Friday, November 10, 2017


வக்கீல்களின் பள்ளி சான்றிதழ்களை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு


சென்னை ஐகோர்ட், Chennai High Court, வக்கீல்கள்,
Advocates, பார் கவுன்சில், Bar Council, நீதிபதி கிருபாகரன், Judge Kripakaran,வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து,
Advocates kattapanchayat,  கல்லூரி சான்றிதழ், College Certificate, திறந்த நிலை பல்கலை, Open University,
சென்னை: வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை சரிபார்க்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து செய்வது தொடர்பான புகார் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: அனைத்து வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதி இல்லமல் இயங்கும் லெட்டர் பேட் சட்ட கல்லூரிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 2 படிக்காமல், திறந்த நிலை பல்கலை.,யில் படித்தவர்கள் லெட்டர் பேடு கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்ட பட்டத்தை விலைக்கு வாங்குகின்றனர். போலி வக்கீல்களை நீக்க புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஓட்டுநர் இல்லாமல் 13 கி.மீட்டர் ஓடிய ரயில் என்ஜின்: அதிருஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு



ஓட்டுநர் இல்லாமல் ரயில் என்ஜின் 13 கி.மீட்டர் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 09, 2017, 04:52 PM
கல்பர்கி,

கர்நாடக மாநிலம் வடி ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் என்ஜின், ஓட்டுநர் இல்லாமல் 13 கி.மீட்டர் தானாக ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- “கர்நாடக மாநிலம் கல்பர்கி மாவட்டத்தில் வடி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு, நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை-மும்பை செல்லும் ரயில் வந்தது. வடி ரயில் நிலையத்தில் ரயிலின் எலக்ட்ரிக் என்ஜின் அகற்றப்பட்டு டீசல் என்ஜின் இணைக்கப்பட்டது. வடி ரயில் நிலைய சந்திப்பில் இருந்து சோலாப்பூர் ரயில் நிலையம் வரையிலான பாதை மின்சாரமயமாக்கப்படாததால், டீசல் என்ஜின் இணைக்கப்பட்டது. இதையடுத்து, ரயில் சோலாப்பூருக்கு பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தது.

இதற்கிடையில், எதிர்பாராத விதமாக, தனியாக நிறுத்தப்பட்டு இருந்த எலக்ட்ரிக் ரயில் என்ஜின் தானாக ஓடத்துவங்கியது. இதை எதிர்பாராத ரயில்வே அதிகாரிகள், ரயிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக விபத்து ஏற்படாமல் இருக்க என்ஜின் தானாக ஓடிய ரயில் பாதையில் சிக்னல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது. அடுத்தடுத்து இருந்த ரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன.

ரயில்வே அதிகாரி ஒருவர் தானாக ஓடிய என்ஜினை மோட்டார் சைக்கிள் மூலமாக ரயிலை துரத்தினார். ஒருவழியாக என்ஜின் வேகமும் குறைய துவங்கியதால் ஓட்டுநர் தாவிப்பிடித்து, என்ஜினை நிறுத்தினார். சினிமா காட்சிகள் போன்று நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓட்டுநர் இல்லாமல் ரயில் 13 கி.மீட்டர் ஓடியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ரயில் என்ஜின் தானாக எப்படி இயங்க ஆரம்பித்து ஓடத்துவங்கியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 15-ந் தேதி நடை திறப்பு



மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 15-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.

நவம்பர் 10, 2017, 04:45 AM
சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு, கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து பூரண விரதம் தொடங்கி, இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

நடை திறப்பு

மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வருகிற 16-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய மேல்சாந்தி ஏ.வி.உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.

பூஜைகள்

16-ந் தேதி முதல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும். மண்டல பூஜை அடுத்த மாதம் 26-ந் தேதியும், அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடக்கிறது.
வருமான வரித்துறை சோதனைகள் கன்னித்தீவு போல் தொடர்கிறது ஆனால் எடுத்த நடவடிக்கை என்ன? ஸ்டாலின் கேள்வி



வருமான வரித்துறை சோதனைகள் கன்னித்தீவு கதை போல் தொடர்கிறது ஆனால் எடுத்த நடவடிக்கை என்ன? மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்

நவம்பர் 09, 2017, 01:50 PM
சென்னை

சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் மேலும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 190 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வருமான வரி சோதனை குறித்து கூறியதாவது:-

`தமிழகத்தில் வருமான வரித்துறையின் ரெய்டு தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. குட்கா புகாரில் நடந்த ரெய்டு என்னவாயிற்று? ஆர்.கே.நகர் பணப்படுவாடா புகாரின் பேரில் நடந்த ரெய்டு என்னவாயிற்று? வருமானவரித்துறை சோதனை தொடர்பாக பேச என்னிடம் பெரிய பட்டியலே உள்ளது . இப்படி தொடர்ந்து நடந்து வரும் ரெய்டுகளின் நிலை என்ன என்பது குறித்து தெளிவு இல்லை. தினத்தந்தி 'கன்னித்தீவு' தொடர் போலத்தான் வருமானவரித்துறை சோதனைகள். இதைப் பற்றி கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை',

`ரெய்டு அரசியல் நோக்கத்தோடு நடத்தப்பட்டதா?' என்று கேட்டதற்கு, `என்னிடம் விளக்கம் கேட்பதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அவர் பதில் சொன்ன பிறகு, நான் கருத்து கூறுகிறேன்' என்று கூறினார்
190 இடங்கள்;1800 அதிகாரிகள்: சசிகலா-தினகரன் உறவினர்கள் வீடுகள் அலுவலகங்களில் சோதனை



190 இடங்கள்; 1800 அதிகாரிகள்: சசிகலா - தினகரன் உறவினர்கள் வீடுகள் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தினர் இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நவம்பர் 09, 2017, 04:03 PM
சென்னை:

சசிகலா உறவினர் வீடுகள், தொழிலகங்கள் என 190 இடங்களில் இன்று வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 105 இடங்களில் சோதனை நடக்கிறது.சென்னையில் 20 இடங்கள், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

இந்த சோதனையில் வருமான வரி ஆணையர்கள் 6 பேர் உட்பட 1,800 அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 10 பேர் வரை இடம்பெற்றனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1000 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். SRINI weds MAHI என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோல் சோதனைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.

* சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் வீடு,
* ஈக்காடு தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம்,
* போயஸ்கார்டனில் உள்ள ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகம்,
* ஈக்காடு தாங்கலில் உள்ள நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம்,
* வேளச்சேரியில் உள்ள ஜாஸ் அலுவலகம்,
* தியாகராய நகரில் உள்ள இளவரசி மகள் டாக்டர் கிருஷ்ணப்பிரியா வீடு.
* நுங்கம்பாக்கத்தில் உள்ள இளவரசி மகன் விவேக் வீடு.
* பெசன்ட் நகரில் உள்ள நடராஜன் வீடு.
* படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை .
*ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டு.
*கர்நாடக மாநில அ.தி. மு.க. அம்மா அணி செயலாளராக இருக்கும். புகழேந்தியின் பெங்களூரு முருகேஷ்பாளையம் முனுசாமப்பா லே-அவுட் பகுதியில் உள்ள வீடு.
* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகரில் டி.டி.வி.தினகரனின் வீடு
* மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் தம்பி திவாகரன் வீடு.
* தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங் கடேஷ் வீடு.
* மன்னார்குடி அன்னவாசல் தெருவில் உள்ள தினகரன் அணி ஆதரவாளரும் , அ.தி.மு.க. அம்மா அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளருமான எஸ்.காமராஜ் வீடு.
* மன்னார்குடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராசுப்பிள்ளையின் வீடு.
* திருவாரூர் அருகே கீழ திருப்பாலங்குடியில் தினகரனின் உதவியாளர் விநாயகத்தின் வீடு.
* தஞ்சை வடக்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வேலு கார்த்திகேயன் வீடு.
* சசிகலாவின் அண்ணன் மனைவியான இளவரசியின் சம்பந்தியும் ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை என்ஜினீயருமான கலியபெருமாளின் வீடு.
* திருச்சி கே.கே.நகர் உடையான் பட்டியில் உள்ள அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதியின் தம்பி யும், தினகரன் அணியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயனின் வீடு.
*அறந்தாங்கி அருகே நெற்குப்பையில் உள்ள பரணி கார்த்திகேயனின் வீடு
* தஞ்சை அருளானந்த நகர் பகுதியில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் வீடு.
* சசிகலாவின் உறவினர் மறைந்த மகாதேவன் வீடு.
* ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இல்லத்தில் சோதனை
* கர்சன் எஸ்டேட்
* மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் ஆதரவாளரான பொன்.வாசுகிராமன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.
* ஜெயலலிதாவின் மருத்துவரும், தினகரனின் உறவினருமான டாக்டர். சிவக்குமாரின் இல்லத்தில் வருமான வரி சோதனை.
* டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும், வழக்கறிஞருமான பாலுச்சாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை.
* திருத்துறைப்பூண்டியில் திவாகரன் நண்பரான ஓய்வுபெற்ற வேளாண் இயக்குநர் நடேசன் வீட்டில் சோதனை.
* கோடநாடு எஸ்டேட் கணக்கை நிர்வகிக்கும் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
* திருச்சி : ஜெயலலிதாவின் மருத்துவரும், தினகரனின் உறவினருமான டாக்டர். சிவக்குமாரின் இல்லத்தில் வருமான வரி சோதனை.
* மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் ஆதரவாளரான பொன்.வாசுகிராமன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
* வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் வடகாட்டில் வெங்கட் என்பவரது வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை

சசிகலாவின் உறவினர் விவேக் நடத்தும் ஜாஸ் சினிமா அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான லக்ஸ் சினிமா அரங்குகளிலும் சோதனை நடக்கிறது. இதன் காரணமாக வேளச்சேரியில் உள்ள லக்ஸ் சினிமாவின் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரும் நிறுவனமாக வளர்ந்தது ஜாஸ் சினிமாஸ். இதனை சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஜாஸ் சினிமாஸ் ஆரம்பிக்கப்பட்டது. வந்த வேகத்தில் அப்போதுதான் புதிதாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் தொடங்கப்பட்ட சத்யம் சினிமாஸின் லக்ஸ் சினிமாவை வாங்கியது ஜாஸ். மொத்தம் 11 அரங்குகள். அவற்றில் ஒன்று ஐமேக்ஸ் தியேட்டர். 1000 கோடி ரூபாய்க்கு இந்த அரங்குகளை வாங்கியதாக தகவல் வெளியானது.

ஆனால் அப்போது எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. ஜாஸ் நிறுவனமும் கபாலி, விவேகம் என பெரிய படங்களை வாங்கி விநியோகித்தது. இன்று ஜாஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் முக்கியமான விநியோக நிறுவனமாகத் திகழ்கிறது.

இந்த நிறுவனத்தில் இன்று காலை முதலே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படம் பார்க்க ஆர்வத்துடன் வந்த பல நூறு பேர் காட்சிகள் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்களில் சோதனை ஏன்? வருமான வரித்துறை



சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்களில் நடந்து வரும் சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நவம்பர் 09, 2017, 02:07 PM
சென்னை

இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சசிகலா பெயரில் 4 போலி நிறுவனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை சசிகலா நடத்தி வந்த போலி நிறுவனங்கள்.

இந்த போலி நிறுவனங்கள் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா டி.வி.க்கு தொடர்புடையதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலையங்கம்
அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் சீராக இயங்க வேண்டும்



தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரப்பிரசாதமாக அமைந்தது.

நவம்பர் 10 2017, 03:00 AM

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரப்பிரசாதமாக அமைந்தது. கடந்த 10 நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. சென்னை போன்ற இடங்களில் கடுமையான மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியநேரத்தில் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும், சிறிய கார்கள் வைத்திருப்பவர்களும் அந்த தண்ணீருக்குள் வாகனங்களை ஓட்டமுடியாது என்றநிலையில், ரெயில்களையும், அரசு போக்குவரத்துக்கழக பஸ்களையுமே பெரிதாக நம்பியிருந்தனர். ஒருசில வாடகை கார் கம்பெனிகளும் இந்த மழையில் எங்களால் வாகனங்களை இயக்க இயலாது என்று நிறுத்திவைத்து விட்டனர். எனவே, அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் ஒன்றைத்தான் மக்கள் சார்ந்திருக்க வேண்டியதிருந்தது. புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படாமல் ஓடியதால் ஓரளவுக்கு நிலைமைகள் சமாளிக்கப்பட்டன. ஆனால், சென்னையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் பெரும்பாலும் மழையினால் ஒழுகிக்கொண்டிருந்தன. ஏராளமான பஸ்கள் ஓடவில்லை.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 48 லட்சம் மக்கள், அரசு போக்குவரத்துக்கழகங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 பஸ்களில், 833 ரூட்களில் பயணம் செய்துவந்தனர். ஆனால், இந்த மழைகாலத்தில் ஏறத்தாழ 350 பஸ்கள் ஓடவில்லை. இதில் 230 பஸ்களின் மேற்கூரையில் இருந்து நிறைய தண்ணீர் ஒழுகியதாலும், ‘சீட்’கள் எல்லாம் மிகவும் பழுதாகி இருந்ததாலும் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நிறையபேர் மழை காரணமாக பணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை 5 லட்சம் கிலோமீட்டர் வரை ஓட்டலாம். அல்லது 8 ஆண்டுகள் வரையில் ஓட்டலாம். அதன்பிறகு அந்த பஸ்கள் ஓட்டுவதற்கு தகுதியில்லாத காலாவதியான பஸ்களாக ஆகிவிடுகின்றன. இப்படி பழைய பஸ்களை இயக்குவதால்தான் அடிக்கடி ‘ரிப்பேர்’ ஆகிறது. டீசலும் அதிகளவில் செலவாகிறது. ஏராளமான புகையையும் கக்கிக்கொண்டு செல்வதால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. மழைகாலத்தில் மேற்கூரையில் தண்ணீர் ஒழுகுவதும் இதுபோன்ற பஸ்களால்தான்.

இந்தியா முழுவதும் கடந்த 2015–16–ம் ஆண்டில் உள்ள பொது போக்குவரத்துகளின் செயல்பாடுகள் தொடர்பான ஒரு அறிக்கையை மத்திய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. இதில் நாட்டிலேயே காலாவதியான பஸ்களை இயக்குவதில் முதல் இடத்தை பீகாரும், இரண்டாவது இடத்தை தமிழ்நாடும் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக்கழகங்கள் இருக்கின்றன. இந்த போக்குவரத்துக்கழகங்களில் 20 ஆயிரத்து 700 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஏராளமான பஸ்கள் காலாவதியான பழைய பஸ்கள்தான். இந்தநிலையை, சீர்படுத்த அரசு போக்குவரத்துக்கழகங்களும், தமிழக போக்குவரத்துத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால்தான் இதுபோன்ற நிலைமைகளை சீர்படுத்த நிதி ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது. நிதிநிலையை சீர்படுத்த பஸ் கட்டணத்தை உயர்த்தி, நிர்வாக செலவுகளை சிக்கனப்படுத்தி லாபகரமாக இயக்க செய்யலாம். இப்போதெல்லாம் பொதுமக்கள் தொலைதூரம் பயணம் செய்வதற்கு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களைவிட கூடுதலாக கட்டணம் இருந்தாலும் நிறைவான வசதியுள்ள தனியார் போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ஆக, பயணிகளை பொருத்தமட்டில், கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, வசதி இருக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, தமிழக அரசு உடனடியாக அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் நிலைமை இருக்கிறது. எனவே ஒழுகாத பஸ்கள், இடையில் நிற்காத பஸ்கள், கிழியாத ‘சீட்’கள் என்று அனைத்து வசதிகளையும் கொண்ட பஸ்களை இயக்கும் போக்குவரத்துக்கழகங்களாக மாற்றுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

NEWS TODAY 03.07.2026