Saturday, December 12, 2015

பதின் பருவம் புதிர் பருவமா?- 10: தடம் மாறலாம்? தடம் புரளலாமா? - டாக்டர் ஆ.காட்சன்

Return to frontpage

என்னை அவன் அடிச்சிட்டான்மா...' என்று பெற்றோர்களிடம் புகார் பத்திரம் வாசித்த காலம் எல்லாம் மலையேறி, ‘மச்சி, அவன் என்னை அடிச்சிட்டான்டா. பதிலுக்கு நாம அவனுக்குச் செமத்தியா திருப்பிக் குடுக்கணும்டா' என்று நண்பர்களைப் பக்கபலமாகச் சேர்த்துக்கொண்டு அடிதடியில் இறங்கும் காலம் வளர்இளம் பருவம்.

சமீபகாலமாகப் பள்ளிகளில் வன்முறைச் சம்பவங்கள் பெருகிவருவது வளர்இளம் பருவத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய சவால்தான். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி ஏற்படும் கைகலப்புகளில் தொடங்கிக் கொலைச் சம்பவங்கள்வரை அடிக்கடி வன்முறை அரங்கேறி வருகிறது. சில நேரம் ஆசிரியர்களையே தாக்கும் அளவுக்குப் பிரச்சினை உருவாகிறது. மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கும்போதும் விபரீதங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

குற்ற உணர்ச்சியற்ற நிலை

எல்லா வளர்இளம் பருவத்தினரும், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது கிடையாது. அதேநேரம், இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் அவ்வப்போது சில முன்னெச்சரிக்கை அறிகுறிகள் காணப்படும். இவர்களுடைய குடும்பச் சூழல் பெரும்பாலும் திருப்திகரமாக இருக்காது.

சிறிய பிரச்சினைகளுக்குக்கூட வெறித்தனமான செயல்களில் ஈடுபடுவது, ஆயுதங்களைப் பயன்படுத்துவது, மற்றவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பது, பழிவாங்கும் செயல்கள், தன் கையைக் கிழித்துக்கொள்வது அல்லது அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற தன்மைகள் காணப்பட்டால் நிச்சயம் அவர்கள் கவனத்துக்கு உரியவர்கள்.

சின்ன வயதில் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதுதான், தற்போது நடக்கும் பல்வேறு ஆக்ரோஷமான சம்பவங்களுக்கு முக்கியக் காரணம். இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது, தான் செய்யும் தவறான செயல்கள் மற்றவர்களைப் பாதிக்கும் என்ற குற்றவுணர்ச்சி அற்ற மனநிலைதான். இது இளைஞர்களைக் கூலிப்படையினராக மாற்றும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது.

விதிமீறல்கள்

வளர்இளம் பருவத்தினர் அவ்வப்போது சில விதிமீறல்களில் ஈடுபடுவது சகஜம்தான். அது அவர்களுடைய வளர்ச்சியின் ஒரு பாகமாகவே காணப்படும். ‘இளம் கன்று பயம் அறியாது' என்று சொல்வது இதனால்தான்.

எதையும் பரீட்சித்துப் பார்க்கும் எண்ணம், புதிய விஷயங்களில் நாட்டம், விபரீதங்கள் மற்றும் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத தன்மை போன்றவை இவர்களைச் சில நேரம் சேட்டைகளில் ஈடுபடவைக்கிறது.

அதிலும் பலர் தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்தச் சேட்டைகள் அதிகரிக்கும். எதிர்பாலினத்தைக் கவர்வதற்கு இவர்கள் எடுக்கும் சில முயற்சிகள், மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கலாம். அவர்களே சில வருடங்கள் கழித்து யோசித்துப் பார்த்தால், எத்தனை கோமாளித்தனமான செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்று புரியும்.

சமூகவிரோதச் செயல்பாடு

அதேநேரம் சில வளர்இளம் பருவத்தினரிடம், இந்த விதிமீறல்கள் எல்லை மீறிச் செல்லும்போது, அவர்களுடைய குணாதிசய உருவாக்கத்திலும் மாற்றம் காணப்படும். சமூகவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள் எல்லோரும் திடீரென்று ஒரே நாளில் உருவாகிவிடுவதில்லை. அதற்கான ஆரம்ப அறிகுறிகள், வளர்இளம் பருவத்திலேயே காணப்படும்.

பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இவர்கள் சிம்மசொப்பனமாகவே இருப்பார்கள். சின்ன வயதில் இவர்களுக்கு எத்தனை தண்டனைகள் கொடுத்தாலும், தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மாறாகப் பிரச்சினை தீவிரமடையும். இவர்கள் பின்னாட்களில் சமூகவிரோதிகளாக (Antisocial) உருவாக வாய்ப்பு இருக்கிறது.

ஓடிப்போவது

ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, சில வளர்இளம் பருவத்தினருக்கு வீட்டை விட்டு ஓடிப்போவது வாடிக்கையான விஷயமாக மாறிவிடும். அப்பா அடித்தாலோ, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலோ சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயாவது ஓடிப்போவது நடக்கும். இது ‘குணரீதியாக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்' எனப் பெற்றோருக்கு மறைமுகமாகச் சொல்லும் எச்சரிக்கை.

அதற்கு முன்னரே இரவில் அடிக்கடி வெளியில் தங்குவது, நண்பர்களுடன் குறிப்பாக வயதில் மூத்தவர்களுடன் ஊர் சுற்றிவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவது வழக்கமாக இருக்கும். பள்ளிக்குச் செல்லாமல் அடிக்கடி படத்துக்குச் செல்வதும் கவனிக்கத்தக்க மாற்றம்தான்.

கும்பல் சேருதல்

உணவு இடைவேளையின்போது பள்ளிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையிலோ, ஒதுக்குப்புறமான இடங்களிலோ இப்படிப்பட்டவர்கள் கூடுவார்கள். இதுதான் இளம் சமூகவிரோதிகள் உருவாகும் மையம். பல புதிய நட்புகளுடன் போதைப்பொருட்களின் அறிமுகமும் இங்குதான் கிடைக்கும். ஒன்றாகச் சேர்ந்து புகைப்பது முதல் கஞ்சா பயன்படுத்துவதுவரை கற்றுக்கொள்வார்கள். தன்பாலின உறவு ஏற்படவும் வாய்ப்புண்டு.

சில நேரம் இளம்வயதிலேயே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது, பிறரைக் காயப்படுத்திப் பார்ப்பதில் அலாதி இன்பம் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளும் காணப்படலாம். மனசாட்சி மரத்துப்போவது சில நேரம் குரூரச் செயல்களாக வெளிப்படும். அதற்காக இவர்கள் வருத்தப்படுவதும் இல்லை.

பொய் மூட்டை

அதேபோலச் சிலரிடம் அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய் திருடுவதில் ஆரம்பிக்கும் பழக்கம், பூட்டை உடைத்துத் திருடுவதுவரை போகக்கூடும். அவர்களின் புத்தகங்களுக்குள் ரூபாய் நோட்டை வைத்தால் பத்திரமாக இருக்கும் அளவுக்கு, படிப்பில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. பொய் சொல்வதில் போட்டி வைத்தால், இவர்களுக்குத்தான் முதலிடம் கிடைக்கும்.

அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக எத்தனை பெரிய பொய்யையும் சாதாரணமாகச் சொல்லப் பழகிவிடுவார்கள். அதேநேரம் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ள, எந்த நிலைக்கும் இறங்கிவருவார்கள்.

காரணங்கள்

‘தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை' என்ற சொலவடையின்படி பெற்றோருடைய நன்னடத்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் குழந்தைகளைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் போதைப்பழக்கம் (அது சார்ந்த மற்றப் பழக்கங்கள்) உள்ள பெற்றோருக்கும் வளர்இளம் பருவத்தினரின் சமூகவிரோதக் குணமாற்றங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற சமூகவிரோத நடவடிக்கைகளில் சில நேரம் ஈடுபடலாம். போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது, அதனால் ஏற்படும் மனநோய்களும்கூட இதுபோன்ற அறிகுறிகளாக வெளிப்படும்.

கூடுதல் காரணங்கள்

குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் கார்ட்டூன் படங்கள் மற்றும் வீடியோ கேம்களில் ஈடுபடுவது பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் வரும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் அதிகத் துறுதுறுப்பை ஏற்படுத்துவதுடன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனையும் பாதிக்கும். மனிதர்களை உயிராகப் பாவிக்காமல், பொருட்களாகப் பாவிக்கும் மனநிலை ஏற்படும்.

மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையை இது பாதிக்கும். வளர்இளம் பருவத்தில் பல உறவுரீதியான சிக்கல்களையும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளையும் இது ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்டவை எல்லாம், இந்தக் குணநல மாற்றம் கொண்டவர்களைக் கொடூரர்களாக சித்தரிப்பதற்கு அல்ல. வளர்இளம் பருவத்தில்தான் இந்த மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சாதகமற்ற குடும்பச் சூழல், சமுதாயச் சூழல் மற்றும் அவர்களுடைய மனரீதியான பிரச்சினைகளை ஆரம்பக் கட்டத்திலேயே சரிசெய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

(அடுத்த முறை: காளையை அடக்க என்ன செய்யலாம்?)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

பார்வையைப் பறிக்கலாம், ஒரு சொட்டு! ................... மு. வீராசாமி கட்டுரையாளர், தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்



மருந்துக் கடையில் மருந்து வாங்கிக்கொண்டிருந்தபோது, தன் குழந்தைக்கு இரண்டு நாட்களாகக் கண்ணில் சிவப்பாக இருப்பதாகவும், அதற்குச் சொட்டுமருந்து கொடுக்குமாறும் பக்கத்தில் ஒருவர் கடைக்காரரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

கடைக்காரர் கொடுத்தது ‘ஸ்டீராய்டு’ வகை சொட்டுமருந்து. மருந்தை வாங்கிக்கொண்டிருந்தவர் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையின் அதிகாரி என்று அவருடைய கழுத்தில் தொங்கிய அடையாள அட்டை சொன்னது.

அவரிடம் , "கண் சிவப்பாவதற்கு இதுபோன்ற ‘ஸ்டீராய்டு’ சொட்டு மருந்தைப் போடக்கூடாது, மருத்துவரிடம் காண்பித்து என்ன காரணம் என்று அறிந்து முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றேன். அவ்வளவுதான். ‘ஏன் சார்? மருந்து வாங்குனமா, போனோமான்னு இல்லாம, உங்களுக்கு ஏன் சார் இந்தத் தேவையில்லாத வேலையெல்லாம்’ என்று கோபமாகிவிட்டார். ஆனால், இப்படிச் செய்வதன் ஆபத்து அவருக்குத் தெரியவில்லை.

அலட்சியம் வேண்டாம்!

ஒருவருடைய கண் எப்போது வேண்டுமானாலும் சிவப்பாக மாறலாம். கண் எதற்காகச் சிவந்தாலும் மெட்ராஸ் ‘ஐ’ என்று பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். அது பெருந்தவறு. பல ஆபத்தான கண் நோய்களின் வெளிப்பாடாகவும் அது இருக்கலாம்.

அதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் மேலே சொன்ன சம்பவத்தில் வாங்கப்பட்ட ஸ்டீராய்டு சொட்டுமருந்துபோல ஏதாவது ஒரு மருந்தை, பிரச்சினை எதனால் என்று அறியாமலேயே பயன்படுத்துவது மிகமிக ஆபத்தானது. ஒருவேளை அது மெட்ராஸ் ‘ஐ’யாக இருக்கும்பட்சத்தில் ஸ்டீராய்டு சொட்டுமருந்தால் பார்வையே பாதிக்கப்படலாம்.

பின்னால் ஏற்படப்போகும் இது போன்ற விபரீதங்களை அறியாமலேயே, கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்குப் பலரும் இதுபோல் கண்ட கண்ட சொட்டுமருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ‘சரியாகாவிட்டால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனப்போக்குதான் இதற்குக் காரணம். சாதாரணச் சொட்டுமருந்து என்னவெல்லாம் பாடாய்ப்படுத்தும் என்பதைச் சில சம்பவங்களை நமக்குத் தெளிவாக உணர்த்தும்.

ஆசிரியரின் பார்வையிழப்பு

பள்ளியில் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்தபோது, அந்த ஆசிரியருக்குக் கண்ணில் திடீரென ஓர் உறுத்தல். சாக்பீஸ் துகள் விழுந்ததால் ஏற்பட்ட உறுத்தல் அது. தூசி விழுந்ததும் எல்லோரும் செய்வதைப்போல, உறுத்தல் காரணமாக அந்த ஆசிரியரும் கண்களை நன்றாகத் தேய்த்துவிட்டார்.

மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் கண் நன்றாகச் சிவந்து, நீர்வடிதலுடன் வலியும் அதிகமானது. அவசரத்துக்கு வீட்டில் இருந்த, அவருடைய பாட்டிக்குக் கண்புரை அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்திய, மீதம் இருந்த சொட்டுமருந்தை எடுத்துக் கண்ணில் விட்டார்

. அது ஸ்டீராய்டு வகை சொட்டுமருந்து. கண்ணை நன்றாகத் தேய்த்தது ஒருபுறம்; ஸ்டீராய்டு சொட்டுமருந்தை விட்டது இன்னொருபுறம். அது காலாவதியான, கெட்டுப்போன சொட்டுமருந்து. எல்லாம் சேர்ந்து கண்ணின் விழிப்படலத்தை (Cornea) மோசமாகப் பாதித்துவிட்டன.

எவ்வளவோ முயன்றும் கண்ணில் ஏற்பட்ட புண்ணை மட்டுமே குணப்படுத்த முடிந்தது. விழிப்படலம் கெட்டுப்போனதால் பார்வை கிடைக்கவில்லை. விழிப்படலப் புண்ணுக்கு ஸ்டீராய்டு சொட்டுமருந்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன் இதுதான்.

பார்வை மங்கலா?

ஒரு தொழிலதிபருக்குக் கண்ணில் ஒரு மாதமாகவே பார்வை மங்கலாக இருப்பதுபோலிருந்தது. கண்ணைக் கசக்கிப் பார்த்தார். தேய்த்துவிட்டுப் பார்த்தார். தெளிவின்மை சரியாகாததால் வழக்கம்போல் மருந்துக்கடையில் சொட்டுமருந்தை வாங்கி விட்டுப் பார்த்தார்.

அவருடைய ‘காண்ட்ராக்ட்’ வேலையில் மும்முரமாக இருந்ததால், ஒரு பாட்டிலுக்கு இரண்டு பாட்டிலாகப் போட்டுப் பார்த்தார். இத்தனைக்கும் அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரா என்றால், அதுவுமில்லை.

ஒருநாள் பார்வை பிரச்சினை அதிகமாகவே, வேறு வழியில்லாமல் கண் மருத்துவரிடம் சென்றார். கண் மருத்துவர் பார்த்துவிட்டு விழித்திரையில் ரத்தம் கசிந்து ‘நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு’ ஏற்பட்டுள்ளதாகவும், 50 சதவீதப் பார்வை ஏற்கெனவே இழக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லிவிட்டார்.

சுயவைத்தியம் வேண்டாம்

மருந்து கடையில் நாமாகவே வாங்கிப் பயன்படுத்தும் சொட்டு மருந்தால் ஏற்படும் இன்னொரு பிரச்சினையையும் பார்ப்போம். மனைவிக்குக் கண்ணில் ஏற்பட்ட லேசான உறுத்தலுக்கு, சொட்டுமருந்தைப் போடலாம் என்று நினைத்த ஒரு கணவர், மருந்துக் கடைக்கு விரைந்தார்.

இரவு நேரமாகிவிட்டதால் கடையை அடைத்துக்கொண்டிருந்தார்கள். வந்தவர் தன் மனைவியின் பிரச்சினையைச் சொல்லி, சின்ன பிதுக்கு மருந்து கொடுக்கும்படி கேட்டார். அவர் கேட்டது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சின்ன ‘அப்ளிகேப்ஸ்’ களிம்பு. கடைப்பையன்கள் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், முதலாளி மட்டுமே இருந்தார்.

அவரும் வீட்டுக்குப் போக வேண்டிய அவசரத்தில் சின்ன அப்ளிகேப்ஸை வேகவேகமாக எடுத்துக்கொடுத்தார். கண்ணுக்குப் போடக்கூடிய சின்ன அப்ளிகேப்ஸும், ஆவி பிடிக்கப் பயன்படுத்தும் சின்ன அப்ளிகேப்ஸ் மருந்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அவசரத்தில் ஆவி பிடிக்கப் பயன்படுத்தும் அப்ளிகேப்ஸை அந்த முதலாளி எடுத்துக் கொடுத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்து கண்ணில் மருந்தைப் போட்டதும் மனைவியின் கதறலைக் கேட்டுத் துடிதுடித்துப் போய்விட்டார் கணவர். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தண்ணீரைக்கொண்டு கண்ணைக் கழுவிப் பார்த்தார், ஒன்றும் சரியாகவில்லை. மறுநாள் மருத்துவர் பார்த்துவிட்டு விழிப்படலம் (Cornea) கடுமையாகச் சேதமடைந்துவிட்டதாகவும், பார்வை முழுவதுமாகக் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லிவிட்டார்.

செல்போனில் ஏதாவது ஒரு சின்னப் பிரச்சினை என்றாலும் கடைகடையாகத் தூக்கிக்கொண்டு ஓடுகிறோம். ஆனால், வாழ்நாள் முழுவதற்கும் அவசியமான கண்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தரும் முக்கியத்துவம், இப்படித்தான் இருக்கிறது.

முறையான சிகிச்சை

கண் சொட்டு மருந்தில் பல வகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எந்த வகை சொட்டு மருந்தைப் பயன்படுத்துவது என்பதைக் கண் மருத்துவர்தான் சரியாகக் கூற முடியும்.

தொடக்கத்திலேயே மருத்துவரிடம் சென்று முறையாக மருத்துவம் செய்துகொள்வதன் மூலம், கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளை முழுவதுமாகக் குணப்படுத்திவிட முடியும். சுயவைத்தியம் செய்து தாமதமான நிலையில் மருத்துவரிடம் செல்லும்போது, ஒருவேளை பார்வையே இழக்கப்பட்டிருக்கலாம்.

அதேபோல மருத்துவச் சிகிச்சையின் கீழ் கண்ணில் பிரச்சினை சரியானதுமே, மீதமுள்ள சொட்டுமருந்தை - ‘காசு கொடுத்து வாங்கியது’ என்று நினைத்துப் பத்திரப்படுத்தாமல், தூக்கி எறிந்துவிடுவதே நல்லது. இதன்மூலம் வீட்டில் வேறு யாருக்காவது கண்ணில் பிரச்சினை ஏற்படும்போது, தவறுதலாக அதை எடுத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.

‘பார்வை பாதுகாப்பு’ என்பது வாழ்க்கையின் மகிழ்ச்சியோடு தொடர்புடையது என்பதை மனதில் கொள்வோம்.

- கட்டுரையாளர், தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

கணக்கெடுக்கும் பணி தீவிரம்: ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை- வங்கிக் கணக்கு தொடங்கவும் ஏற்பாடு; பயனாளிகள் மகிழ்ச்சி .... ப.முரளிதரன்

வெள்ள நிவாரண உதவி வழங்கு வதற்கான கணக்கெடுப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. நிவாரணத் தொகையை ஒரு வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் கூறுகின்றனர். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வீட் டுக்கே வந்து கணக்கு தொடங்க படிவம் வழங்கப்படுவதால் பய னாளிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
தமிழகத்தில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு ரூ.5 ஆயிரமும், குடிசை களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரண உதவி யாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இத்தொகை நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
இதுதவிர, ரேஷன் கடைகள் மூலம் 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.
பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்குவதற்காக, பாதிக்கப்பட்ட இடங்களில் கணக் கெடுப்பு பணியில் வருவாய் துறை யினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சென்னை புழல் பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட் டுள்ள வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வீடு வீடாக கணக்கெடுப்பு
வெள்ளத்தால் வீடு சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், உடைமைகள் சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இரண்டும் சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்த நிவாரண உதவி சரியான பயனாளிகளுக்குச் சென்று சேரவேண்டும் என்பதற்காக வருவாய் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெயர், வீட்டு முகவரி, அடையாளச் சான்று போன்ற குறிப்பிட்ட தகவல்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன.
வங்கிக்கணக்கு இருந்தால்..
வங்கிக் கணக்கு வைத்திருந்து, அதற்கான ஆவணங்களை இழந் தவர்கள் தங்கள் பெயர், வங்கி கிளை ஆகிய விவரங்களை கூறினால் போதும். அதன் அடிப் படையில், குறிப்பிட்ட வங்கிக்குச் சென்று அவர்களது மற்ற விவரங்கள் பெறப்பட்டு, வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை போடப்படும்.
கணக்கு இல்லாவிட்டால்..
இதுவரை வங்கிக் கணக்கு தொடங்காமல் இருப்பவர்கள், புதிதாக கணக்கு தொடங்க நாங் களே படிவம் வழங்குகிறோம். இதை பூர்த்தி செய்து முன்னோடி வங்கியில் சமர்ப்பித்து, வங்கிக் கணக்கு தொடங்கலாம். கணக் கெடுப்பு முடிந்த ஒரு வாரத்துக்குள் இந்த நிவாரண உதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து முன்னோடி வங்கி அதிகாரிகள் கூறிய போது, ‘‘வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் நிவாரண உதவி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அருகே வசிக்கும் மக்களுக்கு வங்கிகளில் கணக்கு தொடங்குவது சம்பந்த மாக வங்கிகளுக்கும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. மழை வெள்ளத் தில் வங்கி பாஸ்புக் தொலைந்து விட்டாலும்கூட, அவர்களது வங்கிக் கணக்கில் பணம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
பயனாளிகள் மகிழ்ச்சி
இதுபற்றி புழல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலித் தொழிலாளி கூறும்போது, ‘‘வெள் ளத்தில் என் குடிசை வீடு முழு வதுமாக சேதம் அடைந்துவிட்டது. எனக்கு எந்த வங்கியிலும் இதுவரை கணக்கு இல்லை. என் வீட்டுக்கு கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கித் தருவதாக கூறியுள்ளனர். மக்கள் சிரமப்படாமல், இருக்கும் இடத் துக்கே வந்து வங்கிக் கணக்கும் தொடங்கித்தந்து, அதில் நிவாரண பணத்தைப் போட நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது’’ என்றார்.

செம்பரம்பாக்கம் ஏரியும் சென்னை வெள்ளமும்! ................வி.தேவதாசன்

செம்பரம்பாக்கம் ஏரியும் சென்னை வெள்ளமும்!

வி.தேவதாசன்
COMMENT (3)   ·   PRINT   ·   T+  
சென்னையில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக முழு கொள்ளலவை எட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி. | படம்.ம.பிரபு.
சென்னையில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக முழு கொள்ளலவை எட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி. | படம்.ம.பிரபு.

அடுத்தடுத்து விமர்சனங்கள்.. அடுக்கடுக்காய் கேள்விகள்..

*
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எப்போது அதிக அளவில் உபரி நீரை வெளியேற்றுவது என்பதில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இதுவே சென்னையின் வெள்ளப் பாதிப்புகளை அதிகமாக்கி விட்டது என்றும் பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.
குறிப்பாக டிசம்பர் 1-ம் தேதி இரவு வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அன்று காலை நிலவரப்படி வெறும் 900 கன அடி மட்டுமே வெளியேற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி பிரதானமாக எழுப்பப்படுகிறது.
நவம்பர் 30, டிசம்பர் 1-ம் தேதி வாக்கில் கனமழை பெய்யக் கூடும் என உள்நாட்டு வானிலை ஆய்வு மையங் களும், சர்வதேச வானிலை நிறுவனங் களும் எச்சரிக்கை செய்தன. எனினும் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத காரணத்தால் செம்பரம்பாக்கம் அணையின் நீர் அளவை கையாள்வதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அணை நீர்மட்ட நிலவரம்
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. சென்னை குடிநீர் வடிகால் வாரிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி ஏரியின் நீர் இருப்பு வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் அடுத்த பத்து நாட்களிலேயே மூன்று மடங்கு அதிகரித்து, நவம்பர் 10-ம் தேதி 791 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்தது.
அதன் பிறகு பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது. குறிப்பாக நவம்பர் 16-ம் தேதி வினாடிக்கு 9 ஆயிரத்து 717 கனஅடி, மறுநாள் 17-ம் தேதி 12 ஆயிரத்து 31 கன அடி என்ற அளவுக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. நவம்பர் 1-ம் தேதி 228 மில்லியன் கன அடி மட்டுமே இருந்த நீர் இருப்பு 17-ம் தேதி 3 ஆயிரத்து 197 மில்லியன் கன அடி என்ற அளவுக்குத் தண்ணீர் பெருகியது.
இதன் காரணமாக முதல் நாள் வரை வினாடிக்கு வெறும் 64 கன அடி வரை மட்டுமே வெளியேற்றப்பட்ட உபரி நீர் 17-ம் தேதி திடீரென 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அதன் பிறகு அணையின் நீர் இருப்பை 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் இருக்குமாறு பொதுப் பணித் துறையினர் பராமரித்து வந்தனர். நவம்பர் 25-ம் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 629 கனஅடி நீர்வரத்து இருந்த போது 5 ஆயிரம் கன அடியும், நவம்பர் 28-ம் தேதி 610 கன அடி நீர் வந்தபோது, 500 கன அடியும் வெளியேற்றினர். அதாவது ஏரிக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப வெளியேற்றும் நீரின் அளவையும் பராமரித்தனர்.
இதற்கிடையே நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மிகக் கனத்த மழை பெய்யக் கூடும் என்ற வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள் வந்து கொண்டே இருந்தன. இந்த நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய ஏரிகள் முழுவதும் நிரம்பி இருந்தன. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைப் போலவே மழை பொழிந்தால் அந்த ஏரிகளில் இருந்து வினாடிக்குப் பல்லாயிரக்கணக்கான கனஅடி வீதத்தில் உபரி நீர் வெளியேறும் என்பதும், அவை யாவும் சென்னைக்குள்தான் புகும் என்பதும் எதார்த்தம். ஆகவே, அதே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் பெரிய அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டால் பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்பதும் நிச்சயம்.
ஆனால் இந்த ஆபத்தைச் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் கணிக்கத் தவறிவிட்டனர் என்பதே இப்போது பிரதான விமர்சனமாகக் கூறப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய இணையதளத் தகவல்களின்படி, நவம்பர் 29-ம் தேதி வினாடிக்கு 570 கன அடி, நவம்பர் 30-ம் தேதி வினாடிக்கு 600 கன அடி என்ற அளவிலேயே நீர் வெளியேற்றம் இருந்துள்ளது.
பெரும் மழை பெய்த டிசம்பர் 1-ம் தேதி கூட முதலில் வினாடிக்கு 900 கன அடி என்ற அளவில் மட்டுமே நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏரிக்கான நீர் வரத்து அதிகரிக்கவே, அதன் பிறகு வெளியேற்றும் நீரின் அளவையும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி அதிகபட்சமாக 29 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
நவம்பர் 30-ம் தேதியே மழை தொடங்கிவிட்ட போதிலும் செம்பரம் பாக்கம் அணையிலிருந்து அதிக அளவு உபரி நீரை வெளியேற்றாததன் காரணம் என்ன என்பதுதான் இப்போது விவாதத்துக்குரிய கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்துப் பொதுப் பணித் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
ஓர் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு நீரை வெளியேற்ற வேண்டும் அல்லது எவ்வளவு வரை நீரை தேக்கி வைத்திருக்கலாம் என்பதைத் துறைத் தலைவர்களாக இருக்கக் கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளால் கணிக்க இயலாது. பல ஆண்டு காலம் தொடர்ந்து அந்தந்தப் பகுதியிலேயே பணியாற்றி வரும் பொதுப்பணித் துறையின் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களால்தான் அதனைத் தீர்மானிக்க முடியும். அந்தந்தப் பகுதியில் பெய்யும் மழையின் அளவு, அணைக்கு வரும் நீர்வரத்து, அன்றைய நீர்மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த அளவுக்கு நீரை அணையில் வைத்திருக்கலாம் மற்றும் எவ்வளவு உபரி நீரை வெளியேற்றலாம் என்பதை அவர்களால் தெளிவாகக் கணிக்க முடியும். இவ்வாறு அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்தும் நடைமுறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கிறது.
வெள்ள நீர் சூழ்ந்த மணப்பாக்கம் குடியிருப்பு பகுதி. | படம்: க.ஸ்ரீபரத்
ஆனால் அண்மைக் காலங்களில் இந்தப்போக்கு மாறியுள்ளது. சிறிய அணைகளில் கூட எவ்வளவு நீர் வெளியேற்ற வேண்டும் என்பதை உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பெற்றுச் செயல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மக்களுக்கு அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செம்பரம்பாக்கம் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு உபரி நீரைத் திறக்க வேண்டும் என்பது அணையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் பொறியாளர்களுக்கும், அங்குள்ள களப்பணியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்க நேர்ந்ததாலேயே முன்னதாகவே அதிக அளவில் உபரி நீரைத் திறக்காமல், திடீரெனப் பெருமளவு உபரி நீர் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படுவது உண்மையாக இருப்பின், சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு இவைதான் முக்கிய காரணம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
குடிநீருக்காக தேக்கப்பட்டதா?
சென்னையில் கடந்த ஜூன், ஜூலை தொடங்கி, நவம்பர் முதல் வாரம் வரை கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. டிசம்பர் 1-ம் தேதி 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கும் மேல் இருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் நவம்பர் 1-ம் தேதி வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருந்தது. இதிலிருந்தே நவம்பர் முதல் வாரம் வரை எந்த அளவுக்குக் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சென்னைக்குக் குடிநீர் விநியோகம் செய்யச் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஒருகட்டத்தில் மழை வேண்டிப் பல கோயில்களில் வருணப் பகவானுக்குப் பூஜைகள் கூடச் செய்தனர்.
இந்தச் சூழலில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட குடிநீர் தரும் ஏரிகளில் இருந்து அதிக அளவுக்கு உபரி நீரை வெளியேற்ற வேண்டாம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஒருவேளை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலக் கனமழை பெய்யாமல் போய்விட்டால், குடிநீருக் காகத் தேக்கி வைத்திருக்கும் பெருமளவு தண்ணீரை வீணாக்கி விடக் கூடாதே என்ற அச்சத்துடன் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அடுத்த நான்கைந்து மாதங்களில் வரப்போகும் சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது எனக் கருதி, அதிக அளவு உபரி நீரைத் தக்க சமயத்தில் வெளியேற்ற அதிகாரிகள் தயங்கினார்களா என்ற கேள்வியும் உள்ளது.
ஆக, காரணங்கள் எதுவாயினும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நேரத்தில் 29 ஆயிரம் கன அடி அளவுக்கு உபரி நீர் திறக்கப்பட்டது சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகி விட்டது.
நவம்பர் 17-ம் தேதி செம்பரம்பாக்கத் திலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டபோது அடையாற்றில் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் டிசம்பர் 1-ம் தேதி இரவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற ஏரிகளில் இருந்து அடையாற்றுக்கு சுமார் 40 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வந்து கொண்டிருந்த நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட 29 ஆயிரம் கன அடி உபரி நீரும் அதனுடன் சேர்ந்து கொண்டதால் பாதிப்புகள் அதிகமாயின.
ஆகவே, இனியாவது துல்லியமான நீர் மேலாண்மை என்பதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதுவே எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளைக் குறைக்க உதவியாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Thursday, December 10, 2015

சுட்டி விகடன் - 15 Dec, 2015

"நான் சொன்னதும் மழை வந்துச்சா!"
தமிழ்நாட்டின்
ழைக்கு முன் மண் வாசனை வருதோ இல்லையோ... வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தொலைக்காட்சியில் வந்துவிடுவார். மழையால் விடுமுறையைக் கொண்டாடும் எங்களுக்கு, ரமணன் அங்கிள்தான்  சூப்பர் ஸ்டார். வட கிழக்குப் பருவ மழை கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த ஒரு நாள். சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வானிலை ஆய்வு மையத்துக்குப் படையெடுத்தோம். ‘வானிலையை எப்படி ஆராய்கிறார்கள்?’ என்பதை விஷூவலாகவே விளக்கிக் காட்டினார்கள் ஆய்வுமைய ஊழியர்கள். வானிலை ஆராய்ச்சிகளுக்குக் கணக்கிடப்படும் கருவிகளைக் காட்டியதோடு, செயல்முறை விளக்கமும் அளித்தார்கள். பிறகு, ரமணன் அங்கிளோடு நடந்த சந்திப்பில் நாங்கள் கேட்ட அடை மழைக் கேள்விகள்...
‘‘ஃபேஸ்புக்ல, வாட்ஸ்அப்ல உங்களைக் கிண்டல் பண்ணி போட்டோ போடுறது தெரியுமா அங்கிள்?’’
‘‘அது உங்க வரைக்கும் தெரிஞ்சுபோச்சா? ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எதையுமே நான் பயன்படுத்துறது இல்லை. என்கூட வேலை பார்க்கிறவங்க சொல்வாங்க. நானும் ஜாலியா சிரிச்சுட்டு மறந்துடுவேன்.’’ 
‘‘வானிலை அறிக்கை என்றால் என்ன?’’
‘‘மழை பெய்யுறப்போ வெளியே எட்டிப்பார்த்து, ‘பெருசா மழை பெய்யுது’னு சொல்லலாம். அதையே ஆறேழு நாட்களுக்கு முன்னாடி சொல்வீங்களா? அப்படி மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களைக் கணிச்சுச் சொல்றதுதான் வானிலை அறிக்கை. செயற்கைக்கோள்கள், கருவிகள், கணக்குகள் அடிப்படையில் மழையைக் கணிச்சு சொல்லுவோம்.’’
‘‘சில சமயம் ‘கனமழை பெய்யும்’னு சொல்றீங்களே... மழைக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்?”
‘‘7செ.மீ அளவைவிட அதிகமா பெய்யுற மழையை கனமழைனு சொல்வோம். 13 செ.மீ அளவைவிட அதிகமா பெய்தால், அது மித கனமழை. 25 செ.மீ அளவைவிட அதிகமா பெய்தால், அது அதி கனமழை.’’
‘’இத்தனை செ.மீ மழை பெய்ததுனு  எப்படிக் கணக்கிடுறீங்க?”
‘‘நான் சொல்றதைக் கற்பனை பண்ணிப் பார்த்துக்கோங்க. ஒரு சதுர கிலோமீட்டர் அளவுள்ள இடத்தில், ஒரு கோடி லிட்டர் தண்ணீர் கொட்டினா, தேங்கி இருக்கும் அந்தத் தண்ணீர்ல ஸ்கேலை வெச்சு அளந்துபார்த்தா, ஒரு செ.மீ அளவுக்கு இருக்கும். இதுவே, ஒரு செ.மீ கனமழை.’’
‘‘புயல் என்றால் என்ன?”
தண்ணி பள்ளத்தை நோக்கி ஓடுறமாதிரி, காற்று மேல்நோக்கி எழும்பும். ஈரமான காற்று மெள்ள மேலே எழும்பும். வெப்பமான காற்றாக இருந்தா, சீக்கிரமா மேலே போயிடும். இந்தக் காற்றின் நகர்வை, ‘சலனம்’னு சொல்வாங்க. மெள்ளப் போகிற ஈரக்காற்று ரொம்ப தூரத்துக்குப் போகாம, வானத்துலேயே தங்கும்போது, காற்றில் ஏற்படும் எதிர் சுழற்சிக்குப் (Anti clockvice) பெயர்தான் காற்றழுத்தத் தாழ்வு நிலை. இந்த நிலையில் காற்று சாதாரணமா 31 கி.மீ வேகத்தில் வீசும். அப்படி வீசாம, 61 கி.மீ வேகத்துக்கும் அதிகமா வீசினா அதுக்குப் பெயர்தான் புயல். கடும் புயல், மிகக் கடும்புயல்னு பல வகை இருக்கு.’’
‘‘புயல் உருவாவதை எப்படிக் கண்டுபிடிப்பீங்க?”
‘‘ ‘ஜெனிசிஸ் பொட்டென்ஷியல் பாராமீட்டர்’ங்கிற கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவோம். தமிழ்ல, ‘சாத்திய அலகு’னு சொல்லலாம். புயல் உருவாவதை முன்கூட்டியே கணிக்கும் கால்குலேஷன் இது. கடலின் வெப்பநிலை எப்படி இருக்கு? காற்று எந்தத் திசையில் வீசிக்கிட்டு இருக்கு? எந்தத் திசையில் வீசும் எனப் பல விஷயங்களைக் கணக்கிட்டு, ஏழெட்டு நாட்களுக்கு முன்னாடியே நமக்குக் காட்டும். அதைப் பார்த்துச் சொல்வோம்.’’
‘‘சில சமயம் மழை வரும்னு சொல்றீங்க. வெயில் அடிக்குது. வெயில் அடிக்கும்னு சொன்னா மழை பெய்யுதே அது ஏன்?”
‘‘நாம உட்கார்ந்துக்கிட்டு இருக்கிற இடத்துல இருந்து 36,000 கிலோ மீட்டருக்கு மேலே சுத்திக்கிட்டு இருக்கிற செயற்கைக்கோள்கள் அனுப்பும் சிக்னல்களின் அடிப்படையில் தகவல்களைத் திரட்டுவோம். அந்தத் தகவல்களின் அடிப்படையில், சில கணக்கு ஃபார்முலாவை அப்ளை பண்ணிப்பார்த்தோம்னா, ‘இந்தத் திசையில் புயல் வீசலாம். இந்த இடத்தில் கரையைக் கடக்கலாம்’னு முடிவு கிடைக்கும். ஆனா, கிடைக்கும் எல்லா முடிவுகளும் ஒரே மாதிரி இருக்காது. அதனால் சில கணிப்புகள் மாறும். பிறகு, கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கக்கூடிய முடிவுகளை மீண்டும் ஆராய்ச்சி பண்ணும்போது சரியான முடிவுகள் கிடைக்கும்.’’
‘‘கருமேகங்கள் என்றால் என்ன?”
‘‘மேகத்துல தண்ணீர் அதிகமா இருந்துச்சுனா, கறுப்பா தெரியும். அவ்வளவுதான். ‘நீருண்ட மேகங்கள்’னு அழகுத் தமிழ்ல சொல்லிக்கலாம்.’’
‘‘ஜோதிடத்தில் மழையை முன்கூட்டியே சொல்லியிருக்காங்கனு சொல்றாங்களே...’’
‘‘ஜோதிடத்தில் சொல்றதை உறுதிப்படுத்த முடியாது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல வர்ற செய்திகளை ஆராயாமல் நம்பக் கூடாது.’’
‘‘ எவ்வளவு செ.மீ அளவுக்கு மழை பெய்தால், பள்ளிகளுக்கு  விடுமுறை விடுவாங்க?’’
‘‘நானும் சின்ன வயசுல மழையினால் லீவு விட்டா ஜாலியா இருப்பேன். பள்ளிக்கு விடுமுறை விடுறது அரசாங்கம் எடுக்கிற முடிவு. ‘நாளைக்கு மழை வருமா?’னு மட்டும்தான் என்கிட்ட கேட்கணும். கொஞ்சம் விட்டா, நான்தான் மழையையே வரவைக்கிறதா சொல்லிடுவீங்களே’’ என ரமணன் அங்கிள் பதறி எழ, அரங்கம் முழுக்க இடிச் சிரிப்பு.

ஆனந்த விகடன் - 16 Dec, 2015

vikatan.com
வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
ப.திருமாவேலன்
‘‘மூன்று மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிட்டால் என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்குவதையும் அதனால் சேதங்கள் விளைவதையும் தவிர்க்க இயலாது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பேசியதைப் படித்தால், ‘நியாயம்தானே’ என்று தோன்றும்!
‘போர் என்ற ஒன்று நடந்தால் மக்கள் இறக்கத்தானே செய்வார்கள்?’ என்று சொன்னவர்தானே இந்த ஜெயலலிதா என்பதை நினைவுபடுத்தி யோசித்தால்தான், ‘எங்களால் என்ன செய்ய முடியும்?’ என்ற சமாளிப்பும், ‘இதெல்லாம் தலைவிதி’ என்ற சால்ஜாப்பும் புலப்படும். ‘எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தைக் குற்றம் சொல்லலாமா?’ என்றால், ‘ஆக்கவும் அழிக்கவும் வல்லது அரசு’ என்பதால் அதுதானே பொறுப்பேற்க வேண்டும்? `நான் உத்தரவிட்டேன், எனது தலைமையிலான அரசு, எனது அரசு' என்று எல்லாவற்றுக்கும் தானே என்று சொல்லிக்கொள்கிற ஜெயலலிதா, கடந்த ஒரு மாத காலத்தில் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்ட விதம், ‘எதிர்கொள்ள வேண்டும்’ என்று நினைத்தாரா இல்லையா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
ஏரிகளைக் காப்பாற்றவில்லை, ஏரிகளைத் தூர்வாரவில்லை, நீர்நிலைகள் வீடுகளாக மாற்றப் பட்டுவிட்டன, சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வசதி செய்யப்படவில்லை, மழைநீரை சேகரிக்கவில்லை, பேரிடர் மேலாண்மையில் கவனம் செலுத்தவில்லை, உலக அழிவுகளில் இருந்து பாடம் கற்கவில்லை, தமிழ்நாட்டில் எவை எல்லாம் பேரிடர் பகுதிகள் என இனம் காணவில்லை, கடல் அறிவியல் அறியவில்லை, புவி அறிவியல் புரியவில்லை, வளி மண்டல அறிவியல் தெரியவில்லை.... என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டு ஜெயலலிதாவைக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. தனிப்பட்ட ஜெயலலிதாவால் இதில் எதையும் செய்ய முடியாது. ஐந்து ஆண்டு காலத்தில் மட்டும் எதையும் செய்திருக்கவும் முடியாது. ஆனால், ‘உங்களுக்காக நான், உங்களால் நான்’ என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, இந்த ஒரு மாத காலத்தில் தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் நூறாண்டுகளில் பார்க்காத துன்ப துயரத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள்.
பூகம்பத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்துப்போனபோது ஒரு விஞ்ஞானியிடம் போய் அதற்கான காரணத்தைக் கேட்டார்கள்.அவர் சொன்னார், ‘‘பூகம்பத்தால் இத்தனை ஆயிரம் பேர் சாகவில்லை. கட்டடங்களால் செத்துப் போனார்கள்” என்று!
அதேமாதிரி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களும் வரலாறு காணாத வதை முகாமாக மாறியதற்குக் காரணம் மழை மட்டும் அல்ல, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அரசும்தான்!
ரமணன் சொன்னால் போதுமா?
மழை எப்போது வரும், எப்போது நிற்கும்,  இது கனமழையா, அதிக கனமழையா, இது புயலா, வடகிழக்கு பருவமழையா? - இது எதுவுமே மக்களுக்குத் தெரியாது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் மழை வரும், வானம் வெளுத்துவிட்டால் மழை வராது - இது மட்டும்தான் மக்களுக்குப் புரிந்த அறிவியல். இவ்வளவு மழை பெய்யும், இதனால் பாதிப்பு இவ்வளவு இருக்கும் என மக்களுக்குத் தெரியாததால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சொல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், இந்த ஒரு மாதத்தில் ஒரே ஓர் அறிக்கையாவது அரசாங்கத்திடம் இருந்து வந்ததா?
‘அதுதான் ரமணன் சொல்லிவிட்டாரே...’ எனச் சொல்லலாம். ரமணனின் வேலை மழை வருமா, அது கனமழையா என அறிவிப்பது மட்டும் தான். அதன் மூலம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குத் தயாராக வேண்டும் எனச் சொல்வது ரமணனின் வேலை அல்ல. பருவ நிலை மாற்றத்தை அறிவிக்கிற ரமணன், மக்களைப் பயமுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது அவரது பணி நெறிமுறைகளில் ஒன்று. எனவே, அவர் `புயல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார். `காற்றழுத்தத் தாழ்வு நிலை’ என்று சொல்வார். ஆனால், அது மக்க ளுக்குப் புரியுமா? `புயல்’ என்று சொன்னால்தான் மக்களுக்குப் புரியும்.
புரியும் மொழியில் அரசு அதிகாரிகள் அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நேரத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நிலவரம் சொல்வதைப்போல இந்த ஒரு மாத காலம் இதற்காக ஓர் அதிகாரியைப் போட்டு பருவநிலை நிலவரம் சொல்லி இருந்தாலே, மக்கள் பாதிப் பேரின் துன்பம் குறைந்திருக்கும். தாழ்வான ஏரிப் பகுதியில் இருப்பவர்கள் இடம் மாறி இருப்பார்கள். பலர் வெளியூர் போயிருக்கலாம்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தருகிறது, உலகின் பல்வேறு நாடுகளின் பருவநிலை மாற்ற இணைய தளங்களில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் மக்களுக்குத் தகவல் தருவதைவிட தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு என்ன வேலை... புகைப்படங் களை வெட்டி ஒட்டுவது மட்டும்தானா?
இதை எல்லாம் ஏன் செய்யவில்லை என்றால் மழை வருவதையே, மழை பெய்வதையே இவர்கள் மறைக்க நினைத்தார்கள். சொத்துப் பரிமாற்றங் களை மறைக்கலாம்; ஒவ்வொருவர் தலையிலும் பெய்யும் மழையை மறைக்க முடியுமா? நாட்டில் அதிக மழை பெய்ததற்கு ஜெயலலிதா காரணம் அல்ல. அவர் நினைத்தாலும் மழையைத் தடுக்க முடியாது. ஆனால், அவர் நினைத்திருந்தால் மழையின் பாதிப்பைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
`இந்தந்த நாட்களில் மழை பெய்யும், இதுவரை பார்க்காத பெருமழையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பிட்ட மாவட்டத்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அரசு இன்னின்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளது, இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என அறிக்கை விடுத்து பொதுமக்களை தயார்ப்படுத்தாமல் மௌனம் சாதித்ததுதான் பேரழிவுக்கு பெரிய காரணம்!
மாற்று இடம் அறியாத மக்கள்!
மழை கொட்டித் தீர்த்துவிட்டது. அடையாறு, கூவம் ஆற்றோரங்களில் வசிப்பவர்களுக்கு உடனடியாக அருகில் இருந்த பள்ளிகளில் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்து தரப்பட்டன. மாநகராட்சி சமூகநலக்கூடங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் போய் அந்த மக்கள் தங்கிவிட்டார்கள். ஆனால், இந்த மழை ஆற்றோரங்களில் இருப்பவர்களை மட்டுமல்ல, நகர்ப்பகுதியில் இருப்பவர்களையும் அதிகமாகப் போட்டுத் தாக்கியது. இந்த மக்கள் எங்கே போவது எனத் தெரியாமல் தவித்த தவிப்பே அழிவின் உச்சம்.
முதல் மாடியையே மூழ்கடிக்கும் தண்ணீர் வந்த பிறகு... போட்டுகளில் வெளியேறிய மக்கள் தரைக்கு வந்த பிறகு... போகும் இடம் தெரியாமல் தவித்தார்கள். நோயாளியான வயது முதிர்ந்த பெற்றோரையும், பால் மணம் மாறாப் பிஞ்சுக் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு சாலையில் சொந்த நாட்டு அகதிகளைப்போல நின்றார்கள். சொந்தக்காரர்கள், தெரிந்தவர்களோடு தொடர்புகொள்ள செல்போன் வேலை செய்யவில்லை, நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதை அறிய மின்சாரம் இல்லை; கும்மிருட்டு. போகும் இடம் தெரிந்தாலும் வாகனம் எதுவும் கிடையாது; கடைகள் கிடையாது; உணவகங்கள் கிடையாது; பணம் எடுக்க ஏ.டி.எம் கிடையாது; ‘அரசாங்கமும் கிடையாது’ என்பதை அப்போதுதான் மக்கள் உணர்ந்தார்கள்.
`எல்லா பள்ளிக்கூடங்களையும் திறந்துவையுங்கள், அனைத்துத் திருமண மண்டபங்களையும் திறந்துவிடுங்கள், யாரும் வந்து தங்கலாம்' என்று அரசாங்கம் ஒரே ஓர் அறிக்கை விட்டிருந்தால் மக்களுக்கு பெரிய நம்பிக்கை பிறந்திருக்கும். ‘நான் இருக்கிறேன், யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மக்களிடம் பேசும்போது ஜெயலலிதா சொன்னார். ஆனால் செய்தாரா? பெரிய பெரிய நிறுவனங் களில் வேலை பார்த்து, லட்சக்கணக்கில் பணம் போட்டு வீடு வாங்கி, கௌரமாக வாழ்வதாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் இரவு உடைகளோடு மனைவி பிள்ளைகளைக் கையில் பிடித்தபடி வேளச்சேரி ரயில் நிலையத்தில் ஏதோ ஒரு சேவா சங்கம் கொண்டுவந்த சாம்பார் சாதத்தை முட்டி மோதி வாங்கி, கண்ணீரும் கம்பலையுமாக சாப்பிட்ட காட்சி நல்லாட்சியில் பார்க்க வேண்டிய காட்சியே அல்ல. வேளச்சேரி மக்களுக்கு இந்த இடம், அண்ணாநகர் வாசிகளுக்கு இந்த இடம் என அறிவித்துச் சோறு போடக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையா... மனம் இல்லையா... நேரம் இல்லையா?
ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காகவும் சிறையில் இருந்து விடுதலையாவதற்காகவும் கோடிக் கணக்கில் யாகம் நடத்தி, விருந்து படைத்த மந்திரி துரைகள் எங்கே போனார்கள்... கான்ட் ராக்டர்கள், கமிஷன்காரர்கள் எங்கே போனார்கள்... சாலை போடுவதாகச் சுருட்டியவர்கள் சாம்பார் சாதம் போட்டாலாவது பாவம் குறைந்திருக்குமே? ‘வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?’ என்று பாரதி கேட்டது அடிமை தேசத்தில்... அம்மா தேசத்திலுமா?
அத்தியாவசியப் பொருட்களுக்கே அலைச்சல்!
பாலுக்கு அலைந்த பரிதாபக் காட்சிகளே சென்னையில் அதிகம். ‘பால் இல்லை’ என்று எல்லாக் கடைகளிலும் எழுதிப் போட்டார்கள். ‘பால் பவுடர்’ இல்லை என்று மருந்துக் கடைகளில் எழுதி வைத்தார்கள். அரை லிட்டர் பால் கிடைக்காதா என்று அலைந்த முகங்கள் ஏக்கத்தால் வெளிறிப் போயிருந்தன. இரண்டு மூன்று சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ஆவின் பால் லாரி வரவில்லை என்று முதல் நாள் சொன்னார்கள். சாலைகள் சரியான பிறகும் புறநகர் பகுதிக்கு பால் வரவில்லை. இதைவிட அநியாயம், பால் பூத்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை. ஆனால், தனியார் கடைகளில் ஆவின் பால் தாராளமாகக் கிடைத்தது. 20 ரூபாய் பால் பாக்கெட், 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தனியார் கடை களுக்கு மட்டும் தனியாக ஆவின் நிறுவனத்தை அரசாங்கத்துக்குத் தெரியாமல் யாராவது நடத்த முடியுமா? ஒரு வைத்தியநாதனைக் கைது செய்து வெளியே விட்டுவிட்டார்கள். இன்னும் ஆயிரம் வைத்தியநாதன்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் அம்பலமாகி இருக்கிறது. ‘60 ரூபாய்க்கு விற்பது நியாயமா?' என்று கேட்டால், ‘50 ரூபாய்க்கு நான் வாங்கி வந்திருக்கேன்’ என்று கடைக்காரர் சொல்கிறார். அப்படியானால் 50 ரூபாய்க்கு விற்றவர் யாருக்கு பங்கு தர விற்கிறார் என்று கேட்டால், அதற்கும்  அவதூறு வழக்கு பாயுமோ?
30 ரூபாய் வாட்டர் கேன் 90 ரூபாய்க்கு விற்பனை ஆனது. காய்கறிகள் விலை சொல்லவே வேண்டாம். `கிடைத்தது லாபம்' என வியாபாரிகள் கொள்ளை அடிக்க, கேட்பார் இல்லாத அதிகாரிகள் இருப்பதுதானே காரணம்? பேரழிவுக் காலத்தில் அம்மா உணவகங்கள், கூட்டுறவு நியாயவிலைக் கடைகள், உணவுப் பொருள் கிடங்குகள் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தி 
இருந்தால், மக்கள் அன்றாட உணவுப் பொருட்களுக்காக அலைந்து திரிந்ததைத் தடுத்திருக்க முடியும்.
இந்தக் காரியங்களை ஒழுங்காகப் பார்த்திருந்தால் மக்கள் எத்தகைய மழையையும் தாங்கும் தைரியத்தைப் பெற்றிருப்பார்கள். அதைச் செய்யாமல், ஓர் அரசாங்கம் தலைமறைவு ஆனது தான் தமிழ்நாட்டு மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. நாளை இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டோருக்கு தலைக்கு 5,000 ரூபாய் கொடுக்கலாம், ஆபத்து நேரத்தில் வராமல், ஆறு மாதங்கள் கழித்து பணம் கொடுத்தால் அந்த மனிதனுக்கும் பயன்படாது... தேர்தலுக்கும் பயன்படாது!
வரலாற்று மழை மட்டுமா... வரலாற்றுப் பிழையும் இதுதான்! 

குறள் இனிது: பத்திரமாகப் பார்த்துக்குங்க..

Return to frontpage

சில வருடங்களுக்கு முன்பு, திருச்சியில் எங்கள் வங்கியின் கோட்ட அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சனிக்கிழமை மாலை 4 மணி இருக்கும். தொப்பலாக நனைந்திருந்த ஒரு பெரியவர் பதற்றமாக உள்ளே வந்தார். ‘போச்சு, எல்லாம் போச்சு. மூன்றே நாட்களில் அறுபது ஆயிரம் போச்சு. ஏடிஎம் அட்டை என்னிடம் இருக்கும் பொழுதே பணத்தைக் காணோம். எல்லோரும் உள் கூட்டு’ என்று மூச்சு விடாமல் படபடப்பாகப் பேசினார். அவரை ஆசுவாசப்படுத்தி நடந்தவைகளைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டோம். ஏடிஎம் அட்டையைக் கொடுங்கள் என்றவுடன் “அது என்னுடன் எப்பொழுதும் பத்திரமாக இருக்கும். தூங்கும் பொழுது கூட தலையணைக்குக் கீழேதான் இருக்கும்” என்று சொல்லி, பாண்ட்டில் இருந்த சீக்ரெட் பாக்கெட்டிலிருந்து கார்டை வெளியில் எடுத்துக் கொடுத்தார். அட்டையின் பின்பக்கம் 2525 என்று எழுதி இருந்தார். அவரைக் கேட்டதற்கு அது பின்நம்பர் என்றார். இதை அட்டையில் எழுதலாமா என்று கேட்டதற்கு, அட்டை தன்னிடம் எப்பொழுதும் இருப்பதாகப் பதில் அளித்தார். பின்னர் நாங்கள் ஏடிஎம் காமிராவில் பதிவாகியிருந்த வீடியோ கிளிப்பிங் மூலமாக, அவர் கணக்கில் மூன்று நாட்கள் இரவு 11 மணிக்கு பணம் எடுத்தவரை அவருக்குக் காண்பித்தோம். மனிதர் பதறிப்போய் விட்டார். பணம் எடுத்தது அவருடைய செல்ல மகன்தான் என்று அடையாளம் காட்டி, மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்.மிகக் கவனமாகத் தம்பொருட்களைப் பாதுகாப்பவர்கள் கூட இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு விடுகிறார்கள். ஏடிஎம் பின்நம்பரை ஏடிஎம் கார்டில் எழுதுவது என்பது, பீரோவைப் பூட்டி அதிலேயே சாவியைத் தொங்க விடுவதற்கு ஒப்பானதாகும். பின் நம்பர் எளிதில் கணிக்க முடியாததாக இருப்பது நலம். உதாரணமாக உங்கள் வாகனத்தின் பதிவுஎண், வீட்டுஇலக்கம், பிறந்த வருடம் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அதனை அடிக்கடி மாற்ற வேண்டும். ஏடிஎம்-ல் அதற்கு வசதி உண்டு. நீங்கள் இணையதளம் மூலம் உங்கள் வங்கிக் கணக்கை உபயோகிப்பவர் என்றால் இன்னமும் கவனம் தேவை. உங்கள் கடவுச்சொல் (Password) சில எழுத்துக்கள், சில எண்கள், குறியீடுகள்(*!;போன்றவை) கலந்ததாக இருக்க வேண்டும். ABCD1234 போன்ற எளிதில் யூகிக்கக் கூடியவை கூடாது. மேலும் முன்பின் தெரியாதவர்கள் மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ உங்கள் வங்கி கணக்கு விவரங்களைக் கேட்டால் கொடுக்கக் கூடாது. அவ்வகை மின்னஞ்சல்களுடன் வரும் இணைப்புகளை க்ளிக் செய்வதும் ஆபத்தானது.

இவை மூலம் உங்கள் கணிணியில் வைரஸ் பரவக் கூடும். உங்களைப் பற்றிய விவரங்களை எடுத்து தவறாக பயன்படுத்த ஏதுவாகும். திறமை மிக்க மன்னனுக்கும் தன் அரணை வலிமையாக வைத்துக் கொள்வது நல்லது என்கிறார் வள்ளுவர். இன்றைய கணிணி உலகில் கடவுச்சொற்கள் தானே நமது பாதுகாப்புச் சுவர்?

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவும் தரும் (குறள் - 492)

சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

இப்படியும் பார்க்கலாம்: நதியாகிறவர்களும், கரையாகிறவர்களும்... ..... ஷங்கர்பாபு

Return to frontpage

பொது » வெற்றிக் கொடி


திறமை குறைந்தவர்கள் முன்னேறிச் செல்ல,அவர்களின் விமானம் வானில் உயர உயரச் செல்வதை திறமை நிறைந்தவர்கள் பார்க்க நேரிடுவது, வாழ்வின் சோகங்களில் ஒன்று.

அப்படி ஒருவர் ரயிலில் ஏசியில் பயணம் செய்ய,வழியனுப்ப வந்த உங்களுக்கு அவரது அறிவுரை டானிக்கைப் பருக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். “மனசைத் தளர விட்ராதீங்க. நாங்கள்லாம் இருக்கோம். கொஞ்சம் மினரல் வாட்டர் வாங்கிட்டு வந்துடறீங்களா?”

மைண்ட் வாய்ஸில் - பழுதான வீணைகள் பஞ்சு மெத்தையில் ஏன் இருக்கின்றன?

நூலகர் பணிக்கான இண்டர்வியூவிற்காக சென்னைக்கு வந்தார் வசந்தி.

அடிப்படைத் தகுதி இளங்கலை நூலக அறிவியல் பட்டம். வசந்தி இதில் முதல் வகுப்பு பெற்றிருந்தாள். இப்போது ஒரு ‘A' முதுநிலை எம்.எல்.ஐ.எஸ். படித்தவர் வருகிறார் என்றால் அவருக்கே கூடுதல் வாய்ப்பு. அடுத்து ‘B’ பி.எச்டி செய்தவர் என்றால்,அவருக்குத் தகுதி அதிகம். ‘C’ கூடுதலாக 5 வருட வேலை அனுபவத்தையும் வைத்திருக்கிறார் என்றால்? இப்படியே டாக்குமெண்டேஷனும் படித்தவர், கேட்லாக்கில் சான்றிதழ் கொண்டிருப்பவர் என்று தகுதிகள் கூடிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இந்த இண்டர்வியூவில் வெற்றி பெற்றவருக்கு அப்படியொன்றும் அதிகத் தகுதி கிடையாது.

திறமை, தகுதி இவற்றின் உச்சி எது என்பது புரியாத விஷயம். சிரமப்பட்டு மலையில் ஏறி ஒரு குன்றில் அமர்ந்து “அப்பாடா...வந்துட்டோம்” என்று பார்த்தால், அதையும் தாண்டி ஒரு இளம்பெண் அமர்ந்து “இங்கே ஸேஃபாத்தான் இருக்கேன்” என்று சூழலை ஃபோனில் அனுப்பிக்கொண்டிருக்கிறார். இப்படியே போய்க்கொண்டிருந்தால்,எதுதான் எல்லை?

ஆனால் உங்கள் மதிப்பீட்டின்படி தகுதி, திறமையற்றவர்களும்,உண்மையிலேயே தகுதி, திறமை இல்லாதவர்களும்கூட வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி?

எல்லா ஊர்களிலும் ஒதுக்குப்புறமாய் கரடு, முரடான இடம் இருக்கும். பகலில் கடந்து செல்லவே பயப்படுவார்கள். “அங்க பேய் இருக்கு,பாம்பு இருக்கு...’ அதை விலைக்கு வாங்க வந்தவரை, “இதப் போய் வாங்கறானே...முட்டாள் !”, “ ஓசிக்குக் கொடுத்தாலும் எவனாவது வாங்குவானா?”என்றெல்லாம் பேசுவார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு அந்த இடம் ஊரின் பிரதானப் பகுதியாக மாறியிருக்கும். இப்போது வாங்க முடியாதவர்கள் முன்பு கைக்கு எட்டும் தூரத்தில் இடமும் சாத்தியங்களும் இருந்தும் வாங்காத தங்களின் புத்திசாலி முன்னோர்களைத் திட்டிக்கொண்டிருப்பார்கள்.

“கேட்டாங்களே, எங்க தாத்தாகிட்ட. இதை மனுசன் வாங்குவானான்னு ரைஸ் மில் வைக்கப் போய்ட்டார். இவர் ரைஸ் மில் வைக்கலைன்னு எவன் அழுதான்?”, “அறிவுள்ளவன் எவனாவது இதை வேண்டாம்னு சொல்லுவானா?” - நூற்றுக்கு 90 குடும்பங்களில் 90 சதவீத மனிதர்களிடம் இந்தத் தினுசில் ஆதங்கம் இருக்கும்.

அன்று அந்த இடத்தை வாங்கிப் போட்டவர் தன் கையிலுள்ள சேமிப்பை எல்லாம் இழந்து வாங்கினார். அப்போது இன்று ஏங்குபவர்களின் முன்னோர்கள் பணமிருந்தும் முதலீடு செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.

அப்படியானால், சரியான நேரத்தில் முதலீடு செய்யப்படும் செல்வம்தானே சிறந்த செல்வம்? பசித்த நேரத்தில் கிடைக்கும் உணவுதானே சிறந்த உணவு? தேவைப்படும் நேரத்தில் வெளிப்படும் - அது எவ்வளவு குறைந்த திறமையாகட்டும், தகுதியாகட்டும் - அவைதானே சிறந்த திறமையாகவும்,தகுதியாகவும் இருக்க முடியும்?

இதைப் பெரும்பாலும் தங்களை அறியாமல் வெளிப்படுத்தியவர்களே இன்று உங்களுக்கு டாட்டா காட்டிச் சென்றவர்கள்; உங்கள் முன்னோர் வாங்கத் தவறிய இடத்தை வாங்கிய அன்றைய ஏழைகள்!

கொஞ்சம் உற்றுப் பார்த்தால், திறமையும் தகுதியும் அற்றவர் என்று முத்திரை குத்தப்பட்டவர் வாய்ப்பு கிடைத்த நேரத்தில் தன் துண்டைப் போட்டுத் தனக்கான இருக்கையை முன்பதிவு செய்ததை உங்களால் பார்க்க முடியும்.

நிறையப் பணத்தைச் சேர்த்துக்கொண்டுதான் முதலீடு செய்வேன் என்றால், ஒரு பைசாகூட சம்பாதிக்க முடியாது. எல்லாத் திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக்கொண்டுதான் முயற்சி செய்வேன் என்றால் இருந்த இடத்திலேயே சமாதி ஆக வேண்டியதுதான். கற்றது பைட் அளவு. கல்லாதது ஜி.பி அளவு.

ஒரு அலுவலகத்தில் ஒருவர் அதிகத் திறமையுடன் இருக்க, ஏனையோர் சராசரிக்கும் கீழே இருந்தால், அது ஒட்டுமொத்தமாய் சிறந்த அலுவலகம் அல்ல. ஒரு மாணவி மாநிலத்திலேயே முதலாவது வர, ஏனையோர் தோற்கிற வகுப்பைவிட அனைவரும் ஜஸ்ட் பாஸ் எடுக்கிற வகுப்புதானே சிறந்தது?

சராசரித்தனமாய் இருப்பதே மகிழ்ச்சி என்று இதற்கு அர்த்தமல்ல. நன்மைகள் விளைய அரிய ஆற்றல்களும், அதீதத் திறமைகளும் வேண்டியதில்லை.வெற்றி பெற சராசரித்தன்மைகூடப் போதுமானது.

1983-ல் கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற நம் அணியினர் ஒரு நாள் ஆட்டத்திற்கு லாயக்கில்லாதவர்களாகவே கருதப்பட்டார்கள். அவர்களில் யாருமே தனியாகப் பிரகாசிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லோரும் சராசரியாக ஆடினார்கள். ஒரு மேட்சில் கபில்தேவ் ஜொலித்தார் என்றால்,இன்னொன்றில் அமர்நாத். வேறொன்றில் காந்த், மதன்லால். கிளைமாக்ஸில் எல்லோரும் அவரவர் பங்கை அளித்தார்கள். ரன்னும் விக்கெட்டும் எடுக்காதவர்களும்கூட கேட்ச் பிடித்துத் தம் பங்கை ஆற்றினார்கள்.

ஒரு சினிமாவில் நல்ல கதை. ஆனால் மீதி எல்லாம் குப்பை. இன்னொரு படத்தில் எதுவுமே பிரமாதமில்லை. ஆனால் நடித்தவர்கள், இயக்கியவர்கள் எல்லோரும் தங்களின் ‘சுமாரை’ வழங்கியிருந்தால் வெற்றி பெற அதுவே போதுமானது. சொல்லப்போனால் இதுதான் சினிமாத் துறையை வாழ வைக்கிறது.

எனவே இருக்கிற சராசரித் திறமையை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதிகத்தகுதி இருந்தும் அது வெளிப்படாமல் இருப்பதை விட, குறைந்த தகுதியைத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்துபவர்தானே சிறந்தவர்?

நீச்சல் நன்கு தெரிந்தவர் குளிர் கண்டு தயக்கம் கொள்கையில், நீச்சல் தெரியாதவர் செம்பும் கையுமாக இறங்கி, சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நதியாகிறார். யார் சிறந்தவர்?

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

உதவும் கரங்கள் ஒன்று சேர்கின்றன


களத்தில் 'தி இந்து': நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!

    டி.எல்.சஞ்சீவிகுமார்
    மு.முருகேஷ்
    ஆர்.பாலசரவணக்குமார்



நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பர்களே. நாளுக்கு நாள் நாலாபுறமும் இருந்து உதவிகள் குவிகின்றன. சேப்பாக்கம் வழியாக சாலைகளில் செல்வோர் எல்லாம் முகாமை பார்த்துவிட்டு வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்துவிட்டுப் போகிறார்கள்.

முகாமுக்கு போன் செய்து, “சார் பெயர் எல்லாம் வேண்டாம், என்ன அனுப்ப வேண்டும் உங்களுக்கு” என்று நெகிழ வைக்கிறார்கள். மழை கொடுத்த நட்புகள் இவை. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் வாக்கை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘தி இந்து’வின் வாசகர்கள்.

கைகோர்த்த பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா

நேற்றைய தினம் ‘தி இந்து’வுடன் கைகோத்தது ‘பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பு. அதன் மாநிலப் பொதுச்செயலாளர் முஹம்மது சேக் அன்சாரி கூறும்போது, “இதுவரை நாங்கள் சுமார் 83 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் அளித்துள்ளோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ‘தி இந்து’ குழுமம் சிறப்பான முறையில் உதவிகளை செய்து வருவதை அறிகிறோம்.

எனவே, பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் உங்களோடு இணைந்து பணியாற்றும் விதமாக ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பாய், போர்வை, தலையணை, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குகிறோம். எங்கள் செயல்வீரர்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

சேவை இல்லை, கடமை!

நிவாரண பணியில் பங்கேற்றிருக்கிற எவரிடமும் சேவை செய்கிறோம் என்ற உணர்வில்லை. தன்னை இத்தனை காலமாகச் சுமந்த சென்னைக்கும், உறவாக இருந்த மக்களுக்கும் நாம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணி இது என்கிற உணர்வு மட்டுமே உள்ளது.

திருவல்லிக்கேணியில் பழக்கடை வைத்திருக்கும் சந்திரன் கடந்த ஒரு வாரமாக தன்னிடமிருக்கும் டாடா ஏஸி வண்டி மூலமாக நிவாரணப் பொருட்களை சென்னை நகரின் பாதிக்கப்பட்ட பகுதிகளெங்கும் கொண்டுபோய் சேர்த்து வருகிறார். டீசல் செலவைக்கூட கேட்பதில்லை.

“வெள்ளத்தில என்னோட வீடு பாதிக்கப்படலேன்னு நான் நினைக்கலே. பாதிக்கப்பட்டது எல்லாமே என்னோட குடும்பமா நினைக்கிறேன். என்னால முடிஞ்சது இது. தினமும் இங்க வந்து இந்த வேலைகளைச் செஞ்சிட்டுப் போனாத்தான் மனசுக்கு நிம்மதி வருது…” என்று சந்திரன் சொல்லும்போதே மனதின் ஈரம் கண்களில் வடிகிறது.

ஆயிரமாய் நீளும் உதவிக் கரங்கள்

தன் மனைவியோடு வந்த பெயர் குறிப்பிட விரும்பாத சுங்கத்துறை அதிகாரி ஒருவர், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்ப உடனடியான தேவை என்னன்னு சொல்லுங்க. என்னோட பங்களிப்பா ரூ.25 ஆயிரத்துக்கான பொருட்களை நானே வாங்கித் தந்துட்டுப் போறேன்…” என்று சொல்லிவிட்டு அங்கேயே அமர்கிறார்.

அண்ணா நகர் மேற்கில் வசிக்கும் 84 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே துறை அதிகாரி சி.ஜி.ரத்னம் இரு கைகளிலும் பைகளைச் சுமந்து வருகிறார். “பாதிக்கப்பட்ட மக்களுக்கான என்னோட பங்களிப்பு…” என்று கூறியபடி இரண்டு பைகளையும் தந்தவர், “எங்க ஏரியாவில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த வசிக்கிறாங்க. நான் ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு பொருட்கள் கொடுக்கப் போறேன்னு சொன்னவுடனே, அவங்க அம்மாவோட பிறந்த நாளுக்கு வாங்கின மொத்த புதுத் துணியையும் கொடுத்துவிட்டாங்க” என்று இன்னொரு பையையும் சேர்த்துத் தருகிறார்.

நெகிழ்ந்த நன்றியோடு…

கையில் ‘தி இந்து’வுக்கான நன்றி அட்டையோடும், கொஞ்சம் புகைப் படங்களோடும் உள்ளே வருகிறார் பிரசாத் சிங் (66). குடிசை மாற்று வாரிய முன்னாள் உறுப்பினர். “என்னோட சொந்த ஊரு திருவாலங்காட்டில உள்ள ஜாகீர்மங்கலம் கிராமம். அந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கிற 5 பஞ்சாயத்துல சுமார் 3,500 வீடுகள் இருக்கு. அந்தப் பகுதி மொத்தமும் வெள்ளத்தில் மூழ்கிடுச்சு.

இதை டிசம்பர் 6-ம் தேதி ‘தி இந்து’ நிவாரண முகாம்ல வந்து சொன்னேன். உடனே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, பாய், பிரெட், ரஸ்க், ஸ்டவ்ன்னு கொடுத்தாங்க. அதையெல்லாம் பஞ்சாயத்து பள்ளிக்கூடத்திலேயும், ஊர் லைப்ரரியிலேயும் தங்கியிருக்கிற மக்கள்கிட்டே கொடுத்தேன். ரொம்ப நன்றி” என்றவர், தான் மக்களுக்கு விநியோகித்த பொருட்களை படம் எடுத்து ஆல்பமாக்கி கொண்டு வந்து கொடுத்தார்.

நோய் நாடி உயிர்நாடி…

தினமும் நிவாரண முகாமுக்கு வந்து விடுகிறார் டாக்டர் மகாதீர் முகமது (25). சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் இவர் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணி செய்கிறார். “என் தம்பியோட நண்பர்கள் மூலமா கேள்விப்பட்டுத்தான் ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு வந்தேன்.

நிவாரண உதவிகளோட சேர்த்து சுகாதாரப் பணிகளையும் செய்ய வேண்டியது ரொம்ப அவசியம். தினமும் இங்க வர்றவங்களுக்கு மருத்துவம் பார்ப்பதோடு, நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் தடுப்பூசிகள் போடுகிறேன்” என்கிறார்.

தொய்வின்றி தொடரும் உதவிகள்…

நிவாரண முகாமுக்கு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா, ஞானசேகரன் ஆகியோர் பாய், பால் பவுடர் உள்ளிட்ட ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைத் தந்துவிட்டு, “இது நாங்களும், எங்கள் துறையின் இணை ஆணையர் ஜெகன்னாதன், துணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் விஜயா ஆகியோர் அளிக்கும் எளிய பங்களிப்பு” என்றார்கள்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.8 ஆயிரம் மதிப்பிலான போர்வைகள், டவல் ஆகியவற்றை தேவகோட்டை கே.பி.என். டிராவல்ஸ் மூலமாக ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு அனுப்பியுள்ளனர்.

என்.டி.எல். டிராவல்ஸ் நிறுவனத்தினர் நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள 2 கார்களை அனுப்பியுள்ளனர். ஏர்செல் நிறுவனம், முகாமுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்பவர்களுக்காக 2 பிரத்தியேக அலை பேசி இணைப்புகளை (99418 22222, 9941733333) இலவசமாக அளித்துள்ளனர்.

சென்னை மகரிஷி பள்ளி நிர்வாகத் தினர் நிவாரணப் பணிகளுக்கு பயன் படுத்திக்கொள்ள 2 பள்ளி வேன்களை அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலும் ‘தி இந்து’ கள நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கனிவான வேண்டுகோள்

அன்புள்ள வாசகர்களே, தாங்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக் கும் உதவி பொருட்கள் மனதை நெகிழச் செய்கின்றன. நன்றி. அதே சமயம், பழைய துணிகள் அனுப்பு வதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.

மேலும், தண்ணீர் பாக்கெட்டுகள் தேவைக்கும் அதிகமாக குவிந்து விட்டதாலும், அவற்றை அனுப்ப உங்களுக்கு செலவு அதிகம் பிடிக்கும் என்பதாலும் தண்ணீர் பாக்கெட் மூட்டைகளை அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கைதட்டி உற்சாகப்படுத்திய ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம்

இதுவரை நமது முகாமில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் முகாமுக்கு வந்து தன்னார்வலர்களை உற்சாகப்படுத்தினார்.



முகாமில் முதல் நாளில் இருந்து ஓய்வின்றி உழைத்து வரும் தன்னார்வலர் ஸ்டெபியின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டியவர், அர்ஜூன், அசோக், ஆறுமுகம் ஆகிய சிறுவர்களை பற்றிய விவரங்களை கேட்டறிந்து தோளில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். இந்த நிவாரண முகாம் முடிந்தததும் நீங்கள் மூவரும் கண்டிப்பாக படிக்கப் போக வேண்டும் என்றும் அவர்களை அறிவுறுத்தினார்.

‘கேஜியெஸ் ரெசிடன்சி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சண்முகம் சார்பில் துணைத் தலைவர் டேனியன், பொதுமேலாளர் அனந்தராமன் ஆகியோர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 550 மண்ணெண்ணெய் ஸ்டவ்களை ‘தி இந்து’ இணையதள பிரிவு ஆசிரியர் பாரதி தமிழனிடம் வழங்கினர். உடன் ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம்.

வலி இல்லாத வாழ்க்கை .. டாக்டர் பிரபு திலக்

Return to frontpage

வலி இல்லாத வாழ்க்கை ஒன்று இருக்குமானால் அதுவே சொர்க்கம், அதுவே வாழ்க்கையின் அளவிட முடியாத ஆசீர்வாதம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட வரம் பலருக்கும் வாய்ப்பதில்லை.

பலருடைய வாழ்க்கையில் வலி என்பது நோயின் அறிகுறி என்ற நிலை மாறி, அதுவே நோயாக மாறிவிடுவதும் உண்டு. இப்படி வலியால் அவதிப்படுபவர்களின் தேவைக்குத் தீர்வு கொடுக்கும் மருத்துவத் துறை ‘நோய்த் தணிப்பு பேணுதல்’ எனப்படும் ‘வலி நிர்வாகத் துறை’. தலைவலியில் தொடங்கி முழங்கால் வலி, முதுகுத் தண்டு வலி, மூட்டுவலி, புற்றுநோய் வலி உள்படப் பலவற்றுக்கும் இத்துறை சிகிச்சை தருகிறது.

இன்றைய வாழ்க்கையில் சரிவிகித உணவுப் பழக்கம் இல்லாமை, போதிய உடற்பயிற்சி இல்லாமை, தவறான உடற்பயிற்சிகள், அதிகமான உடல் எடை, உடல் இளைக்கிறேன் எனச் சத்தான உணவை ஒதுக்குதல், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த சரியான விழிப்புணர்வு இன்மை போன்றவை இளம் வயதிலேயே வலிகள் வருவதற்கான அடிப்படைக் காரணங்கள்.

இடுப்பு வலி, முழங்கால் வலி போன்ற பிரச்சினைகளுக்கும் வலி நிர்வாகத் துறை தீர்வு தருகிறது. அல்ஜியாட் சிகிச்சையின் மூலம் பலருக்கும் வலி நிவாரணம் அளிக்க முடியும். எடுத்துக்காட்டாக, புற்றுநோய் ஏற்படுத்தும் வலியால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்குக் கேங்கிலியான் பிளாக் (Ganglion Block) எனும் நவீன சிகிச்சை பயன் தரும்.

நம் நாட்டைப் பொறுத்தவரை இத்துறை பற்றிய விழிப்புணர்வு சற்றுக் குறைவு. கடந்த 4 ஆண்டுகளாகப் பின்தங்கிய கிராமங்களில் இருந்துகூடப் பலர் இந்தச் சிகிச்சையைப் பெறும் அளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்துவருகிறது.

ஜவ்வு பிதுங்குதல்

இரு சக்கர வாகனங்களில் அதிகப்படியாகப் பயணம் செய்யும்போது ஏற்படும் அதிர்வுகள், உட்கார்ந்த நிலையிலேயே பல மணி நேரம் வேலை பார்ப்பது, உடற்பயிற்சியின்போது அதிகப்படியான பளுவைத் தூக்குதல், உடல் எடை அதிகரிப்பு, எடை அதிகமுள்ள பொருட்களைப் பெண்கள் தூக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் தண்டுவட எலும்புகளுக்கு மத்தியில் ‘ஷாக் அப்சர்பர்’ போல வேலை செய்யும் ஜவ்வு பிதுங்குவதால் வலி ஏற்படுகின்றன.

சிலருக்கு இப்படிப் பிதுங்கிய ஜவ்வு, நரம்பை அழுத்துவதால் தாளமுடியாத வலி ஏற்படும். நாளடைவில் கால்கள் உணர்ச்சியற்றுப் போகக்கூடிய ஆபத்தும் உண்டு.

அல்ஜியாட் சிகிச்சை முறைகள் மூலம் அறுவைசிகிச்சையின்றி இந்த வலிகளையும், வலியைத் தோற்றுவிக்கும் மூலக் காரணங்களில் பலவற்றையும் குணப்படுத்தலாம்.

பெண்களும் இளைஞர்களும்

இளம் வயதினர் தேவையற்ற முரட்டுத்தனத்துடன் உடற்பயிற்சி செய்யும்போது முதுகுவலி, இடுப்புவலி ஏற்படலாம். அதிகப்படியான பளுவை முறையான பயிற்சியில்லாமல் தூக்கும்போதும், இவ்வலி ஏற்படும். டிஸ்க் பல்ஜ், டிஸ்க் புரோலாப்ஸ் போன்றவை ஏற்பட்டுத் தண்டுவடத்தின் நரம்புகளை அழுத்தும்.

இதனால் ஏற்படும் வலி, இடுப்பு மற்றும் கால்களுக்கும் பரவும். ஜவ்வுகள் கழுத்துப் பகுதியில் பிதுங்கும்போது, கைகளிலும் வலி ஏற்படும். இத்தகைய வலிகளுக்கு ஹைட்ரோசிஷன் (Hydrocision), நியூக்ளோடமி (Neucleatomy) போன்ற சிகிச்சைகள் பயன்படும்.

நாற்பது வயதுக்கு மேல் மெனோபாஸ் ஆரம்பித்துவிடுவதால் உடலில் சுண்ணாம்புச் சத்து குறைந்து முழங்கால், மூட்டு, இடுப்பு வலி போன்றவை பெண்களை அதிகம் பாதிக்கிறது. கர்ப்பப்பையை அகற்றிய பெண்களுக்கு இது இன்னும் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே உடலியல் மாற்றங்களால் அவதிப்படும் அவர்களுக்கு, இந்த வலியும் சேர்ந்து இயல்பு வாழ்க்கையை முடக்கலாம். இத்தகையோரின் வலிகளுக்கான தீர்வை கிளாஸ் 4-லேசர், அல்ட்ரா சவுண்ட், நெர்வ் பிளாக் கருவிகள் மூலம் தர முடியும்.

நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்றவை அதிகம் தாக்குகிற முதியவர்களுக்கு முழங்கால் வலி, இடுப்பு வலி போன்றவற்றுக்கு அறுவைசிகிச்சை செய்வது சிக்கலானது. இவர்களுக்கு அறுவை சிகிச்சையும் பக்க விளைவுகளும் இல்லாமல் வலி நிர்வாகத் துறையின் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.

நோய்கள் தடையில்லை

டிரைஜெமினல் நியூரால்ஜியா என்ற நோயால் ஏற்படக்கூடிய வலி மிகவும் மோசமானது. முகத்தில் அவ்வப்போது ஷாக் அடிப்பது போலிருக்கும், பல் விளக்க, முகம் கழுவப் போன்ற செயல்களைச் செய்யக்கூட மிகவும் வேதனையாக இருக்கும்.

குளிர் காலத்தில் பிரச்சினை மேலும் கடுமையாகும். மூளையிலுள்ள ரத்தக் குழாய்களும் நரம்புகளும் பின்னிக்கொள்வது, இதற்கு ஒரு காரணம். சுகுயு சிகிச்சை முறை இதற்கு நல்ல தீர்வு.

வலி நிர்வாகத் துறையின் மற்றொரு சிறப்பு வயது, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற எந்தவொரு விஷயமும் இந்தச் சிகிச்சை முறைக்குத் தடையில்லை. இப்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையை முடக்கிப்போடும் பலவிதமான வலிகளிலிருந்து விடுபடக் கத்தியின்றி, ரத்தமின்றி அல்ஜியாட் சிகிச்சையின் மூலம் தீர்வு கிடைக்கிறது.

கட்டுரையாளர், வலி நிவாரண நிபுணர்

தொடர்புக்கு: prabhuthilaak@painwin.com

NEWS TODAY 20.09.2024