Sunday, November 25, 2018

ஒழுங்கு நடவடிக்கையால் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட அதிகாரி: அனைத்தையும் ரத்து செய்து பண பலன்களையும் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 24 Nov 2018 21:01 IST




கோப்புப் படம்

முப்பது ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு வராததால் பாதிக்கப்பட்ட அதிகாரி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு சேர வேண்டிய பணபலன்களை வழங்க உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக பணியாற்றியவர் சுந்தரராஜன் (88), சத்துணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட பொருட்கள் இருப்பை சரிபார்க்காமல் இருந்ததாகக் கூறி, 1988-ம் ஆண்டு பணி ஓய்வு பெறுவதற்கு 10 மாதங்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் முடிவுக்கு வராததால், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்ய கோரியும், ஓய்வு பெற அனுமதித்து, பண பலன்காலையும், ஓய்வூதியத்தையும் வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் விசாரித்தார். அப்போது குற்ற வழக்கு நிலுவையில் இருந்ததால் ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, 30 ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வராததால் பாதிக்கப்பட்ட 88 வயதான சுந்தரராஜனுக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்து, அவருக்கு வழங்க வேண்டிய பண பலன்களையும், ஓய்வூதியத்தையும் ஆறு வாரங்களில் வழங்க உத்தரவிட்டார்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை இதுபோல பல ஆண்டுகளாக முடிவுக்கு கொண்டு வராமல் இருப்பது ஏற்று கொள்ளத்தக்கதல்ல என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை உதாரணமாக கொண்டு அரசு அதிகாரிகள் கண் திறக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஓய்ந்தது கஜா புயல்.. தீர்ந்ததா துயரம்? : உதவிக்காக தவிக்கும் மன்னார்குடி மக்கள்

Published : 24 Nov 2018 20:16 IST


பாரதி ஆனந்த்





டெல்டா மாவட்டங்களில் புயலுக்குப் பின் அமைதி நிலவவில்லை அல்ல அவதி வதைக்கிறது. துயரத்தில் மிதக்கும் பகுதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. மன்னார்குடி மக்களுக்கு அரசு நிவாரணம் போதிய அளவில் கிடைக்காததால் பசியும், இருளும் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

அடிப்படையில் மன்னார்குடி ஒரு விவசாய பூமி. நெல்தான் பிரதானம். அதுதவிர கரும்பு, சில சமயம் கம்பு, கேழ்வரகு எல்லாம் பயிரிடுவது வழக்கம். ஒரு வீடு இருந்தால் அதை சுற்றி நிச்சயம் குறைந்தது 30 தென்னை மரங்களாவது இருக்கும். தென்னை விவசாயமும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல் கால்நடைகள் வளர்ப்பும் அதிகம். இந்த பூமியை சில சமயம் இயற்கையும் பல சமயம் ஆட்சி அதிகாரங்களும் பதம் பார்த்துவிடுகிறது.

இந்த முறை இயற்கை ஆடிய கோரத் தாண்டவம் ஒருபுறம் அதிலிருந்து மக்களை புயல் வேகத்தில் மீட்டெடுக்காத அரசாங்கம் மறுபுறம் என விழிபிதுங்கி நிற்கின்றனர் அப்பாவி மக்கள்.

நவம்பர் 15 வரை மன்னார்குடி வாசிகள் அறிந்திருக்கவில்லை, புயல் மழையால் பயிர்களும், மரங்களும், கூரைகளும், மண் சுவர்களும், கால்நடைகளும் மண்ணோடு மண்ணாகப் போகப்போகிறது என்று. இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற சூழலில்தான் மன்னார்குடி மக்கள் இன்று நிற்கதியாய் நிற்கின்றனர்.



அதோ அங்கு நிவாரணம் செல்கிறது... இதோ இங்கு உதவிகள் குவிந்துள்ளது என்றெல்லாம் தகவல்களைப் பார்த்தபின்னர் தொகுதி வாரியாக கள நிலவரம் அறிய முற்பட்டதன் முயற்சியில் முதலில் மனதிற்கு வந்தது மன்னார்குடி தொகுதி.

முதல் குரலை பதிவு செய்தவர் திமுக எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா. தலைக்கு மேல் கூரை இல்லை; தரையில் விரித்து உறங்க பாயில்லை, மின் விநியோகம் கிடைக்காததால் இரவின் இருள் விலகவில்லை, தவிர எங்கே சென்றாலும் அரிசியும் உப்பும் மட்டுமாவது தாருங்கள் கஞ்சியாவது குடிப்போம் என்ற கூக்குரல் இல்லாமல் இல்லை. இதுதான் என் தொகுதி மக்களின் நிலை என வேதனையை சொன்னார். சற்று விரிவாக சொல்லும்படி கேள்விகளை முன்வைக்க அவர் அளித்த பதில்கள் அரசாங்கத்துக்கான கேள்விகள்.

எம்.எல்.ஏ., சொல்லும் சாட்சி!

தொகுதி நிலவரம் குறித்து மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா, புயல் ஒன்று வருகிறது என்று சொன்னபோது வானிலையில் இருந்த ஆர்வத்தால் யதார்த்தமாகத்தான் அதை பின்பற்றத் தொடங்கினேன். ஆனால், எங்கள் ஊரைச் சேர்ந்த வானிலை ஆர்வலர் செல்வக்குமார், மன்னார்குடி புயல் ஆபத்தில் இருப்பதாக சொன்னபோதுதான் கொஞ்சம் கிலி பிடித்தது. அப்போதிலிருந்து புயலின் போக்கை தொடர்ந்து பின்பற்ற ஆரம்பித்தேன். முடிந்தவரை முன்னெச்சரிக்கை தகவல்களை எனது ட்விட்டர் தளம் வாயிலாக பரப்பிக் கொண்டிருந்தேன்.

நவம்பர் 15-ம் தேதி இரவு அசாதாரணமான நாளாக இருந்தது. புயலின் வேகம் அப்படி இருக்கக் கூடும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் பிரதான சாலைக்கு செல்லவே 9 மணியானது. வழியில் அரசுப் பணியாளர்கள் ஒருவர்கூட இல்லை.

இயற்கைப் பேரிடாரை கையாள்வதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதா?

தானே, வர்தா, ஒக்கி, சென்னை பெருவெள்ளம் என இந்த அதிமுக ஆட்சி எத்தனை இயற்கைப் பேரிடர்களைப் பார்த்துவிட்டது. ஆனால், இன்று கஜாவுக்குப் பின்னும் மந்தமாகவே இருக்கிறது என்றால் அடிப்படை புரிதல் இல்லை என்றுதானே அர்த்தம்.

இயற்கைப் பேரிடர் பற்றி அரசாங்கத்துக்கு அடிப்படை புரிதல் வேண்டும். அடிப்படை புரிதல் இருந்தால்தான் அங்கு கற்றலுக்கான வாய்ப்பு ஏற்படும். அப்படி ஒரு சீற்றத்தில் பாடம் கற்றுக்கொண்டவர்கள் அடுத்த பேரிடரின்போது துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணிகளை செய்வார்கள். இந்த அரசுக்கு புரிதலும் இல்லை. கற்றலும் இல்லை. அப்புறம் செயல்பாடு மட்டும் எங்கிருந்து வரும்? இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்த அரசாங்கத்துக்கு திராணி இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உங்கள் தலைவர் பாராட்டினாரே?

ஆமாம் பாராட்டினார். அவர்கள் இதை செய்துவிட்டோம், அதை செய்துவிட்டோம் என்று பட்டியல் சொன்னார்கள் அதனால் பாராட்டினார். அப்புறம்தானே தெரிந்தது சொன்னது எல்லாம் பொய் என்பது. பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு படிநிலையாகக் கடக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரமிட் கட்டமைப்பே அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.



இப்போது அங்கு நிலவரம் எப்படி இருக்கிறது?

நவம்பர் 16-ம் தேதி காலையில் தஞ்சை பிரதான சாலை தஞ்சாவூர் - திருவாரூர் - நீடாமங்கலம் சாலையை சீர் படுத்தும் பணியில் இறங்கினோம். என்னுடன் இளைஞர்களும், தொண்டர்களும் சேர்ந்துகொண்டனர். மாலை 5.30 மணியளவில் அந்த சாலையில் இருந்த மரங்கள் கட்டர்களால் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட சாலை பயன்பாட்டுக்கு வந்தது. அதுவரை அந்தப் பகுதிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. பணி முடியும் வேளையில் டிஎஸ்பி மட்டும் வந்து சென்றார்.

மன்னார்குடி மரங்கள் நிறைந்த பகுதி. இங்கு குடிசைகளும் அதிகம். உண்மையிலேயே இந்த அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக எடுத்திருந்தால் மரங்களை வெட்ட கட்டர்கள், அப்புறப்படுத்த ஜேசிபி இயந்திரங்கள், வீடுகளுக்கு கூரை அமைக்க தார்பாலின்கள், பசியமர்த்த அரிசி, பருப்பு இப்படித்தானே ஆயத்தமாயிருக்க வேண்டும்?

ஆனால், நிவாரண முகாம்கள் முன்னரே அமைக்கப்பட்டதே? உணவும் வழங்கப்படுகிறதே?

உணவா? என்னிடம் நிவாரணமாக மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, பருப்பில் சாம்பிள் இருக்கிறது. பேரையூர் ஊராட்ட்சியில் ஒருவர் அரிசியைக் காட்டினார். புழுக்கள் நெளிந்தன. பறவாக்கோட்டை ஊராட்சியில் பருப்பு பார்த்தோம். பூஞ்சை பூத்திருந்தது. இதுவா நிவாரணம். தரமான உணவு இல்லை. இன்னமும் மின் விநியோகம் இல்லை. ஆனால், இங்கு எந்த பாதிப்பும் இல்லாததுபோல் இருட்டடிப்பு மட்டும் நடக்கிறது. இது நியாயமே இல்லை.

மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறதா? பிரதமர் ஒரு ஏரியல் சர்வேயாவது செய்திருக்கலாம் என நினைக்கிறீர்களா?

மத்திய அரசு தானே, வர்தா, ஒக்கி பாதிப்புகளுக்கு கோரிய நிவாரணத்தையே இன்னும் கொடுக்கவில்லையே. அப்புறம் பிரதமர் ஏரியல் சர்வே செய்யாவிட்டால் என்ன முதல்வர் ஏரியல் சர்வே செய்திருக்கிறாரே. அதிமுக மத்திய அரசின் பினாமிதானே.

அடுத்த தேர்தலில் இது பிரதிபலிக்குமா?

இப்போது அரசியலுக்கே இடமில்லை. என் மண், என் மக்கள் எனப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் செய்யும் உதவி திமுக-காரர்கள் வீட்டுக்கு என்று செல்வதில்லை. அது எல்லோருக்குமானது. அரசியல் பற்றியெல்லாம் இப்போது சிந்திக்கவே நேரமில்லை.

களத்தில் உங்கள் சார்பில் வழங்கப்படும் உதவிகள்..

அறிவாலயத்திலிருந்து 20 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் வந்தன. நடிகர் கருணாகரன் 150 மூடைகள் அரிசி அனுப்பிவைத்தார். தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சுப.வீர பாண்டியன் 100 மூடைகள் அரிசி அனுப்பிவைத்தார். நானும் எனது சொந்த செலவில் மக்களுக்கு தரமான அரிசி வாங்கிக் கொடுக்கிறேன்.

இப்போதைக்கு மன்னார்குடி மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் டாப் 3- பட்டியிலிடுங்கள்?

முதலில் தார்பாலின் தேவை. தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தாலாவது அவர்கள் அண்டிக் கொள்வார்கள். இங்கே மனிதன் வாழவே வழியில்லாத நிலையில் பள்ளிகளைத் திறந்து நிவாரண முகாம்களை முடக்கியுள்ளது அரசு. வீடற்றவர்கள் எங்கே செல்வார்கள் என்ற முன்யோசனை கூட அவர்களுக்கு இல்லை.

மேலகண்டமங்கலம் ஊராட்சிக்கு சென்றிருந்தேன். ஒரு முகாமில் ஆட்டுக்குட்டிகளுடன் அவற்றின் புழுக்கைகளுடன் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இப்போது அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடியாது. ஒரு தார்பாய் கொடுத்தால் கூரையை வேய்ந்து அண்டிக் கொள்வார்கள் அல்லவா? அதையாவது செய்வோம்.

இரண்டாவதாக அரிசி. இதை சொல்லவே வருத்தமாகத்தான் இருக்கிறது. நாங்கள்தான் ஊருக்கே நெல் விளைவித்தோம். ஆனால், எங்கள் பகுதிக்குத்தான் இன்று அரிசி தேவைப்படுகிறது. தரமான அரிசியை வழங்குங்கள்.

மூன்றாவதாக மெழுகுவர்த்திகள். இங்கு மின்சாரம் வர இன்னும் இரண்டு வாரங்கள் கூட ஆகலாம். மின் இணைப்புகளை வழங்குவதிலும் ஆளுங்கட்சியினர் மோசடி உள்ளது. அதிமுக பிரமுகர்கள் உள்ள பகுதியில்தான் முதலில் மின் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.

தார்பாலின், அரிசி, மெழுகுவர்த்தி இவை பிரதான தேவை. இவை தவிர்த்து ஆடைகள், போர்வைகள் போன்றவற்றை தந்து உதவுங்கள்.

உங்களை மிகவும் வேதனைப்படுத்திய காட்சி?

தென்பறை ஊராட்சிக்கு களப் பணிக்காக சென்றிருந்தோம். அங்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தனர். மூவரும் படிக்கின்றனர். ஒருவர் பி.இ. படிக்கிறார். தாய், தந்தை இல்லை. அவர்கள் வசித்த வீடு முற்றிலுமாக மழையில் கரைந்துவிட்டது. பக்கத்து வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அதுவும் எப்போது வேண்டுமானாலும் கீழ் விழலாம் என்ற நிலையில்தான் இருக்கிறது. அந்தப் பெண் பிள்ளைகள் நிவாரண முகாம் செல்வதற்கும் தயங்குகின்றனர். அவர்களுக்கு தார்பாய் இருந்தால் தற்காலிகமாக ஓர் இருப்பிடத்தையாவது அமைத்துக் கொள்வார்கள். அவர்களது நிலைமை மனதை மிகவும் பாதித்தது. ஒரு கூரைதான் இப்பொழுது அவர்களுக்கு மிக்கப் பெரிய கவுரவம்.

அடுத்த 4 நாட்களுக்கு பெரியளவில் மழை இருக்காது என்று செல்வகுமார் கூறியிருக்கிறார். இந்த 4 நாட்களை அரசாங்கம் சாதுர்யமாக பயன்படுத்தி மக்கள் துயர் துடைக்க வேண்டும்.

ஒரு களப் பணியாளரின் கோரிக்கை..

தொகுதி மக்களுக்காக ஒரு எம்.எல்.ஏ., சொன்ன சாட்சி இப்படியிருக்க நீடாமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் லோகேஸ்வரி இளங்கோவன் களப் பணியாற்றிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

புயல் ஓய்ந்தவுடன் என் மண் வேதனை எனை அங்கு அழைத்தது. தொப்புள்கொடி உறவுகளுக்கு கரம் கொடுக்க ஓடோடிச் சென்றபோது பாதை இல்லை, பயிர்கள் இல்லை, சாலையில் இருபுறமும் நின்றிருந்த மரங்கள் இல்லை, அவற்றில் கூடு வாழ்ந்த பறவைகள் இல்லை. குடிசை வீடுகள் இல்லை. அப்படியே அது அரைகுறையாக நின்றாலும் அவற்றின் மேலே ஓடில்லை, வேய்ந்த கூரையில்லை.

இல்லாமை மட்டுமே இருந்தது. ஆங்காங்கே நிவாரண முகாம்கள். அவற்றில் மாற்று உடைகூட இல்லாமல் என் சொந்தங்கள். ஒரு முகாமுக்கு ஒரு மூடை அரிசி என்ற வீதம் உதவி வருகிறது. முகாம் சாப்பாடு தரமாகத்தான் இருந்தது என்பது சற்றே ஆறுதலான விஷயம்.

புயல் வருகிறது என எச்சரித்த அரசு அதன் தாக்கம் இவ்வளவு கொடூரமாக இருக்கும் எனக் கூறியிருந்தால் குறைந்தபட்சம் தென்னை தவிர மற்ற மரங்களின் கிளைகளையாவது அவர்கள் வெட்டியிருப்பார்கள். கால்நடைகளை பத்திரப்படுத்தியிருப்பார்கள். கஜாவை கூஜாவாக்கிவிட்டோம் என்று கர்ஜித்துவிட்டு இன்று பாதிப்படைந்த பக்கமே திரும்பாமல் இருப்பதில் என்ன நியாயம்?

தென்னைக்கு மரம் ஒன்றுக்கு ரூ.600 என்ற இழப்பீடு எல்லாம் நிச்சயம் போதாது. சாம்பலில் இருந்து மீள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் அவர்களுக்கு குறைந்தது 6 மாதங்களாவது பென்ஷன் வழங்க வேண்டும். கூரை வீடுகளுக்கு நிவாரணம் இல்லை என அரசு கூறுகிறது. கூரை வேய குறைந்தது ரூ.5000 வேண்டும். எனவே, அரசு பாரபட்சம் காட்டாமல் உதவி செய்ய வேண்டும். மின் விநியோகம் சீராக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம்.

களத்தில் அரசுப் பணியாளர்களைவிட தன்னார்வலர்கள்தான் அதிகமாக உதவி செய்து கொண்டிருக்கின்றனர். மனதளவில் மிகவும் துவண்டு போயிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். அவர்களுக்கு அரசு தோள் கொடுக்க வேண்டும். இப்போதே மனமுடைந்து விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். எதுவும் இல்லதபோதாது வங்கிகள் விவசாயக் கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டினால் அவர்கள் எங்கே செல்வார்கள். விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்.

சோறுடைத்த சோழநாட்டை ஒரு குவளை அரிசிக்காக கையேந்த வைப்பதெல்லாம் ஒட்டுமொத்த தமிழகத்துக்கு அவமானம். அவர்கள் நம்மிடம் யாசகம் கேட்கவில்லை. இயற்கை பேரிடரில் சிக்கி சின்னாபின்னமான அவர்களை மீட்டெடுப்பது அரசுக்கு தலையாய கடமை என்றால் எனக்கும் உங்களுக்கும் தார்மீக பொறுப்பு.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

புயலால் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மின் இணைப்பு


Added : நவ 24, 2018 19:28 |

புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளுக்கு, மின் சப்ளை செய்வதற்காக, உயிரை பணயம் வைத்து, வேலை செய்யும் ஊழியர்களுக்கு, சமூக வலைதளங்களில், பாராட்டுகள் குவிந்து வருகின்றன.தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள், 'கஜா' புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டங்களில் இருந்த, 1.07 லட்சம் மின் கம்பங்கள் உட்பட, பல மின் சாதனங்கள் சேதமடைந்து உள்ளன. இவற்றை சரி செய்யும் பணியில், 22 ஆயிரத்து, 334 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதில், 1,000 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்தும், 500 பேர், கேரளாவில் இருந்தும் வந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், மின்சாரம் இல்லாததால், குடிநீர், சமையல் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இதையடுத்து, அவர்களுக்கு, விரைவாக மின் சப்ளை செய்வதற்காக, ஊழியர்கள், வயலில் கழுத்தளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், அதில் நடந்தபடி, மின் கம்பங்களை எடுத்து செல்கின்றனர்.மின் கம்பத்தை நிறுவிய பின், அதன் மேல் ஏறி, மின் கம்பியை இணைக்கின்றனர். இதற்காக, வயிற்று பகுதியில், ஒரு கயிறை மட்டும் கட்டி, கம்பியின் மீது படுத்தபடியே ஊர்ந்து சென்று, அடுத்த கம்பத்தின் மேல் தாவுகின்றனர். தரையில் இருந்து, பல நுாறு அடி உயரம் உள்ள, மின் கோபுரம் மேல் ஏறி, அதன் கம்பியை, ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.இவற்றை, புகைப்படம் எடுக்கும், உள்ளூர் இளைஞர்கள், 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அவற்றை பார்த்து, தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களும், மின் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உயர்வுக்கு காரணம்!

மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறை வழங்கப்படும் ஊதிய உயர்வு, 2015 டிச., முதல் நிலுவையில் இருந்தது. சென்னையில், 2016ல் வீசிய, 'வர்தா' புயல்; கன்னியாகுமரியில், 2017ல் வீசிய, 'ஒக்கி' புயலின் போதும், களப்பிரிவு ஊழியர்கள், உயிரை பணயம் வைத்து, சேதமடைந்த சாதனங்களை சரி செய்தனர்.அதை நேரில் பார்த்த, அப்போது, மின் வாரிய தலைவராக இருந்த சாய்குமார், ஊழியர்கள் விருப்பப்படி, 2.57 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்தார். அதை ஏற்காத நிதித்துறை, கள ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டுகள்; அதிகாரிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதியம் வழங்குமாறு தெரிவித்தது. இருப்பினும், பிப்., மாதம், 2.57 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு காரணமான, களப் பிரிவு ஊழியர்கள், தற்போது, கஜா புயலிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். - நமது நிருபர் -
தென்னை மரங்களை எடுத்து செல்லுங்கள்'

Added : நவ 24, 2018 19:12

'எங்களுக்கு நீங்கள் எதுவும் தர வேண்டாம்; நாங்கள் பிள்ளை போல் வளர்த்து, சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை எடுத்து செல்லுங்கள்; கொட்டிக்கிடக்கும் இளநீரை, அள்ளிச்சென்று பருகுங்கள்; அதுவே, பேருதவியாக இருக்கும்' என, புயலால் பாதிக்கப்பட்ட, தஞ்சாவூர் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபத்தில் வீசிய புயலால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆண்டிக்காடு, பள்ளத்துார், தில்லங்காடு சுற்றுவட்டார பகுதி முழுவதும், பல லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன; இளநீரும் வீணாகிக் கிடக்கிறது.'வெளி மாவட்டங்களில் வசிப்போர், இளநீரை அள்ளிச்சென்று பருகுங்கள்; தென்னை மரங்களையும் எடுத்துசெல்லுங்கள்' என, விவசாயிகள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பட்டுக்கோட்டை தாலுகா, தில்லங்காடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், சுப்பிரமணியன், சமூக வலைதளங்களில், 'ஆடியோ' வெளியிட்டுள்ளார். அதல், அவர் பேசி இருப்பதாவது:புயலால் துாக்கி வீசப்பட்டு, நாங்கள் பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இளநீர் வீணாகி வருகிறது. இதை அப்புறப்படுத்த, எங்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும்; அதற்கு செலவு செய்ய, எங்களிடம் வழியில்லை. தற்போது, நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் தான் உள்ளோம்.அதுவும், அடுத்தவர்களிடம் வாங்கிய கடனை திரும்பிக் கொடுக்காமல் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில், உயிருடன் உள்ளோம். நாங்கள், பிள்ளைபோல் வளர்த்த தென்னை மரங்கள் அழிவதை பார்க்க முடியவில்லை. தென்னை மரத்தை, 30 நாளுக்குள் அறுத்து, தண்ணீர் படாமல் வைத்திருந்தால், 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். 

வெளிமாவட்டங்களில் இருப்போர், தென்னை மரங்கள் தேவைப்பட்டால், உடனே எங்கள் ஊருக்கு வாருங்கள். எங்களுக்கு நீங்கள் எதுவும் தர வேண்டாம். மரங்களை எடுத்துச் செல்லுங்கள். எங்கும் கொட்டிக் கிடக்கும் இளநீரையும் எடுத்துச் சென்று பருகுங்கள்; மற்றவர்களுக்கும் கொடுங்கள். மரங்களை அப்புறப்படுத்தினால் தான், நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். தேங்காய்களை விற்றாவது, உயிர் வாழ்ந்து விடுவோம்.இளநீர் மற்றும் தென்னை மரம் தேவைப்படுவோர், பட்டுக்கோட்டையில் இருந்து, 13 கி.மீ.,ல் உள்ள, தில்லங்காடுக்கு வாருங்கள். தற்போது, வாகன போக்குவரத்து சீராகி விட்டது. மரங்களை எடுத்துச் செல்ல சிரமமாக இருக்கும் என, கருத வேண்டாம். உடனடியாக எங்கள் பகுதிக்கு வாருங்கள். மரம் தேவைப்படுவோர், என்னுடைய, 97158 71686 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு, தகவல் அனுப்புங்கள்.இவ்வாறு அவர் உருக்கமாக பேசியுள்ளார். - நமது நிருபர் -

சித்தா, 1,235    இடங்கள் நிரம்பின

Added : நவ 25, 2018 01:50

சென்னை, 

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா படிப்புகளுக்கு, 1,235 இடங்கள் நிரம்பின.சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 1,482 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், நவ., 19ல் துவங்கியது. நேற்று நிரம்பிய, 183 இடங்களுடன், இதுவரை, 1,235 இடங்கள் நிரம்பியுள்ளன.இதுகுறித்து, தேர்வு குழு அதிகாரிகள் கூறியதாவது:முதற்கட்ட கவுன்சிலிங்கில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், 247 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இந்த இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், www.tnhealth.org என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'கஜா' புயல் நிவாரணம் நடிகையர் கைவிரிப்பு

Added : நவ 24, 2018 22:13 |

சென்னை, :கஜா புயல் பாதிப்புக்கு, நிவாரண உதவி வழங்கும் விஷயத்தில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த, முன்னணி நடிகையர் ஆர்வம் காட்டாதது, அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பல தரப்பிலிருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் திரையுலகைச் சேர்ந்த, நடிகர்கள் உள்ளிட்ட பலரும், கோடிக்கணக்கில் நிவாரண உதவியை பொருளாகவும், பணமாகவும் வழங்கி வருகின்றனர்.ஆனால், நடிகையரில், ஜோதிகா, கஸ்துாரி மட்டுமே நிவாரண உதவிகளை வழங்கிஉள்ளனர்.ஒரு படத்திற்கு, 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும், நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, சமந்தா போன்ற, முன்னணி நடிகையர் கண்டுகொள்ளவே இல்லை. இது, அவர்களது ரசிகர்களிடமும், பொது மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நெடுஞ்சாலை சுங்க சாவடியில் வி.ஐ.பி.,க்களுக்கு புது வசதி

Added : நவ 25, 2018 07:26




புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, சுங்கச் சாவடிகளில், கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள, வி.ஐ.பி.,க்கள், காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், சிறப்பு ஸ்டிக்கர் தரப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், கட்டணம் செலுத்துவதில், எம்.பி.,க்கள் உட்பட, பலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது. எம்.பி.,க்களுக்கு டெல்லியில் ஒரு வாகனத்துக்கும், சொந்த தொகுதியில், ஒரு வாகனத்துக்கும் என, சிறப்பு பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில், இந்த பாஸை காட்டிவிட்டு அவர்கள் செல்லலாம். இதற்கிடையே, சுங்கச் சாவடிகளில் காத்திருப்பதை குறைக்கும் வகையில், 'பாஸ்டேக்' என்படும், முன்னதாகவே பணம் செலுத்தி, சிறப்பு ஸ்டிக்கரை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர் உள்ள வாகனங்கள், சுங்கச் சாவடிகளில் கடக்கும்போது, அது ஸ்கேன் செய்யப்பட்டு, இருப்பில் உள்ள பணம், கழித்துக் கொள்ளப்படும்.தற்போது, இதுபோன்ற, பாஸ்டேக் சிறப்பு ஸ்டிக்கரை, கட்டண சலுகை பெற்றுள்ள, வி.ஐ.பி.,க்களுக்கும் அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கட்டண சலுகை பெற்றிருந்தாலும், அதற்கான பாஸை, சுங்கச் சாவடிகளில் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.இதனால், வி.ஐ.பி.,க்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு இந்த பாஸ்டேக் சிறப்பு ஸ்டிக்கர் அளிக்கப்படுகிறது. இந்த வகையில், 12 ஆயிரம் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட உள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

NEWS TODAY 2.5.2024