Showing posts with label தலையங்கம். Show all posts
Showing posts with label தலையங்கம். Show all posts

Monday, November 25, 2019

வேண்டாமே...! | ஊர், சாலைகளின் பெயா் மாற்றம் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 21st November 2019 01:51 AM |


ஊருக்கும் தெருவுக்கும் பெயரை மாற்றுவது என்பது ஆட்சியாளா்கள் அனைவரிடத்திலும் காணப்படும் விநோதப் போக்கு. அரசா்கள் காலத்திலிருந்து இன்றைய ஜனநாயக காலம் வரை உலகிலுள்ள எந்த நாடுமே இதற்கு விதிவிலக்கல்ல. மன்னராட்சி மனோபாவத்திலிருந்து மாறிவிட்ட பிறகும், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அறிவு மேம்பாட்டிற்குப் பிறகும் பெயா்களை மாற்றுவதன் மூலம் வரலாற்றுத் தவறுகள் திருத்தப்படுகின்றன என்று கருதுவது அறியாமை.

உத்தரப் பிரதேச அரசு, உலகறிந்த ஆக்ராவின் பெயரை மாற்ற முற்பட்டிருப்பது வியப்பை மட்டுமல்ல, வேதனையையும் ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அவா்கள் சாதிக்கப்போவது என்ன என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும், ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா மாவட்டம் என்றும், முகல்சராய் ரயில் நிலையத்தை தீன்தயாள் உபாத்யாய ரயில் நிலையம் என்றும் பெயா் மாற்றம் செய்ததைத் தொடா்ந்து, இப்போது உத்தரப் பிரதேச அரசின் பாா்வை உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இருக்கும் ஆக்ராவை நோக்கித் திரும்பியிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே இதுபோன்ற பெயா் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சில அறிவுபூா்வமானவை, நியாயமானவை.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, முன்பு சென்னை ராஜதானியிலிருந்த மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடாகவும், மைசூா் மாநிலம் கா்நாடகமாகவும் மாறியதில் நியாயம் இருக்கிறது. திருவிதாங்கூா், கொச்சி சமஸ்தானங்கள் சென்னை ராஜதானியிலிருந்த மலபாா் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு மாநிலமாக அறிவிக்கப்பட்டபோது, திருவிதாங்கூா் - கொச்சி மாநிலம் என்பது கேரளமாக மாறியதிலும் அா்த்தமிருக்கிறது.

தமிழகத்தில் ‘மயிலாடுதுறை’ மாயவரமாகவும், ‘மெட்ராஸ்’ சென்னையாகவும் மாறியதிலும், கா்நாடகத்தில் ‘பெங்களூா்’ பெங்களூருவாகவும், ‘ஷிமோகா’ ஷிவமோகாவாகவும் மாறியதிலும், கேரளத்தில் ‘ட்டிரவன்ரம்’ திருவனந்தபுரமாகவும் ‘கொய்லோன்’ கொல்லமாகவும், ‘காலிகட்’ கோழிகோடாகவும் மாறியதிலும் யாரும் தவறுகாண முடியாது. அதேபோல, அகில இந்திய அளவில் கல்கத்தா கொல்கத்தாவாகவும், பம்பாய் மும்பையாகவும், ஏன் அலாகாபாத் பிரயாக்ராஜ் ஆகவும் மாறியபோதும்கூட அதை விமா்சித்தவா்கள் குறைவு.

சென்னையில் ‘மவுண்ட் ரோடு’ அண்ணா சாலையான போதும், ‘எட்வா்ட் எலியட்ஸ் ரோடு’ டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையான போதும், ‘பீச் ரோடு’ காமராஜா் சாலையான போதும், ‘சைனா பஜாா்’ நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சாலையான போதும் எந்தவித வெறுப்போ, எதிா்ப்போ இல்லாமல் பெயா் மாற்றம் வரவேற்கப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சாலைகளின் பெயா்களை மாற்றும்போது அதில் கவனம் தேவை. புதிய பெயா்களை சாலைகளுக்குச் சூட்டும்போது தேவையில்லா குழப்பங்கள் ஏற்படுகின்றன. அந்த சாலை ஏற்படுத்தப்பட்டதன் காரணமோ, அல்லது அதற்கு பெயா் சூட்டப்பட்டதன் காரணமோ மறக்கடிக்கப்படுகிறது, மறக்கப்படுகிறது.

பெயா் மாற்றத்தின் மூலம் வரலாற்றை அழித்துவிட முடியாது என்கிற உண்மையை ஆட்சியாளா்கள் மறந்துவிடுகிறாா்கள். 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பப் புரட்சி, வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது. மன்னராட்சிக் காலம்போல, படையெடுத்து ஒரு நாட்டையே தரைமட்டமாக்கி புதியதொரு நாட்டை உருவாக்குவதோ, நகரத்தை நிா்மாணிப்பதோ இனிமேல் சாத்தியமில்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, சாலையின் பெயா்களையும், நகரங்களின் பெயா்களையும் மாற்றுவதன் மூலம் வரலாற்றை மறைத்துவிட முடியாது.

மிக அதிகமான பெயா் மாற்றங்களை சந்தித்த நகரம் தில்லியாகத்தான் இருக்கும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளா்களின் பெயா்கள் தாங்கிய சாலைகளுக்கு எல்லாம் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடா்ந்து புதிய பெயா்கள் சூட்டப்பட்டன. புது தில்லியின் மையப் பகுதியான கன்னாட் பிளேஸ், கன்னாட் சா்க்கஸ் இரண்டும் இந்திரா சவுக், ராஜீவ் சவுக் என்று மாற்றப்பட்டன. அவுரங்கசீப் சாலை முன்னாள் குடியரசுத் தலைவா் நினைவாக டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சாலையாக மாற்றப்பட்டது.

ஆட்சி மாற்றங்களைத் தொடா்ந்து பெயா் மாற்றங்கள் என்கிற வழக்கம் பொதுவிதியாகிவிட்டால், அதன் விளைவு குழப்பத்தில்தான் முடியும். ஒளரங்கசீப்பின் ஆட்சிக் காலம் பாராட்டும்படியான ஆட்சிக் காலம் அல்ல. அவா் பெரும்பான்மை இந்துக்களின் வெறுப்பை சம்பாதித்தவா் என்பதும் உண்மை. அவரது பெயரை அகற்றியதன் மூலம் ஒளரங்கசீப் இழைத்த கொடுமைகளையும் தவறுகளையும் வருங்கால சந்ததியினா் அறிந்து கொள்ளாமல் போவதற்கு வழிகோலியிருக்கிறாா்களே தவிர, பெயா் மாற்றத்தின் மூலம் வரலாற்றை திருத்தி எழுதிவிடவில்லை.

ஆக்ராவின் புராதனப் பெயா் என்ன என்பது குறித்து, பீம்ராவ் அம்பேத்கா் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையிடன் ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகம் பணித்திருக்கிறது. தாஜ்மஹாலைப் பாா்ப்பதற்கு உலகெங்கிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளால் அக்ரா நகரத்துக்கு ரூ.2,500 கோடி அளவில் வருவாய் கிடைக்கிறது. பெயரை மாற்றியதால் தாஜ்மஹால் முகலாய மன்னா் ஷாஜஹானால் மும்தாஜுக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் அல்ல என்று ஆகிவிடது. பெயரை மாற்றுவதால் வருவாயை இழப்பது என்ன புத்திசாலித்தனம்?

Tuesday, November 12, 2019

எம்.ஜி.ஆரின் பிம்பமும் ரசிகர் மன்றங்களும்
By வழக்கறிஞர் சி.பி. சரவணன் | Published on : 04th November 2019 05:03 PM 




எம்ஜிஆர் மறைந்து முப்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. எம்ஜிஆரை யார் என்றே தெரியாத ஒரு தலைமுறையும் தோன்றிவிட்டது. ஆனால் தமிழ் பொது சமூகத்தின் நினைவுகளில் எம்ஜிஆர் இன்றும் வாழ்கிறார். இப்போதும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அவர் கடவுள். அவரது பெயரைச் சொல்லியே இப்போதும் அவர் ஆரம்பித்த கட்சி ஆட்சிக்கு வருகிறது. கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்பும் அவரது நினைவு நாளின் போது வீதிக்கு வீதி அவரது படத்தை வைத்து தேங்காய், பழம், ஊதுவத்தி வைத்து வணங்குகிறார்கள். இப்படி ஒரு நினைவு நாளை நான் அறிந்த வரை தமிழகத்தில் வேறு எவருக்கும் அனுஷ்டித்துப் பார்த்ததில்லை.

ஒரு நடிகராகவோ அரசியல்வாதியாகவோ அல்ல; கிட்டத்தட்ட நாட்டுப்புற தெய்வமாகவே எம்.ஜி.ஆர் இங்கு திகழ்ந்தார். அவருக்காகப் பலர் அலகு குத்திக்கொண்டார்கள்; தீக்குளித்து இறந்தார்கள்; அவருடைய 'கட் அவுட்' தாங்கிய தேரின் இரும்புக் கொக்கிகளை ஒருவர் தன் முதுகுச் சதையில் பிணைத்துக்கொண்டு 9 கி.மீ., இழுத்துச் சென்றார். சபரிமலை யாத்திரைக்குப் போவதைப் போல் கடும் விரதமிருந்து பலர் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த சிறிய கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.

'தன் காதலியின் அருகில் இருக்கும் போது கூட ஏழைகளைப் பற்றியே எங்கள் தலைவர் சிந்தித்துக் கொண்டிருப்பார், தெரியுமா' என்கிறார் ஒரு ரசிகர். 'எப்படிச் சொல்கிறீர்கள்' என்று கேட்கப்பட்ட போது, ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு, 'அதில் அப்படித்தான் காட்டியிருக்கிறார்கள், பாருங்கள்' என்று பதிலளித்திருக்கிறார். எது நிஜம்?, எது நிழல்? என்று பிரிக்க முடியாத படிக்கு எம்.ஜி.ஆரின் பிம்பம் தமிழக மக்களின் மனதில் குறிப்பாக அவரது ரசிகர்களின் மனதில் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது

எம்ஜிஆரின் கதாநாயக பிம்பத்தை வலுவாக்குவதில் அவரது வில்லன்கள் முக்கியப் பங்கு வகித்தனர். நம்பியாரின் கதாபாத்திரத்தை மிக மோசமானதாக படைப்பதன் மூலம் தனது கதாபாத்திரம் மிக நல்லவனாக, மக்கள் மனதில் தங்கும் என்பதை உணர்ந்து தொடர்ந்து அதைச் செய்து வந்தார். அதேபோல், திரைத்துறையில் சக கலைஞர்கள் அவரை மரியாதையாக அழைக்கும் ‘வாத்தியார்’ போன்ற வார்த்தைகளை தேங்காய் சீனிவாசன், நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் மூலம் திரைப்படத்திலும் பேசவைத்தார். இதன்மூலம் பொதுமக்களிடையே எம்ஜிஆர் என்ற பிம்பம் எந்த மாதிரியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதை அவர் தனக்குத்தானே வடிவமைத்தார்.

பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்ஜிஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்ஜிஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்... என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.

இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப்பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து கெட்டவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன். இப்படி எத்தனை எத்தனையோ பிம்பங்கள்!

இந்த பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்ஜிஆரின் திரைப்படிமம் வெகு ஜனங்களின் மனவார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு, அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

எதிரிகளைப் பந்தாடும் எம்ஜிஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்ஜிஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்ஜிஆர் நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

தனது படங்களில் மது குடிக்காதவராக நடித்த எம்.ஜி.ஆர் தந்தை பெரியாரைப் போலவே இறுதிவரை தன் வாழ்வில் அதை கடைப்பிடித்தார். அது, பெண்கள் மத்தியில் அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சராக இருந்தபோது 1984ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவந்து திரையில் கதாநாயகனாகத் தோன்றிய தனது கதாபாத்திரங்களுக்கும் தமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என நிரூபித்தார்.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த எம்ஜிஆர் இயல்பாகவே தாய்ப்பாசம் மிக்கவராக இருந்தார். தனது திரைப்படங்களிலும் தாய்ப்பாசம் மிக்கவராக தோன்றினார். அது, அவரை தமிழக மக்களின் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது .

எம்ஜிஆரிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம். 'ஐயா, நான் நிஜமாகவே அவரைச் சாட்டையால் அடிக்கவில்லை; இது பாவனைதான்' என்று பலமுறை நம்பியார் விளக்கமளித்த போதும் ரசிகர்கள் ஏற்கவேயில்லை.

காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்ஜிஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம். ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்ஜிஆர் அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.

இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறன் வாய்ந்தவராக எம்ஜிஆர் உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ, வாலியையோ உணர்வோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்ஜிஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்ஜிஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை.

தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிச' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். இன்றும் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றும் ரஜினி, விஜய் போன்ற ஆக் ஷன் ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும் சிவாஜியின் பாதையில் செல்லும் கமல் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.

ரசிகர் மன்றம்

முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.

தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன், அண்ணா நம்பி, திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள். எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்.


சேஷன் அல்ல, விசேஷன்!| மறைந்த டி.என். சேஷன் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 12th November 2019 01:01 AM


எந்தவோா் ஆயுதமும் அதைப் பயன்படுத்துபவரைப் பொருத்துத்தான் வலிமை பெறுகிறது. அதேபோல, எந்த ஒரு பதவியும் அந்தப் பதவியில் யாா் அமா்கிறாா்கள் என்பதைப் பொருத்துத்தான் மரியாதை பெறுகிறது. தலைமைத் தோ்தல் ஆணையா் என்கிற பதவி திருநெல்லாயி நாராயண ஐயா் சேஷன் என்கிற டி.என். சேஷன் பதவியேற்ற பிறகுதான் அதற்குரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் பெற்றது. இந்தியாவின் 18-ஆவது அமைச்சரவைச் செயலராகவும், இந்தியாவின் 10-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராகவும் பதவி வகித்த டி.என். சேஷனின் மறைவு, அயோத்தி தீா்ப்பின் பின்னணியில் போதிய முக்கியத்துவம் போதிய பெறாமலேயே போய்விட்டது. தலைப்புச் செய்தியாக வேண்டிய ஒரு மறைவு, இணைப்புச் செய்தியாக மாறிவிட்டது. அதனால், டி.என். சேஷன் என்கிற ஆளுமையின் முக்கியத்துவம் எந்தவிதத்திலும் குறைந்துவிடாது.

1955-ஆவது ஆண்டின் தமிழ்நாடு பிரிவு இந்திய குடிமைப் பணி அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவருடைய அரசுப் பணியின் முதல் கால் நூற்றாண்டு காலம் தமிழக அரசு நிா்வாகத்தில்தான் கழிந்தது. பின்னாளில் தேசிய அளவில் அறியப்பட்ட டி.என். சேஷன், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியராகவும், பல்வேறு அரசுத் துறைகளின் நிா்வாகத்திலும் பணிபுரியும்போதே தனி முத்திரை பதித்தவா் என்பது பலருக்கும் தெரியாது. காமராஜா், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆா் என்று ஐந்து முதல்வா்களிடம் தமிழக நிா்வாகத்தில் பணியாற்றியபோதே டி.என். சேஷன் என்கிற பெயா் நோ்மைக்கும், பாரபட்சமின்மைக்கும் அடையாளமாக இருந்தது.

பல்வேறு முதல்வா்களுடன் பணியாற்றினாா் என்றாலும், எந்த ஒரு முதல்வருடனும் அவருக்கு சுமுகமான உறவு இருந்ததில்லை. சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளைத் தயக்கமில்லாமல் முகத்துக்கு நேரே நிராகரிக்கும் அவருடைய நோ்மை, ஆட்சியாளா்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது! கால் நூற்றாண்டு காலம் தமிழக நிா்வாகத்தில் இருந்த சேஷன், இங்கு தாக்குப்பிடிக்க முடியாமல்தான் மத்திய அரசுப் பணிக்கு மாறினாா்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைச் செயலராக அவா் இருந்தபோதுதான் வனப் பாதுகாப்பு என்பது கவனத்தை ஈா்த்தது. தனது அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் வனப் பகுதிகளில் எந்தவித வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று அவா் போட்ட உத்தரவு விரைவிலேயே அவரை அந்தத் துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாற்ற வழிகோலியது.

பிரதமா் ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மிக முக்கியமான அதிகாரிகளில் டி.என். சேஷனும் ஒருவா். உள்நாட்டு பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும், பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும் பணியாற்றிய டி.என். சேஷனை அமைச்சரவைச் செயலாளராக ஆக்கியவா் பிரதமா் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியின் பிரதமா் பதவி காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஒன்பது மாதங்கள் அமைச்சரவைச் செயலாளராக இருந்த டி.என். சேஷனை, அடுத்து வந்த வி.பி. சிங் அரசு ஓரங்கட்டி ஒதுக்கி வைத்தது. சந்திரசேகா் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, ராஜீவ் காந்தியின் பரிந்துரையில்தான் டி.என். சேஷன் தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டாா். அரசியல் சாசன அங்கீகாரம் பெற்ற தோ்தல் ஆணையத்தின் தலைமைப் பதவியில் டி.என். சேஷன் அமா்ந்த அந்த விநாடியில், சுதந்திர இந்தியாவின் ஜனநாயக வரலாறு புதிய பாதையில் நடைபோடத் தொடங்கியது.

தோ்தல் ஆணையம் என்பது அதுவரை அரசுத் துறையாக இருந்ததுபோய், தனக்கென சுய அதிகாரம் கொண்ட தன்னிச்சையான அமைப்பாக மாறியது. இந்தியத் தோ்தல் வரலாற்றை யாா் எழுதினாலும் ‘சேஷனுக்கு முன், சேஷனுக்குப் பின்’ என்று இரண்டு பிரிவுகளாகத்தான் எழுதியாக வேண்டும் என்கிற அளவில் தன்னுடைய ஆளுமையைப் பதிவு செய்திருப்பவா் டி.என்.சேஷன்.

வாக்காளா்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய தோ்தல் அடையாள அட்டை வழங்கியது, தோ்தல் செலவுகளுக்கு முறையான கணக்கு தரப்படுவதை உறுதிப்படுத்தியது, சுவரொட்டி விளம்பரங்கள், வாகனங்களில் வாக்காளா்களை அழைத்துச் செல்லுதல் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது, பிரசார நேரத்தை வரையறுத்தது, வேட்பாளா்கள் தாங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்கிற கருத்தை முன்மொழிந்தது என்று டி.என்.சேஷன் இந்தியத் தோ்தல் முறைக்கு அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது.

டி.என்.சேஷன் தலைமைத் தோ்தல் ஆணையரான பிறகுதான், இந்திய குடிமைப் பணியிலுள்ள அதிகாரிகள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் துணிச்சலைப் பெற்றாா்கள். சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும், பயன்படுத்த வேண்டும் என்பதை உணா்த்திய பெருமை டி.என். சேஷனுக்கு உண்டு. அதிகாரிகளின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் அரசியல் சாசனம் தந்திருக்கும் பாதுகாப்பையும் தனது செயல்பாட்டின் மூலம் உணா்த்திய டி.என்.சேஷனுக்கு அவா்கள் கடமைப்பட்டிருக்கிறாா்கள்.

அவரது முரட்டுத்தனமான பிடிவாதமும், துணிச்சலும் அவருக்கு ஆணவக்காரா், அகம்பாவம் பிடித்தவா், அல்சேஷன் என்றெல்லாம் பட்டப் பெயா்களை வாங்கிக் கொடுத்தன. ஆனால், அவா் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. சொத்து சோ்த்து வைக்க அவருக்குக் குழந்தைகள் கிடையாது. கடைசி வரை ஒரு கா்மயோகியாக வாழ்ந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.11) மறைந்த டி.என். சேஷன், இந்திய ஜனநாயகத்துக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்புதான் அவா் இந்தியாவுக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து.

Friday, November 1, 2019

பகுத்தறிவு சிரிக்கிறது!| ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்த தலையங்கம்
By ஆசிரியர் | Published on : 31st October 2019 10:41 AM

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்துக்குட்பட்ட நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தைக் காப்பாற்ற முடியவில்லை என்பது மிகப் பெரிய சோகம். சுமாா் 83 மணி நேரம் கடுமையான போராட்டத்துக்குப் பிறகும்கூட, 2 வயது சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனது, நாம் இன்னும்கூடப் போதுமான தொழில்நுட்ப வசதிகளைப் பெறாமல் இருக்கிறோம் என்பதைத்தான் எடுத்தியம்புகிறது.

ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும்போது அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. ஆழ்துளைக் கிணற்று விபத்துகளைத் தவிா்க்க உச்சநீதிமன்றம் 2010-ஆம் ஆண்டிலேயே வழிகாட்டி நடைமுறைகளை வரையறுத்திருக்கிறது. ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு உள்ளாட்சி நிா்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெறவேண்டும். தோண்டும்போதே சுற்றிலும் வேலி கட்டப்படுவதுடன், ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனத்தின் பெயா், நில உரிமையாளரின் பெயா், தோண்டும் கால அவகாசம் போன்றவை குறித்த தகவல் பலகை வைக்கப்பட வேண்டும்.

கிணறு தோண்டித் தண்ணீா் இல்லாமல் போனாலோ, தண்ணீா் வற்றிக் கைவிடப்பட்டாலோ உடனடியாக அதை மண் போட்டு நிரப்பி சிமெண்ட் போட்டு வாய்ப் பகுதியை அடைக்க வேண்டும். அல்லது குழாயின் மேற்பகுதியை மூடிபோட்டு அடைக்க வேண்டும். மூடிய தகவலை உள்ளாட்சி நிா்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததும், உயிரிழந்ததும் இதயம் உலுக்கும் சோகம் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தை அரசியலாக்க முற்படுவதும், நான்கு நாள்களாக அதை ஏதோ தேசியப் பேரிடா் போலக் காட்சி ஊடகங்கள் சித்தரித்ததும் அந்த சோகத்தையும் மீறி முகச் சுழிப்பை ஏற்படுத்தியது. குழந்தை சுஜித்தின் உயிரிழப்புக்குக் காரணம் பெற்றோா்கள்தான் என்கிற கசப்பான உண்மை மறைக்கப்பட்டு, அவா்களைத் தியாகிகளாக மாற்றும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனது தோட்டத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டிய சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் பயனற்றுக் கிடந்த ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் இருந்தது யாருடைய குற்றம்? தனது மகன் சுஜித்துக்குப் பதிலாகப் பக்கத்து வீட்டுக் குழந்தை அந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்திருந்தால், பிரிட்டோ ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டு அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஏன் மறந்து விடுகிறோம்?

அரசின் மெத்தனப் போக்கால் சுஜித் இறந்ததாகவும், ராணுவத்தின் உதவியை ஏன் நாடவில்லை என்றும் எதிா்க்கட்சித் தலைவா் குற்றஞ்சாட்டுகிறாா். அரசியல் கட்சித் தலைவா்களும், அமைச்சா்களும், தொலைக்காட்சிக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்து விளம்பரம் தேட நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் முகாமிட்டாா்கள். தமிழக அரசு ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி நிபுணா்களை ஏன் சென்னையிலிருந்து கொண்டு செல்லவில்லை என்று ஒருவா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறாா். தமிழகத்தில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன, அவற்றில் பயன்பாட்டில் இல்லாத கிணறுகள் எத்தனை என்று உயா்நீதிமன்ற நீதிபதிகளும் கணக்குக் கேட்கிறாா்கள்.

இதெல்லாம் போதாதென்று, முதல்வரும், அரசியல் கட்சித் தலைவா்களும் போட்டி போட்டுக்கொண்டு சுஜித்தின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவதில் முனைப்புக் காட்டுகிறாா்கள். எதற்காக சுஜித்தின் பெற்றோருக்கு இழப்பீடு? பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் காவு கொடுத்ததற்கா அல்லது ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் இருந்த குற்றத்துக்காகவா?

பொதுவாக, 6, 8,10,12 அங்குல விட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன. நூறு ஆழ்துளைக் கிணறு தோண்டினால் அதில் குறைந்தது 30 ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் கிடைக்காமல் போகும்.

ஆழ்துளை போடும்போது, மணல் விழக்கூடாது என்பதற்காக சுமாா் 20 அடி முதல் 60 அடி வரையிலான குழாயைப் பதிக்கிறாா்கள். ஆழ்துளையில் தண்ணீா் இல்லாவிட்டால் அந்தக் குழாயை மூடிபோட்டு அடைத்து விடலாம். விபத்து நேராது.

சில ஆயிரம் ரூபாயைச் சேமிக்க அந்தக் குழாயை வெளியே எடுத்து, அடுத்த ஆழ்துளைக் கிணறு தோண்ட பயன்படுத்துகிறாா்கள். ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில்லை. விளைவு? குழந்தைகளை அது காவு வாங்குகிறது.

இந்தியாவில் ஏறத்தாழ 2 கோடி 70 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டில் உள்ளதாகக் கணக்கு உள்ளது. தமிழகத்தில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன. 2006-ஆம் ஆண்டு தொடங்கிக் கடந்த 13 ஆண்டுகளில் இதுவரை சுமாா் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறு விபத்துச் சம்பவங்கள் தமிழகத்தில் நடத்திருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே 13 குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்திருக்கின்றன. அவா்களில் 2 குழந்தைகள் மட்டும்தான் காப்பாற்றப்பட்டிருக்கிறாா்கள்.

1987-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஜெசிகா என்கிற 18 மாதக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. 58 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அந்தக் குழந்தை மீட்கப்பட்டது. அந்த ஒரு சம்பவத்தில் பாடம் படித்தது அமெரிக்கா. இன்றுவரை ஆழ்துளைக் கிணறு விபத்து மீண்டும் அங்கே நடக்கவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யாமல் இருப்பதால், விதிமுறைகள் பின்பற்றப்படுவதை நிா்வாகம் உறுதிப்படுத்தாமல் இருப்பதால் நாம் பாடம் படிக்க மறுக்கிறோம்.

ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் வைத்திருப்போா் மீது (பிரிட்டோ ஆராக்கியராஜ் உள்பட) தயவு தாட்சண்யமில்லாமல் சட்டப்பூா்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கண்காணிக்காமல் விட்ட அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கும்.

குழந்தை சுஜித்தின் அகால மரணம் இன்னொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளா்கள் தொடா்ந்து விஷ வாயு தாக்கி இறந்திருக்கிறாா்கள் என்பது நமது அரசியல்வாதிகளுக்கும், காட்சி ஊடகங்களுக்கும் தெரியுமா? இந்த ஆண்டிலேயே தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 12 போ் கழிவுநீா் ஓடைகளில் இறங்கி உயிரிழந்திருக்கிறாா்கள். அவா்களுக்கு முறையான இழப்பீடு தரப்படுவதில்லை.

தமிழகத்தில்தான் மிக அதிகமான துப்புரவுப் பணியாளா்கள் உயிரிழக்கிறாா்கள். அவா்கள் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. அவா்களுக்கு ஜாதிப் பின்புலமோ, மதப் பின்புலமோ இல்லாததுதான் காரணமா? தலித்திய அரசியல்கட்சிகளும்கூட, துப்புரவுத் தொழிலாளா்கள் குறித்துக் கவலைப்படுவதில்லை, ஏன்? அவா்கள் கணிசமான வாக்கு வங்கியாக இல்லாமல் இருப்பதும், தலித்துகளில் அவா்கள் தீண்டத்தகாத தலித்துகளாகக் கருதப்படுவதும்தான் காரணமாக இருக்குமோ?

Saturday, September 14, 2019

மஹாளயபட்ச திதியில் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள்!

By DIN  |   Published on : 14th September 2019 03:40 PM 
mahalaya-amavasai-3

ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் மஹாளயபட்சம் ஆரம்பமாகும். இது, 15 நாட்கள் அதாவது புரட்டாசி மாதத்தில் வரும் (17.09.19 - 28.09.19) அமாவாசை வரையிலான காலம் மஹாளயபட்சமாகும்.
பித்ருக்களின் ஆராதனைக்கு உகந்த காலம் என்றும் சொல்லலாம். மஹாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் நம் இல்லத்தில் கூடும் நேரமே மஹாளய பட்சமாகும். முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமாகும். நற்கதி அடைந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாக மஹாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது.

நமது மூதாதையர்களின் ஆசிர்வாதம் நம்மைக் காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். அவன் வாழ்க்கையில் எப்பாடுபட்டேனும் முன்னுக்கு வந்துவிடுவான். ஆக, இந்தப் பதினைந்து நாட்களும் வீட்டை சுத்த பத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.

மஹாளயபட்சம் தொடங்கி அதாவது பிரதமை முதல் சதுர்த்தசி முடியும் வரை உள்ள ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்ப்போம். 
* முதல்நாள் - பிரதமை திதியில் தர்ப்பணம் செய்தால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.
* இரண்டாம் நாள் - துவிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள்.
* மூன்றாம் நாள் - திரிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
* நான்காம் நாள் - சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்தால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம்.
* ஐந்தாம் நாள் - பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்தால் செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
* ஆறாம் நாள் - சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்தால் பேரும் புகழும் கிடைக்கும்.
* ஏழாம் நாள் - சப்தமி திதியில் தர்ப்பணம் செய்தால் சிறந்த பதவிகளை அடையலாம். உத்யோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
* எட்டாம் நாள் - அஷ்டமி திதியில் தர்ப்பணம் செவதால் அறிவாற்றல் பெருகும்.
* ஒன்பதாம் நாள் - நவமியில் தர்ப்பணம் செய்தால் திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள்
பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
* பத்தாம் நாள் - தசமி திதியில் தர்ப்பணம் செய்தால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
* பதினொன்றாம் நாள் - ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள்.
* பனிரெண்டாம் நாள் - துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
* பதின்மூன்றாம் நாள் - திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.
* பதினான்காம் நாள் - சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும்.
* பதினைந்தாம் நாள் - மஹாளய அமாவாசை நாளாகும்.

இடைவிடாது தொடர்ந்து 15 நாட்களும் தர்ப்பணம் செய்தால் நம் முன்னோர்களின் ஆசியுடன், நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

Monday, August 26, 2019

தலையங்கம்

விண்ணைநோக்கி எகிறும் தங்கத்தின் விலை

உலகம் முழுவதிலும் தங்கத்திற்கென தனி மவுசு இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தங்கம் ஒரு தனி மதிப்புடன் உலவி வந்திருப்பதற்கு சரித்திர சான்றுகள் இருக்கின்றன.

ஆகஸ்ட் 26 2019, 04:00

உலகம் முழுவதிலும் தங்கத்திற்கென தனி மவுசு இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தங்கம் ஒரு தனி மதிப்புடன் உலவி வந்திருப்பதற்கு சரித்திர சான்றுகள் இருக்கின்றன. பண்டையகால மக்கள் குறிப்பாக மன்னர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை மிகப்பெருமையாக கருதி இருக்கிறார்கள். அதனால்தான் மன்னர்கள் இறந்தவுடனும், அவர்கள் குடும்பத்தினர் இறந்தவுடனும் அவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களோடு புதைக்கும் வழக்கம் இருந்தது என பல அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தங்க ஆபரணங்களுக்கு 7 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வரலாறு உண்டு. தொடர்ந்து இன்றையநாள் வரை ஆபரணங்களாக அணிவதற்கும், அதற்கும் மேலாக சேமிப்பாக முதலீடு செய்வதற்கும் தங்கம்தான் உயர்ந்ததாக கருதப்படுகிறது. பல இடங்களில் வசதி படைத்தவர்கள் வீடுகளில் மட்டுமின்றி, ஏழை–எளிய வீடு என்றாலும் திருமண பேச்சு நடக்கும்போது பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுகிறீர்கள்? என்று கேட்பதும் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ளது.

பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கிறது. ஆனால் தங்கத்தின் மதிப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக குடும்பங்களிலும் தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கம் காலம்காலமாக இருக்கிறது. குறிப்பாக விவசாய குடும்பங்களில் ஏதாவது பொருளாதார நெருக்கடி, அதாவது அவசர செலவுகள் வரும்போது உடனடி பணத்தேவைக்காக தங்கத்தை அடகு வைத்து பணம் வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலை இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள வீடுகளில் மட்டும் 20 ஆயிரம் டன்னுக்கும் மேலாக தங்கம் இருக்கிறது. மற்ற சேமிப்புகளைவிட, தங்கத்தில் செய்யப்படும் முதலீடு குறைந்த காலத்தில் அதிக வருவாய் கிடைக்கிறது என்றும் மக்களிடையே கருத்து நிலவுகிறது. இவ்வளவுக்கும் இந்தியாவில் தங்கம் கிடைப்பதில்லை. ஆண்டுதோறும் ஏறத்தாழ ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்க்கு அடுத்தாற்போல, அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருள் இந்தியாவில் தங்கம்தான். பல நாட்கள் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை அதன்பிறகு இடை இடையே சில நாட்கள் மட்டும் சற்று இறங்கியபிறகு, மீண்டும் உயர்ந்து விண்ணை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.29,440. அடுத்த ஒருசில நாட்களில் ஒரு பவுனின் விலை ரூ.30 ஆயிரத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண ஏழை–எளிய வீடுகளில்கூட இப்போது ஆவணி மாதம் பிறந்துவிட்ட நேரத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாமே என்று நினைப்பவர்கள் மனதில் எல்லாம் இந்த விலை உயர்வு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை உயர்வதற்கு இந்தியா எந்தவகையிலும் காரணமல்ல. பொதுவாக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகம் இருந்தால் தங்கத்தின் விலை குறையும். தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு குறையப்போகிறது என்ற அச்சமும், அமெரிக்கா–சீனாவுக்கு இடையே நடக்கும் வர்த்தகப்போர் காரணமாக, இது உறுதியாக நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும், சீனாவின் யுவான் நாணய மதிப்பு இறக்கம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்கம் என்று பல்வேறு சர்வதேச பிரச்சினைகளின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை ஏற்றத்துக்கான எந்த காரணமும் சீரடைவதுபோல் தெரியாததால், தங்கத்தின் விலை சமீபத்தில் குறைவதற்கான சாத்தியமே இல்லை. மொத்தத்தில், தங்கம் வாங்குபவர்களுக்கும், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கும் நிச்சயமாக இது ஒரு சுமைதான்.

Saturday, August 24, 2019

தலைவலியல்ல, புற்றுநோய்!

By ஆசிரியர் | Published on : 24th August 2019 01:33 AM

ஹாங்காங்கில் கடந்த மூன்று மாதங்களாகத் தொடரும் மக்கள் போராட்டம் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. சீனா ஒருபுறம் பொறுமை இழந்து வருகிறது என்றால், இன்னொரு புறம் ஆசியாவின் பொருளாதார மையங்களில் ஒன்றான ஹாங்காங்கில் அலுவல்கள் ஸ்தம்பித்திருக்கின்றன. ஹாங்காங் பிரச்னை காரணமாக சீனாவுக்கு வரும் முதலீடுகளில் தேக்கம் ஏற்பட்டிருப்பது அதன் ஏற்றுமதியையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. 

பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், 1997-இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சர்வாதிகார ஆளுமையில் உள்ள கம்யூனிஸ்ட் சீனாவைப் போல அல்லாமல், ஹாங்காங்கில் முன்பு போலவே ஜனநாயகம் தொடரும் என்கிற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஒரே நாடு இரண்டு நிர்வாக முறைகள் என்கிற அடிப்படையில் ஹாங்காங்கின் அரசை மக்களே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

கடந்த 20 ஆண்டுகளில் ஹாங்காங் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கைவிடப்படுகின்றன. தலைமை நிர்வாகியின்தேர்வுக்கு நேரடித் தேர்தல் என்பது கைவிடப்பட்டது முதல் ஹாங்காங் மக்கள் மத்தியில் சீன ஆட்சியாளர்கள் மீது ஒருவிதமான வெறுப்பும், சலிப்பும் ஏற்படத் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன்னால் குடைகளை ஏந்திக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் ஹாங்காங் வீதிகளில் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினார்கள். அதன் நீட்சியாகத்தான் இப்போதைய போராட்டத்தைக் கருத வேண்டும். 
 
ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி, சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சீனாவுக்கு அழைத்துப் போய் விசாரிப்பது என்று கூறப்பட்டது. அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமேயானால், அதைப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிரானவர்களை ஹாங்காங்கிலிருந்து அப்புறப்படுத்திவிட முடியும் என்கிற அச்சம்தான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம். 

மக்கள் போராட்டம் பெருமளவில் வலுத்தவுடன் அதை எதிர்கொள்ள முடியாமல், நாடு கடத்தல் சட்டத்தை தற்போதைக்கு நிறுத்திவைப்பதாக கேரி லாம் அறிவித்தார். போராட்டக்காரர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், ஒருவேளை நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது. 

ஒரு கட்டத்தில் ஹாங்காங்கின் நாடாளுமன்றக் கட்டடத்தைக் கைப்பற்றி போராட்டக்காரர்கள் சேதம் ஏற்படுத்தினார்கள். இரண்டு வாரங்கள் முன்பு ஹாங்காங் விமான நிலையம் போராட்டக்காரர்களால் நிறைந்தபோது, ஹாங்காங்கின் விமானப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இப்போதும்கூட, ஹாங்காங்கின் விமான சேவை தடைபட்டிருக்கிறது. இவையெல்லாம் மிக அதிகமான நிதி பரிவர்த்தனை நடக்கும் ஆசியாவின் பொருளாதார மையமான ஹாங்காங்கை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றன. 

நாடு கடத்தும் சட்டத்தை கேரி லாம் ஆரம்பத்திலேயே கைவிடாமல் போனதால், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் இப்போது அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. நாடு கடத்தும் சட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று கூறிய போராட்டக்காரர்கள், அடுத்தகட்ட கோரிக்கையாக தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தனர். இப்போது கேரி லாம் பதவி விலகினாலும்கூட, தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிடுவதாக இல்லை. நாடு கடத்தும் சட்டத்தைக் கைவிடுவது, கேரி லாம் பதவி விலகுவது, காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்குகள் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும் என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது வரை அவர்களது கோரிக்கைகள் நீண்டு கொண்டே போகின்றன.

கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் தொடரும் போராட்டத்தை, 1989-இல் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடந்த படுகொலையுடன் சிலர் ஒப்பிடுகிறார்கள். ஆனால், கம்யூனிஸ சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்த ஆயிரக்கணக்கான மாணவர்களை ஈவிரக்கம் இல்லாமல் தியானன்மென் சதுக்கத்தில் சுட்டுக் கொன்று போராட்டத்துக்கு முடிவு கட்டியதுபோல, ஹாங்காங்கை அடக்கிவிட முடியாது. இப்போது உலக வல்லரசாகியிருக்கும் சீனா, தன்னுடைய கெளரவத்தையும், பொருளாதார ஸ்திரத் தன்மையையும் ஹாங்காங்கில் அடக்குமுறை நடத்தி தொலைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. 

அமெரிக்காவின் ஆசிபெற்ற தனி நாடான தைவான் தீவு போராட்டக்காரர்களுக்கு உதவுகிறது என்கிற சீனாவின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கக்கூடும். சீனாவின் கையிலிருந்து ஹாங்காங் நழுவினால், அடுத்தகட்டமாக ஏற்கெனவே சீனாவுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பெளத்தர்கள் நிறைந்த திபெத்தும், உயிகர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியும் ஹாங்காங்கைத் தொடர்ந்து வெளியேற முற்படும். அதனால், ஹாங்காங்கை விட்டுவிடவும் முடியாமல், போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியாமல் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறது சீனா.
புரட்சியால் உருவான கம்யூனிஸ சீனா, இப்போது ஹாங்காங்கில் நடக்கும் போராட்டக்காரர்களின் புரட்சியால் அலமலந்து போயிருக்கிறது.

Thursday, August 22, 2019

வரவேற்கிறோம், ஆனால்...

By ஆசிரியர் | Published on : 22nd August 2019 01:43 AM

 நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்படுவதையும், மாவட்டங்கள் பிரிக்கப்படுவதையும், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்கப்படுவதையும் தவிர்க்க முடியாது. விடுதலைக்குப் பிறகு பெரிய மாநிலங்கள் பல பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சிறிய மாநிலங்களேயானாலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதற்கு ஹரியாணாவும் சத்தீஸ்கரும் எடுத்துக்காட்டுகள்.
ஒன்றுபட்டிருந்த சென்னை ராஜதானியில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்னாற்காடு, தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோவை, நீலகிரி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி என்று 12 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து 13-ஆக உயர்ந்தது.

கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இதுவரை ஐந்து புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். எட்டு மாதங்களில் மிக அதிகமான மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. நீண்டகால கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படுகின்றன என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
கடந்த ஜனவரியில் கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டமும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும் உருவாக இருப்பதாக ஜூலை மாதத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்போது தனது சுதந்திர தின உரையில் வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக இருப்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் மொத்தமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயரப்போகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக மட்டுமல்லாமல், அரசியல் காரணங்களுக்காகவும் பிரிக்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்துக்கு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அண்ணாவின் பெயரைச் சூட்டியதும், திமுக ஆட்சி அமைந்தபோது காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அண்ணாவின் பெயரைச் சூட்டியதும் அரசியலல்லாமல் வேறென்ன?

மக்கள்தொகைப் பெருக்கம் ஒருபுறம், மக்களுடைய எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பது இன்னொருபுறம், நிர்வாகத் தேவைகள் விரிவடைந்திருப்பது மற்றொருபுறம், ஒட்டுமொத்த சமஸ்தானத்தை திவான் ஒருவரே நிர்வகித்து வந்ததும், மாநிலங்களை ஆங்கிலேயே ஆளுநர்கள் தங்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் பழங்கதை. இன்று சாத்தியம் அல்ல.

மாவட்டங்கள் பிரிக்கப்படுவதும், சிறிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதும் தவிர்க்க முடியாதவை. மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் நிர்வாகச் செலவு கூடும் என்பதில் அர்த்தமில்லை. வரி வருவாய் அதிகரிக்கிறது என்பதையும் கணக்கில் கொண்டால், சிறிய மாவட்டங்கள் விரைவான வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதை உணர முடியும்.

மாவட்டங்களைப் பிரிக்கும்போது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பிரிப்பதால், தேவையில்லாத பிரச்னைகளும் முரண்களும் ஏற்படுகின்றன. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாகப் பிரிக்கப்படாமல் திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதன் விளைவால், இப்போதும் மயிலாடுதுறை மக்கள் மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்துக்கு திருவாரூர் வழியாகச் செல்ல வேண்டிய அவலம் தொடர்கிறது.

இப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து, அரக்கோணத்தை ராணிப்பேட்டை மாவட்டத்துடன் இணைக்காமல் காஞ்சிபுரத்துடன் இணைக்கவும், ஆம்பூரை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைக்காமல் வேலூரில் தொடரவும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
நாடாளுமன்றத் தொகுதிகள் மாவட்டமாக இருக்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டால், நிர்வாகம் மேம்படும் என்பது மட்டுமல்லாமல், அந்தந்த மாவட்ட மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு அது வழிகோலக்கூடும்.

நாடாளுமன்ற உறுப்பினரும், அப்படி அமையும் மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழங்க முடியும். அதுபோன்ற வரைமுறையை ஏற்படுத்தாமல் அரசியல் காரணங்களுக்காக மாவட்டங்கள் உருவாகும்போது, எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படாமல் போகும்.

மாவட்டங்களைப் பிரிப்பதற்கு முன்னால், முறையான ஆய்வு நடத்தப்பட்டு பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டு மக்கள் நலன், நிர்வாக வசதி ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்குவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டமாக திகழும் சேலம் பிரிக்கப்பட வேண்டுமென்றும், பொள்ளாச்சி தனி மாவட்டமாக வேண்டுமென்றும், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. இப்படியே போனால், பேரூராட்சிகளெல்லாம் மாவட்டமாக வேண்டும் என்கிற கோரிக்கை எழக்கூடும்.
மாவட்ட சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, நாடாளுமன்றத் தொகுதிகள் மாவட்டங்களாக அறிவிக்கப்படுவதுதான் நிரந்தரமான தீர்வாகஇருக்கும்!

Wednesday, August 7, 2019

மாற்றுமல்ல, மாற்றமுமல்ல!

By ஆசிரியர் | Published on : 07th August 2019 01:39 AM |

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க வகை செய்யும் மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் மருத்துவர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஊழல் புகாருக்கு உள்ளான இந்திய மருத்துவ கவுன்சில் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்குமே மாறுபட்ட கருத்து இல்லை. கேதன் தேசாய் என்பவரின் கைப்பாவையாகச் செயல்பட்டு வந்த இந்திய மருத்துவ கவுன்சில், மக்கள் நலன் கருதியோ, மருத்துவர்கள் நலன் கருதியோ செயல்படாமல் ஒருசில சுயநலவாதிகளின் நன்மைக்காக மட்டுமே இயங்கி வந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

அதே நேரத்தில், அதற்கு மாற்றாக இன்னோர் அமைப்பை உருவாக்கும்போது, ஏற்கெனவே இருந்த அமைப்பின் தவறுகள் திருத்தப்பட வேண்டுமே தவிர, அதன் நல்ல அம்சங்கள் மாற்றப்படுவது என்பது தவறான அணுகுமுறை. போதிய விவாதமும், கவனமும், அனைத்துத் தரப்பினரின் நன்மையும் ஆய்வு செய்யப்பட்டு தேசிய மருத்துவ ஆணைய மசோதா உருவாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுதோறும் அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ளும் முறைக்கு முற்றுப்புள்ளி, நுழைவுத் தேர்வுகளின் சுமையைக் குறைப்பது, தேசிய அளவில் மருத்துவக் கல்விக்கான சமச்சீரான தர நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்டவை அனைத்துமே தேவையான மாற்றங்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால், பாரம்பரிய மருத்துவம் பயின்றோர், சில அடிப்படை நவீன மருத்துவ சிகிச்சையை அளிக்க தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் அனுமதி வழங்கியிருப்பது விவாதப் பொருளானதில் வியப்படைய ஒன்றுமில்லை. அப்படி அனுமதிக்கும்போது அதன் தொடர்விளைவாக நாடு முழுவதும் போலி மருத்துவர்கள் உருவாகக் கூடும் என்பதையும், அதைக் கண்காணிப்பது இயலாத ஒன்று என்பதையும் மத்திய அரசு ஏன் உணர மறுக்கிறது என்று தெரியவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் மிக முக்கியமான விமர்சனம் இதுதான்.

இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆயிரம் பேருக்கு 0.6 பட்டதாரி மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். பாகிஸ்தானைவிட இந்தியாவில் பொதுமக்கள் - மருத்துவர்கள் விகிதம் குறைவாக இருக்கிறது. விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகியும்கூட, மருத்துவர்களின் எண்ணிக்கையை மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப நாம் அதிகரிக்காமல் இருப்பது வேதனைக்குரியது. இதற்குத் தீர்வு யார் வேண்டுமானாலும் மருத்துவம் பார்க்கலாம் என்று அனுமதிப்பதாக இருக்க முடியாது.
இந்தியாவில் 1,472 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைதான் காணப்படுகிறது. அதே நேரத்தில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்ற 4,701 மருத்துவர்கள் வெளிநாடுகளில் குடியேறி இருக்கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தவோ, அவர்கள் இந்தியாவில் பணிபுரிவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தவோ அரசு முற்படவில்லை.

அதுமட்டுமல்ல, இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்று வெளிநாடுகளுக்குப் போகாத மருத்துவர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளையும், தனியார் மருத்துவமனைகளையும் நாடுகிறார்களே தவிர, நகரங்கள் அல்லாத அரசு மருத்துவமனைகளில் பணிபுரியத் தயாராக இல்லை. இந்தப் பிரச்னைக்கு தேசிய மருத்துவ ஆணையத்தில் விடை காணப்படவில்லை என்பது மிகப் பெரிய குறைபாடு.

தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மருத்துவ பட்டப் படிப்புக்காகவும், முதுநிலை படிப்புக்காகவும் உள்ள இடங்களில் 50% இடங்களை மட்டுமே அரசுக்கு ஒதுக்கினால் போதும் என்கிற நிலைப்பாட்டை தேசிய மருத்துவ ஆணையம் முன்மொழிகிறது. ஒருபுறம் மருத்துவர்களின் தரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதற்காக நீட், நெக்ஸ்ட் போன்ற தகுதிகாண் தேர்வுகளை முன்மொழியும் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களில் 50% இடங்களுக்கான கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்கிற அனுமதி எப்படி சரியானதாக இருக்கும்?

மதிப்பெண் குறைந்தவர்கள் அதிக கட்டணத்தையும், நன்கொடையையும் வழங்கி மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வழிகோலும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா விமர்சிக்கப்படுவதில் வியப்பொன்றுமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சமச்சீராக பிரதிநிதித்துவம் பெறும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் மத்திய அரசின் அமைச்சரவைச் செயலர் தலைமையிலான தேர்வுக் குழுவால் நியமிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். தேசிய மருத்துவ ஆணையத்தின் முடிவுகளின் மீதான மேல்முறையீடுகளுக்கு மத்திய அரசைத்தான் நாட வேண்டுமே தவிர, அதற்கென்று அமைப்பு எதுவும் இல்லை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாக தேசிய மருத்துவ ஆணையம் இருக்குமே தவிர, மருத்துவர்களின் நலனோ, மருத்துவத்தின் நலனோ முன்னுரிமை பெறும் நிலைமை காணப்பட

Saturday, August 3, 2019

எங்கே மனசாட்சியின் குரல்?
By ஆசிரியர் | Published on : 02nd August 2019 01:47 AM 

ரத்தத்தை உறைய வைக்கிறது உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவமும், அதைத் தொடர்ந்து நடந்து வரும் நீதிக்கான போராட்டமும். பதவி பலம் உள்ளவர்களுக்கு எதிராக சாமானியக் குடிமகன் வழக்கைப் பதிவு செய்வதற்குக்கூட எதிர்கொள்ள வேண்டிய போராட்டத்தையும், அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் எப்படி அடிப்படை சட்ட நடைமுறைகளைக்கூட மாற்ற முடியும் என்பதையும் எடுத்துரைக்கிறது.
குல்தீப் சிங் செங்கர் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர். 2002 முதல் தொடர்ந்து நான்கு முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர். ஒருமுறை சமாஜவாதி கட்சி உறுப்பினராகவும் இருந்தவர். வேலைக்காகப் பரிந்துரைக் கடிதம் கேட்டு ஒரு பெண் அவரிடம் சென்றார். 

அந்தப் பெண்ணை - அப்போது அவர் மைனர் - செங்கரும் அவரது சகோதரரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். இது நடந்தது கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனக்கிழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கிறார். அரசியல் செல்வாக்குடையவர்கள் என்று தெரிந்தும், செங்கருக்கும் அவரது சகோதரருக்கும் எதிராகக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் நிலையத்தினர், குற்றவாளிகளின் பெயரைக்கூட அதில் குறிப்பிடவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏறத்தாழ ஓராண்டாகியும் தாங்கள் கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அது குறித்து விளக்கம் கேட்க முற்பட்டார் அந்தப் பெண்ணின் தந்தை. அதுதான் அவர் செய்த குற்றம். அவர்மீது பொய் வழக்கு சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த அந்தப் பெண்ணின் தந்தையை, செங்கரின் சகோதரரும், கூட்டாளியும் அடித்தே கொன்றிருக்கிறார்கள். போலீஸ் காவலில் இருந்த ஒருவர் ஏன், எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்துக்கூட முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

தனக்குக் காவல் துறையினரிடம் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த அந்தப் பெண், உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவுக்குச் சென்று, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டில் முன்னால் தீக்குளிக்க முற்பட்டபோதுதான், அந்தப் பிரச்னைக்கு ஊடக வெளிச்சம் கிடைத்தது. மக்கள் மன்றம் அந்தப் பிரச்னை குறித்து நிமிர்ந்து உட்கார்ந்து சிந்திக்கத் தொடங்கியது. அந்த அளவுக்கு நமது சமுதாயம் மரத்துப்போயிருக்கிறது என்பதன் அடையாளம் இது.

பொது வெளியில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. செங்கர் கைது செய்யப்பட்டார். ஆனால், அந்த வழக்கை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சிபிஐ, அதைக் கிடப்பில் போட்டது. அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருந்த மாமாவின் மீது காவல் துறை ஒரு வழக்கை ஜோடித்து அவரை சிறையில் தள்ளியது.
ரேபரேலியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாமாவைச் சந்திக்க அந்தப் பெண்ணும், அவரது இரண்டு சித்திமார்களும், வழக்குரைஞரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் காரில் ஒரு லாரி பலமாக மோதி ஏற்படுத்திய விபத்தில் இரண்டு சித்திகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதுதான் சிபிஐ விழித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் விழித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேச அரசு விழித்துக் கொண்டிருக்கிறது. ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ஜனநாயகம் எப்படிச் செயல்படுகிறது என்பதன் அடையாளம் இது.

காரில் மோதிய வாகனத்தின் எண் பலகை அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த வாகனத்தின் வேகமும், விதிகளை மீறித் தவறான பாதையில் வந்து மோதியிருக்கும் விதமும் இதற்குப் பின்னால் சதி இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால், உத்தரப் பிரதேச காவல் துறையைப் பொருத்தவரை, இது வெறும் சாலை விபத்தாகத்தான் தெரிகிறது. முதல் தகவல் அறிக்கையில் லாரியின் ஓட்டுநர் பெயரும், அந்த வாகனத்தின் உரிமையாளர் பெயரும்கூட இடம்பெறவில்லை என்பதை என்னவென்பது?
செங்கரின் ஆட்களால் தங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சம் குறித்தும், நீதி கேட்டும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அந்தப் பெண்ணின் தாயார் கடந்த ஜூலை 12-ஆம் தேதி எழுதிய கடிதம் அவரது பார்வைக்கே கொண்டு செல்லப்படவில்லை. கடந்த ஜனவரி மாதமே, இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி கோரி அவர் எழுதிய மனுவும் தலைமை நீதிபதியிடம் போய்ச் சேரவில்லை. உச்சநீதிமன்றத்தின் நிலைமையே இப்படி என்றால், இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா இல்லை, மாஃபியா ஆட்சியா என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
உச்சநீதிமன்றம் தலையிட்டிருக்கிறது. வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கான இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி அரசும், பாஜகவும் இந்தப் பிரச்னையை எப்படி கையாள்கிறது என்பதைப் பொருத்துத்தான் அவர்கள் மீதான நம்பகத்தன்மையும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் உறுதிப்படும்.

கடந்த மக்களவையில் 26% உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. 2019-இல் அமைந்த 17-ஆவது மக்களவையில் 43% உறுப்பினர்கள் கிரிமினல் குற்றப்பின்னணி உடையவர்கள். இவர்கள்தான் சட்டமியற்றுகிறார்கள்!

Thursday, May 30, 2019

தலையங்கம்

2–வது இன்னிங்சை தொடங்குகிறார் மோடி



இந்தியாவின் 14–வது பிரதமரான நரேந்திரமோடி 2–வது முறையாக இன்று மாலை பிரதமராக பொறுப்பு ஏற்கப்போகிறார்.

மே 30 2019, 04:00

இந்தியாவின் 14–வது பிரதமரான நரேந்திரமோடி 2–வது முறையாக இன்று மாலை பிரதமராக பொறுப்பு ஏற்கப்போகிறார். பொதுவாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடுதான் தேர்தலின்போது காணப்படும். ஆனால், பா.ஜ.க.வோ கடந்த தேர்தலின்போது 282 இடங்களில் தனித்து வெற்றிபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 303 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியாவை மட்டுமல்லாமல், உலகத்தையே வியக்கவைக்கிறது. நரேந்திரமோடி இன்று மாலைதான் பதவி ஏற்கிறார் என்றாலும், பதவி ஏற்றவுடன் மிக மின்னல்வேகத்தில் செயல்படப்போகிறார் என்பதை பிரதமரின் அலுவலகம், தற்போது பல்வேறு துறைகளுடன் தொடர்புகொண்டு அடுக்கடுக்காக பல தகவல்களை கேட்கும் வேகத்திலேயே தெரிகிறது.

பதவி ஏற்பு விழாவுக்கு கடந்தமுறை சார்க் நாடுகளை சேர்ந்த தலைவர்களை அழைத்திருந்தார். இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, ‘பிம்ஸ்டெக்’ என்று கூறப்படும் வங்காள விரிகுடா கடலின் ஓரமாக உள்ள வங்காளதேசம், இலங்கை, பூடான், நேபாளம், மியான்மர், தாய்லாந்து நாடுகளின் தலைவர்களையும், கிர்கிஸ்தான், மொரீசியஸ் தலைவர்களையும் அழைத்திருக்கிறார். இந்த பட்டியலின் அடிப்படையில், அவர் அழைப்புவிடுத்திருப்பதால், பாகிஸ்தான் இந்த பட்டியலில் வரவில்லை. இன்று பதவி ஏற்றதும், பிரதமர் அடுக்கடுக்கான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறார். அடுத்த சிலநாட்களில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டிய கட்டாயம் இருப்பதால், உடனடியாக பிரதமரும், புதிதாக பொறுப்பேற்கப்போகும் நிதி மந்திரியும் பட்ஜெட் தயாரிப்பில் மிகத்தீவிரமாக ஈடுபட வேண்டியநிலை உள்ளது. ஒவ்வொரு துறையிலும் அடுத்த 100 நாட்களில் நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பாஜ.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நிறைவேற்றவேண்டும். முதல்கட்டமாக வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தொழில்துறையிலும் வேலைவாய்ப்புகள் வேண்டும், வேளாண்துறையிலும் வேலைவாய்ப்புகள் வேண்டும், தொழில்துறையில் வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கவேண்டுமென்றால், தனியார் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். வெகுநாட்களாக தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பான நிறுவன வரிகுறைப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்புகள்.

விவசாயத்தை பொறுத்தமட்டில், கிராமத்தில் உள்ள விவசாயிகளின் பையில் பணம் இருந்தால் ஊரக பொருளாதாரம் உயரும் என்பது நியதி. எனவே, அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். 2022–ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போவதை ஒட்டி, அதை இலக்காக வைத்து பிரதமர் நரேந்திரமோடி 1,000 நாளில் அவரது அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய திட்டங்களை எல்லாம் வகுத்து செயல்படுவார் என்ற நம்பிக்கை நாட்டு மக்களுக்கு நிறைய இருக்கிறது. கடந்த தேர்தலின்போது அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘அனைவரோடும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம்’ என்ற முழக்கத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், இப்போது அவர் பேசும்போது, ‘இந்த முழக்கத்தோடு அனைவரின் நம்பிக்கையையும் பெற்று’ என்ற வாசகத்தை சேர்த்திருக்கிறார். ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களிடம் பேசும்போது, ‘நமக்கு எதிராக ஓட்டளித்தவர்களும் நம்மவர்கள்தான்’ என்று கூறியிருக்கிறார். இது தமிழக மக்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. தமிழக மக்களின் எதிர்பார்ப்பான கோதாவரி–காவிரி இணைப்பு திட்டத்துக்கான முயற்சிகளை உடனடியாக தொடங்கி, தமிழக மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும். மொத்தத்தில், இந்தமுறை அவரது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கப்போகிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அவரது 2–வது இன்னிங்சில் எத்தனை ரன்கள் குவிப்பார் என்பதை வருங்காலம் காட்டும்.

Thursday, May 23, 2019

தலையங்கம்

வாட்டி வதைக்கும் வறட்சி



தமிழ்நாட்டில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டினால் மக்கள் அல்லல்படுகிறார்கள்.

மே 23 2019, 04:00

தினமும் ‘தந்தி’ டி.வி.யைப் பார்த்தால் பல்வேறு இடங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் காலிக்குடங்களை வைத்துக்கொண்டு சாலையில் மறியல் செய்வதும், ஊருக்கு வெளியே ஒருசில கி.மீட்டர் தூரம் தலையில் குடத்துடன் சென்று சிறிய குட்டையில் தேங்கிக்கிடக்கும் மாசடைந்த நீரை வடிகட்டி எடுப்பதையும் பார்க்கமுடிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளிக்கும்போது, ‘பருவமழை சரியாக பெய்யாததால் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். எல்லா ஆறுகளும், குளங்களும், ஏரிகளும் சுத்தமாக வறண்டு போய்விட்டது. மலைப்பகுதிகளிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டதால் தினமும் யானைகள் உள்பட வனவிலங்குகள் மலையைவிட்டு கீழே இறங்கி தண்ணீருக்காக ஊருக்குள் நுழைந்து வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில், தண்ணீர் பஞ்சத்தைப்போக்க நிலத்தடி நீரைத்தான் நம்பி இருக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், அடிக்கடி பருவமழை பொய்த்துவிடுவதின் காரணமாக நிலத்தடி நீரை எடுத்து எடுத்து அதுவும் இப்போது அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்திற்கு போய்விட்டது. எல்லா இடங்களிலும் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் வற்றி போய்விட்ட நிலையில், மேலும் மேலும் ஆழப்படுத்திக்கொண்டே போய் பலநேரங்களில் நன்னீருக்கு பதிலாக உவர்நீர்தான் கிடைக்கிறது. தொடர்ந்து இரண்டு பருவமழையும் பொய்த்துவிட்டதால், மக்கள் படும்பாடு சொல்லில் அடங்காது.

தற்போது குடிநீர் சப்ளை செய்வதற்காக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக அடுத்து மழை வரும்போது, செறிவூட்டுவதற்காக இப்போதே எல்லா நீர்நிலைகள், வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டும். அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படவேண்டும்.

ஐக்கிய அரபு நாடுகளில் தண்ணீர் வளம் இல்லை. ஆனால் தண்ணீர் தட்டுப்பாடே கிடையாது. சாலைகளில் நடுவிலும், பூங்காக்களிலும் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. காரணம் கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் மூலமாக தங்கு தடையின்றி தண்ணீர் சப்ளை செய்யப்படுவதுதான். இந்த நிலையங்களின் எண்ணிக்கைகளை அடுத்த ஆண்டுக்குள் 3,688 ஆக உயர்த்தப் போகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 2 நிலையங்கள் மட்டும் சென்னையை அடுத்த நெம்மேலியிலும், மீஞ்சூரிலும் இருக்கிறது. 1,076 கி.மீட்டர் நீளம் கடற்கரை உள்ள தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் இத்தகைய நிலையங்களை அமைத்தால் குடிநீர் பற்றாக்குறையே ஏற்படாது. வாய்ப்பு இருக்கிறது. அதை பயன்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

அடுத்த ஆண்டுகளில் வரும் மழைகாலங்களில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை ஒரு சொட்டுகூட வீணாகாத அளவில் சேமித்து வைப்பதற்கான குளங்கள், குட்டைகளை இந்த வறட்சி காலங்களில் புதிதாக உருவாக்க வேண்டும். மொத்தத்தில், இந்த கடும் வறட்சியையும் சமாளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியொரு நிலைமை ஏற்படாத சூழ்நிலைகளையும் உருவாக்க வேண்டும்.

Wednesday, May 22, 2019

தலையங்கம்

தொடர் கதையா?, விடுகதையா?



உயிரியல் பாடத்தை முக்கிய பாடமாக எடுத்து படிக்கும் பிளஸ்–2 மாணவர்களின் கனவெல்லாம் மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்பதுதான்.

மே 22 2019, 04:00

உயிரியல் பாடத்தை முக்கிய பாடமாக எடுத்து படிக்கும் பிளஸ்–2 மாணவர்களின் கனவெல்லாம் மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்பதுதான். 2006–ம் ஆண்டு வரையில் மருத்துவக்கல்லூரியிலும், பல் மருத்துவக்கல்லூரியிலும் நுழைவுத்தேர்வு மூலமாகத்தான் மாணவர் சேர்க்கை நடந்தது. 2006–ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் காரணமாக, நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ்–2 தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையிலேயே இடம் கிடைத்தது. இதனால் ஏழை–எளிய, கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் கூட பிளஸ்–2–வில் நன்றாக படித்து மருத்துவ கல்வியில் சேரமுடிந்தது. பின்பு நாடு முழுவதும் ஒரேமாதிரியான நீட் தேர்வு நடத்தி, மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்று பலத்த எதிர்ப்பு அனைத்து தரப்பிலிருந்தும் எதிரொலித்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டிலும், தமிழ்நாட்டின் வேண்டுகோள் எடுபடாததால் 2017 முதல் நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த ஆண்டும் நீட் தேர்வு மூலம்தான் நடக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘நீட் தேர்வை உடனடியாக ரத்துசெய்ய தி.மு.க. வலியுறுத்தும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘தமிழக மாணவர்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டங்களில் தக்க தகுதியினை பெறும் காலம்வரை நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று அ.தி.மு.க., மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘ஒருசில மாநில மாணவர்களிடையே பாகுபாடு ஏற்படுத்துவதாக இருக்கிறது, நீட் நுழைவுத்தேர்வு. மேலும், அந்தந்த மாநில மாணவர்களை அங்கேயே உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர்த்துக்கொள்வதில் மாநில அரசுக்குள்ள உரிமையில் இத்தேர்வு தலையிடுவதாகவும் இருக்கிறது. அதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அந்தந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக்கல்வியின் தகுதிவாய்ந்த அமைப்பு ஒப்புதலின்படி, நீட் தரத்தில் மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார கூட்டங்களில் இந்த கருத்துதான் எல்லோராலும் பேசப்பட்டது. தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராகுல்காந்தி, தேனி, மதுரை கூட்டங்களில் இதைத்தான் முக்கியமாக பேசினார். ‘தமிழக மக்கள் நீட் தேர்வை வேண்டாம் என்று சொன்னால், நாங்கள் நிச்சயமாக அதை ரத்து செய்துவிடுவோம். நீட் போன்ற பிரச்சினைகளில் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்று தேர்தல் அறிக்கையிலும் அதை குறிப்பிட்டுள்ளோம்’ என்று கூறினார். அதேநாளில் சென்னை வந்த மத்திய மந்திரி பியூஸ்கோயல், ‘பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவோம். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டியதில்லை. இந்தத்தேர்வு தமிழிலும் நடக்கும். அ.தி.மு.க. அரசாங்கத்தை நாங்கள் இந்த வி‌ஷயத்தில் சமாதானம் பேசி ஏற்க செய்வோம்’ என்று கூறினார். ராகுல்காந்தி, பியூஸ்கோயல் இருவருமே தங்கள் கருத்தை வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்கள். மாணவர்களிடையே, அவர்கள் பெற்றோர்களிடையே இப்போதுள்ள கேள்வி, அடுத்த ஆண்டு நீட் தேர்வு இருக்குமா?, ரத்து செய்யப்படுமா? என்பதுதான். நீட் தேர்வு தொடர்கதையாக இருக்கப்போகிறதா?, விடுகதையாக முடிந்துவிடப்போகிறதா? என்பது நாளை தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.

Saturday, May 11, 2019


அச்சுறுத்துகிறது போதை பீதி!


By ஆசிரியர் | Published on : 10th May 2019 03:08 AM

இத்தனை நாளும் மதுப் பழக்கத்தால்தான் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது பொள்ளாச்சியிலும், மாமல்லபுரத்திலும் காவல் துறையினரால் நடத்தப்பட்ட சோதனை. மிகப் பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் போதை மருந்துப் பழக்கம் அதிகரித்து வருவது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.


பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் சொகுசு ஓய்வு விடுதியில் (ரிசார்ட்) கடந்த சனிக்கிழமை அதிகாலை வேளையில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின்போது அங்கே இளைஞர்களின் உல்லாச விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் 160-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு போதைப் பொருள்களுடன் சனி, ஞாயிறு வார விடுப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இவர்களில் 112 பேர் கஞ்சா, அபின், கோகைன், போதை மாத்திரைகள், போதை மருந்து உள்ளிட்டவையின் போதையில் காணப்பட்டனர். 


போதை மருந்து உல்லாசத்தில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞர்களில் பெரும்பாலோர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் அனைவரும் சமூக ஊடகங்களின் மூலம் போதை மருந்துகளுக்காக இணைக்கப்பட்டிருப்பவர்கள். ஒவ்வொரு வாரக் கடைசியிலும் இதுபோல இளைஞர்கள் 24 மணிநேர போதை விருந்துகளுக்கு சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இணைகிறார்கள். ஒவ்வொரு மாணவரும் நுழைவுக் கட்டணமாக ரூ.1,200 செலுத்துகிறார்கள்.


சோதனை நடத்தப்பட்ட தனியார் சொகுசு ஓய்வு விடுதி எந்தவித உரிமமோ, அனுமதியோ பெறாமல் நடத்தப்பட்டு வந்தது அப்போதுதான் தெரியவந்தது. காவல் துறையினருக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரியாமல் சொகுசு ஓய்வு விடுதி நடத்திவிட முடியும் என்பதேகூட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.


விடுதி உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 14 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 28 வயது ரஷியர் ஒருவரும் அடக்கம். அந்த மாணவர்களுக்கு, அவர்களுக்குத் தேவைப்படும் போதைப் பொருள்களை விற்பனை செய்வது அந்த ரஷியர்தான் என்று கூறப்படுகிறது. இதுபோல, கோவை மாநகரத்தைச் சுற்றி எத்தனை விடுதிகள் செயல்படுகின்றன, போதை விருந்துக்காக எத்தனை சமூக ஊடகக் குழுக்கள் இருக்கின்றன, அவற்றில் தொடர்புடைய இளைஞர்களின் எண்ணிக்கைதான் எவ்வளவு என்பன குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டால் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரக்கூடும். 


கோவையில் மட்டும்தான் அப்படி என்று ஒதுக்கிவிட முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது கடந்த திங்கள்கிழமை அன்று சென்னை மாமல்லபுரத்தில் சோதனையில் பிடிபட்ட சட்டவிரோதமான போதை விருந்து. மாமல்லபுரத்திலுள்ள மூன்று நட்சத்திர விடுதி ஒன்றில் காவல் துறையினர் திங்கள்கிழமை அதிகாலை வேளையில் நடத்திய சோதனையில் பொள்ளாச்சியைப் போலவே போதையில் மிதக்கும் 160 இளைஞர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். காவல் துறையின் வலையில் அகப்பட்டவர்களில் வெளிநாட்டவர் ஒருவரும், 7 பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மாமல்லபுரம் போதை விருந்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவருமே 18 முதல் 25 வயதுப் பிரிவினர். பொள்ளாச்சியில் போதை விருந்துக்கு நுழைவுக் கட்டணம் ரூ.1,200 என்றால், அதுவே மாமல்லபுரத்தில் ரூ.3,000. போதை விருந்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து மது புட்டிகள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்கள், எல்.எஸ்.டி. எனப்படும் போதை மருந்து, போதை மாத்திரைகள், கோகைன், மரிஜ்வானா போன்றவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. 


பொள்ளாச்சியைப் போலவே மாமல்லபுரம் போதை விருந்தும் சமூக ஊடகக் குழுக்கள் மூலம்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கலந்துகொண்ட இளைஞர்கள் அனைவரும் சென்னையிலுள்ள பல பிரபல கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவியர். இவர்களில் 25 பேர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என்றால், 31 பேர் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள். 


இதுவரை இந்தியாவிலேயே பஞ்சாபிலும் தில்லியிலும்தான் மிக அதிகமான அளவில் இளைஞர்கள் மத்தியில் மது அல்லாத ஏனைய போதை மருந்துப் பழக்கங்கள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. பஞ்சாபில் ஆண்டுதோறும் சுமார் ரூ.7,500 கோடி அளவில் போதை மருந்து விற்பனை நடைபெறுவதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆய்வு தெரிவித்தது. அந்த ஆய்வின்படி, பஞ்சாபில் 2.3 லட்சம் பேர் அபின் அடிமைகளாகவும், 1.23 லட்சம் பேர் ஹெராயின் என்கிற போதைமருந்துக்கு அடிமைகளாகவும் இருப்பதாகக் கூறப்பட்டது. 


பொள்ளாச்சியும் மாமல்லபுரமும் தெரிவிக்கும் தகவல் என்னவென்றால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபில் காணப்பட்ட நிலைமை இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பரவி வருகிறது என்பதுதான். பொள்ளாச்சியும் மாமல்லபுரமும் ஏதோ விதிவிலக்குகள் அல்ல. அவற்றை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாகத்தான் நாம் காண வேண்டும். 


தமிழகத்தின் நகர்ப்புறங்களில் மட்டும்தானா இளைஞர்கள் மத்தியில் போதை மருந்து பாதிப்பு காணப்படுகிறது, இல்லை, சிறுநகர் பகுதிகள் வரை பரவிவிட்டிருக்கிறதா என்பது குறித்து உடனடியாகத் தீவிர ஆய்வு நடத்தியாக வேண்டும். இணையதள போதை மருந்துக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு, போதை மருந்துக்கு அடிமையாகி இருக்கும் இளைஞர் கூட்டத்தை மீட்பதற்கான போர்க்கால நடவடிக்கையை அரசும், கல்லூரிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முடுக்கிவிட்டாக வேண்டும்!

Tuesday, May 7, 2019

தலையங்கம்

இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையா?


t
நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக்கல்லூரிகள், மாணவர் சேர்க்கைக்காக தேசிய தகுதிக்காண் நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் நீட்தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

மே 07 2019, 00:19

கடந்த 2 ஆண்டுகளாக நீட்தேர்வை மத்தியசெகண்டரி கல்விவாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தியது. இந்த ஆண்டு தேசிய தேர்வுகள் முகமை இந்தத்தேர்வை நடத்தியது. அரசியல் ரீதியாக நீட்தேர்வு வேண்டாம் என்று தமிழ்நாட்டில் சொன்னாலும், இந்த ஆண்டு நீட்தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கையை பார்த்தால், அகில இந்தியாவிலேயே முதல் இடத்தில் மராட்டியமும், 2-வது இடத்தில் உத்தரபிரதேசமும், 3-வது இடத்தில் தமிழ்நாடும் இருக்கிறது. இந்தியா முழுவதும் நீட்தேர்வு எழுத 15 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 14 நகரங்களிலுள்ள 188 மையங்களில் 1,34,711 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட்தேர்வை எழுதியிருக்கிறார்கள்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் இந்தத்தேர்வு நடந்தது. தமிழ்நாட்டில் மாணவர்கள் 3-வது ஆண்டாக இந்தத்தேர்வை எழுதினார்கள். கடந்த ஆண்டைப்போல் இல்லாமல், இந்தமுறை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பம் செய்த மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். நீட்தேர்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணிவரை நடந்தது. ஆனால், 12 மணிக்கே மாணவர்கள் வந்துவிடவேண்டும் என்று கூறப்பட்டது. இந்தத்தேர்வு எழுத மையங்களுக்குள் அனுமதிக்கப்படும் முன்பு மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மிகக்கடுமையான சோதனைகள் நடந்தன.

முழுக்கை சட்டை அணிந்து வந்தவர்களின் சட்டை அரை கையளவிற்கு வெட்டியபிறகுதான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலில் ஷூக்கள், ஹைஹீல் செருப்புகள் அணிய அனுமதியில்லை. மணிபர்ஸ், பெல்ட், கைக்கடிகாரம், செல்போன் என்று எதையுமே கொண்டுபோக அனுமதிக்கவில்லை. மாணவிகளை பொறுத்தமட்டில், கம்மல், மூக்குத்தி, கொலுசு, தலையில் மாட்டப்பட்டிருந்த கிளிப், ஹேர்பேண்ட், ரப்பர்பேண்ட் என எல்லாவற்றையும் கழட்டிக்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால், மாணவிகள் தலைவிரி கோலமாக சென்று தேர்வு எழுதும்நிலை ஏற்பட்டது. காதுகளுக்குள் டார்ச்லைட் அடித்தும் சோதனை நடத்தப்பட்டது. பல மாணவ-மாணவிகள் கைகளில் கட்டப்பட்டிருந்த மதரீதியிலான கயிறுகளும் அகற்றப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலான கொடுமை மாணவிகள் அணிந்த துப்பட்டாவையும் கழற்றி வைத்துவிட்டு போக சொல்லிவிட்டார்கள்.

மாணவர்களோடு சேர்ந்து தேர்வுமையத்தில் உட்காரவேண்டிய பல மாணவிகள் துப்பட்டாவை கழற்ற சொல்லிவிட்டதால் கூனி குறுகி அவமானத்துடன் உள்ளே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், தெளிவான மனதுடனும் தேர்வு எழுத சென்றால்தான் அவர்களால் தேர்வில் முழுகவனமும் செலுத்தமுடியும். ஆனால், நீட்தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையற்ற கட்டுப்பாடுகளுடன் உள்ளே அனுப்பியதால் மனஅழுத்தத்துடனே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிவில் சர்வீசஸ் தேர்வு நடக்கிறது, பல்கலைக்கழக தேர்வுகள் நடக்கிறது, எத்தனையோ நுழைவுத்தேர்வுகள் நடக்கின்றன.

எங்கும் இல்லாத கட்டுப்பாடு நீட்தேர்வுக்கு மட்டும் ஏன் இப்படி தேவையில்லாமல் விதிக்கப்படுகிறது? என்பதுதான் மாணவர்களின் கேள்வி. இனிவரும் ஆண்டுகளிலாவது மாணவர்களுக்கு இவ்வளவு தேவையற்ற கட்டுப்பாடுகள் இல்லாமல், மற்ற தேர்வுகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை மட்டும் விதித்து தேர்வுஎழுத அனுமதிக்கவேண்டும்.

Monday, May 6, 2019

வரும்முன் காத்தோம்...

By ஆசிரியர் | Published on : 06th May 2019 02:55 AM 

ஒடிஸா மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. பெருமளவிலான சேதம் ஏற்பட்டிருந்தாலும்கூட, அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுத்தாமல் பானி புயல் தனது சீற்றத்தை வெளிப்படுத்தி ஓய்ந்திருக்கிறது. ஒடிஸா அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது.

இந்திய மாநிலங்களில் கடந்த நூறாண்டுகளில் சுமார் நூறு புயல்களால் தாக்கப்பட்டிருக்கும் மாநிலம் ஒடிஸா. 20 ஆண்டுகளுக்கு முன்பு 250 கி.மீ. வேகத்தில், 1999 அக்டோபர் 29-ஆம் தேதி ஒடிஸாவின் தலைநகர் புவனேஸ்வரத்தைத் தாக்கிய கடும் புயலுக்கு அடுத்தபடியாக இப்போது பானி புயல் 160 முதல் 175 கி.மீ. வேகத்தில் அந்த மாநிலத்தைத் தாக்கி ஓய்ந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய புயலில் 9,688 பேர் உயிரிழந்தார்கள் என்றால், இந்த முறை ஒடிஸா அரசின் முன்னேற்பாடுகளால் உயிரிழப்புகள் சுமார் 34 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில் ஒடிஸாவையும் வங்கக் கடலோரத்தையும் நான்கு கடுமையான புயல்கள் தாக்கியிருக்கின்றன. இப்போது பானியுடன் சேர்த்து எண்ணிக்கை ஐந்தாகிறது. ஒடிஸா மாநிலத்தின் 13 மாவட்டங்களை பானி புயல் சின்னாபின்னமாக்கி நகர்ந்திருக்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். எல்லா அத்தியாவசியத் தேவைகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொடர்பு முற்றிலுமாக இல்லாத நிலை. வீடுகள், வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சாலைகள், பாலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட எல்லா கட்டமைப்பு வசதிகளும் பானி புயலின் கொடூரத் தாக்குதலில் சிதைந்து கிடக்கின்றன.

புரி, கோர்தா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன என்றால், கடலோர மாவட்டங்களான கட்டக், பத்ரக், கேந்திராபரா, ஜகத்சிங்பூர், பாலாசோர், மயூர்பன்ஜ், கியோன்ஞ்சர், தென்கானால், நயாகர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கட்டமைப்பு வசதிகள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, தகவல் தொடர்பு இணைப்பு ஆகியவை அரசுக்கு மிகவும் சவாலாக உயர்ந்திருக்கின்றன. நல்லவேளையாக விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டாலும்கூட, விமானப் போக்குவரத்தைத் தாமதமில்லாமல் தொடங்க முடிந்திருக்கிறது. புவனேஸ்வர் ரயில்நிலையம் சிதைந்து கிடந்தாலும்கூட, ரயில் தொடர்பு இன்னும் ஓரிரு நாள்களில் சீரமைக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
பானி புயலை எதிர்கொள்ள மாநில அரசும், பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினரும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. ஏறத்தாழ 11 லட்சத்துக்கும் அதிகமானோர் புயல் தாக்குவதற்கு முந்தைய நாளே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதை அசுர சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோரும், புரி மாவட்டத்தில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பலரும் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற மறுத்த நிலையில், பிரச்னையின் உக்கிரத்தை நிவாரணப் பணியினர் அவர்களுக்கு எடுத்துச்சொல்லி ஒப்புக் கொள்ள வைத்தது மிகப் பெரிய சாதனை.
400-க்கும் அதிகமான பாதுகாப்பு மையங்கள், சுமார் 1,000 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கெல்லாம் மக்கள் தங்க வைக்கப்பட்டனர். புயல் பாதிப்புப் பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகளுக்காக 300 பேரிடர் நிர்வாகக் குழுவினர் முன்னெச்சரிக்கையாக அமர்த்தப்பட்டனர்.

 1,000-க்கும் அதிகமான மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

"ஒவ்வோர் உயிரும் முக்கியமானது' என்பதுதான் நிவாரணப் பணியினருக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் விடுத்திருந்த செய்தி. 1,000-க்கும் அதிகமாக பிரசவத்திற்குக் காத்திருந்த பெண்கள் முன்னுரிமையுடன் மருத்துவமனைகளில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்கு முன்னால் கடந்த சில ஆண்டுகளில் நாம் சந்தித்த ஹுட்ஹுட், பைலின், டிட்லி, தானே, வர்தா, ஒக்கி, கஜா புயல்களிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் அனுபவ ரீதியாக அறிந்து கொண்ட பாடங்கள், பானி புயலை அதிக உயிரிழப்பில்லாமல் எதிர்கொள்ள உதவியது எனலாம்.
பானி புயல் பூமத்திய ரேகைக்கு அருகில் உருவாகி கடலிலேயே பல நாள்கள் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. அதனால், கடலிலிருந்து கடல் வெப்பத்தால் உருவாகும் ஈரப்பசையுள்ள காற்றை உள்வாங்கியிருந்தது. அதிசக்தி வாய்ந்த புயல் உருவாகி வருவதை முன்கூட்டியே அறிந்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

வங்கதேசத்தால் சூட்டப்பட்டிருக்கும் "ஃபோனி' ("பானி' புயலுக்கு "ஃபோனி' என்பதுதான் சரியான உச்சரிப்பு.) என்கிற பெயருக்கு நல்ல பாம்பின் படம் என்று பொருள். நல்ல பாம்பின் சீற்றத்தைப் போலவே பானி புயலும் ஒடிஸாவில் தனது சீற்றத்தைக் காட்டி மறைந்திருக்கிறது.
இதுபோன்ற இயற்கைப் பேரிடர் பாதிப்புகளுக்கு பருவநிலை மாற்றமும் ஒரு முக்கியமான காரணம் என்று யுனிசெஃப் அமைப்பு எச்சரித்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் கடல்நீர் அளவால் புயல் உருவாகிறது என்றும், அதனால் கடலோரப் பகுதிகளில் பலத்த மழையுடன் பாதிப்புகள் ஏற்படுவதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்திருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க முனைப்புடன் நடவடிக்கை எடுக்காமல் போனால், கடலோரப் பகுதிகள் இதுபோல புயலால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது.

Thursday, May 2, 2019

வரவேற்புக்குரிய தீர்ப்பு!

By ஆசிரியர் | Published on : 02nd May 2019 01:32 AM

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையேயான பிரச்னை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் தெளிவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியல் சாசனத்தின் உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் தீர்ப்பாக அமைந்திருப்பதால், இனி வருங்காலத்தில் இந்தியாவில் ஆளுநர் முதல்வர் அதிகாரப் பகிர்வு குறித்த பிரச்னைகள் எழும்போதெல்லாம் இந்தத் தீர்ப்பு மேற்கோள் காட்டப்படும்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டது முதலே, வே. நாராயணசாமி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் தொடங்கிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் துணைநிலை ஆளுநர் அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தொடங்கியபோது அதிகாரிகள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர். அரசுக்கு இணையாக ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது, அரசு ஆவணங்களை அதிகாரிகளிடம் கோரிப்பெறுவது, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பது என்று துணைநிலை ஆளுநர் செயல்படத் தொடங்கியபோது புதுச்சேரி அரசு அநேகமாக ஸ்தம்பித்துவிட்ட நிலையை எட்டியது
.
பிரச்னை கைமீறிப் போனபோது, புதுச்சேரி முதல்வரும் அமைச்சர்களும் துணைநிலை ஆளுநர் மாளிகை முன்னால் தெருவில் உட்கார்ந்து போராட வேண்டிய கேலிக்கூத்தான சூழல் ஏற்பட்டது. அந்த நிலையில்தான் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். 

ஆளுநர்களுக்கும், முதல்வர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது என்பது புதிதொன்றுமல்ல. 198384இல் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி. ராமாராவ் ஆந்திர முதல்வராக இருந்தபோது, மத்திய காங்கிரஸ் ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தாகூர் ராம்லால் அவருக்குக் கொடுத்த தொந்தரவுகள் சொல்லி மாளாது. இதய அறுவைச் சிகிச்சைக்காக முதல்வர் என்.டி. ராமாராவ் அமெரிக்கா சென்றிருந்தபோது, ஆளுநர் ராம்லால் நிதியமைச்சராக இருந்த பாஸ்கர் ராவை முதல்வராக்கி மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார். பெரும் போராட்டத்திற்குப் பிறகு ராமாராவ் தன்னுடைய சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபித்து ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டியிருந்தது.

கேரளத்தில் ஈ.கே. நாயனார் முதல்வராக இருந்தபோது, அப்போதைய ஆளுநராக இருந்த ராம்துலாரி சின்ஹா இடதுசாரி கூட்டணி அமைச்சரவைக்கு ஏற்படுத்திய பிரச்னைகள் ஏராளம். திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகையில் இருந்துதான் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியே செயல்படுகிறது என்று விமர்சிக்கப்படும் அளவுக்கு ஆளுநர் ராம்துலாரி சின்ஹா செயல்பட்டார். அதேபோல, குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது ஆளுநராக இருந்த கமலா பெனிவாலுக்கும் அவருக்கும் நடந்த பனிப்போர் உலகறிந்த ரகசியம். 
 
ஆளுநர்கள் நியமனம் குறித்து அரசியல் சாசன சபை மிகவும் விரிவாகவே விவாதித்தது. ஜவாஹர்லால் நேரு, கே.எம். முன்ஷி, பி.எஸ். தேஷ்முக் உள்ளிட்ட பலர், தனது அரசியல் சாசனக் கடமைகளை நிறைவேற்றும் அளவிலான அதிகாரங்களுடன் ஆளுநர்கள் மாநில நிர்வாகத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கருதினர். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தும் அதிகாரம் அவர்களுக்குத் தரப்பட வேண்டுமென்றும், மாநில அரசின் அன்றாட ஆணைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டால்தான், நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது குறித்து ஆளுநர்களுக்குத் தெரியும் என்றும் பி.எஸ். தேஷ்முக் ஜூன் 2, 1949இல் இது குறித்த விவாதத்தின்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
1967 தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சி அமைந்தபோதுதான் இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் குறித்த பல கேள்விகள் எழும்பின. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், பல மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிகளும் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர்களாகவும் இருந்ததால், பிரச்னைகள் ஏற்படத் தொடங்கியதில் வியப்பில்லை. 

இப்படியொரு சூழல் ஏற்படும் என்பதை அரசியல் சாசன சபை உணர்ந்து விவாதித்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். 1949 மே 31ஆம் தேதி அரசியல் சாசன சபை விவாதத்தின்போது வெவ்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும்போது, ஆளுநர்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வியை விஸ்வநாத தாஸ் எழுப்பியிருக்கிறார். ஆளுநர்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று அவர் அப்போது எழுப்பிய கேள்வி தொலைநோக்குப் பார்வையுடன் கூடியது என்பதை கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியாகிய துணைநிலை ஆளுநர், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் என்றும், துணைநிலை ஆளுநருக்கு என்று தனியாக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின், அமைச்சரவையின் அதிகாரத்தைவிட அதிகமான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை என்றும் வழங்கப்பட்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது.

 ஜனநாயகத்தில் ஆளுநர்தான் முடிவெடுப்பார் என்றால், தேர்தலும், சட்டப்பேரவையும் அமைச்சரவையும் எதற்காக?
தலையங்கம்

படித்து முடித்துவிட்டோம், வேலை எங்கே?



மத்திய அரசும், தமிழக அரசும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டிவருகிறது.

மே 02 2019, 03:30

ஆண்டுதோறும் கல்விக்காக இரு பட்ஜெட்களிலுமே ஒரு கணிசமான தொகை ஒதுக்கப்படுகிறது. இந்தநிலையில், பல்வேறு படிப்புகளை படித்து முடித்தவர்கள் அதற்குரிய வேலை கிடைக்காமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலைக்காக முயற்சி செய்யும் இளைஞர்கள் ஒரு கட்டத்தில் என்ன வேலை கிடைத்தாலும் போகலாம் என்றும், கல்விக்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்றும், வாழ்க்கை சக்கரத்தை ஓட்டவேண்டும் என்ற சலிப்பான உணர்விலும் மிக சாதாரண வேலைக்குகூட போக தயாராகி விடுகிறார்கள். அதை நிரூபிக்கும்வகையில், ரெயில்வே துறையில் ‘குரூப்–டி’ பிரிவில், அதாவது கீழ்மட்ட பணிகளான கேங்மேன், கேபின்மேன், ஹெல்பர், கீமேன், டிராக்மேன், வெல்டர் போன்ற பல பணிகளுக்கு சிலமாதங்களுக்கு முன்பு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டது. மொத்தம் 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10–ம்வகுப்பும், தொழிற்பயிற்சியில் தேசிய கவுன்சில் சான்றிதழும் பெற்றிருக்கவேண்டும். இல்லையெனில் ஐ.டி.ஐ. படித்திருக்கவேண்டும் அல்லது தேசிய பழகுனர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால், இந்த பணிகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை பார்த்தால் 1 கோடியே 90 லட்சம் பேர் குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருந்தவர்கள். 48,48,000 பேர் பட்டப்படிப்புகளையும், முதுகலை பட்டப்படிப்புகளையும் பெற்றிருந்தவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இதற்கும் மேலாக அதிர்ச்சி தரத்தக்க தகவல் என்னவென்றால் இத்தகைய பணியாளர்களுக்கு அதிகாரிகளாக பணியாற்றக்கூடிய கல்வித்தகுதிபடைத்தவர்கள் அதாவது, என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்தவேலைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். 4,91,000 என்ஜினீயரிங் பட்டபடிப்பு படித்தவர்களும், 41,000 முதுகலை என்ஜினீயரிங் பட்டபடிப்பு படித்தவர்களும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், நிர்வாகயியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என்பது நன்றாகவே தெரிகிறது.


கடந்த சிலஆண்டுகளுக்கு முன்புவரை என்ஜினீயரிங் படித்தவர்கள் உடனடியாக கைநிறைய சம்பளம் வாங்கும்நிலை இருந்தது. இதன்காரணமாக நாடுமுழுவதும் ஏராளமான சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதனால் சாதாரண கிராமங்களில் படித்த இளைஞர்கள் கூட என்ஜினீயரிங் படித்தவுடன் நல்லவேலைக்கு சென்று மனமகிழ்ச்சியடையும் வகையில் ஊதியம் பெற்று வந்தனர். அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. ஆனால் இப்போது, என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடுமுழுவதும் 16,50,000 இடங்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்தநிலையில், கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் மேல் குறைந்துவிட்டது. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் இடங்கள் காலியாகும் சூழ்நிலை இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவரே கூறியிருக்கிறார். இது நிச்சயமாக நல்லதல்ல. மத்திய–மாநில அரசுகள் கல்வி வளர்ச்சியில் எப்படி கண்ணாக இருக்கிறதோ, அதுபோல அந்தந்த படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இணைமுயற்சியாக ஒரேநேரத்தில் இருக்கவேண்டும். இளைஞர்கள் படிக்கும் படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை அரசு மட்டும் உருவாக்கமுடியாது. தனியார் நிறுவனங்களும் நிறைய தொழில்களை தொடங்கினால்தான் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அதற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் பரவலாக எல்லா இடங்களிலும் ஏராளமான தொழில்நிறுவனங்கள் தொடங்கப்படும் வகையில் மத்திய–மாநில அரசுகள் ஊக்கமும் சலுகையும் அளிக்கவேண்டும்.

Wednesday, April 24, 2019

தலையங்கம்

தேர்தல் நேரத்தில் மட்டும் பெட்ரோல் விலை உயராதா?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக பாதிக்கப்படுவதற்கு 2 முக்கியமான காரணங்கள் உண்டு. ஒன்று டாலருக்கு நிகரான ரூபாய் நோட்டு மதிப்பு குறைவு. அடுத்தது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைஉயர்வு. விலைவாசி உயர்வதற்கு இந்த 2 காரணங்களும் முக்கியபங்கு வகிக்கிறது.

ஏப்ரல் 24 2019, 03:30

பெட்ரோல்-டீசல் விலை உயரும்போதெல்லாம் விலைவாசி உயர்ந்து, பொருளாதார பாதிப்புகள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. மொத்தத்தில், நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட பணவீக்கம் கட்டுக்குள் இருக்கவேண்டும். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கவேண்டுமென்றால், விலைவாசி குறையவேண்டும். விலைவாசி குறையவேண்டுமென்றால், பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருக்கவேண்டும்.


2017-ம் ஆண்டு ஜூன் 16-ந்தேதிக்கு முன்புவரை மாதந்தோறும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப 1-ந்தேதியும், 16-ந்தேதியும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. 16-6-2017-முதல் அன்றாடம் சர்வதேச கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப தினசரி விலை நிர்ணயம் நாடு முழுவதிலும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அந்தவகையில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல்-டீசல் விலை ஏற்ற இறக்கத்தை கண்டுவந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு நேற்று மாலையில் ஒரு பீப்பாய் விலை 74.14 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதுபோல, ரூபாயின் மதிப்பும் ஒரு டாலருக்கு ரூ.69.62 ஆக சரிந்துள்ளது. பங்குமார்க்கெட்டிலும் பெரும்சரிவு காணப்பட்டது. ஒருபக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மற்றொரு பக்கம் ரூபாய்நோட்டு மதிப்பு குறைவு. 

இவையெல்லாம் சேர்த்து பெட்ரோல்-டீசல் விலையை அபரிமிதமாக உயர்த்திவிடுமோ என்று எல்லோரும் அச்சப்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு தேர்தல் முடியும்வரை நிச்சயம் பெட்ரோல்-டீசல் விலை உயராது, இதைத்தானே கடந்த சில தேர்தல்களில் சந்தித்திருக்கிறோம் என்ற ஒரு மனத்தெம்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்குமேல் உயர்ந்தும், பெட்ரோல் விலை ஒருசதவீதத்திற்கு குறைவான உயர்விலேயே நிர்ணயிக்கப்பட்டு வந்தது.


2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குஜராத் சட்டசபை தேர்தலின்போதும், கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போதும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா சட்டசபை தேர்தலின்போதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அந்த கணக்கையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால், இப்போதும் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும், பெட்ரோல்-டீசல் விலை அந்த விலை உயர்வுக்கு ஏற்ப யர்த்தப்படாமல்தான் இருக்கிறது. கடந்தமாதம் 15-ந்தேதி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.96 ஆக இருந்தது. நேற்று ரூ.70.17 ஆகத்தான் இருக்கிறது. இதுபோல, பெட்ரோல் விலை கடந்த 14-ந்தேதி 1 லிட்டருக்கு ரூ.75.62 ஆக இருந்தது, நேற்று ரூ.75.71 ஆகத்தான் இருந்தது. ஆக அடுத்தமாதம் 19-ந்தேதிவரை, நாடாளுமன்ற தேர்தல் முடியும்வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும், இந்தியாவில் அதற்கேற்ப பெட்ரோல்-டீசல் விலை உயராது. இது கண்ணாமூச்சி காட்டுவதுபோல இருக்கிறது. இப்போது மட்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படாமல் இருப்பதுபோல, எப்போதும் இந்த விலையை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் பொதுமக்களுக்கும் பாதிப்பு இருக்காது. விலைவாசியும் உயராது. அதற்கேற்ற வகையில், கலால்வரியை உயர்த்தியோ, குறைத்தோ இதை கட்டுக்குள்ளேயே வைத்திருக்கவேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Friday, April 19, 2019

தலையங்கம்

ஓரங்கட்டப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்


t
கடந்த 25 ஆண்டுகளாக வானில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனம் நேற்று முன்தினம் தன் விமான சேவையை நிறுத்திக்கொண்டது.

ஏப்ரல் 19 2019, 03:30

120 விமானங்களை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து இந்த விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. 22 ஆயிரம் ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டத்தில் மூழ்கிக்கொண்டிருந்த இந்த நிறுவனம், விமான எண்ணிக்கைகளை குறைத்துக்கொண்டே வந்தது. கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை 5 விமானங்கள்தான் பறந்து கொண்டிருந்தன. தினமும் 650 விமான சேவைகளை இயக்கிக்கொண்டிருந்த இந்த நிறுவனம் மிகவும் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டது. உதவிக்கரம் இல்லாமல் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீளமுடியவில்லை.

கடந்த 2018 டிசம்பர் மாத கணக்குப்படி, இந்த விமான நிறுவனத்தின் நஷ்டம் ரூ.7 ஆயிரத்து 654 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே இந்த விமான நிறுவனத்துக்கு இருண்டகாலம் தொடங்கியது. நஷ்டத்தை சரிகட்ட ஊழியர்களெல்லாம் 25 சதவீத சம்பள குறைப்பை தாங்கிக்கொள்ளவேண்டும் என்று கூறியது. விமானிகளுக்கும், பராமரிப்பு பொறியாளர்கள், மூத்த நிர்வாகிகளுக்கும் ஜனவரி மாதம்முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. மற்ற ஊழியர்களுக்கு மார்ச் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. விமானிகளெல்லாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். முதலில் ஸ்டேட் வங்கி உள்பட வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பு அவசர நிதி உதவியாக ரூ.1,500 கோடி வழங்குவதாக தெரிவித்தது, கொஞ்சம் நம்பிக்கையை ஊட்டியது. ஆனால் நேற்று முன்தினம் இரவு தங்களால் கடன் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தவுடன், வேறு வழியில்லாமல் விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்திக்கொண்டது. கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிறுவனம் ரூ.983 கோடி கடன் உதவி உடனடியாக வேண்டும் என்று அபயகுரல் எழுப்பியும் யாரும் கடன் வழங்க முன்வரவில்லை.

1993–ம் ஆண்டு மே 5–ந்தேதி இந்த விமான நிறுவனத்தின் முதல் சேவை மும்பையிலிருந்து ஆமதாபாத்துக்கு தொடங்கியது. அதேபோல கடைசி சேவையும் அமிர்தசரசில் இருந்து மும்பை வரை பறந்து முடித்து விமானங்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டுவிட்டன. இனி இந்த விமான சேவையை ஏற்று நடத்த புதிய உரிமையாளர் முன்வந்தால்தான் மீண்டும் வானில் பறக்க வைக்கமுடியும். இந்த விமான நிறுவனத்தை ஏற்று நடத்த ஆர்வம் உள்ளவர்கள் என்ற வகையில் 4 முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். யாருக்கு இதை கொடுக்கலாம் என்ற முடிவுக்கு மே 10–ந்தேதி ஆகிவிடும். தற்போதுள்ள நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்ய முன்கூட்டியே டிக்கெட் எடுத்தவர்களெல்லாம் பணத்தை திரும்ப பெறுவதற்கு உடனடியாக வழியே இல்லை. இவ்வளவு தள்ளாடும் நிலைக்கு காரணம், கடன் கொடுத்த வங்கிகளைத்தான் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த விமான நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஆரம்பத்திலேயே புதிய உரிமையாளரை தேடியிருந்தால் இந்தநிலையை தவிர்த்து இருக்கமுடியும் என்று கூறப்படுகிறது. தனியார் நிறுவனம் என்றாலும் இவ்வளவு பெரிய விமான கம்பெனியை, இவ்வாறு நடத்த முடியாமல் நஷ்டத்தில் மூழ்கியது நிச்சயமாக துரதிர்ஷ்டவசமானதுதான்.

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...