது அச்சுறுத்துவது போன்ற செயல்களை உயர் அதிகாரிகள் செய்தால் அந்த அதிகாரிகளின் செயல்களில் இருந்து நிவாரணம் மற்றும் பரிகாரங்களைத் தேடிக்கொள்ளலாம். இது தொடர்பாக, தொடர்ந்து அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

மேலும் TamilNadu Government Servants Conduct Rules 1973 (Corrected up to 2010 - 2011) எனும் தமிழக அரசின் விதிமுறைகளில் மிகவும் தெளிவாக அரசாங்கப் பணியாளர் கடைப்பிடிக்கவேண்டியவை விளக்கப்பட்டுள்ளன. இதில் எல்லா விவரங்களும் உள்ளன. இதன்படி நடந்துகொண்டாலே எந்த பிரச்சினைகளும் வராது.

நிவாரணம் உண்டு

நேர்மையாகச் செயல்படும் அரசாங்க ஊழியரை, மேல் அதிகாரி பழிவாங்க வேண்டும் என்று தவறான, பொய்யான புகார்களின் மீது நடவடிக்கை எடுத்தாலும், அதாவது முதலில் மெமோ கொடுத்தால், பாதிக்கப்பட்ட ஊழியர் தான் தவறு செய்யவில்லை என்று முழு விவரத்துடன் தக்க ஆதாரத்துடன் சுய விளக்கம் கொடுக்க வேண்டும், அப்படி சரியானபடி பாதிக்கப்பட்ட ஊழியர் சுயவிளக்கம் கொடுத்தும், திருப்தி இல்லை என்று மீண்டும் தற்காலிகப் பணிநீக்கம் கொடுத்தாலும், அப்போது கொடுப்பட்ட தற்காலிகப் பணிநீக்கம், உங்களது பதவி உயர்வை பாதிக்கும் என்றோ, சம்பளம் நிறுத்தப்படும் என்றோ, பணிஇடமாற்றம் செய்யப்படும் என்றோ பயம் நிச்சயம் ஏற்படும். ஆனால் அது அவசியமில்லை.

தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு விசாரணை முடியும் வரை 6 மாத காலத்துக்குப் பாதி சம்பளம் கிடைக்கும், விசாரணை, 1 வருடம் வரை தொடர்ந்து அதற்கு மேல் (75%) முக்கால் சம்பளம் கிடைக்கும். புகார் மீதான குற்ற விசாரணை தொடர்ந்து 1 வருடத்துக்கு மேல் முடிக்கப்படாவிட்டால் மீண்டும், 100 சதவீதம் முழுச்சம்பளம் கிடைக்கும். விசாரணை முடிந்து வரும் தீர்ப்பில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் மேல் முறையீடு சென்று நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

புத்திசாலித்தனம்

தற்காலிகப் பணிநீக்கமோ, நீக்கமோ செய்யப்படும் உங்கள் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், உங்களிடம் பிடிக்கப்பட்ட சம்பளம் அனைத்தும் திருப்பிக் கொடுக்கப்படும். பணியில் உள்ள அரசு ஊழியரை மேலதிகாரி வேண்டுமென்றே தகாத முறையில் நடத்தினாலோ, அல்லது மரியாதைக் குறைவாகப் பேசினாலோ, அவர் மீது மேல் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். பயப்படவேண்டியது இல்லை.

பெண் ஊழியர்களிடம் தகாத வகையில் இரட்டை அர்த்தங்களுடன் ஆபாசமாகப் பேசினாலும் நடந்து கொண்டாலும் அவர்களுக்கு பணிச்சூழல் பாதுகாப்பு அரசாணைகள் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் கொடுமை சட்டங்கள் மூலமும் நிவாரணம் கிடைக்கும்.

மேலும் அந்த குறிப்பிட்ட அதிகாரியிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக்கொள்ள விடுப்பில் செல்லாம் அல்லது பணி இடமாற்றம் கேட்டுப் பெறலாம்.

அரசாங்க அதிகாரிகள் சிலர்தான் தவறாக நடந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. அவர்களிடமிருந்து சமயோசிதமாகத் தப்பிக்க முயல வேண்டும். முடியாவிட்டால், அவர்மீது புகார், விடுப்பு எடுத்துக்கொள்ளுதல், அல்லது பணி இடமாற்றம், என்றவகையில் செயல்படுவது புத்திசாலித்தனமான செயல் என்கிறார்கள் அனுபவசாலியான ஊழியர்கள்.

அரசாங்கமே பாதுகாப்பு

பொதுவாகவே, அரசு ஊழியர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி முடிந்ததும், அரசு அலுவலக வேலை நேரம் முடிந்ததும், வீட்டுக்குச் செல்லலாம். இரவு 9 மணி வரை கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. அதுவும் பெண் ஊழியர்களை, இரவு நேரத்தில் பணி செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அரசு ஆணைகள் இருக்கின்றன.

பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 180 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல பணி இடமாற்றங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பணியில் இருக்கும்போது, இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகள் தரப்படுகிறது.

ஆகவே, படித்த பட்டதாரிகள் அரசுப் பணியில் பாதுகாப்பு இல்லை என்று பயப்பட வேண்டியது இல்லை. தனியார் வேலைகளைவிட அதிகமான பணிச்சூழல் பாதுகாப்பு அரசாங்கப் பணியில் உண்டு.

பணிச்சூழல்: பெண் பணியாளர்களை எளிதில் தாக்குகிறதா மன அழுத்தம்? ...கே.சாருமதி


இன்று பெரும்பாலான துறைகளில் ஆண்களோடு பெண்களும் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் திறமையை நிரூபித்துவருகிறார்கள். வீடு, அலுவலகம் என்று இரட்டைக் குதிரை சவாரி செய்வதில் பெண்களே பெரும்பாலும் திறமைசாலிகள். ஆனால் இப்படி இரண்டு இடங்களிலும் அளவுக்கதிகமாக வேலை செய்வது ஆண் - பெண் இருபாலருக்குமே நல்லதல்ல என்றாலும் ஆண்களைவிட பெண்களே அதிக அளவு ஆபத்தைச் சந்திக்கிறார்கள்.
அதுவும் வேலைக்குப் போகும் பெண்களில் 25 முதல் 34 வயதுக்குட்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் அதிகபட்ச மன அழுத்தத்துக்கு ஆளாவதாகச் சொல்கிறது ஒன்டூஒன்ஹெல்ப் நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 150-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறது. அதன் அடிப்படையில் முப்பது நகரங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் இந்த நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
திருமணம் மற்றும் உறவுகளைக் கையாள்வதில் ஏற்படுகிற சிக்கல், வேலை சார்ந்த மன அழுத்தம் மற்றும் தனிப்பட்ட காரணிகளை முன்வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
“எங்கள் ஆய்வின்படி உறவுச் சிக்கல்களால் கிட்டத்தட்ட 37 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தூண்டப்படுவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். திருமண உறவால் ஏற்படுகிற சிக்கலால் 33 சதவீதம் பேர் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 13 சதவீத பணியாளர்கள் தனிப்பட்ட காரணிகளாலும் 12 சதவீத பணியாளார்கள் வேலை சார்ந்த சிக்கல்களாலும் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்” என்கிறார் ஒன்டூஒன்ஹெல்ப் நிறுவனத்தின் இயக்குநர் கருணா பாஸ்கர்.
பல்வேறு காரணிகளால் இப்படி மன அழுத்தத்துக்கு ஆளாகும் பணியாளர்களின் எண்ணிக்கை கவலை தருவதாகச் சொல்லும் கருணா, “இவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவதில்லை. நன்கு படித்து, நல்ல பதவியில் இருக்கிறவர்கள்கூட இதற்காக யாருடைய உதவியையும் நாடுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதுவும் இள வயது பணியாளர்களே எளிதில் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்” என்கிறார்.
ஒருவரை ஆட்டிப்படைக்கிற இந்த மன அழுத்தம் அவர்களது தனிப்பட்ட ஆளுமையை மட்டுமல்லாமல் குடும்பத்திலும் பணியிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகப் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தால் உற்பத்தியும் அதிக அளவில் பாதிப்படைகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நிறுவனத்தில் ஒரு பணியாளர் இறந்துவிட்டால் அந்த இறப்பு அவருடன் பணிபுரிந்தவர்களையும் அவருடைய மேலதிகாரிகளையும் அதிக அளவில் பாதிக்கிறது. அந்தப் பணியாளரின் மரணத்துக்கு நாமும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருப்போமோ என்ற குற்றவுணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறதாம்.
தேசிய அளவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் தென் மாநிலங்களான கர்நாடகமும் தமிழகமும் முக்கிய இடத்தில் இருக்கின்றன.
“காரணம் இந்த மாநிலங்களில் இது போன்ற இறப்புகள் முறைப்படி பதிவுசெய்யப்படுகின்றன. தவிர மன அழுத்தச் சிக்கல்கள் குறித்து இங்கு ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தலைதூக்கியதாகவும் சில வழிகளில் முயன்றதாகவும் சென்னையில் மட்டும் 209 பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதில் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் அவர்களில் 58 சதவீதம் பேர் பெண்கள். அவர்கள் அனைவரும் 25 வயது முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள்” என்கிறார் கருணா.
சமூகத்தின் ஆதரவு இருந்தால் இதுபோன்ற பணியாளர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை தருகிறார் கருணா.
“பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற நலப் பணிகளைச் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் இந்தப் பிரச்சினையைக் கருத்தில்கொள்ள வேண்டும். தங்கள் பணியாளர்களின் வேதனையைப் புரிந்துகொண்டு அவர்கள் அதிலிருந்து மீண்டு வர உதவ வேண்டும்” என்கிறார் மெரிட்டிராக் திறன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் மேனன். ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் உளவியல் மதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே பணி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.
“ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறனிலும் வெற்றியிலும் பணியாளர்களின் மனநலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான மனநலப் பராமரிப்பு இல்லாத இடத்தில் பணியாளர்களுக்கிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றி பிரச்சினை உருவாகலாம். சமயத்தில் இதுபோன்ற மனநலப் பாதிப்புகள், நிறுவனத்தில் உற்பத்தியைப் பாதிப்பதுடன் அவர்களின் பணித்திறனையும் பாதிக்கும். ஒரு பணியாளரின் மனநலம் மற்றும் ஆளுமை குறித்த முழுமையான மதிப்பீடு அவசியம். அப்போதுதான் பணிச் சூழலுக்கு அவர் பொருந்திப் போவாரா என்பதை அனுமானிக்க முடியும்.
முழுமையான உளவியல் மதிப்பீட்டுச் சோதனை மூலம் ஒருவர் எளிதில் மன அழுத்தத்துக்கு ஆளாவாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல குறிப்பிட்ட இடைவேளையில் தொடர்ந்து பணியாளர்களின் உளவியலை மதிப்பிடுவதன் மூலம் அவர்களின் மனநலம் சார்ந்து அறிந்துகொள்ள முடியும். பணியாளர்களின் மனநலத்தில் ஏதேனும் தொய்வு ஏற்படுவதாகத் தோன்றினால் அவர்களை உற்சாகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்க இதுபோன்ற ஆய்வுகள் வழிவகுக்கும்” என்கிறார் ராஜீவ் மேனன்.
© தி இந்து, சுருக்கமாகத் தமிழில்: ப்ரதிமா

Saturday, October 17, 2015

சீர்திருத்தப்படுமா சட்டக் கல்வி?


Dinamani

By இராம. பரணீதரன்

First Published : 17 October 2015 03:20 AM IST


கல்வியின் நோக்கமே ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்வி கேட்டு அறிவை வளர்த்துக் கொள்வதாகும். அதிலும் சட்டக் கல்வி என்பது கேள்விகள் கேட்பதோடு மட்டுமன்றி, சட்டத்தின் துணையோடு நீதியை நிலைநாட்டுவதாகும்.
இத்தகைய சட்டக் கல்வி சீர்திருத்தப்பட வேண்டுமென சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தனது ஆலோசனையைத் தெரிவித்திருப்பதை பாராட்ட வேண்டும். மருத்துவம், பொறியியல் போன்று சட்டமும் ஒரு தொழில்கல்வியாகும்.
ஆனால், மருத்துவம், பொறியியல் பயிலும் மாணவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை சட்டக் கல்லூரி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதேபோல் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மற்ற தொழில்கல்வி மாணவர்களைப் போல வேலைவாய்ப்போ, வருமானமோ வழக்குரைஞர்களுக்கு கிடைப்பதில்லை.
ஏதேனும் ஒரு மூத்த வழக்குரைஞரிடம் சென்று 5 முதல் 10 ஆண்டுகள் அவரிடம் உதவி வழக்குரைஞராகப் பணிபுரிந்து மெதுமெதுவாக நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் முறைகள், வாதாடும் நுணுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இச்சூழ்நிலையில், குறைந்த காலகட்டத்தில் வருமானம் மற்றும் நற்பெயர் பெறவேண்டி, ஒருசில வழக்குரைஞர்கள் செய்யும் விரும்பத்தகாத காரியங்களால் வழக்குரைஞர் சமுதாயமே அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும்படியாகிறது.
இத்தகைய சம்பவங்கள்தான் தற்போது தமிழகத்தில் நடைபெற்று நீதிபதிகள் மற்றும் மக்களின் வெறுப்புக்கு வழக்குரைஞர்கள் ஆளாகும்படி செய்துவிட்டது.
உதாரணமாக, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மதுரை வழக்குரைஞர்கள் கட்டாய தலைக்கவசம் உத்தரவை எதிர்த்துப் போராடியது, தமிழை வழக்கு மொழியாக மாற்றக் கோரி போராடியது போன்றவற்றைக் கூறலாம்.
தற்போது 90% சதவீதம் பேர் தலைக்கவசம் அணிந்து பயணிப்பதே நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இந்நிலையில், 10% வழக்குரைஞர்கள் தலைக்கவசம் அணியாமலோ, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோ போராடுவதை நீதிமன்றம் கண்டுகொள்ளாமலோ அல்லது அந்தச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டித்தோ, மன்னித்தோ அனுப்பியிருக்கலாம்.
எத்தனையோ அரசு, காவல் துறை அதிகாரிகள், தலைமைச் செயலர்கள் போன்றோர், நீதிமன்ற உத்தரவை அவமதித்தோ, கடைப்பிடிக்கத் தவறியோ, மீறியோ நடக்கும்போது அவர்களுக்கு அபராதம், பிடியாணை போன்றவற்றை விதிக்கும் நீதிமன்றம், பின் அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோருவதைத் தொடர்ந்து தண்டனையை குறைத்தோ, விலக்கியோ விடுவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல, இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்ட வழக்குரைஞர்களையும் நீதிபதிகள் மன்னித்திருக்கலாம்.
வழக்குரைஞர்களின் இந்தப் போராட்ட குணத்துக்கு அவர்களின் கல்வியும் ஒரு முக்கியக் காரணம். உதாரணமாக, அனைத்து தொழில்படிப்பு முடித்தவர்களும் தங்களின் கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு தொழிலில் இறங்கிவிடலாம்.
ஆனால், சட்டக் கல்வி பயில்பவர் மட்டும் 3 அல்லது 5 ஆண்டு படிப்புக்குப் பிறகு அனைத்து இந்திய பார் கவுன்சில் நடத்தும் புத்தகத்தைப் பார்த்து எழுதும் வகையிலான தகுதித் தேர்வை எழுதி, சான்றிதழ் பெற்றால் மட்டுமே வழக்குரைஞராகப் பணிபுரியத் தகுதி பெறுவர் என்ற விதியைக் கூறலாம்.
சட்டக் கல்லூரியில் படித்து, சட்டங்களை உருப்போட்டு தேர்வெழுதி, வழக்குரைஞராகப் பதிவு செய்தால், சில மணி நேரம் மட்டும் நடைபெறும் கொள்குறி வகைத் தேர்வை, அதுவும் புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வை, எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வழக்குரைஞராகப் பணியாற்ற முடியும் என்ற விதி எந்தளவுக்கு நியாயமானது எனத் தெரியவில்லை.
அப்படியெனில், ஆண்டுக்கணக்கில் அவர்கள் படித்தது வழக்குரைஞர் எனும் தகுதியைத் தராதா என்ன? இதே போன்ற ஒரு தகுதித் தேர்வை மருத்துவர்களுக்கோ, பொறியாளர்களுக்கோ நடத்த முடியுமா?
வங்கி ஊழியர்களும், ஆசிரியர்களும் கூடத்தான் ஊதியம் போதவில்லை எனப் போராடுகின்றனர். ஆனால், வழக்குரைஞர்கள் போராடுவது மட்டும் தவறா? அனைவரும் அவரவர் பணிபுரியும் இடத்தில் தானே போராட முடியும். வழக்குரைஞர் நீதிமன்றத்தில்தானே போராட முடியும்?
இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, சட்டக் கல்வி மற்றும் வழக்குரைஞர் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும். வடமாநில பொம்மை சட்டக் கல்லூரிகளைத் தடை செய்து, தரமான சட்டக் கல்வியை அரசு மட்டுமே வழங்க வேண்டும்.
கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் மட்டுமே போதும், அவர் வழக்குரைஞர்தான். மேலும் ஒரு கண்துடைப்பு தகுதித் தேர்வு எதற்கு?
படிப்பு முடித்தவுடன் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்காவது பயிற்சி உதவித்தொகை வழங்கி, அவர்களை முழுமையாக நீதிமன்றப் பணிகளில் ஈடுபடுத்தி, சட்ட வல்லுநர்களாக்கவேண்டும்.
ஏதேனும் மூன்றாண்டு பட்டம் பெற்றவர்களை மட்டுமே சட்டக் கல்வியில் சேர அனுமதிக்க வேண்டும். அதாவது, 3 ஆண்டு சட்டக் கல்விக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் மனப்பக்குவத்தை எதிர்பார்க்க முடியும்.
மேலும், நாட்டின் வேதம் என்று சொல்லப்படும் அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியாவில் தொடக்கக் கல்வியில் இருந்தே பாடமாக வைத்து மாணவர்களுக்கும் சட்ட அறிவை அளிக்க முன்வரவேண்டும்.
சட்டக் கல்வி சீர்திருத்தப்பட்டால்தான் சட்டமும் சரி, நீதியும் சரி சரியான முறையில், சரியானவர்களுக்கு கிடைக்கும். இல்லையெனில், போராட்டங்கள் மட்டுமே தொடர்கதையாகிவிடும்.

NEWS TODAY 2.5.2024