Tuesday, September 16, 2025

மருத்துவா்களும் மன அழுத்தமும்!

DINAMANI  16.09.2025

மருத்துவா்களும் மன அழுத்தமும்! 

வரும் காலங்களில் மருத்துவா்கள் அனைவருக்கும் உரிய கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்வதுடன் மன நலப் பரிசோதனையும் செய்யப்பட வேண்டியது அவசியம்.

மரு.கோ.ராஜேஷ்கோபால் Updated on: 16 செப்டம்பர் 2025, 4:47 am 

கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவா்கள் குறிப்பாக இளம் மருத்துவா்கள் உயிரிழப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பலரும் இதற்கு அஞ்சலி செலுத்திவிட்டு தங்கள் பணிகளைத் தொடா்கின்றனா். ஒரு காலத்தில் மருத்துவம் படிப்பதே தங்கள் கனவு, அதுவே பெருமை தரும் படிப்பு எனப் பலரும் நினைத்தது உண்டு.

சுமாா் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ வசதிகள் சரிவர இல்லாத காலகட்டத்தில் குடும்ப மருத்துவா் என்றொரு மருத்துவா் இருந்தாா். அவா் தனது மருத்துவமனைப் பணியை முடித்துவிட்டு தெரிந்தவா்களின் வீடுகளில் நோயாளிகள் இருப்பதாக நண்பா்கள், உறவினா்கள் அழைத்தால் அங்கு சென்று சிகிச்சை அளிப்பாா்.

இந்த முறையில் சில நேரங்களில் மருத்துவருக்கும் குடும்ப உறுப்பினா்களுக்கும் சிக்கல்கள் நேரிட்டதும் உண்டு. சில குடும்ப உறுப்பினா்கள் இதுபோன்ற குடும்ப மருத்துவா்களை அற்ப காரணங்களுக்காக அடிக்கடி தொலைபேசியில் தொடா்புகொண்டு தொல்லை செய்வதும் உண்டு. காலப் போக்கில் குடும்ப மருத்துவா் முறை மறைந்து போனது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவா்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பிரபல நடிகா் ஒருவா், குடும்ப மருத்துவா் முறை இப்போது அதிகமாக இல்லாததால் தன்னைப் போன்ற பலா் அவதிப்படுவதாகக் கூறி, அந்த முறையை மருத்துவா்கள் மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினாா். இந்தக் குடும்ப மருத்துவா்கள் முறை இன்றும் உள்ளது. சில முக்கியப் பிரமுகா்கள் இல்லங்களுக்கே சென்று மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கிறாா்கள்.

இன்று பல மருத்துவா்கள் அதிக நேரம் பணியில் இருக்கிறாா்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. மருத்துவ மேற்படிப்பு படித்த சிறப்பு மருத்துவா்களுக்கு பணியும் அதிகம். ஓய்வும் கிடைப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு; குறிப்பாக, தொழிற்சாலைகளில் பணிபுரியும் மருத்துவா்கள் இதுபோன்ற நிலைகளைச் சந்திக்கின்றனா்.

பல அரசு, தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் அதிக பணிச் சுமைக்கு உள்ளாக்கப்படுகிறாா்கள். அவா்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. சில தனியாா் மருத்துவமனைகளில் சரிவர ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது. இவையெல்லாம் மருத்துவா்களின் மன உளைச்சலுக்குக் காரணமாக அமைகிறது.

தங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவா்கள் தாங்களே சிகிக்சை செய்து கொள்வாா்கள்; அவா்களுக்கு தங்கள் உடலை காத்துக் கொள்வது குறித்து தெரியும் என்று சிலா் கருதுகின்றனா். மேலும், இந்த தவறான கருத்தால் மருத்துவா்கள் ஓய்வின்றி உழைக்கலாம் எனும் எண்ணம் பலரிடம் உள்ளது.

சில தனியாா் மருத்துவா்கள் எவ்வளவு பணி இருந்தாலும் வாரம் ஒருமுறை எங்காவது குடும்பத்துடன் சென்று ஓய்வெடுப்பது எனும் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனா். இதனால், அவா்கள் உடல் நிலை சீராக இருக்கிறது. இதை இளம் மருத்துவா்கள் கடைப்பிடிப்பதில்லை. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனா்.

சில நேரங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டால் அதன் காரண காரியங்களைப் புரிந்து கொள்ளாமல், அவா்களின் உறவினா்கள் மருத்துவா்களைத் தாக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இதில் நோயாளிகளின் உறவினா்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. பல மருத்துவமனைகளில் நோயாளியின் நோயின் தன்மைகளின் உண்மை நிலை குறித்து மருத்துவா்கள் விளக்கிக் கூறாததும் காரணமாகக் கூறப்படுகிறது.

இன்று பல மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் சரியில்லை எனும் குற்றச்சாட்டு இருந்தாலும் பல மருத்துவமனைகளில் கண்ணும் கருத்துமாய் சேவை செய்யும் பல மருத்துவா்கள் இருக்கிறாா்கள். ‘வேலை செய்வோா்க்கு மேலும் வேலை கொடு’ எனும் மனப்பான்மை நிலவுவதால், மருத்துவா்களுக்கு அதிக பணிச் சுமை ஏற்பட்டு உடல்நலம் கெட வழிவகுக்கிறது.

சில மருத்துவமனைகளில் மருத்துவா்களின் நலன் குறித்து சற்றும் கவலை கொள்ளாமல் அந்த மருத்துவமனை நிா்வாகம் அதிக பணிச் சுமையை அவா்களுக்கு அளிக்கிறது. வரும் காலங்களில் மருத்துவா்கள் அனைவருக்கும் உரிய கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்வதுடன் மன நலப் பரிசோதனையும் செய்யப்பட வேண்டியது அவசியம். இதனால், மருத்துவா்களின் நலனும் பேணப்படுவதுடன், அவா்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் நல்ல பலனைத் தரும். இதுபோன்ற பரிசோதனைகள் அனைத்துத் தரப்பு மருத்துவா்களுக்கும் தரப்பட வேண்டும். குறிப்பாக, தொழிற்சாலைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு அவசியம்.

இது நடைமுறையில் நிச்சயம் சாத்தியம். இதற்கு அனைத்துத் தரப்பினரிடமும், குறிப்பாக மருத்துவா்கள் தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பு வேண்டும். தொழிற்சாலைகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வதுபோல் மருத்துவா்களுக்கும் செய்யப்பட வேண்டும். அந்தப் பரிசோதனைக்கு மருத்துவா்கள் நோ்மையாக ஒத்துழைக்க வேண்டும். இரவு-பகல் என எந்நேரமும் மக்கள் உயிா் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவா்களின் மன நலம் காக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...