Thursday, September 13, 2018


20 வருடத்துக்கு முன்பு பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? பெருமூச்செல்லாம் கூடாது

By DIN | Published on : 12th September 2018 11:05 AM |



சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.05க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை நிலவரங்கள் தினந்தோறும் பெட்ரோல் நிரப்புபவர்களின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கவே செய்கிறது.

இதற்கு எந்த மாற்று வழியும் இல்லாமல், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் பங்குகள் சொல்லும் விலையிலேயே பெட்ரோல், டீசலை நிரப்பிக் கொண்டு என்றுதான் இதற்கு விடிவுகாலம் பிறக்குமோ என்று தன்னைத் தானே நொந்து கொண்டு செல்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

வாகனத்தை விட்டுவிட்ட பேருந்தில் செல்லலாம் என்றால், பேருந்துக் கட்டணம் ஏற்கனவே விண்ணை முட்டிக்கொண்டு நிற்கிறது. பேருந்து கட்டணம் எகிறிவிட்டதால், அதனை தாங்க முடியாத பேருந்து பயணிகள் ரயில் பயணத்துக்கு மாறி, அங்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பொதுப் போக்குவரத்துக்கும் மாற முடியாமல், சொந்த வாகனத்துக்கும் பெட்ரோல் நிரப்ப முடியாமல் தவிக்கும் ஏழைக் குடும்பங்கள் ஏராளம்.

சரி.. இன்றைய விலை, நேற்றைய விலை எல்லாம் தினமும் தெரிந்த விஷயமாகிவிட்டது.

நாம் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறோம் என்று ஒருமுறை திரும்பிப் பார்ப்போமா? அதாவது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 1998ம் ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் நாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு கொடுத்திருப்போம், கொடுத்திருக்கிறோம் என்பது நினைவிருக்கிறதா? பலருக்கும் நிச்சயம் நினைவிருக்கும். அப்போது வாகனத்தை இயக்காத இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.23.94 மட்டுமே. 20 ஆண்டுகளில் பெட்ரோல் விலை 238 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பெட்ரோல் விலை 12% உயர்ந்துள்ளது.

அதே சமயம், 10 ஆண்டுகளுக்கு முன்பு என்று எடுத்துக்கொண்டால் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.32.82 ஆகவும், அதே ஆண்டு டிசம்பரில் ரூ.34.98 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைவிட்டு வெளியேறும் முன் ஜேட்லியை சந்தித்தேன்: விஜய் மல்லையா

By DIN | Published on : 13th September 2018 01:50 AM |

dinamani 13.09.2018

இந்தியாவில் இருந்து வெளியேறும் முன்பு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து, வங்கிகளுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக தெரிவித்தேன்' என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா (62), பிரிட்டனுக்கு தப்பிவிட்டார். கடந்த 2016, மார்ச்சில் இந்தியாவைவிட்டு வெளியேறிய அவரை, நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை லண்டன் நீதிமன்றம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஆஜராவதற்காக வந்த விஜய் மல்லையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து வெளியேறும் முன்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக அவரிடம் பலமுறை தெரிவித்தேன். இதுதான் உண்மை.
வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான விரிவான திட்டத்தை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளேன். அனைத்து கடன்களையும் அடைப்பேன். என்னிடம் இருந்து கடன்தொகையை வசூலிக்க வேண்டும் என்பதே எனக்கு எதிரான வழக்கின் முக்கிய நோக்கம்.

நான் கடன்தொகையை திருப்பி அளிக்க முயற்சிப்பதை வங்கிகள் ஏன் ஊக்குவிக்க மறுக்கின்றன? இந்த கேள்வியை வங்கிகளிடம் ஊடகங்கள் எழுப்ப வேண்டும். அரசியல் கட்சிகளால் நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்.
என்னை நாடு கடத்தக் கோரும் வழக்கில் நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு சாதகமான உத்தரவு வரும் என நம்புகிறேன் என்றார் மல்லையா.

மல்லையா கூறுவது உண்மையல்ல


தன்னை சந்தித்துப் பேசியதாக விஜய் மல்லையா கூறுவது உண்மையல்ல' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து மல்லையாவை சந்திக்க நான் நேரம் ஒதுக்கவில்லை. நேரம் ஒதுக்கியிருந்தால்தானே, அவர் என்னை சந்தித்தாரா? இல்லையா? என்ற கேள்வி எழும். விஜய் மல்லையா, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அவர் எப்போதாவதுதான் அவைக்கு வருவார். ஒருமுறை அவையிலிருந்து நான் எனது அறைக்கு சென்றபோது, விறுவிறுவென வந்து என்னுடன் சேர்ந்து நடந்தார். அப்போது, வங்கி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்கிறேன்' என்று தெரிவித்தார். ஆனால், நீங்கள் என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை; வங்கிகளிடம்தான் உங்களது திட்டங்களை தெரிவிக்க வேண்டும்' என்று கூறிவிட்டேன். அப்போது, அவரிடம் இருந்து எந்த ஆவணங்களையும் நான் பெறவில்லை. இந்த ஒரு வரி உரையாடல்தான் எங்களிடையே நடைபெற்றது. அதுவும், எம்.பி. என்ற உரிமையை அவர் தவறாக பயன்படுத்தியதால் நடைபெற்ற உரையாடல் என்றார் ஜேட்லி.

இதனிடையே, ஜேட்லியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் விஜய் மல்லையா கூறுகையில், மத்திய நிதியமைச்சருடனான எனது சந்திப்பு, அதிகாரப்பூர்வமற்றது; தற்செயலாக நிகழ்ந்தது. இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்க வேண்டாம்' என்றார்.

மல்லையாவை தப்பவிட்டது ஏன்?

இந்தியாவைவிட்டு வெளியேற விஜய் மல்லையாவை அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:

கடன் முறைகேடுகளில் தொடர்புடைய தொழிலதிபர்கள் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர் நாட்டைவிட்டு தப்பியதற்கு மத்திய பாஜக அரசு உடந்தையாக இருந்தது என்ற எங்களது குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளது.

விஜய் மல்லையா-ஜேட்லி இடையிலான சந்திப்பில் என்னென்ன விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்பது மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மல்லையாவை நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்தது ஏன்? என்ற கேள்விக்கான பதிலையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார் அபிஷேக் சிங்வி.

நாடு கடத்தக் கோரும் வழக்கில் டிச.10-இல் தீர்ப்பு
மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் டிசம்பர் 10-ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இதனை நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது, மல்லையாவுக்கு எதிராக இந்திய அதிகாரிகள் தாக்கல் செய்த ஆதாரங்கள் சிறிதும் அடிப்படையில்லாதவை' என்று அவரது தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர். மேலும், மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டுள்ள மும்பை ஆர்தர் சாலை சிறை அறை தொடர்பாக அதிருப்தி தெரிவித்த வழக்குரைஞர்கள், சுதந்திரமான குழு மூலம் அந்த அறையில் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரினர்.

விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவரை மும்பை ஆர்தர் ரோடு மத்திய சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மல்லையா, அந்த சிறை அறையில் சூரிய ஒளியே இருக்காது என்றும், சுகாதாரக் குறைவாக இருக்கும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், சிறை வளாகம் சுகாதாரமாக இருக்கும்; மல்லையாவுக்கு தனி கழிவறை, சலவை வசதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மல்லையாவை அடைக்க திட்டமிட்டுள்ள சிறை அறையின் விடியோ பதிவை தாக்கல் செய்யுமாறு இந்திய அதிகாரிகளுக்கு லண்டன் நீதிமன்றம் கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. அதன்படி, மும்பை சிறை அறையின் விடியோவை சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.



நாமெல்லாம் பாரதியின் வாரிசுகளே!

By ஜெயகாந்தன் | Published on : 12th September 2018 01:32 AM |

நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான். சில பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சில பேர் அதை உணராமலும் இருக்கலாம். ஆனால், பாரதியிலிருந்துதான் நம்முடைய சிந்தனை, நம்முடைய கலாசாரம், நம்முடைய வாழ்க்கை முறை இதெல்லாம் சரியான அர்த்தத்தில் நவீனம் பெற ஆரம்பித்தன. பாரதி, மகாகவி மட்டுமல்ல, மகா புருஷர்; மகத்தான சமூக சிந்தனாவாதி; சமூக விஞ்ஞானி; இந்த உலகத்தைப் புனருத்தாரணம் செய்ய வந்த சிற்பி.

எங்களுடைய நண்பர்கள் சபையில் நாங்கள் அடிக்கடி ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு, பாரதியாரை நீ எப்படி பரிச்சயம் கொண்டாய்? முதலிலே உனக்கு என்ன பாடல் தெரியும்?' இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்லுகிற பொழுது, எப்படி பாரதி வேரிலேயிருந்து இந்தப் புதிய தலைமுறை பரிணமித்து வந்திருக்கிறது என்கிற சமூக உண்மையை அறிந்து கொள்கிற ஞானம் பெற முடியும்.

இந்த கேள்வியை என்னைக் கேட்டபோது, எனக்கு பதிலே தெரியவில்லை. அறிவறிந்த பருவத்திலிருந்து, நந்தன் கதையிலே காலில் நகம் முளைத்த நாள் முதலாய்' என்று சொல்வான், அது மாதிரி, ஓடி விளையாடு பாப்பா' என்ற பாடலைக் கேட்கின்ற பருவத்திலேயிருந்து, அவரது பகவத் கீதை' உரையைப் பயில்கிற பக்குவம் வரை பாரதி நம்முடைய அறிவில், சிந்தையில், ஊனில், உயிரில், உடலில் கலந்து கலந்து நம்மைக் காலந்தோறும் உயிர்ப்பித்துக் கொடுப்பதனை உணர்கிற பலரில் நான் ஒருவன்.

நம்மையெல்லாம் - காலம் கடந்து வாழ்கிற, நாடு கடந்து வாழ்கிற பிரபஞ்சம் முழுவதும் பரவிக் கிடக்கிற தமிழர்களையெல்லாம் - ஒன்றிணைக்கிற ஒரு மாபெரும் சக்தி மகாகவி பாரதி என்பதனை அவரது எழுத்துகள் சொல்லும். சைபீரியப் பாலைவனத்திலிருந்து பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்திலே கண்ணீர் வடித்து அழுகின்ற பெண்கள்வரை, அவரது உலகப் பார்வை வியாபித்திருந்தது. தமிழர்காள்! மகாகவி பாரதியின் பார்வை படாத இந்தப் பிரபஞ்சத்தை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது.

பாரதியைப் பற்றி நிறைய செய்திகள் உண்டு. அவரது காலம் ரொம்பக் குறுகியது. 39 ஆண்டுதான். நாற்பது வயது கூட ஆகவில்லை. அவரைப் படிக்கிற பொழுது - சிலரைப் படிக்கிறபோதுதான் நமது உள்ளத்திலேயிருந்து அந்த சொற்கள் வருகின்றன என்று தோன்றும். எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள். நன்றாக எழுதுகிறார்கள். பாரதியாரை விடக் கூட நன்றாகக் கவிதை எழுதுபவர்கள் இருப்பதாக நினைப்பவர்களும் நிரூபிப்பவர்களும்கூட உண்டு. ஆனால், அவரை மாதிரி காலத்தைப் பிணைக்கிற ஒரு மகத்தான சக்தியாய் யார் இருக்கிறார்கள்? கவிஞன் என்றால் சோம்பித்திரிபவர்கள்; சுருண்டு கிடப்பவர்கள்; குனிந்து நடப்பவர்கள்; நிமிர்ந்து நிற்க முடியாதவர்கள்; அழுக்குப் பிடித்தவர்கள் என்றெல்லாம் இக்காலத்தில் பல கோலங்கள் காட்டுகின்றபொழுது, பாரதி, சற்றுக் குனிந்து நடக்கிறவனைப் பார்த்தால் அடே நிமிர்ந்து நட!' என்பார்.

வளைந்து கிடக்கிற மனிதனைப் பார்க்கப் பொறாத மனம். பன்றிப் போத்தை சிங்க ஏறாக்குதல் வேண்டும்' என்கிற மனம். அது மொழி கடந்த மனம். அதனால்தான் அவருக்கு அச்சம் வருகிறது. தான் தமிழன், தான் தமிழன் என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சிறப்பெல்லாம் தமிழுக்கு வந்து சேருதல் வேண்டும். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே'. இந்தச் சொல்லுக்குப் பழுதில்லை. இங்கே தமிழிலே என்ன சொற்கள் வந்து கலந்த போதிலும் இந்த சமுத்திரம் எல்லாவற்றையும் இழுத்து ஈர்த்து தனக்குள்ளே வயப்படுத்திக் கொள்ளும்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்' என்றால், எல்லாக் கலாசாரமும் வந்து இங்கு கலக்கட்டும், அந்தச் சவாலை இந்த மொழி ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லுகிற தெம்பு இருந்தது. மெல்லத் தமிழ் இனி சாகும்' என்று அந்தப் பேதை உரைத்தான் என்றான். அது பேதையர் சொல். இங்கு கூறத் தகாதவர்கள் கூறுகின்ற சொல். கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்'.
என்ன விபரீதம்! ஆன்றோர்களும், சான்றோர்களும், புலவர்களும், கற்றோர்களும் இன்று மெத்தத்தான் கவலைப்படுகிறார்கள் தமிழ் செத்துப் போகுமென்று. அது சாகாத மொழி! என்றுமுள தென்றமிழ்'. என்றும்' என்றால் மூன்று காலம். இது இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்று சொல்லத் தகுந்த சொரூபம் உடையது.

எனவே, நான் கற்றதெல்லாம் நான் சிந்தித்ததெல்லாம் நான் பெற்றதெல்லாம் பாரதியிடமிருந்துதான். ஒரு வாரிசை இந்த விஷயத்தில் உரியவனே உருவாக்குவதில்லை. அவனுடைய சொற்கள். அவன் வாழ்ந்த வாழ்க்கை. நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்று'. அதனால்தான் பாரதியைப் பற்றி செய்தி பரவுதல் வேண்டும். அது தமிழனைப் பற்றிய செய்தி. தமிழனைப் பற்றிய செய்தி என்றால் அது இந்தியாவின் சிறப்பான சிந்தனையின் சாரம் என்று அர்த்தம்.

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பினள்
என்று சொல்வது இந்த தேசத்தை மட்டுமல்ல; இந்த மொழியை. ஆகவே, இந்த மொழியின்பால் அக்கறை கொண்ட அன்பர்கள் வேறு நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் வேற்று மொழியிலே வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். வேறு துறைகளிலே வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். இதெல்லாம் பாரதியார் கண்ட கனவு. அவர் கனவுகள் எல்லாம் பலித்திருக்கின்றன. அவர் கண்ட கனவு பலித்த யுகத்தில் நாம் வாழ்கிறோம். அன்று பாழ்பட்டு நின்றது பாரதம். தாழ்வுற்று, வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரதத்தில் அவர் கனவு கண்டார். இன்றைய பாரதம் உலகுக்கெல்லாம் ஞானதானம் செய்கின்ற நாடாக உயர்ந்திருக்கிறது. பாரதியின் கனவுகள் எல்லாம் பலித்ததன் விளைவு நாம்.

நல்ல சந்ததியினர் பித்ருக்களை மறக்காமல் இருப்பார்கள் என்பது மட்டுமல்ல, பிதுர்க்கடனையும் தவறாமல் நிறைவேற்றுவார்கள். திருலோக சீதாராம் என்ற நண்பர், பாரதி புத்திரர். நாம் எல்லாம் பாரதியின் புத்திரர்கள். பாரதியாருக்கு ஆண் வாரிசு கிடையாது. அது திருலோக சீதாராமுக்கு ரொம்ப வருத்தம் தந்தது. பாரதியார் இறந்த தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடனை நிறைவேற்றி வந்தார்.
நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ இருக்கிறதை நம்புங்கள். கடவுள் இல்லை என்று யோசிப்பவர்களுக்குத்தானே நம்பலாமா கூடாதா என்பது. இருக்கிற எல்லாவற்றிலும் எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம்' என்று எழுத்தாளர்களுக்கெல்லாம் மந்திரம் போல் சொல்லைக் கற்றுத் தந்தவன் மகாகவி பாரதி. எனவே அவன் புகழைப் பாடுவதற்கு நேரம் கிடையாது; காலம் கிடையாது; நாள் கிடையாது.

நமது சுவாசம் பாரதி. நாமெல்லாம் பாரதியின் வாரிசுகள். நான் எப்போதுமே பாரதியின் வாரிசு என்று நானாகவே எண்ணிக் கொண்டிக்கிறேன். எப்படி திருலோக சீதாராம் பிதுர்க்கடன் நிறைவேற்றி தன்னை வாரிசு என்று நினைத்துக் கொண்டாரோ அதுபோல்.
பாரதியார் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவோம். அவர் என்ன சொன்னார்? தெளிவாகத் தெரிந்து கொள். அப்புறம் இன்னொருவருக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக சொல்லு. தெளிவுறவே அறிந்திடுதல். தெளிவு பெற மொழிந்திடுதல்'. சொல்லுவதில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தெளிவு ஏற்பட வேண்டும். புரியாத விஷயங்களெல்லாம் எனக்கு சம்பந்தமல்லாததென்று இந்தக் காலத்திலும் நான் ஒதுக்கிவிடுவேன். அது ரொம்பப் பெரிய விஷயமாக இருக்கலாம். கணக்கு எனக்கு இன்று வரை தெரியாது. ஆனால், இந்தக் கணக்கு இல்லாமல் உலகத்தில் எந்தக் காரியமும் இல்லை என்றறிகிறபோது நான் எதற்குமே லாயக்கற்றவன் என்கிற தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது.

பள்ளிக்கூடத்தில் கணக்கு சொல்லிக் கொடுக்கும்போது, மைதானம் எவ்வளவு நீளம், எவ்வளவு அகலம் என்று சொல்லிக் கொடுத்தால் இது ஏண்டா நமக்கு' என்று தோன்றும். நான் எங்கே மைதானத்தை அளக்கப் போகிறேன். நிறுத்தவும், அளக்கவும் விற்கவும் வாங்கவும் கணக்கு வேண்டும். நான் ஏன் கணக்கு படிக்க வேண்டும்? ஒரு கணக்கனுக்கு இவையெல்லாம் வேண்டும். ஒரு விஞ்ஞானிக்கு இதெல்லாம் வேண்டும். அப்புறம் எனக்குத் தோன்றியது. அடடே, பாரதியாரும் நம்ம கேசுதான். அவருக்கும் கணக்கு பிடிக்காதாம். கணக்கு பிணக்கு ஆமணக்கு' என்று எழுதி வைப்பாராம். இப்படி பாரதியாரோடு ஒரு ஒற்றுமை கண்டேன்.

அதற்கு மேலே என்னவென்றால் நம்மை மாதிரியே, வெளியே சொல்ல வெட்கம். இளம் வயதில், அரும்பு மீசை கூட முளைக்காத பருவத்தில் ஒன்பது வயதுப் பொண்ணு மேலே காதல்.
பாரதியார் சொல்கிறார்:

ஒன்பதாய பிராயத்த ளென் விழிக்
கோதுகாதை சகுந்தலை யொத்தனள்
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்'
என்செய் கேன் ? பழி யென்மிசை யுண்டுகொல்?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே?
என்று பிள்ளைப் பிராயத்தில் நான் படிக்கிறேன். படித்துக் கொண்டே போனால் நம்மை எங்கெங்கோ கொண்டு போகிறது. உலகத்தை எல்லாம் காட்டித் தருகிறது ஒரு சிறு புத்தகம். கிறிஸ்துவர்க்கு எப்படி பைபிளோ, இஸ்ஸாமியருக்கு எப்படி குரானோ, மார்க்சிஸ்ட்டுகளுக்கு எப்படி தாஸ் காபிடலோ அது போல் தமிழர்களாகிய நம் அனைவருக்கும் கையில் இருக்க வேண்டிய புத்தகம் பாரதியாருடையது.

அதிலே திருக்குறள் இருக்கிறது. அதில் கம்பர் இருக்கிறார். வள்ளுவர் இருக்கிறார். இவர்களைப் பற்றி எல்லாம் பாரதியார் சொல்லவில்லை என்றால் எனக்கு அவர்கள் மீது மரியாதை வந்திருக்காது. இப்படி தானறிந்த, தன்னை உயர்த்திய அனைத்தையும் தன் பிள்ளைகளுக்கு எப்படிப் பெற்றோர் சொல்வார்களோ அது மாதிரி தமிழ்ச் சந்ததியினருக்கு பாரதியார் தந்து போயிருக்கிறார். தமிழ் பேசுகிற, தமிழிலே சிந்திக்கிற அத்தனை பேருமே பாரதியின் வாரிசுகள்தான்! (வ.உ.சி. நூலகம் வெளியிட்ட மகாகவி பாரதியார் கவிதைகள்' நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் உரை)
தாய்மையின் தடுமாற்றம்

By ப. இசக்கி | Published on : 13th September 2018 01:23 AM

சென்னையில், திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், வேறு ஓர் ஆணுடன் தகாத உறவை விரும்பி, தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார்' என்ற செய்தி அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

தகாத உறவுக்காக, பெற்ற பிள்ளைகளை தாய் கொல்வதும், கணவரை மனைவி கொல்வதும், மனைவியைக் கணவர் கொல்வதும் புதிதல்ல. ஆண்டாண்டு காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது அதிகமாகிவிட்டது என்றும் கூறமுடியாது. ஊடகங்களின் வீச்சு அதிகரித்துள்ளதால், எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனே அது பொதுவெளிக்கு வந்து விடுகிகிறது. அப்படி எல்லாமும் நமது காதுகளை வந்து எட்டுவதால் இத்தகைய துன்பியல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டனபோலத் தோன்றலாம்.

நல்ல தங்காள், தனது ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு, தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இப்போது பெண்களில் சிலர், குடிகாரக் கணவரது அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர், பெண் குழந்தை வேண்டாம் என்று பிறந்த உடனேயே கொன்றுவிடுகின்றனர்.
நல்ல தங்காள், குழந்தைகளைக் கொன்றதற்குக் காரணம் வறுமை என்றால், குடிகார அல்லது குடும்பப் பொறுப்பற்ற கணவரால் குழந்தைகளைக் கொல்லும் தாய்மார்களுக்கு பாசம் அதிகம். தான் இறந்த பிறகு குழந்தைகள் அநாதையாகிவிடக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் குழந்தைகளையும் கொன்றுவிடுகின்றனர். சமூக-பொருளாதார காரணங்களால் பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். ஆனால், இவர்கள் மீது பச்சாதாபம் கொள்ளும் சமூகம், சென்னை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மீது கோபத்தைக் கொட்டுகிறது. அதற்குக் காரணம் அந்தப் பெண்ணின் தாய்மையைத் தடுமாறச் செய்த காமம் எனும் கயமைதான்.

இந்தச் சமுதாய சீரழிவுக்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, கூட்டுக் குடும்ப முறை சிதைவு. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட முயற்சி செய்யும்போது, மூத்தவர்கள் அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கி குடும்ப கட்டமைப்பு உடையாமல் பார்த்துக் கொள்வார்கள். இப்போது கூட்டுக் குடும்பம் அருகி, தனிக் குடும்பம் பெருகிவிட்டது. தனிக் குடும்பத்தில் நடப்பது வெளியில் தெரிவதில்லை. கட்டுப்படுத்தவோ, ஆலோசனை சொல்லவோ ஆள் இல்லை. இறுதியில் விபரீதத்தில் முடிகிறது.

அடுத்து திருமண முறை. பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து கொள்பவர்கள் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கணவரும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், ஒருவரையொருவர் அனுசரித்து வாழவும் கற்றுக் கொள்கின்றனர்; குடும்ப உறவுகள் பிணைக்கின்றன; விபரீதங்கள் தடுக்கப்படுகின்றன.

காதல் திருமணம் செய்துகொண்டு தனிக் குடித்தனம் நடத்துவோரை கண்காணிப்போரும், கட்டுப்படுத்துவோரும் இல்லை. எனவே, கருத்து வேறுபாடு ஏற்பட்ட உடனே பிரிவு தொடங்கிவிடுகிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்; குடும்பம் உருக்குலைந்து போகிறது.
மனித வாழ்வில் உறவுக்கு இணையான முக்கியத்துவம் நட்புக்கும் உண்டு. உறவுகள் செய்யாததைக் கூட நண்பர்கள் செய்வார்கள். உறவுகளுக்கிடையே சில வேளைகளில் பொறாமை இருக்கும். உண்மையான நட்புக்குப் பொறாமை இருக்காது. ஆலோசனை சொல்வார்கள்; நல்வழிப்படுத்துவார்கள். எனவே, தரமான நட்பு அவசியம். தரமான நட்பு என்பது இப்போது அரிதாகி, ஆதாய நோக்குடனான நட்புதான் அதிகமாகி இருக்கிறது. ஆண்-பெண் தகாத உறவு கூட முதலில் நட்பில்தான் தொடங்குகிறது. வீட்டுச் சுவரில் முளைக்கும் சிறு செடி வளர்ந்து கிளைவிட்டு சுவரை உடைப்பது போல, சில நட்பு கணவன்-மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, நட்பிலும் கவனம் தேவை.

அடுத்து, நமது கல்வி முறை. பள்ளிக் கூடங்களில் அறிவை வளர்க்கும் கல்வி போதிக்கப்படுகிறது. அறத்தை வளர்க்கும் கல்வி இல்லை. நல்லொழுக்க போதனை வகுப்புகள் கிடையாது. சமுதாயத்தில் ஒழுக்கமாகவும், சக மனிதர்களுடன் இணக்கமாகவும், அனுசரித்தும் வாழ வேண்டியதன் அவசியத்தை சொல்லிக் கொடுப்பார் இல்லை. பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரிக்குச் சென்றால், கல்வி பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இறுதியாக, பெண்களின் இயல்பான தாய்மைப் பண்பின் அவசியம் குறித்து அடுத்தடுத்த தலைமுறைக்கு நாம் தவறாமல் போதிக்கிறோமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பெண் குழந்தை பூப்பெய்தியதும் 16 நாள் சடங்கின்போது அவர்கள் கையில் மரப்பாச்சி பொம்மை ஒன்றைக் கொடுப்பார்கள். அந்தப் பொம்மையை குழந்தை போன்று மடியில் வைத்து விளையாடுவாள் அந்தச் சிறுமி. இது சிறுமிக்கு உடல் அளவிலும், உணர்வு நிலையிலும் தாய்மையை ஊட்டும். இப்போது நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமங்களில் கூட மரப்பாச்சி பொம்மையைக் காண்பது அரிது.

தமிழ்ச் சமுதாயம் என்பது அடிப்படையில் தாவரச் செழிப்பால் மனிதச் செழிப்பையும், மனிதச் செழிப்பால் தாவர செழிப்பையும் உண்டாக்கி அதன் மூலம் நீடித்து, நிலைத்து வாழும் விருப்பம் கொண்டது. அதாவது, விருத்தி'தான் அடிப்படை. அதனால்தான், மங்கள காரியமாக இருந்தாலும், அமங்கள காரியமாக இருந்தாலும் அங்கு தாவரச் செழிப்பை உண்டாக்கும் தானியங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. திருமணத்தின்போது வீடுகளில் முளைப்பாரி வளர்ப்பதும், மணமக்கள் மீது அட்சதையாக அரிசி தூவுவதும், ஈமக்காரியங்களின்போது சுடுகாட்டில் தானியங்களை விதைப்பதன் தாத்பரியம் இதுதான். மனித விருத்திக்கான மண் பெண்தான். அவள் அழிவு சக்தி அல்ல; ஆக்க சக்தி. இவற்றையெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.
கோடிகளை குவித்த ஆர்.டி.ஓ., அதிகாரிபுரோக்கர் வீட்டில் ஆவண புதையல் 

dinamalar 13.09.3018

கள்ளக்குறிச்சியில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்து உள்ளது, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் தெரியவந்துள்ளது. இவருக்கு, புரோக்கராக செயல்பட்ட செந்தில்குமாரின், சேலம் ஆத்துார் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

கடலுார், தவுலத் நகரைச் சேர்ந்தவர், பாபு, 52. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

கள்ளக்குறிச்சியில் கைது :

இவர் தகுதிச்சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, நேற்று முன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடலுாரில் உள்ள அவரது வீட்டில், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், 33.50 லட்சம் ரூபாய், 15 கிலோ வெள்ளி, 140 சவரன் நகைகள், 45 வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான புத்தகங்கள் கைப்பற்றப் பட்டன.

மேலும், ஆறு வங்கி லாக்கருக்கான சாவி மற்றும் பல கோடி ரூபாய்க்கு வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங் களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களில், 60 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

வங்கி லாக்கரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகளுக்கான ஆவணங்கள் மற்றும் நகைகள் வைக்கப்பட்டு


இருப்பதும் தெரிய வந்துஉள்ளது. இருப்பினும், வங்கி களின் அனுமதியுடன் அவற்றை திறந்து பார்த்த பிறகே, உண்மை மதிப்பு தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.

கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், பாபு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் உட்பட அனைத்து ஆவணங்களையும், நேற்று முன்தினம் இரவு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, 45 வங்கி கணக்குகளை முடக்கி வைக்க, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆவண புதையல் :

மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு, 13 ஆண்டுகளாக புரோக்கராகவும், பினாமியாகவும் இருக்கும், சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த, ஜோதிடர் செந்தில்குமார், 44, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.அவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை, 4:30 முதல், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர். இது, அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது.

ஜோதிட அறை உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதில், ஸ்ரீருத்ர கங்கா பைனான்ஸ் மற்றும் ஸ்ரீருத்ர கங்கா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், தொழுதுார் கிரீன்பார்க் பள்ளியில், பங்குதாரராக உள்ள ஆவணங்கள் மற்றும் அறக்கட்டளை ஆவணங்கள் சிக்கின.

செந்தில்குமாரின் மனைவி கவிதா பெயர்களில், 2 கோடி ரூபாய்க்கு, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. அதற்கு, வரி செலுத்தியபோதும், முதலீடு செய்துள்ள வருவாய்க்கு ஆதாரம் இல்லை. வீட்டிலிருந்து, 15 வங்கி கணக்குகளின் சேமிப்பு கணக்கு புத்தகம், 150 சவரன் நகைகள் உட்பட,33 கோடி ரூபாய் மதிப்புக்கும் அதிகமான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கி உள்ளன.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: ஆத்துாரில், 2006ல் பாபு பணிபுரிந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த

புகாரில், செந்தில்குமார் வீட்டில், 62.62 லட்சம் ரூபாய்க்கு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பாபு மீது வழக்கு நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சசிகலா குடும்ப ஜோதிடர் :

செந்தில்குமார், கேரளாவின் பிரசன்ன ஜோதிடம் பார்ப்பது வழக்கம். 2008 முதல், சசிகலாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தினகரன் ஆதரவு, முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பூங்குன்றன், எம்.பி.,க்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலருக்கு, குடும்ப ஜோதிடராக உள்ளார். இவர்கள், செந்தில்குமாரிடம் ஆலோசித்து, முக்கிய கோவில்களில் நடக்கும் பரிகார பூஜையில் பங்கேற்பர்.

வாரிசு வேலையில் வந்தவர் :

கடலுார், செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த, பாபுவின் தந்தை சுப்ரமணியன். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்தார். அவர் இறந்ததால், 1991ல், பாபுவுக்கு, தமிழக அரசு, வாரிசு வேலை வழங்கியது. 1998 முதல், மோட்டார் வாகன ஆய்வாளராக, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறார். 2006ல், சொத்து குவிப்பு புகாரில் வழக்கு பதிவானதால், பதவி உயர்வின்றி பணிபுரிகிறார். பாபுவின் இரு மகள்கள், மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கின்றனர். தம்பி செந்தில், ஆத்துார், விழுப்புரத்தில், இரு, நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்கிறார். தங்கை ஜெயலலிதா, அவரது கணவர் ராஜேந்திரன், உளுந்துார்பேட்டையில், 'டிரைவிங் ஸ்கூல்' நடத்துகின்றனர். ஆய்வின்போது, ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதால், குடும்ப உறவினர்களிடம், போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.


- நமது நிருபர் -

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு குரு பெயர்ச்சிக்கு பின் திருமணம்

Added : செப் 12, 2018 21:28 | 

  பவானிசாகர்: பவானிசாகர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., திருமணம் நேற்று நடக்கவில்லை. 'குருப்பெயர்ச்சி முடிந்து திருமணம் நடக்கும்' என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், ஈஸ்வரன், 42. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவருக்கு, பண்ணாரி அம்மன் கோவிலில், நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண், 1ம் தேதி, மாயமானார். அதே தேதியில், எம்.எல்.ஏ., திருமணத்தை நடத்த, தீவிரமாக பெண் தேடினர். இதனால், திட்டமிட்டபடி நேற்று திருமணம் நடக்கும் என, ஒரு தரப்பினர் நம்பினர். ஆனால் நேற்று, அவரது திருமணம் நடக்கவில்லை.
பண்ணாரி அம்மன் கோவில் அலுவலக ஊழியர்கள் கூறியதாவது:ஏற்கனவே பதிவு செய்துள்ளபடி, பண்ணாரி அம்மன் கோவிலில், நேற்று காலை, மொத்தம், 28 திருமணங்கள் நடந்தன.அதில், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திருமணம் நடந்ததாக, ஆவணங்களில் பதிவு இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.திருமணம் நிறுத்தப்பட்ட தகவல், 'வாட்ஸ் ஆப்' மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது. தீவிர பெண் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட, எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் சோகத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:குறிப்பிட்ட தேதியில், திருமணத்தை முடிக்க, பெண் தேடும் பணியில் ஈடுபட்டோம். பல்வேறு இடங்களில், பேச்சு நடந்தது. ஆயினும், திட்டமிட்டபடி திருமணம் நடக்கவில்லை. ஜோதிடர் அறிவுரைப்படி, குருப்பெயர்ச்சி முடிந்து, திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
180 மருத்துவ மாணவர், 'அட்மிஷன்' அதிரடியாக ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

Added : செப் 12, 2018 22:29

புதுடில்லி: கேரளாவில், விதிமுறைகளை மீறி, இரண்டு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 180 மாணவர்களை சேர்த்ததற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு உள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த கருணா மருத்துவக் கல்லுாரி மற்றும் கண்ணூர் மருத்துவக் கல்லுாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டதால், அதில் மாணவர்களை சேர்ப்பதற்கு, கடந்த ஆண்டு, கேரள உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தன.இதற்கிடையே, அந்தத் தீர்ப்புக்கு எதிராக, மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கும் வகையில், கேரள அரசு, அவசர சட்டம் இயற்றியது. அதன்படி, கருணா மருத்துவக் கல்லுாரியில், 30 பேரும், கண்ணுார் மருத்துவக் கல்லுாரியில், 150 பேரும் சேர்க்கப்பட்டனர். இந்த அவசர சட்டம், பின், அமலாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கும் கேரள அரசின் சட்டம் செல்லாது' என, நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.இதையடுத்து, இந்த, 180 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறியதாக, புதுச்சேரியைச் சேர்ந்த, ஏழு நிகர்நிலை பல்கலை மற்றும் தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்த, 700 மாணவர்கள் சேர்க்கைக்கு, கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது கேரளாவில், 180 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் இருந்து ஆந்திர கோயில்களுக்கு சுற்றுலா ரயில்

Added : செப் 13, 2018 00:53

சென்னை : இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், ஆந்திரா கோவில்களுக்கு, சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் மதுரையில் இருந்து வரும் 27ம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக, ஆந்திரா செல்லும். ஆந்திர மாநிலத்தில் உள்ள, பத்ராச்சலம், சிம்மாச்சலம், அன்னாவரம், ஸ்ரீகூர்மம், ஸ்ரீபீமேஸ்வரசுவாமி, மாணிக்யம்பா, கனக துர்கா, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில்களுக்கு, பக்தி சுற்றுலா சென்று வரலாம்.ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கு நபருக்கு 7,050 ரூபாய் கட்டணம். ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, உள்ளூரில் சுற்றிப் பார்க்க வாகன செலவு, இதில் அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கட்டண சலுகை உண்டு. மேலும் தகவலுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681, 90031 40682 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ம.பி.,யில் தேர்தல் பரீட்சை 323 அதிகாரிகள், 'பெயில்'

Added : செப் 12, 2018 22:28


போபால்: விரைவில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், தேர்தல் ஆணையம் நடத்திய தேர்வில், 323 அரசு அதிகாரிகள் தேர்ச்சி பெறவில்லை.மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், 230 சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில், இந்த மாநிலத்தில், தேர்தல் பணிகள் தொடர்பான தேர்வை, தேர்தல் ஆணையம் நடத்தியது. இந்த தேர்வை, சட்டசபை தேர்தல் பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ள, 700 அதிகாரிகள் எழுதினர்.இதில், 323 அதிகாரிகள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் பெரும்பாலானோர், போபால், சிஹோர், குணா, இந்துார் உள்ளிட்ட முக்கிய இடங்களில், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும், துணை கலெக்டர், சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட், தாசில்தார் ஆகிய நிலைகளில் உள்ள அதிகாரிகள் கூட, இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஒருசில அதிகாரிகளுக்கு, அடிப்படை பற்றி கூட தெரியவில்லை.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இந்த விவகாரம், மிகப்பெரிய பிரச்னை. தேர்தல் ஆணையம் நடத்திய தேர்வில், 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களால், எப்படி நியாயமான தேர்தலை நடத்த முடியும்?இது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
பான் கார்டில் தந்தை பெயர் தேவையில்லை

Added : செப் 12, 2018 21:38

புதுடில்லி: விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்கள், தங்கள் பிள்ளைகளுக்கு, 'பான் கார்டு' பெறும்போது, அவர்களது தந்தை பெயரை குறிப்பிட தேவைஇல்லை என்று, விதிகளில் திருத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும், பான் கார்டு எனப்படும், நிரந்தர கணக்கு அட்டையை, மத்திய நிதி அமைச்சகம் வழங்கி வருகிறது.இந்த அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், தங்கள் தந்தையின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்கள், தங்கள் பிள்ளைகளுக்கு பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது, அதில், முன்னாள் கணவரின் பெயரை குறிப்பிடுவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே, அதில் திருத்தம் செய்யும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, இந்த நடைமுறையில், திருத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தை கள் நலத்துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார்.
மாநில செய்திகள்

சென்னை முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயர்ந்த ‘மனிதநேய விருது’




சென்னை முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயர்ந்த மனிதநேய விருது பிலிப்பைன்சில் நடந்த மாநாட்டில் வழங்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 13, 2018 03:45 AM

சென்னை,

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய பல் டாக்டர்களை கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பல்வேறு கூட்டங்களை நடத்தி, பல் மருத்துவ கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான செயல்களை ஒருங்கிணைத்தும், சமூகத்துக்கு சேவை செய்யும் பல் டாக்டர்களை கவுரவித்தும் வருகிறது.

ஆசிய-பசிபிக் பல் மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம் நடத்திய மாநாட்டில் சென்னையை சேர்ந்த பிரபல முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பங்கேற்றார். அப்போது டாக்டர் எஸ்.எம்.பாலாஜியின் திறமையை அறிந்த பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் தங்கள் நாட்டுக்கும் வந்து விரிவுரையாற்றுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது.

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று அந்த நாட்டு பல் மற்றும் முகச்சீரமைப்பு துறைகளில் பல் டாக்டர்களுக்கும், பல் மருத்துவ மாணவர்களுக்கும் எஸ்.எம்.பாலாஜி விரிவுரையாற்றியுள்ளார். மேலும் சிக்கலான முகக்குறைபாடுகளை உடைய சிறுவர்களை கடந்த 2010-ம் ஆண்டு முதல் எஸ்.எம்.பாலாஜியிடம் அறுவை சிகிச்சைக்காகவும் பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் அனுப்பி வருகிறது.

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் அனுப்பும் சிறுவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதனால் எஸ்.எம்.பாலாஜி இலவசமாக அந்த சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து சேவை செய்து வருகிறார். அந்தவகையில் எஸ்.எம்.பாலாஜியின் சேவை மனப்பான்மையினால் ஏராளமான ஏழை பாகிஸ்தான் நாட்டு சிறுவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

எஸ்.எம்.பாலாஜியின் தன்னிகரற்ற மனிதநேய சேவையை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் கருதியது. இந்தநிலையில் ஆசிய-பசிபிக் பல் மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம் சார்பில் 40-வது சர்வதேச மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சமீபத்தில் நடந்தது.

இந்த மாநாட்டில் எஸ்.எம்.பாலாஜி பங்கேற்றார். அப்போது பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் சார்பில் பாகிஸ்தானில் மிக உயர்ந்த விருதான மனிதநேய விருது எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் மகமூத் ஷா, துணைத்தலைவர் டாக்டர் ஆசிப் அரெய்ன் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் நாசிர் அலி கான் ஆகியோர் எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கி கவுரவித்தனர்.

பாகிஸ்தானின் மிக உயர்ந்த மனிதநேய விருதினை பெற்றுள்ள முதலாவது இந்திய டாக்டர் என்ற பெருமையையும் எஸ்.எம்.பாலாஜி தட்டிச்சென்றுள்ளார். மாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பல் டாக்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில செய்திகள்

உலகத்தரம் வாய்ந்த டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்



சென்னை குரோம்பேட்டையில் உலகத்தரம் வாய்ந்த டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பதிவு: செப்டம்பர் 13, 2018 05:00 AM

சென்னை,

சென்னை குரோம்பேட்டை ஒர்க்ஸ் சாலையில் 36 ஏக்கர் பரப்பளவில் டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையம் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் இந்த மருத்துவ மையத்தின் நிறுவனராகவும், மகள் டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா நிர்வாக தலைவராகவும் உள்ளார். மருத்துவ மையத்தின் தலைவராகவும், மேலாண்மை இயக்குனராகவும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் கின்னஸ் சாதனை படைத்த டாக்டர் ரேலா இருக்கிறார்.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின்னர், கட்டிடத்தின் உள்ளே குத்துவிளக்கேற்றினார்.

அப்போது டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் நிறுவனரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.ஜெகத்ரட்சகன், அவருடைய மனைவி அனுசுயா, மகன் சந்தீப் ஆனந்த்(பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்), மகள் டாக்டர் ஸ்ரீநிஷா, மருமகன் இளமாறன், டாக்டர் ரேலா உள்பட பலர் உடன் இருந்தனர்.

திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், அமைச்சர் எம்.சி.சம்பத், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தில் 450 படுக்கை வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்வதற்கு உயர்தரத்தில் 14 அரங்குகளும், டயாலிசிஸ் செய்வதற்கு சமீபத்திய தொழில்நுட்பத்திலான 40 எந்திரங்களும் இருக்கின்றன.

மேலும், வெளிநோயாளிகள் டாக்டர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவதற்கு 75 அறைகள், பரிசோதனை கூடங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்திலேயே மிகப்பெரிய கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவு இந்த மருத்துவ மையத்தில் உள்ளது.

தொடக்க நிலையில் இருந்து உடல்நிலை மேம்பட உயர்தரத்திலான சிறப்பு கவனம் செலுத்துதல், நவீன ஆம்புலன்ஸ் சேவை போன்ற அனைத்து மருத்துவ சேவைகளையும் நோயாளிகளுக்கு அளிக்க உள்ளனர். மருத்துவ மையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மருத்துவ மையத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர் ரேலா கூறியதாவது:-

மிகவும் உடல்நிலை மோசமான நிலையில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதற்கு தேவையான மருத்துவ சேவைகள் இங்கு இருக்கிறது. காப்பாற்றுவது கடினம் என்று சொல்லும் நோயாளிகளையும் குணப்படுத்துவதற்கு தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய உயர்ரக தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது. மேலும் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து வகையான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் உள்ளது.

எங்கள் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சர்வதேச அளவில் இருக்கும். இதனால் சார்க் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

உயர்தரத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதி இருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ளவர்களின் மருத்துவ தேவையை கருத்தில்கொண்டே ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டுள்ளது.

உயர்தர சிகிச்சை வழங்குகிறோம். ஆனால் அதே சமயத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்போம் என்று நாங்கள் சொல்லவில்லை. மருத்துவ மையத்துக்கு அருகில் 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள உள்ளூர்வாசிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாக கவனம் செலுத்த உள்ளோம். அவர்களிடம் ஆதார் அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ் இருந்தால் உயர்மதிப்பு கொடுத்து சர்வதேச அளவிலான சிகிச்சை மிகவும் குறைவான விலையில் அளிக்கப்படும்.

தெற்கு ஆசியாவிலே இதுபோன்ற நவீன வசதிகள் உடைய ஆஸ்பத்திரி இல்லை என்று நான் கருதுகிறேன். அனைத்து வகையான சிகிச்சைகளும் எங்கள் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும். புற்றுநோய்க்கு உயர்தரமான சிகிச்சை எங்களிடம் இருக்கிறது.

‘ரேடியாலஜி’, எம்.ஆர்.ஐ., நவீன வசதியுடன் ஸ்கேன் செய்யும் எந்திரங்கள், ‘ரோபாட்டிக்ஸ்’ அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிநவீன உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருக்கிறது.

ஆஸ்பத்திரியின் நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன், ‘இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரி கட்டி உங்கள் கையில் ஒப்படைக்கப்போகிறேன். உங்களிடம் எதிர்பார்க்கிறது எல்லாம் தமிழகத்திலும், இந்தியாவிலும் இதுதான் சிறந்த ஆஸ்பத்திரியாக இருக்கவேண்டும். வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறினார். அதற்கான முழு முயற்சியையும் நான் எடுப்பேன்.

லாபத்துக்காக மட்டும் இல்லாமல் சேவையை கருத்தில்கொண்டே இந்த ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது. மருத்துவ சுற்றுலாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளது. புது பிரிவு தொடங்கியிருக்கிறோம். அதில் 96 அறைகள் உள்ளன.

வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அங்கு தங்கலாம். அது ஓட்டலை போன்றே இருக்கும். தீவிர சிகிச்சை பிரிவில் மட்டும் 140 படுக்கைகள் உள்ளன. இதை வைத்துதான் நாங்கள் மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறோம் என்று கூறுகிறேன். இதையும் சேர்த்து மொத்தம் 450 படுக்கைகள் உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளிலும் என்னுடைய சேவை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் நிர்வாக தலைவர் டாக்டர் ஸ்ரீநிஷா கூறுகையில், ‘சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளை கொண்ட, மிகவும் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களால் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக இது இருந்தாலும், சாதாரண ஏழை எளிய மக்கள் வந்து சாதாரண கட்டணத்தில் சிகிச்சை பெறும் வகையில் இருக்கும்’ என்றார்.

மருத்துவ மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர்.
மாவட்ட செய்திகள்

“கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தையை கொன்றேன்” - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்



“கணவர் எப்போதும் வாட்ஸ்-அப்பில் மூழ்கி இருந்ததால் அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தையை கொன்றேன்” என்று கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 12, 2018 05:01 AM மங்கலம்,

குழந்தை சிவன்யாஸ்ரீயை கொலை செய்த தாயார் தமிழ் இசக்கி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். எனது பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூரை அடுத்த சாமளாபுரத்திற்கு குடிவந்தனர். நான் அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்தேன். அப்போது அந்த கடைக்கு செல்போன் ரீசார்ஜ் செய்ய நாகராஜ் வருவார். அப்போது அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடையில் எங்களுக்குள் காதலாக மலர்ந்தது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு சிவன்யாஸ்ரீ என்ற குழந்தை பிறந்தாள்.

நாகராஜ் அந்தபகுதியில் உள்ள தனியார் மில்லில் மூடை தூக்கும் வேலை செய்து வருகிறார். நான், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் வேலைக்கு செல்லும் நாகராஜ், இரவு தாமதமாகத்தான் வீட்டிற்கு வருவார். அப்போது நான் போன் செய்தால் போனை எடுத்து பேச மாட்டார். மேலும் செல்போனில் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கூறும். அப்போது தான் அவர் வேறு ஒருவருடன் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பேசுவது தெரியவந்தது. இதனால் அவருக்கும் வேறு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருக்குமோ? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் வீட்டிற்கு வந்ததும், அவருடன் சண்டைபோடுவேன். அப்போது எனது மாமியார் தலையிட்டு சமரசம் செய்வார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நாங்கள் 3 பேரும் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தோம். உடனே நாகராஜ் வெளியில் சென்றார். அப்போது இரவு 7 மணிக்கு நானும், குழந்தை சிவன்யாஸ்ரீயும் வீட்டில் இருந்தோம். இதற்கிடையில் வெளியூர் சென்று இருந்த எனது மாமியார் தனலட்சுமி வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் குழந்தைக்கு புதுத்துணியை அணிவித்து, பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு வெளியே சென்று விட்டார். அப்போது நான் வைத்து இருந்த ஸ்மார்ட் போன் மூலம் எனது கணவர் நாகராஜை தொடர்பு கொள்ள முயன்றேன். 6 முறை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. ஆனால் யாருடனோ வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு பேசுவது மட்டும் தெரியவந்தது. இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

அவருக்காக குடும்பத்தை உதறிவிட்டு வந்தேன். ஆனால் நான் இனி நடுத்தெருவுக்கு சென்று விடுவேனோ? என்று பயம் ஏற்பட்டது. எனவே இனி இந்த உலகில் வாழ வேண்டாம் என்று, குழந்தையை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி முதலில் ஒரு குச்சியை எடுத்து குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தேன். இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது. பின்னர் குழந்தையின் வாயை பொத்தி அருகில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தேன். 5 அடி உயரம் கொண்ட அந்த பிளாஸ்டிக் தொட்டியில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. இதனால் குழந்தை மூச்சுவிட திணறியது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது.

உடனே குழந்தையை வெளியில் தூக்கி கட்டிலில் போட்டு விட்டு நானும், தற்கொலை செய்ய முடிவு செய்து கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதற்குள் எனது கணவர் நாகராஜ் வந்து விட்டார்.

இதனால் தற்கொலை முயற்சியை கைவிட்டு, அவசரமாக தூக்குப்போட பயன்படுத்திய சேலையை பீரோவில் வைத்து விட்டு கதவை திறந்தேன். குழந்தை வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விவரத்தை என்னிடம் கேட்டார். அப்போது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டிற்குள் புகுந்து குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து விட்டு, என்னையும் தாக்கி விட்டு சென்று விட்டான் என்று கூறினேன். இதை உண்மை என எனது கணவர் நம்பினார். உடனே நானும், அவரும் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றோம். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக சொன்னார்கள். அதன்படி ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் எனது மாமியார் மங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் என்னை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். முதலில் குழந்தையை கொல்லவில்லை என்று மறுத்தேன். ஆனால் கணவர் மீதுள்ள சந்தேகத்தில் நான்தான் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.

இவ்வாறு போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கணவர் மீது உள்ள சந்தேகத்தால் 2½ வயது குழந்தையை தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட் போனால் வந்த வினை

தற்போது குடும்பங்களில் ஸ்மார்ட் போன்களால் தான் பிரச்சினை உருவாகிறது. கணவன் செல்போனில் பிசியாக இருந்தால் மனைவிக்கும், மனைவி செல்போனில் பிசியாக இருந்தால் கணவனுக்கும் சந்தேகம் ஏற்படுகிறது.

அதுபோல்தான் நாகராஜூம், தமிழ் இசக்கியும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக நாகராஜின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இரவு நேரத்தில் வீட்டிற்கு தாமதமாக வருவதும், யாருடனோ செல்போனில் ஷாட்டிங் செய்வதும் தமிழ் இசக்கிக்கு தெரியவந்தது.

மேலும் கடந்த ஒரு மாதமாக செல்போனை யாரும் திறந்து பார்க்காதவாறு அவர் லாக் செய்து வைத்துள்ளார். இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியதால் குழந்தையை கொன்று விட்டு தமிழ் இசக்கி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்திகள்

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது





புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது.

பதிவு: செப்டம்பர் 13, 2018 04:15 AM

சென்னை

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது.

உலகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்ற புனித மெக்கா நகருக்கு ஆண்டுதோறும் துல்ஹஜ் மாதத்தில் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்துக்காக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக 3,829 பேர் கடந்த ஜூலை மாதம் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு ஹாஜிகளுடன் முதல் விமானம் நேற்று மதியம் சென்னை திரும்பியது. இதில் ஒரு குழந்தை மற்றும் 167 பெண்களுடன் 341 பேர் வந்தனர்.

புனித பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், மாநில ஹஜ் கமிட்டி செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் ஆகியோர் விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் இருந்து சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களுக்கு ஹஜ் மானிய தொகையை வழங்கிய தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற அனைத்து வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. ஹஜ் பயணம் முடித்துவிட்டு திரும்பியவர்கள் சிறு சிறு குறைகளை தெரிவித்தனர். வருங்காலத்தில் அவை சரி செய்யப்படும்.

ஹஜ் பயணத்துக்கு தமிழகத்துக்கு கூடுதல் இடஒதுக்கீடுகள் வழங்கும்படி கேட்டு பிரதமருக்கு முதல்–மைச்சர் கடிதம் எழுதி உள்ளார். கூடுதல் இடங்களை மத்திய ஹஜ் குழுதான் ஒதுக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வரும் ஆண்டிலும் கூடுதல் இடங்கள் ஒதுக்க முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹஜ் பயணம் முடித்து சென்னை திரும்பிய முகமது அலி என்பவர் கூறும்போது, ‘‘நாங்கள் புனித ஹஜ் பயணத்தை எந்த சிரமும் இன்றி முடித்து வர தமிழக அரசும், தமிழக ஹஜ் கமிட்டியும் சிறப்பான வசதிகளை செய்து கொடுத்தனர். அவர்களுக்கு எங்கள் நன்றி’’ என்றார்.
மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் குவைத் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு 172 பேர் உயிர் தப்பினர்





சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றபோது எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டார்.

பதிவு: செப்டம்பர் 13, 2018 03:00 AM

ஆலந்தூர்,

சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றபோது எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டார். இதனால் 172 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு நேற்று அதிகாலை 2.50 மணியளவில் விமானம் புறப்பட்டது. அதில் 166 பயணிகளும், 6 விமான சிப்பந்திகளும் பயணம் செய்ய இருந்தனர்.

நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஓடுபாதையில் சிறிது தூரம் சென்றபோது விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தார்.

இதற்கு மேல் விமானத்தை இயக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் மீண்டும் நடைமேடைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ஓடுபாதையில் நின்றிருந்த குவைத் விமானம், விமான நிலையத்தில் உள்ள விமான தள்ளு வாகனங்கள் மூலமாக மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்துவந்து விமானத்தின் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்களால் உடனடியாக பழுதை சரிசெய்ய முடியாததால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தின் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் குவைத்துக்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓடுபாதையில் சென்றபோதே விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டதால் அதில் பயணம் செய்ய இருந்த 172 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
மாநில செய்திகள்

“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது” குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு




“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது”, என 1991-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

பதிவு: செப்டம்பர் 13, 2018 05:15 AM

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது அவர் குண்டு வெடிப்பில் பலியானார். இதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளாக நளினி, பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இந்த படுகொலை சம்பவத்தின்போது ராஜீவ்காந்தி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சீபுரம் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் (அப்போது பணியாற்றியவர்) அனுசியா டெய்சியும் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்தார். தற்போது அவர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக (விழுப்புரம்) பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு, அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அனுசியா டெய்சி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி என் வாழ்நாளின் மிகப்பெரிய கருப்பு நாள் ஆகும். இந்த தினத்தை மறக்க நான் ஒவ்வொரு நாளும் முயற்சித்தாலும், என்னால் முடியவில்லை. அழுகையை அடக்கிக்கொண்டே கனத்த இதயத்துடன் என் காவல் பணியை நிறைவு செய்துவிட்டேன். இருந்தாலும் வேதனையை சுமந்தபடி என் சோகத்தை பகிர்கிறேன்.

அன்றைய தினம், முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து, குறிப்பாக பெண்களை கூட்டத்தை கட்டுப் படுத்தும் நோக்கில் என்னை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்திருந்தனர். என் தலைமையில் 10 பெண் போலீசார் ராஜீவ்காந்தியை பெண்கள் கூட்டம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். நான் ராஜீவ்காந்திக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தேன்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒருகட்டத்தில் நான் தடுமாறி விழப்போனேன். அப்போது ராஜீவ்காந்தி என்னை பார்த்து, ‘பீ ரிலாக்ஸ்’ (பதற்றம் வேண்டாம்) என்று கூறினார். நான் புன்னகைத்தேன். அப்போது ஒரு சிறுமி இந்தியில் ஏதோ அவரிடம் பேச, அதை ராஜீவ்காந்தி உன்னிப்பாக கேட்டுக்கொண்டு இருந்தார்.

அந்தசமயம் திடீரென்று ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த நொடி என் உடம்பில் எதேதோ துளைத்துக்கொண்டு போனது. அதேவேகத்தில் நான் தூக்கி எறியப்பட்டேன். என் உடலின் இடதுபுறம் முழுவதும் சிதைந்தன. என் கையில் 3 விரல்கள் காணவில்லை. முடிகள் அனைத்துமே கருகிவிட்டன. வெடிகுண்டு வெடித்ததில் அதன் ரவைகள் என் உடலை துளைத்து சிதைத்திருந்தன. ஆனாலும் என் உயிர் என்னை விட்டு பிரியாமல் இருந்தது. அப்போது என்னை சிலர் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். மயக்கம் அடைந்த நான், கண்விழித்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தேன்.

அவ்வப்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு என் உடலில் இருந்த குண்டின் ரவைகள் அகற்றப்பட்டன. என் மார்பு பகுதி முழுவதும் கரித்துண்டாய் மாறிப்போனதை நினைத்து நினைத்து அழுதேன்.

சுமார் 3 மாதம் வரை சிகிச்சையில் இருந்தேன். சிகிச்சைக்கு பிறகும் வலி என்னை பாடாய் படுத்தியது. இருந்தாலும் நான் நேசித்த காவல் பணி என்னை விட்டு போகக்கூடாது என்பதால், மீண்டும் காவல் பணிக்கு உடனடியாக திரும்பினேன். என் உழைப்பு, என் நம்பிக்கை எனக்கு பதவி உயர்வை தந்தது. நாகையில் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 வருடம் தலைமையக பணி, ஒரு வருடம் விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரணை பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றேன்.

தற்போது நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு துடிப்பதையும், அரசியல் கட்சிகள் போராடுவதையும் பார்க்கும்போது என் நெஞ்சு கொதிக்கிறது. இவர் களை விடுதலை செய்ய நியாயமான காரணத்தை யாராவது சொல்லமுடியுமா? ‘இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார்கள், பாவம்’, என்று பேசுபவர்கள், என்னை போன்றோர் நடைபிணங்களாய் வாழ்வதை நினைத்து பார்க்காதது ஏன்?

இவர்களை விடுவிக்கட்டும், ஆனால் இவர்களால் செத்துமடிந்த அத்தனை பேருக்கும் உயிர் கொடுத்து எழுப்பிட முடியுமா? என் கை திரும்ப எனக்கு கிடைக்குமா? இந்த நாட்டில் பிறந்ததற்கு, நேர்மையான காவல்பணி செய்ததற்கு இதுபோன்ற வருத்தம் நிறைந்த பரிசுகள் கிடைக்கவேண்டுமா? ஒரு தேச தலைவரை, அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்ற பாவிகளை விடுதலை செய்து நடமாட வைக்க இந்த அரசு நினைக்கிறதா? இதற்கு மக்கள் துணைபோகிறார்களா? குற்றவாளிகளுக்கு பரிதாபமும், சாதகமான தீர்ப்பும் கிடைத்துவிட்டால் அது நீதி ஆகாது.

தற்போது அரசியலுக்காக யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம். ஆனால் காயத்தின் சுவட்டை இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் என் போன்றோரின் கண்ணீருக்கு யாருமே பதில் சொல்லிவிட முடியாது. குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும். செய்த தவறை நினைத்து நினைத்து சம்பந்தப்பட்டோர் வருந்தவேண்டும்.

இதற்கு முன்பு நான் அரசு பணியில் இருந்தேன். அதனால் என் கடமைக்கு கட்டுபட்டு நான் எதுவும் பேசவில்லை. இப்போது நான் பணியில் இல்லை. எனவே என் வேதனையை தெரிவிக்கிறேன். நளினி உள்பட அந்த 7 குற்றவாளிகள் வெளியே வரக்கூடாது. அவர்களை விடுதலை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
HC confirms judicial officer’s retirement

CHENNAI, SEPTEMBER 13, 2018 00:00 IST

His conduct in the court was assessed to be poor

The Madras High Court has confirmed the compulsory retirement of a judicial officer because his conduct inside as well as outside the court was assessed to be either poor or bad and his reputation with respect to honesty, integrity and impartiality was assessed to be either doubtful or poor in the annual confidential reports (ACR).

Dismissing a writ petition filed by S. Murugadoss who was serving as the IV Assistant Judge in the City Civil Court here at the time of his compulsory retirement at the age of 50, a Division Bench of Justices M. Venugopal and M. Nirmal Kumar held that there were good and sufficient reasons for having forced him to retire.

“To secure efficiency in public service and to preserve honesty and integrity among the serving judicial officers, the inefficient/deadwood or dishonest person can be retired compulsorily... When the performance of an employee is unsatisfactory, it is detrimental or prejudicial to the interest of the institution,” the Bench observed.

Authoring the judgment, the senior judge in the Bench also said that the powers vested on the High Court judges to make entries in the ACR of subordinate judicial officers would not only help in keeping a vigil over the performance of the members of the subordinate judiciary but also assist in shaping the career of the judicial officers. In so far as the history of the present case was concerned, Mr. Justice Venugopal pointed out that the writ petitioner had joined the Tamil Nadu State Judicial Service as a Civil Judge (Junior Division) in 1995 and got promoted to the Senior Division in 2007.

However, his performance was assessed to be poor/bad in 2004 and 2006.

Full court’s approval

The Administrative Committee of the High Court comprising top seven judges met on April 23, 2009, and decided that he should not be allowed to continue in service. The decision was approved in the full court (all judges) meeting held on March 11, 2010, when the petitioner had undergone a renal transplantation.

When the full court resolution was forwarded to the government for issuing a G.O., the latter called for materials based on which a decision was taken to retire the petitioner compulsorily. However, the Registrar General refused to part with the materials on the ground that the government could not review the decision of the full court. Hence, a G.O. was issued on September 5, 2011, retiring the petitioner from service compulsorily with effect from November 1, 2011.
No prima facie case of corruption made out against CM, says 
DVAC

CHENNAI, SEPTEMBER 13, 2018 00:00 IST


Marriage between parties no reason to book case: AG

The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) on Wednesday told the Madras High Court that a complaint by DMK organising secretary R.S. Bharathi “does not show, on the face of it, a prima facie case of cognisable offence” for the registration of a First Information Report against Chief Minister Edappadi K. Palaniswami.

Appearing before Justice A.D. Jagadish Chandira, Advocate General Vijay Narayan said the Chief Minister’s son P. Mithun got married only in 2014 whereas his in-laws were in the business of laying roads since the 1990s. They had obtained the contracts from successive governments, including the period when the DMK ruled the State, and therefore, could not be prevented all of a sudden, he said.

Opposing the DMK leader’s plea to book a case against the Chief Minister, the Advocate General said the petitioner could not level wild allegations and expect them to culminate in the registration of an FIR, especially when the DVAC had already conducted a thorough preliminary inquiry.

Asserting that no cognisable offence had been made out, he said: “A marriage between two parties is not a cognisable offence. Awarding contracts is not a cognisable offence.”

He went on to add that the petitioner’s plea had actually become infructuous since the DVAC had completed its preliminary inquiry and submitted a report to its Director (an officer in the rank of Additional Director General of Police) as well as the Vigilance Commissioner (a post held by a senior Indian Administrative Service officer) on August 28. Now, it was up to those two officials to take a call on further course of action.

If the officials were satisfied with the report, they may accept it and drop further action. On the other hand, if they disagree with the conclusions arrived at by the investigating officer, they may send the report back with a direction to conduct a fresh inquiry, the AG said and submitted a copy of the report in a sealed cover. However, the judge chose not to open it and directed the High Court Registry to keep it in safe custody.

He, instead, directed the DVAC to file a status report, also in a sealed cover, by Monday listing out the steps taken by it on a day- to-day basis between June 13 and August 28. The direction was issued after the AG said that even if the two officials decide to drop further action, the petitioner would not be without any remedy and that he could pursue any course that was available to him under the criminal law.

In his submissions, senior counsel N.R. Elango, representing the petitioner, wondered how the preliminary inquiry could have been completed by the DVAC without even obtaining a statement from the complainant. “How can I expect this agency to come and say, yes our CM is guilty of corruption? That is the reason I have now sought for a court monitored probe by a special investigation team on my complaint,” he said.
Apple launches largest ever iPhone

Meet the largest-ever iPhone. TIMES OF INDIA 13.09.2018

Apple on Wednesday unveiled the iPhone XS, a premium model with a 5.8-inch screen, and the iPhone XS Max a new big-screen premium model with a 6.5-inch screen. The iPhone XS Max (what a mouthful!) is the company’s biggest-ever smartphone. The XS models are generally sped-up versions of last year’s iPhone X, Apple’s first $999 model. Apple emphasised the phones’ advanced processor, durable glass and so-called Super Retina OLED display with a wide colour gamut. It’s obvious why Apple and other phone makers like Samsung keep increasing the size of their phone screens: Phones with bigger screens are selling well. When presented with the choice between a small phone and a bigger one, most people will go with the latter. That’s similar to how just about everyone wants a big-screen TV.

Yet for mobile phones, there are tradeoffs. For one, the phones get more difficult to use with one hand. With last year’s 5.8-inch iPhone X, it was difficult to reach your thumb across the screen to type a keystroke or hit a button inside an app. Those usability tradeoffs will probably persist in these new models.

The larger screens raise an important question about design and usability. Will Apple do much in the near future to improve one-handed use as its devices keep getting larger? When Apple’s screen sizes started getting much larger with the iPhone 6 in 2014, the company released a software shortcut called Reachability, where you tapped the home button twice to lower the top of the screen and make it easier to reach buttons up there.

That feature still exists for the brand-new iPhones, but the lack of a home button makes it more difficult to use — instead of double tapping the home button, now you swipe down from the bottom of the screen.

Apple Watch becomes more of a health device

Apple introduced a new version of its watch that it’s calling the Apple Watch Series 4, which it has designed to be more of health aid.

It’s the first time the company has redesigned the device since it was introduced in 2015. The new watch is slightly thinner than the previous version, but the black frame around the screen — what are know as the “bezels” — has been removed to create a larger display area. Significantly, Apple said the new watch has a faster processor and better health and motion sensors. For instance, the watch can detect when a wearer has fallen down, a leading cause of injuries. REUTERS



The new iPhone XS and XS Max being unveiled at the Steve Jobs Theater at Apple Park in Cupertino, California on Wednesday
Court orders ₹2cr relief to widow of doc killed on duty

Nainital:13.09.2018

The Uttarakhand high court on Wednesday directed the state government to pay compensation of ₹1,99,09,000 (one crore, ninetynine lakh and nine thousand rupees), along with interest of 7.5% per annum from the date of filing of the petition in 2017, to the widow of Dr Sunil Kumar, who was shot dead while on duty at the Community Health Centre (CHC) in Jaspur in Udham Singh Nagar district on April 20, 2016.

The high court also awarded “extraordinary pension” to the petitioner Sarita Singh as per the provisions of the Uttar Pradesh Civil Services (Extraordinary Pension) (First Amendment) Rules, 1981, as adopted by Uttarakhand, within 10 weeks, along with arrears at the rate of 8.5% interest per annum.

The division bench of acting Chief Justice Rajiv Sharma and Justice Manoj Kumar Tiwari also ordered that the provisions of the ‘Uttarakhand Medicare Service Persons and Institutions (Prevention of Violence and Damage to Property) Act, 2013’, be enforced in letter and spirit.

The order was reserved on September 8 and a certified copy was released on Wednesday. The high court also observed that the deceased, whose last drawn salary was ₹1,27,300, was due for promotion to the post of chief medical officer (CMO) and his salary would have increased to ₹1,91,000 thereafter. TNN
Govt docs to go on strike for pay hike on Sept 21
TIMES NEWS NETWORK

Chennai:13.09.2018

Government doctors will boycott working barring emergency services across the state on September 21 if the government does not hike their salaries on par with their counterparts at the Centre.

On Wednesday, more than 3,000 government doctors — including many heads of departments and senior professors — marched from Chepauk to St Fort George holding placards, posters and banners demanding better pay. They handed over a memorandum to the chief minister Edappadi K Palaniswami’s office explaining the difference in pay between the Central and state government doctors.

Government doctors, who teach in medical colleges and carry out patient services, are paid less than teachers in state-run veterinary, agriculture and arts and science colleges, the joint action committee of Government Doctors Association said. Government doctors get their first pay band revision in their eight year of service and have to wait till 15th year for promotions. “For nearly a decade now, we have been demanding for pay parity with Central government doctors and time-bound promotions. We have held talks with the health department and finance department. We were told that the health department will make recommendations to the finance, nothing happened,” said JAC-GDA head Dr K Senthil.

The basic salary for doctors in state and central services is the same when they join duty, but doctors in central government services receive promotions in four, nine, 13 and 20 years, compared to eight, 15, 17 and 20 years in the state government, he said.

For nearly a month, government doctors have been boycotting classes, skipping routine meetings and audits, and have not been updating their daily reports. “Nevertheless, we did not stop patient services. We expected government to give us a favourable reply. We are now forced to declare one day strike,” said Dr A Ramalingam.

On September 21, doctors from all government hospitals from primary health centre to medical colleges will boycott OP services and elective surgeries.


Government doctors protesting demanding pay hike on Wednesday
Centre bans Saridon, 327 other combination drugs
6,000 Brands Likely To Be Affected

TIMES NEWS NETWORK

The health ministry has banned the manufacture, sale and distribution of 328 fixed dose combinations (FDCs) of drugs with immediate effect and restricted another

six. This brings to an end a protracted legal battle between manufacturers of these combination drugs and the ministry, which has been working since 2016 to get these “irrational” and “unsafe” drugs banned.

Among the roughly 6,000 brands estimated to be affected by the ban are popular drugs like the painkiller Saridon, skin cream Panderm, combination diabetes drug Gluconorm PG, antibiotic Lupidiclox and antibacterial Taxim AZ.

The government had banned 344 FDCs on March 10, 2016 and later added five more to this list. However, manufacturers of these drugs contested the ban in various high courts and the Supreme Court. The SC on December 15, 2017 asked for the matter to be examined by the Drugs Technical Advisory Board. DTAB concluded in its report that there was no therapeutic justification for the ingredients in 328 FDCs and that these could be a risk to people. The board recommended banning them.

In the case of six other FDCs, the board recommended restricted manufacture and sale subject to certain conditions based on their therapeutic justification. The SC ruled that the government could not use the DTAB report to prohibit 15 of the 344 drugs in the original list as these have been manufactured in India since before 1988.


‘Banned FDCs account for about ₹2,500 crore & only tip of the iceberg’

This exception covered several popular cough syrups, painkillers and cold medication with sales amounting to over ₹740 crore annually. However, the court told the ministry that it could still look into the safety of these 15 drugs by initiating a fresh investigation if it wanted to ban them.

The All India Drug Action Network, a civil society group working on safety and access to medicines which was one of the petitioners in the Supreme Court case, welcomed the ban and sought swift action from the government on the 15 excluded FDCs. “The banned FDCs account for about ₹2,500 crore and represent only the tip of the iceberg. In our estimate, the market for unsafe, problematic FDCs in India is at least one-fourth of the total pharma market which is valued at ₹1.3 trillion,” said AIDAN in a statement. It also sought a review of all FDCs in the market in the interest of patient safety as recommended by the Kokate Committee, constituted by the health ministry to examine FDCs.

Meanwhile, many large drug companies have claimed that over the last couple of years they have either phased out such drugs or changed the combination. The FDCs in question are less than 2%, they claim.

Wednesday, September 12, 2018

கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை' 
 
dinamalar 12.09.2018

புதுடில்லி : 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக கவர்னர், தானாக முடிவெடுக்க முடியாது. மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் கருணை மனு மீது, கவர்னர் முடிவெடுக்க வேண்டும்' என, சமீபத்தில் கூறியது.

இதைத் தொடர்ந்து, 'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அது தொடர்பாக, கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது: மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை, முன்னதாகவே விடுவிப்பது அல்லது தண்டனையைக் குறைப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரித்துள்ளதால், மத்திய அரசின் கருத்தை, கவர்னர் கேட்க வேண்டும். ராஜிவ் கொலைக்கான சதி திட்டம் குறித்து, சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.

'இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நாடுகளிடம் உதவிகளை கேட்டுள்ளதால், இந்த வழக்கு தற்போதும்  விசாரணையில் உள்ளது' என, அந்தக் குழு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலையாளிகளை விடுவித்தால், அது தவறான முன்னுதாரணமாக மாறி விடும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக கவர்னர் தானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மத்திய அரசின் ஆலோசனைகளை பெற வேண்டிய கட்டாயம், அவருக்கு உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
டீசல் வாங்கினால், 'லேப் - டாப்' இலவசம்

Added : செப் 11, 2018 22:42






பர்வானி : 'மத்திய பிரதேச மாநிலத்தில், பெட்ரோல், டீசல் வாங்குவோருக்கு, 'பைக், லேப் - டாப்' உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்' என, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

முடிவு :

மத்திய பிரதேசத்தில், பெட்ரோலுக்கு, 27 சதவீதமும்; டீசலுக்கு, 22 சதவீதமும், 'வாட்' வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் இங்கு, பெட்ரோல் லிட்டர், 86.60 ரூபாய்க்கும் டீசல், 76.95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது, நேற்றைய விலை நிலவரம். இதன் காரணமாக, இங்குள்ள பெட்ரோல் பங்க்குகளில், லாரி மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள், பெட்ரோல், டீசல் போடுவதை தவிர்க்கின்றனர்.

இந்நிலையில், தங்களிடம் தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாங்கும், உள்ளூர் மற்றும் வெளிமாநில லாரி டிரைவர்களுக்கு, இலவச பரிசுகளை வழங்க, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: புதிய அறிவிப்பின்படி, 100 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கும் டிரைவருக்கு, காலை உணவும், டீயும் இலவசமாக வழங்கப்படும். 200 லிட்டர் வாங்கினால், டிரைவர் மற்றும் கிளீனருக்கு, காலை உணவு வழங்கப்படும்.

மேலும், 5,000 லிட்டர் வாங்கினால், மொபைல் போனுடன், சைக்கிள் அல்லது கை கடிகாரம் வழங்கப்படும். 15 ஆயிரம் லிட்டருக்கு மேல் வாங்கினால், பீரோ, சோபா செட் அல்லது 100 கிராம் வெள்ளி நாணயம் தரப்படும்.

ஆயிரம் லிட்டர் :

இதுதவிர, 25 ஆயிரம் லிட்டருக்கு மேல் வாங்கினால், வாஷிங் மிஷினும், 50,000 லிட்டர் வாங்கினால், 'ஏசி' அல்லது லேப் - டாப் வழங்குவோம். ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் வாங்கினால், ஒரு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும். ஒரு முறை இலவச பரிசு பெற்றவர்கள், அடுத்த இலக்குக்கு செல்ல முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
மாநில செய்திகள்

பல்லாவரம் வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை: வேலைக்கார பெண் உள்பட 5 பேர் கைது





வங்கி அதிகாரி வீட்டில் 206 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் வேலைக்கார பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: செப்டம்பர் 12, 2018 04:38 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் வங்கி மேலாளர் யோகசேரன் (வயது 55) வீட்டுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முகமூடி கும்பல் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 206 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது.

இதில் துப்புதுலக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னை தெற்கு இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட், சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹயாத்துல்லா, சுமன், மோகன்ராஜ், போலீசார் செந்தில்குமார், பார்த்தசாரதி, அன்பரசு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது அதில், கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் கொள்ளையர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

வேலைக்கார பெண் மீது சந்தேகம்

வேலைக்கார பெண் மகாராணியும் மதுரையை சேர்ந்தவர் என்பதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தின்போது யோகசேரன், அவருடைய மனைவியை கட்டிப்போட்ட கயிற்றின் மீதி பகுதி மகாராணி தங்கியிருந்த வீட்டின் கீழ்தளத்தில் கிடந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்ய போலீசார் கேட்டபோது, கொள்ளையர்கள் தனது செல்போனையும் பறித்துச் சென்றதாக மகாராணி கூறினார்.

அவரது செல்போனில் கடைசியாக பேசியவரின் எண்ணை மகாராணி வீட்டில் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த செல்போன் எண்ணை வைத்திருப்பவர் தான் கொள்ளை நடந்தபோது அந்த பகுதிக்கு வந்துசென்றது தெரியவந்தது. எனவே போலீசார் மகாராணியை பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

நாய்களை கொன்றார்

போலீசாரின் கேள்விகளுக்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மகாராணி உண்மையை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

மதுரையில் இருந்து சென்னை வந்த மகாராணி தெரிந்தவர்கள் மூலமாக வங்கி அதிகாரி யோகசேரன் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அவர் வீட்டு வேலைகளை சரியாக செய்து, விசுவாசமானவர் போல காட்டிக்கொண்டார். தனக்கு சரியாக காது கேட்காது என கூறியும் வீட்டில் இருந்தவர்களின் அனுதாபத்தை பெற்றார்.

வீட்டில் நகை மற்றும் பணம் இருப்பதை தினமும் நோட்டமிட்ட மகாராணி அவற்றை கொள்ளையடிக்க சில நாட்களாக திட்டம் தீட்டினார். யோகசேரன் வீட்டில் 2 நாய்கள் வளர்த்து வந்தார். கடந்த மாதம் உணவில் விஷம் கலந்து ஒரு நாயை முதலில் கொன்றார். அடுத்த வாரத்தில் மற்றொரு நாயையும் அதேபோல் கொன்றார்.

திட்டம்போட்டார்

அதன்பின்னர் மகாராணி தனது உறவினரான நாகை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (30) என்பவருடன் சேர்ந்து கொள்ளை திட்டத்தை வகுத்தார்.

இதற்கிடையில் வங்கி அதிகாரி யோகசேரனின் மகள் மதுரையில் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு சென்னை வந்து வங்கி லாக்கரில் தன்னுடைய நகையை வைப்பதற்காக தந்தை வீட்டிற்கு வந்தார். இதனை அறிந்த மகாராணி அந்த நகைகளை கொள்ளையடிக்க முடிவு செய்து அருண்குமாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்படி அருண்குமார் தன்னுடைய நண்பர்களான மதுரையை சேர்ந்த செல்வம் (28), சுரேஷ் (26), கவுதம் (21) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னைக்கு வந்தார். பல்லாவரம் வந்த 4 பேரும் யோகசேரன் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் 4 பேரையும், யாருக்கும் தெரியாமல் மகாராணி தனது கீழ்த்தள அறையில் தங்கவைத்தார்.

கொள்ளையடித்தனர்

யோகசேரனின் மகள் நகையை தந்தையிடம் கொடுத்துவிட்டு அண்ணாநகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றார். அப்போது யோகசேரனின் மகனும் வெளியில் சென்றுவிட்டார். இவைகளை கவனித்த மகாராணி, “இது தான் சரியான நேரம். நான் மேலே வேலை செய்ய செல்வதுபோல சென்று கதவை திறந்துவைக்கிறேன். நீங்கள் உள்ளே நுழைந்து என்னையும் சேர்த்து கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்துவிட்டு செல்லுங்கள்” என கூறி வீட்டின் மாடிக்கு சென்றார்.

மகாராணி மாடிக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போடாமல் வீட்டு வேலை செய்வதுபோல உள்ளே சென்றார். கொள்ளையர்கள் மகாராணி அளித்த யோசனையின்படி நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

5 பேர் கைது

மகாராணியிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் மதுரையில் பதுங்கி இருப்பதை போலீசார் அறிந்தனர். செல்போன் எண்களை கொண்டு அவர்களின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து அங்கு விரைந்து சென்று கொள்ளையர்கள் அனைவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவர்கள் கொள்ளையடித்த நகைகளை கோவையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கொள்ளையர்களுடன் கோவை சென்ற போலீசார் மறைத்துவைத்திருந்த நகைகளை மீட்டனர். இதையடுத்து வேலைக்கார பெண் மகாராணி உள்பட 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாருக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார். அவர்களுக்கு வெகுமதியும் வழங்கப்படவுள்ளது.

Tamil Nadu Governor has no power to release Rajiv Gandhi assassination case convicts: Officials

The AIADMK government in Tamil Nadu had on Sunday recommended to the governor to release the convicts, a move hailed by most political parties in the state.

Published: 11th September 2018 07:46 PM



NEW DELHI: Tamil Nadu Governor Banwarilal Purohit has no power to release the seven convicts sentenced to life imprisonment in the Rajiv Gandhi assassination case as recommended by the state government and will have to consult the Centre as per law, officials said Tuesday.

Since the investigation into the assassination was carried out by a CBI-led team, the governor will have to consult with the central government before he takes a decision to remit or commute the sentence of the seven convicts, a Home Ministry official said.

The AIADMK government in Tamil Nadu had on Sunday recommended to the governor to release the convicts, a move hailed by most political parties in the state.

The CBI-led Multi Disciplinary Monitoring Agency (MDMA), probing the larger conspiracy aspect behind the assassination, had a few months ago conveyed to the Supreme Court that the investigation into the case was "still open" and letters rogatory have been issued to different countries, including Sri Lanka, where some persons required to be investigated were currently residing.

Under the Section 435 in the Code of Criminal Procedure, 1973, the state government will have to act only after consultation with the central government to remit or commute a sentence.

On August 10, 2018, the Centre had opposed in the Supreme Court the proposal of the Tamil Nadu government to release the seven convicts, saying that the setting them free would set a very wrong precedent.

According to the Supreme Court verdict, the state government cannot remit sentence of any convict in cases probed by a central agency and the Centre's approval is mandatory for releasing the killers of Rajiv Gandhi as the case was probed by the CBI.

"The central government, in pursuance of section 435 of the Code of Criminal Procedure, does not concur with the proposal of Tamil Nadu government contained in the communication letter dated March 2, 2016 for grant of further remission of sentence of these seven convicts," the government had said in its reply to the apex court.

On May 21, 2018, the CBI-led Multi Disciplinary Monitoring Agency had informed a bench headed by Justice Ranjan Gogoi that the probe into the case was "still open" and letters rogatory have been issued to different countries, including Sri Lanka, where some persons required to be investigated were currently residing, another official.

"Under these circumstances, there is no material ground to alter the stand taken by the central government in the recent past," the official said.

Rajiv Gandhi was assassinated at a poll rally on the night of May 21, 1991 at Sriperumbudur in Tamil Nadu by a woman suicide bomber, identified as Dhanu.

Fourteen others, including Dhanu herself, were also killed in the explosion.

The MDMA, set up in 1998 on the recommendations of Justice MC Jain Commission of Inquiry, had probed the conspiracy aspect of Rajiv Gandhi's assassination and is headed by a CBI official and comprises officers from IB, RAW and Revenue Intelligence and other agencies.

In its May 1999 order, the top court had upheld the death sentence of four convicts -- A G Perarivalan, Murugan, Santham and Nalini -- in the assassination case.

In April 2000, the Tamil Nadu governor had commuted the death sentence of Nalini on the basis of the state government's recommendation and an appeal by former Congress president and Rajiv Gandhi's widow Sonia Gandhi.

On February 18, 2014, the top court had commuted the death sentence of Perarivalan to life imprisonment, along with that of two other prisoners - Santhan and Murugan - on grounds of a delay of 11 years in deciding their mercy pleas by the Centre.

The other three convicts are Jayakumar, Ravichandran and Robert Payas.

The apex court had in March this year dismissed a plea by Perarivalan seeking recall of the May 1999 verdict upholding his conviction.

The charge against Perarivalan was that he had purchased two nine volt battery cells meant for detonating the bomb.
Students receive their degrees at Dr MGR Institute

He gave away the PhD degrees, Certificate of Excellence, and medals/souvenirs to rank holders.

Published: 11th September 2018 10:48 PM | 



TN Governor Banwarilal Purohit distributed degrees and Certificates of Excellence to students of Dr MGR Educational and Research Institute, deemed to be university in Maduravoyal during the institute’s 27th convocation on Monday
By Express News Service

CHENNAI: The 27th convocation of Dr MGR Educational and Research Institute, deemed to be university, Maduravoyal, was held on Monday at ACS Convention Centre, ACS Medical College and Hospital Campus at Velappanchavadi in Chennai.

According to a statement from the institute, CB Palanivelu, registrar, informed that 2,303 degrees were awarded to successful students of PhD, PG and UG programmes of BTech, MBBS, BDS, BPT, MDS, MTech, MArch, MBA, MCA, MPT, BSc.

The release added that Banwarilal Purohit, Governor of Tamil Nadu, was the chief guest of the convocation proceedings and delivered the convocation address. He gave away the PhD degrees, Certificate of Excellence, and medals/souvenirs to rank holders.

Degrees distributed

CB Palanivelu, registrar, informed that 2,303 degrees were awarded to the successful students of PhD, PG and UG programmes of BTech, MBBS, BDS, BPT, MDS, MTech, MArch, MBA, MCA, MPT, BSc.
Grant NOC to college: HC

KOCHI, SEPTEMBER 12, 2018 00:00 IST

The Kerala High Court has directed the All India Council for Technical Education (AICTE) to consider an application of Fathima Memorial Educational Trust, Kollam, for conversion of its engineering college into a polytechnic expeditiously.

The application shall be considered by “adverting to the perspective plan of the State government without insisting on NOC from the State government”, an order passed by Justice A. Muhamed Mustaque said.

Earlier, the application of the trust for an NOC for converting its engineering college into a polytechnic was rejected by the government, AICTE, and the APJ Abdul Kalam Technological University, Thiruvananthapuram.

The State refused the NOC stating that a polytechnic in the self-financing sector was not needed as there were sufficient number of such institutions in the State. It was also stated that 822 polytechnic seats were vacant during 2017-18.

The court set aside the order of the State government rejecting the NOC as it found that no students were currently studying in engineering courses at the college. The university shall issue an NOC to the petitioner in ten days as the college had already shifted students to other colleges, the court said.
Paramedical courses

PUDUKOTTAI, SEPTEMBER 12, 2018 00:00 IST

The Government Medical College, Pudukottai, will offer three-year B.Sc.courses in various disciplines and applications will be issued at the college till September 19. The college will offer the courses in operation theatre and anaesthesia technology, accident and emergency care technology, radiology and imaging technology, critical care technology, physician assistant and medical laboratory technology.

The applications for the job-oriented courses can be had on submission of a demand draft for Rs. 400, S. Saradha, dean of the college, said in a press release.
Silambu Express to be tri-weekly

MADURAI, SEPTEMBER 12, 2018 00:00 IST



A meeting of MPs from Madurai and Tiruchi railway division areas and officials in progress in Madurai on Tuesday.
Members of Parliament seek more stoppages and train services

Southern Railway has proposed to increase the frequency of Chennai-Shencottah Silambu bi-weekly express into tri-weekly.

Its General Manager R.K. Kulshrestha gave this assurance at a meeting of Members of Parliament from the jurisdiction of Madurai and Tiruchi railway divisions here on Tuesday.

Responding to a demand made by Sivaganga MP PR. Senthilnathan to make the express a daily express, Mr. Kulshrestha said the proposal to increase the frequency to tri-weekly had been sent to the Railway Board. “The GM said increasing the frequency of Silambu Express to daily express was not feasible due to lack of infrastructure for maintenance of rakes at Chennai Egmore,” Mr. Senthilnathan said.

The GM also told the MPs that Tambaram-Shencottah Antyodaya daily express would be introduced soon on getting permission from the Board.

He cited lack of rakes as reason for not making Rameswaram-Coimbatore weekly express as a daily express. Mr. Senthilnathan sought coach indication boards and platform shelters at Devakottai, Sivaganga and Manamadurai stations. Besides, he sought six rail overbridges in his district.

Madurai MP R. Gopalakrishnan sought upgradation of Tirupparankundram railway station with all passenger amenities for stoppages of more trains. “I pointed out that AIIMS had been planned at Thoppur and Tirupparankundram station would be most-sought after by patients who come by train to the speciality hospital from various parts of the State,” he said.

Stating that Antyodaya Express – a rake with all unreserved coaches – would serve only the middle class and the poor passengers, Mr. Gopalakrishnan sought more stoppages between Tirunelveli and Madurai and beyond so that more passengers could use the train.

“With fewer passengers using the train, the railways could, at a later stage, cite poor patronage and stop this train in this section. With more stoppages, the trains will get more patronage,” he said. He also sought halt for Madurai-bound Pandian Superfast Express at Koodal Nagar railway station for the benefit of passengers who need to go to northern parts of the city now.

Twelve MPs from Tamil Nadu, one MP from Kerala, the Principal Heads of Departments and the Divisional Railway Managers (Madurai and Tiruchi) participated in the meeting. Mr. Kulshrestha highlighted works that had been targeted for completion and which had been proposed for improving passenger amenities.
35 seats left vacant in BDS govt. quota

CHENNAI, SEPTEMBER 12, 2018 00:00 IST

Thirty-five dental seats under the government quota in self-financing colleges in the State have found no takers at the end of two mop-up counselling rounds.

Though the Directorate of Medical Education had planned on a two-day round, lack of response resulted in the round lasting just a day.

Only 318 candidates attended the counselling for the 564 vacancies in management quota and 264 vacancies under government quota. Seats were allotted to 237 aspirants under the government quota and of the 65 candidates who attended counselling, 64 were allotted.
Doctors stage protest demanding pay parity

CHENNAI, SEPTEMBER 12, 2018 00:00 IST

About 200 government doctors took part in a human chain to highlight their demand for pay parity with Central government doctors on Tuesday.

P. Balakrishnan, State president of Democratic Tamil Nadu Government Doctors Association, said doctors in Tamil Nadu faced pay disparity ranging from Rs. 20,000 to Rs. 80,000 with doctors in the Central government.

“The disparity in pay exists at all levels starting from an assistant surgeon/assistant professor to professor/chief civil surgeon. We are facing this disparity for the last 10 years.

“The State government was supposed to issue a review of a government order issued in 2012 in October 2017. This review is pending. If this review is issued and the recommendations of the Seventh Pay Commission are implemented, then this disparity will be solved,” he explained.

He added that the pay band-4 (Rs. 37,400-Rs. 67,000) with a grade pay of Rs. 8,700 should be given after completion of 13 years in service.

“However, we are getting this pay band only after 20 years. Except those in medical colleges, faculty members of government arts and science colleges, veterinary colleges and engineering colleges in the State are getting this pay band after 13 years in service,” he said.

They also wanted a new payscale to be provided for doctors on completion of 20 years and then at 25 years.

The demonstration was also held in Kanniyakumari, Cuddalore, Salem and Vellore.
HC puts rider for issuing passport

CHENNAI, SEPTEMBER 12, 2018 00:00 IST

Asks him to get trial courts’ permission to travel abroad

The Madras High Court on Monday directed Regional Passport Officer, Coimbatore, to issue a passport to former lottery baron S. Martin on condition that he disclose details of all criminal cases pending against him across the country besides obtaining permission from trial courts concerned for going abroad.

Justice R. Mahadevan issued the direction on a writ petition challenging the RPO’s February 10, 2017 order refusing to issue a passport. Senior counsel P.S. Raman, representing the petitioner, contended that his client owned properties worth thousands of crores. So, there need not be any fear of absconding.

However, on his part, Central government senior standing counsel N. Ramesh brought it to the notice of the court that the petitioner had not disclosed details of all criminal cases pending against him even in the affidavit sworn in support of the present writ petition which was pending since last year.

During the last hearing of the case, the petitioner provided a list of cases pending against him and it contained details of a Central Bureau of Investigation (CBI) case pending against him in Kochi. It was brought to the notice of the court that Section 6(2) (f) read with Section 5(2) (c) of the Passports Act of 1967 empowers the RPOs to refuse issuance of passports to those who were facing criminal cases before courts of law and the constitutional validity of those provisions had been upheld by a Division Bench of the Delhi High Court in 2016.

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...