Monday, September 4, 2017

புளூவேல் கேமை பகிர்ந்து கொண்டால் கடும் தண்டனை: ஐகோர்ட் யோசனை
பதிவு செய்த நாள்04செப்
2017
11:46




மதுரை : புளூ வேல் கேமை பகிர்ந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை யோசனை தெரிவித்துள்ளது.

புளூ வேல் கேமால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மதுரை ஐகோர்ட் கிளை தானாக முன்வந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்தது. வழக்கை இன்று (செப்.,4) விசாரித்த ஐகோர்ட் கிளை, புளூ வேல் கேமை பகிர்ந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷேர்இட் போன்ற ஊடகங்கள் மூலம் பகிர்வோம் மற்றும் இந்த கேமினை டவுண்லோட் செய்ய உதவுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விளையாட்டினை தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.புளூ வேல் கேம் பரவால் இருக்க கண்காணிப்புக்களை அதிகரிக்க வேண்டும். இந்த விளையாட்டு தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த குழு அமைக்க வேண்டும். இந்த விளையாட்டை தடை செய்வது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் பதிலளிக்க வேண்டும். இந்த விளையாட்டு மேலும் பரவுவதை தடுக்க தகவல் தொடர்பு துறை இயக்குனரகம் ஆலோசனை வழங்க வேண்டும். இதை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் கேட்டு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை செப்., 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பு கிடைக்காவிட்டால் என்ன...

பதிவு செய்த நாள்04செப்
2017
12:38




சென்னை: 'மருத்துவ படிப்புக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், வாழ்க்கையில் சாதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன' என, தமிழக உயர் போலீஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிளஸ் 2வில் போதிய மார்க் இல்லை

ஐ.பி.எஸ்., அதிகாரியான டேவிட்சன் தேவாசிர்வாதம் கூறியிருப்பதாவது:
நான், 1985 - 86ம் ஆண்டு பிளஸ் 2 படித்தேன். சி.பி.எஸ்.இ., மாணவனான எனக்கு மற்றவர்களை போல, டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், அந்த ஆண்டு பிற நடவடிக்கைகள் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிசமான மதிப்பெண்களை பெறவில்லை. அத்துடன் மருத்துவ படிப்புக்கான போட்டி தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை. அந்த நேரத்தில், மீண்டும் பிளஸ் 2 தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனினும், அந்த எண்ணத்தை புறந்தள்ளிவிட்டு பட்டப்படிப்பில் சேர்ந்தேன். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு அது உதவும் என கருதினேன். அதற்கு ஏற்றார்போல், வரலாற்றில் இளம்கலை பட்டமும், சமூகவியலில் முதுகலை பட்டமும் பெற்றேன். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற, இது சிறப்பாக உதவி புரிந்தது. எஎன்னை போன்ற சராசரிக்கு மேற்பட்ட மாணவர்களே சிவில் சர்வீசஸ் பணியில் சேர முடியும் போது, பிளஸ் 2 தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்றவர்கள் சிவில் சர்வீசஸ் பணியில் கண்டிப்பாக சேர முடியும்.

மாற்று திட்டங்கள் தேவை

டாக்டராக வேண்டும் என்ற கனவில் இருந்த ஏராளமானோர் அதற்கு சம்பந்தமே இல்லாத பணியில் சேர்ந்து இருப்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. வாழ்க்கையில் எதுவும் நிச்சயம் இல்லை எனும் போது, மாற்று திட்டங்கள் வைத்து இருப்பது எப்போதும் நல்லது. இங்கு ஏராளமான பணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் டாக்டர் பணி. ஒருவர் ஒரு பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றால், அப்பணியில் சேர்ந்த பிறகே அதை செயல்படுத்த முடியும். அதுவரை எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்; எனினும், அந்த லட்சியத்தை நோக்கி பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை ஏர்போர்ட் - செங்கல்பட்டு மேம்பால சாலைக்கு ரூ.2,400 கோடி

பதிவு செய்த நாள்04செப்
2017
00:10

சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு வரை, மேம்பால சாலை அமைப்பதற்கு, 2,400 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அமைந்துள்ள திரிசூலம் பகுதியில் இருந்து, செங்கல்பட்டு வரை, ஜி.எஸ்.டி., சாலையில், மேம்பால சாலை அமைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. இதற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி, தனியார் ஒப்பந்ததாரரிடம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்நிறுவனம் அளித்த அறிக்கை அடிப்படையில், மேம்பால சாலை திட்டத்துக்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை விமான நிலையம் - செங்கல்பட்டு இடையே, 41 கி.மீ., தொலைவுக்கு மேம்பால சாலை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாராகி உள்ளது. இதன்படி, இத்திட்டத்துக்கு, 2,400 கோடி ரூபாய் செலவாகும் என, தெரிகிறது. விமான நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை ஒரு பகுதியாகவும், கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு வரை, ஒரு பகுதியாகவும், இத்திட்டம் மேற்கொள்ளப்படும். இதில், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில், சுங்கச்சாவடிகள் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.

- நமது நிருபர் -
காப்பியடித்தால் ரூ.50 ஆயிரம் : சென்னை பல்கலை எச்சரிக்கை
பதிவு செய்த நாள்04செப்
2017
00:07

சென்னை: 'மாணவர்களை காப்பியடிக்க அனுமதித்தால், கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை பல்கலை எச்சரித்துள்ளது.

சென்னை பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில், மாணவர்களை, ஒரு சில கல்லுாரி நிர்வாகமே காப்பியடிக்க அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சமீபத்தில் நடந்த தேர்வில், ஒரு கல்லுாரியைச் சேர்ந்த, நான்கு மாணவர்களின் கையெழுத்து, ஒரே மாதிரியாக இருந்துள்ளது.
ஒரு மாணவர், விடைத்தாளுடன், 500 ரூபாயை இணைத்துள்ளார். அத்துடன், மொபைல் போன் எண்ணையும் தெரிவித்துள்ள அந்த மாணவர், 'எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்' என, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சிண்டிகேட் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, மாணவர்களை காப்பியடிக்க அனுமதித்தாக, நான்கு கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

'இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, தேர்வு மையங்கள் அமைக்க அனுமதி ரத்து செய்யப்படும்' எனவும், சென்னை பல்கலை எச்சரித்துள்ளது.
ஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு
பதிவு செய்த நாள்03செப்
2017
23:49

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினருடன், அரசு இன்று பேச்சு நடத்துகிறது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களையும் வரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 'சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்ட தலைநகரங்களில், ஜூலை, 18ல், ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆகஸ்ட், 5ல், கோட்டையை நோக்கி பேரணியும், ஆக., 22ல், அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தினர். ஆனால், அரசு கண்டு கொள்ளாததால், வரும், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

வேலை நிறுத்தம் தொடர்ந்தால், அரசு பணிகள் பாதிக்கும் என்பதால், ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் பேச்சு நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்று பகல், 12:30 மணிக்கு, தலைமை செயலகத்தில், பேச்சு நடக்கிறது. இதில், அரசு தரப்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர், கணேசன் தலைமையில் பங்கேற்கின்றனர்.
'அரசு பேச்சு நடத்த முன் வந்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதில், நீண்ட கால பல பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -
பத்து நாள் ஓணம்... உலகளந்த பாடம்...ஓணம் பண்டிகை -

பதிவு செய்த நாள்

04செப்
2017
00:40




எங்கும் பசுமையும், ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் பாரம்பரியம் மிக்க, முக்கிய பத்து நாள் பண்டிகை, ஓணம்.

மலைச்சரிவு(சேரளம்) மற்றும் சேர நாடு என்பதிலிருந்து தோன்றிய கேரளபுத்திரர் என்பதே சேரபுத்ரா என்றழைக்கப்பட்டு, தற்போது, கேரளா என்றழைக்கப்படுகிறதுமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழ்பவர்கள் என்பதால் மலையாளிகள் என, இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

திருமாலின் ஓர் அவதாரத்தை பண்டிகையாக கொண்டாடும் கேரள மக்கள், மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கிட, வாமன அவதாரம் எடுத்த திருமாலை வணங்கியும், ஆண்டுக்கு ஒருமுறை தன் மக்களை காண வரவேண்டும் என, வரம் வாங்கிய மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றும், கேரளா மக்கள் கொண்டாடும் ஒரு திருவிழா இந்த ஓணம் பண்டிகை.

ஆண்டுதோறும் தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, துவங்க உள்ள, கொல்ல வர்ஷம் ஆண்டின், முதல் மாதமான, 'சிங்கம்' மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.தொன்மையான பண்டிகை ஓணம்

* கிட்டத்தட்ட, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, நம்மாழ்வரால் புகழ்ந்து பாடப் பெற்ற திருக்காட்கரா கோவிலில் தான், ஓணம் துவங்கியிருக்கிறது
* பத்துப்பாட்டு நுால்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில்
* நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாடல்களில்
* தேவாரத்தில் சம்பந்தர் பாடியுள்ள பல பாடல்களில்
* கி.பி. 861 தேதியிட்ட, ஒரு தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு
* பாண்டியன் ஆட்சிக் காலத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு
என, மிகத் தொன்மையான பாரம்பரிய பண்டிகை ஓணம் என்பது உறுதி செய்யப்படுகிறது.

மகாபலியும், திருமாலும்அசுர குலத்தில் பிறந்த பிரகலாதனின் பேரன், மகாபலி.
தானம், தர்மம், அருள், கொடை என, மிகச் சிறப்பாக மக்களை ஆண்டு வந்த மகாபலி மன்னர், யாகம் செய்வதிலும் சிறப்பானவர். தானம், யாகம் செய்வதில் தனக்கு மிஞ்சியவர் இவ்வுலகில் இல்லை என்ற செருக்கு அடைந்தார்.

இவர் செருக்கை அடக்க, ஆவணி மாதம், சுக்ல பட்சம், துவாதசி திதியில் திருவோண நட்சத்திரத்தன்று, மகா விஷ்ணு, குள்ளமான வடிவத்தில் அவதாரம் எடுத்தார். குள்ளமாக இருந்ததால், வாமனன் என்ற பெயரில் அழைக்கப் பட்டார்.தேவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற, நர்மதையின் வடகரையில், 'ப்ருகு கச்சம்' என்ற இடத்தில், மகாபலி சக்ரவர்த்தி நடத்தி வந்த அஸ்வமேத யாகத்திற்குஎழுந்தருளினார் வாமனர்.

வாமனரின் வரவில் மகிழ்ந்த மகாபலி, அவரை வரவேற்று, 'தங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார்.தன் காலில் அளந்து, மூன்றடி பூமி தானம் வேண்டும் என, கேட்டார் வாமனர். தரும சிந்தனையுள்ள மகாபலியோ, 'வாழ்விற்கு தேவையான பூமியை வேண்டிய மட்டும் பெற்றுக் கொள்ளலாம்...' என்று கூற... வாமனரோ, 'மூன்றடி நிலம் மட்டும் போதும்...' என்று சொல்கிறார்.

அப்போது, அங்கிருந்த அசுர குலகுரு சுக்ராச்சாரியார், 'சக்ரவர்த்தியே... இவர் சாட்சாத் ஸ்ரீ ஹரியே... கச்யபருக்கும், அதிதிக்கும் பிறந்து, தேவர்களின் பொருட்களை மீட்டுக் கொடுக்க வந்திருக்கிறார்; ஆதலால், நீ இவ்விதம் வாக்கு கொடுப்பது சரியல்ல...' என்று தடுத்தார் மகாபலி. 'எதுவாகிலும் நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன்...' என்று கூறி, வாமனர் கேட்ட பூமியை தானம் செய்தார்.

உடனே, வாமனர் தன் சிறிய உருவத்தை மிகவும் பெரிதாக்கி, பூமி முழுவதையும் ஓர் அடியாலும், சொர்க்க லோகத்தை இரண்டாவது அடியாலும் அளந்து, மூன்றாவது அடி எங்கே வைப்பது என யோசிக்க, 'என் தலையிலேயே அதை வைத்து விடும்...' என்கிறான் மகாபலி.
பகவான் மகாபலியின் தலையில், தன் பாதத்தை வைத்த உடனேயே, அவனுடைய ஆணவம், அகங்காரம் அனைத்தும் அவனை விட்டு பிரிந்தது. பகவானும் மகிழ்ந்து, இந்திர லோகத்திற்கு சமமான பாதாள லோகத்தை அளித்து, மோட்சத்தையும் தந்தார்.

இந்த வரலாற்றின் சான்றோடு தான் கேரளா மக்கள் ஆண்டுதோறும் திருவோண நட்சத்திர நாளில், மகாபலி மன்னர், தங்களை காண பாதாள உலகில் இருந்து பூமிக்கு வருவதாகவும், ஒவ்வொருவர் வீட்டுக்கும் அவர் அவதரிக்க வேண்டும் என்றும், அந்த நாளில் அவரை வரவேற்று, மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

வரவேற்பு

தங்கள் வீட்டுக்கு வரும் மகாபலி மன்னனை மகிழ்ச்சியோடு, கொண்டாட்டமாக வரவேற்க கேரள மக்கள் தயாராகின்றனர். வீட்டின் வாசலிலேயே, மன்னன் மயங்கி, மனம் மகிழ வேண்டும் என நினைக்கின்றனர். அதனாலேயே ஓணம் பண்டிகையின் சிறப்பாக அத்தப்பூ பூக்கோலம் சிறப்படைகிறது.

ஆவணி மாதம் பல வகையான பூக்கள் கேரளாவில் பூக்கும் கால கட்டம். அதனால் தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களின் முக்கியத்துவத்துடன் அனைத்து வகை பூக்களையும் கொண்டு வாசலில் மிக அழகான கோலமிடுவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பூக்கள் இடம்பெறும். முதல் நாள் ஆண்கள் பறித்து வரும், 'அத்தப்பூ' என்ற ஒரு வகை பூவோடு ஆரம்பிக்கும் இந்த கோலம், நாளுக்கு நாள் மெருகேறி பத்தாம் நாள், பத்து வகையான பூக்களைக் கொண்டு மிகப் பெரிய கோலமாக மலரும்.

பண்டிகை என்றாலே பலகாரங்களும், விருந்தும் தானே முதலிடம் பிடிக்கும். அதுவும் கேரளா என்றவுடன் நமக்கு புட்டு, கிழங்கு, பயறு என்று கற்பனை பறக்கும்.'கானம் விற்றாவது ஓணம் உண்' என்பது கேரளா பழமொழி. அதுக்கேற்ப, 64 வகையான உணவு, ஒன்பது வகையான சுவையுடன் தயாரித்து விருந்து படைப்பர். குறிப்பாக, கசப்பு சுவை உணவை தவிர்த்துவிடுவர். மொத்த உணவு படையலுக்கும், 'ஓண சத்யா' என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஒருநாள் உணவு வகைகளின் பட்டியலைக் கேட்டாலே, உடனே, அத்தனையையும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற உணர்வு நமக்கு வந்துவிடும். புது அரிசி மாவில் செய்த அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப்புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம் காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என பட்டியல் நீளுகிறது. பெரும்பாலான உணவுகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும்பங்கு வகிக்கிறது.

இத்தனை அயிட்டத்தையும் சாப்பிட்டால் வயிறு என்னாவது? அதனால் சாப்பிட்ட பின் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு, இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி என, தனியாகதயாரித்து தருவர்.

களி - நடனம் - கொண்டாட்டம்புலிக்களி அல்லது கடுவாக்களிசுமார் 200 ஆண்டுகளுக்கு முன், கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் துவக்கி வைக்கப்பட்ட களி இந்த புலிக்களி.சிவப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் புலி வேடமிட்டு ஆண்கள் ஆனந்தமாய் இசை ஒலிக்கேற்ப ஒருவித தாளத்துடன் நடனம் ஆடி வருவர்.

திருவாதிரை

கசவு என அழைக்கப்படும் துாய வெண்ணிற ஆடையை அணிந்து, தங்கள் மனதிற்கு பிடித்த மகாபலி மன்னனை நினைத்தும், வரவேற்றும் மகிழ்ந்து பாடல்களைப்பாடியபடி கைகொட்டி பெண்கள் ஆடும் நடனம் இது.

யானைத்திருவிழா (10)

ஒன்பது நாட்கள் கொண்டாட்டமாய் போன பின், பத்தாம் நாள் சிறப்பானதாய் ஆவது இந்த யானைத் திருவிழாவால் தான். பண்டிகை என்றாலே பண்டங்களை ஈகை செய்வது தானே! கேரள மக்கள், தங்கள் சக மனிதர்கள் மட்டுமல்லாமல், சக உயிர்களுக்கும் ஈகை புரிந்து கொண்டாடும் திருவிழா இந்த ஓணம்.

அதன்படி, யானைகளுக்கு பொன் மற்றும் மணிகளால் தங்க கவசம் இட்டு, பூத்தோரணங்களால் அலங்கரித்து யானைகளுக்கு என தயாரித்த சிறப்பு உணவுகளை அளித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். பார்க்கும் அனைவரும் பரவசமாய் கும்மாளமிட்டபடி தொடருவர். கோவில் முழுவதும் சுற்றிவரும் யானை, மகாபலி மண்டபத்தில் சிறிது நேரம் நிற்கும்.

ஸ்ரீவாமனமூர்த்தி, மகாபலியை பாதாள லோகத்துக்கு திரும்ப அனுப்புவதற்கான அவகாசமாய் அது எடுத்துக் கொள்ளப்படுகிறது. பத்து நாட்களின் விருந்து,கலை நிகழ்ச்சிகள், உணவு படையல், போட்டி என அனைத்தையும் கண்டுகளித்து, தாம் விட்டு வந்த தம் நாட்டு மக்கள் எல்லா செல்வங்களுடனும், வளத்துடனும் மகிழ்ச்சியாக நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்கிற மனநிறைவுடன் மகாபலி மன்னர் பாதாள லோகத்திற்கு திரும்பி செல்வதாய் ஐதீகம் என்று சொல்வதை, மக்கள் இன்றும் நினைத்து மகிழ்ந்து, அடுத்த ஓணம் பண்டிகைக்கு காத்திருக்கின்றனர்.

விளையாட்டு

சிறப்பான திருவிழா, பண்டிகை என்றாலே ஆட்டம், பாட்டம், உணவு கேளிக்கைகளோடு விளையாட்டும் இருந்தால் தானே சிறக்கும். அதனாலேயே ஓணம்பண்டிகையில் கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களரி,படகுப்போட்டிகள், பாரம்பரிய கதகளி நடனப் போட்டி என, பத்து நாட்களுமே களைக்கட்டும்திருவின் கால்பதிந்த கரை - திருக்காட்கரை
திருவோணம் பண்டிகை இந்த திருக்கோவிலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.

இதன் கருவறையில் ஸ்ரீவாமனமூர்த்தி மகாபலி மன்னனின் தலை மீது தன் பாதத்தை வைத்தபடி விஸ்வரூப தரிசனம் தருகிறார். இந்த இடத்தில் தான் திருமால் வாமன மூர்த்தியாக மகாபலி மன்னனின் தலைமீது கால் வைத்ததில், மகாபலி பாதாள லோகத்தில் மறைந்த இடம்.
ஸ்ரீ வாமன மூர்த்தியை தரிசிக்கும் பக்தர்கள், செய்யாத தவறுக்காக துாற்றப்பட்டு, தன் உயிரை மாய்த்துக் கொண்ட துறவி பிரம்மராக்ஷசரை வணங்காமல் கோவிலில் இருந்து வெளியேறக்கூடாது என்கிற ஐதீகம் உண்டு.

அத்தப்பூ கோலம்!

கேரளாவில் அனைத்து வீடுகளிலும், பத்து நாட்களும் பூக்களை கொண்டு தினம் விதவிதமான கோலம் போடுவர். பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில், பண்டிகை துவங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே, தரையை சாணத்தால் மெழுகி, பின் கோலம் போடும் போது, மீண்டும் சாணத்தை தெளித்து, வண்ணப்பொடிகளை பயன்படுத்தி ஒரங்களை வரைவர்; அதற்குள், வண்ண வண்ண பூக்களை வைத்து அலங்கரிப்பர். சாணத்தின் ஈரத்தால் பூக்கள் பறக்காமல் இருக்கும்.

தற்போது, டைல்ஸ் மற்றும் மொசைக் தரைகளில் சாக்பீஸ் அல்லது க்ரேயான்ஸ் உபயோகித்து, ஒரங்களை வரைகின்றனர். தும்பா, கொங்கினி, செம்பருத்தி, வாடாமல்லி மற்றும் செவ்வந்தி போன்ற வெவ்வேறு பூக்களையும், இலைகளையும் பயன்படுத்துகின்றனர். இதனால், கோலம் வண்ண மயமாக காட்சியளிக்கும். வண்ணப் பொடிகளையோ, காய்ந்த அல்லது செயற்கை பூக்களையோ பயன்படுத்தக்கூடாது.

பூக்கோலத்திற்கு நடுவில் குத்து விளக்கு அல்லது தென்னம்பூக்களை வைத்து வழிபடுவர். கோலம் போடும் போது பெண்கள் பாடல்களை பாடியும், கோலத்தை சுற்றி ஆடியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

இன்று கேரளாவில், மக்கள் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி கொண்டிருக்கின்றனர். திருவோணம் அன்று விரதம் இருப்பதால், எண்ணிலடங்கா பலன்கள் கிடைக்கும்
கேரள மாநிலத்தில், இன்று மக்கள் தங்கள் வீட்டில், மரத்தாலான திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து வழிபாடு நடத்துவர். மேலும், இன்று விஷ்ணு கடவுளை வணங்கி, அவரது துதிப்பாடல்கள் மற்றும் புராணங்களை படிப்பர். பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

இதோடு, சுவாமிக்கு படைக்கும் உணவு பண்டங்களை ஒரு நேரம் சாப்பிட்டு, விரதம் இருக்கலாம். மேலும், வீட்டில் நெய் தீபம் ஏற்றி, விஷ்ணுவை வழிபடுவது மிகவும் நல்லது.
திருவோணம் அன்று விரதம் இருந்தால், வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். திருமணம் ஆகாத பெண்களுக்கு, விரைவில் திருமணம் கைகூடும்.

நான்கு நாட்கள் ஓண விருந்து!

ஓணம் பூஜைகளுக்காக சபரிமலை நடை: செப்., 2-ம் தேதி திறந்தது.
சபரிமலை: ஓணம் பூஜைகளுக்காக சபரிமலை நடை, நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன், நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். நேற்று முதல் வழக்கமான நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நான்கு நாட்கள் ஓண விருந்து நடக்கிறது.
களபாபிஷேகம் மற்றும் சகஸ்ரகலச பூஜை ஓண கால பூஜையின் முக்கிய அம்சமாகும்.3ம் தேதி முதல் 6ம் தேதி வரை மதியம் களப பூஜை நடைபெறும். 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும். 6ம் தேதி வரை தினமும் இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். ஓணத்துக்கு சபரிமலையில் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும்.
நேற்று உத்திராடம் விருந்து மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி சார்பில் நடைபெற்றது. 19 வகை கூட்டு, பாயசத்துடன், 2,500 பேருக்கு வழங்கப்படும். திருவோண விருந்து டாக்டர் மணிகண்டதாஸ் என்ற பக்தர் சார்பில், 28 வகை கூட்டு, பாயசத்துடன் 7,000 பேருக்கு வழங்கப்படும். இவர், 67 ஆண்டுகளாக இதை நடத்தி வருகிறார். 5 மற்றும் 6ம் தேதிகளில் தேவசம் போர்டு ஊழியர்கள் சார்பில் ஓண விருந்து நடைபெறும். 6ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அவியல்!

கொத்தவரங்காய் 50 கிராம்
சேனை 100 கிராம்
முருங்கைக்காய், வாழைக்காய்,
கேரட், உருளைக்கிழங்கு
மற்றும் கத்தரிக்காய் தலா 2,
புடலங்காய் 100 கிராம்
வெள்ளை பூசணி 1 கீற்று
மாங்காய் பாதி
கறிவேப்பிலை, உப்பு மற்றும்
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
கெட்டித்தயிர் 1 மேஜைக்கரண்டி
கொர கொரப்பாக அரைக்க: தேங்காய் ஒரு மூடி,
பச்சை மிளகாய் நான்கு,
சீரகம் மற்றும் மஞ்சள் பொடி தலா அரை தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் 1,
கறிவேப்பிலை தேவையான அளவு

செய்முறை: காய்கள் அனைத்தையும் மெலிதாக, நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். சேனையை மட்டும் தனியாக வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் எல்லா காய்களையும் நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். அரைத்த தேங்காய் விழுது, கறிவேப்பிலை, ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி, தேங்காய் எண்ணெயில், கடுகு தாளித்து பரிமாறவும்!

விபத்தில் இருந்து தப்பிய சென்னை ரயில்
பதிவு செய்த நாள்
செப் 04,2017 11:51



குண்டூர்: ஆந்திர மாநிலம் விஜயவாடா - சென்னை இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
விஜயவாடாவில இருந்து இன்று ( செப்.,4) காலை, 6:00 மணிக்கு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்ட்டது. 30 நிமிடங்களில் தெனாலி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. அங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள மல்லிபாடு என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை, 'கேங்மேன்' கண்டுபிடித்து உஷார்படுத்தினார்.

இதையடுத்து, ரயில் இன்ஜின் டிரைவர் அவசரமாக பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தில் ரயில் தொடர்ந்து பயணித்து இருந்தால் பெரும் விபத்தில் சிக்கி இருக்கும். சரியான நேரத்தில் ஊழியர்கள் செயல்பட்டதால், அந்த விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாளம் சரி செய்யப்பட்ட பின், 8:00 மணிக்கு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...