புதுடில்லி:ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், தேர்வு எழுதி, அலோபதி டாக்டராக செயல்படுவதற்கு வாய்ப்பு அளிக்கும் மசோதா, தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மசோதா தாக்கல்
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கும் மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், நவீன மருத்துவ முறையான, அலோபதி டாக்டர்களாவதற்கு வாய்ப்பு அளிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய மருத்துவ கமிஷன், ஹோமியோபதிக்கான மத்திய கவுன்சில், இந்திய மருத்துவ முறைக்கான மத்திய கவுன்சில் ஆகியவை ஆண்டுக்கு ஒரு முறை கூடி, இது குறித்து பேச வேண்டும்.
விவாதிக்க வேண்டும்
மருத்துவ முறைகளை மேம்படுத்துவது குறித்தும், இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், அலோபதி டாக்டர்களாக செயல்படுவதற்கு தேர்வு நடத்துவது குறித்தும் இந்த அமைப்புகள் விவாதிக்க வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது..
2018-புத்தாண்டு பிறந்தது; நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
Added : ஜன 01, 2018 00:02 |
புதுடில்லி: நாடு முழுவதும் 2018 ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிற்பகல் இருந்து மக்கள் குவியத் தொடங்கினர். ஸ்டார் ஹோட்டல்களில், ஷாப்பிங் மால்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன
சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த ஏராளமானோர், உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர்.
மேலும் சென்னையில் உள்ள பல்வேறு பூங்காக்கள், கிளப்களில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கேக் வெட்டியும் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவொருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
அதேபோல மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர்.
‘அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி பெற முடியாது’ அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி
உள்பட யாரும் பெற முடியாது என அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
தமிழக அமைச்சர் ஜெயக் குமார், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா ஜனநாயக நாடு. வலிமையான ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும்
அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். இதில் மாறுபட்ட கருத்து கிடையாது.
கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தீர்மானிப்பது மக்கள்தான். அவர்கள்தான்
சிறந்த நீதிபதிகள். இறுதி எஜமானார்கள். ஒரு அரசின் வெற்றி, தோல்வியை
அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.
கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிக்கு, தமிழர் பண்பாட்டின்
அடிப்படையில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ரஜினியின் பேச்சை திசை
திருப்ப வேண்டாம். ரஜினி, அ.தி.மு.க. என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
பொதுவாக சொன்ன கருத்து. அவர் தி.மு.க.வை கூட சொல்லி இருக்கலாம்.
அ.தி.மு.க.வை சொல்லி இருந்தால் நாங்கள் பதில் தருவோம். பொதுவாக சொன்ன
கருத்துக்கு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.
ரஜினி வருகையால் அ.தி.மு.க.வுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது. அ.தி.மு.க.வின்
வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி உள்பட யாரும் பெற
முடியாது. அரசியலில் குதிக்கப்போவதாகத் தான் சொல்லி இருக்கிறார். அரசியல்
என்பது ஒரு கடல். அதில் யார் வந்தாலும் வரவேற்போம்.
அரசியலில் குதித்த பின் என்ன மாதிரி கொள்கைகள், திட்டங்கள் என்பதை பார்த்து
தான் விமர்சனம் செய்ய முடியும். பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணியா? என்பதை
ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும்.
திருமங்கலம் தேர்தலில் மோசமான கலாசாரத்தை தி.மு.க.தான் கொண்டு வந்தது.
தி.மு.க. வழியில் ரூ.20 டோக்கன் தந்து தினகரன் ஹவாலா முறையில் ரூ.10 ஆயிரம்
தருவதாக உறுதி அளித்து வெற்றியை தற்காலிகமாக பெற்றிருக்கிறார். ஆர்.கே.
நகர் தொகுதி மக்கள் தினகரனை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் மு.க.ஸ்டாலினுக்கும்,
தினகரனுக்கும் இருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால், ‘கடல் வற்றி
கருவாடு சாப்பிட கொக்கு நினைத்து செத்தது’ போல் இருக்கிறது.
2021-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. அரசு நீடிக்கும். அதன்பின்பும் அ.தி.மு.க.
அரசை அமைப்போம் என்ற பயணத்தில் நாங்கள் செல்கிறோம். ஜெயலலிதாவை ஏமாற்றி
கொள்ளையடித்த பணத்தில் தினகரன் வெற்றி பெற்று உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்மிக அரசியல் என்றால் என்ன? நடிகர் ரஜினிகாந்த் கூறிய விளக்கம்
ஆன்மிக அரசியல் என்றால் என்ன? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
ஜனவரி 01, 2018, 05:15 AM சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து போயஸ் கார்டன் இல்லம் நோக்கி ரஜினிகாந்த் வந்தார்.
போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லம் அருகே ரசிகர்கள் நற்பணி மன்ற கொடியுடன் திரண்டனர். அவர்கள் ரஜினிகாந்த் வந்தபோது உற்சாகமாக பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
அப்போது, ‘ரஜினிகாந்த் ஜனநாயகத்தின் பாதுகாவலர்’, ‘நமது சின்னம் பாபா சின்னம்’, ‘வருங்கால தமிழகம் ரஜினிகாந்த்’, ‘நாளைய முதல்-அமைச்சர் ரஜினிகாந்த்’ என்பன உள்ளிட்ட பல்வேறு வாழ்த்து கோஷங்களை ரசிகர்கள் எழுப்பினர்.
வீட்டுக்கு செல்லும் வழியில் போயஸ்கார்டன் சாலை சந்திப்பில் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மக்களை எப்போது நேரடியாக சந்திப்பீர்கள்?
பதில்:- மக்களை எப்போது நேரடியாக சந்திப்பேன் என்பது தெரியாது. ஏற்கனவே நான் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லிவிட்டேன்.
கேள்வி:- ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாக கூறியிருக்கிறீர்கள். ஆன்மிக அரசியல் எப்படி இருக்கும்?
பதில்:- ஆன்மிக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியலாக இருக்கும்.
கேள்வி:- உங்களுடைய கட்சியின் பெயரை தெரிந்துகொள்ள ரசிகர்கள் சட்டசபை தேர்தல் வரை காத்திருக்கவேண்டுமா?
பதில்:- எனது கட்சி பெயரை எப்போது அறிவிப்பேன் என தெரியாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
கேள்வி:- உங்களுடைய நண்பர் கமல்ஹாசன் நீங்கள் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறாரே..
பதில்:- வாழ்த்து தெரிவித்ததற்காக கமல்ஹாசனுக்கு ரொம்ப நன்றி. மேலும் எனக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியலுக்கு வருவது உறுதி; சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி - ரஜினி அறிவிப்பு
நான் அரசியலுக்கு வருவது உறுதி, வரும் தமிழக சட்டபைத்
தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியென நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக
அறிவித்துவிட்டார். #Rajinikanth #Rajinikanthpoliticalentry
சென்னை,
கடந்த மே மாதம் நடிகர் ரஜினி காந்த் ரசிகர்களுடனான
சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட போது நமது
அரசியல் சிஸ்டமே கெட்டுப்போய் விட்டது என்றார். மேலும் தேர்தலை மனதில்
வைத்து போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்களுக்கு ஆலோசனை
கூறி பேசினார். இது ரஜினி அரசியலுக்கு வருவார? மாட்டாரா? என்ன நிலைப்பாடு
எடுப்பார் என்ற நீண்ட விவாதத்தை மீண்டும் வலுவடைய செய்தது. தற்போது
மறுபடியும் கடந்த 26-ந்தேதி முதல் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து
அவர்களுடன் போட்டோ எடுத்து வந்தார்.
நடிகர்
ரஜினிகாந்த் இறுதி நாளான இன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு
அறிவிப்பதாக கூறியிருந்தார். இன்று ரசிகர் மத்தியில் பேசுகையில்,
அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும்
போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார்.
ரஜினிகாந்த் பேச்சு விவரம் வருமாறு:-
முதலில்
நான் ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. கட்டுப்பாடாக
ஒழுக்கமாக இருந்து கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேர் இங்கு வந்து போட்டோ எடுத்து
போனது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கட்டுப்பாடு ஒழுக்கம்
மட்டும் இருந்தால் போதும் நாம் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். இது நானாக
பில்டப் கொடுக்கவில்லை. எனக்கு அரசியல் கட்சி தொடங்க பயம் இல்லை. மீடியாவை
பார்த்து தான் எனக்கு பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் மீடியாவை
பார்த்து பயப்படுகிறார்கள், திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. நான்
காரில் வரும்போது, போகும் போது எல்லாம் கேட்பார்கள். நான் ஏதாவது சொல்ல அது
விவாதம் ஆகிவிடும்.
நேற்று முன்தினம் வரும்போது,
சார் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்டார்கள். சோ சார் முதலிலேயே
என்னிடம் மீடியாவிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள் என்றார். இப்போது அவரை
நான் மிஸ் பண்றேன். அவர் இருந்து இருந்தால் எனக்கு ரொம்ப பக்க பலமாக
இருக்கும். அவரது ஆன்மா இப்போது எனக்கு பக்க பலமாக இருக்கிறது.
கண்ணன்
அர்ச்சுனனிடம் கடமையை செய், யுத்தத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்
என்றார். யுத்தம் செய் நான் ஆள்கிறேன், செத்தால் வீர மரணம். யுத்தம்
செய்யாமல் போனால் உன்னை கோழை என்று சொல்வார்கள். நான் எல்லாவற்றையும்
ஏற்கனவே முடித்துவிட்டேன். இனி அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு
வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்... இது காலத்தின் கட்டாயம்...
வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு
முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.
அதற்கு
முன்னால் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. அதற்கு நாட்கள் ரொம்ப குறைவாக
இருப்பதால் அதில் போட்டியிடப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தல் பற்றி அந்த
நேரத்தில் முடிவு எடுப்பேன். நான் பதவிக்கோ, பெயருக்கோ, புகழுக்கோ
அரசியலுக்கு வரவில்லை. அதை கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு நீங்கள்
ஆயிரம் மடங்கு கொடுத்து விட்டீர்கள். எனக்கு பதவி ஆசை இருந்தால் 1996-லேயே
வந்திருப்பேன். 1996-லேயே நாற்காலி என்னைத் தேடிவந்தது. அது வேண்டாம் என்று
தள்ளி வைத்தேன். 45 வயதிலேயே எனக்கு அந்த பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி
ஆசை எனக்கு வருமா? அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன் இல்லையா?
நான்
ஆன்மீகவாதி என சொல்வதற்கு தகுதியற்றவனா? அரசியல் ரொம்ப கெட்டுப்போச்சு...
நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சு... ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சு.
கடந்த ஒரு ஆண்டாக தமிழ்நாட்டில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள்,
ஒவ்வொரு தமிழ் மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டது. எல்லா மாநிலத்து
மக்களும் நம்மைப்பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த
நேரத்தில் நான் இந்த முடிவு எடுக்கவில்லை என்று சொன்னால், என்னை வாழ வைத்த
தெய்வங்களான தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்கு ஜனநாயக ரீதியாக, நான் ஒரு
முயற்சி எடுக்கவில்லை என்றால், சாகிற வரைக்கும் அது என்னை துரத்தும்.
மாத்தணும் எல்லாவற்றையும் மாத்தணும்.
அரசியல்
மாற்றம் அதுக்கு நேரம் வந்தாச்சு. சிஸ்டமை மாற்றணும். உண்மையான, நேர்மையான,
நாணயமான, வெளிப்படையான, ஜாதி, மத சார்பற்ற, ஒரு ஆன்மீக அரசியலை கொண்டு
வரணும். அதுதான் என்னு டைய நோக்கம். அதுதான் என்னுடைய விருப்பம். அதுதான்
என்னுடைய குறி. அது ஒரு தனி மனிதனால் முடியாது. தமிழக மக்கள் நீங்கள்
எல்லோரும் என்கூட இருக்கணும். இது சாதாரண விஷயம் இல்லை. எனக்கு தெரியும்.
ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் நின்று ஜெயித்து ஆட்சி அமைக்கிறது என்பது
சாதாரண விஷயம் இல்லை என்பது எனக்கு தெரியும். கடலில் மூழ்கி முத்து
எடுப்பது மாதிரி.
ஆண்டவனின் அருள், மக்களின்
நம்பிக்கை, அவர்களுடைய அபிமானம், அவர்களது அன்பு, அவர்களது ஒத்துழைப்பு,
அவர்களது ‘சப்போர்ட்’ இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும். ஆண்டவனின்
அருள், மக்களின் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை
இருக்கு. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். அவர் பேசி முடித்ததும் ரசிகர்கள்
ஒவ்வொருவராக மேடைக்கு வந்து ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
புதிய நம்பிக்கையை கொடுக்கும் புத்தாண்டு
2017–ம்
ஆண்டு முடிந்து, இன்று 2018–ம் ஆண்டு பிறந்தது. அரசியல் ரீதியாகவும்,
நாட்டின் பொருளாதார ரீதியாகவும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல
சவால்கள், சோதனைகள் 2017–ஐ வாட்டி வதைத்தது. 2016–ம் ஆண்டு கடைசியில்
நவம்பர் 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென 500, 1000 ரூபாய்
நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் பாதிப்பு 2017–ல் தான் முழுமையாக
தெரிந்தது. இதுபோல, ஜூலை 1–ந் தேதி சரக்கு சேவை வரி அமலுக்கு வந்தது.
சரக்கு சேவை வரியால் பொருட்களின் விலையெல்லாம் குறையும், மத்திய–மாநில
அரசுகளுக்கு வருமானம் பெருகும், பல வரிகளை கட்டுவதற்கு பதிலாக, ஒரே வரியாக
சரக்கு சேவை வரியை கட்டுவதால் வியாபாரிகளுக்கும், தொழில் முனைவோருக்கும்,
எல்லாவற்றுக்கும் மேலாக பொது மக்களுக்கும் மிகுந்த பலன் கிடைக்கும் என்று
கூறப்பட்டது. ஆனால், யாரும் அந்தளவு பலனை அனுபவிக்கவில்லை.
ரியல் எஸ்டேட் துறைக்கு 2017–ல் நிச்சயமாக ஒரு சிறப்பான ஆண்டாக இல்லை. இந்த
தொழிலில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. வேலைவாய்ப்புகளும் பெருமளவில்
குறைவாகவே இருந்தது. பொருளாதார வளர்ச்சி சரிவடைந்ததோடு மட்டுமல்லாமல்
ஏப்ரல் முதல் நவம்பர் வரையுள்ள கால கட்டத்தில் அரசின் வருவாயைவிட செலவு
ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 105 கோடி அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டை
பொறுத்தமட்டில், அ.தி.மு.க. பிளவுபட்டது. ஆண்டுதோறும் நடக்க வேண்டிய மாவட்ட
கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு இந்த ஆண்டு நடைபெறவில்லை.
பருவமழை தவறியதால் கடும் வறட்சி நிலவியது. நவம்பர் 30–ந்தேதி ‘ஒகி’
புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. தொழில் வளர்ச்சி இல்லாததால்,
வேலைவாய்ப்புகளும் பெருமளவு குறைந்துள்ளது.
இந்த நிலையில், இந்த புத்தாண்டில் நிச்சயமாக மத்திய அரசாங்கம் மற்றும்
தமிழக அரசின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசாங்கத்தை பொறுத்தமட்டில், பிப்ரவரி 1–ந்
தேதி தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்தான் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு
முன்பு தாக்கல் செய்யப்போகும் முழுமையான பட்ஜெட்டாக இருக்கும்.
இதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு 8 மாநில சட்டசபை தேர்தல்களை பா.ஜ.க.
சந்திக்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் தாக்கல்
செய்யப்போகும் பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு அதிக
முக்கியத்துவம் இருக்கும். வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்கள்
நிச்சயமாக இடம்பெறும். தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, இரண்டுக்குமே
இந்த ஆண்டு மத்திய அரசாங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், இந்த
ஆண்டும் தமிழ்நாட்டில் வறட்சியும், குடிநீர் பற்றாக்குறையும்
இருக்கும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அறிவிப்புகள் நிறையவரும். மேலும்,
இந்த ஆண்டு தமிழக அரசு பல புதிய திட்டங்களை அறிவித்து முனைப்பான
முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடத்திட்டங்களில்
கொண்டுவரப்படும் மாற்றம் கல்வி வளர்ச்சியில் எந்த அளவுக்கு முன்னேற்றம்
கொண்டுவரப்போகிறது என்பதையும் பார்க்கலாம். தமிழக அரசியலிலும், அரசிலும்
இந்த ஆண்டு ஒரு பரபரப்பான ஆண்டாகத்தான் இருக்கும்.