Tuesday, November 29, 2016

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?  மனம் திறந்தார் பதிவாளர் மோகன் 


கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 80 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் பி.எஸ்.மோகன் ராஜினாமா செய்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் 88 உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கணபதிக்கும், பதிவாளர் பொறுப்பு பி.எஸ்.மோகனுக்கும் நேரிடையாகவே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவு பதிவாளர் மோகன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து பி.எஸ்.மோகனிடம் பேசினோம். "நான், இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். வேதியியல் துறையின் தலைவராகவும் உள்ளேன். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டேன். நான் பணியில் இருந்த சமயத்தில் பல்கலைக்கழகத்தில் 88 உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக கடந்த 19ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடத்த துணைவேந்தர் கணபதி என்னிடம் தெரிவித்தார். அதன்படி சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். இந்த சமயத்தில் உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்திலிருந்து கடந்த 18ம் தேதி ஒரு ஃபேக்ஸ் வந்தது. அதில், சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசிடமிருந்து வந்த கடிதத்தை துணை வேந்தர் அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைத்தேன். இந்த சமயத்தில் சிண்டிகேட் கூட்டத்தை கடந்த 22ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யுமாறு துணைவேந்தர் கணபதி, எனக்கு வாய்மொழியாக தெரிவித்தார். அதன்படி அன்றைய தினத்தில் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அன்றைய தினமே 40க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் நியமன உத்தரவை பெற்றுக் கொண்டு பணியில் சேர்ந்தனர். அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த தகவல் உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்துக்கு தெரியவந்ததும் அங்கிருந்து கூட்டத்தை நடத்தியதற்கான விளக்கத்தை கேட்டனர். அப்போதுதான், நான், துணைவேந்தருக்கு அனுப்பிய கடிதம் தாமதப்படுத்திய விவரம் எனக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக எனக்கும், துணைவேந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட, என்னை அவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தெரிவித்தார். உடனே நானும் என்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன். அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட 'ரிலிவிங்' ஆர்டரில், சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்ய அரசு அனுப்பியதை தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தது. எந்த தவறும் செய்யாத என் மீது இதுபோன்ற குற்றசாட்டுக்கள் கூறப்பட்டதால் அந்த 'ரிலிவிங்' ஆர்டரை நான் பெறவில்லை. என் தரப்பு நியாயத்தை சம்பந்தப்பட்ட உயர் கல்வித்துறை உயரதிகாரிகளிடம் விளக்கமாக கொடுக்க உள்ளேன்"என்றார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து துணை வேந்தர் கணபதியிடம் கேட்டோம். "சிண்டிகேட் கூட்டம் நடத்தக் கூடாது என்று உயர்கல்வித்துறை அனுப்பிய அந்த கடிதத்தை கூட்டம் முடிந்த பிறகு எனக்கு பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் நடக்கும் போது கூட அதை நடத்தக்கூடாது என்று அரசு அனுப்பிய தகவலை என்னிடம் பதிவாளர் பொறுப்பிலிருக்கும் மோகன் சொல்லவில்லை. மேலும், யுஜிசி விதிப்படியே 80 உதவி பேராசிரியர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றவரிடம், பணம் வாங்கிக் கொண்டு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வருகிறதே என்று கேட்டதற்கு, மெரிட் அடிப்படையிலேயே பணிநியமனம் நடந்தது. இந்த பதவிக்கு போட்டியிட்டு பணி கிடைக்காதவர்கள் தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள்" என்றார்.

எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...