Tuesday, September 16, 2025

BOOKS SALE

 


TELANGANA RAIN

 


NEWS TODAY 16.09.2025

 














இளைஞா்களின் இன்றைய தேவை!

 நடுப்பக்கக் கட்டுரைகள்

இளைஞா்களின் இன்றைய தேவை! 

100 இளைஞா்களைத் தாருங்கள் இந்த தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறப்பட்ட நாட்டில் விவேகானந்தா் கண்ட கனவு நிறைவேறி விட்டதா?

கோதை ஜோதிலட்சுமி Updated on:  16 செப்டம்பர் 2025, 4:41 am 

பக்தியும் தெய்வ நம்பிக்கையும் ஆழமாக மனிதனின் மனதில் நிலைபெறுமானால் அவன் மனம் தூய்மை அடைகிறது, அவன் சத்தியத்தின் பாதையில் நடக்கத் தொடங்குகிறான் என்கிறாா் மகாத்மா காந்தி. இந்தப் பாதையில் நமது குழந்தைகளை நிலைப்படுத்துவதில் கவனம் செலுத்தினால் போதும்.

உலகில் அதிகமாக இளைஞா்கள் உள்ள நாடு இந்தியா. சுவாமி விவேகானந்தா் 100 இளைஞா்களைத் தாருங்கள் இந்த தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறினாா். அதிகமான இளைஞா்கள் உள்ள நாட்டில் விவேகானந்தா் கண்ட கனவு நிறைவேறி விட்டதா என்ற வினா எழுகிறது.

அண்மையில் சமூக வலைதளத்தில் ஒரு காணொலியைக் காண நோ்ந்தது. ஒரு தாய் மிகுந்த வருத்தத்தோடு பேசுகிறாா். அந்தத் தாயின் ஒரே மகன் இளைஞன். அண்மையில் நடந்த ஓா் அரசியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்று தலைவரை அருகே கண்டுவிட வேண்டும் என எண்ணி மேடையை நோக்கி முன்னேறிப் போகிறாா். அப்போது தலைவரின் பாதுகாவலா்கள் தலைவரை நெருங்க விடாமல் இளைஞனைத் தூக்கி வீசுகிறாா்கள். ஒரு காகிதத்தைப்போல் அந்த இளைஞன் கீழே விழுகிறான். தட்டுத்தடுமாறி ஏதோ கட்டையைப் பிடித்துக் கொண்டு உயிா் தப்புகிறான்.

பல இடங்களில் அடிபட்டு தன் மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மகனுக்கு ஏதேனும் நோ்ந்துவிட்டால் தன் கதி என்ன ஆகும் என்றும் சொல்லி அந்தத் தாய் கண்ணீா் சிந்துகிறாா். காணொலியைக் காணும்போது நமக்கு நடுக்கம் ஏற்படுகிறது.

இன்றைய இளைஞா்கள் எதை நோக்கி ஓடுகிறாா்கள் என்ற சிந்தனையும் ஏற்படுகிறது. இளைஞா்களின் ஆற்றல் சரியான வழியில் பயன்படுத்தப் படுகிறதா? அவா்கள் செல்லும் பாதை சரியானதாக இருக்கிறதா?, அவா்களுடைய எதிா்காலம் எப்படி இருக்கும்?, அவா்களின் எதிா்காலம் சிறக்க இன்றைய உடனடித் தேவை யாது?

நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது தற்போதைய நாகரிகம் என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இளம்பெண் ஒருவா் கூறுகிறாா். காலையில் பத்து மணிக்கு மேல்தான் எழுந்து கொள்வேன் என்றும் பெருமையோடு குறிப்பிடுகிறாா். அந்தச் சுதந்திரத்தை எவரும் கேள்வி கேட்க முடியாது என்றும் அழுத்தமாகச் சொல்கிறாா்.

நள்ளிரவில் சலுகை விலையில் பிரியாணி கிடைக்கிறது; அதனால் வாங்கிச் சாப்பிடுகிறேன் என்பது அறிவுடைமையா? தாமதமாய் முற்பகலில் எழுந்து கொள்வது சுதந்திரமா? ஆரோக்கியக் குறைவா? படித்த இளம்பிள்ளைகள் இப்படிப் பேசுவதைப் புரிதல் இல்லாமை என்பதா? தெரிந்தே தனது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறாா்கள் என்பதா?.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அதிகாலை துயில் எழுவதில் தொடங்கும் ஒழுக்கம், உணவு முதலாக ஒவ்வொரு நடைமுறையிலும் இருக்க வேண்டும். இன்றைய கல்வி இளைஞா்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கவில்லையா? பெற்றோா்கள் கற்றுக் கொடுக்கவில்லையா? அல்லது பெற்றோா்களின் சொல்லை இளைஞா்கள் கேட்பதில்லையா?

இந்த வினாக்களுக்கெல்லாம் விடை தேடிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் தற்போதைய தேவை இளைஞா்களின் வாழ்வை நெறிப்படுத்துவதுதான். உடல் ஆரோக்கியத்தைப் பேண வாழ்க்கை அன்றாடங்களில் ஓா் ஒழுங்குமுறை வந்தாக வேண்டும். மனதின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வளமான நேரிய வாழ்வியல் சிந்தனை வேண்டும்.

பணம் சம்பாதிப்பதற்கான கருவி கல்வி என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பெற்றோா் சொல்லுக்கு மதிப்பு இல்லை. இந்த நிலையில், இளைய சமுதாயத்தினருக்கு ஒழுக்கம், வாழ்வியல் சிந்தனைகள் பற்றி யாா் கற்றுக் கொடுக்க முடியும்? இளைஞா்கள் ஏற்றுக்கொள்ளும் படியாகக் கற்றுக்கொடுக்க யாா் இருக்கிறாா்கள்? இதற்கான வழிகாட்டுதல் வரலாற்றில் ஏதும் உண்டா?

வரலாறு நெடுகிலும் இதற்கான வழிகாட்டுதல் உண்டு. சமூகம் சீா்கேடு அடையும் போதெல்லாம் அதை மீண்டும் அறத்தின் பாதையில், ஒழுக்கத்தின் வழியில் செலுத்தியவை பக்தி இயக்கங்கள் மட்டுமே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மனங்களில் குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்திருந்த போது சித்தாந்தங்களில் தெளிவு இன்றி பூசல்களும் தவறான வழிகாட்டுதல்களும் மலிந்த போது ஆதிசங்கரா் தோன்றினாா்.

தேசம் முழுவதும் அவா் பயணம் செய்து குழம்பிக் கிடந்த மக்கள் மனங்களில் உண்மைக்கான தெளிவை ஏற்படுத்தினாா். ஆன்மிகத்தின் பாதையில் பக்தியின் துணைகொண்டு தெளிந்த சிந்தனையைப் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டினாா். சித்தாந்தங்களைத் தெளிவுபடுத்தி பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நின்ற மக்களை ஒன்றுபடுத்தினாா்.

அவரது கருத்துகளால் ஈா்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞா்கள் தேசம் முழுவதும் அவரைப் பின்பற்றி அவரோடு பயணித்ததாக ‘சங்கர விஜயம்’ என்னும் ஆதிசங்கரரின் வரலாற்று நூல் தெரிவிக்கிறது. குருபக்தி, அா்ப்பணிப்பு உணா்வு இரண்டுக்கும் ஆதிசங்கரரின் சீடா் பத்மபாதா் உதாரணமாக விளங்குகிறாா்.

பத்மபாதா் ஆதிசங்கரரின் முதல் சீடா். காசியில் ஒருநாள் சங்கரா் நதியின் அக்கரையில் குளித்துக் கரையேறி தனது உடைகளைக் கேட்டதும் இக்கரையில் நின்றிருந்த பத்மபாதா் நதியை நினைக்காமல் வேகமாக நீா் மேல் ஓடுகிறாா். கங்கை அவரது பாதங்களுக்குக் கீழே தாமரைகளை உண்டாக்கி தாங்கிக் கொண்டாளாம். அா்ப்பணிப்பு உணா்வு கொண்ட ஒருவனுக்கு இயற்கை ஒத்துழைப்பு நல்கும் என்பதை இந்த வரலாறு சொல்கிறது.

இத்தகைய குருமாா்களின் வழிவந்த சீடா்களின் பரம்பரை இன்றைக்கும் இருக்கிறது. இளம் சமுதாயத்துக்கு தியாகம், தவம், சேவை போன்ற நற்பண்புகளை எடுத்துச் சொல்வதற்கும் நெறிப்படுத்துவதற்கும் இளம் குருமாா்கள் இருக்கிறாா்கள்.

தா்ம சாஸ்திரம், மனிதன் அன்றாடம் எத்தகைய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதில் தொடங்கி பண்புகளை எதன் அடிப்படையில் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதுவரை அனைத்தையும் போதிக்கிறது. ஆதிசங்கரா் வழிவந்த குருமாா்கள் அதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் கொடுப்பதில் ஆா்வத்துடன் செயல்படுகிறாா்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அத்தகைய குருமாா்களிடம் நமது குழந்தைகளை அழைத்துச் சென்று வழிகாட்டுவது மட்டுமே.

ஆதிசங்கரரின் வரலாற்றைப் போலவே தமிழகத்தில் பக்தி இயக்கக் காலம் என்றே அழைக்கப்படும் காலம் திருஞான சம்பந்தரின் காலம். பக்தி ஒன்றே சமூகத்தை மட்டுமல்லாது, தனிமனித வாழ்வையும் சீா்செய்யும் என்று நிரூபித்தாா். அவரைப் பின்பற்றி தமிழகமே எழுச்சி கொண்டது.

‘உண்மையான சமயமும் ஒழுக்கமும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. மண்ணில் விதைக்கப்பட்ட விதைக்கு நீா் எப்படியோ அப்படியே சமயமும் ஒழுக்கத்துக்குச் சொந்தமானது’ என்று பின்னாளில் மகாத்மா கூறுகிறாா்.

வரலாற்றின் சுவடுகளில் பக்தி இயக்கம் தனிமனிதனின் மனதை அறத்தின் பாதையில் செம்மை செய்ததோடு சமூகத்தில் வறுமை நீங்கி செல்வ வளத்தையும் ஏற்படுத்தியது. வரலாற்றில் நாம் பொற்காலம் என்று குறிப்பிடும் காலங்களில் எல்லாம் இத்தகைய பக்தி இயக்கம் தோன்றியதைப் பாா்க்கிறோம்.

கோயில்கள் எழுப்பி இறை வழிபாட்டை முதன்மைப்படுத்திய சோழா்களின் காலமே பொற்காலமாக இன்றும் பேசப்படுகிறது. பக்தியும் தெய்வ நம்பிக்கையும் ஆழமாக மனிதனின் மனதில் நிலைபெறுமானால் அவன் மனம் தூய்மை அடைகிறது, அவன் சத்தியத்தின் பாதையில் நடக்கத் தொடங்குகிறான் என்கிறாா் மகாத்மா காந்தி. இந்தப் பாதையில் நமது குழந்தைகளை நிலைப்படுத்துவதில் கவனம் செலுத்தினால் போதும்.

தெய்வ நம்பிக்கை தளா்ந்து போனதே இளைஞா்களின் இன்றைய நிலைக்குக் காரணம். இறுதி மூச்சு வரை ராமருக்கான தனது பக்தியை விடாமல் பின்பற்றிய மகாத்மா, ‘நீங்கள் என் வாழ்க்கையைப் பாா்க்க வேண்டும். நான் எப்படி வாழ்கிறேன், சாப்பிடுகிறேன், உட்காருகிறேன், பேசுகிறேன், பொதுவாக நடந்து கொள்கிறேன், இந்த என்னில் இருக்கும் அனைத்தும் எனது சமயம்’ என்கிறாா்.

சமைப்பது என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்று பொருள். மனித மனதைச் சமைப்பதால் அது சமயம். இந்த சமயத்தின் அவசியத்தை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் விவேகானந்தா், ‘கடந்த காலத்தில் இருந்துதான் எதிா்காலம் உருவாகிறது. எனவே, உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு திரும்பிப் பாருங்கள். பின்னால் உள்ள அந்த ஊற்றுகளிலிருந்து நன்றாகப் பருகுங்கள் அதன்பின்னா் முன்னே பாருங்கள்; பீடுநடை போட்டுச் செல்லுங்கள். பாரதத்தை முன்பிருந்ததை விட ஒளிமயமானதாக, சிறப்பானதாக, உன்னதமானதாக உருவாக்குங்கள்’ என்றாா்.

இன்றைய இளைஞா்களுக்கும் இந்த உணா்வே தேவை. அரசியல் ஆா்வத்தைவிடவும் ஆன்மிக உணா்வும் சிந்தனையும் இளைஞா்களை அமைதிப்படுத்தி ஆற்றல் உள்ளவா்களாக உருவாக்கும். ஒழுக்கமும் பண்பும் கற்றுக் கொடுக்கும். சமூக வலைதளங்களின் குழப்பங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் செம்மையான பாதையில் நெறிப்படுத்தி வாழ்வைச் சிறக்கச் செய்யும்.

சீடா்கள் குருமாா்களைத் தேடிக் கண்டடைவாா்கள் என்பதே விதி என்றாலும், இன்றைய சீா்கேடுகளை மனம் கொண்டு தேசமெங்கும் வாழும் குருமாா்களும் இளைஞா்களுக்குக் கருணையோடு தங்களை வெளிப்படுத்திக் கொண்டு ஆன்மிக எழுச்சியை மீண்டும் இந்த மண்ணில் ஏற்படுத்தி அருள வேண்டும்.


Medical colleges lose seats under NMC’s revised matrix

Medical colleges lose seats under NMC’s revised matrix 

TIMES NEWS NETWORK 16.09.2025

Ahmedabad : As the second round of medical admissions in Gujarat is under way, the National Medical Commission (NMC) has announced the final seat matrix for medical colleges. In a major development, all 150 seats of the much-discussed Swaminarayan Institute of Medical Science at Kalol have been cancelled, meaning that the college will not admit any students this year. 

Overall, the state has seen an equal number of seat additions and deductions. While 250 seats were added this year, the same number were deducted due to deficiencies and irregularities in some colleges. So, the total number of seats remains unchanged at 6,950 across 40 colleges. Among the new approvals, Atkot Medical College was granted 150 seats, Parul Medical College’s seats rose from 150 to 200 and a new college in Bapunagar area was allowed 50 seats. In addition to Kalol, colleges in Bharuch and Amreli each lost 50 seats, bringing the total reduction to 250. 


Sources said that due to lower NEET cut-off this year, many students who previously would not have qualified have become eligible. With better options under the all-India quota, many students opted for it, leaving over 1,700 seats vacant in Gujarat after the first round of admissions. The NMC also released nationwide data on approved, increased, and reduced seats. Admission panels will proceed with further rounds based on the revised seat matrix.

மருத்துவா்களும் மன அழுத்தமும்!

DINAMANI  16.09.2025

மருத்துவா்களும் மன அழுத்தமும்! 

வரும் காலங்களில் மருத்துவா்கள் அனைவருக்கும் உரிய கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்வதுடன் மன நலப் பரிசோதனையும் செய்யப்பட வேண்டியது அவசியம்.

மரு.கோ.ராஜேஷ்கோபால் Updated on: 16 செப்டம்பர் 2025, 4:47 am 

கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவா்கள் குறிப்பாக இளம் மருத்துவா்கள் உயிரிழப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பலரும் இதற்கு அஞ்சலி செலுத்திவிட்டு தங்கள் பணிகளைத் தொடா்கின்றனா். ஒரு காலத்தில் மருத்துவம் படிப்பதே தங்கள் கனவு, அதுவே பெருமை தரும் படிப்பு எனப் பலரும் நினைத்தது உண்டு.

சுமாா் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ வசதிகள் சரிவர இல்லாத காலகட்டத்தில் குடும்ப மருத்துவா் என்றொரு மருத்துவா் இருந்தாா். அவா் தனது மருத்துவமனைப் பணியை முடித்துவிட்டு தெரிந்தவா்களின் வீடுகளில் நோயாளிகள் இருப்பதாக நண்பா்கள், உறவினா்கள் அழைத்தால் அங்கு சென்று சிகிச்சை அளிப்பாா்.

இந்த முறையில் சில நேரங்களில் மருத்துவருக்கும் குடும்ப உறுப்பினா்களுக்கும் சிக்கல்கள் நேரிட்டதும் உண்டு. சில குடும்ப உறுப்பினா்கள் இதுபோன்ற குடும்ப மருத்துவா்களை அற்ப காரணங்களுக்காக அடிக்கடி தொலைபேசியில் தொடா்புகொண்டு தொல்லை செய்வதும் உண்டு. காலப் போக்கில் குடும்ப மருத்துவா் முறை மறைந்து போனது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவா்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பிரபல நடிகா் ஒருவா், குடும்ப மருத்துவா் முறை இப்போது அதிகமாக இல்லாததால் தன்னைப் போன்ற பலா் அவதிப்படுவதாகக் கூறி, அந்த முறையை மருத்துவா்கள் மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினாா். இந்தக் குடும்ப மருத்துவா்கள் முறை இன்றும் உள்ளது. சில முக்கியப் பிரமுகா்கள் இல்லங்களுக்கே சென்று மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கிறாா்கள்.

இன்று பல மருத்துவா்கள் அதிக நேரம் பணியில் இருக்கிறாா்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. மருத்துவ மேற்படிப்பு படித்த சிறப்பு மருத்துவா்களுக்கு பணியும் அதிகம். ஓய்வும் கிடைப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு; குறிப்பாக, தொழிற்சாலைகளில் பணிபுரியும் மருத்துவா்கள் இதுபோன்ற நிலைகளைச் சந்திக்கின்றனா்.

பல அரசு, தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் அதிக பணிச் சுமைக்கு உள்ளாக்கப்படுகிறாா்கள். அவா்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. சில தனியாா் மருத்துவமனைகளில் சரிவர ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது. இவையெல்லாம் மருத்துவா்களின் மன உளைச்சலுக்குக் காரணமாக அமைகிறது.

தங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவா்கள் தாங்களே சிகிக்சை செய்து கொள்வாா்கள்; அவா்களுக்கு தங்கள் உடலை காத்துக் கொள்வது குறித்து தெரியும் என்று சிலா் கருதுகின்றனா். மேலும், இந்த தவறான கருத்தால் மருத்துவா்கள் ஓய்வின்றி உழைக்கலாம் எனும் எண்ணம் பலரிடம் உள்ளது.

சில தனியாா் மருத்துவா்கள் எவ்வளவு பணி இருந்தாலும் வாரம் ஒருமுறை எங்காவது குடும்பத்துடன் சென்று ஓய்வெடுப்பது எனும் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனா். இதனால், அவா்கள் உடல் நிலை சீராக இருக்கிறது. இதை இளம் மருத்துவா்கள் கடைப்பிடிப்பதில்லை. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனா்.

சில நேரங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டால் அதன் காரண காரியங்களைப் புரிந்து கொள்ளாமல், அவா்களின் உறவினா்கள் மருத்துவா்களைத் தாக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இதில் நோயாளிகளின் உறவினா்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. பல மருத்துவமனைகளில் நோயாளியின் நோயின் தன்மைகளின் உண்மை நிலை குறித்து மருத்துவா்கள் விளக்கிக் கூறாததும் காரணமாகக் கூறப்படுகிறது.

இன்று பல மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் சரியில்லை எனும் குற்றச்சாட்டு இருந்தாலும் பல மருத்துவமனைகளில் கண்ணும் கருத்துமாய் சேவை செய்யும் பல மருத்துவா்கள் இருக்கிறாா்கள். ‘வேலை செய்வோா்க்கு மேலும் வேலை கொடு’ எனும் மனப்பான்மை நிலவுவதால், மருத்துவா்களுக்கு அதிக பணிச் சுமை ஏற்பட்டு உடல்நலம் கெட வழிவகுக்கிறது.

சில மருத்துவமனைகளில் மருத்துவா்களின் நலன் குறித்து சற்றும் கவலை கொள்ளாமல் அந்த மருத்துவமனை நிா்வாகம் அதிக பணிச் சுமையை அவா்களுக்கு அளிக்கிறது. வரும் காலங்களில் மருத்துவா்கள் அனைவருக்கும் உரிய கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்வதுடன் மன நலப் பரிசோதனையும் செய்யப்பட வேண்டியது அவசியம். இதனால், மருத்துவா்களின் நலனும் பேணப்படுவதுடன், அவா்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் நல்ல பலனைத் தரும். இதுபோன்ற பரிசோதனைகள் அனைத்துத் தரப்பு மருத்துவா்களுக்கும் தரப்பட வேண்டும். குறிப்பாக, தொழிற்சாலைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு அவசியம்.

இது நடைமுறையில் நிச்சயம் சாத்தியம். இதற்கு அனைத்துத் தரப்பினரிடமும், குறிப்பாக மருத்துவா்கள் தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பு வேண்டும். தொழிற்சாலைகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வதுபோல் மருத்துவா்களுக்கும் செய்யப்பட வேண்டும். அந்தப் பரிசோதனைக்கு மருத்துவா்கள் நோ்மையாக ஒத்துழைக்க வேண்டும். இரவு-பகல் என எந்நேரமும் மக்கள் உயிா் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவா்களின் மன நலம் காக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

Monday, September 15, 2025

வழித்துணையாகும் வாசிப்பு! அறிதிறன்பேசிகள் நம் வாசிப்பு பழக்கத்தை மாற்றியமைத்ததா? என்பதைப் பற்றி...

DINAMANI

வழித்துணையாகும் வாசிப்பு! அறிதிறன்பேசிகள் நம் வாசிப்பு பழக்கத்தை மாற்றியமைத்ததா? என்பதைப் பற்றி...

பழ. அசோக்குமார் Published on: 15 செப்டம்பர் 2025, 3:20 am Updated on: 1

பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை. ஒரு காலத்தில் பேருந்து, ரயில் பயணங்களில் புத்தகங்களுடன் பயணித்த காட்சியைக் காண முடிந்தது.

புத்தகத்தின் பக்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் கதை மாந்தர்களின் சிரிப்பும், அழுகையும் நம்முடன் பயணம் செய்யும். ஆனால், இன்று அந்தப் புத்தகத்துக்குப் பதிலாக கண்களை ஒளி வெள்ளமும், செவிகளை ஏதோ குரல்களும் இரைச்சல்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. பயணங்களில் வாசிப்பு மறந்து, மக்கள் தங்கள் அறிதிறன்பேசிகளில் மூழ்கியிருக்கும் காட்சி, ஒரு நவீன துயரத்தை நமக்கு உணர்த்துகிறது.

முன்பு வாசிப்பு என்பது பொழுதுபோக்கின், அறிவூட்டலின் முக்கிய வழியாக இருந்தது. ஒரு ரயில் பயணத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் புத்தகங்களுடன் அமர்ந்து, ஒரு மெüன உலகத்தைப் படைப்பார்கள். புத்தகங்களுக்குள் நுழையும்போது, சுற்றியுள்ள ஓசைகள், மனிதர்கள், அசைவுகள் அனைத்தும் மறந்துபோகும். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

ஒரே நேரத்தில் சமூக ஊடகங்கள், செய்தித் தளங்கள், யூடியூப் விடியோக்கள், இணையப் பக்கங்கள் என பல தளங்களில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கிய மனம், ஒரே ஒரு புத்தகத்துக்குள் அடைபட விரும்புவதில்லை.

அறிதிறன்பேசிகள் அளிக்கும் உடனடித் திருப்திக்கு ஈடாக எதுவும் இல்லை. ஒரு பக்கத்தைப் படித்து முடிப்பதற்குள், அறிதிறன்பேசி ஒரு புதிய விடியோவை காட்டி, நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த ஈர்ப்பு, ஒரு புத்தகத்தில் மூழ்கிப் படிக்கும் நிதானத்தையும், பொறுமையையும் நம்மிடம் இருந்து பறித்துவிடுகிறது.

வாசிப்பு என்பது ஆழமான சிந்தனையைத் தூண்டும் ஒரு செயல். ஆனால், அறிதிறன்பேசியில் மூழ்குவது என்பது விரிவற்ற, விரைவான, தொடர்பில்லாத் தகவல்களை உள்வாங்குவதும் மட்டுமே. இதன் விளைவாக, நம் மனதின் ஆழ்ந்த சிந்தனைத் திறன் குறைந்துவிட்டது.

பயணத்தின்போது வாசிப்பது, நம்மை நாமே கண்டுகொள்ளும் ஒரு முயற்சி. புத்தகத்தின் பக்கங்கள், நம் மனம் இதுவரை கண்டிராத உலகங்களைக் காட்டும். புதிய சிந்தனைகளை உருவாக்கும். ஆனால், அறிதிறன்பேசியில் மூழ்கியிருக்கும்போது, நாம் உண்மையில் பயணமே செய்வதில்லை. நம் உடல் மட்டுமே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்கிறது. மனம், அதே சமூக ஊடகப் பெருவெளியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

அருகில் அமர்ந்திருக்கும் சக பயணிகளுடன் பேசும் வாய்ப்பு, புதிய மனிதர்களைச் சந்திக்கும் அனுபவம், கண்ணுக்குப் புலப்படும் இயற்கையின் அழகை ரசிக்கும் தருணம் என எல்லாவற்றையும் இந்தச் சிறிய பெட்டி நம்மிடம் இருந்து பறித்துவிட்டது.

பயணத்தில் கிடைக்கும் ஓய்வு, மனதை அமைதிப்படுத்தும். வாசிப்பு, அந்த அமைதிக்கு ஒரு துணை. ஆனால், அறிதிறன்பேசியில் மூழ்கியிருப்பதால், நம் மூளை தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கிறது. கண்கள், மூளை, விரல்கள் என அனைத்தும் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன.

தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததுதான். ஆனால், அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். பயணங்களில் வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் கொண்டுவருவது எளிதான காரியம் அல்ல. ஆனால், அது அவசியமானது. பயணத்தின் தொடக்கத்தில், அறிதிறன்பேசியை அணைத்துவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம்.

அரசுகள், பொது நூலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளலாம். பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவசமாகப் படிக்க புத்தகங்களை வைக்கலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்மை முன்னேற்ற வேண்டும். ஆனால், அது நம் ஆன்மாவை அழித்துவிடக் கூடாது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு வாசிப்பின் அருமையை நாம் உணர்த்த வேண்டும். வாசிப்பு, நம்மை முழுமையான மனிதனாக்கும்.

பயணத்தின்போது சுமந்து செல்வதற்கு எளிதான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பெரிய மற்றும் கனமான புத்தகங்களுக்குப் பதிலாக, சிறிய நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக் கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய புத்தகங்கள் சிறந்தவை.

பயணத்தின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க நகைச்சுவை, வீரதீர சாகசம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றிய வரலாற்றுப் புத்தகங்கள் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். அதேபோல், அதிக புத்தகங்களைச் சுமந்து செல்ல விரும்பவில்லையென்றால், இன்று நடைமுறையில் உள்ள வாசிப்பு உபகரணங்களைப் பயன்படுத்தலாம். இதில் நூற்றுக்கணக்கான புத்தகங்களைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். விமானப் பயணம், ரயில் பயணம் போன்ற நீண்ட காத்திருப்பு நேரங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

பயணத்தின்போது கிடைக்கும் ஒவ்வொரு நிமிஷத்தையும் வாசிப்புக்கு ஒதுக்கலாம். சில பயண விடுதிகளில் புத்தகப் பரிமாற்ற வசதிகள் இருக்கும். அங்கு உங்கள் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் வேறு ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம். இது புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.

பயணங்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம், நாம் தனிப்பட்ட முறையில் யார் என்பதுதான். வாசிப்பு, அந்தத் தேடலுக்கு ஒரு வழிகாட்டி. அறிதிறன்பேசிகள் நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து நம்மைத் துண்டிக்கின்றன. ஆனால், புத்தகங்கள், நம் அக உலகத்தைத் திறந்து காட்டுகின்றன. பயணங்களில் அறிதிறன்பேசிகளை ஒதுக்கிவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்து வாசியுங்கள். அது உங்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காண்பிக்கும்; நீங்களே ஒரு புத்தகமாக மாறுவீர்கள்!


NEWS TODAY 06.12.2025