Friday, May 11, 2018

Last day of counselling for BTech in VIT

TIMES NEWS NETWORK

Vellore: 11.05.2018

Counselling for admission to BTech courses at Vellore Institute of Technology (VIT) commenced on Wednesday with founder and chancellor G Viswanathan handing over admission letters to the students.

According to a press release, the institute between April 4 and 16 had conducted an online admission examination to shortlist candidates for 7,985 seats available across various disciplines in its four campuses in Vellore, Bhopal, Chennai and Amaravati. The last round of counselling will be held on Friday.
மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்காதீர்கள்!

Published : 09 May 2018 08:56 IST

ஷான்

 


நீட் விவகாரத்தில் என்ன குளறுபடி என்பது குறித்துப் பொதுவெளியில் சரியான தகவல் கள் இல்லை. ஆனால், குளறுபடி இருக்கிறது என்பது இரண்டு பக்கமும் ஒப்புக்கொண்ட விஷயம். ஒரு சில மத்திய அரசு ஆதரவாளர்களிடமிருந்து ‘படிக்கணும்னா எங்கே போட்டாலும் போகணும், வெளிநாட்டுல வேலை கிடைச்சா போகலையா?’ என்பது போன்ற பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அதில், கள நிலவரம் புரியாத ஒரு அறியாமையைத்தான் காண்கிறேன்.

கடந்த ஆண்டு, கோபிக்கு அருகே அந்தியூரில் ப்ளஸ் டூ படிக்கும் அரசுப் பள்ளி மாணவ - மாணவியர்களுக்காக வா.மணிகண்டன் ஒருங் கிணைத்த வழிகாட்டு நிகழ்வில் கலந்துகொண்டேன். “உங்களில் எத்தனை பேர் வீடுகளில் இணையம் பார்க்க வசதி இருக்கிறது?” என்று கேட்டேன். அந்த வகுப்பில் 100 மாணவர்களுக்குப் பக்கம் இருப்பார்கள். மூன்று கைகள் மட்டும் உயர்ந்தன. மாணவிகள் பக்கமிருந்து ஒன்றுகூட இல்லை. “மொபைல் போனில் இருக்குமே” என்றபோது, சிலர் மட்டும் “இருக்கு… ஆனால் ப்ளஸ் டூ படிக்கும்போது தொட விட மாட்டார்கள்” என்றனர். பிரவுசிங் சென்டர் என்றெல்லாம் அந்த ஊரில் எதுவும் இல்லை. இது நடப்பது ஜியோ யுகத்தில்.

இத்தனைக்கும் நான் கிராமத்தில் படித்து வந்தவன். ஆனால், 20 ஆண்டுகள் நகர வாழ்க்கை என்னை கிராமத்திலிருந்து சற்றே நகர்த்தி விட்டது. ‘நல்லா படிச்சா மேல படிக்க வெப்போம். இல்லைன்னா, இருக்கவே இருக்கு மளிகைக் கடை’ என்ற தொடர் அபாயத்துடன் பள்ளிப் படிப்பை முடித்தவன் நான்.

எனக்கு ஒரு தோழி இருந்தாள். தந்தை இல்லை. அம்மாவின் உழைப்பில் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இவளும் அம்மாவுக்கு உதவுவாள். ஓரளவு நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தாள். கல்லூரிகள் அத்தனையும் அரை மணி, ஒரு மணி பயணத் தொலைவில் இருக்கின்றன. கல்லூரியில் சேர்ந்தால் அம்மாவுக்கு உதவ முடியாது என்று படிப்பையே நிறுத்திவிட்டார்கள். இப்போது காலம் நிறைய மாறியிருந்தாலும் சமூக பொருளாதார இன்னபிற காரணங்களுக்காக ஒரு சிறிய அசவுகரியம் வந்தாலும் “நீ படிச்சது போதும்” என்று சொல்லும் பெற்றோர் இப்போதும் இருக் கிறார்கள். அதிகாலை எழுந்து தீவனம் அறுத்துவந்து, சாணி அள்ளிப் போட்டுவிட்டுப் பள்ளிக்குத் தயாராகிச்செல்லும் ப்ளஸ் டூ மாணவ - மாணவியரும் இருக்கிறார்கள்.

வசதி உள்ளவர்கள் எப்படியும் எங்கும் சென்று எழுதுவார்கள். சற்று சிரமப்பட்டால் உதவிகள் பெற்று வசதி இல்லாதவர்களும் எழுதிவிட முடியும். ஆனால், நாம் தேவையின்றி உருவாக் கும் உங்கள் பார்வையில் ‘சிறிய’ அந்தச் சிரமம் ஒரே ஒரு கடைக்கோடி மாணவனின் அல்லது மாணவியின் எதிர்காலத்தை உடைத்தாலும் அது பெரிய பாவம். அவன் சந்ததிக்கே நாம் செய்யும் கூட்டுத் துரோகம். மத்திய அரசு - மாநில அரசு, சிபிஎஸ்இ அதிகாரிகள், உச்ச நீதிமன்றம் என்று அத்தனை பேரும் முனைந்து செய்ய வேண்டியது அந்தச் சிரமங்களைக் களைவதுதான்; உருவாக் குவது அல்ல!
பிரேக் பிரச்சினை எதிரொலி’ - 52,000 கார்களை திரும்பப் பெறுகிறது மாருதி

Published : 08 May 2018 15:41 IST

புதுடெல்லி

 



மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மற்றும் பெலினோ கார்களில் பிரேக் பிரச்சினை இருப்பதாக எழுந்த புகாரயடுத்து 52,686 கார்களை திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி ஆண்டுக்கு பல லட்சம் கார்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவன தயாரிப்புகளில், அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் ஸ்விப்ட் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. இதுபோலவே பொலினோவும் கார் பிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் 2017ம ஆண்டு டிசம்பர் முதல் 2018ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி வரை மாருதி நிறுவனம் தயாரித்த ஸ்விப்ட் மற்றும் பொலினோ கார்களில் பிரேக் பிரச்சினை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த கார்களை திரும்பப் பெற்று அவற்றை சரி செய்து கொடுப்பதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘மொத்தம் 52,686 மாருதி ஸ்விப்ட் மற்றும் பொலினோ கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். கார்களில் தயாரிப்பு பிரச்சினை இருந்தால், வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் வந்தால் அதனை சரி செய்து கொடுக்கும் சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப இந்த கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்.

வரும் 14-ம் தேதி முதல் அந்த கார்களில் இருக்கும் பிரேக் பிரச்சினையை சரி செய்யப்படும். கார் உரிமையாளர்கள் மாருதி நிறுவனத்தில் காரை கொண்டு வந்து இலவசமாக இந்த சலுகையை பெறலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றப்படும் உதிரி பாகங்கள் மற்றும் சேவைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது’’

இவ்வாறு மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது பிளிப்கார்ட் வளர்ந்த கதை! - பூஜ்யத்தில் தொடங்கி ரூ.1,50,000 கோடி குவித்த இந்திய இளைஞர்கள்

Published : 10 May 2018 13:11 IST

புதுடெல்லி

 



பிளிப் கார்ட் நிறுவனர்கள் பின்னி மற்றும் சச்சின் - படம்; ட்விட்டர்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட்டை விலைக்கு வாங்க, அமெரிக்க ஆன்லைன் நிறுவனமான அமேசானும், வால்மார்ட்டும் ஆர்வம் காட்டின. இறுதியாக இந்த போட்டியில் வென்றுள்ளது வால்மார்ட். பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது வால்மார்ட்.

அமேசான் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் போட்டியாக வால்மார்ட் நிறுவனம் விளங்குகிறது. இந்தியாவில் அமேசானின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் வால்மார்ட் நிறுவனம் அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

  இந்தநிலையில், இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனம் வளர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.

11 ஆண்களுக்கு முன்பு துடிப்பான இளைஞர்களான பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகிய இருவரும் அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமோசானில் பணியாற்றி ஊழியர்கள். டெல்லி ஐஐடியில்படித்த இருவரும், ஆன்லைன் வர்த்தகத்தின் நடைமுறைகளை நடந்து அறிந்து கொண்டிருந்த அவர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினர்.

சாதாரண அளவில் சிறிதாக பிளிப்கார்ட் நிறுவனத்தை பெங்களூருவில் 200-ம் ஆண்டு உருவாக்கினர். ஆன்லைன் வர்த்தக துறையில் தங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்களை சேர்த்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வர்த்தகத்தை விரிவாக்கினர்.


‘ஸ்டார்ட் ஆப்’ நிறுவனமாக, பூஜ்யத்தில் இருந்து உருவானது பிளிப்கார்ட். இரு இளைஞர்களின் அபாரத் திறமையால் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்தது பிளிப்கார்ட்.

11 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் அதிகமாக பிரபலமடையாத சூழல், ஆன்லைனில் பொருட்களை வாங்க மக்களுக்கு இருந்த அச்சம் என பல தடைகள் இருந்தன.

இவற்றையெல்லாம் கொஞ்ம், கொஞ்சமாக கடந்த அவர்கள், தங்கள் வர்த்தகத்தை விரிவு படுத்தினர். எலெட்ரானிக்ஸ் பொருட்கள் வர்த்தகம் அவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.

குறிப்பாக மொபைல் போன் சந்தை பெரிய அளவில் இந்தியாவில் விரிவடையத் தொடங்கியது பிளிப்கார்ட்டுக்கு பெரிய உதவியாக அமைந்தது. ஷோரூம் விலையை விட குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்வது வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

ஆன்லைனில் பணம் செலுத்தினால் அது உரிய முறையில் சென்றடையுமா? என்ற பயம் மக்களிடம் இருந்த நிலையில், 2010-ம் ஆண்டு கேஷ் ஆன் டெலிவரியை அறிமுகம் செய்தது பிளிப்கார்ட்.

சரியான சேவையும், இருந்த இடத்தில் இருந்தே பொருட்களை வாங்கும் வசதியும், இந்தியாவில் புதிதாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு அது, வரப் பிரசாதமாக அமைந்தது. மக்கள் சிறிது சிறிதாக ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறத் தொடங்கினர். பிளிப்கார்ட் நிறுவனமும் வேகமாக வளரத் தொடங்கியது.


பிளிப் கார்ட் நிறுவனர்கள் பின்னி மற்றும் சச்சின் - படம்: ட்விட்டர்

பிளிப்கார்ட் நிறுவனத்தை முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக வளர்த்த பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகிய இருவருக்கும் நிறுவனத்தில் தலா 5 சதவீதம் என்ற அளவில் தான் பங்குகள் இருந்தன. முதலீடு செய்ய அவர்களுக்கு அதிகமானோர் தேவைப்பட்டதால் மற்றவர்களின் முதலீட்டை பெற்று நிறுவனத்தை நடத்தினர்.

11 ஆண்டுகளில் இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் முதலிடத்தை பிளிப் கார்ட் பிடித்தது. ஆன்லைனில் விற்காத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான பொருட்களை விற்கும் நிறுவனமாக பிளிப் கார்ட் உயர்ந்துள்ளது.

விழா கால சலுகைகள், விலை குறைப்பு என, சில்லறை வர்த்தகத்தில் உள்ள வர்த்தக நுணுக்கங்களை இங்கும் பயன்படுத்தியதால் பிளிப் கார்ட்டின் வளர்ச்சி அபாரமானது.

இந்திய சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என கடும் முயற்சியில் இறங்கிய அமேசான் நிறுவனத்திற்கு, தனது முன்னாள் ஊழியர்களால் தொடங்கப்பட்ட பிளிப் கார்ட்டே பெரும் போட்டி நிறுவனமானது. இதனால் பிளிப்கார்ட்டை வளைக்கும் நடவடிக்கையில் அமேசான் நேரடியாக இறங்கியது.

பிளிப் கார்ட் நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை வாங்க முன் வந்த அமேசான் நிறுவனம், அதற்காக பல கோடி ரூபாய் பணத்தை தருவதாக பேரம் பேசியது. இந்த நிலையில் தான் மற்றொரு வர்த்தக அரசியல் அமேசானை தாக்கியது.

அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமும், அமேசானுக்கு பெரும் போட்டியாளராக விளங்கும் வால்மார்ட் களத்தில் இறங்கியது. இந்திய சந்தையை அமேசான் பிடித்துக் கொண்டால் உலக அளவில் அதன் வர்த்தகம் பெருகும் என்பதால் இதற்கு தடைபோட முன் வந்தது.

உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தையான இந்தியாவில் அமேசான் கொடிகட்டி பறப்பதை விருப்பாத வால்மார்ட், பிளிப் கார்ட்டை வாங்க, போட்டிக்கு விலை பேசியது.

அமேசான் தருவாக அறிவித்த தொகையை விட கூடுதல் தொகை; கூடுதல் பங்குளை வாங்கவும் வால்மார்ட் முன் வந்தது. சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிளிப் கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்க தயார் என அறிவித்தது வால்மார்ட். பிளிப் கார்ட்டின் மொத்த சொத்து மதிப்பு 145 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டது.

பூஜ்யத்தில் இருந்து தொடங்கி சுமார் 1 லட்சத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் வளர்ந்துள்ள பிளிப் கார்ட்டுக்கு இது பெரிய தொகை. எனவே வால்மார்ட்டுக்கு, பிளிப் கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை விற்கும் ஒப்பந்தம் போடப்பட்டது.

இதில் பிளிப் கார்ட்டில் தனக்கு மொத்தமாக உள்ள 7 சதவீத பங்குகளையும் சச்சின் பன்சால் விற்று விட்டார். பினய் சிறிய பங்கை வைத்துக் கொண்டு மற்றவற்றை விற்று விட்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பினய் மற்றும் சச்சின் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆயிரம் கோடி ரூபாய் தனிப்பட்ட முறையில் கிடைக்கும் என தெரிகிறது.

இருவரின் உழைப்பை நம்பி பிளிப் கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த அவர்களது நண்பர்கள், வர்த்தக பங்குதாரர்களுக்கும் எதிர்பாராத அளவிற்கு கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும், தாங்களும் சம்பாதித்து, மற்றவர்களை சம்பாதிக்க வைத்துள்ளனர். பிளிப் கார்ட் நிறுவனத்தை விற்று விட்ட இவர்கள் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார்கள்? என்பது தான் தற்போதுள்ள கேள்வி.

பிளிப் கார்ட் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பில் அவர்கள் இனிமேலும் பங்கேற்க வாய்புள்ளதா? அல்லது வேறு ஏதேனும் தொழில் ஈடுபடுவார்களா? என்பதை தெரிந்த கொள்ள மேலும் சில காலம் ஆகலாம்.
10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்

Published : 09 May 2018 19:32 IST

சென்னை

 

பிளஸ் 2 தேர்வு - கோப்புப் படம்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளைபுதிய முறையில் பள்ளிகளுக்கான இமெயிலில் நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது. தமிழக அரசுத் தேர்வுத்துறை 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பிரிக்கப்பட்டு, அரசுத் தேர்வுகள் ஆணையரகம் என உருவாக்கப்பட்டது. 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கான தேர்வினை நடத்தித் தேர்வு முடிவினை வெளியிட்டனர்.

அப்போது தேர்வு முடிவுகள் வெளியிடும் போது அதனை செய்தித்தாள்களில் தேர்வர்களின் பதிவு எண்களை பிரசுரம் செய்வர். தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவினை அறிவதற்காகவும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் தேர்வு முடிவினை அறியவும் ஆவலுடன் செய்தித்தாள்களை வாங்கித் தேர்வு பதிவு எண்களைப் பார்த்து அறிந்து கொள்வர். 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அதன்பின்னர் பியுசி படிப்பைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்.

இந்த முறை 1978-ம் ஆண்டில் மாற்றப்பட்டு, 10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு எனப் பிரித்தனர். அது வரை 11 ம் வகுப்பு வரை நடைபெற்ற தேர்வானது, 10-ம் வகுப்பிற்கு(எஸ்.எஸ்.எல்.சி) ஒரு பொதுத் தேர்வும், 12 ம் வகுப்பிற்கு(பிளஸ்-2) ஒரு பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியான இரு தினங்களுக்குள் மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளிகளுக்கு அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பதிவேடு அனுப்பப்பட்டன. மாணவர்கள் மதிப்பெண் பதிவேட்டில் கையெழுத்திட்டு, தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழில் மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலரும் கையெழுத்திட வேண்டும்.

இந்த முறையில் தொடர்ந்து 1998 ம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால் 1999 ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது புதிய முறையாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் அன்றே மாணவர்கள் தங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலோ அல்லது பள்ளியிலோ தங்களின் பாடவாரியான மதிப்பெண்களை அறிந்து கொள்ள முடிந்தன.

அப்போதும் தொடர்ந்து தேர்வு முடிவுகள் செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிட அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் 2002-ம் ஆண்டு செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிடுவதற்கு சிடி அளிக்கப்பட்டு வந்த முறை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் தேர்வு முடிவுகளை வெளியிட விரும்பும் இணையதளத்தினை நடத்தும் நிறுவனங்கள் பணம் செலுத்தித் தேர்வு முடிவுகளைப் பெற்று வெளியிடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த முறையின் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இணையதளங்களின் மூலம் உடனடியாக அறிந்தனர். ஆனால் 2013-ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் இணையதளம் மூலம் தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு வழங்கப்பட்டு வந்த சி.டி.கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10,12ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாகத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 90 நாட்கள் செல்லும் வகையில் அரசு அறிவித்தது. இதன் மூலம் 10,12-ம் வகுப்புத் தேர்வில் ஒரு சில பாடத்தில் தோல்வி அடைந்து, சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண்களும் மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றது.

கடந்த 2017ம் ஆண்டு முதல்முறையாக 10,12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.மூலம் வெளியிடப்பட்டன. மேலும் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர் விபரம், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம், பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம் தரவரிசை (ரேங்க்) அளிக்கும் முறை ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில் இதில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணிக்கு செல்லும் பெண்களை இதைவிடக் கேவலமாக சொல்ல முடியாது: எஸ்.வி.சேகரை விளாசிய நீதிபதி

Published : 10 May 2018 21:06 IST

சென்னை
 


எஸ்.வி.சேகர் - கோப்புப் படம்

படுக்கையைப் பகிர்ந்தால் முன்னேற முடியும் என்று பதிவிடுவது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும் பொருந்துமா? பணிக்கு செல்லும் பெண்கள் குறித்து இதைவிடக் கேவலமாகப் பதிவிட முடியாது என்று கடுமையாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி முன் ஜாமீனை ரத்து செய்துள்ளார்.

எஸ்.வி சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பில், எஸ்.வி.சேகரின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளதுடன், சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவரது தீர்ப்பு முழு விபரம் வருமாறு:

“ஒருவர் கோபமாக இருக்கும்போதோ அல்லது உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும்போது வார்த்தைகளை விடுவது சாதாரணம். அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்பது இயல்பு.

ஆனால், இந்தப் பதிவு என்பது உள்நோக்குடன் தெரிந்தே அடித்ததாக தெரிகிறது. ஒரு ஃபார்வர்ட் மெசெஜ் என்பது அவரே ஏற்றுக்கொண்டு அடித்ததாகத்தான் கருத வேண்டும்.

சில சமயங்களில் ஒரு கருத்தை யார் தெரிவிக்கிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். ஒரு சாதாரண நபர் பதிவிடுவதற்கும், ஒரு ஒரு பிரபலம் கருத்து தெரிவிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருப்பவர் கருத்து தெரிவிக்கும்போது மக்களிடம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி மக்களை நம்ப வைக்கிறது.

அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துகள் என்பது பெண் பத்திரிகையாளர் மீதான நேரடி தாக்குதலாகத்தான் (abusive language) தெரிகிறது. இதுபோன்ற கருத்து இப்படிப்பட்ட அந்தஸ்துள்ள நபரிடமிருந்து வருவது எதிர்பார்க்க முடியாது. சமூகத்தில் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டியவர் தவறான முன்னுதாரணமாக இருந்துவிட்டார்.

இதேபோல பெண்களுக்கு எதிரான சமூக வலைதளக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக தினந்தோறும் பல இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். சட்டம் அனைவருக்கும் சமமானதுதான். மக்கள் நீதியின் மேல் வைத்துக்கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது.

சிறு குழந்தைகள் செய்த தவறை மன்னிக்கலாம், ஆனால் வளர்ந்த முதிர்ச்சி பெற்ற நபர் செய்யும் குற்றங்களை மன்னிக்க முடியாது.

பணியிலிருக்கும் பெண்கள் குறித்து அந்தப் பதிவில் சொன்னதைவிடக் கடுமையாகச் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு அந்தப் பதிவு உள்ளது. சமூக அந்தஸ்து பெற்றவரிடமிருந்து இதுபோன்ற கருத்துகள் வரும்போது, பணிக்குப் போகும் பெண்களை ஒரு தவறான கண்ணோட்டதிலேயே மக்களைப் பார்க்க வைக்கும்.

இதுபோன்ற கருத்துகள் ஏற்கப்படும்போதோ, பின்பற்றப்படும்போதோ பெண்கள் பொதுவாழ்க்கைக்கே வரமுடியாத சூழலை ஏற்படுத்திவிடும். தனது ஃபார்வர்ட் குறித்து வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார், ஆனால் பதிவில் உள்ள கருத்துக்களை மறுக்கவில்லை.

பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகளைச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அப்படித் தெரிவித்தால் பெண்ணுரிமைக்கு எதிரானது. இப்படிப்பட்ட செயல்பாடு என்பது ஒரு நபரை சாதிப்பெயரை சொல்லி கூப்பிடுவதைவிட கொடூர குற்றமாகும்.

படுக்கையைப் பகிர்ந்து கொள்வது மூலம் மட்டும்தான் ஒரு பெண் சமூக வாழ்வில் மேலே வர முடியுமென்றால், இந்தக் கருத்து தற்சமயம் உயர் பதவியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்தக் கருத்து பொருந்துமா?

ஊடகத்துறையிடம் நீண்ட காலத் தொடர்புடையவரே இந்தக் கருத்தை தெரிவித்தது அது உண்மை என்பதுபோல மக்களிடையே எண்ணத்தை உருவாக்கும்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வது என்பது தலைவருக்கான ஒரு குணம். சமூக உயர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் சமூக அமைதியை உருவாக்க வேண்டுமே தவிர வேற்றுமையையும், பதட்ட நிலையையும் உண்டாக்கக் கூடாது.

கருத்தைப் பேசுவதற்கும், எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. எழுத்துப்பூர்வமாக சொல்லும்போது ஆவணமாக மாறிவிடுகிறது. அப்படி எழுதப்பட்ட கருத்திலிருந்து எவரும் பின்வாங்க முடியாது.

இந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளதே தவிர அழிக்கப்படவில்லை. சமூக வலைதளத்தில் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டு அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற மனநிலை உருவாகக்கூடாது. இக்கருத்து தனிநபருக்கு எதிரான கருத்து மட்டும் அல்ல. பெண்ணினத்திற்கு எதிரானது.

அந்தக் கருத்துகளைப் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதை எதிர்த்து போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியான நடைமுறை அல்ல என மக்களிடம் கருத்து நிலவுவது இயற்கையானதே.

இந்தக் காரணங்களால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நபர் மீதான புகாரில் நடவடிக்கை என்ன எடுப்பீர்களோ அதை எடுக்க வேண்டும்.''

இவ்வாறு தங்கள் தீர்ப்பில் நீதிபதி ராமதிலகம் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.
199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்

Published : 10 May 2018 21:15 IST

மும்பை,



ஜியோ போஸ்ட் பெய்ட் - படம் உதவி: ட்விட்டர்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.199க்கு அதிரவைக்கும் பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனால், வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் அதிரடியான சலுகைகளை, மிகக் குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட் சேவையைத் தொடங்குகிறது.

ரூ.199க்கு அன்லிமிடட் கால்ஸ், மாதத்துக்கு 25 ஜிபி நெட், வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு நிமிடத்துக்கு 50 காசுகள் என பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. இத்திட்டம் வரும் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் சிம்கார்டைப் போட்டவுடன் அனைத்து வசதிகளும், அதாவது வாய்ஸ் கால், இன்டர்நெட், எஸ்எம்எஸ், சர்வதேச அழைப்புகள் ஆகியவை அனைத்தும் முன்கூட்டியே ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.

இதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்காக ரோமிங் வசதியையும், டாரிப்களையும் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த சேவையையும் பெற்றுக்கொண்டு, ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ள முடியும்.

ஜியோ போஸ்ட்பெய்ட் சேவையின் முக்கிய அம்சமாக அந்த நிறுவனம் குறிப்பிடுகையில், அதிகபட்சமான பில் கட்ட வேண்டியது இருக்காது, வாடிக்கையாளர்கள் அவ்வப்போது தங்களின் பில் கட்டணத்தை தாங்களாகவே சோதனை செய்து பார்க்க முடியும்.

இதன்படி மாதத்துக்கு ரூ.199-க்கு போஸ்ட்பெய்ட் சேவை பெறுவோருக்கு, மாதம்முழுவதும் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் இலவசமாக அழைப்புச் செய்யலாம். வெளிநாடுகளில் பேசும் போது நிமிடத்துக்கு 50 காசு கட்டணம். சர்வதேச அழைப்புக்கு எந்தவிதமான காப்புக் கட்டணம் செலுத்த தேவையில்லை, ரோமிங் இலவசம், உள்நாட்டில் அன்லிமிடட் எஸ்எம்எஸ் சேவை. மாதத்துக்கு 25 ஜிமி இன்டர்நெட் இலவசம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரூ.575, ரூ.2875, ரூ.5,751 ஆகிய கட்டணங்களில் போஸ்ட்பெய்ட் இணைப்புகள் ஜியோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் சேவையைத் தொடங்குகிறது.

இதே சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் ரூ.399க்கும், வோடபோன் நிறுவனம் ரூ.399க்கும், ஐடியா நிறுவனம் ரூ.389க்கும் அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...