Monday, February 1, 2016

ஆண்களிடம் பெண்கள் முதலில் கவனிப்பது என்ன?......தம்பி

Return to frontpage

ஆதாம் காலத்தில் ஆரம்பித்து ஐபேட் காலம்வரை நீடிக்கும் புதிர்களுள் ஒன்று பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், ஆண்களிடம் அவர்கள் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுதான். இதில் பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய முயன்று தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். எது எப்படியோ ஆணுக்குப் பெண் புதிர்தான். அந்தப் புதிரைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும் விதத்தில் சமீபத்தில் ‘sortedd.com’ என்ற இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணை முதன்முதலில் பார்க்கும்போது அவரிடம் எதைக் கவனிப்பீர்கள், அவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் எதிர்பார்ப்பீர்கள் என்று நவநாகரிக மங்கையரிடம் கேட்டு அதை வீடியோ ஆக்கியிருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதில்களைக் கேட்டால் கொஞ்சமல்ல ரொம்பவே ‘ஜெர்க்’ஆகிவிடுவீர்கள்.

நிறைய பெண்கள் ஆண்களின் காலணிகளை, ஷூக்களைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். பாலிஷ் செய்த ஷூக்களைப் போட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரே ஜோடி சாக்ஸை ஒரு வாரம் போடுபவரா நீங்கள்? என்றால் பெண்களிடமிருந்து பல கிலோ மீட்டர் விலகிச் செல்லுங்கள். ஆம், நாற்றமடிக்காத சாக்ஸை அணிந்திருக்க வேண்டும் என்று பெண்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். மால், பப் போன்ற இடங்களுக்குச் சாதாரண காலணிகளைப் போட்டு வரும் ஆண்களையும் அவர்களுக்குப் பிடிப்பதில்லையாம். பளபளா இடங்களில் பளபளா ஷூக்கள்தான் போட்டுவர வேண்டுமாம்.

அது மட்டுமா, உடல் துர்நாற்றம், வேர்வை நாற்றம், வாய் துர்நாற்றம் என்றாலே முகம் சுளிக்கிறார்கள். பாவம், பேருந்துகளில் எவ்வளவு அவஸ்தைப் பட்டிருப்பார்கள். இருந்தாலும் பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகம்தான், இல்லையா. ரொம்பவும் வேர்த்து வடியக் கூடாது, வேர்வையைத் துடைப்பதற்குக் கையில் எப்போதும் கர்ச்சீஃப் வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கால்களைப் போலவே கைகளையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் பெண்கள். குறிப்பாக, அழுக்கு மியூசியமாக இருக்கும் நகங்களென்றாலே அவர்களுக்கு ரொம்பவும் அலர்ஜி.

இங்கிதமில்லாமல் ஆண்கள் செய்யும் அட்டூழியங்கள் எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ரோட்டில் எச்சில் துப்புவது, எக்குத்தப்பான இடங்களில் சொறிந்துகொள்வது போன்றவற்றையும் கவனித்து ஒதுக்குகிறார்கள்.

இப்படியாக சுத்தம் தொடர்பான விஷயங்கள் மட்டுமல்ல, ஆண்கள் நடந்துகொள்ளும் விதம், பாடி லாங்குவேஜ் போன்றவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். ஹோட்டல்களில் வெயிட்டர்களிடம் எப்படிப் பேசுகிறீர்கள், மற்றவர்களிடமும் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதையும் கவனிக்கிறார்கள். தெருவில் போகிற வருகிற பெண்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பவரா நீங்கள், எல்லாப் பெண்களையும் பார்த்து அசடுவழிபவரா நீங்கள்? அப்படியென்றால், கடைசிவரை நீங்கள் அதையேதான் செய்துகொண்டிருக்க வேண்டும்.உங்களிடம் எந்தப் பெண்ணும் ஃப்ரெண்ட் ஆக மாட்டார்.

இங்கிதமில்லாமல் பேசினால் பிடிக்காது, பயமுறுத்தும்படி பேசினால் பிடிக்காது, ரொம்பவும் நேர்மையாக, வெளிப்படையாகக் காட்டிக்கொண்டால் பிடிக்காது, ரொம்ப நல்லவனாக இருந்தாலும் பிடிக்காது, கெட்டவனாக இருந்தாலும் பிடிக்காது, தப்புத்தப்பாக இங்கிலீஷ் பேசினால் பிடிக்காது, மோசமான ரசனைக்கும் நோ, ஆர்வக் கோளாறுக்கும் நோ, ஓவர் தன்னம்பிக்கைக்கும் நோ, ராமராஜன்மாதிரி கலர் காம்பினேஷன் டிரெஸ் போட்டாலும் நோ, முகத்தைப் பார்த்து, கண்களைப் பார்த்துப் பேச வேண்டும், கண்கள் வேறு எங்கேயும் அலைந்தால் ‘நோ’!

அப்பப்பா, மூச்சு முட்டுகிறதா?! அப்புறம் என்னதான் செய்ய வேண்டும் பாஸ் என்று பெருமூச்சுடன் கேட்கிறீர்களா? ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் இயல்புடன் இருங்கள், போதும்! இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதுதான் ஊத்திக் கொள்கிறது. கூடவே, சுத்தபத்தமாக இருங்கள். அப்போதுதான் அட்லீஸ்ட் பார்க்கவாவது செய்வார்கள்.

பெண்களெல்லாம் நம்மை அதிகம் பார்க்கவே மாட்டார்கள் என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன், இவ்வளவு தூரம் கவனித்திருக் கிறார்களே என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா? பாவம் சார் நீங்கள், இன்னும் ஒரு மில்லினியம் ஆனாலும் பெண்களை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஆண்கள் எல்லாவற்றையும் பார்ப்பவர்கள், அதனால் எல்லாவற்றையும் தவறவிடுகிறார்கள். பெண்களோ குறிப்பாகப் பார்ப்பவர்கள், தேவையானவற்றை மட்டும் பார்ப்பவர்கள், பார்க்காததுபோல் பார்ப்பவர்கள்.

ஆகவே, அவர்களால் துல்லியமாக இருக்க முடிகிறது. ஆனாலும், இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு ‘ஆகா, பெண்களைப் புரிந்துகொண்டுவிட்டேன்’ என்று துள்ளிக் குதித்துவிட்டு ‘ஹோம் ஒர்க்’ செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களைப் பார்த்து ‘என்னா இது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு’ என்றுதான் சொல்ல வேண்டும். அப்புறம் என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா? போங்க ப்ரோ, நீங்கள் நீங்களாகவே இருங்க ப்ரோ!

கொசுறாகச் சில கேள்விகள்: இதே கேள்வியைக் கிராமத்துப் பெண்களிடம் கேட்டால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? அவர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்?

வீடியோவுக்கான இணைப்பு: https://goo.gl/SKMzvw

வேண்டாமே தற்கொலைகள்!

Return to frontpage

தி.ஆனந்த்

சமீப காலங்களாக இயற்கை மரணங்களுக்கு நிகராகத் தற்கொலை மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன‌ என்பது அனைவரும் அறிந்ததே. தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒரு ப‌ங்கினர், வளரிளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

புள்ளி விவரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களும், தற்கொலை முயற்சியில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி, மற்ற மாணவர்களைப் போல‌ ஆங்கிலப் புலமை இல்லாததால் அங்கு சொல்லித் தரும் பாடங்கள் புரியவில்லை என்பதால் தற்கொலை என்ற செய்தி தொடங்கி, ஆந்திராவில் சாதியப் பாகுபாட்டால் ஒரு தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்டது, அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் பயின்ற மூன்று நர்சிங் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதுவரை செய்திகள் சொல்லும் யதார்த்தம் இதுதான்... மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து கொண்டே வருகின்றன!

ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள் என உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதாவது ஒவ்வொரு 40 நொடிகளுக்கும், ஒரு தற்கொலை நடக்கிறது. அதில் 12.5 சதவீத தற்கொலைகள் தமிழகத்தில் நடக்கின்றன.

படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகம், தற்கொலையில் முதல் இடத்திலிருப்பது கவலை தரும் செய்தி. பொதுவாகக் குடும்பப் பிரச்சினை, நோய், வரதட்சிணை, தேர்வில் தோல்வி, காதல் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தற்கொலை முடிவுக்குக் காரணமாக இருக்கும். சமீப காலமாக தந்தை அடித்தார், ஆசிரியர் வகுப்பறையில் சக மாணவர்கள் இருக்கும் போது திட்டினார் என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து இக்கால வளரிளம் பருவ மாணவர்களின் மனப்போக்கை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது.

வளரிளம் பருவத்தினரின் தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் மன அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மன அழுத்தத்தின் முக்கிய அறிகுறி, காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் உருவாவதுதான். ஆனால், ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கும்வரை இந்த மன அழுத்தம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதே உண்மை. தற்கொலை முயற்சி மனநோயின் முதல் அறிகுறியாகக்கூட இருக்கலாம் அல்லது மனநோய் பாதிப்பாலும் நிகழலாம்.

தற்கொலை எண்ணங்களைக் கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான மன தைரியம் தேவைப்படும். இக்கால இளம் பருவதினருக்கு மன தைரியம், சகிப்புத் தன்மை, கூடி வாழ்தல் போன்றவற்றை கற்றுத் தர‌ எந்தப் பெற்றோருக்கும் நேரமும் இல்லை நாட்டமும் இல்லை. இதனால் அவர்கள் சிறு வயதில் இருந்தே மேற்கண்ட நற்குணங்களைப் பெறாமல் ஒரு பொம்மைக் குழந்தைகளைப் போலத்தான் சமுதாயத்தில் வலம் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு சிறு பிரச்சினை ஏற்படும்போது மன உளைச்சல் ஏற்பட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்குத் தயாராகிறார்கள்.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தற்கொலைதான் தீர்வு என்ற முடிவைத் தற்கால இளைஞர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. எந்தப் பிரச்சினையையும் மன தைரியத்துடன் போராடினால் எளிதில் அப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது?

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் போனால் படிப்பு, படிப்பு... விளையாட்டு வகுப்புகள் என்பது பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பு அட்டவனைகளில் மட்டுமே இருக்கும் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. மேலும் பள்ளிகளில் 'வாழ்க்கைக் கல்வி முறைகள்' என்ற உளவியல் சார்ந்த வகுப்புகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்தது. இது போன்ற உளவியல் சார்ந்த வாழ்க்கை முறை கல்வியைக் கற்கும்போது மாணவர்கள் மன அளவில் புத்துணர்ச்சி பெற்று, தவறான முடிவுகளை எடுக்காத வண்ணம் மன தைரியத்துடன் இருப்பர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் போனால் படிப்பு, படிப்பு... விளையாட்டு வகுப்புகள் என்பது பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பு அட்டவனைகளில் மட்டுமே இருக்கும் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. மேலும் பள்ளிகளில் 'வாழ்க்கைக் கல்வி முறைகள்' என்ற உளவியல் சார்ந்த வகுப்புகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்தது. இது போன்ற உளவியல் சார்ந்த வாழ்க்கை முறை கல்வியைக் கற்கும்போது மாணவர்கள் மன அளவில் புத்துணர்ச்சி பெற்று, தவறான முடிவுகளை எடுக்காத வண்ணம் மன தைரியத்துடன் இருப்பர்.

மேலும் முறையான உணவு, மன இறுக்கத்தைப் போக்கும் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சி முறைகள் வாழ்க்கையை வளமாக்கும். இயந்திரத்தனமாக வாழும் வளரிளம் பருவத்தினரும், குழந்தைகளும் வாரத்திற்கு ஒரு முறையாவது அதில் இருந்து விலகி, குடும்பத்தினரோடு கடற்கரைப் பகுதி, பூங்கா அல்லது உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் நிலை இன்னும் மோசம். சாதி, மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடுகளும் மாணவர்களின் மனதில் புகுந்து விடாமல் ஒருவருடன் ஒருவர் நன்றாகப் பழகி சமூகத்தில் சிறந்த குடிமக்களாக வர வேண்டும் என்பதுதான் உறைவிடப் பள்ளிகளின் அடிப்படையாக இருக்க வேண்டும்.

ஆனால், இங்கும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்படி தனி அறைகள் ஒதுக்கப்படுகின்றன. நன்றாகப் பேசிப் பழகுவதற்கு வாய்ப்புள்ள விடுதிகளிலும் தனித்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். தற்கொலைகளுக்குத் தனிமையும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

சரி, கூட்டாக இருந்தால் பிரச்சினை இல்லையா என்று கேட்டால், அதிலும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் பிரச்சினைகளை மீறி நண்பர்களின் ஆதரவு, ஆறுதல், அரவணைப்பு, பொழுதுபோக்கு, கலந்துரையாடலுக்கான வாய்ப்பு என நிறைய நன்மைகள் இருக்கின்றன.

தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை உடைய நூலகத்தை ஏற்படுத்துவது, ரசனையை மேம்படுத்தும் உலகத் திரைப்படங்களைத் திரையிடுவது, சக மனிதர்களின் மீதான நேசத்தை வளர்க்கும் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வது, எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்வதற்கு வழிகாட்டும் பல்வேறு துறை நிபுணர்களை அழைத்து வந்து பேச வைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் விடுதிகளில் ஒரு புதிய சூழலை உருவாக்க முடியும். அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். பாதுகாப்பானதாகவும் இருக்கும்!

- கட்டுரையாளர், திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி எனும் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வந்த அந்த கிராமத்தில் பல விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டவர் இவர்.

தொடர்புக்கு: anandt.tanand@gmail.com

ஆ'வலை' வீசுவோம் 17 - ஆங்கில அகராதிகளின் 'கூகுள்'!

சைபர்சிம்மன்

இணைய தேடலின் ஆற்றலையும் வீச்சையும் உணர்த்தும் அருமையான ஆங்கில அகராதி தேடியந்திரம்.

இணைய அகராதிகளை தேடியந்திரமாக கொள்ள முடியுமா? வார்த்தைகளுக்கான பொருள் தேட உதவும் தன்மை காரணமாக இவற்றை தேடியந்திரமாக கருதலாம் என்றாலும், அகராதிகளின் இணைய வடிவம் என்பதால், இவற்றை தேடியந்திரம் கீழ் வகைப்படுத்த வேண்டுமா என்றும் யோசிக்கலாம்.

அச்சு வடிவிலான அகராதிகளில் இருந்து இணைய அகராதிகள் பெரும் பாய்ச்சலாக இருப்பதை 'தி ஃபிரி டிக்‌ஷ்னரி' அல்லது 'யுவர் டிக்‌ஷனரி' அளிக்கும் விரிவான தேடல் வசதிகளில் இருந்தே புரிந்துகொள்ளலாம். பாரம்பரிய ஆங்கில அகராதிகளான ஆக்ஸ்போர்டு, மேக்மில்லன் போன்றவற்றின் இணைய அகராதிகளும் கூட காகித பக்கங்களின் வரம்பில் இருந்து விடுபட்டு டிஜிட்டல் பரப்பில் புதிய பரிமாணம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

எனவே, அகராதிகளை வார்த்தைகளுக்கான தேடியந்திரமாக கொள்ளலாம். அப்படியே இதில் இலக்கண சிக்கல் இருப்பதாக தோன்றினாலும் கூட, 'ஒன்லுக்' அகராதியை நிச்சயம் தேடியந்திரமாக கருத வேண்டும். ஏனெனில் ஒன்லுக் அகராதிகளின் அகாரதி - இணையத்தின் பேரகராதி. இணையவாசிகளுக்கு எளிதில் புரியக்கூடிய மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இது அகராதிகளின் கூகுள்!

எளிமைக்கு பின்னால்...

ஒன்லுக் முகப்பு பக்கத்தில் இருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். கூகுளின் முகப்பு பக்கம் போலவே இதன் முகப்பு பக்கமும் எளிமையாக இருப்பது தற்செயலானது அல்ல; அந்த எளிமை தான் தேடியந்திரங்களுக்கான முக்கிய அம்சமும் கூட!

தி ஃபிரி டிக்‌ஷனரி அகராதியை பயன்படுத்தியிருக்கிறீர்களா? அது அகராதி போலவே இருக்காது. மாறாக, ஒரு வலைவாசலின் தோற்றத்துடன் அது வரவேற்கும். வார்த்தைகளுக்கான தேடல் கட்டம் மேல் பகுதியில் இருக்க மற்ற முகப்புப் பக்கம் முழுவதும் எண்ணற்ற அம்சங்களாக நிறைந்திருக்கும். மற்றொரு மிகச் சிறந்த இணைய அகராதியான யுவர் டிக்‌ஷனரியும் இதே ரகத்தை சேர்ந்தது தான். ஆனால் இதன் முகப்பு பக்கம் இப்போது சீரமைக்கப்பட்டு நவீன வடிவமைப்புடன் மேம்பட்டிருக்கிறது. தெளிவாக, குழப்பமில்லாத வகையிலான அகராதி எனும் வர்ணனையுடன் இதன் தேடல் கட்டம் நடுநாயகமாக அமைந்திருக்கிறது என்றாலும் கூட, இதிலும் கூட, வார்த்தை பட்டியல், மேற்கோள்கள், உதாரணங்கள், வார்த்தை தேடல் என கூடுதல் அம்சங்கள் அநேகம் இருக்கின்றன.

ஆனால், ஒன்லுக் முகப்பு பக்கம் மிக எளிமையாக தேடல் கட்டத்துடன் காட்சி அளிக்கிறது. அதன் கீழ் வழிகாட்டுவதற்கான தேடல் உதாரணங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. ஆனால், தோற்றத்தை கண்டு ஏமாந்துவிடக் கூடாது. இதன் தேடல் கட்டத்தில் பொருள் தெரிய வேண்டிய வார்த்தையைக் குறிப்பிட்டு தேட முற்படும்போதுதான் இதன் அற்புதமே தெரியவரும். அல்லது தேடல் உதாரணங்களை கிளிக் செய்து பார்த்தாலும் இதன் தேடல் விஸ்வரூபம் எடுப்பதை பார்க்கலாம்.

தேடல் விஸ்வரூபம்

ஒரு குடிசையின் கதவை திறந்து உள்ளே சென்றால் மாடமாளிகை அறைகளுக்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய பிரமிப்பை இதில் தேடும்போது உணரலாம்.

உதாரணத்துக்கு, இதில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளுபேர்ட் எனும் வார்த்தையை கிளிக் செய்து பார்த்தால் அடுத்து தோன்றும் பக்கத்தில், 33 அகராதிகளில் இந்த வார்த்தைக்கான பொருள் இருக்கிறது என தகவலுக்கு கீழே வரிசையாக ஒவ்வொரு அகராதியில் தோன்றும் பொருளுக்கான இணைப்பு இடம்பெற்றிருக்கும்.

அதாவது, ஒன்லுக் நாம் தேடும் வார்த்தையை இணையத்தில் உள்ள அகராதிகள் அனைத்திலும் தேடிப் பார்த்து சலித்தெடுத்து, எந்த எந்த அகராதிகளில் எல்லாம் அந்த வார்த்தைக்கான அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளதோ அவற்றை எல்லாம் பட்டியலிடுகிறது. எந்த அகராதி தேவையோ அதை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். தேவை எனில் ஒன்றுக்கும் மேற்பட்ட அகராதி விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

பரவலாக அறியப்பட்ட ஆக்ஸ்போர்டு, மெரியம் வெப்ஸ்டர்ஸ், மேக்மில்லன் போன்ற அகராதிகள் தவிர வேறு பல அகராதிகளும் இந்தப் பட்டியலில் இருப்பதை பார்க்கலாம். இப்படி எல்லாம் கூடவா அகராதிகள் இருக்கின்றனவா? என வியப்பை ஏற்படுத்தும் வகையில் பல புதுமையான இணைய அகராதிகளையும் இதில் பார்க்கலாம். தேடும் வார்த்தையின் தன்மைக்கேற்ப அகராதிகளின் பட்டியல் மாறும் - பல புதிய அகராதிகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு இணைப்புடனும் அதற்கான விவரங்கள் மற்றும் மூல தளத்திற்கான சுட்டி இடம்பெற்றிருக்கும்.

அகராதி பட்டியல்

இந்தப் பட்டியலில் பொதுவான நோக்கிலான பொருள்களும், அதன் கீழ் குறிப்பிட்ட துறை சார்ந்த விளக்கத்தையும் பார்க்கலாம். மொழி ஆர்வம் கொண்டவர்களுக்கு சரியான வேட்டையாக அமையும். இல்லை, குறிப்பிட்ட பொருள் தான் தேவை எனில், இந்தப் பட்டியலை பார்ப்பதற்கு முன்னரே பொதுப் பிரிவில் அர்த்தம் தேவையா அல்லது அறிவியல், மருத்துவம், கணிணி போன்ற துறை சார்ந்த விளக்கம் தேவையா என தீர்மானித்து அதற்கேற்ப தேடிக்கொள்ளலாம்.

உதாரணமாக ஜாவா எனும் வார்த்தையை தேடும்போது, கணினி சார் விளக்கம் தேவை எனில் நேரடியாக 19 தொழில்நுட்ப அகராதிகளில் தேடிக்கொள்ளலாம். அதே போல ஆர்சனிக் எனும் சொல்லுக்கு மருத்துவத்தின் கீழ் ஆறு அகராதிகளை காணலாம்.

இவை தவிர வழக்கமான பெயர்ச்சொல், வினைச்சொல் போன்ற விளக்கங்களையும் அருகே பெட்டியாக பார்க்கலாம். அது மட்டும் குறிப்பிட்ட வார்த்தை தோன்றிய வரலாறு, அதன் பயன்பாடு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். கொச்சை வழக்கிலான பயன்பாடு, சொற்றொடர்களின் பயன்பாடு என்றும் கூடுதல் விவரங்கள் சிறகு விரிக்க காத்திருக்கின்றன.

தலைகீழ் தேடல்

இணையத்தில் மொத்தம் எத்தனை அகராதி இருக்கிறது என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இவ்வளவு ஏன்... பெரும்பாலானோருக்கு குறிப்பிட்ட துறை சார்ந்த இணைய அகராதிகள் இருப்பது கூட தெரியாது. அதனால் என்ன, ஒன்லுக்கை பயன்படுத்துவது மூலம் அவை அனைத்திலும் தேடலாம்.

இந்தத் தேடலில் அநேகமாக ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தரிசனமோ அல்லது சின்ன கண்டுபிடிப்போ சாத்தியமாகலாம். சும்மா இல்லை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய அகராதிகளில் இருந்து தேடித் தருகிறது அல்லவா!

தேவை எனில் அகராதிகளின் பட்டியலையும் பார்க்கலாம். பொது அகராதிகள் மற்றும் துறை சார்ந்த அகராதிகள் என பட்டியல் விருகிறது. எந்த ஒரு வார்த்தைக்கும் குறிப்பிட்ட ஓர் அகராதியில் பொருள் தேடும் வசதியும் இருக்கிறது. நேரடியாக நமக்கு தேவையான வகையிலும் தேடலை கட்டமைத்துக்கொள்ளலாம்.

இவை தவிர, தலைகிழ் தேடலும் சாத்தியம். அதாவது ஏதேனும் விளக்கத்தை சமர்பித்து அதற்கு பொருத்தமான வார்த்தையும் தேடலாம்.

இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்ன என்றால் ஒன்லுக் அகராதி தேடியந்திரம் 1996-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதுதான். துவக்கத்தில் ராபர்ட் வேர் என்பவர் இதை நடத்தியிருக்கிறார். அதன் பிறகு டபிபீபர்மேன் இதற்கு பொறுப்பேற்று இதன் தற்போதைய வடிவை கொண்டு வந்தார். டேட்டாமியூஸ் நிறுவனம் இதை பராமரித்து வருகிறது.

ஒன்லுக் தேடியந்திர முகவரி: http://www.onelook.com

சிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம்

Return to frontpage

கோபம், வருத்தம், ஆச்சரியம், சிரிப்பு, அழைப்பு, அன்பு உள்ளிட்ட ஆறு புதிய உணர்ச்சிகள், ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைய உள்ளன.

மக்களின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாலேயே, ஃபேஸ்புக் 160 கோடி மக்களைப் பெற்று, உலகத்தின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

அமெரிக்காவுக்கு வெளியே நடந்த 4 மாதப் பரிசோதனைக்குப் பிறகு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஆறு புதிய உணர்ச்சிகள் ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

கடந்த புதன்கிழமை ஃபேஸ்புக்கின் காலாண்டு வருமான அறிக்கையை வெளியிட்ட மார்க், இந்த தகவலை அறிவித்திருக்கிறார். ஆனால் எப்போது இம்முயற்சிகள் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் அதில் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து மார்க், "ஃபேஸ்புக்கின் பிரத்தியேக அடையாளமான கையை உயர்த்தும் சின்னம், லைக் பொத்தானாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு விஷயத்தை மக்கள் பார்க்கும்போது, உணர்ச்சிகளை வெளிப்படுத்த லைக் பொத்தான் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அனைத்து விதமான உணர்வுகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதன் மூலம் மக்கள் இப்போது இருப்பதை விட, இன்னும் அதிக நேரம் உணர்வுப்பூர்வமாக சமூக ஊடகங்களில் செலவிடுவார்கள் என்று நம்புகிறோம். உலகம் முழுக்க இவற்றை அறிமுகப்படுத்தும் முன், எங்கள் பொறியாளார்கள் மேலும் சில உணர்ச்சிகளை உருவாக்க வேண்டும்" என்று பேசினார்.

உணர்ச்சிகள் அடங்கிய ஃபேஸ்புக்கின் புது முயற்சிகள் சிலி, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், கொலம்பியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் பெறலாம்: விதிகளை தளர்த்தியது மத்திய அரசு

Return to frontpage

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய நடைமுறை குறித்து சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராகேஷ் அகர்வால் கூறியபோது, இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஒருவேளை ஆதார்- வாக்காளர்- பான் அடையாள அட்டைகள் இல்லை என்றால் வழக்கமான போலீஸ் விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

பணி நிரந்தரம் செய்வதாக உறுதி: ஒப்பந்த செவிலியர் உண்ணாவிரதம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடு

Return to frontpage

பணி நிரந்தரம் செய்வதாக அதிகாரிகள் அளித்த உறுதி யின்பேரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்கள் 3,447 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டம் அறிவிக்கப் பட்டது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது. தமி ழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.

உண்ணாவிரதம் இருந்தவர் களில் 8 பேர் நேற்று முன்தினம் மாலை மயங்கி விழுந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். இதையடுத்து, அன்றிரவே தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அது தோல்வி அடைந்ததால், பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக செவிலியர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், 2-ம் நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. நேற்றும் 4 செவிலியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களும் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை டிஎம்எஸ் வளா கத்தில் நேற்று நடந்தது.

இதில், முதல் கட்டமாக 806 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாகவும், மீதமுள்ளவர்களை இன்னும் 10 நாட்களில் பணி நிரந்தரம் செய்வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து ஒப்பந்த செவிலியர்கள் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.

10-ம் தேதிக்குள்..

10-ம் தேதிக்குள் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் 11-ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடருவோம் என்று ஒப்பந்த செவிலியர்கள் தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வழக்கு

Return to frontpage

டி.சுரேஷ்குமார்

ராபின் மெயின் மோசடி வழக்கு. இது, அரசியல் பெரும்புள்ளி ஒருவரும் சம்பந்தப்பட்ட வழக்கு. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 32 காலங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு என்ற இக்காரணத்தை தவிர வேறு சில காரணங்களுக்காகவும் இந்த வழக்கை சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்.

அவ்வாறு சற்றே காலச்சக்கரத்தை பின்னோக்கிச் செலுத்தினால், எம்.ஜி.ஆர். தலைமையிலான அப்போதைய ஆட்சியில் ராபின் மெயின் வழக்கு ஏற்படுத்திய சலசலப்பும், அதிமுகவில் ஜெயலலிதா, காளிமுத்து உள்ளிட்ட பலரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் தெரியவரும்.

1985 அக்டோபர் மாதம். அப்போதுதான் ராபின் மெயின் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அவர் அன்றைய வேளாண் அமைச்சர் காளிமுத்துவின் நண்பர்.

நண்பர் மீதான கைது நடவடிக்கையையும், அந்த வழக்கில் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் சற்றும் எதிர்பாராத காளிமுத்து, ஜெயலலிதா மீது விமர்சனங்களை குவித்தார்.

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை எம்ஜிஆர் மீண்டும் நியமித்ததற்கு கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காளிமுத்து தெரிவித்த எதிர்ப்பே மிகக் கடுமையானது. ஜெயலலிதாவை ஏன் கொள்கை பரப்புச் செயலராக நியமித்தீர்கள் என எம்.ஜி.ஆரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் திராவிட கட்சியின் அதிகாரத்தை முடிவு கட்ட ஜெயலலிதா சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

ராபின் மெயின் வழக்கில் வேண்டுமென்றே தன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிபிஐ தன் மீது அவ்வாறாக குற்றம் சுமத்த ஜெயலலிதாவே முழுமுதற் காரணமாக இருந்தார் எனவும் கூறினார்.

மேலும் ராபின் மெயின் வழக்கு தொடர்பாக தனது உதவியாளர் மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர், மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்திரா காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக்கவும் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார்.

காளிமுத்து - ஜெயலலிதா காரசார வாக்குவாதம்

இந்தக் குற்றசாட்டுகளையெல்லாம் திட்டமிட்டு மறுத்த ஜெயலலிதா, கற்பனை அடிப்படையில் காளிமுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் என்றார். இல்லை, நான் அவரது (ஜெயலலிதாவின்) அரசியல் எதிர்காலத்துக்கு சவாலாக இருப்பேன் என்பதற்காகவே என் மீது போலி குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா சுமத்துகிறார் என்ற பதில் வாதத்தை முன்வைத்தார் காளிமுத்து. இந்த வார்த்தைப் போர் ஓயவில்லை, "யாரோ ஒருவர் செய்த குற்றத்துக்கு நான் பலிகடா ஆக முடியாது" என்றார் ஜெயலலிதா. இவ்வாறாக பதிலுக்கு பதில் தொடர்ந்து கொண்டே இருந்தது.

எம்.ஜி.ஆர். வைத்த முற்றுப்புள்ளி:

தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 1985 அக்டோபர் 28-ம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை தாக்கல் செய்தனர். இந்த அதிரடி அறிவிப்பால், சலசலப்புகள் சற்று ஒய்ந்தன.

அந்த வேளையில்தான், சிபிஐ தனக்கு எதிராக ராபின் மெயினிடம் வாக்குமூலம் பெற சிபிஐ முயற்சிப்பதாக எம்.ஜி.ஆரிடம் முறையிட்டார் காளிமுத்து. இதனையடுத்து எம்.ஜி.ஆரும், சட்ட அமைச்சர் பொன்னையனும் காவல்நிலைய லாக்-அப் நிலவரம் அறிவதாக கூறி அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். எழும்பூர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்குதான் ராபின் மெயின் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியே சலசலப்பும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும் அவ்வப்போதும் எழுந்தும், மறைந்தும் இரண்டு ஆண்டுகள் உருண்டோடின.

1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்தார். அவருக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதுவரை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவந்த காளிமுத்து, ஜெயலலிதா தரப்பில் ஐக்கியமானார். பின்னர் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆனார். ஆனால், எல்லாம் அப்படியே சுமுகமாக செல்லவில்லை. திடீரென காளிமுத்து திமுகவுக்கு திரும்பினார். அங்கும் அவர் வெகு காலம் நீடிக்கவில்லை. மீண்டும் அதிமுகவுக்கே வந்தார்.

2001-ல் காளிமுத்துவை சட்டப்பேரவை சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 2005-ல் ராபின் மெயின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அப்போது, காளிமுத்து பதவி விலக வேண்டும் என வலுவான எதிர்ப்புக் குரல் உருவானது. ஆனால், சபாநாயகர் பதவியை காளிமுத்து ராஜினாமா செய்யத் தேவையில்லை என ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக காளிமுத்து மாரடைப்பில் இறந்தார்.

ராபின் மெயின் வழக்கில் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டனர்.

ஆனால், ராபின் மெயின் வழக்கு அதிமுகவில் ஏற்படுத்திய சர்ச்சைகளையும் சமரசங்களையும் யாரும் மறக்க முடியாது.

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...