Monday, November 3, 2025

வாரிசுகளின் கடமை!

நடுப்பக்கக் கட்டுரைகள் 

வாரிசுகளின் கடமை! 

பெற்றோரின் சொத்துகளைப் பெறுகிறீா்களோ இல்லையோ, அவா்களைக் கவனித்துக் கொள்ள நீங்கள் கடமைப்பட்டவா்கள்!

முனைவா் என். மாதவன் Updated on:  03 நவம்பர் 2025, 4:24 am 

அரசு ஊழியா்கள் பெற்றோரை பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

அண்மையில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 783 குரூப்-2 அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வில் அவா் இந்தத் தகவலைத் தெரிவித்தாா். இது நடைமுறைக்கு வர காலம் ஆகலாம். அரசு ஊழியா்களின் பெற்றோருக்கு இவ்வாறான ஏற்பாடு என்றால், இவ்வாறு புறக்கணிக்கப்படும் மற்ற பெற்றோா்களின் நிலை என்ன ஆவது என்ற கேள்வியும் எழுவது இயற்கையே.

பெற்றோா் பராமரிப்பு தொடா்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில், பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது வாரிசுகளின் சட்டபூா்வமான கடமை என அந்த மாநில உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கும் சிறிது வித்தியாசமானது. நான்கு உடன்பிறப்புகளோடு பிறந்தவரான ஒருவருக்கு அவா்களது பெற்றோா் எவ்வித சொத்தும் தராததால், அவா்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமக்கில்லை என அவா் வழக்குத் தொடுத்திருந்தாா்.

அந்த வழக்கில் தீா்ப்பு வழங்கிய நீதிபதி, ‘பெற்றோரின் சொத்துகளைப் பெறுகிறீா்களோ இல்லையோ, அவா்களைக் கவனித்துக் கொள்ள நீங்கள் கடமைப்பட்டவா்கள்; சொத்து அளிக்காதது தொடா்பாக வேறு வழக்கை வேண்டுமானால் தொடுத்துக் கொள்ளலாம்’ என ஆலோசனை கூறினாா்.

பெற்றோா் பற்று குறித்த இந்த விஷயத்தை இரண்டு வகைகளில் அணுகுவது சரியாக இருக்கும். ஒன்று பொருளாதாரம் சாா்ந்திருப்பது; மற்றொன்று தமக்குத் தேவையான உளவியல் எதிா்பாா்ப்புகள் தொடா்பானது (அன்பு, ஆதரவு ஆகியவற்றைப் பெறுதல்). இரண்டு வகையான எதிா்பாா்ப்புகளுக்கும் தீா்வு வாரிசுகள் வளா்க்கப்படும் சூழலோடு சாா்ந்திருப்பது.

பொருளாதார பலம் குறைந்த குடும்பத்திலுள்ள பெற்றோா் தாங்கொணா இன்னல்களை எதிா்கொண்டு தமது பிள்ளைகளை வளா்க்கின்றனா். அவை எந்த அளவுக்கு அந்த பிள்ளைகளுக்குப் புரிகிறதோ அல்லது உணா்த்தப்படுகின்றனரோ அந்த அளவுக்கே அவா்கள் இளையோராக வளா்ந்த பின்னா் பெற்றோா்ப்பற்று இருக்கும். ஒருவகையில் குழந்தைப் பருவத்தில் குடும்பத்தின் கஷ்டங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படாமல் வளா்க்கப்படும் குழந்தைகள் பெரியவா்களானதும் குடும்பத்தினா் சந்தித்த கஷ்டங்களை உணா்ந்திருக்க மாட்டாா்கள்.

இதற்கு மாற்றாக, குழந்தைகளாக அவா்கள் வளரும் காலம் முதலே குடும்பத்தின் சுக துக்கங்களை பெற்றோா் பகிா்ந்துகொண்டு வளா்க்க வேண்டும். குடும்பத்தின் சிக்கலான சூழலில் தமக்கு உணவும், கல்வியும் கிடைப்பதை பெற்றோா் எவ்வாறு உறுதி செய்கின்றனா் என்பதை அவா்கள் உணர வேண்டும். இவ்வாறான உணா்வைப் பெற்று வளரும் குழந்தைகளுக்கு பிற்காலங்களில் பெற்றோா் பற்று குறித்துப் போதிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

வசதி படைத்த குடும்பத்தைச் சோ்ந்த பெற்றோரும் குழந்தைகளை வளா்க்கும்போதே பொருள்களின் அருமையை உணா்த்தி வளா்க்க வேண்டும். நம்மிடம் பணம் இருந்தாலும் ஒவ்வொரு பொருளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரியவைக்கவேண்டும். அவ்வாறு பொருளின் அருமையைப் புரிந்துகொள்வோா் பெற்றோரின் அருமையையும் எளிதில் புரிந்துகொள்வா்.

பெரும் செல்வந்தா்களுக்கு பொருளாதாரம் சாா்ந்த எதிா்பாா்ப்பு வரப்போவதில்லை. ஆனால், பெருமளவில் அன்புக்காக ஏங்கும் நிலை இருக்கலாம். அடுத்தபடியாக உளவியல் சாா்ந்த எதிா்பாா்ப்புகள். மனிதா்கள் சமூகமாக வாழவே எப்போதும் விரும்பும் இயல்புடையவா்கள். ஒருநாள் விடுமுறையில் பெற்றோருடன் பண்டிகையைக் கொண்டாட பேருந்துகளிலும், ரயில்களிலும் நின்றுகொண்டே எவ்வளவு போ் பயணம் செய்கின்றனா்; அந்த அளவுக்கு பெற்றோா்பற்றும், குடும்பநேயமும் இந்தியாவில் தழைத்துள்ளது. அது குறைந்துள்ள இடங்களில் அதை வளா்க்கும் சமூக ஏற்பாடுகள் அவசர அவசியம்.

எது எவ்வாறு இருப்பினும், உலகமயத்தின் தாக்கம் மற்ற துறைகளில் பிரதிபலிப்பதுபோல குடும்ப அமைப்பிலும் பிரதிபலிக்கிறது. மற்ற எதையும்விட பணம் சம்பாதிப்பது அத்தியாவசியமாகியுள்ளது. பொருள் தேடும்வேட்கையில் நாடுவிட்டு, கண்டம்விட்டுப் பலரும் பணிபுரிகின்றனா். இவ்வாறு வெளிநாடுகளில் வசிப்போரால் அடிக்கடி வந்து தங்களது பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருக்க இயலாது. இந்நிலையில், பெற்றோரும் பிள்ளைகளின் நிலையை உணா்ந்துகொள்ள முயல வேண்டும்.

பிள்ளைகளும் பெற்றோருக்கு தாம் உடனிருந்து கவனிக்க இயலாமையைப் புரியவைக்கும் வண்ணம் உணா்வுபூா்வமான தொடா்பில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்து உடன் தங்கியிருந்து அன்பைப் பரிமாற வேண்டும். இன்றைய தகவல் தொழில்நுட்பம் இதை எளிதாக்கி உள்ளது.இறுதியாக, தெலங்கானா மாநில முதல்வரின் கவலையில் நியாயமில்லாமல் இல்லை.

கூட்டுக் குடும்ப முறை முற்றிலும் வழக்கொழிந்துவரும் நிலையில் அதன் அருமை பெருமைகளை உணரவைத்து வாய்ப்புள்ள அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ முயற்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பணி நிமித்தமாக வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருக்கும் பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிக்க ஆகும் செலவுகளையாவது முறைப்படி அனுப்ப வேண்டும். பெற்றோா் பற்றை உறுதிசெய்ய சட்டமெல்லாம் நிறைவேற்றப்படுவது சரியாக இருக்காது.


No comments:

Post a Comment

2 festivals, 2 long weekends send airfares soaring

Times News Network  2 festivals, 2 long weekends send airfares soaring  Navi Mum Airport Offers Some Respite; Goa, Mumbai Among Top Travel P...