Wednesday, August 26, 2015

பிளிப்கார்ட், இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது, நண்பர்களுடன் சாட்டிங் மூலம் கலந்துரையாடி பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது

மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட்,  இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது, நண்பர்களுடன் சாட்டிங் மூலம் கலந்துரையாடி பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பிளிப்கார்ட் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி மூலம், வாங்க இருக்கும் பொருட்கள் தொடர்பான ஆலோசனையையும் பெறலாம்.

ஸ்மார்ட்போன் மூலம் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வரும் நிலையில்,  முன்னணி மின்வணிக நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது செயலி வடிவில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் தனது செயலியில், பிங் எனும் பெயரில் புதிய சாட்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேசிஜிங் சேவை போன்ற இந்த வசதி மூலம், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் செயலியில் ஷாப்பிங் செய்யும்போது, நண்பர்களை தொடர்பு கொண்டு சாட் செய்யலாம்.
பிளிப்கார்ட் செயலியின் ஓரத்தில் இந்த பிங் சாட் ஐகான் வசதியை காணலாம். அதை இயக்கினால் போன் தொடர்பில் உள்ள நண்பர்களுடன் சாட் செய்ய முடியும். வாங்க நினைக்கும் பொருட்களின் புகைப்படம் அல்லது பட்டியலை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். ஷாப்பிங் பக்கத்தையும் அப்படியே அனுப்பு வைத்து ஆலோசனை கேட்கலாம். இருவரும் இணைந்தும் கூட ஷாப்பிங் செய்யலாம். இமோஜிகளையும் அனுப்பி வைக்கலாம்.
இணைய அல்லது மொபைல் ஷாப்பிங் வசதியானதாகவும், பிரபலமானதாகவும் இருந்தாலும், இது தனிமையான அனுபவமாகவே அமைகிறது. நேரில் ஷாப்பிங் செய்வது போல நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் குழுவாக சென்று ஷாப்பிங் செய்வது போன்ற அனுபவத்தை மின் வணிகத்தில் பெற முடிவதில்லை.

இதை ஈடு செய்யும் வகையில், செயலி மூலம் நண்பர்களுடன் கலந்துரையாடியபடி ஷாப்பிங் செய்யக்கூடிய வ்சதியை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாட் வசதி, அழைப்பின் பேரில் கிடைக்கிறது. அதாவது யாரிடமிருந்தாவது இந்த சேவையை பயன்படுத்த அழைப்பு வந்த பிறகுதான் இதை பயன்படுத்த முடியும். விரும்பினால் பிளிப்கார்ட் செயலியில் இதற்கான அழைப்பை கோரும் வசதியும் இருக்கிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் இந்த வசதி செயல்படுகிறது. 

- சைபர் சிம்மன்

தடைகளை தாண்டிய இளங்கோவனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு!

பிரதமர் மோடி - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து 
தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்தார்.  அதிமுக தொண்டர்கள் இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
இளங்கோவன் மீது கைது நடவடிக்கை பாயும் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளங்கோவனுக்கு எதிராக போராட வேண்டாமென்று கோரிக்கை விடுத்து, அதிமுகவினரின் போராட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைத்தார். 

இதையடுத்து டெல்லியில் இருந்து இளங்கோவன் இன்று காலை சென்னை திரும்பினார். வரம்பு மீறி பேசியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து குறித்து விமான நிலையத்தில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சிறுவர்களுக்கு எல்லாம் நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்றார். பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்கு  அவர் வருகை தந்தார். 

இளங்கோவன்  சத்தியமூர்த்தி பவன் வருவதையடுத்து காலை முதலே அங்கு பரபரப்பு நிலவியது. காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர். சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த இளங்கோவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண் தொண்டர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். 

Tuesday, August 25, 2015

பிஞ்சுகள் மீது வன்முறை By எஸ். ஸ்ரீதுரை



கேட்கச் சகிக்காத ஓசையும், பார்க்கச் சகிக்காத காட்சியும் எது என்று யாராவது கேட்டால் இப்படி பதில் சொல்லலாம் - குழந்தையின் பிஞ்சு மேனியில் விழுகின்ற அடிச் சப்தமும், அதைத் தொடர்ந்து அந்தக் குழந்தை மலங்க மலங்க விழித்து அழத் தொடங்கும் காட்சியும் என்று.
மக்களில் பலருடைய கோபதாபங்களுக்கும் வடிகால்களாக இருப்பவை குழந்தைகள்தான் என்றால், அது மிகைக் கூற்றாகாது.
சாப்பாடு சரியில்லாதது, எதிர்பாராத நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது, பிடிக்க வேண்டிய பேருந்தையோ, ரயில் வண்டியையோ தவற விடுவது, பிடித்த தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க முடியாமல் போவது என்று காரணம் எதுவானாலும் சரி, திட்டுகளையும், அடிகளையும் வாங்குவது அவரவர் வீட்டுக் குழந்தைகள்தான் என்றாகி விட்டது.
ஒரு தனியார் மருத்துவமனையில் கண்ட காட்சி இது. குறும்புத்தனத்துடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு மூன்று வயதுக் குழந்தை மருத்துவர் அறைக்கு வெளியே விடப்பட்டிருந்த காலணிக்குள் தனது கால்களை ஆர்வத்துடன் நுழைத்துப் பார்த்தது.
அடுத்த நொடி, குழந்தையின் முதுகில் அதன் தந்தை ஓர் அறை விட, வலி தாங்காமல் அந்தக் குழந்தை அழுது துடிக்க, சுற்றி இருந்த அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அடுத்தவர் காலணியை அணிந்து கொள்வது சரியில்லை என்று சொல்லிக் கொடுக்கக்கூடப் பொறுமையில்லாத தகப்பனின் ஆத்திரம் அந்தக் குழந்தையின் முதுகைப் பழுக்க வைத்து விட்டது.
மருத்துவமனைதான் என்றில்லை, பேருந்து, ரயில் பயணம், திருக்கோயில்களின் கூட்ட நெரிசல், ரேஷன் கடை அலைக்கழிப்புகள், உறவு வீட்டு நிகழ்வுகள் போன்ற பல சந்தர்ப்பங்களிலும் பெற்றோர்களின் மனக் குமுறல்களுக்கான வடிகால்களாக அமைவது குழந்தைகள்தான்.
பெற்றோர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப படிக்க வேண்டும், நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும், விளையாடாமல் இருக்க வேண்டும், சொல்லும் வேலைகளைச் செய்ய வேண்டும், இவற்றைச் செய்யத் தவறினால் அடி உதைகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இன்றும் பல குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றன.
டெஸ்டுல தொண்ணூறு மார்க்குக்கு குறைந்தால் பயலே பின்னி எடுத்துடுவேன் என்று மீசை முறுக்கும் தகப்பன்களையும், என் பெண்ணை இன்னும் கொஞ்ச நேரம் டியூஷன்ல உக்கார வெச்சுக் கையை ஒடிங்க டீச்சர் என்று கான்வென்ட் ஆசிரியையிடம் கோரிக்கை வைக்கும் தாய்மார்களையும் தெருவுக்குத் தெரு பார்க்கத்தான் செய்கிறோம்.
இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காகவே சில காலம் கடந்த சொலவடைகள் தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொண்டு நடமாடுகின்றன.
"அடியாத மாடு படியாது, அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்பனவற்றைக் கூறியே குழந்தைகளின் மீதான பெற்றோரின் வன்முறைக்கு இங்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது.
மதிப்பெண் என்ற ஒற்றை மந்திரச் சொல்லை வெற்றி கொள்வதற்காக நமது கல்விச் சாலைகளில் வதைபடும் சிறுவர்களின் நிலை சொல்லி முடியாதது.
மாணவர்களை உடல்ரீதியாகத் தண்டிக்கக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் பல இருந்தாலும், அவர்கள் தத்தமது ஆசிரியப் பெருமக்களால் தண்டிக்கப்படுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன.
கல்விக் கட்டணத்தைச் செலுத்த இயலாத பெற்றோர்களுடைய இயலாமைக்கு அவர்களின் குழந்தைகளை உடல், மனரீதியாகத் தண்டிக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் இன்று வரை எந்தச் சட்ட, திட்டங்களுக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை.
அதிகச் செல்லம் கொடுப்பதால் பிடிவாத குணம், அடங்க மறுக்கும் தன்மை கொண்ட குழந்தைகள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களைச் சமாளிப்பது என்பது பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு பெரும் பிரச்னைதான்.
அதுபோன்ற குழந்தைகளைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்தக் குழந்தைகளையும் அடித்தும், அடக்கியும்தான் வளர்க்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.
"செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' என்பது திருவள்ளுவரின் அறிவுரையாகும். பெற்றவர்களாயினும் சரி, ஆசிரியர்கள் உள்பட மற்றவர்களாயினும் சரி தத்தமது கோபதாபங்களைத் தங்களைவிட வலியவர்களிடம் காட்ட முடியாதபோது, தங்களை ஒருபோதும் எதிர்க்க முடியாத குழந்தைகளிடம் காட்டுவது எந்தவிதத்தில் சரியாக இருக்க முடியும்.
தங்களை யார் அடித்தாலும் சிறிது நேரத்தில் அதை மறந்துவிட்டு, அடித்தவர்களிடமே மீண்டும் வந்து அவர்கள் காலைக் கட்டிகொண்டு சிரிக்கும் குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற முகங்களை ஒருமுறை நினைத்துப் பார்த்தால், மீண்டும் ஒருமுறை அவர்களை அடிக்கக் கை நீளுமா, மனம்தான் வருமா?
அது மட்டுமன்று, அடி உதைகளுக்குப் பழகிப் போகும் குழந்தைகள் மனதில் நாளடைவில் பயம் விட்டுப் போகும். அடிதானே, வாங்கி விட்டுப் போவோம் என்ற மனோநிலைக்கு அவை வந்துவிடும் சாத்தியம் உண்டு. அவர்களே பிற்காலத்தில் வன்முறையாளர்களாய் மாறுகின்ற அபாயத்துக்கும் சாத்தியம் இருக்கிறது.
நமது சமுதாயத்தில் ஏற்கெனவே வன்முறையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை போதாதா, நாம் வேறு புதிய புதிய வன்முறையாளர்களை உற்பத்தி செய்வானேன்?.
எந்த நியாயமான காரணமானாலும் சரி, குழந்தைகளின் மேல் பெற்றோர்கள் வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம். எந்தப் பிரச்னைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது.
அதிலும், குழந்தைகளின் மீதான வன்முறை என்பது ஒரு தீர்வு அன்று, அதுவே ஒரு சமுதாயப் பிரச்னையாகும்.

Saturday, August 22, 2015

சினிமா எடுத்துப் பார் 22- எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல்!



ஏவி.எம் எடுக்கத் திட்டமிட்ட அந்த பிரம்மாண்டமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நடித்த பிரபல கதாநாயகர் என்றும் புரட்சி தலைவராக திகழும் எம்.ஜி.ஆர் அவர்கள். திரை உலகம் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் புகழோங்கி முதலமைச் சராக அரசாண்டவர். திரைப்படங்களில் கதையிலும், காட்சியிலும், பாடல்களிலும் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொன் னவர். பிறருக்கு உதவிகளைச் செய்து மனித நேயத்தோடு வாழ்ந்து காட்டியவர்.

இப்படி படங்களில் நடித்ததோடு வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். அதனால் மக்களுக்கு குறிப்பாக பெண் களுக்கு அவர் மீது அன்பும், பாசமும் ஏற்பட்டது. உண்மையாக வாழ்ந்து மக் களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர். அவர் நம்மை விட்டுச் சென்று பல ஆண்டு கள் ஆனாலும், அவர் பெயரைச் சொல் லித்தான் இன்னும் ஓட்டுக் கேட்கிறார் கள். ஏவி.எம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்க ஒப்பந்தமானது எல்லோ ருக்கும் மிக மகிழ்ச்சியைத் தந்தது.

எம்.ஜிஆரின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் திரு லோகசந்தர். ‘அன்பே வா’ திரைக் கதையை எம்.ஜி.ஆரை மனதில் வைத்து திருலோகசந்தர் எழுதியிருந்தார். திரைத் துறைக்குப் பெருமை சேர்த்த பல படங் களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்தின் வசனகர்த்தா. கதையை எம்.ஜி.ஆரிடம் சொல்வதற்காக அவரு டைய ராமாவரம் தோட்டத்துக்கு ஏவி.எம். சரவணன் சார் தலைமையில் இயக்குநர் திருலோகசந்தரோடு புறப்பட்டோம்.

எங்களைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலில் சாப்பிட்டுட்டு வாங்க பேசலாம்’’ என்றார். அது அவரின் விருந் தோம்பல். உணவு உபசரிப்புக்குப் பிறகு, திருலோகசந்தர் திரைக்கதையைக் கூற எம்.ஜி.ஆர் அவர்கள் ஆர்வமாகக் கேட்டார். ‘‘இதுவரை நான் நடித்து வந்த பார்முலாவுக்குள் இந்தக் கதையை அடக்க முடியாது. வித்தியாசமாக இருக் கிறது. மாறுபட்ட கதைக் களம்.

என்னை யூத்ஃபுல் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறீர்கள். இது வழக்கமான எம்.ஜி.ஆர் படம் அல்ல; இயக்குநர் திருலோகசந்தர் படம்’’ பெருமையோடு சொன்ன எம்.ஜி.ஆர், ’’படத்தை திரு லோகசந்தர் இயக்கும் விதத்தில்தான் இந்தப் படத்தின் வெற்றி அமையும். ஏவி.எம்மின் ‘அன்பே வா’படத்தில் நடிப் பதைப் பெருமையாக கருதுகிறேன்’’ என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டார்.

படத்தின் ஒருங்கிணைப்பு வேலை களை ஏவி.எம்.சரவணன் சார் கவனித்துக்கொண்டார். சரவணன் சார் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிக்கும் படப்பிடிப்புகளுக்குப் போய் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசுவது அவர் பழக்கம். சரவணன் சாரை அவரது வீட்டில் சரவன் என்றே அழைப்பார்கள். எம்.ஜி.ஆரும் சரவன் என்றே அழைப் பார். ‘அன்பே வா’ படத்தில் நடிக்க வந்ததும் சரவணன் சாரை எம்.ஜி.ஆர் செல்லமாக ‘முதலாளி’ என்றழைக்க ஆரம்பித்தார்.

‘அன்பே வா’ படத்துக்குத் தொடக்க விழா செப்டம்பர் மாதத்தில் நடந்தது. சரவணன் சார் படத்தை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டார். இதை இயக்குநர் திருலோகசந்தரிடம் கூறியதும், ‘‘கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முழு ஸ்கிரிப்டாக தயாராக இருக்கிறது. அத னால் படப்பிடிப்பை விரைவாக முடிக் கலாம்’’ என்று நம்பிக்கைக் கொடுத்தார். சரவணன் சார் தன் விருப்பத்தை அப்புச்சியிடம் சொன்னதும் அவருக்கும் ஆர்வம் அதிகமானது. ‘‘ஆனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட்டை எப்படி நமக்கு மொத்தமாக ஒதுக்கித் தருவார்?’’ என்று கேட்டார். சரவணன் சார், ‘‘எம்.ஜி.ஆர் அவர்களிடமே கேட்டுப் பார்த்துவிடுகிறேன்’’ என்று கூறினார்.

என்னிடம் ராமாவரம் தோட்டத்துக்கு போன் போட்டு, எம்.ஜி.ஆர் அவர் களிடம் ‘தான் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் எப்போது வரலாம்' என்றும் கேட்கச் சொன்னார் சரவணன் சார். நான் கேட்டேன். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘கால்ஷீட் தேதி விஷயங்கள் என்றால் நீங்கள் மட்டும் வாங்க. வேறு முக்கியமான விஷயம் என்றால் முதலாளியைக் கூட்டிட்டு வாங்க’’ என்றார். தோட்டத்துக்குப் புறப் பட்டோம். சரவணன் சார், எம்.ஜி.ஆரிடம் ‘‘ஒரு முக்கியமான விஷயம். நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். அது முடிந் தால் சந்தோஷம். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் வருத்தப்பட மாட்டோம்’’ என்றார்.

‘‘பில்டப் எதுக்கு முதலாளி. என்ன விஷயம்னு சொல்லுங்க’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘அன்பே வா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம்னு ஒரு ஆசை.’’

‘‘அப்படி ஒரு ஆசையா? சத்யா மூவிஸ்ல சாணக்கியா இயக்கத்தில் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் வேலைகள் நடந்துட்டிருக்கு. அதைப் பொங்கலுக்கு வெளியிடலாம்னு திட்டமிட்டிருக்காங்க’’ என்று சொல்லிவிட்டு, ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து சரவணன் சாருடைய விருப்பத்தைக் கூறினார். ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் செட்டியார் மீதும், சரவணன் சார் மீதும் தனி பிரியம் கொண்டவர். அதனால் அவருடைய படத்தை தள்ளி வைத்துக்கொள்ள சம் மதித்தார். சரவணன் சார் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி கூறினார்.

சரவணன் சார் என்னிடம் ‘‘முத்துராமன் மொத்தமா எவ்வளவு நாட்கள் கால்ஷீட் தேவைப்படும்னு சொல்லுங்க?’’ என்றார். நான் ‘’70 முதல் 80 நாட்கள் தேவைப்படும்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி அதெல்லாம் விடுங்க. உங்க ஆசைப்படி ‘அன்பே வா’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்’’ என்றார். அப்படி சொன்னதோடு மட்டுமின்றி விரைந்து படத்தை முடிக்க பேருதவியாக இருந்தார். எங்கள் பணிகளையும் வேகப்படுத்தினார். இரவு, பகலாக வேலை பார்த்து படத்தின் நிர்வாக இயக்குநராகவே எம்.ஜி.ஆர். மாறிவிட்டார். பட வேலைகளில் அப்படி ஓர் ஈடுபாட்டுடன் உழைத்தார்.

‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மனோரமா டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே பணிபுரிந்தது. ஏவி.எம் ஸ்டுடியோவில் எல்லா அரங்குகளிலும் பெரிய பெரிய செட்டுகள் போடப்பட்டன. அவுட்டோர் ஷூட்டிங் ஊட்டி, சிம்லா என முடிவானது. ஆகமொத்தத்தில் ‘அன்பே வா’ படத்தின் படப்பிடிப்பு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் ஒரு தனி வரலாறு.

- இன்னும் படம் பார்ப்போம்...

ஆங்கிலம் அறிவோமே - 71: ராக்கெட்டும், பாக்கெட்டும்

ஒருவர் போகிற போக்கில் “ராக்கெட்டுக்கும், பாக்கெட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கூறுங்கள்’’ என்று கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எனக்கும் அதே உணர்வுதான் முதலில் எழுந்தது. பிறகு இதிலும் முக்கிய விஷயம் இருப்பதை உணர முடிந்தது.

Racket, Rocket இடையே வித்தியாசம் உண்டு - எழுத்துகளிலும், அர்த்தங்களிலும்.

அதேபோல் Packet, Pocket இடையேகூட வேறுபாடு உண்டு.

டென்னிஸ் ராக்கெட் என்று நாம் குறிப்பிடும்போது அது Racket. இந்த வார்த்தைக்கு இன்னொரு பொருளும் உண்டு. எக்கச்சக்கமான ஒலியை எழுப்புவதை Racket என்போம். அதாவது நமக்குப் பிடிக்காத ஒலி. The traffic made a terrible racket in the street.

சட்ட மீறல்களை ஒரு குழுவாகச் செய்யும்போது அதையும் racket என்பதுண்டு. The latest weight reducing racket, Emu farm racket என்பதுபோல.

சிலர் Racquet என்ற வார்த்தையையும் Racket என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். Racket கொண்டு ஆடப்படும் விளையாட்டைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுகிறது.

Rocket என்பது விண்கலம் தொடர்பானது. அது உயர எழும்பும் பொருள். விண்கலம் ஏவும் இடமான தும்பாவிலும் எழும்பும். தீபாவளியின்போது பட்டாசு வடிவிலும் எழும்பும். விலைவாசி rocket வேகத்தில் எழுவதை நாம் எவ்வளவு முறை பார்த்திருப்போம்!

இப்போது பாக்கெட்டுக்கு வருவோம்.

Packet என்றால் ஒரு பொட்டலம் என்று வைத்துக் கொள்ளலாம். A packet of sweets.

நாம் சட்டைப் பாக்கெட் என்று குறிப்பிடுவது pocket. அதாவது சிறிய பொருள்களை வைத்துக் கொள்வதற் காக உடைகளில் தைக்கப்படுபவை.

சில சமயம் பொதுவான ஒன்றிலிருந்து விலகி நிற்கும் சின்னச் சின்ன ‘அறைகளைக்’ குறிக்கவும் pocket என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உண்டு. Pockets of resistance. A pocket of poverty in the affluent city.

சாதக பாதகம்

பயிற்சி வகுப்பு ஒன்றில் ‘எதைச் செய்வதற்கு முன்னாலும் அதன் pros and cons என்னவென்று யோசித்துவிட்டுச் செய்ய வேண்டும்.’ என்றேன்.

“ஏன் poetry-ஐ நினைக்கக்கூடாது?’’ என்று ஒருவர் முணுமுணுத்தது கேட்டது. நல்லவேளை காதில் விழுந்தது.

நான் குறிப்பிட்டது அந்த prose அல்ல. இது pros. இதற்கு சாதகங்கள் என்று அர்த்தம். Cons என்றால் பாதகங்கள். ஒரு செயலின் சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் நான் கூறிய ஆங்கில வாக்கியத்தின் பொருள்.

I wanted to weigh up the pros and cons before accepting the job.

லத்தீன் மொழியில் pro என்றால் ஆதரவாக. Contra என்றால் எதிராக. Contra என்பதுதான் con ஆகிவிட்டது. அந்த மொழியில் pro et contra என்பார்கள். அதாவது for and against எனலாம்.

அருவி

ஒரு வாசக நண்பர் “Cascade, cataract ஆகிய இரண்டுமே அருவியைக் குறிக்கும் சொற்கள்தானே?’’ என்கிறார்.

ஆமாம். ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. Cascade என்பது மிக மெல்லிய அருவி என்று சொல்லலாம். பல தீம் பார்க்குகளில் காணப்படலாம். பாறைகளின் மீது படர்ந்து வரும் அருவி. Cataract என்பது சக்தி மிகுந்த அருவி. கொஞ்சம் பயங்கரமானது, ஆபத்தானது என்றும் சொல்லலாம்.

அருவியில் வேறு சில வகைகளும் உண்டு. Chute எனப்படும் அருவியில் அது சரியும் வழி மிகவும் குறுகலானது. இதன் காரணமாக மிகமிக அதிக வேகத்தோடு அந்தக் குறைவான பகுதியில் அருவி நீர் வெளிப்படும். Frozen Waterfalls என்றால் பனிக்கட்டியாக மாறிவிட்ட அருவி என்று அர்த்தம். இதன்மீது ஏறுவதைக்கூட ஒரு சாகசமாக எண்ணுபவர்கள் உண்டு.

இது தொடர்பான Catadupa என்ற வார்த்தை கூட சுவாரசியமானதுதான். இது பிரம்மாண்டமான அருவிக்கு (பெரும்பாலும் நைல் நதி தொடர்பான அருவிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது) அருகில் வசிக்கும் மக்களைக் குறிக்கிறது. தொடர்ந்து அருவியின் பலத்த ஓசையைக் கேட்டுக் கொண்டிருப்பதால் இவர்கள் பெரும்பாலும் கேட்கும் திறனை இழந்துவிட்டிருப்பார்களாம்.

வருமா,வராதா?

“He did not go” என்பது சரியா? அல்லது “He did not went” என்பது சரியா?”என்று கேட்ட நண்பரிடம் முதல் வாக்கியம்தான் சரியானது என்றேன். அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. Did என்பது past tense. எனவே went என்பதுதானே வர வேண்டும் என்றார்.

இது போன்ற தவறுகளை சில வாசகர்களின் அஞ்சல்களிலும் (Why you did not replied?) காண முடிகிறது. எனவே, இந்தச் சந்தேகம் குறித்து கொஞ்சம் விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

Auxiliary verb குறித்து இந்தப் பகுதியில் முன்பு குறிப்பிட்டிருக் கிறேன். என்றாலும் அது குறித்து ஒரு சுருக்கமான revision இப்போது நலம் பயக்கும்.

VERB-களில் பலவும் main verbs என்ற பிரிவில் அடங்கிவிடும். stand, runs, forgot, allow என்பவை சில உதாரணங்கள்.

auxliary verb என்பது tense, voice போன்றவற்றைச் சுட்டிக்காட்டி வாக்கியத்தை இலக்கணப்படி அமைக்க உதவுபவை. இவற்றை helping verbs என்றும் கூறுவார்கள். இவை பெரும்பாலும் main verb-உடன் காணப்படுகின்றன. auxliary verbs க்கு சில எடுத்துக்காட்டுகள் - am, has, do, may, are, was, have, does, will, could, is, did.

இந்த இரண்டு வகை VERBS-ஐ கண்டுபிடிக்க குறுக்குவழி ஒன்றும் தோன்றுகிறது.

ஒரு verb அருகிலேயே NOT என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடிந்தால் அது auxiliary verb. இல்லையேல் main verb.

Cannot வரும். Write not வராது. Do not வரும். See not வராது. (கவிதைகளில் எப்படி வேண்டு மானாலும் வரலாம், அதை விடுங்கள்).

பலவித இலக்கணச் சிக்கல்களை நீக்கிவிட்டு எளிமையாகச் சொல்வ தென்றால் Did என்ற auxiliary verb-ஐத் தொடர்வது infinitive ஆகத்தான் இருக்கும். Past tense verb அல்ல.

(go, come, read, write, stand, take, give, run போன்ற அடிப்படையான verbs ஆக நாம் கருதுபவற்றை infinitive என்பார்கள். இவற்றை present tense verb என்று நாம் கருதுவது வழக்கம்).

அதாவது did என்ற வார்த்தையைத் தொடர்ந்து come, go, write, stand போன்றவைதான் வரும். இந்த ஒரே வாக்கியத்தை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டாலும் போதும்.

எனவே Did he go?-தான். Did he went? அல்ல. He did not go-தான். He did not went அல்ல.

He did not write-தான். He did not wrote அல்ல.

I went to the house but did not enter.

எதிரொலி: Due to வின் பயன்பாடு

Due to வை phrase preposition மாதிரிப் பயன்படுத்தக்கூடாது. Due to என்பது predicative adjective. இதை is, was, are, were போன்ற ‘to be’ verb-க்கு பின்னால்தான் பயன்படுத்த வேண்டும்.

Due to rain the match was postponed என்றோ The match was postponed, due to the rain என்றோ சொல்லக்கூடாது. due to க்குப் பதிலாக Owing to பயன்படுத்த வேண்டும். Owing to the rain the match was postponed என்று சொல்ல வேண்டும்.

To be verb-க்குப் பின்னால் due to- வை பயன்படுத்த வேண்டும். Collapse ஐ பயன்படுத்த விரும்பினால் Noun-ஆக பயன்படுத்தி his collapse and death was due to heart attack என்று சொல்ல வேண்டும்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்

Owing to, Due to ஆகிய இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றே. Part of speechம் ஒன்றே. (Ref: Oxford dictionary).

ரத்தம் என்று நான் எழுதினால் ‘இரத்தம்’ என்று எழுதாதது பெரும்பிழை என்று ஒருவர் காட்டலாம்தான். ஒரு குறிப்பிட்ட நோக்கில் பார்க்கும்போது ‘ரத்தம்’ தவறுதான். சில மொழிப் பயன்பாடுகள் காலப்போக்கில் மாற்றங்கள் கண்டு நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அப்படித்தான் due to பயன்பாடும். Because of என்பது போலவே அது மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Keywords: ஆங்கில அறிவு, ஆங்கில இலக்கணம், மொழி அறிவு, ஆங்கிலம் அறிவோமே

சென்னை 376: இளமை மாறா நகரம்


சென்னையில் இளமைக்குப் பஞ்சமே இல்லை. இந்த நகரத்துக்கு வயது 376 ஆண்டுகள் என்று சொன்னால் யாரும் நம்புவார்களா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் நாளாக நாளாக நகரம் இளமையாகிக்கொண்டேவருகிறது. சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் எப்போதும் ஒரு துடிப்பையும் துள்ளலையும் உணரலாம். இருபத்தி நான்கு மணிநேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருக்கும் இந்த நகரம். இளையவர்களை வாரியணைத்துக்கொள்ளும் நகரமாகவே உள்ளது. அன்று அது பாரதியை அரவணைத்திருக்கிறது; இன்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை வளர்த்தெடுத்திருக்கிறது.

எல்லாப் பெரிய நகரங்களையும் போலவே சென்னையில் இளமையின் கொண்டாட்டத்துக்கான இடங்கள் அதிகம். கொண்டாட்டம் போதுமா? செலவுக்குத் தேவையான வருமானத்தை ஈட்டவும் இங்கே வழிகள் உள்ளன. தினந்தோறும் ரயில்களிலும் பேருந்துகளிலும் வந்திறங்கும் எத்தனையோ பேருக்கு சென்னை தாயுள்ளத்துடன் இடமளிக்கிறது. கனவுகளைச் சுமந்து்வரும் அத்தனை இளைஞர்களுக்கும் ஏதாவது ஒரு வாழ்க்கையை அது தொடர்ந்து அளித்துவருகிறது. அதனால்தான் இந்தப் பெருநகரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டேயிருக்கிறது.

இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க பெருநகரின் மத்தியில் ஸ்பென்சர் பிளாஸா, ஐநாக்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்கை வாக் போன்ற ஷாப்பிங் மால்கள் காணப்படுகின்றன. நகரில் மட்டுமல்ல புறநகர்ப் பகுதிகளிலும் மாயாஜல், ஃபீனிக்ஸ் போன்ற ஷாப்பிங் மால்கள் இளைஞர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

வார நாட்களில் கடுமையாக உழைக்கும் இந்த இளைஞர்கள் வீக் எண்ட்களில் மால்களையும் தீம் பார்க்குகளையும் சுற்றிவருகிறார்கள். திரைப்படம், நாடகம், விளையாட்டு என இவர்கள் கொண்டாட்டத்துக்கான வழிகள் அநேகம். வெறும் கான்கிரீட் கட்டிடங்களில் என்ன உள்ளது, இயற்கையான இடத்துக்கு ஈடு இணையேது எனக் கேட்பவர்களுக்காகவே நீண்டு கிடக்கிறது சென்னை மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகள். இவை போதாதென்று சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் பூங்காங்கள் இளைஞர்களுக்கு ஆசுவாசம் தருவதற்காகத் திறந்து கிடக்கின்றன.

சினிமாவில் சேர வேண்டுமா? கவலை இல்லை. ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டுமா? அதற்கும் இங்கே இடமுண்டு. சாப்ட்வேர் துறையில் முன்னேறவும் வழி உண்டு, விளையாட்டு வீரர்களுக்கும் உரிய களம் உண்டு. நேரம் போவது தெரியாமல் வாசித்துக்கொண்டே இருக்கும் இளைஞர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமரா நூலகம் போன்ற எத்தனையோ நூலகங்கள் அவர்கள் வரவை எதிர்பார்த்து நிற்கின்றன.

உணவுப் பிரியரா, உடையில் ஆர்வமா, கலையில் விருப்பமா, விளையாட்டுத் துறையில் ஈடுபாடா - எது உங்களுக்குப் பிடிக்குமோ அதைச் செய்துகொள்ள இந்த நகரத்தில் வாய்ப்பிருக்கிறது. தன்னை நம்பி வந்த யாரையும் இந்த நகரம் கைவிட்டதே இல்லை. அதனால்தான் கல்லூரியில் படிக்கவும் படித்த பின்னர் வேலைக்காகவும் இங்கே இளைஞர்கள் குவிந்துகொண்டே இருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் அனுதினமும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதே இந்தப் பெருநகரின் தனித்துவம். அதனாலேயே இது என்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறது.

சென்னை எனும் கலைடாஸ்கோப்

அறிமுகமாகாத‌வரை பெருநகரங்கள் நமக்கு ‘பீட்சா’. பிறகு அவை ஆயா சுட்ட தோசைதான்! ‘மெட்ராஸுக்குப் போற. பார்த்துப்பா, அங்க பிக்பாக்கெட்காரங்க ஜாஸ்தி’ என்பதுதான் எனக்கு வழங்கப்பட்ட முதல் அட்வைஸ். உலகத்துக்கு வேண்டுமானால், அது சென்னை. உள்ளத்தில் இன்னும் மெட்ராஸ்தான்!

முதல்முறை சென்னை வந்தபோது 8 வயது. சுற்றுலாவாகச் சென்னை வந்தோம். இரவு நேரத்தில் அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘தொலைஞ்சு போயிருவோமோ’ என்ற பயத்துடன் மெரினா கடற்கரையைப் பார்த்தது, இன்னும் மனதில் அலையடிக்கிறது.

அதன் பிறகு சுமார் 15 வருடங்கள் கழித்துப் பணி நிமித்தம் வந்தபோது சென்னை வரவேற்றறது. சுனாமிக்குப் பிறகான மெரினாவைப் பார்க்கும்போது கொஞ்சம் பயம்தான். ஆயினும், கைகள் கோத்துக் கதையளந்தபடி செல்லும் காதலர்களைப் பார்த்தால், ‘கடல் இனிது’ எனச் சொல்லத் தோன்றுகிறது.

‘இதயம்’, ‘பூவே உனக்காக’, ‘காதல் தேசம்’ போன்ற பல படங்கள்தான் சென்னையை மனத்தில் சித்திரமாக வரைந்துவைத்ததன. ‘அண்ணா சாலையில் எட்டு வண்ண வானவில்’லை நடிகர் காந்த் மட்டுமா பார்த்தார்?

சினிமாவில் இடம்பெறும் சென்னைக்கும், நிஜத்தில் உள்ள சென்னைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும், இப்போதும், எம்.எம்.சி.யைக் கடக்கும்போது, முரளி கையில் டைரியுடன் உலவிக்கொண்டிருப்பது போலவும், எல்.ஐ.சி.கட்டிடத்தின் மீது சூப்பர் ஸ்டார், காரை ஓட்டிக் கொண்டிருப்பது போலவும் தெரியும். அவ்வளவு வெள்ளந்தியான என்னை, பரங்கிமலை ஜோதி தியேட்டருக்கு வழி சொல்லும் அளவுக்குச் சென்னை வளர்த்தது!

‘ஸ்பென்சர் பிளாசா’வில் இருந்த ‘லேண்ட்மார்க்’ புத்தகக் கடைதான் வாசிப்புக்குத் தீனி போட்டது. நுங்கம்பாக்கம் சாலையில் இருந்த அதன் இன்னொரு கிளை மூடப்பட்டது, சென்னை வரலாற்றில் ஒரு சோகம். வரலாறாய் நிற்கும் இன்னொரு புத்தகக் கடை ‘ஹிக்கின்பாதம்ஸ்’!

சென்னையின் அடையாளங்களாக ஒருபுறம் கட்டிடங்கள் இருக்கின்றன என்றால், இன்னொரு புறம் அதன் மனிதர்கள். ஒண்டுக் குடித்தனம் ஒன்றில் வசித்திருந்தபோது, ‘நைட் 7 மணிக்கு மேல துணி துவைக்காதீங்க’ என்று கன்டிஷன் போட்ட வீட்டுக்காரர், மேன்ஷன்களில் பசியைப் போக்கிக்கொள்வதற்கு இரண்டு பட்டர் பிஸ்கட்டும், ஒரு டீயும் மட்டுமே குடித்து வந்த பக்கத்து அறை நண்பர்கள், இன்னும், இன்னும்... நட்பு, காதல், வேலை, துரோகம், வணிகம், மருத்துவம், கல்வி எனப் பலவற்றுக்கும் ‘ஸ்கோப்’ உள்ள‌ கலைடாஸ்கோப் சென்னை!

நோக்கியா கம்பெனி மீண்டும் திறக்கப்படுகிறது தமிழக அரசுடன் மத்திய அரசின் குழு பேச்சுவார்த்தை

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா கம்பெனியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணிகளில் மத்திய அரசின் பணிக்குழு இறங்கியுள்ளது.

அதிவிரைவு பணிக்குழு

இந்தியாவில் செல்போன் மற்றும் அதன் உதிரிபாக உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அதிவிரைவு பணிக் குழுவை மத்திய அரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை அமைத்துள்ளது.

இந்த பணிக்குழுவின் தலைவராக இந்திய செல்லுலார் சங்கத்தின் (ஐ.சி.ஏ.) தலைவர் பங்கஜ் மொகிந்த்ரோ நியமிக்கப்பட்டுள்ளார். நோக்கியா, லாவா, சோனி, மைக்ரோசாப்ட், மைக்ரோமாக்ஸ் உள்பட பல்வேறு செல்போன் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இலக்கு நிர்ணயம்

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது செயல்பாட்டை இந்தப் பணிக்குழு தொடங்கியது. மாநிலங்களின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளை சந்தித்து இந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் செல்போன் உற்பத்தியை 500 மில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தக் குழு செயலாற்றி வருகிறது. அதாவது உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த செல்போன் உற்பத்தியில் இந்தியா 25 சதவீத இடத்தை பிடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூர்வாங்கப் பணி

இது செல்போன் உற்பத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கூடுதலாக 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் பணிக்குழு, தற்போது தமிழகத்தில் நிலவும் சாதக சூழ்நிலைகளை பயன்படுத்த முன்வந்துள்ளது.

செல்போன் உற்பத்தியில் நோக்கியா முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணியில் இந்தப் பணிக்குழு இயங்கி வருகிறது.

அமைச்சர், அதிகாரிகளுடன் சந்திப்பு

இதுதொடர்பாக அமைச்சர் தங்கமணி, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் ஆகியோரை நேற்று தலைமைச்செயலகத்தில் பங்கஜ் மொகிந்த்ரோ, பணிக்குழுவின் துணைத் தலைவர் ஜோஷ் பல்கர் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

அரசிடம் கோரிக்கை

அதன் பின்னர் பங்கஜ் மொகிந்த்ரோ அளித்த பேட்டி வருமாறு:

நோக்கியா கம்பெனி மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இதற்கு தமிழக அரசு என்னென்ன செய்ய முடியும்? என்பதையும், அதை ஒரு தொகுப்பாக அளிக்க வேண்டும் என்பதையும் தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்.

இதுதொடர்பாக தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் நோக்கியா நிறுவனத்தை தற்போது கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை.

நம்பிக்கை

இதில் மத்திய அரசும் தமிழக அரசும் கூறும் விஷயங்களை முன்வைத்து, அதன் பின்னரே நோக்கியா நிறுவனத்தை பேச்சுக்கு அழைக்க விரும்புகிறோம். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

நோக்கியாவை மீண்டும் செயல்படச் செய்வதற்கான பூர்வாங்க பணிகளை தொடக்கியிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 2.5.2024