Tuesday, November 29, 2016

வாடிக்கையாளர் பொய் புகார்: டாக்ஸி டிரைவரை போலீசிடம் இருந்து காப்பாற்றிய பெண்!


டாக்ஸிஸி

vikatan.com

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஹிமானி. அண்மையில் உபேர் டாக்ஸி ஒன்றில் ஹிமானி பயணித்த போது, வித்தியாசமான அனுபவத்தைச் சந்திக்க நேர்ந்தது. தனது அனுபவத்தை ஃபேஸ்புக்கில் ஹிமானி பதிவிட்டிருந்தார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 6,500 முறை ஹிமானியின் பதிவு ஷேர் செய்யப்பட்டுள்ளது. 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்திருந்தனர். ஏராளமானோர் ஹிமானியின் செயலை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த பதிவின் சுருக்கம் இங்கே...

சமீபத்தில் அலுலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக ஒரு உபேர் டாக்ஸியை புக் செய்தேன். டிரைவர் மிகவும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டார். அது ஒரு ஷேர் டாக்ஸி. என்னுடன் 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரும் பயணித்தார். காருக்குள் ஏறியதுமே, அந்த பெண் டிரைவிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். டிராப் செய்வது குறித்து டிரைவரிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். டிரைவர் பணிவாக பதில் அளித்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை. 'ஆப்பில் குறிப்பிட்டுள்ளபடி உங்களை டிராப் செய்துவிடுகிறேன் ' என டிரைவர் கூனார். ஆனால், அந்த பெண்ணின் கோபம் அடங்கவில்லை.

அவரது கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. மூன்றாம் தர வார்த்தைகளை உபயோகித்து டிரைவரைத் திட்டடியதோடு, 'அடித்து துவைத்து விடுவேன்' எனக் கொந்தளித்தார். டிரைவரின் நிலையோ பரிதாபமாக இருந்தது. அவர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அநத பெண் சமாதானமாகவில்லை. நானும் சமாதானப்படுத்திப் பார்த்தேன். 'இருவருக்கும் மிஸ் கம்யூனிகேசனால்தான் பிரச்னை. போதும் விடுங்கள்' என்றேன். அவர் காதில் ஏற்றிக் கொள்ளவேயில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த பெண், 'போலீஸ் நிலையத்துக்கு வண்டியை விடு, போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என்றார். மேலும் என்னிடமும்' நீங்களும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்' என்றார் .நான் உடனடியாக மறுத்தேன். தொடர்ந்து என்னையும் திட்டத் தொடங்கினார்.

டிரைவர் பரிதாபமாக என்னை நோக்கினார். பின்னர், 'என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் வேறு ஓரு காரை பிடித்து வீட்டுக்குச் செல்லுங்கள்' என்று என்னிடம் கூறினார். இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதத்தைப் பார்த்து 20க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடினர். இந்த சமூகம் பெண்ணுக்கு ஆதரவாகத்தானே பேசும். அந்த பெண்ணுக்கு ஆதரவாக டிரைவரை அனைவரும் திட்டினர். இதற்கிடையே இருவருமே அவசர போலீசை கூப்பிட, அந்த இடத்துக்கு இரு பெண் போலீசும் வந்தனர். பெண் போலீசாரிடம், டிரைவரின் நிலையை நான் விளக்கினேன் டிரைவர் பக்கம் தவறு இல்லை எனக் கூறினேன். 'போலீஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், என்னைக் கூப்பிடுங்கள் நான் டிரைவருக்கு ஆதரவாக வருவேன்' என அவர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் எனது செல்போன் எண்ணையும் கொடுத்தேன்.

மேலும் டிரைவருக்கு ஆதரவாக வாக்குமூலம் தரவும் நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். அப்போது, என்னிடம் வந்த பெண் போலீஸ், ''மேடம் நீங்களும் தயவு செய்து போலீஸ் நிலையம் வாருங்கள் அதுதான் நல்லது ''என எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்பு வரை நான் போலீஸ் நிலையம் சென்றது இல்லை. அப்போதே இரவு மணி 9 மணியாகி விட்டது. ஆனாலும், டாக்ஸி டிரைவரை அப்படியே விட்டு விட்டு போக என் மனம் இடம் கொடுக்கவில்லை. நானும் போலீஸ் நிலையத்துக்கு அவர்களுடன் சென்றேன்.

போலீஸ் நிலையத்தில், அந்த பெண் , டிரைவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். நான் போலீசாரிடம் உண்மையை விளக்கினேன். நிலைமையை புரிந்து கொண்ட போலீசாருக்கு டிரைவர் மீது இரக்கம் பிறந்தது. அந்த பெண்ணை போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேற சொன்னார்கள். இரவு 11 மணி வரை அவர் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறவில்லை. 'டிரைவர் தனது காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டால்தான், போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே போவேன்' என்று அடம் பிடித்துக் கொண்டு அங்கேயே இருந்தார்.

பெண்ணின் நடவடிக்கையால் கோபமடைந்த போலீசார், டிரைவரை தனி அறைக்கு கொண்டு சென்றனர். தனி அறையில் வைத்து டிரைவரை அடிப்பது போல வெளியே சத்தம் கேட்டது. உடனே நான் அங்கே ஓடினேன். அங்கே சென்று பார்த்த போதுதான் போலீசாரின் செயல் என் மனதை நெகிழ வைத்துவிட்டது. போலீசார் வெறும் தரையில் போட்டு பெலட்டை அடித்துக் கொண்டிருந்தனர், டிரைவரோ சிரித்தபடி வலியால் துடிப்பது போல கத்திக் கொண்டிருந்தார்.

அறைககுள் சென்ற என்னிடம், டிரைவருக்கு ஆதரவாக வந்ததற்காக போலீசார் நன்றி தெரிவித்தனர். 'நீங்கள் உண்மையை விளக்கவில்லை என்றால் கேஸ் போட்டிருப்போம். அவரது வாழ்க்கை பாழாகிப் போயிருக்கும்' என்றனர். போலீசார் டிரைவரை அடித்ததாக நினைத்து சமாதானமடைந்த அந்த பெண்ணும் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினார். நாங்கள் இருவரும் போலீசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டோம். நான் வீடு போய் சேர்ந்த பிறகு அந்த டிரைவருக்கு போன் செய்தேன். அவரது குரலில் ஒரு பாதுகாப்பு தெரிந்தது.

சூழலை புரிந்து கொண்ட மும்பை போலீசுக்கு நன்றி!

பொலிவான கலைவாணர் அரங்கம் தெரிந்திருக்கும்... பாழடைந்த கலைவாணரின் இல்லம் பற்றி தெரியுமா?


நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்.எஸ்.கிருஷ்ணன். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை பாடல்களாகவும் அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர். வெறும் நகைச்சுவையாக மட்டும் இல்லாமல், தனது பாடல்களால், பேச்சால் மக்களின் சிந்தனையைத் தூண்டியவர். இன்றும் மக்களின் மனதில் நீங்காமல் வாழும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று.

என்.எஸ்.கே. என அனைவராலும் பாசமுடன் அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்துக்கு ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டு, மிக அழகாய் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் என்.எஸ்.கே. வாழ்ந்த இல்லம் எப்படி இருக்கிறது என்பது தெரியுமா? நாகர்கோவிலில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் அந்த வீடு, இப்போது பராமரிப்பின்றி, பாழடைந்து கிடக்கிறது.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

முதல் கான்கிரீட் வீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட முதல் கான்கிரீட் வீடு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் "மதுர பவனம்" தான். இந்திய விடுதலைக்கு முன் அதாவது 1941ம் ஆண்டு இந்த வீடு கட்டப்பட்டது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் ஆச்சரியத்தோடு வியந்து பார்த்த வீடு இது. மொசைக் தரை போட்ட அந்த வீட்டை பார்க்க மாட்டு வண்டி கட்டி வந்தவர்கள் கூட உண்டு. இப்போதும் கம்பீரம் குறையாமல், அதே நேரத்தில் பராமரிப்பு இன்றி நிற்கிறது நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மதுர பவனம்.

நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தன் பெயரைப்போலவே வாழ்க்கையையும், 49 ஆண்டுக்குள் சுருக்கிக் கொண்டார். கலைவாணருக்கு இரண்டு மனைவிகள் ஒருவருக்கு காவிரி ஆற்றங்கரையிலும்,இன்னொருவருக்கு குமரிமாவட்டம் பழையாற்றங்கரை ஒழுகினசேரியிலும் வீடு கட்டினார் கலைவாணர்.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

பொக்கிஷங்களை பாதுகாக்கும் வீடு

அப்போது குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்போது சித்திரை திருநாள் மகாராஜா மன்னராக இருந்தார். சமஸ்தானத்தில் உள்ள சில பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டபோது நாடகம் நடித்து அந்த பணத்தை சமஸ்தானத்துக்கு கொடுத்தார் என்.எஸ்.கே. நாடகத்தில் கலைவாணரின் நடிப்பும், அத்துடன் அவரது சமூக சேவையும் பிடித்துப்போக அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்றும் இந்த வீட்டில் அந்த படம் பொக்கிஷமாய் உள்ளது. தியாகராஜ பாகவதர்கூட இந்த வீட்டில் வந்து பாடல் பாடியுள்ளார் என்கிறார்கள். வீட்டின் மொட்டை மாடியில் அழகாக அமைக்கப்பட்ட கோபுர கூண்டிலில் கலைவாணர் அமர்ந்திருப்பாராம்.

ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டுள்ளார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார்.வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார்.

புரியாமல் விழித்த பெண்ணிடம் என்.எஸ்.கே. சிரித்தபடியே சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன் மேல் இரக்கப்பட்டு கொடுத்தது. இப்போது கொடுத்தது உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

கலைவாணருக்கு வந்த 'சோதனை காலம்'

அள்ளி அள்ளி கொடுத்த கலைவாணருக்கு மிகப்பெரிய சோதனைக் காலம் வந்தது.லட்சுமிகாந்தன் கொலைச் செய்யப்பட்ட போது, லட்சுமிகாந்தனை யார் கொன்றிருக்கக்கூடும் என்னும் கேள்வி எழுந்தது. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் , ஸ்ரீராமுலு நாயுடு ஆகிய மூவரையும் அதற்குப் பொறுப்பாளிகளாக்கியது காவல் துறை. மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவாளிகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் ராஜாஜி, வி.டி. ரங்கசாமி ஐயங்கார், கோவிந் சாமிநாதன், கே.எம்.முன்ஷி, பி.டி.சுந்தர்ராஜன், சீனிவாச கோபால் மற்றும் பிரேடல் ஆஜரானார்கள். நீதிபதி மாக்கெட் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு நடந்த சமயத்தில் ஜூரி முறை இருந்தது. ஜூரி என்றால் நடுவர் குழு. பொது மக்களிலிருந்து 12 நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த நடுவர் குழு அமைக்கப்படும். வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு தான், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று முடிவெடுக்கும். அந்த முடிவை வைத்து நீதிபதி தகுந்த தீர்ப்பை அளிப்பார். இந்த முறை இப்போது நடைமுறையில் இல்லை.

வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு விசாரணையின் இறுதியில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை வெளியிட்டது. ஆனால் ஸ்ரீராமுலு குற்றம் ஏதும் இழைக்கவில்லை என்ற முடிவையும் நீதிபதிக்குத் தெரிவித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி நீதிபதி, தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். (இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு, 1955 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நாடு கடத்தும் தண்டனை நீக்கப்பட்டது).



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

மீண்டு வந்த என்.எஸ்.கே.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பாகவதரும் கலைவாணரும் ப்ரிவி கவுன்சிலில் இரண்டாவது மேல்முறையீடு செய்தார்கள். ப்ரிவி கவுன்சில் லண்டனில் இருக்கிறது. இந்தியாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்படாத நிலையில், இந்திய உயர் நீதிமன்றங்களுடைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பியவர்கள் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலைத்தான் அணுக வேண்டியிருந்தது. இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர் உச்ச நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு, ப்ரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்வது நிறுத்தப்பட்டது.

பாகவதர் மற்றும் கலைவாணருடய மேல்முறையீட்டை விசாரித்த ப்ரிவி கவுன்சில், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று கூறி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்தியாவில் மறுபடியும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேப்பல் மற்றும் ஷஹாபுதின் அடங்கிய பெஞ்ச் (Division Bench) முன்பு விசாரணைக்கு வந்தது. (இதில் நீதிபதி ஷஹாபுதின் பின்னாளில் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டார். அங்கே அவர் பதவி உயர்வு அடைந்து இறுதியாக பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்). இம்முறை குற்றவாளிகளுக்காக வாதாடியவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ். வழக்கை விசாரித்த புதிய பெஞ்ச், தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

பாழடைந்து நிற்கும் 'மதுர பவனம்'

இந்த வழக்கு முடியும்வரை பாகவதரும் கலைவாணரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையிலிருந்தனர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து விடுபடுவதற்கு பாகவதரும் கலைவாணரும் தாங்கள் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் செலவு செய்திருந்தனர். கலைவாணர் விடுதலையானபிறகு பல படங்களில் நடித்தார். புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். பல கலைஞர்களைத் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1957-ம் ஆண்டு தன்னுடைய 49 வயதில் கலைவாணர் காலமானார்.

கலைவாணர் .என்.எஸ். கிருஷ்ணன் அருமை பெருமையோடு ஆசையாகக் கட்டிய "மதுரபவனம்" நாகர்கோவில் ஏலத்திற்க்கு வந்த செய்தி கேள்வி பட்டதும் ஏராளமான போட்டி ஏற்பட்டது. செய்தி எம்.ஜி.ஆர் காதுக்கு எட்டியதும் துடிதுடித்துப் போய் கலைவாணர் எப்படி எவ்வாறு வாழ்ந்தவர் அள்ளிக் கொடுத்த வள்ளல் அவர் வீடு ஏலத்திற்க்கு வருவதா? அப்படி வந்தால் அவரது குடும்பத்தினர் எல்லோரும் வீட்டை வீட்டு வெளியேறி நடுத்தெருவுக்கு வந்து விடுவார்களே என பதறினார். ஆர்.எம்.வீரப்பன் மூலம் பணம் கட்டி வீட்டை மீட்டு அதன் குடும்பத்தாரிடமே ஒப்படைத்தார்.

தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் பிறந்து நாடறிந்த திரைப்பட கலைஞர், சிரிப்பு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் இது. இன்றும் அப்பகுதிவாசிகளின் அடையாள சின்னமாய் மாறி நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீட்டில் இப்போது அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.


படங்கள் : ரா.ராம்குமார்

“இவரிடமிருந்துதான் இரக்கக் குணத்தைக் கற்றார் எம்.ஜி.ஆர்!''- என். எஸ்.கே பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

- எஸ்.கிருபாகரன்

50-களின் மத்தியில் சென்னையின் மத்தியில் உள்ள அந்த பிரபல மண்டபம் பிரபலஸ்தர்களால் நிரம்பி வழிந்தது. விழா நாயகனை விழா எடுத்த பிரபலமும் விழாவுக்கு வந்த பிரபலங்களும் மேடையில் பாராட்டித்தள்ளினர். பணமுடிப்பும் பாராட்டும் குறைவின்றி கொடுக்கப்பட்டது விழாவின் நாயகனுக்கு. நடந்து முடிந்த அந்த விழா குறித்து திரையுலகமே பல மாதங்கள் ஆச்சர்யமாக பேசிக்கொண்டனர். காரணம் விழா நாயகன் சாதாரண ஒரு டிரைவர். தனக்கு பல ஆண்டுகள் காரோட்டிய டிரைவரை கவுரவிக்க அவருக்குப் பிரபலங்களைக் கூட்டி விழா எடுத்த அந்த மனிதநேயர் வேறு யாருமல்ல; கலைவாணர் என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை என்.எஸ்கிருஷ்ணன்.

நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், சாதாரண நாடக நடிகராக தன் வாழ்க்கையைத் தொடங்கி திரையுலகில் ஈடில்லாத நகைச்சுவை மேதையாகத் திகழ்ந்தவர். திரையுலகில் தான் சம்பாதித்ததை வாரி வழங்கி மகிழ்ச்சியடைந்தவர் கலைவாணர்



பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவின் திரைப்படம் ஒன்றுக்காக கலைவாணர் மற்றும் இன்னும் சில நடிகர்கள் புனே சென்றனர். இந்தக் குழுவில் பின்னாளில் அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற மதுரம் அம்மையாரும் இடம்பெற்றிருந்தார். அதுதான் கலைவாணருடனானா முதற்படம். புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழிச்செலவுக்கு பணம் தருவதாக சொன்ன தயாரிப்பு நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை. ரயில் புறப்பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் மட்டும் அமைதியாக இருந்தார். அனைவருக்கும் முதல்நாள் பயணச் செலவை தன் சொந்த செலவில் எந்த குறையுமின்றி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் பயணத்துக்குப் போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து நின்றார் உதவி கேட்டு.

இது அபத்தமாக தெரிந்தாலும் மதுரம் அம்மையார் தன்னிடம் இருந்த கொஞ்சம் பணத்தை வெறுப்போடு தந்தார். ஆனால் கலைவாணரின் செயல் வெறுப்போடு கொஞ்சம் அவருக்கு ஆச்சர்யத்தையும் தந்தது. 'தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை. அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட' கலைவாணரின் குணம் ஆச்சர்யம் தந்தது. படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை போட்டு குடைந்துகொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை கிடைத்தது.

புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த அறைக்கதவை தட்டினார் கிருஷ்ணன். இந்தமுறை எரிச்சலுடன் கலைவாணரை கோபித்துக்கொண்ட மதுரத்திடம் மெதுவான குரலில் இப்படிச் சொன்னார் கிருஷ்ணன். ”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க... ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்கத் தவறிட்டாங்க. தெரியாம நடந்திருக்கலாம்...எப்படியும் பின்னாளில் பணம் கிடைக்கப்போகுது. அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்கக் கூடாது. வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கப் போகிறவங்க... இன்னார் இப்படிப்பட்டவங்கன்னு ஃபீல்டுல தகவல் பரவினா அவங்க எதிர்காலம் பாதிக்கும்...சின்னகோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது. அவங்க யார்ட்டயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது... அதனால நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு கிடைச்சிடப்போகுது... இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார். என்.எஸ்.கிருஷ்ணனின் இந்த மனிதநேயத்தால் நெகிழ்ந்துபோனார் மதுரம். புனேயில் இருந்து திரும்பும்போது தம்பதியாக திரும்பினர் இருவரும்.

சாதாரண நடிகராக மட்டுமின்றி புகழின் உச்சிக்கு சென்றபின்னரும் கலைவாணரின் இரக்க குணம் சற்றும் குறையவில்லை. வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கினார். திரையுலகில் வள்ளல்குணத்துக்கு உதாரணமாக ஒருவரை காட்டச்சொன்னால் சிறுகுழந்தையும் எம்.ஜி.ஆர் என்ற மனிதரை அடையாளம் காட்டும். எம்.ஜி.ஆர் என்ற மனிதநேயரின் வள்ளல்குணத்துக்கு வழிகாட்டி கலைவாணர்தான். கலைவாணரிடமிருந்துதான்தான் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டேன் என பல மேடைகளில் எம்.ஜி.ஆர் பெருமிதமாகக் குறிப்பிட்டதுண்டு.



1966-ம் ஆண்டு ஆனந்த விகடன், தீபாவளி மலருக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குறித்து எம்.ஜி.ஆர் எழுதியவற்றை பார்ப்போம். “புகழ் மிகுதியின் அடித்தளத்தில் என்.எஸ்.கிருஷ்ணனை அவரது அறிவும் பண்புமே நேர் வழியில் இயக்கிக்கொண்டிருந்தன. வந்து குவிகின்ற புகழ் வராமல் போனாலும் ஏமாற்றத்தால் துன்பப்பட்டுத் தவிக்கின்ற பலவீனமான நிலைமை அவரிடம் இருக்கவே இல்லை. மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால் காங்கிரஸ்காரர் அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்க தரிசியாக, மக்கள் நலத்தின் வழி காட்டியாகப் போற்றியவர் அவர்; ஆனால் தி.மு.கழக உறுப்பினர் அல்ல. பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால் திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.மக்களால் போற்றப்பட்ட அவர், மக்களிடம் காணும் குறைகளை எடுத்துக் காட்டத் தயங்குவதில்லை. தங்கள் குறைகளை இடித்துக் கூறுகிறாரே என்று யாரும் கலைவாணரைக் குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக போற்றவே செய்வார்கள். சக நடிகர்களிடம் கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால் அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.

இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர் ஒரு புரியாத புதிர் என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே, புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி என்று கேட்கவும் செய்யலாம். கலைவாணருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால்தான் நான் சொல்லும் உண்மையை விளக்க முடியும்.

இங்கே சில அனுபவங்களை, எக்காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.



'மாய மச்சேந்திரா' படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம்.டைரக்டர் ராஜா சந்திரசேகர் அவர்கள்தான், படக் கம்பெனிச் சொந்தக்காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார். பணம் வேண்டுமென்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத் தான் நாங்கள் பெறுவோம். பாடல்களை கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாட்டுப்பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.
பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ அதற்கு முதல் நாள் வரை, பேச்சு நடந்தது. அதற்குப் பயனில்லாமல் போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்துக் கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள்.

மறுநாள் விடியற் காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப்பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான். என்ன? என்று கேட்டார்கள். இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே? போக வேண்டாமோ? என்றார் கலைவாணர். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. நீங்களும் தானே சம்மதித்தீர்கள்! பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் சொன்னீர்களே! ஏன் இப்போது போகச் சொல்லுகிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா? என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள். அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்;



நம்மை யார் கேலி பண்ணப் போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால் முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள் அவர்களுக்கு ஒரு யூனிடி கிடையாது; ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாகப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிடுவோம், அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக் கொள்வோம். அதன் பிறகு எல்லோரும் பாடல் பதிவில் கலந்துக் கொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டு விடாதீர்கள்!

ராஜா சந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் பாட்டுப் பதிவில் கலந்து கொள்ளமுடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்து கொண்டார்களே, அவர்களுக்கும், எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்து கொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால் பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்து கொள்ள வற்புறுத்தினார்?



அன்று யாருக்கமே புரியாத ஒரு புதிர்தான் அது. சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக; கலைவாணர், தான் நல்ல பேர்வாங்கிக் கொள்வதற்காக நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்தபிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும் தான் செய்தார் என்பதைப் புரிந்துக் கொண்டார்கள். இவர் தான் கலைவாணர்.
நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம். ஆனால் ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.

கலைவாணர் தனக்காகக் கண்ணீர் விட்டதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்ல முடியாது. அவர் அனுபவிக்காத உலக வாழ்க்கை கிடையாது. அவர் வைரம் பூண்டிருந்தார். ஆனால் அது நிரந்தரமானது என்று நினைத்ததில்லை. அதுதான் தன்னை உயர்த்துகிறது என்று நம்பியதும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்தவே அவர் அதை அணிந்தார்.கொள்கையைச் சொல்வதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் கடலினும் பெரியது; மலையினும் உயர்ந்தது. அவர் தனக்காக எதையும் செய்ய வில்லை; பிறருக்காகவே செய்தார். அவர் முன்னேறியது அவரது உழைப்பால் அவருக்கு இருந்த நம்பிக்கையால். பிறருடைய சக்தியை வைத்துக்கொண்டோ பாதுகாப்பிலோ முன்னேறவில்லை.



அவருக்குப் பல கலைகளும் தெரியும். பாட்டு எழுதித் தருபவர் பாட்டை எழுதித் தராவிட்டால் அவரே பாட்டெழுதி விடுவார்.ஆனால் பாடல் எழுதுபவருக்குச் செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் இருந்து விடமாட்டார். இதுபோல் அவரிடம் வந்து சேர்வோர் அனைவருமே அவருடைய ஆற்றலைச் சிறிது நேரத்துக்குள் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால் அந்த அடித்தளத்தில் எத்தகைய புரட்சிப் பண்பு படிந்திருக்கிறது என்பதை நடக்க நடக்கத்தான் புரிந்துக் கொள்வார்கள்.

கலைவாணர் அவருடைய கடைசி கால கட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி. அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால் உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன். பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வராங்க. வந்து பார்த்துட்டுப்போறாங்க. பத்திரிகைக்காரங்க, அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறாக நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச்சொன்னேன் என்றார்.

என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!



அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது. இந்த நாட்டில் எத்தனை எத்தனையோ உள்ளங்களில் அவர் நினைவு குடி கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தப் பண்பு மிக்க செயல்கள்தாம். கலைவாணரின் மறைவின் போது துக்கம் தெரிவித்தவர்களில் கட்சிபேதம், மொழி பேதம், இனபேதம் இருக்கவில்லையே! எல்லோரும் தங்களைச் சேர்ந்த ஒரு நல்லவர், உத்தமர், கலைச்செல்வர், அறிவாளி மறைந்துவிட்டதாக அல்லவா துயரம் தெரிவித்தார்கள்!

அவர் மறைந்தாலும், அவர் நினைவு மறையாததற்குக் காரணம், அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட வாழ்க்கைப் பண்பு அல்லவா? அந்தப் பண்பின் செயல்களை, உள்ளபடி இன்னும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?  மனம் திறந்தார் பதிவாளர் மோகன் 


கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 80 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் பி.எஸ்.மோகன் ராஜினாமா செய்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் 88 உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கணபதிக்கும், பதிவாளர் பொறுப்பு பி.எஸ்.மோகனுக்கும் நேரிடையாகவே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவு பதிவாளர் மோகன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து பி.எஸ்.மோகனிடம் பேசினோம். "நான், இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். வேதியியல் துறையின் தலைவராகவும் உள்ளேன். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டேன். நான் பணியில் இருந்த சமயத்தில் பல்கலைக்கழகத்தில் 88 உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக கடந்த 19ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடத்த துணைவேந்தர் கணபதி என்னிடம் தெரிவித்தார். அதன்படி சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். இந்த சமயத்தில் உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்திலிருந்து கடந்த 18ம் தேதி ஒரு ஃபேக்ஸ் வந்தது. அதில், சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசிடமிருந்து வந்த கடிதத்தை துணை வேந்தர் அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைத்தேன். இந்த சமயத்தில் சிண்டிகேட் கூட்டத்தை கடந்த 22ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யுமாறு துணைவேந்தர் கணபதி, எனக்கு வாய்மொழியாக தெரிவித்தார். அதன்படி அன்றைய தினத்தில் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அன்றைய தினமே 40க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் நியமன உத்தரவை பெற்றுக் கொண்டு பணியில் சேர்ந்தனர். அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த தகவல் உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்துக்கு தெரியவந்ததும் அங்கிருந்து கூட்டத்தை நடத்தியதற்கான விளக்கத்தை கேட்டனர். அப்போதுதான், நான், துணைவேந்தருக்கு அனுப்பிய கடிதம் தாமதப்படுத்திய விவரம் எனக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக எனக்கும், துணைவேந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட, என்னை அவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தெரிவித்தார். உடனே நானும் என்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன். அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட 'ரிலிவிங்' ஆர்டரில், சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்ய அரசு அனுப்பியதை தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தது. எந்த தவறும் செய்யாத என் மீது இதுபோன்ற குற்றசாட்டுக்கள் கூறப்பட்டதால் அந்த 'ரிலிவிங்' ஆர்டரை நான் பெறவில்லை. என் தரப்பு நியாயத்தை சம்பந்தப்பட்ட உயர் கல்வித்துறை உயரதிகாரிகளிடம் விளக்கமாக கொடுக்க உள்ளேன்"என்றார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து துணை வேந்தர் கணபதியிடம் கேட்டோம். "சிண்டிகேட் கூட்டம் நடத்தக் கூடாது என்று உயர்கல்வித்துறை அனுப்பிய அந்த கடிதத்தை கூட்டம் முடிந்த பிறகு எனக்கு பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் நடக்கும் போது கூட அதை நடத்தக்கூடாது என்று அரசு அனுப்பிய தகவலை என்னிடம் பதிவாளர் பொறுப்பிலிருக்கும் மோகன் சொல்லவில்லை. மேலும், யுஜிசி விதிப்படியே 80 உதவி பேராசிரியர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றவரிடம், பணம் வாங்கிக் கொண்டு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வருகிறதே என்று கேட்டதற்கு, மெரிட் அடிப்படையிலேயே பணிநியமனம் நடந்தது. இந்த பதவிக்கு போட்டியிட்டு பணி கிடைக்காதவர்கள் தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள்" என்றார்.

எஸ்.மகேஷ்


Return to frontpage

பார்வை: கடுகு டப்பா பணமும் கறுப்புப் பணமா?

பிருந்தா சீனிவாசன்

இன்னும் முப்பது நாட்களில் கறுப்புப் பணக் கறையில்லாமல் புத்தம் புதிதாகப் பிறக்கப்போகும் இந்தியாவைப் பார்ப்பதற்காகப் பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் கறுப்புப் பணம் முற்றாக ஒழிந்து, அதன் காரணமாகத் தங்கள் வங்கிக் கணக்கில் வந்து குவியப்போகிற லட்சங்கள் பற்றிய கனவிலும் சிலர் மிதந்துகொண்டிருக்கிறார்கள்.

“கால் கடுக்க ஏடிஎம் வாசலில் நின்றால் என்ன, நம் நாட்டு எல்லையைக் காக்கும் வீரர்களை நினைத்துப் பார்த்தால், இது ஒன்றும் பெரிய விஷயமில்லை” என்று பலர் தேசப்பற்றுடன் உரையாற்றுவதையும் பார்க்க முடிகிறது. இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றன சமூக வலைதளங்களில் உலாவரும் அவல நகைச்சுவையும் ‘மீம்’ சித்தரிப்புகளும். அதுவும் நகைச்சுவை என்ற பெயரில் இல்லத்தரசிகளை மையமாக வைத்து வெளியாகிற ஒவ்வொன்றும் அபத்தத்தின் உச்சம்.

பெண்கள் இந்தியர்கள் இல்லையா?

“எங்கள் வீட்டு கடுகு டப்பாவில் ஒளித்துவைத்திருந்த கறுப்புப் பணம் வெளிவந்துவிட்டது” என்று சொல்கிற ஆண்கள், அவைதான் குடும்பத்தைத் தொய்வில்லாமல் நடத்த உதவிய அச்சாணி என்று உணர்ந்திருக்க நியாயமில்லை. “கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் கார்ப்பரேட் ஆட்கள் சிக்குகிறார்களோ இல்லையோ, எங்கள் வீட்டம்மா பெரும்தொகையுடன் கையும் களவுமாகச் சிக்கிவிட்டார்” என்று பெருமிதத்துடன் நிலைத்தகவல் பதியும் அல்லது அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆண்கள், தங்கள் வீட்டுப் பெண்களிடம் பணம் இருப்பதே மாபெரும் குற்றம் என்று சொல்லவருகிறார்களா?

நாட்டைச் சுத்தப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பு இல்லாத நோட்டுகளாக அறிவித்ததெல்லாம் சரிதான். அதன் ஒரு அங்கமாக நாடு முழுவதும் பணத்தைக் கையாளுவது குறைந்து, பணஅட்டைகள் மூலமே பணப் பரிமாற்றம் நடக்க வேண்டும் என்று தொலைநோக்குடன் பேசுவதும்கூடப் பரவாயில்லை. ஆனால் வங்கிக் கணக்கு, கடன் அட்டை, ஏடிஎம் மையம் என்று நவீன இந்தியாவின் எந்தவொரு அம்சத்தைப் பற்றியும் தெரியாமல், அப்படியே தெரிந்திருந்தாலும் அவற்றைக் கையாளும் சுதந்திரம் இல்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களை இந்த அறிவிப்பு பாதிக்கக்கூடும் என்று அதிகாரத்தில் இருக்கும் எந்த ஆணுக்கும் தெரியாதா? பணம் என்பது ஆண்கள் மட்டுமே கையாளக்கூடிய பொருள் என்ற நினைப்பின் வெளிப்பாடுதானே, பெண்கள் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமல் தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு?

எது கறுப்புப் பணம்?

ஒவ்வொரு வீட்டிலும் அம்மாவோ, மனைவியோ, மகளோ மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்திருக்கும் பணம், குடும்ப நலனுக்கான சேமிப்பு என்பதைப் பலரும் ஏற்க மறுக்கின்றனர். “அப்படியென்ன புருஷனுக்கும் புள்ளைக்கும் தெரியாம சேர்த்துவைக்க வேண்டியிருக்கு?” என்று கொதித்தெழும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு பெண்ணும் இப்படிச் சேர்த்துவைக்கும் பணம், அவர்களுடைய தனிப்பட்ட செலவுகளுக்கல்ல. குழந்தைகளின் கல்வி, திருமணம், நகை, அத்தியாவசியப் பொருள் என்று ஏதோவொரு முக்கியமான செலவுக்குப் பணம் இல்லாமல் கணவன் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும்போது கைகொடுத்து உதவும் பணம். அந்தப் பணம், வீட்டுக் கணக்கில்

இருந்து திருடப்பட்டதல்ல. வீட்டுச் செலவுக்காகக் கணவன் கொடுக்கும் பணத்தில், செலவைக் குறைத்து மிச்சப்படுத்தியது. அப்படி மிச்சப்படுத்திய பணத்தைச் சிறுகச் சிறுக சீட்டு கட்டிப் பெரிதாக்கியது. தன்னுடைய தனிப்பட்ட செலவுகளைக் குறைத்துக்கொண்டு குடும்பத்துக்கென ஒதுக்கிவைத்தது. இப்படிச் சேமித்த பணத்தைத்தான் ‘கறுப்புப் பணம்’ என்று சொல்லி நகைக்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்.

பெண்கள் ஏன் சேமிக்கிறார்கள்?

பெண்கள் தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை ஏன் பதுக்கி (அப்படிச் சொல்ல வேண்டும் என்றுதானே பலரும் விரும்புகிறார்கள்) வைக்கிறார்கள்? அதற்குக் காரணமும் ஆண்கள்தான். வாங்குகிற சம்பளத்தை முழுதாக வீட்டில் ஒப்படைக்காத கணவர்களால் நிறைந்தது நம் நாடு. சம்பளப் பணத்தை மனைவியிடம் கொடுக்கிற கனவான்களும் பாதியை எடுத்துக்கொண்டு, வீட்டுச் செலவுக்கெனக் கொஞ்சமாகக் கிள்ளித்தான் தருவார்கள். சில ஆண்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருக்கும் உயரிய சிந்தனையோடு டாஸ்மாக் கடைகளில் செலவழித்துவிடுவார்கள். அரசாங்கத்துக்குப் போக மீதமிருக்கும் பணம்தான் வீடு வந்து சேரும். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் அந்த வீட்டுக் குழந்தைகள் பிழைத்திருப்பதும், படித்து முன்னேறுவதும்.

பறிபோன பணம்

நகரங்களில் ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போகிற வீடுகளில் பெண்களின் சம்பளப் பணத்தைக் கையாள்வது பெரும்பாலும் அந்த வீட்டு ஆண்தான். பெண்ணின் கையில் பணத்தையும் குடும்ப நிர்வாகத்தையும் ஒப்படைப்பது, தங்கள் ஆண்மைக்கு இழுக்கு என்றே பலரும் நினைக்கிறார்கள். சம்பளப் பணம் முழுவதையும் மனைவியிடம் ஒப்படைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால், அங்கே தலைக்கு மேல் வெள்ளமாகக் கடன் தொகை ஓடும். அந்தக் கடனைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பும் மனைவியின் தலையில்தான் விழும். இத்தனை சிக்கல்களுக்கு நடுவேதான் ஒரு பெண் பணத்தைச் சேமிக்க வேண்டியிருக்கிறது.

அப்படிச் சேமித்த பணத்துக்கும், பணமதிப்பு நீக்கம் மூலம் கேடு வந்துவிட்டது. எல்லாப் பெண்களுக்கும் வங்கிக் கணக்கு இல்லை. அப்படியே இருந்தாலும் அதைக் கையாளுவது கணவன் என்கிற நிலையில், தாங்கள் சேமித்துவைத்திருந்த பணத்தைக் கணவனிடமோ, மகனிடமோ கொடுக்க வேண்டிய நிலை. அப்படிக் கொடுக்கப்பட்டு வங்கிக் கணக்கில் ஏறும் பணம், முழுதாக இவர்கள் கையை வந்து சேரும் சாத்தியம் குறைவு. அதுவும் பணத் தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில், பெண்களின் சேமிப்பு வாராக் கடனாகித்தான் போகும்.

அல்லல்படும் பெண்கள்

பெண்களின் இந்தச் சேமிப்பு பல குடும்பங்களில் சிக்கல்களையும் மனத்தாங்கலையும் ஏற்படுத்திவிட்டது. “நான் வீட்டில் இருந்தபடியே துணிகளை விற்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் எட்டாயிரம் ரூபாயைச் சேர்த்துவைத்திருந்தேன். அதை என் கணவரிடம் கொடுத்து மாற்றித் தரச் சொன்னேன். எனக்கே தெரியாமல் இவ்வளவு பணம் வைத்திருந்தாயா என்று கோபித்துக்கொண்டார். என் மீது அவருக்கிருந்த நம்பிக்கை குறைந்துவிட்டதாம்.

என்கிட்டே சரியா பேசறதுகூட இல்லை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி கனி. இல்லத்தரசிகளின் நிலை இப்படியென்றால், முதியவர்கள் படும் பாடு இன்னும் மோசம். மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாமல் சேர்த்துவைந்திருந்த சொற்பப் பணத்தை மீண்டும் அவர்களிடமே கொடுக்க வேண்டிய நிர்பந்தம். “வயசான காலத்துல எல்லாத்துக்கும் அவங்க கைய எதிர்பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? ஆத்திர அவசரத்துக்கு என் கையில கொஞ்சம் பணம் வேணாமா? இப்ப அதையும் பறிகொடுத்துட்டேன்” என்று சொல்லும் செந்தாமரையின் வார்த்தைகளில் இருக்கும் நிதர்சனம் பலருக்கும் புரிவதில்லை.

பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பு, முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுவரும் பெண்களை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. தினசரி கூலி, வாரக் கூலியை நம்பிக் குடும்பம் நடத்தும் அவர்கள், வங்கிக் கணக்குக்கும் கடன் அட்டைக்கும் எங்கே போவார்கள்? மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததால் காய்கறி, பழம், பூ, பால், மீன் போன்றவற்றை விற்கும் பெண்களின் வருமானம் குறைந்துவிட்டது.

சிலர் வருமானமே இல்லாமல் அல்லல்படுகிறார்கள். “ஒரு நாளுக்கு ஐநூறு ரூபாய்க்கு பூ வித்துடு வேன். பூ வாங்கவே காசில்லை. மார்கெட்ல கடன் சொல்லி வாங்கிட்டு வந்தேன். என்கிட்ட ரெகுலரா வாங்குறவங்க எல்லாம் சில்லறை இல்லைன்னு சொல்லிட்டுப் போறாங்க. இன்னைக்கு பொழுதை எப்படி ஓட்டுறதோ” என்று புலம்பும் சாந்தி அக்காவைப் பற்றி நமக்கென்ன கவலை? இவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டுப் பிறக்கப் போகும் புதிய இந்தியாவை வரவேற்க இப்போதே தயாராவோம்.


வாசகர் வாசல்: பதுக்கல் நல்லது!



மத்திய அரசுக்கு,

மத்திய வர்க்கத்து இல்லத்தரசியின் மடல். கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு எட்டு மணியளவில் தாங்கள் ஆடிய செல்லும் நோட்டு, செல்லாத நோட்டு மங்காத்தாவால் ஸ்தம்பித்துப்போன கூட்டத்தில் நானும் ஒருத்தி. காரணம் அப்போது என்னிடம் இருந்த கறுப்புப் பணம் 35 ஆயிரம் ரூபாய். “எவ்வளவு வச்சிருக்க? எல்லாத்தையும் எடு. இல்லைன்னா அது வெறும் பேப்பர்தான்” என்று என் கணவர் பயமுறுத்தினார். அவரிடம் கொடுத்தாலும் திரும்ப கைக்கு வராது என்பதால், அது எனக்கு வெறும் பேப்பர்தான்.

“இனிமேல் வங்கி அட்டை மூலமாகத்தான் பணப் பரிமாற்றம் நடக்கப் போகுது. இனி என்னை ஏமாத்தி எதுவும் சுருட்ட முடியாது. நாட்ல மட்டுமில்லை, வீட்லயும் பதுக்க முடியாது தெரியும்ல” என்று அகமகிழ்ந்தவரைப் பரிதாபமாகப் பார்த்தேன். நவம்பர் 6-ம் தேதிதான், “மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். உங்கிட்டே எவ்ளோ இருக்கோ குடு. அப்புறமா தர்றேன்” என்று ஒப்பந்தம் போட்டார்.

இல்லத்தரசிகளின் கறுப்புப் பணத்தில்தான் முக்கால்வாசி இந்தியா இயங்குகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம், வீடு, நிலம் வாங்க, நல்லது கெட்டதுக்கு செய்முறை செய்ய என கணவன்மார்களின் தேவை அனைத்துக்குமே பக்கத்து வீட்டு அக்காவிடம் வாங்கிய கைமாத்தாக, நகையை அடகுவைத்த பணமாக வலம்வருவது எல்லாமே கள்ளப் பணம்தான் பிரதமரே!

இந்தத் திட்டத்தினால் நாட்டுக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக்கக்கூடும் என்றாலும், நாட்டைக் காக்கும் இந்தப் போரில் நாங்கள் பங்குபெற முடியாமல் போனதற்கு வருந்துகிறோம். ரூபாய் நோட்டு பற்றாக்குறையைச் சமாளிக்க நோட்டு அடிக்கும்போது எங்களையும் கவனத்தில் கொண்டு சற்று கூடுதலாகவே அடிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ரூபாய் நோட்டுக்குள் ஜிபிஎஸ் பொருத்துவது தொடர்பாகப் பலரும் ஆலோசனைகளை வழங்கிவரும் வேளையில், இல்லத்தரசிகள் சங்கத்தின் சார்பாக நாங்களும் சில யோசனைகளை முன்வைக்கிறோம். டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் நோட்டுகளை செல்லாத நோட்டுகளாக அறிவிப்பது, காலில் செருப்பை மாட்டிக்கொண்டு, ‘300 ரூபாய் கொடு, வந்து தர்றேன்’ என்று கேட்கும் கணவன்களைத் திருத்துவது இப்படி ஏதாவது திட்டம் இயற்றினால் கறுப்புப் பண ஒழிப்பில் நீங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெறலாம். நன்றி!

- சஞ்சலா ராஜன், கோயம்புத்தூர்.

இதிலுமா அரசியல்?

By சந்திர. பிரவீண்குமார்  |   Published on : 29th November 2016 02:03 AM 
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நேரத்தில், எங்கள் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டிருந்தோம். அனைவருமே இந்த நடவடிக்கையை ஆதரித்தாலும், நடைமுறை சிக்கல்கள் இருக்கவே செய்தன.
வங்கிகள் செயல்படத் தொடங்கியதும் வீட்டிலிருக்கும் அனைவரும் முடிந்த அளவு பணத்தை எடுத்தோம். பல இடங்களில் வங்கி அட்டைகளை ஏற்று கொண்டனர். திட்டமிட்டு செயல்பட்டதால், குழப்பங்கள் எதுவும் நிகழவில்லை. எனது சொந்த அனுபவம் இது.
வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசு எடுத்துள்ள திடீர் நடவடிக்கை, இதேபோல் பலரது அன்றாட செலவுகளை நிச்சயம் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எரிவாயு நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் மட்டும் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால், பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. வங்கிகளிலும், தானியங்கி மையங்களிலும் வரிசைகள் அதிகரித்தன. பல தொழில்கள் தாற்காலிகமாக முடங்கின.
போதாததற்கு வதந்திகளும் ஏராளமாகப் பரவின. சாமானிய மக்கள், மாதாந்திர சம்பளதாரர்கள் போன்றோரின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தப் பாதிப்புகளையும் மீறி மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன. கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பேசி வருகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், கள்ள நோட்டுகள் பற்றிய அச்சத்தால், 500 ரூபாய் நோட்டுகளை பலர் வாங்க மறுத்தது, நினைவிருக்கலாம். அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கள்ள நோட்டு நடமாட்டத்தை நிறுத்த முடியவில்லை.
இந்நிலையில், உடனடியாகவும் துணிச்சலாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். அதைதான் மோடி மத்திய அரசு செய்துள்ளது என்று அவர்கள் நினைக்கின்றனர்.
அதேபோல், கணிசமான சிலர் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றனர். கருப்புப் பணத்தை ஒழிப்பது நடைமுறை சாத்தியமற்றது என்பது அவர்களின் கருத்து.
பிரதமரின் நடவடிக்கையை பா.ஜ.க. மட்டுமல்ல, நிதீஷ் குமார் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரிக்கின்றனர்.
எதிர்பார்த்ததைப்போல், காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜவாதி கட்சி ஆகியவை எதிர்க்கின்றன. மோடி எதிர்ப்பாளர்களுக்கோ, வழக்கம் போல மோடியைத் திட்டுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு, அவ்வளவே.
மத்திய அரசின் நடவடிக்கையில் சில குறைகள் இருக்கலாம். அவற்றை விமர்சிப்பது நியாயமானதும்கூட. ஆனால், எதிர்க்கட்சிகளோ அரசைக் குறை கூறுவதில் மட்டுமே முனைப்பு காட்டுகின்றன.
சமூக வலைதளங்களிலும், பொது அரங்குகளிலும் கடுமையாக விமர்சித்து மக்களிடம் அவநம்பிக்கையை உருவாக்கியதோடு, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் மறுத்தன.
கருப்புப் பணமும் கள்ள நோட்டுகளும் நாட்டின் பல்வேறு தளங்களில் பரவியுள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே தகவல் கொடுத்து விட்டு, அதிரடி நடவடிக்கையை எடுத்திருத்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
அவகாசம் கொடுத்திருந்தால், கருப்புப் பணக்காரர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு என்பதே நிதர்சனம்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் மன்னர் ஆட்சி முறையும், ஜமீந்தார் முறையும் ஒழிக்கப்பட்டன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அவற்றால் மக்களுக்கு அதிக பலன்கள் கிடைத்தாலும் சிலருக்கு பாதிப்புகள் ஏற்படவே செய்தது. அதனால், அந்தச் சீர்திருத்தங்களைக் குறை கூற முடியுமா?
அரசியல் காரணங்களுக்காக அவசரநிலையை இந்திரா காந்தி கொண்டு வந்தாலும், அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட சில நன்மைகளை இன்னும் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்யத் தவறுவதில்லையே?
உச்சகட்டமாக, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மாற்றினார். சாதாரண உள்ளூர் அரசியல்வாதியே கோடிகளில் புரளும் உண்மை அனைவருக்கும் தெரியும்.
அப்படியிருக்க, சில தலைமுறைகளாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து வரும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர், வெறும் ரூ.4,000 மட்டுமா வைத்திருப்பார் என்று மக்கள் நகைப்புடன்தான் பார்த்தனர்.
கேரளத்தில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆட்சியின்போது நில சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை அமல்படுத்தியதால், நம்பூதிரிகள் பட்ட துன்பங்கள் ஏராளம். அதற்காக, அந்த திட்டத்தைத் தவறு என்று சொல்லிவிட முடியுமா?
சிங்கப்பூரில் முன்னாள் அதிபர் லீ குவான் யூ அந்நாட்டைத் தூய்மைப்படுத்த கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டு வந்தார். முதலில் அதற்கு எதிர்ப்புகள் வந்தாலும், பின்னர் அதற்கு மக்கள் ஒத்துழைத்தனர்.
அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை பயங்கரவாதிகள் தகர்த்தபோது, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டன. ஆளுங்கட்சியைக் குறை கூறி கொண்டிருக்கவில்லை. இரண்டாம் உலகப் போர் நேரத்தில் ராணுவ வீரர்கள் முட்டை சாப்பிட ஒத்துழையுங்கள் என்று சர்ச்சில் கேட்டுக் கொண்டதை அடுத்து, அந்நாட்டு மக்கள் வரிசையில் நின்று முட்டைகளைத் திருப்பியளித்தனராம்.
எதற்கெல்லாமோ வெளிநாட்டவரைப் பின்பற்றும் நாம், அரசியல் நாகரிகத்தில் அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது?
மக்களுக்கு சேவை புரியும் பொறுப்பு ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு. அரசின் திட்டங்களை விமர்சிப்பதோடு, ஆளுங்கட்சி செய்யத் தவறிய கடமைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.
மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டு விட்டன.

NEWS TODAY 2.5.2024