Sunday, December 27, 2015

ஆதார் எண் அட்டைஅவகாசம் நீட்டிப்பு

சென்னை :மழை பாதிப்பு காரணமாக, 'ஆதார்' எண் பணிக்கான அவகாசம், 2016 மார்ச் வரை நீட்டிக்கப்படும் என தெரிகிறது.இதுகுறித்து, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஆதார் எண் உருவாக்க, 31ம் தேதி இறுதி நாள். மொத்தம், 6.23 கோடி பேரில், 5.63 கோடி பேருக்கு, விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது.டிசம்பர் வரை, 86.42 சதவீதம் ரேகைகள் சேகரிக்கப்பட்டு, 78.13 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கன மழையால், தொடர்ந்து ஆதார் மையங்கள் செயல்பட முடியவில்லை. போதிய கணக்கெடுப்பு ஆட்களும் இல்லை. இதனால், மத்திய அரசு நிர்ணயித்த, டிச., 31க்குள், ஆதார் எண் உருவாக்கும் பணியை, முடிக்க முடியவில்லை. கணக்கெடுப்பு பணியில் உள்ள, 'பெல்' நிறுவனம், போதிய பணியாளர்களை வழங்கி உள்ளது. எனவே, ஆதார் பணி தீவிரம் பெற்றுள்ளது. இந்நிலையில், இறுதி தேதி, 2016 மார்ச் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவில்களில் 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்'அணிய ஜன., 1 முதல் தடை

தமிழக அறநிலையத்துறை யால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும், ஜன., 1 முதல், 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, மதுரை உயர் 
நீதிமன்ற கிளை வழங்கி உள்ள தீர்ப்பை தொடர்ந்து, அறநிலையத்துறை, அனைத்து கோவில்களுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், 'கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும். 'ஆண்கள் வேட்டி, சட்டை, பைஜாமா குர்தா; பெண்கள் புடவை, ரவிக்கை, சுடிதார், ஷால், தாவணி போன்ற உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். 'ஷார்ட்ஸ், மிடி, குட்டை பாவாடை, ஜீன்ஸ், லெக்கிங்ஸ்'போன்ற ஆடை அணிந்து வருபவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. 'போலீஸ், தீயணைப்பு படையினர் போன்ற சீருடைப் பணியில் ஈடுபடுவோருக்கு இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை' என கூறப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நடைமுறை, ஜன., 1 முதல், அனைத்து இந்து கோவில்களிலும் அமலாகிறது. இதை மீறுபவர்கள் மீது, நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.
- நமது நிருபர் -

மத்திய அரசு துறை பணியாளர்களில் 50 வயதுக்கு மேல் 9.47 லட்சம் பேர்

மத்திய அரசு துறைகளில் உள்ள, 33 லட்சம் பணியாளர்களில், 9.47 லட்சம் பேர், 50க்கு மேல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துஉள்ளது. மத்திய அரசில், 56 துறைகள், ஐந்து யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில், 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில், 33 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். மொத்தம் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 50 வயதிற்கு மேற்பட்டோர்மேலும், 20- - 30 வயதிற்குள், 7.32 லட்சம் பேர், 30- - 40 வயதிற்குள், 7.34 லட்சம் பேர், 40- - 50 வயதிற்குள், 8.60 லட்சம், 50 - -60 வயதிற்குள், 9.47 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில், 50 வயதிற்கு மேற்பட்டோரே அதிகபட்சமாக உள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறையில், 1.95 லட்சம் பணியாளர்களில், 80,933 பேர், அதன்கீழ் இயங்கும் தபால்துறையில், 1.89 லட்சம் பணியாளர்களில், 79,295 பேர், 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அதேபோல் பாதுகாப்புத்துறையில், 3.98 பணியாளர்களில், 1.51 லட்சம் பேர், ரயில்வேயில், 13.15 லட்சம் பணியாளர்களில் 4.93 லட்சம் பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இதேபோல் பெரும்பாலான துறைகளில், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.
இளைஞர்கள்போலீஸ் துறையில் மட்டும், 9.80 லட்சம் பணியாளர்களில், 3.94 லட்சம் பேர், 30 வயதிற்குட்பட்டோர், 2.59 லட்சம் பேர், 40 வயதிற்குட்பட்டோர் உள்ளனர். இது அதிக இளைஞர்களை கொண்ட துறையாக உள்ளது. இந்த விவரம் 7வது ஊதியக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோர், ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவர். ஏற்கனவே, 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரிக்கரிப்பதோடு, தொய்வும் ஏற்படும். விரைவில் காலியிடங்களை
நிரப்ப வேண்டும் என, மத்திய அரசு ஊழியர்கள் கேட்டு கொண்டனர்.

2–வது திருமணம் செய்துகொண்டாலும் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு தாய்தான் சட்டப்பூர்வ பாதுகாவலர் ஐகோர்ட்டு உத்தரவு

logo

சென்னை,


இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும், முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் தாய்தான் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இரண்டாவது திருமணம்

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபா. இவருக்கும், மேனன்பாபு என்பவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு காவியாஸ்ரீ என்ற மூன்றரை வயது மகள் உள்ளார். மேனன்பாபு மதுவுக்கு அடிமையாகி, கடந்த 2013–ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பெற்றோர் வீட்டில் மகளுடன், சுபா வசித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு சுசீந்திரன் என்பவருடன் 2–வது திருமணம் நடந்தது. இந்த திருமணம் நடந்து 3–வது நாளில் பள்ளிக்கூடத்துக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குழந்தை காவியாஸ்ரீயை, முதல் கணவர் மேனன்பாபுவின் தாயார் காளியம்மாள் மற்றும் சிலர் வேனில் கடத்தி சென்றுவிட்டனர்.

ஆட்கொணர்வு மனு

இதுகுறித்து மணல்மேடு போலீசில் சுபா புகார் செய்தார். போலீசார் குழந்தை கடத்தல் வழக்குப்பதிவு செய்தாலும், மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தன் குழந்தையை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சுபா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காளியம்மாள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

உரிமை உள்ளது

முதல் கணவர் இறந்தபிறகு, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சுபாவுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற திருமணம் சட்டவிரோதம் கிடையாது. தமிழக அரசு கூட விதவை மறுமணத்தை ஊக்குவிக்கிறது.

சுபா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், தான் பெற்ற குழந்தைக்கு இயற்கையான பாதுகாவலர் என்ற உரிமை கொண்டாட முடியாது என்று காளியம்மாள் தரப்பில் கூறுவதை ஏற்கமுடியாது. மேலும், சுபாவை திருமணம் செய்துள்ள சுசீந்திரனும், குழந்தையை பொறுப்புள்ள தந்தையாக பார்த்துக் கொள்வதாகவும், அவளுக்கு தேவையான கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுப்பதாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒப்படைக்கவேண்டும்

எனவே, மறு திருமணம் செய்துகொண்ட மனுதாரருக்கு, முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை மீது உரிமை கொண்டாட உரிமை உள்ளது. அவர்தான் முழு உரிமை படைத்த இயற்கையான பாதுகாவலர்.

எனவே, குழந்தையை காளியம்மாள் உடனடியாக சுபாவிடம் ஒப்படைக்கவேண்டும். இதற்கு அனைத்து உதவிகளையும் மணல்மேடு போலீசார் செய்து கொடுக்கவேண்டும். இந்த மனுவை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளனர்.

Saturday, December 26, 2015

எங்கள் இழப்புகளுக்கு யார் பொறுப்பு? 3...நீரை.மகேந்திரன்

Return to frontpage

ஓர் இயந்திரத்தின் விலை ஒரு கோடி... அந்த இயந்திரத்தை வாங்கி ஒரு மாதம்தான் ஆகிறது. உற்பத்தியைக் கூட இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் இயந்திரம் தண்ணீரில் மூழ்கினால் மனநிலை என்னவாக இருக்கும். அதுவும் சேமிப்பு கொஞ்சமும், வங்கிக்கடன் மீதியுமாக ரிஸ்க் எடுத்துள்ள ஒரு குறுந் தொழில்முனைவர் என்றால் அவர் எவ்வாறு மீண்டு திரும்பவும் தொழிலுக்கு திரும்புவார்?

கிண்டி - ஈக்காட்டுத்தாங்கலில் நான் சந்தித்த பல தொழில்முனைவோர்களும் தற்கொலைக்குச் சமமான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் ஒரு மதியத்தில் இந்த பகுதிகளுக்குள் சென்று வந்தேன். இன்னும் முழுமையாக சீர் செய்யப் படாத தெருக்கள் ஒவ்வொன்றும் பல லட்சம் இழப்பை சந்தித்துள்ளன என்பதை வெளிச்சம் போடுகின்றன. தொழிலகத்துக்குள் புகுந்த நீரை வெளியேற்றி, இயந்திரங்களை சுத்தம் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல தொழி லகங்களில் பணியாளர்கள் இல்லா ததால் மூடிக் கிடக்கின்றன. ஒலிம் பியா தொழில்நுட்ப பூங்காவில் ராட்சஸ மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.

கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை

சென்னை மாநகரின் மத்தியில் இப்படியொரு தொழிற்பேட்டை இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பட்டுவருகிறது. மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில்கள் பயிற்சி நிறுவனம், மாநில அரசின் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் உள்பட சிறு தொழில் தொடர்பான பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசின் பல தொழிலகங்களும் இங்கு இயங்கி வந்துள்ளன. தற்போது உற்பத்தி சார்ந்த தொழில்கள் குறைந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், சேவைத்துறை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

கிண்டி தொழிற்பேட்டையை ஒட்டி ஈக்காட்டுத் தாங்கல், அம்பாள் நகர், ஜாபர்கான்பேட்டை, ராமபுரம் பகுதிகளில் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த நிறுவனங்கள் பலவும் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்திகளை செய்து வருகின்றன. பெரு நிறுவனங்கள் அதிகம் கிடையாது. தங்களது தொழில் அனுபவத்தைக் கொண்டு, வங்கி கடன் உதவியோடு சிறிய அளவில் தொழில் தொடங்கி தொழில்முனைவோர்களாக மாறியவர்கள் பலரும் இந்த பகுதியில் நிறைந்துள்ளனர். அதாவது வரவுக்கும் செலவுக்குமாக தங்களுக்கு தெரிந்த தொழிலை விட்டு வெளியேற வழியில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் தொழில் முனைவோர்கள் நிறைந்த பகுதி இது.

அடையாறு ஆற்றில் செல்ல வேண்டிய வெள்ளம், கரையோரங்களை துவம்சம் செய்தது மட்டுமில்லாமல், இவர்களது வாழ்க்கையிலும் பெரும் சோகத்தை விதைத்துவிட்டுச் சென் றுள்ளது. இந்த வெள்ள பாதிப்பு அவர்களது வாழ்க்கையைச் சூறையாடியுள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. பல தொழில் நிறுவன உரிமையாளர்களை மீளா கடனுக்கும் இந்த வெள்ளம் தள்ளி யுள்ளது, குறு தொழில்களையும், தொழிற்பேட்டை சார்ந்து இயங்கிய தொழிலாளர்களையும்., கடனாளி களாகவும், பிறரது உதவிக்கு ஏங்கும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றி யுள்ளது இந்த மாமழை. அடையாறு வெள்ளத்தினால் அதிக பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதி இதுதான்.

மக்கள் தங்களது உடமைகளை இழந்து தவிப்பது ஒருபக்கம் என்றால் ஒரு தொழில் முனைவோரது வலி அதனினும் அதிகமானது என்றே சொல்ல வேண்டும். அம்பாள் நகரில் பாதிக்கப்பட்ட ஒரு தொழில் முனைவோரிடம் பாதிப்பின் தீவிரம் குறித்து கேட்டேன்.

இங்குள்ள பல நிறுவனங்களும் கார் தயாரிப்புக்கான உதிரிபாகங்களை தயாரித்து கொடுக்கின்றன. தவிர டையிங் லேத் பட்டரைகளும் இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன. கார் உதிரிபாக தயாரிப் புக்கான இயந்திரங்களை பரவலாக அனைத்து தொழில் நிறுவனங்களுமே இறக்குமதி செய்கிறது. இவை எல்லாமே தற்போது நீரில் மூழ்கி வீணாக போயுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து சிறு தொழில் நிறுவனங்களுமே பாதிப் படைந்துள்ளன.

உயிரை காக்கவோ தொழிலைக் காக்கவோ...

எத்தனை மழைகளிலும் தொழி லகத்துக்குள் வெள்ளம் வந்ததில்லை. அதாவது இப்படி ஒரு வெள்ளம், இந்த பகுதிவரை வரும் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இரவு வேலை முடித்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டோம். காலையில் வெள்ளம் ஏரியாவுக்குள் புகுந்துவிட்டது. நேரம் செல்ல செல்ல தெருவுக்குள் நுழைய முடியாத அளவுக்கு வெள்ளம். மதியத்துக்குள் இடுப்புக்குமேல் வெள்ளம் சூழ்ந்து விட்டது இந்த ஏரியாக்களில். வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் தேடுவதுதான் அப்போதைய நோக்கமாக இருந்தது. இதனால் தொழி லகங்களை குறித்து யோசிக்கவே இல்லை என்கின்றனர்.

அரசு நிறுவன இழப்புகள்

அடையாறு ஆற்று வெள்ளம் கிண்டி ஒலிம்பியா பார்க் பகுதியில் ஆறாக ஓடியதில் ஐடி சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் பல ஐடி நிறுவ னங்களும் உள்ளன. மத்திய அரசின் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமும் (சிப்பெட்) மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை தயாரித்து வழங்குகிறது. தவிர வெளியிலிருந்து ஆர்டர்கள் பெற்று தயாரித்து வழங்கி வருகின்றனர். இங்குள்ள இயந்திரங்களும் மூழ்கியதில் அரசுக்கும் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு தொழில்நுட்ப பயிற்சி பெறும் மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த கருவிகள் ஒவ்வொன்றும் பல லட்சம் மதிப்பு கொண்டவை. திரும்ப இவற்றை வாங்க வேண்டும் என்றால் அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல், நிதி ஒதுக்கீடு என பல நடைமுறைகள் உள்ளன. இது இப்போதைக்கு சாத்திய மாகுமா என்பது தெரியாது. பழுதுபட்ட இயந்திரங்களை சரிசெய்யவே நாங்கள் பல வருடங்கள் காத்திருக்கும் சூழ் நிலையும் வரலாம் என்கிறார் ஒரு பயிற்சியாளர். மத்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கான மண்டல பயிற்சி மையமும் இந்த வெள்ளத்துக்கு தப்பவில்லை. பல ஆவணங்களும் சேதமடைந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி சென்னை மண்டலத்தில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றனர்.

அடையாறு ஆறு இந்த பகுதியில் ஏற்படுத்திய பாதிப்பின் மதிப்பு சுமார் ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை இருக்கலாம் என்பதை மதிப்பிட்டுள்ளனர். உறுதியான மதிப்பு தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் உற்பத்தி இழப்பின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளாக இருக்கும். அதைவிடவும் இங்குள்ள தொழில்முனைவோர்களின் சமூக மதிப்பு நம் கண்முன்னே சிக்கி சீரழியும் என்பதுதான் அதி துயரமாக இருக்கப்போகிறது என்பதும் முக்கியமானது.

மின் இணைப்புகளுக்கு எத்தனை நாளாகும்?

மின் பழுதுகளை நீக்கி சரிசெய்து சில இயந்திரங்களை இயக்க முடியும். ஆனால் இங்குள்ள அனைத்து நிறுவன மின் இணைப்புகளுமே திரும்ப சரி செய்ய வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்டதில் பெரும்பான்மையினர் சிறு தொழில்முனைவோர்கள்தான். இந்த பகுதிகளில் தற்போதுவரை மின் இணைப்பு சரி செய்யப்படவில்லை. திரும்ப மின் இணைப்பை கொண்டுவர எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை என்பதுதான் இப்போதைய கவலை. இதற்கான மீட்டர்கள் மற்றும் மின் இணைப்புகளை சரி செய்வது மாற்றுவதும் இப்போது இயலாத காரியம். நாங்கள் மீண்டு எழுந்தாலும் மின் வாரிய உதவி சரியான நேரத்தில் இருக்குமா என்பதும் தெரியாது. கிட்டத்தட்ட அடுத்த ஆறு மாதங்களுக்கு எங்கள் சோற்றுக்கு என்ன வழி என்பது தெரியவில்லை என்கின்றனர்.

தவிர எங்களது எல்லா இயந்திரங்களிலும் இது சாத்தியமில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இயந்திரங்கள் எல்லாமே கம்ப்யூட்டரைஸ்டு செயல்பாடுகள் கொண்டவை. அதன் போர்டுகள் செயலிழந்துள்ளன. அதை புதிதாக மாற்ற வேண்டும். அவை உடனடியாகவும் கிடைக்காது. பொதுவாக இயந்திரங்களை பிரித்து கோர்த்தாலும், எங்கு நீர் புகுந்துள்ளது என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. அதாவது வாழ்வா சாவா கட்டத்தில் இருக்கிறோம் என்றார்.

’’வங்கிக் கடன் உதவியோடு சமீபத்தில்தான் இயந்திரம் வாங்கினேன். கிட்டதட்ட மொத்த செலவுகளும் ஒரு கோடி ஆனது. இன்னும் உற்பத்தி தொடங்கப்படாத நிலையில் இயந்திரம் மூழ்கிவிட்டது. இந்த நஷ்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இந்த இயந்திரத்தை இறக்குமதி செய்து என் தொழிலை விரிவுபடுத்த ஆசைப்பட்ட என் கனவுகளும் இதனோடு தகர்ந்து போயுள்ளது என்று நம்பிக்கை உடைந்து பேசினார் ஒருவர்.

இந்த பகுதியில் உள்ள தொழிலகங்கள் ஒவ்வொன்றும் குறு தொழில் வகைகளை சேர்ந்தது. இரண்டு மூன்று தொழிலாளர்களோடு தொழில்முனைவோரும் உடலுழைப்பை செலுத்துபவர்களாக இருக்கின்றனர். வீடுகளும் அருகருகிலேயே இருக்கிறது. அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பொருட்களை பாதுகாப்பதற்கு எந்த வாய்ப்புகளை தரவில்லை.

- maheswaran.p@thehindutamil.co.in

விழாக் காலம்: ஆச்சிக்கு மரியாதை! .............ரசிகா



திரையுலகில் பொக்கிஷமாய், கலையுலக ராணியாய் மங்காத புகழுடன் ஜொலித்தவர் பழம்பெரும் நடிகை ஆச்சி.மனோரமா. கலையுலகின் அனைத்து துறைகளிலும் மின்னிய அவரது ஆற்றலுக்கு மரியாதை செய்யும் ஓர் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியே ‘ஆச்சிக்கு மரியாதை’!

ஆச்சியின் ஐம்பது ஆண்டு காலத் திரைத்துறை சாதனையை ஏற்கெனவே ‘மனோரமா 50’ என்ற வெற்றிகரமான இன்னிசை நிகழ்ச்சியாக நிகழ்த்திக் கொண்டாடிய, 7,500-க்கும் அதிகமான மேடைகள் கண்டு உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்திய சங்கர் ராமின் ‘சாதகப் பறவைகள்’ இசைக்குழுவே தற்போது ஸ்டார் ஈவன்ட் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் ஆச்சியின் ரசிகர்களை மகிழ்விக்க இம்முறை இன்னும் பிரம்மாண்டமாக, நேர்த்தியாகவும் நினைவுகளை கிளறித் தாலாட்டும் விதமாகவும் ‘ஆச்சிக்கு மரியாதை’எனும் மெகா இன்னிசை இரவை நிகழ்த்த இருக்கிறார்கள்

“வா வாத்தியாரே ஊட்டாண்ட”, “தில்லாலங்கடி ஆட்டம் போட்டு”, “முத்துக் குளிக்க வாரீகளா” என தன் வசீகர குரலால் அனைவரையும் கட்டியிழுத்த ஆச்சியின் புகழ்பெற்ற பாடல்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் நடித்த படங்களின் மெட்லிகள், காமெடி கலாட்டா, சின்னத்திரை ஜூனியர் மற்றும் சீனியர் சிங்கர்களின் கலக்கல் ஃபெர்மான்ஸ் என வருகிற ஜனவரி 1, 2016 புதுவருட புத்தாண்டு நாளில் திரையுலக நட்சத்திரங்கள், பிரபலங்கள், முன்னணிக் கலைஞர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஒரு மெகா இன்னிசை இரவாக சென்னை காமராஜர் அரங்கில் மாலை 6 மணிக்கு அரங்கேற்றப் போகிறது. இதில் பங்கேற்று ‘ஆச்சிக்கு மரியாதை’ செய்ய அழைக்கிறது சாதகப் பறவைகள், ஸ்டார் ஈவண்ட் கூட்டணி.

மனசு போல வாழ்க்கை 36: நேசித்துப் பெறும் தோல்வி .... டாக்டர். ஆர். கார்த்திகேயன்

Return to frontpage

உலகை இயக்கும் மாபெரும் சக்தி எது என்று என்னைக் கேட்டால் அன்புதான் என்பேன்.

உள் மன அமைதி முதல் உலக அமைதி வரை அனைத்தும் அன்பினால் மட்டுமே சாத்தியம்.

அன்பு குறையும்போது மனதில் வன்மம் வளர்கிறது. அன்பு வற்றிய மனம் தான் பிறர் துயரைப் பார்க்க மறுக்கிறது. அன்பு போதாமைதான் குற்றங்கள் செய்யத் தூண்டுகிறது.

நம் எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. ஆனால் அது மிகக் குறுகிய வட்டத்தில் பலகீனமாக இயங்குகிறது. அதுவும் நிபந்தனைகளுடன் அளிக்கப்படுகிறது. நம் அன்பு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது வெறுப்பாக மாறுகிறது. நமக்கு வரும் அன்பு பகிரப்பட்டால் நாம் கொடுக்கும் அன்பு குறைகிறது. ஒரு பக்கம் உள்ள அன்பு இன்னொரு பக்கம் செல்கிறது.

சக்தியின் அடையாளம்

அன்பை நிரூபிக்க மனம் பல விளையாட்டுக்கள் புரிகிறது. அன்பைப் பெறவும் பல வித்தைகள் புரிகிறது. பாதகங்கள் செய்யும்போதெல்லாம் அன்பினால் என்று வசனம் பேச வைக்கிறது. எந்த அன்பு நிஜம் என்று தெரியாமல் பல நேரங்களில் குழம்புகிறது மனம்.

தன்னலம் கருதாமல் பிரதிபலன் எண்ணாமல் பிறர் மீது செலுத்தும் உணர்வுதான் அன்பு. அது பெறுபவரின் தகுதி அல்ல. கொடுப்பவரின் தகுதி. அது கொடுக்கல் வாங்கல் வியாபாரம் அல்ல. அள்ளித் தரும் அளவற்ற சக்தியின் அடையாளம்.

பிள்ளை மீது தாய் உயிரையே வைக்கிறாள். காதலியைக் காதலன் உயிரே என்று அழைக்கிறான். நட்பு தான் உயிரைவிடப் பெரிது என்கிறான். கொள்கைக்கு உயிரைக் கொடுப்பேன் என்று பறைசாற்றுகிறான் தொண்டன். அடிப்படையில் அனைத்தும் அன்பு தானே?

ஆள் பார்த்துதான்

இவ்வளவு சக்தி மிகுந்த அன்பு ஏன் தடைபட்டுப் போகிறது?

இரண்டாம் பிள்ளை வந்தவுடன் முதல் பிள்ளை தனிமையை உணர்கிறது. மகன் மணந்தவுடன் தாய் தனிமைப்படுகிறாள். ஒருதலைக் காதல் என்றால் காதலனோ காதலியோ தனிமையைத் தழுவுகிறார்கள். அன்பைப் பெறும் போராட்டத்தில்தான் வலிகள் ஏற்படுகின்றன.

ஆனால், அன்பைக் கொடுப்பவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை. நம் அன்பு எத்தனை பரந்து விரிந்துள்ளது என்பதில்தான் நம் மன வளம் அடங்கியுள்ளது.

நம் குழந்தை மீது கொண்டுள்ள அதே அன்பை பிற குழந்தைகள் மீது நம்மால் கொள்ள முடிந்தால் அது தான் அளவற்ற அன்பு. இது யதார்த்தத்தில் நடக்குமா? சாலையில் யாரோ ஒரு பெண் அடிபட்டுக் கிடக்கிறாள் என்றால் அதை ஒரு செய்தியாக மட்டும் உள்வாங்குகிறது மனம். ஆனால், அது தன் பெண் என்று தெரிந்தவுடன் பதைபதைக்கிறது. ஏன் என்றால் ஆள் பார்த்துதான் அன்பு வருகிறது!

ஆனால், சாலையில் அடிபட்டிருக்கும் பெண்ணைத் தன் பெண்ணாக நினைக்க முடிந்தால், அங்கு நிபந்தனையில்லா அளவற்ற அன்பு சுரக்கிறது என்று பொருள். நம் பிள்ளை சாப்பிடாமல் படுத்தால் மனம் பதைபதைக்கிறது. ஆனால், நம் தெருவிலேயே எத்தனை பிள்ளைகள் பசியோடு உறங்குகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறதா மனம்? இப்படிப் பிறர் மீது நிஜமான அன்பும் அக்கறையும் கொண்டால் நம்மால் குற்றங்கள் செய்ய இயலாது.

அன்பைத் தின்னும் சுயநலம்

மக்கள் மீது அன்பு கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் பணத்தில் ஊழல் செய்ய மாட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள். ரசிகர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் சினிமாக்காரர்கள் தாங்களே தங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாத வன்முறையான ஆபாசமான சினிமாக்கள் எடுக்க மாட்டார்கள். துன்பம் இழைக்கப்பட்டவர் மீது உண்மையான அன்பிருக்கும் ஊடகக்காரர்கள் துன்புறுத்தும் கேள்விகள் கேட்டு, அவற்றை எழுதி, படமாகக் காட்டி பாதிக்கப்பட்டவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். வாடிக்கையாளர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் வியாபாரிகள் மோசமான பொருட்களை அநியாயமான விலைக்கு விற்க மாட்டார்கள். பிற மனிதர்கள் மீது அன்பிருந்தால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வறுமையில் தவிக்கையில் நம்மால் குற்ற உணர்வில்லாமல் மிதமிஞ்சிய சுகபோகங்களை அனுபவிக்க இயலாது.

பிறர் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் செல்வதற்குப் பழகுகையில் அன்பு வற்றத் தொடங்குகிறது. அது அதிக பட்சம் ஓரிருவர்மீதுகூடச் செலுத்த முடியாவண்ணம் பற்றாக்குறை ஆகிறது. சுயநலம் அன்பைத் தின்ன ஆரம்பிக்கிறது. இதுதான் நம்மைச் சமூகத்துக்கு எதிரான மனிதர்களாக மாற்றுகிறது.

‘யாருக்கு என்ன நடந்தாலும் நம் வேலை நடந்தால் சரி’ என்பது பொது விதியாகிறது, பிழைக்கச் சொல்லித்தரும் கல்வி, அன்பைப் போதிக்கத் தவறுகிறது. பிறரை மிதித்துப் பெறும் வெற்றியைவிடப் பிறரை நேசித்துப் பெறும் தோல்வி மகத்தானது என்று அடுத்த தலைமுறைக்காவது சொல்லித் தர வேண்டும்.

அன்பை அள்ளித் தரும் மனம் விரிவடையும். உறுதி பெறும். பொலிவு பெறும்.

அன்பு காட்டுபவர்கள் முகத்தில் உள்ள பரவசக் களிப்பை பாருங்கள். அது ஆயிரம் பாடங்கள் சொல்லும். செடிக்கு நீர் ஊற்றும்போதோ, நாய்க்குச் சோறிடும் போதோ, பிள்ளைக்குப் பாலூட்டும்போதோ, ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதோ, ரசிகர்களுக்காகப் பாடகர் குழைந்து பாடும்போதோ, அன்புடன் கொடுக்கும் எல்லாத் தருணங்களிலும் மனிதர்கள் அழகாய்த் தெரிவார்கள்!

பெரிய அறிவும் சிறிய அன்பும் கொண்ட மனிதர்கள் வாழும் சமூகம் ஆபத்தானது. அன்பு கலக்காத அறிவு, நாசத்தை மட்டுமே நடத்திக் காட்டும்.

எல்லா உயிரும் ஓருயிரே என்று உணர்ந்து அன்பு செலுத்துவதுதான் பேரன்பு. அது தான் பேரறிவு. அழியாத அன்பைத் தர ஆயிரம் வழிகள் உள்ளன!

பேரன்பைப் பொழிவதே பேரானந்தம் என்று உணர்கையில் நம் மனம் சுகம் பெறும். வாழ்க்கை வளம் பெறும்!

(முற்றும்)

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

NEWS TODAY 2.5.2024