Friday, February 6, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அக விலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 107 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயருகிறது. ஜனவரி 1 ஆம் தேதி கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் அடைவார்கள். ஜனவரி 30 இல் டிசம்பர் மாதத்திற்குரிய தொழில் துறை ஊழியர் திருத்திய நுகர்வோர் குறியீட்டு எண் வெளியானதன் அடிப்படையில் சரியான அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

DELHI GOES TO POLL TOMORROW


கேலி செய்தவங்க நல்லாவே இருக்க கூடாது: தற்கொலை செய்த மாணவி உருக்கம்!

திருவண்ணாமலை: என்னை கேலி செய்தவர்கள் நல்லாவே இருக்க கூடாது என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அடுத்த கீழ் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், இவருடைய மனைவி ராணி. கூலி தொழிலாளியான இவர்களுடைய மகள் லாவண்யா, ஜவ்வாதுமலையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், லாவண்யா மட்டும் அறையில் இருந்துள்ளார். மாணவிகள் குளித்துவிட்டு வந்து லாவண்யாவின் அறையை தட்டி உள்ளனர். ஆனால் அந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக மாணவிகள் எட்டிப் பார்த்தபோது, லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அவரும் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே போளூர் துணை சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மற்ற மாணவிகளிடமும் விடுதி காப்பாளரிடமும் விசாரணை நடத்திய போலீசார், அந்த அறையை சோதனையிட்டபோது மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கி இருக்கிறது.

அந்த கடிதத்தில், ''அம்மா என்னை மன்னிச்சிடு, எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. அதனால் வேறு உலகத்திற்கு போகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க ஒரு நாள் வருவேன். பாப்பா, தம்பி, அப்பா, ஆயா, மாமா, அக்கா, சொக்கநாதன் எல்லோரையும் பார்க்க ஒரு நாள் வருவேன்.

பாப்பாவை மட்டும் எந்த விடுதியிலும் சேர்க்காதே, அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் இருக்கிற விடுதியில் சேருங்கள். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க்காதே. என்னை கேலி செய்தவங்க நல்லாவே இருக்கக் கூடாது. அவர்களை நான் சும்மாவிட மாட்டேன். என்னுடைய சாவை நானே தேடிக் கொண்டேன்". எனக்கு உதவி செய்த தோழிகளுக்கு நன்றி. என் சாவுக்கு இந்த பள்ளிக்கும் விடுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று எழுதப்பட்டிருந்தது.

இதன் மூலம் மாணவர்கள் கிண்டல் செய்ததால் தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளதால், மாணவியை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வகுப்பை கட் அடித்து அஜீத் படம் பார்க்க சென்ற 17 மாணவர்கள் சஸ்பெண்ட்!


திருப்பூர்: வகுப்புகளை புறக்கணித்து விட்டு நடிகர் அஜீத் நடித்த "என்னை அறிந்தால்" படத்தை பார்க்க சென்றதாக கூறி 17 மாணவர்களை முதன்மை கல்வி அதிகாரி சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜீத் குமார் நடித்த "என்னை அறிந்தால்" படம் நேற்று தமிழகம் முழுவதும் ரிலீசானது. திருப்பூரில் இந்த சினிமாவை பார்க்க அரசு பள்ளி மாணவர்கள் பலர் காலை வகுப்புகளுக்கு வராமல் புறக்கணித்து விட்டு, தாராபுரம் சாலையில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அவர்கள் தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பள்ளி சீருடை அணிந்து இருந்தனர்.

அதே நேரம் அந்த வழியாக காரில் வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.முருகன், தியேட்டர் முன் பள்ளி சீருடையில் மாணவர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று, அங்கிருந்தவர்கள் உதவியுடன், அங்கு நின்றிருந்த 17 மாணவர்களையும் பிடித்து, தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் என்று தெரியவந்தது.

உடனே அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து, அனைவரையும் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.முருகன் கூறுகையில், "தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வுகள் நெருங்கி விட்ட நிலையில், மாணவர்கள் வகுப்புக்கு வராமல் புறக்கணித்து விட்டு சினிமாவுக்கு சென்றதால் அந்த 17 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் அந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர்களை சந்திக்க வேண்டும் என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சினிமா படம் பார்க்க சென்ற 17 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரி பாக்கி: எப்படியெல்லாம் வசூலிக்கிறாங்க...?!



சென்னை: சொத்துவரியை வசூலிக்க, திருநங்கைகளை அழைத்துவந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன்பு நடனமாட வைத்து, சென்னை மாநகராட்சி நூதன வசூலில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈக்காட்டுத் தாங்கலில் பன்னாட்டு நிறுவனத்தின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பெரும் பணம் படைத்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் அளவிலான அனைத்து வித வசதிகளோடும் இயங்கிவரும் இந்த ஹோட்டல், சென்னை மாநகராட்சிக்குச் சொத்துவரி செலுத்தவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று காலையில் உதவி வருவாய் அலுவலர் தமிழ் தலைமையில் அதிகாரிகள் ஓட்டலுக்குச் சென்றனர்.

ஹோட்டல் முன்பு தண்டோரா அடித்து திருநங்கைகளை நடனமாட வைத்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் சொத்து வரி கட்டாததற்கான நோட்டீசை வழங்கினார்கள்.

அவர்களுடன் ஹோட்டல் நிர்வாகிகள் சிலர் நேரில் வந்து சொத்து வரி குறித்துப் பேசினர்.அவர்களிடம் உண்மை நிலையை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கிய பின்னர், ஹோட்டல் நிர்வாகத் தரப்பினர் சொத்து வரிக்காக ரூ.33 லட்சத்து 90 ஆயிரத்துக்கு காசோலையைக் கொடுத்தனர்.

இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் , ‘‘நாங்கள் ஹோட்டலுக்கு இதுவரை சொத்துவரி பாக்கி வைத்ததே கிடையாது. சொத்து வரி செலுத்த மார்ச் மாதம் வரை அவகாசம் உள்ளது. ஆனால் அதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து விட்டனர்’’ என்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சியின் உதவி வருவாய் அலுவலர் தமிழ், "சொத்து வரிக்கான ரசீது கொடுத்து 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும். 15 நாட்கள் தாண்டினால் இதுபோல நோட்டீஸ் கொடுத்து வரியை வசூலிப்போம். மும்பையில்தான் தண்டோரா போட்டு திரு நங்கைகளை நடனமாட வைத்து நட்சத்திர ஓட்டல்களில் சொத்து வரி வசூலிப்பார்கள். அதே பாணியில் தற்போது சென்னையிலும் தண்டோரா போட்டு திருநங்கைகளை நடனமாட வைத்து சொத்து வரிக்காக நோட்டீஸ் கொடுக்கிறோம்" என்றார்.

எப்படியோ..வரி பாக்கி வசூலானால் சரிதான்!

1999: திணறல் திலகம் தென்னாப்பிரிக்கா

ஆலன் டொனால்ட்

ஆயிரம் திறமைகளைக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டமும் கைகொடுத்தால்தான் வெற்றி கிடைக்கிறது. அது, 1999 உலகக் கோப்பையில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கும் பொருந்தும். அந்த அணிக்கு எப்போதுமே ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டம் அடித்தபடி இருந்தது.

இல்லாவிட்டால், ஆஸ்திரேலியாவை விட வலுவா னதாகக் கணிக்கப்பட்ட தென்னாப் பிரிக்காவைத் தொடர்ந்து இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றிருக்க முடியாது.

தென்னைப்பிரிக்கா வலுவான அணியாக இருந்தபோதிலும், உலகக் கோப்பையை பொருத்த வரையில் அதிர்ஷ்டம் இல்லாத, அணியாகவே இருந்துவருகிறது. 1992-ல் விந்தையான மழை விதியால், அரையிறுதி வாய்ப்பைப் பறிகொடுத்தது தென்னாப்பிரிக்கா.

நீ தவறவிட்டது கோப்பையை நண்பா!

1999-ல் சூப்பர் சிக்ஸ் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய நிலையில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா. ‘ஐஸ் மேன்’ எனப் பெயற்பெற்ற ஸ்டீவ் வா எப்போதும் போல் நெருக்கடியிலிருந்து அணியை மீண்டும் காப்பாற்றினார்.

272 என்னும் இலக்கை நோக்கி ஆடியபோது, 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸி. அப்போது களமிறங்கிய ஆபத்பாந்தவன் ஸ்டீவ் வா, ஆட்டமிழக்காமல் 120 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல உதவினார்.

அவர் 56 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சினை கிப்ஸ் தவறவிட்டார். அப்போது அவரைப் பார்த்து, “நண்பா.. நீ தவறவிட்டது கேட்ச்சை அல்ல. உலகக் கோப்பையை” என்று ஸ்டீவ் வா சொன்னார். அதைப் போலவே அரையிறுதியில் தோற்று வெளியேறியது தென்னாப்பிரிக்கா.

அரையிறுதியில் தென்னாப் பிரிக்கா அணி சொதப்பி யதையும், லான்ஸ் குளூஸ்னர் என்ற அதிரடி வீரரின் ஆட்டத்தையும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஆனால், நெருக்கடி யான கட்டங்களில், எளிதில் நெருக்கடிக்குள்ளாகி, நம்ப முடியாத வகையில் சொதப்பிவிடு வதால் கிடைத்த ‘சோக்கர்ஸ்’ என்னும் அடைமொழி இன்றளவும் தொடர்கிறது.

குளூஸ்னர், யார் எப்படிப் போட்டாலும், ராக்கெட் வேகத்தில் பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார். 4 போட்டிகளில் ஆட்டநாயகன் பரிசினைப் பெற்றார். அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். ஆனால் ஆஸ்திரேலி யாவுக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் நிலை யில் இருந்த தென்னாப்பிரிக்கா, திடீரென்று சொதப்பி ஆட்டத்தை ‘டை’ செய்து இறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் டேமியன் ஃப்ளெமிங்கை எதிர்கொண்டார் ‘அதிரடி’ குளூஸ்னர். மறுமுனையில் கடைசி ஆட்டக்காரரான டொனால்ட். குளூஸ்னருக்கு 9 ரன்கள் மிகச் சாதாரணம் என அனைவரும் நினைத்தனர்.

அதுபோலவே, முதல் இரு பந்துகளில் பவுண்டரி அடித்து ஸ்கோரைச் சமன் செய்தார் குளூஸ்னர். 4 பந்துகளில் 1 ரன் தேவை. தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிவிடும் என ஆஸ்திரேலிய வீரர்களே நம்பத் தொடங்கிய நேரத்தில் அது நிகழ்ந்தது.

3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தை அடித்துவிட்டு, வெற்றி ரன்னுக்கா குளூஸ்னர் ஓடினார். டொனால்டோ, அவரைப் பார்க்காமல் பந்தை பார்த்தபடி இருந்தார். குளூஸ்னர் ஓடிவந்துவிட்டதைக் தாமதமாகவே பார்த்த டொனால்ட், அலறி அடித்துக்கொண்டு ஓடினார். வழியில் தடுமாறி மட்டையைக் கீழே போட்டுவிட்டார். மார்க் வா, பந்தினை பவுலரிடம் வீசினார்.

அவர் பதற்றப்படாமல் கீப்பர் கில்கிறிஸ்ட்டிடம் வேகமாக அதை உருட்டி விட்டார். அதைப் பிடித்து டொனால்ட்டை ரன்-அவுட் செய்தார் கில். ஆட்டம் சமனில் முடிந்தது. நிகர ரன் விகித அடிப்படையில் இறுதியை அடையும் வாய்ப்பை ஆஸியிடம் தென்னாப்பிரிக்கா இழந்தது. ‘சோக்கர்ஸ்’ (திணறல் திலகம்) என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது. இன்றுவரை அந்த அணியால் கோப்பையையும் வெல்ல முடியவில்லை. இந்தப் பட்டத்தையும் உதற முடியவில்லை.

சச்சினுக்கு வந்த சோதனை

1999 உலகக் கோப்பையை இந்தியா பெரும் நம்பிக்கையோடு எதிர்கொண்டதற்குக் காரணம் மட்டை அணியின் மும்மூர்த்தி களான சச்சின், கங்குலி, திராவிட் ஆகியோர்தான்.

இவர்களுக்குத் துணையாக சடகோபன் ரமேஷ், முகம்மது அசருதீன், அஜய் ஜடேஜா ஆகியோரும் நயன் மோங்கியாவும் ஆல்ரவுண்டர் அஜித் அகர்க்கரும் இருந்ததால் இந்தியாவின் மட்டை வலு அபாரமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும்.

இத்தனை வலிமை இருந்தும் இந்தியாவால் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெல்ல முடியவில்லை. எல்லாத் துறை களிலும் அபாரத் திறமை பெற்ற தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற தில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஜிம்பாப்வேயிடம் தோற்றுப் போனதுதான் இந்தியாவின் பின்ன டைவுக்குக் காரணமாக அமைந்தது.

இந்த இரு போட்டிகளுக்கு இடையே ஒரு அசம்பாவிதம் நடந்தது. சச்சினின் அப்பா ரமேஷ் டெண்டுல்கர் காலமாகிவிட்ட செய்தி வந்தது. சச்சின் உடனே கிளம்பி மும்பைக்குச் சென்றார். ஜிம்பாப்வே போட்டியில் அவர் ஆடவில்லை.

டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்த இந்தியா, நன்றாகவே தொடங்கினாலும் தொடர்ந்து சரியாகப் போட வில்லை. ஜிம்பாப்வே 252 ரன்களை எடுத்தது. அன்று இந்தியாவின் பெரிய வில்லன் என்றால் அது உபரி ரன்கள்தான். 21 வைட், 16 நோபால்களுடன் வந்த 51 உபரி ரன்கள் ஜிம்பாப்வேக்கு போனஸாக அமைந்தன. கடைசியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

அடுத்த போட்டி கென்யாவுடன். அதற்குள் திரும்பிவிட்ட சச்சின் அந்தப் போட்டியில் சதம் அடித்தார். அடித்துவிட்டுக் கண்களில் நீர் மல்க வானத்தைப் பார்த்தார். அன்று முதல் ஒவ்வொரு சதம் அடித்த பின்பும் அதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இலங்கையுடனான போட்டியில் கங்குலியும் (183) திராவிடும் (145) அற்புதமாக ஆடியதில் இந்தியா வென்றது. தட்டுத் தடுமாறி சூப்பர் சிக்ஸுக்கும் சென்றது. ஆனால் சூப்பர் சிக்ஸில் ஐந்து போட்டிகளில் நான்கில் தோற்று வெளியேறியது.

கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டி, பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் போட்டி ஆகிய இரண்டைத் தவிர வேறு எதிலும் இந்தியா சிறப்பாக ஆடவில்லை என்பதால் இந்தியா மறக்க விரும்பும் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒன்றாக இது அமைந்துவிட்டது.

களத்தில் இயர்போனில் பேசிய குரோன்யே

உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்புமிக்க மிக வலுவான அணியாகப் பல்வேறு திட்டமிடல்களுடன் இங்கிலாந்து வந்திருந்தது தென்னாப்பிரிக்கா. இந்தியாவுடனான போட்டியில் ஸ்லிப்பில் நின்றிருந்த கேப்டன் ஹன்ஸி குரோன்யே காதில் இயர் போனைப் பொருத்தி, அதில் பயிற்சியாளபர் பாப் உல்மரின் கட்டளைகளைக் கேட்டுக்கொண்டி ருந்தார். அது கண்டறியப்பட்டு, உடனடியாக, போட்டியின்போதே அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

வங்கதேசம், ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி

1999 போட்டிகளில், வித்தியாச மான சிகையலங்காரத்துடன் தோன்றிய ஜிம்பாப்வே வேகப் பந்து வீச்சாளர் ஹென்றி ஒலங்காவை யாரும் மறந்திருக்க முடியாது.

லீக் போட்டியில், 253 ரன் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருந்தபோது, 45-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா 3 ரன்னில் தோற்கக் காரணமாக அமைந்தவர். பின்னாளில், ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின்போது அவரை சச்சின் துவம்சம் செய்தது வேறு விஷயம்.

இதுபோல், முதல் முறையாக போட்டியில் பங்கேற்ற வங்கதேசம், வலுவான பாகிஸ்தான் அணியை, 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி, உலகக் கோப்பையையே வென்றது போன்ற களிப்பில் நாடு திரும்பியது.

17/5 என்ற நிலையில் முதல் பந்தையே பவுண்டரி அடித்த கபில்: 1983 உலகக்கோப்பையை நினைவுகூரும் ஸ்ரீகாந்த்



ஆன்டி ராபர்ட்ஸ் பந்தை 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்கொயர் டிரைவ் ஆடி அசத்திய ஸ்ரீகாந்த். | கோப்புப் படம்.

ஆன்டி ராபர்ட்ஸ் பந்தை 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்கொயர் டிரைவ் ஆடி அசத்திய ஸ்ரீகாந்த். | கோப்புப் படம்.


1983 உலகக்கோப்பை போட்டிகளில் பலமான அணிகளை வென்று கோப்பையையும் முதன் முதலாக கைப்பற்றிய அந்தத் தொடரை முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த முழு பேட்டியில் கூறியிருப்பதாவது:

"உலகக்கோப்பை வெற்றி நாங்கள் சிறந்த அணி என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய விதத்தில் அந்த தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனை தருணமாகும்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஓல்ட் டிராபர்டில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்றது எங்களிடையே பெரிய தன்னம்பிக்கையை விதைத்தது.

அப்போதெல்லாம் மேற்கிந்திய தீவுகள் என்பது மிகப்பெரிய அணி, விவ் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லாய்ட் உள்ளிட்ட மகா பேட்ஸ்மென்களும், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், ஜெஃப்ரி டியூஜான் போன்ற நல்ல வீரர்களும் இருந்தனர். மேலும் பந்துவீச்சு அச்சுறுத்தலானது. முதல் போட்டியில் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தோம், அதுதான் அந்த உலகக்கோப்பையில் இந்திய அணியை நம்பிக்கையின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

நம்மிடம் வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர்கள் என்ற வகையில் மதன்லால், ரோஜர் பின்னி, இருந்தனர். அவர்களது பாணி பந்துவீச்சுக்கு இங்கிலாந்து மிகவும் பொருத்தமாக அமைந்தது. பின்னி அந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலராக சிறப்புற்றார். இவர்கள் பேட்டிங்கும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும், சிறந்த பேட்ஸ்மென் மொகீந்தர் அமர்நாத் இருந்தார். அவரது பந்துவீச்சும் மதிப்பு மிக்கதாக இருந்தது. கீர்த்தி ஆசாத்தும் ஆல்ரவுண்டரே.

கபிலின் ஜிம்பாப்வேயிற்கு எதிரான 175 ரன் இன்னிங்ஸ் பற்றி...

ஆனால், அனைத்திற்கும் மேலாக கபில்தேவ், நான் பார்த்ததில் சிறந்த ஆல்ரவுண்டர் கபில்தான். பவுலிங், பேட்டிங், பீல்டிங் என்று அனைத்திலும் அவர் மிகத்திறமை வாய்ந்தவர். அவர் மிகப்பிரமாதமான ஸ்விங் பவுலர், ஆக்ரோஷமான பேட்ஸ்மென் மற்றும் சிறந்த ஒரு தடகள மனோபாவம் உள்ள பீல்டர்.

அவரது கிரிக்கெட் வாழ்வின் 2ஆம் பகுதியில் ஸ்லிப்பில் சில அதிர்ச்சிகரமான கேட்ச்களை கபில் பிடித்துள்ளார். இம்ரான் கூட பீல்டிங்கில் சிறந்தவர் என்று கூற முடியாது. ஆனால் கபில் எதைச் செய்தாலும் பிரமாதப்படுத்தக் கூடியவர்.

ஜிம்பாப்வேயிற்கு எதிராக நாம் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தோம். அப்போது பெரும்பாலும் பேட்ஸ்மென்கள் தடுத்து ஆடவே செய்வர். ஆனால் கபில் அந்த நிலையிலும் தான் எதிர்கொண்ட முதல் பந்தை உள்கள பீல்டிற்கு வெளியே தூக்கி பவுண்டரி அடித்தார். அதன் பிறகு உலகின் தலைசிறந்த ஒருநாள் இன்னிங்ஸை அவர் ஆடினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அன்று பிபிசி ஸ்ட்ரைக்கில் இருந்ததால் அதன் வீடியோ இல்லாமல் போனது.

அப்போதெல்லம் நிறைய மூடநம்பிக்கைகள் இருந்தன. ஜிம்பாப்வேயிற்கு எதிராக அன்று கபில் ஆடிக்கொண்டிருந்த போது, ஓய்வறைக்கு வெளியே நானும் என் மனைவி வித்யாவும் நின்று கொண்டிருந்தோம். கபிலின் அந்த இன்னிங்ஸ் முழுதும் நாங்கள் அங்கேயே நிற்க நேரிட்டது. ஒரு இன்ச் கூட நகரவில்லை, காரணம் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் கபில் அவுட் ஆகி விடுவார் என்று நினைத்தோம். அன்றைய தினம் நல்ல குளிர், காற்றும் அடித்துக் கொண்டிருந்தது. எங்களால் அங்கு நிற்க முடியவில்லை. ஆனால் கபிலின் அன்றைய ஆட்டம் அனைத்தையும் மறக்கடித்துவிட்டது.

நாங்கள் கடைசி வரை ஆடினோம், கிர்மானி நல்ல விக்கெட் கீப்பர், நல்ல பேட்ஸ்மெனும் கூட, அவருக்கு கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்கவில்லை என்றே நான் கூறுவேன். அவர் அந்தத் தொடரில் தனது அனைத்து முயற்சிகளையும் பங்களிப்பு வாயிலாக செய்தார்.

தனது ஹீரோ விவ் ரிச்சர்ட்ஸை முதன்முதலில் சந்தித்தது பற்றி...

அணிகளை பிரிட்டீஷ் ராணி விருந்துக்கு அழைத்திருந்த தருணம் அது. அப்போது விவ் ரிச்சர்ட்ஸிடம் சென்று நானே என்னை அறிமுகம் செய்து கொண்டேன், அவர், ‘வெரி குட் மேன், குட் லக் மேன்’ என்றார். அந்தச் சந்திப்பை என்னால் மறக்க முடியாது.

ரிச்சர்ட்ஸுடன் பேசினேன், டெனிஸ் லில்லி பந்தை எதிர்கொண்டேன், உலகக்கோப்பைப் போட்டிகளை பார்வையிட வந்த குண்டப்பா விஸ்வநாத்துடன் பேசினேன்.

இறுதிப் போட்டியில் தனது 38 ரன் பற்றி...

ஜொயெல் கார்னர் பந்துகள் விளையாட முடியாத தன்மையில் இருந்தது. பிட்சில் ஈரப்பதம் இருந்ததால், ஸ்விங், பவுன்ஸ் என்று கடினமாக இருந்தது. சுனில் கவாஸ்கர் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்தோம், ஆனால் மொகீந்தர் அமர்நாத்தின் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை அளித்தது. நான் ஆண்டி ராபர்ட்ஸ் பந்தை ஸ்கொயர் டிரைவ் ஆடும்போது விஸ்வநாத்தை நினைத்தேன், ஒரு கலைஞன் போல் அவர் அந்த ஷாட்டை ஆடுவார்.

ரிச்சர்ட்ஸ் கேட்சை கபில் பிடித்தது பற்றி...

ரிச்சர்ட்ஸ் அன்று ஆடிய ஆட்டம் என்ன நினைக்க வைத்தது என்றால் தேநீர் இடைவேளையுடன் ஆட்டம் முடிந்துவிடும் என்றே. அப்போது மதன்லால் வீசிய பந்து ஷாட் பிட்ச் ஆனது. ஆனால் ரிச்சர்ட்ஸ் அதனை சரியாக மட்டையுடன் தொடர்பு படுத்தவில்லை. பந்து மேலே எழும்பியது. கபில்தேவ் பின்பக்கமாக, பக்கவாட்டில் வேறு ஒடிக்கொண்டிருந்தார். டீப் ஸ்கொயர் லெக் அருகே பந்து இறங்கிக் கொண்டிருந்தது, யாஷ்பால் சர்மா வேறு பந்தைப் பிடிக்க அருகில் வந்து கொண்டிருந்தார். ஆனால், கபில் “இது என்னுடையது” என்று கத்தினார். கடும் நெருக்கடியில் மிகச்சிறந்த கேட்ச் ஒன்றை கபில் பிடித்தார். உலகக்கோப்பை வெற்றி கேட்ச் அதுவே.

வரலாற்று வெற்றிக்கு பிறகு ஹோட்டல் விடுதியில் இந்திய வம்சாவளி ரசிகர்கள் பாட்டு, டான்ஸ் என்று களைகட்டினர். அது ஒரு நம்பமுடியாத உணர்வை தந்தது.

நாங்கள் சிறந்த பீல்டிங் அணியாக இருந்தோம், உலகக்கோப்பை முழுதும் ஒரே ஒரு கேட்சைத்தான் விட்டோம். முதல் போட்டியில் மைக்கேல் ஹோல்டிங்குக்கு மொகிந்தர் அமர்நாத் ஸ்கொயர் லெக்கில் விட்ட கேட்ச்தான் அது. அதன் பிறகு ஒரு கேட்சைக் கூட விடவில்லை. நான் கவர் மற்றும் கவர் பாயிண்டில் பீல்டிங்கை மகிழ்ச்சியுடன் செய்து வந்தேன்.

அணி நல்ல செட்டில்டு அணியாக இருந்தோம், திலிப் வெங்சர்க்கார், ரவிசாஸ்திரி போன்ற நல்ல வீரர்களுக்குமே கடைசியில் அணியில் இடமில்லாமல் போனது.

1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மினி உலகக்கோப்பையை வென்றது பற்றி...

ஆஸ்திரேலியாவில் பிட்ச்களில் பவுன்ஸ் அதிகம் இருந்ததால் நான் பந்துகள் எழும்பும் இடத்திலிருந்தே டிரைவ் ஆடத் தொடங்கினேன். நான் கட் ஷாட், புல் ஷாட், ஹூக் ஷாட் என்று அனைத்தையும் விளையாடினேன். ஆஸ்திரேலியாவில் பேட் செய்த தருணங்களை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.”

என்ற ஸ்ரீகாந்த் அந்தத் தருணங்களைப் பற்றி பேசும்போது அவரது கண்களில் இன்னமும் அதே மகிழ்ச்சி, சிரிப்பு தெரிந்தது.

தமிழில்: ஆர்.முத்துக்குமார்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...