Wednesday, November 18, 2015

சென்னை மா"நரகம்'!

Dinamani


By ஆசிரியர்

First Published : 18 November 2015 01:22 AM IST


ஒட்டுமொத்த தமிழகமும், பெருமழை வந்துவிட்டால் தண்ணீரில் மிதக்கும் அவலம் தொடர்கிறது என்றால், ஆட்சி அதிகாரத்தின் இருப்பிடமான தலைநகர் சென்னை படும்பாடு சொல்லி மாளாது. கடந்த ஒரு வார மழையில் சென்னை வெள்ளத்தில் மிதந்தது என்று கூறுவதா, மூழ்கிக் கிடந்தது என்று வர்ணிப்பதா எனத் தெரியவில்லை. சென்னை மாநகரிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த வார அடைமழையால் மக்கள் அடைந்த துயரம் சொல்லி மாளாது.
ஆழிப்பேரலை, தானே புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தால் அதில் நியாயமிருக்கிறது. எத்தனைதான் சிறப்பான ஏற்பாடுகளும், கட்டமைப்பு வசதிகளும், நிர்வாகத் திறமையும் இருந்தாலும்கூட அவற்றை எதிர்கொள்ள இயலாது என்பது தெரியும். ஆனால், பருவமழை, அடைமழை போன்ற ஆண்டுதோறும் சந்திக்கும் இயற்கை நிகழ்வுகளைக்கூட நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளாகியும், ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கியும்கூட இன்னும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக்கூட நம்மால் ஏன் உருவாக்க முடியவில்லை?
சென்னையைப் பொருத்தவரை மழை நீர் உடனடியாக வெளியேறாமல் தேங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. இயற்கையாகவே வெள்ளம் வடிந்தோடும்படியான நகரமைப்பு, கடலையொட்டியுள்ள சென்னைக்கு உண்டு. சென்னை மாநகரில் கூவம், அடையாறு என்று இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் உள்ளிட்ட 16 கால்வாய்களும், இது போதாதென்று பல கழிவு நீர் ஓடைகளும், திட்டமிட்டு நிறுவப்பட்டிருக்கும் மழை நீர், கழிவு நீர் வடிகால் குழாய்களும் இருக்கின்றன.
சென்னையிலுள்ள இரண்டு ஆறுகளையும், 16 கால்வாய்களையும் முறையாகத் தூர்வாரிப் பராமரிக்காததன் விளைவுதான், மழை பெய்தால் இப்படித் தண்ணீர் தேங்கி நிற்பதன் அடிப்படைக் காரணம் என்று நாமே இதற்குமுன் பல தலையங்கங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். மழைக் காலத்துக்கு முன்னால், இந்தக் கால்வாய்களை சுத்தம் செய்வதும், மழை நீர், கழிவு நீர் வடிகால் குழாய்களிலுள்ள அடைப்புகளை அகற்றித் தயார் நிலையில் வைத்திருப்பதும் நிர்வாகம் செய்திருக்க வேண்டிய முன்னேற்பாடு. செய்ததாகக் கணக்குக் காட்டப்படுமே தவிர, முறையாகச் செய்யாமல் விடுவதுதான் அதிகாரவர்க்கத்தின் வழக்கம். அதுதான் நடந்திருக்கிறது.
சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் பங்களிப்பாக ஏறத்தாழ இரண்டு லட்சத்துக்கும் அதிகமான திருட்டு கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீர் வடிகால் குழாய்களில் விடப்படுவது, மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு ஒரு முக்கியமான காரணம். வெளிநாடுகளில், மழை நீர் வடிகால் பாதை என்பது இரண்டு அடியே ஆழமுள்ள திறந்த பாதையாக இருக்கும். எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் உடனடியாக வடிந்துவிடுவதற்கும், அடிக்கடி சுத்தம் செய்வதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கே அப்படி அமைத்தால், நமது மகா ஜனங்கள் அதைக் குப்பை போடுவதற்கு பயன்படுத்தி விடுவார்களே, என்ன செய்ய?
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் இதேபோலப் பெருமழை வந்தபோது, அதற்கு முன்னால் 30 ஆண்டுகளாகத் தூர் வாரப்படாமலிருந்த 16 கால்வாய்களும் தூர்வாரப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளும், நடவடிக்கைகளும் அதற்குப் பிறகு ஒப்புக்குத்தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை இந்தப் பெருமழை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது.
சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை, இத்தனை குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் காரணம், தொலைநோக்குப் பார்வையே இல்லாத நகர் மற்றும் ஊரமைப்புத் துறையும், பெருநகர் வளர்ச்சிக் குழுமமும்தான். இவர்கள் மக்களின் நன்மையைவிட, ரியல் எஸ்டேட் அதிபர்களின் வளர்ச்சியைக் கருதி மட்டுமே செயல்படுவதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம் போன்ற சென்னையின் பழைய பகுதிகள்தான் நியாயமாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் உருவான புறநகரின் பகுதிகள்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. அப்படியானால் அது திட்டமிடலின் குற்றமே தவிர, இயற்கையின் சதியல்ல.
அடுக்குமாடிக் குடியிருப்புகளே எழுப்பப்பட்டிருந்தாலும், அது யாருடையதாக இருந்தாலும் தயவுதாட்சண்யமே இல்லாமல் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் இரு மருங்கிலுமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது; விதிமீறல் கட்டடங்களுக்கு தரப்பட்டிருக்கும் திருட்டு இணைப்புகளை அகற்றுவது; 16 கால்வாய்களையும் தூர் வாருவது; தெருவோரக் கடைகளின் உணவுக் கழிவுகள் கால்வாய்களில் கொட்டப்படாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக அரசு மேற்கொள்ளாமல் போனால், இந்த நிலைமை தொடரும். அடுத்த அடைமழையிலும் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் அல்லது மூழ்கும்!
மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் ஒரு மாநரகமாக மாறுவது பல ஆண்டுகளாகத் தொடரும் அவலம். இத்தனைக்கும், சென்னை ஒரு கடலோர நகரம். போதாக்குறைக்கு சென்னையின் குறுக்கே இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாயும் ஓடிக் கடலில் கலக்கின்றன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டால், எவ்வளவு அடைமழை பெய்தாலும் சாலையில் சொட்டுத் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க முடியும். இதெல்லாம் தெரிந்தும்கூட, சென்னை வெள்ளத்தில் மிதப்பது ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் அவலமாக இருக்கிறதே, இதற்கு யாரைக் குறை சொல்வது என்று தெரியவில்லை.

Tuesday, November 17, 2015

பெண் எனும் பகடைக்காய்: கழிப்பறையும் பெண்ணின் உரிமையும்........ பா.ஜீவசுந்தரி

Return to frontpage




கழிப்பறை ஒரு வீட்டின் அத்தியாவசியம். சமையலறை ஒரு பெண்ணுக்கு அவசியம் என்று கருதுகிற சமூகம், கழிவறையின் அவசியத்தை உணர்ந்திருக்கிறதா? கழிவறை, நகரங்களில் மிக மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டாலும், கிராமங்களில் இன்னமும் தொடரும் அவலமாகத்தான் கழிவறைப் பிரச்சனை இருக்கிறது. அவர்கள் அதன் அருமையை உணரவில்லை; முழுமையையும் எட்டவில்லை. காடு கரைகள், கண்மாய்க் கரைகள் என்று தேடிப் போகிறார்கள். நோய்க்கூறுகளை உள்வாங்கும் இடமாக அவை இருக்கின்றன. ஆள் நடமாட்டமில்லாத இடம் தேடிப் போவதும், நடமாட்டம் இருப்பின் இயற்கை உபாதைகளை அடக்கி வைத்துக்கொள்வதும் எவ்வளவு அவஸ்தைகள்?

சில நேரங்களில் பாம்புகளின் ரூபத்தில் மரணத்தையும் ஆண் மன விகாரங்களின் வெளிப்பாடாகப் பாலியல் வல்லுறவு போன்ற ஆபத்துகளையும் இந்தப் ‘பயணங்கள்’ ஏற்படுத்துகின்றன. கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச கிராமம் ஒன்றில் இரு இளம்பெண்கள், இருட்டிய பின் காடு கரைகளைத் தேடிச் சென்றபோது பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கவில்லையா? நடிகை வித்யா பாலன், விளம்பரங்களில் தோன்றி, ’முக்காடு போட்டு முகத்தை மூடிக்கொள்வது மட்டும் பெண்ணின் கௌரவமல்ல, இயற்கை உபாதைகளுக்காக வெளியில் செல்லாமல் இருப்பதும்தான்’ என்று சொல்வது எத்தனை பொருள் பொதிந்தது.

சூரிய உதயத்துக்கு முன் இருள் பிரியாத அதிகாலைப் பொழுதிலும், அதைத் தப்பவிட்டால், ஒரு நாள் முழுதும் அவதியுடன் காத்திருந்து, இருள் கவியும் மாலைப் பொழுதிலும், மறைவிடம் தேடிச் செல்வது வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரங்கள். பதின் பருவப் பெண்கள் மாத விலக்கான காலங்களில் இன்னும் கூடுதல் தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டும் என்பதும் மறுக்க முடியாத நிதர்சனங்கள்.

பன்னிரண்டு வயதை எட்டிப் பிடிக்கும் பெண் குழந்தைகள், பருவமடையும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களில் இதுவும் ஒன்று என்பதை மறுக்க முடியுமா? பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தாலும் போதிய தண்ணீர் வசதி இல்லாவிட்டால், அதைப் பயன்படுத்த முடியாத நிலை. காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் பெண் குழந்தைகள் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் வரை சிறுநீர் கழிக்காமல் இருப்பதும், தாகத்துக்குத் தண்ணீர் குடிக்காமல் தவிர்ப்பதும் கொடூரமில்லையா?

கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பெண் குழந்தைகள், பல மைல் தொலைவிலிருந்து பயணித்து வருபவர்கள் இத்தகைய அத்தியாவசியத் தேவைகள் மறுக்கப்படுவதாலேயே கல்வியின் மீதும் கவனம் குவிக்கத் தவறுகிறார்கள். சில வேளைகளில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி பாதியிலேயே நிறுத்தப்படும் அவலமும் நிகழ்கிறது. குடும்பச் சூழல், பருவமடைதல், இவற்றுடன் கழிப்பறையும் இங்கு ஒரு காரணமாகிறது.

ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். புகழ் பெற்ற யூரோ கைனகாலஜிஸ்ட் ஒருவர் சிறப்பு அழைப்பாளராக அழைப்பப்பட்டிருந்தார். பேச்சாளராக என்னையும் அழைத்திருந்தார்கள். என்னால் அதில் கலந்துகொள்ள இயலவில்லை. அந்தக் கூட்டமே பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரகத்தொற்று நோய் பிரச்சனைகள் தொடர்பானதுதான். நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவர் என் தோழி. பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பிட வசதி இல்லாமையும், அதன் போதாமையும் பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இப்படிச் சொன்னார். “இவ்வளவு பேசுகிறோம், பெண்களுக்கான சட்ட உரிமைகளுக்காக வாதாடுகிறோம். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்திலேயேகூட பெண்களுக்குப் போதுமான கழிப்பிட வசதி இல்லை” என்று தடாலென்று போட்டு உடைத்தார். இதுதான் இங்கு உண்மை. விடுதலைக்குப் பின் பெண்ணின் பிரச்சினைகளாக கல்வி, திருமணம், பாலியல் இவற்றினூடாக, நாகரிகத்தில் உச்சமடைந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளும் நாம்தான் இன்னமும் பெண்களுக்கான கழிப்பறைகளின் அவசியம் பற்றியும் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

பேருந்துப் பயணங்களின்போது மோட்டல்களில் அல்லது கட்டணக் கழிவறைகளில் பேருந்து நிறுத்தப்படும்போது, அங்குள்ள கழிவறைகள் சொல்லும் கிராமப் புறங்களின் உண்மை நிகழ்வை. தண்ணீர்ப் பற்றாக்குறையும் சுத்தம் பேணாமையும் சிறுநீர்த் தொற்றைக் கொண்டுவந்து சேர்த்துவிடுமே. பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் நம் மக்களுக்கு சொல்லித் தர வேண்டியிருக்கிறது.

கிராமங்களில் அரசு கட்டித் தந்திருக்கும் கழிப்பறைகளும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல், பூட்டியே வைக்கப்பட்டிருப்பதும், அவை தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு வைக்கும் இடமாக மாறியிருப்பதும் அந்த மக்களின் மாறாத மனநிலையையே எடுத்துக் காட்டுகின்றன. வீட்டில் கழிப்பறை இருந்தாலும், ’காற்றோட்டமாக’ வெளியில் சென்று வருவதையே விரும்புவதாகச் சொல்லும் சில கிராமத்துப் பெண்களின் மனநிலையை என்னென்பது?

கிராமங்கள் இருக்கட்டும். நகரங்களிலும் பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பிட வசதி என்பது மிக மிகக் குறைவு. அலுவலகங்களில் கழிப்பிட வசதி இருந்தாலும், மாதவிலக்குக் காலங்களில் நாப்கின்களைப் போடுவதற்கான குப்பைக் கூடைகள் இல்லாதது பற்றி யாரிடம் நொந்துகொள்வது? அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பல தோழிகள் இந்த இடர்ப்பாட்டை எதிர்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பெண்களே தங்கள் சொந்தக் கைக்காசு செலவழித்துக் குப்பைக் கூடைகள் வாங்கி வைத்ததாகவும், சில நாட்களின் பின் அந்தக் கூடைகள் காணாமல் போவதையும் வருத்தத்துடன் சொல்வார்கள்.

கிராமங்களில் வீடுகளுக்குள் கழிவறைகளைக் கட்டிப் பயன்படுத்துவதில் சாதி சார்ந்த மனோபாவமும் உள்ளீடாக ஒளிந்திருப்பதை மறுப்பதற்கில்லை. அதை யார் சுத்தம் செய்வது என்பது ஒருபுறம். நாம்தான் அதற்காகவே குறிப்பிட்ட சாதியினரை ஒதுக்கி வைத்திருக்கிறோமே. தீண்டாமை இன்னமும் கைக்கொள்ளப்படும் இந்தச் சமூகத்தில் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாத மனநிலையும் மனத்தடையும்கூட, கழிப்பறைகளை அவர்கள் மறுப்பதற்கான காரணிகள். காந்தி முன்னெடுத்த போராட்டங்களில் எல்லாம் கழிப்பறை பற்றியும், அதன் தூய்மை பற்றியும், அதை நாமே சுத்தம் செய்வது பற்றியும் பேசிய பேச்சுகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. மற்றொன்று கலாசாரத்தின் பெயரால் மறுப்பது. வீட்டுக்குள் கழிவறை என்பது, வீட்டுக்கான புனிதத்தைக் குலைத்துவிடும் என்பது. ‘மனு ஸ்மிருதி’ குறிப்பிடுவதும் இதைத்தானே.

சீமா படேல் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாபூர் கிராமத்துப் பெண். கழிப்பறை வசதி வேண்டுமென்று அவர் கேட்ட பின்னும் அதைக் காதில் போட்டுக்கொள்ளாத கணவன், புகுந்த வீட்டாரின் அலட்சியத்தால் வீட்டையே புறக்கணித்து வெளியேறினார். கணவன் அதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போக, ‘கழிவறை கட்டித் தருவதில் என்ன சிக்கல்?’ என கோர்ட் எதிர்க்கேள்வி கேட்டது. வேறு வழியின்றி கழிப்பறை கட்டிய பின், 20 மாதங்களுக்குப் பின் சீமா படேல், குழந்தையுடன் கணவன் வீடு திரும்பியிருக்கிறார். கோர்ட் தலையிட்டுக் கேள்வி கேட்டதாலேயே கழிவறை கட்டப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு வருத்தத்துக்குரியது. அடிப்படை உரிமைகூட கோர்ட்டுக்குப் போனால்தான் கிடைக்கும் போலிருக்கிறது. அதைக் கட்டுவதற்கு உதவியவரும் உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவி என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

கொசுறு: இந்தியா முழுமைக்கும் இதே நிலை என்றால், நம் தமிழக நிலை என்ன? தமிழகத்தில் 49 சதவீதம் வீடுகளில் கழிப்பறை இல்லை என்று இந்தியக் கணக்குத்துறை அலுவலரின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. அட, நமக்கு டாஸ்மாக் போதாதா?

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

குறள் இனிது: கொஞ்சம் நடிங்க பாஸ்!

Return to frontpage

சோம.வீரப்பன்
 

நீங்கள் தண்ணீர் இருக்கும் குளமோ, ஏரியோ, ஆறுகளைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிறது? அங்கு மீன்களைப் பார்த்து ரசித்திருக்கிருக் கிறீர்களா? அவைகளைப் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசைப்பட்டிருக்கிறீர்களா? தூண்டில் இல்லாமலே மீன் பிடிக்க என்றாவது முயன்றதுண்டா? நாம் கரையோரத்தில் அமர்ந்து காலை நனைக்கும் பொழுதும், தண்ணீரில் நிற்கும் பொழுதும், பல மீன்கள் அருகில் வந்தாலும், நம்மால் ஒன்றைக் கூட பிடிக்க முடியாது. நமது கால் விரல்களைக் கடிக்கும் மீன்கள் கூட, நாம் சிறிது அசைந்தாலும் உடனே ஓடி விடும். அப்படியிருக்க கொக்கு மட்டும் எப்படி அவற்றைப் பிடித்து விடுகிறது?
கொக்கு மீன் பிடிக்கும் முறை வித்தியாசமானது. மீனைத் தேடி, அது அங்கும் இங்குமாக நடக்காது. ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும். நடிகர் திலகத்திற்கு ஒப்பான நடிப்பிருக்கும். அது சிலை போல நிற்பதால் மீன்கள் பயமின்றி அதனருகில் செல்லும். ஆனால், சிறிய மீன்களைக் கண்டும் காணாதது போல அது விட்டுவிடும். தனக்குத் தேவையான மீன் அருகில் வந்தவுடன் சட்டென அதனை ஒரே குத்தாகக் கொத்தி விடும். சிறிது தாமதித்தாலும், குறி தப்பினாலும் மீன் நழுவி ஓடி விடுமே!
காவல் துறையினர் இந்த மாதிரி பாவ்லா காட்டி பிடித்த குற்றவாளிகள் ஏராளம். சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலக் கொள்ளையரை சென்னைப் புறநகரில், கூண்டோடு பிடித்தது ஞாபகம் இருக்கும். சமீபத்தில் டெல் நிறுவனம் EMC2 நிறுவனத்தை வாங்குவதற்கு இரகசியமாக செயல்பட்டதையும், ஆனால் அதையும் மீறி அச்செய்தி கசிந்ததால், அவற்றின் பங்கு விலைகள் பாதிக்கப்பட்டதையும் படித்து இருப்பீர்கள். நாணயமில்லாத பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கும் இந்த முறை மிகவும் உபயோகமானது.
வணிகமோ, அலுவலகமோ, போட்டியாளரை, எதிரியை வீழ்த்த வேண்டுமென்றால், ஒன்றும் செய்யாததுபோல் கொஞ்சம் நடிப்பதன் மூலம் அவரை அசர வைப்பது நன்று. அசிரத்தையாக இருப்பவரைத் தானே வெல்வது எளிது. ஆனால் எதிரி சுதாரிக்கும் முன்பே அவரைத் தாக்க வேண்டும். எதிர்பார்க்காத எதிரியிடமிருந்து, எதிர்பார்க்காத நேரத்தில் விழும் அடியில்தான் வலியும் அதிகம். பாதிப்பும் அதிகம். அத்துடன் என்ன நடக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்வதற்கு முன்பே, வேலையை முடித்துக் கொள்ள வேண்டும். உங்கள் தாக்குதலின் போது குறி தப்பக் கூடாது. மேலும் வேகமும், பலமும் இல்லையென்றால் மீன் வழுவுவது போல, எதிரியும் தப்பித்து விடுவார். நீங்கள் எடுக்கும் நடவடிக்கை, எதிரியை முழுவதுமாக முடிப்பதாக இருக்க வேண்டும். அப்புறம் என்ன? உங்களுக்கு வெற்றிதான்!!
காரியம் சாதிக்க நினைப்பவர்கள், சரியான காலம் வரும் வரை கொக்கைப்போல ஒடுங்கி இருக்க வேண்டும்; நேரம் வாய்க்கும் பொழுது, கொக்கு பாய்ந்து மீனை இரையாக்கிக் கொள்வது போல, விரைந்து செயல்பட வேண்டுமென்கிறார் வள்ளுவர்.
கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து (குறள் 490)
somaiah.veerappan@gmail.com

சென்னையில் 82% மழை அதிகம்


DINAMANI

By சென்னை,

First Published : 17 November 2015 02:49 AM IST


வட கிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது, சென்னையில் தற்போது வழக்கத்தை விடக் கூடுதலாக 82 சதவீத அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 28-இல் தொடங்கியது. பருவ மழை தொடங்கியது முதல் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.
இதனால், அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் 480 மி.மீ., மழையும், காஞ்சிபுரத்தில் 340 மி.மீ. மழையும் பதிவானது.
அதைத் தொடர்ந்து, தென் மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டிருந்தத் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், வட மாவட்டங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்தது.
தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பதிவானது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், அதிகபட்சமாக 370 மி.மீட்டர் மழை பெய்தது.
சென்னையில் 82 சதவீதம் கூடுதல்: தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 16-ஆம் தேதி வரையில் சராசரியாக 382.7 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இது, வழக்கமான சராசரியைவிட 57.3 மி.மீ. குறைவாகும்.
வட கிழக்குப் பருவமழை காலத்தில், சென்னை மாவட்டத்தில் வழக்கத்தை விட 82 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதாவது, 16 நாள்களில் (அக் 1-16) சென்னை மாவட்டத்தில் 910 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் வழக்கத்தை விட கூடுதலாக 1 சதவீதம் பெற்று, 520 மி.மீட்டர் அளவுக்கு மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

புவி வெப்பமயமாதல் - ஒரு தவறான கணிப்பு

Dinamani

By ஆர். சாமுவேல் செல்வராஜ்

First Published : 17 November 2015 02:00 AM IST


இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்னைகளில் (பயங்கரவாதத்தை விட) ஒன்று புவி வெப்பமயமாதல். மனித நடவடிக்கைகளினால் பசுமை இல்ல (குறிப்பாக கார்பன்) வாயுக்களின் அளவு அதிகரித்து
வருகிறது.
இந்த வாயுக்களின் பெருக்கத்தினால் புவி வெப்பமடைகிறதாகவும், கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், பருவமழை பொய்த்து போகுதல் போன்ற காலநிலை தொடர்பான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவதாகவும் கருதி வந்த அறிஞர்களுக்கு நாசா, தற்போது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
புவியின் வெப்பநிலை உயர்வுக்கும், கடல்மட்ட உயர்விற்கும் கார்பன் ஒரு முக்கிய காரணி இல்லை எனவும், இவை அனைத்தும் இயற்கை நிகழ்வுகளே என பல ஆய்வுகள் கூறத் தொடங்கியுள்ளன. புவி வெப்பமயமாதலுக்கும் கார்பனுக்கும் தொடர்பு இல்லை என கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. புவி வெப்பமயமாதலுக்கு என்னென்ன மனித நடவடிக்கைகள் முக்கியக் காரணிகளாக உள்ளன என்பதைப் பார்ப்போம்:
= பசுமை இல்ல வாயுக்களின் பெருக்கம் (கார்பன் - டை - ஆக்ûஸடு, மீத்தேன், ஓசோன், நைட்ரஸ்-ஆக்ஸைடு, குளோரோ-புளோரோ கார்பன்) - இது வெப்பத்தை அதிகரிக்கும் மனித விளைவு.
= வாகனங்கள், மற்றும் தொழிற்சாலை பெருக்கத்தினால் வெளியேறும் தூசுக்கள் (Dust) - இது வெப்பத்தைக் குறைக்கும் மனித விளைவு.
= நகர வெப்பத்தீவு (Urban Heat Island) விளைவு என்ற புதிய நடவடிக்கையால் அதாவது உயரமான கட்டடங்கள் கட்டுதல், காடுகள் அழிக்கப்படுதல், தார்ச் சாலைகள் போன்றவை உள்ளூர் வெப்பத்தை அதிகரிக்கின்றன.
= தேவையற்ற மரங்கள் வளருதல், அதாவது கருவேல மரங்கள், யூகலிப்டஸ், ஆகாயத் தாமரை போன்ற மரம், செடி, கொடிகளினால் நிலத்தடி நீர் பற்றாக்குறை- பருவமழை பொய்த்தல் போன்றவை ஏற்படுதல் - இதுவும் ஒரு புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணி ஆகும்.
= குளிர்சாதன கருவிகள் மூலம் வெளியேறும் வேதிப்பொருள்கள் வளிமண்டல மேல்மட்ட ஓசோனை குறைப்பதால், தரைமட்டத்தில் பல காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவும் ஒரு மனிதனின் தொழில் புரட்சியினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றமே.
= வாகனங்கள் மற்றும் தொழில்சாலை கழிவுகளினால் தரைமட்டத்தில் குறைவாக இருக்க வேண்டிய ஓசோன் வாயு அதிகரித்து வருகிறது. இதனால் கூட புவியின் வெப்பம் உயரும்.
= பெரிய அளவிலான விளைச்சல் நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு (கார் தொழில்சாலை, வேறு பல தொழில்சாலை) பயன்படுத்துதல். - இதுகூட நிலத்தடி நீரையும், நீர்மட்டத்தையும் பருவமழையை பாதிக்கும் காரணியாக உள்ளது.
= காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்தல், செல் கோபுரங்கள் இவை கூட சிறிய மற்றும் உள்ளூர் அளவில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பல மனித நடவடிக்கைகள் புவியின் வெப்பத்தை உயர்த்தும் நிலையில் கார்பன் அளவைக் கொண்டு புவியின் வெப்பத்தை கணிப்பது ஒரு தவறான அறிவியல் கருத்தாகும்.
= புவி வெப்பத்திற்கும் கார்பனுக்கும் உள்ள தொடர்பை அறிஞர்கள் மறுப்பதற்கு இரண்டாவது காரணம் : காலநிலை வரலாற்றில், 30 ஆண்டுகளுக்கு உயரும் வெப்பநிலை, அடுத்த 30 ஆண்டுகளில் குறைகிறது.
அதாவது, 1910-1940 வரையிலான காலக்கட்டத்தில் ஏறும் முகத்தில் இருந்த வெப்பநிலை 1940-70 வரையிலான காலக்கட்டத்தில் குறைந்து காணப்பட்டது. அதன்படி 1970-2000 மீண்டும் வெப்பம் உயர்ந்தது. மறுபடியும் 2000-2030 காலக்கட்டத்தில் வெப்பம் குறைந்து வருகிறது.
காலநிலை அறிஞர்கள் கூறும் கருத்து காலநிலை வரலாற்றின் புள்ளி விவரத்திற்கு எதிராக உள்ளது. அதாவது, வெப்பநிலை மாறிமாறி உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
= வாகனங்கள் மற்றும் தொழில்சாலைகள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களுக்கு சமமாக மிகவும் நுண்ணிய தூசுக்களும் (Aerosol) காற்றில் கலக்கின்றன. வாயுக்கள் வெப்பத்தை உயர்த்துகிறது என்றால், தூசுக்கள் வெப்பத்தைக் குறைக்கும். இந்த எதிரெதிர் விளைவுகள் அறிஞர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
= நகரங்களில் மேற்கொள்ளப்படும் நகர வளர்ச்சி, அதாவது கட்டடங்கள், தார்ச்சாலைகள் போன்றவை ஓர் இடத்தின் வெப்பத்தை உயர்த்துகின்றன. இந்நிலையில் ஓர் இடத்தின் வெப்பநிலையைத் தீர்மானிப்பது அங்கு நிலவும் பசுமை இல்ல வாயுக்களின் அளவா? அல்லது நகர வெப்பத் தீவு விளைவா?
= பசுமை இல்ல வாயுக்களின் பெருக்கத்தினால் வெப்பநிலை உயர்ந்தால் கடல்நீர் ஆவியாதலும் அதிகமாகும். இந்த ஆவியாதலினால் மேகங்கள் அதிகளவில் தோன்றும். இதனால், சூரிய ஒளி புவிக்கு வருவது தடுக்கப்படும். இந்நிலையில் புவி வெப்பமயமாதலை குறித்தான அறிவியல் ஆய்வுகள் இன்னும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன.
= முடிவாக, அறிஞர்கள் மறுக்கும் முக்கியக் கருத்து என்னவென்றால், கார்பன் வாயுக்களின் பெருக்கத்திற்கு ஏற்ப, புவி அகச்சிவப்பு கதிர்களின் அளவு பெருகுவது இல்லை.
இந்நிலையில், புவி வெப்ப உயர்வை கார்பன் வாயுக்களின் அளவோடு தொடர்புபடுத்தும் அறிவியல் கருத்துகள் இன்னும் பொதுமக்கள் இடையே ஒரு குழப்பத்தையும், அச்சத்தையுமே ஏற்படுத்தி வருகின்றன.
அதாவது, குருடர்கள் யானையைத் தடவியது போன்றுதான் புவி வெப்பமயமாதலுக்கும் கார்பனுக்கும் இடையே உள்ள தொடர்பு அமைந்துள்ளது.

அனுமதிப்பதில் தவறில்லை!


Dinamani

By ஆசிரியர்

First Published : 17 November 2015 01:55 AM IST


வெளிநாட்டவர் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அனுமதியில்லை என்று மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப மையங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அவர்களைப் பொருத்தவரை இது வணிகம். வெளிநாட்டினர் மூலம்தான் இந்த வணிகம் சாத்தியம்.
வெளிநாட்டினர் இங்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு ஆகும் செலவு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை. அது மேலை நாடுகளின் மருத்துவச் செலவுடன் ஒப்பிடும்போது மிகமிகக் குறைவு. ஆண்டுக்கு 2,000 குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறக்கின்றன. இந்தியர்களில் சிலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகின்றனர் என்றாலும், அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆகவே, செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப மையங்கள் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்க்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், தாய்லாந்து நாட்டில் ஒரு வாடகைத் தாய்க்கு நேர்ந்த துயரச் சம்பவம்தான் அரசின் முடிவுக்குக் காரணம். ஐம்புவா என்ற அந்தப் பெண்மணி ஆஸ்திரேலிய தம்பதிக்காக குழந்தை பெற ஒப்புக் கொண்டார். கரு வளர்ந்த நிலையில் அது இரட்டையர் எனத் தெரிய வந்தது. ஓர் ஆண், ஒரு பெண். ஆண் குழந்தை மூளைவளர்ச்சி குறைவான குழந்தையாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியதால், கருவைக் கலைக்க முடியாத நிலை, ஆஸ்திரேலியத் தம்பதி, பெண் குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றனர். ஆண் குழந்தையை வளர்க்க போதிய நிதி இல்லாமல், இந்த வாடகைத்தாய் வேண்டுகோள் விடுத்தபோது இந்த விவகாரம் உலகம் முழுதும் பேசப்படுவதாக மாறியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசு, வெளிநாட்டவர் அங்கே வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தடை செய்துள்ளது. தற்போது இந்தியாவும் அதேபோன்று தடை விதித்துள்ளது.
கடந்த மாதம் இந்தப் பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் "வணிக ரீதியிலான செயற்கைக் கருவூட்டலை ஆதரிக்கவில்லை' என்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. வாடகைத் தாய்க்கான மருத்துவச் செலவுகளுடன், குழந்தையைச் சுமந்து பெற்றுக் கொடுத்ததற்குப் பணமும் தரப்படும் என்கிற நிலையில், இதை அந்தத் தாயின் சுதந்திரமாகத்தான் கருத வேண்டுமே தவிர, அரசு ஏன் தடுக்க வேண்டும் என்பது புரியவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாகவே வெளிநாட்டினர் பலர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்தியா வருவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 3,000-க்கும் அதிகமான செயற்கைக் கருவூட்டல் மையங்கள் இவர்களை நம்பிக் கடை விரித்திருக்கின்றன. உலகிலேயே, சட்டப்படி வணிகரீதியிலான செயற்கைக் கருத்தரித்தலை அனுமதிக்கும் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுதான் அதற்குக் காரணம்.
இந்திய அரசு வெளிநாட்டினருக்குத் தடை விதித்ததற்குப் பதிலாக, கிடப்பில் உள்ள செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப (ஒழுங்காற்று) சட்டம் 2014-யை நிறைவேற்றினாலே போதும். இதில் பல்வேறு சிக்கல்களுக்கு இயல்பான முடிவுகள் எட்டப்படும். இச்சட்டம் மிகத் தெளிவாக விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, தம்பதியில் ஒருவர் மலடாக இருந்தால் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அனுமதிக்கப்படுவார். அவர் இந்தியராக, அல்லது இந்தியரைத் திருமணம் செய்த வெளிநாட்டவராக, அல்லது வெளிநாடு வாழ் இந்தியர் அல்லது புலம்பெயர் இந்தியர், இந்திய வம்சாவளியினராக இருந்தால் அனுமதிக்கப்படுவர். வாடகைத் தாய்க்கோ, குழந்தைக்கோ ஏற்படக்கூடிய பேறுகாலச் செலவும், பேறுகால அசம்பாவிதங்கள் அனைத்துக்கும் பொறுப்பேற்கும் விதமாகக் காப்பீடு செய்ய வேண்டும். வாடகைத் தாய்க்கு அளிக்கப்படும் தொகையை ஒப்பந்தமாக வழங்க வேண்டும்.
இதேபோன்று, வாடகைத் தாய்க்கும் நிபந்தனைகளை இச்சட்டம் விதித்துள்ளது. அவர் இந்தியக் குடிமகளாக இருக்க வேண்டும். 23 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராகவும், ஏற்கெனவே ஒரு குழந்தை பெற்று, அக்குழந்தைக்கு குறைந்தது 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே வாடகைத்தாயாக இருக்கலாம். வாடகைத்தாய் சுமக்கும் குழந்தைக்காக அவர் சினை முட்டை தானம் செய்வது கூடாது. வாடகைத் தாய், குழந்தையை ஏற்கும் தாய் ஆகியோருடைய ரகசியம் காக்கப்பட வேண்டும். குழந்தை பிறப்பு பதிவு செய்யும்போது, குழந்தையை ஏற்கும் தம்பதியே தாய் - தந்தையராகக் குறிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கலாம்.
இவ்வளவு தெளிவான சட்ட விதிமுறைகள் உள்ள ஒரு சட்டத்தை இன்னமும் நாம் நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. குறிப்பாக, தாய்லாந்தில் வெளிநாட்டவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடியாது என்று நிலை உருவான பின்னர், இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இந்தச் சட்டத்தை நிச்சயமாக விரைவில் கொண்டு வந்தாக வேண்டும்.
செயற்கைக் கருவூட்டல் என்பது இன்றைய அளவில் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 2,500 கோடி டாலர்கள் புழங்கும் தொழில். இவ்வளவு பணமும் வெளிநாட்டினரால்தான் இந்தியாவுக்குக் கிடைத்து வருகிறது. இந்தப் பணத்தின் மூலம் பெரும் பயனடைவது கருவூட்டல் மையங்கள்தானே தவிர, ஏழை வாடகைத் தாய் அல்ல. அதனால், ஏழை மகளிருக்குப் பாதுகாப்பும், உரிய பணமும் கிடைப்பதை அரசு, செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப (ஒழுங்காற்று) சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் உறுதிப்படுத்துவதுதான் இன்றைய தேவை. வாடகைத் தாய் மூலம் குழந்தை கேட்பவர் இந்தியரா, வெளிநாட்டவரா என்பதல்ல முக்கியம்.


Monday, November 16, 2015

Madras HC allows ineligible MDS students to complete course Updated: November 13, 2015 08:29 IST | Sureshkumar


The Hindu.. Chennai


Citing mistake on the part of Tamil Nadu Dr. MGR Medical University in implementing a notification prescribing 50 per cent marks as eligibility criteria for admission to Master of Dental Surgery (MDS), the Madras High Court has allowed students of four dental colleges to complete the course though they have been admitted flouting the rule.

Justice M.M. Sundresh passed the direction on a batch of petitions moved by four dental colleges challenging an order dated April 27, 2014 passed by the university cancelling the registration of students enrolled in MDS degree course as they failed to fulfil the eligibility criteria prescribed by the university.

Though the university issued a notification prescribing the eligibility in 2007 it failed to implement the same till 2014. Utilising the opportunity, private dental colleges continued enrolling students who scored below 50 per cent in undergraduate course.

As the university issued orders cancelling the registration of such ineligible students in 2014, the institutions approached the court claiming that there was delay on part of the university in intimating the decision. The petitioners also claimed that the students who were admitted in the academic year 2013-14 were in the verge of completing their course.

Opposing the plea, the university contended that the institutions have violated the regulations and now they cannot contend contrary. “Equity of law should prevail and therefore no interference is required,” counsel for the university said. Noting that the regulations would certainly govern the case of the petitioner institutions, the judge however said, “Had the regulations of 2007 been implemented strictly, the students of the petitioner institutions would not have been affected.” Considering the fact that the students are about to complete their course, Justice Sundresh set aside the order passed by the university with a direction to register them within eight weeks.


Cites mistake on part of university in implementing a notification prescribing 50 % as eligibility criteria

NEWS TODAY 2.5.2024