Wednesday, September 26, 2018

ஆன்மீகம்


வழிபாட்டின் மகத்துவம் - மஹாளய பக்ஷம் கூறும் ரகசியங்கள்!

By - அஸ்ட்ரோ சுந்தரராஜன் | Published on : 25th September 2018 04:05 PM

இன்று முதல் பித்ரு பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷம் ஆரம்பமாகியிருக்கிறது. இந்தப் பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. இந்தக் காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருப்புவனம் காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்களிலும் பவானி கூடுதுரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், திருவள்ளூர் வீரராகவர் ஆலயம் மற்றும் ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் மற்றும் சிரார்தங்கள் செய்வது சிறப்பு.


முன்னோர்களின் ஆசி

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழத் துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

இறந்தவர்கள் பித்ருக்களாவது எப்படி?

சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.

சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது. மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன. பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல் போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்றக் காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள். இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.

இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றோ படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார். நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.

சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் முன்னோர்கள்

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான தக்ஷிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீவதிக்க பூலோகத்திற்கு வருவதாகவும் பின் உத்திராயண புண்ய காலத்தில் தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்வதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மகாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். பித்ரு தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்பதும், பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறும் என்பதும், பித்ரு கடன் செய்யாமல் இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை.

இந்த மஹாளய பக்ஷத்தில் பதினைந்து நாட்களிலும் பூலோகத்திற்கு தங்கள் சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் முன்னோர்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரைத் தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது.

வசு ருத்ர ஆதித்யர்கள்

பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள். தேஜஸ் – வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள்.

பித்ரு வழிபாடு

நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர். நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது. ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம் எனப் பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், கருடபுராணம், பவிஷ்ய புராணம் போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் மஹாளய பக்ஷத்திலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

ஷன்னவதி தர்ப்பணம்

ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ய கால தர்ப்பணம், வருஷ ஸ்ரார்தம், மஹாளய பக்ஷம் என 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. அதனை ஷன்னவதி தர்ப்பணம் என சிறப்பாக கூறுகிறது. இன்று வேலை மற்றும் தொழில், வாழும் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த 96 நாட்களும் தர்ப்பணம் செய்வது அனைவருக்கும் இயலாத காரியமாகும் என்றாலும் ஓய்வு பெற்ற பிறகு செய்யலாம். என்றாலும் முக்கியமான தர்ப்பணங்களையாவது தவறாமல் செய்வது நல்லது, அந்த வகையில் தக்ஷிணாயனத்தில் வரும் மஹாளய பக்ஷமும் முக்கியமான ஒன்றாகும்.

இறந்தவர்களுக்கும் எள்ளுக்கும் உள்ள தொடர்பு

சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு (எலும்போடு சேர்ந்த கட்டுமானம்) சனைஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாக கூறுகிறது. எனவே சனீஸ்வர பகவானின் தானியமான எள்ளை பித்ரு ஸ்ரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ருரூபமாகவும் பார்க்கிறது நமது வேதங்கள். மேலும் எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்குப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது நமது வேதம்.

பித்ரு தோஷம்

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் அக்னி ஸ்வரூபமாகவும் பிராமண ஸ்வரூபமாகவும் பித்ருக்களை வரித்து அக்னிக்கும் பிராமணர்களுக்கும் ஒரே நேரத்தில் போஜனமளித்து பின் பிண்ட ரூபத்தில் இருக்கும் பித்ருக்கு எள் கலந்த நீர் அளித்து தர்ப்பணம் செய்வதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்தத் தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதேதோ காரணங்களால் கொலை அல்லது தற்கொலை மற்றும் விபத்தினால் அகால மரணம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி செயற்கையான முறையில் இறந்தவர்ளுக்கு முறையாகக் கர்ம காரியங்களைச் செய்து அந்த ஆத்மாவை கரை சேர்ப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்குத் தர்ப்பணம், சிரார்தம் ஆகியன செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் விடும்போது அந்த ஆத்மாக்கள் நற்கதி அடையமுடியாமல் பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்திர தோஷங்களாக வடிவெடுத்து, நமது பிறக்கும் நேரத்தில் ராகு மற்றும் கேதுவாக திரிகோணங்களில் அமர்ந்துவிடுகின்றன.

அதனால் ஜாதகருக்கும் அவரின் சந்ததியினருக்கும் திருமணம் தடை, குழந்தையின்மை, தெய்வானுக்ரஹம் இல்லாத நிலை, பூர்வீக சொத்துக்களில் பிரச்னை மற்றும் வில்லங்கம், தீராத நோய், அடிக்கடி சண்டை போன்றவை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எத்தனை கோயில்களுக்குச் சென்று அன்னதானம், ஆடை தானம், பசு தானம், ருத்ராட்ச தானம், தண்ணீர் தானம், விளக்கு தானம், கும்பாபிஷேகம் செய்தாலும் பலன் கிடைக்காது. நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?

1. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடம் என்பது பூர்வபுண்ணியம் ஆகும். அதே ஐந்தாமிடம் தான் அவர்களுடைய சிந்தனைஸ்தானம், புத்திரஸ்தானம், குல தெய்வஸ்தானம், மன உறுதி ஸ்தானம் ஆகும். இங்கே ராகு அல்லது கேது இருக்க ஒரு ஆணோ பெண்ணோ பிறந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

2. பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்தக் கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

3. சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரஹண தோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

4. ஒரு ஜாதகத்தில் சனைஸ்வரரின் நிலையும் பித்ரு தோஷத்தை தெரிவிக்கும். சனைஸ்வர பகவான் பித்ருஸ்தானத்தில் நிற்பது, வக்ரம் பெற்று நிற்பது, குடும்பத்தில் அனைவரின் ஜாதகங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வக்ரம் நீசம் ஆகிய நிலைகளில் நிற்பது பித்ரு தோஷத்தை தெரிவிக்கும்.

பித்ரு தோஷ பரிகாரங்கள்:

1. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட சிரார்தம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.

2. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். திருப்பூவணத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். காசியை காட்டிலும் வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.

3. திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்துப் பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.

இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.

4. பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்ப்பணம், ஸ்ரார்தம் செய்து "தேவதாப்ய: பித்ருப்ய: மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" என்றும் யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்தவ: | தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை:

எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.

காருண்ய பித்ருக்கள்:

”மறைந்தவனுக்கு மாளயத்தில் கொடு” என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக்கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மஹாளய பக்ஷ விரத நாட்களில் தான். இவர்கள் 'காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''.

புனிதமான மஹாளய பக்ஷத்தில், முன்னோரையும் மறைந்த தாய், தந்தையர் மட்டுமின்றி காருண்ய பித்ருக்களையும் நினைத்து திதி கொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

உங்கள் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் நன்றாக அமைய என்னென்ன செய்ய வேண்டும்?

By ரஞ்சனி நாராயணன் | Published on : 02nd May 2018 03:56 PM |



அப்பாடா! எல்லாம் ஆயிற்று. பெண்ணுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து பேரன், பேத்திகள் பிரசவம் பார்த்து........எத்தனையோ செய்தாகிவிட்டது. பேரன் பேத்திகளும் இப்போது தலைக்கு மேல் வளர்ந்துவிட்டார்கள். பிள்ளை நல்லபடியாக படித்து வெளிநாடு போய்விட்டான். அவனது மனைவி குழந்தைகள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். வயதான காலத்தில் வேறு என்ன வேண்டும்? ஆஹா! எப்பேர்பட்ட பேறு இது! மற்றவர்கள் நம்மைப் பார்த்து இப்படிச் சொல்லும்போது நம் மனதில் தோன்றும்: ‘எல்லாம் சரி தான். பெற்ற குழந்தைகள் நம்முடன் இல்லையே என்ற குறையை என்ன செய்வது?’ என்று.



மிகவும் உண்மை. ஒரு நிமிடம் யோசியுங்கள்! எத்தனை காலம் தான் அவர்கள் நம்முடன் இருப்பார்கள்? நாம் நமது பெற்றோர்களுடன் எத்தனை காலம் இருந்தோம்? குழந்தைகள் நடக்கத் துவங்கும் போதே நம்மைவிட்டு தூரத்தான் செல்லுகிறார்கள், இல்லையா? கூப்பிடக் கூப்பிட தூர ஓடுகிறார்கள், இல்லையா? அப்போது எத்தனை சந்தோஷப்பட்டோம்? இப்போது ஏன் குறைப்பட்டுக் கொள்ள வேண்டும்? அவர்கள் அவர்களது வாழ்க்கையை வாழட்டும். நாம் நமது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்குவோம்.

இரண்டாவது இன்னிங்க்ஸ் நன்றாக அமைய என்னென்ன வேண்டும்?



பணமின்றி ஓரணுவும் அசையாது

வாழ்க்கைக்கு மிகவும் தேவையானது பணம். மாற்றுக் கருத்தே இல்லை. குருவி மாதிரி சேமித்து வைத்து பெண்ணின் கல்யாணம், பிள்ளையின் படிப்பு என்று செலவழித்தது போக மீதமிருக்கும் பணத்தை இனி உங்களுக்காகப் பயன்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் பணத்தேவை பற்றிய யோசனைகள் வேண்டாம். அவர்களுக்குக் கொடுக்காமல் சேமித்து வைத்துள்ள பணத்தை உங்களுக்காக செலவழித்துக் கொள்வதா என்ற குற்ற உணர்ச்சியும் தேவையில்லை. நீங்கள் இத்தனை வருடங்கள் அவர்களைப் பார்த்துக் கொண்டீர்கள்; கல்வி கொடுத்தீர்கள்; உண்ண உணவு, தங்க இடம் எல்லாம் கொடுத்தீர்கள். திருமணமும் செய்து கொடுத்து சொந்தக் காலில் நிற்கத் தேவையானவற்றைச் செய்தாயிற்று. இனி அவர்களுக்குத் தேவையான பணத்தை சம்பாதிப்பது அவர்களது பொறுப்பு.

இந்த வயதில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதும் சரியல்ல. இப்போது உங்களுக்குத் தேவை அமைதி. சொந்தக் காசில் சூடு வைத்துக் கொள்ள வேண்டாம்.



பசிக்கு சாப்பிடுங்கள்

நன்றாகச் சாப்பிட்டு – கவனிக்கவும்: கன்னாபின்னா என்று இல்லை - நல்ல தூக்கம் தூங்குங்கள். வாழ்வதற்காக மட்டும் சாப்பிடுவது என்று பழகுங்கள். வயதாக வயதாக நமது உடல் உழைப்பு குறைகிறது. சாப்பாடும் அதற்கு ஏற்றாற்போல குறைவாக இருக்க வேண்டும். தூக்கம் வரும்போது தூங்குங்கள். தூக்கத்தைத் தள்ளிப் போடப் போட அதுவும் உங்களிடமிருந்து தூரப்போகும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருங்கள். இரவு நேரத்தில் எளிமையான ஆகாரம் உண்பது நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். தண்ணீர் நிறையக் குடியுங்கள். உடலில் உள்ள கழிவுகள் வெளியேற தண்ணீர் உதவும்.



ஆரோக்கியம் என்னும் செல்வம்

ஆரோக்கிய வாழ்விற்கு தேவையானவற்றைச் செய்யுங்கள். மிதமான உடற்பயிற்சி – தினமும் நடைப்பயிற்சி – செய்யுங்கள். நோய்கள் அதி விரைவில் உங்களை பாதிக்கலாம். ஆனால் ஆரோக்கியமாக இருப்பது என்பது கடினமான ஒன்று. இதனால்தான் உடல்நலம் பேணுதல் மிகவும் முக்கியம். அத்துடன் உங்களுடைய மருத்துவ மற்றும் உடல் தேவைகளை நீங்கள் அறிந்திருப்பதும் மிகவும் முக்கியம். நீங்கள் நன்றாக இருப்பதாக நினைக்கும் போதும் ஹெல்த் செக்கப் அவசியம். உங்கள் உடல்நலம் பற்றிய புரிதலுடன் இருங்கள். உடல்நலத்தைப் புறக்கணிக்காதீர்கள். ஆரோக்கியமான சிந்தனை, ஆரோக்கியமான உடல் இரண்டுமே இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட மிகவும் தேவை.



உடல்நலம் பேணுதல்

சிலருக்கு சிறிய வயதிலேயே உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம். வயதாக ஆக, இவை அதிகமாகும். அவற்றை அதிகம் பாராட்டாமல் இதுவும் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒரு நிலை என்று எடுத்துக் கொள்ளுங்கள். மனதளவில் அவற்றை சிறிய விஷயமாக எண்ணுங்கள். மருந்து மாத்திரைகளை வேளை தவறாமல் சாப்பிடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுடைய மருத்துவருடன் தொடர்பில் இருங்கள்.

நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்குத் தந்த பரிசு இவை. உடல்நலக் குறைவு உங்கள் மன நலத்தைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவற்றின் மேல் அதிக கவனம் செலுத்தினால் நீங்கள் யார் என்பதே மறந்துவிடும். ஒருகாலத்தில் சிரிப்பும் வேடிக்கையான பேச்சுமாய் இருந்த நீங்கள் மறைந்தே போவீர்கள்.



வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கையை அனுபவியுங்கள்

மிகச் சிறந்த, மிகவும் அழகான பொருட்களை உங்கள் வாழ்க்கைத் துணைக்கு வாங்கிக் கொடுங்கள். உங்கள் பணத்தை உங்கள் துணையுடன் அனுபவியுங்கள். முதல் இன்னிங்க்ஸ் ஆடி முடித்தாயிற்று. இப்போது இரண்டாவது இன்னிங்க்ஸையும் அவருடன் தான் ஆடப் போகிறீர்கள். அதனால் இதுதான் மிகவும் முக்கியம். ஒருநாள் யாரோ ஒருவர் முன்னால் போக வேண்டிவரும். துணைக்காக ஏங்கும் காலம் வரும். அப்போது உங்களிடம் இருக்கும் பணத்தால் அவரைத் திரும்பக் கொண்டு வர முடியாது. அதனால் இருவருமாக வாழ்க்கையை அனுபவியுங்கள். இருவருமாகப் பிடித்த பாட்டுக் கச்சேரிகள், திரைப்படங்கள், சுற்றுலாக்கள், கோவில்கள் போய்வாருங்கள். இரண்டாவது இன்னிங்க்ஸில் உங்கள் காதல் மேலும் வலுப்பெறட்டும்.

எத்தனை வயதானாலும் மனதில் அன்பு குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை, வாழ்க்கைத் துணையை, உங்கள் குடும்பத்தை, இந்த உலகத்தை நேசியுங்கள். ஒரு மனிதனுக்கு ஞானமும், பாசமும் இருக்கும்வரையில் அவனுக்கு வயதாவதே இல்லை.

நிகழ்காலம் முக்கியம்

மேடைப் பேச்சாளர் ஒருவர் ஒரு ஜோக் அடித்தார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஒருநிமிட இடைவெளி விட்டு மறுபடியும் அதே ஜோக்கைச் சொன்னார். சிலர் மட்டுமே சிரித்தனர்.

மறுபடியும் சில நிமிடங்களுக்குப் பின் அதே ஜோக்கைச் சொன்னார். யாரும் சிரிக்கவில்லை.

புன்னகையுடன் அவர் சொன்னார்: ‘ஒரே ஜோக் தான். திரும்பத்திரும்ப சொல்லும்போது புளித்து விடுகிறது. மறுபடி மறுபடி சிரிக்க முடியவில்லை. அதே போலத்தான் நடந்து முடிந்த விஷயங்களும்’.

சின்னச் சின்ன விஷயங்களுக்கு மன அழுத்தம் வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ பார்த்துவிட்டீர்கள். நல்ல நினைவுகள், தீய நினைவுகள் எல்லாம் உங்கள் மனதில் இருக்கலாம். எப்போதும் நிகழ்காலத்தில் வாழுங்கள். பழைய நினைவுகள் உங்களை அழுத்த இடம் கொடுக்காதீர்கள். எதிர்காலத்தை நினைத்து அச்சப் படாதீர்கள். இப்போதைய நிலையைப் பற்றி சந்தோஷப்படுங்கள். இதனால் சின்ன விஷயங்கள் மறைந்துவிடும்.



பெருமைப்படுங்கள்

உங்களைப் பற்றிய பெருமை உள்ளும் புறமும் நிறைந்திருக்கட்டும். தலைமுடியை வெட்டிக்கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது என்பவை தொடரட்டும். பல் வைத்தியரிடம் போய்வாருங்கள். நீங்கள் வழக்கமாக பூசிக் கொள்ளும் வாசனைத் திரவியங்கள், பவுடர் ஆகியவற்றை தொடர்ந்து வாங்குங்கள்; பயன்படுத்துங்கள். உங்கள் வெளித்தோற்றம் நன்றாக இருக்கும்போது அந்த நிறைவு உங்கள் உள்ளத்திலும் பிரதிபலிக்கும்.

உங்கள் வயதுக்கேற்ற நவீன உடைகளை அணியுங்கள். உங்களுக்கென்று ஒரு தனித்துவமான ஸ்டைல் இருக்கட்டும். நவநாகரீகமாக இருக்கவேண்டும் என்பதற்காக இளைஞர்கள் அணியும் உடைகளை அணிவது பொருத்தமாக இருக்காது. ஆனால் இத்தனை வருடங்கள் உங்களுக்கென்று ஒரு பாணியை பின்பற்றியிருப்பீர்கள், இல்லையா? அதை தொடருங்கள். ஆடை பாதி. ஆள் பாதி என்பது நினைவில் இருக்கட்டும்.

லேட்டஸ்ட் ஆக இருங்கள்

செய்தித்தாள்களைப் படித்து சமீபத்திய, தினசரி விவரங்களை அறிந்து வைத்திருங்கள். செய்தி சேனல்களைப் பாருங்கள். உலக நிலவரம் தெரிய வரும். இணையத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கு வைத்துக் கொண்டு நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். சமூக வலைத்தளங்களில் பங்கு பெறுங்கள். யார் கண்டார்கள், அங்கு உங்களது பழைய நண்பர்களை மறுபடியும் சந்திக்கலாம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வயது ஒரு தடையல்ல.



இளமை எனும் பூங்காற்று

இளம் வயதினருக்கும், அவர்களது கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுங்கள். ‘சின்ன பசங்க....’ என்று மனதில் நினைத்துக் கொண்டு முகத்தில் ஒரு ஏளனப் புன்னகையுடன் அவர்களைப் பார்க்காதீர்கள். இன்றைய தலைமுறை நாலும் தெரிந்தவர்கள். அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அவர்களுடன் பேசும் போது குரலில் அடக்கம் இருக்கட்டும். நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள் உங்களிடமிருக்கும் பல நல்ல விஷயங்கள் அவர்களிடம் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள்தான் எதிர்காலம். அவர்கள் காட்டிய வழியில் தான் உலகம் நாளை போகும். கேலி கிண்டல் இல்லாத அறிவுரை கொடுங்கள். நேற்று நீங்கள் கடைபிடித்த நல்லொழுக்கங்கள் நாளைக்கும் நீடித்து நிற்கும் என்பதை புரிய வையுங்கள்.

'எங்கள் காலத்தில்...’ என்று பேசாதீர்கள். இதுவும் உங்கள் காலம்தான். இப்போது நடைபெறும் இந்த நிகழ்காலத்தில் நீங்களும் ஒரு பகுதிதான். வாழ்க்கையை அனுபவியுங்கள்..

பாசிடிவ் எண்ணங்கள்

சிலர் தங்களது வயதான காலத்தை மிகவும் இயல்பாக ஏற்றுக் கொள்ளுகிறார்கள். சிலர் வெறுப்புடனும், கசப்புடனும் எதிர்கொள்ளுகிறார்கள். இனி இருக்கும் காலத்தை வீணடிப்பது சரியல்ல. சந்தோஷத்துடன், பாசிடிவ் ஆன எண்ணங்களுடன் இருப்பவர்களுடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக மாறும். வெட்டி அரட்டை அடிப்பவர்கள், பிறரைத் தூற்றுபவர்களை விட்டு விலகுங்கள். இவர்களுடனான உங்கள் நட்பு உங்களை இன்னும் வயதானவர்களாகவும், கையாளக் கடினமானவர்களாகவும் காட்டும்.

தனிமையிலே இனிமை

இந்த விதி உங்களுக்குச் சற்றுக் கடினமானதாகத் தோன்றக் கூடும். ஆனாலும் சற்று நிதானமாகச் சிந்தித்தால் இதில் உள்ள உண்மைகள் புலப்படும். வயதான காலத்தில் பிள்ளைகளுடன், பெண்களுடன் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகாதீர்கள். குடும்பத்தினருடன் இருப்பது மிகப்பெரிய விஷயம் தான். ஆனால் நம் எல்லோருக்கும் தனிமை சற்றுத் தேவைப்படுகிறது என்பதும் உண்மைதானே? உங்களுடைய பொருளாதாரம் உங்களை தனியாக இருக்க அனுமதிக்காது என்றால் பிள்ளைகளுடன் இருக்கலாம். இல்லையென்றால் தனிமை இனிமைதான். பிள்ளை, பெண்களின் தேவை வேறு. நம் தேவை வேறு. நினைவில் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கைத் துணைவர் இல்லையென்றால் வேறு யாருடனாவது இருக்க முடியுமா என்று பாருங்கள். தனியாக நீங்கள் சமாளித்துக் கொள்ளுவீர்கள் என்றால் இருந்து விடுங்கள்.



பொழுதுபோக்கு

உங்கள் பொழுதுபோக்குகளைத் தொலைத்து விடாதீர்கள். இவை உங்கள் பொழுதுகளை பயனுள்ளதாகச் செய்யும் சக்தி படைத்தவை. உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு இருக்கட்டும். இல்லையென்றால் இப்போது புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். சின்னச்சின்ன பயணங்கள் மேற்கொள்ளலாம். நீண்ட தூரம் நடக்கலாம். செல்லப்பிராணிகள் வளர்க்க ஆரம்பிக்கலாம். தோட்டம் போடலாம். விளையாட்டுக்கள் புதிதாகக் கற்றுக்கொண்டோ அல்லது தெரிந்ததை தொடர்ந்தோ விளையாடலாம். ஓவியம், இசை கற்கலாம். தபால் தலை அல்லது பழைய நாணயங்கள் அல்லது அரிய, பழைய பொருட்கள் சேகரிக்கலாம். என் மாமா ஒருவர் பழைய காலத்தில் புழங்கிவந்த பாக்குவெட்டிகளை சேகரித்து வைத்துள்ளார். விதம்விதமான அந்தப் பாக்குவெட்டிகள் பார்க்கப்பார்க்க பரவசத்தைக் கொடுக்கும். உங்களுக்குப் பிடித்ததை சேகரியுங்கள். வாழ்க்கை எத்தனை இனிமையானது என்று புரியும்.

விழாக்காலம்

திருமணங்கள், மற்றும் சின்னச்சின்ன விழாக்களுக்குப் போய்வாருங்கள். நேரம் போவதுடன் உங்கள் வயது உறவினர்களைப் பார்க்கவும் முடியும். அவர்களுடன் பேசுவது உங்கள் வாழ்க்கையை எடை போட உதவும். புதிதாக எவரையாவது அங்கு சந்திக்க நேரலாம். ஒரு புதிய நட்பு உருவாகலாம். அல்லது நீண்ட நாட்களாக பார்க்காதவர்களைப் பார்க்க நேரிடலாம். பழைய நட்பைப் புதுப்பித்துக் கொள்ளலாம். மொத்தத்தில் வீட்டிலேயே அடைந்து கிடக்காதீர்கள். அருங்காட்சியகம், பறவைகள் சரணாலயம், மிருகக்காட்சி சாலை என்று போய்வாருங்கள். சிறிய வயதில் ரசிக்காதவை இப்போது ரசிக்கக்கூடியதாக மாறியிருக்கும்.

பேசுவதும் கலைதான்

நிறைய பேசுங்கள். அதே சமயம் அடுத்தவர் பேசும்போது நீங்கள் பேசுவதைக் குறைத்துக்கொண்டு அவர் சொல்லுவதைக் கேளுங்கள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். யாரோ ஒருவர் உங்களிடம் அகப்பட்டுக் கொண்டார் என்று நினைத்துக் கொண்டு உங்கள் ஆவலாதிகளை அள்ளி விடவேண்டாம். வயதானவர்கள் என்றாலே சிறுவயதுக்காரர்கள் ஓடி ஒளிவார்கள். ஏகப்பட்ட கேள்விகள் வேண்டியது வேண்டாதது என்று கேட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம்தான். உங்கள் சிறுவயது அனுபவத்தைச் சொல்ல ஆரம்பிக்காதீர்கள்.



மன்னியுங்கள்; மன்னிப்புக் கேளுங்கள்; மறந்துவிடுங்கள்

உங்களை யாராவது புண்படுத்தினால் அவர்களை மன்னியுங்கள். நீங்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். வெறுப்புகளை உங்களுடனேயே எடுத்துச் செல்லாதீர்கள். வெறுப்புகள் உங்களை துன்பத்தில் தள்ளும். வாழ்க்கை கசந்து போகும். யார் சரி என்பது இங்கு முக்கியமில்லை. மனதிற்குள் பழிவாங்கும் உணர்ச்சியை வைத்துக் கொண்டிருப்பது நீங்கள் விஷத்தைக் குடித்துவிட்டு அடுத்தவர் இறக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போல. விஷத்தை நாடாதீர்கள். மன்னியுங்கள்; மறந்துவிடுங்கள். கடந்து செல்லுங்கள்.

உங்கள் நம்பிக்கை உங்களுடன்

நீங்கள் ஒருவிஷயத்தை நம்பினால் உங்களுடன் இருக்கட்டும் அந்த நம்பிக்கை. மற்றவரையும் நம்ப வைக்க வேண்டும் என்று முயற்சிக்காதீர்கள். இதனால் உங்களுக்கு எரிச்சல் தான் மிஞ்சும். அவர்களுக்கு தேவையான முடிவை அவர்களே எடுப்பார்கள். உங்களது நம்பிக்கையின் படி வாழ்ந்து முன்னுதாரணமாக இருங்கள். உங்களுடைய நம்பிக்கைகளுக்கு உண்மையாக இருந்து, அந்த நினைவுகள் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்.

சிரித்து வாழுங்கள்

சிரியுங்கள். வாய்விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாட்கள் வாழ்க்கையை வாழ்ந்தவர். உங்கள் குடும்பத்திலேயே இத்தனை வருடங்கள் வாழ்ந்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். முழு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்காது. ஆனால் அந்த பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. சிரிப்பதில் ஒன்றும் தவறில்லை. உங்களுக்கு அருகில் இருக்கும், சுற்றி இருக்கும் நகைச்சுவையை உணரக் கற்றுக்கொள்ளுங்கள்.

யார் என்ன சொன்னால் என்ன?

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி மறந்தே விடுங்கள். எப்படியும் பேசப்போகிறார்கள்; நினைக்கப் போகிறார்கள். பேசட்டும்; நினைக்கட்டும் நீங்கள் அதைப்பற்றிக் கவலை கொள்ளவேண்டாம். நீங்கள் செய்தவற்றைப் பற்றிய பெருமை உங்கள் மனதில் நிறைந்திருக்கட்டும். உங்களைப் பற்றியோ, உங்களது நினைவுகள் பற்றியோ, இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்வு பற்றியோ அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் உங்கள் வாழ்க்கை சரித்திரத்தில் எழுத வேண்டியவை இன்னும் நிறைய இருக்கிறது. எழுத ஆரம்பியுங்கள். நிறைய ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்; மனதை அமைதிப் படுத்துங்கள். எத்தனை சந்தோஷமாக இருக்க முடியுமோ, அத்தனை சந்தோஷமாக இருங்கள்.

பொறுப்புகள் நிறைந்த முதல் இன்னிங்க்ஸ் ஆடி முடித்துவிட்டோம். பொறுப்புகளை நல்லபடியாக முடித்த திருப்தியுடன், மிகப்பெரிய சந்தோஷத்துடன் அதே சமயம் நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்ள வாய்ப்புக் கொடுக்கும் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடுவோம் வாருங்கள்!

இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நஷ்டம் நமக்குமட்டுமல்ல.. நம் தலைமுறைக்கும் தான்!

Published on : 25th September 2018 11:53 AM |


மகாளய பட்சம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் புரட்டாசி மாதத்துப் பௌர்ணமியிலிருந்து ஐப்பசி மாதத்து அமாவாசை வரை வரும் 15 நாட்களை (ஒரு பக்க்ஷம்) மஹாளய பக்க்ஷம் என்பர்.

முதலில் சிராத்தம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பார்த்தால் சிரத்தையோடு நம் பித்ருக்களை (முன்னோர்களை) நினைவு கூறும் நாள் என்ற விடை கிடைக்கிறது. ஒரு இல்லறவாசியானவன் ஒரு வருடத்தில் 15 நாட்களுக்கு சிராத்தம் செய்ய வேண்டுமென யாக்யவல்கியர் வழிவகுத்துத் தந்துள்ளார். அவையாவன..



1) அமாவாசை 2) மார்கழி, தை, மாசி, பங்குனி மாதத்து கிருஷ்ண பக்க்ஷ சப்தமி, அஷ்டமி, நவமி திதிகள்; 3) கிருஷ்ண பக்க்ஷம் 4) உத்திராயனம், தக்ஷிணாயனம்; 5) நம் வீட்டில் நடக்கவிருக்கும் சுப காரியங்களை முன்னிட்டு செய்யப்படும் நாந்தி

6) உணவுப் பொருட்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம் விளைந்து அறுவடையாகும் காலம் 7) அறிவுசார் வேதம் கற்ற பெரியோர் நம் வீட்டிற்கு வரும் சமயம் 8) சூர்ய சங்கராந்தி 9) ஞாயிறுடன் இணைந்து வரும் அமாவாசை 10) சூரியன் ஹஸ்த நட்க்ஷத்திரத்திலும், சந்திரன் மக நட்க்ஷத்திரத்திலும் வரும் த்ரயோதசி திதி (போதாயனர் அனுஷ்டானம்)

11) மேஷ - துலா சங்க்ரமணங்கள் 12) சந்திர, சூர்ய கிரஹணங்கள் 13) நம் மனதிற்குள் சிராத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றினால், அதற்குப் பெயர் பக்தி சிராத்தம் எனப்படும்.



இது தவிர, தாய் தந்தையாரின் இறந்த நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் செய்யவேண்டும். இதனை ப்ரத்யாத்பிக சிராத்தம் என்பர். இப்படி 13+2 மொத்தம் நம் பித்ருக்களுக்கு 15 சிராத்தம் செய்யவேண்டும் என மனு மற்றும் பிரும்மாண்ட புராணம் கூறுகின்றது. இப்படிச் சொல்வதுபோல் எவனொருவன் செய்கிறானோ கண்டிப்பாக அவன் பாக்யவான், அவனுக்கு ஸ்ரேயஸ் நிச்சயம் உண்டு. இன்றைய காலகட்டத்தில் இது நடக்குமா? அவனவன் அமாவாசை தர்ப்பணமாவது ஒழுங்காக செய்தால் போதும் என்ற நிலை.

இனி மஹாளயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? கஜச்சாயை யோகம் என்பது புரட்டாசி மாதத்துக் கிருஷ்ணபக்ஷத்தில் வருகிறது. இதுவே பித்ரு பக்ஷம், மஹாளயம் என அழைக்கப்படுகிறது. அதற்கு மனுஸ்ம்ருதி, தைத்ய ப்ராம்மணம் ஆகியவற்றில் புரட்டாசி மாதத்து கிருஷ்ண பக்ஷத்தில் வருகிற மக நட்சத்திரத்தில் பித்ருக்களை அழைக்கும் விதி கூறப்பட்டுள்ளது. இது கஜச்சாயையில் கூடும் மக நட்சத்திரத்தையே குறிக்கிறது. இந்த நாட்களில் சிராத்தம் செய்தால் பல முறை சிராத்தம் செய்த பலன் கிடைக்கும் எனக் கூறுவதால் அவ்வளவு விசேஷம் இந்த மஹாளயத்திற்கு. இதைத்தான் நம் சனாதன தர்மம் "மறந்ததை மஹாளயத்தில் செய்" என்று கூறுகிறது.

இந்த வருடம் 25.9.2018(இன்று) செவ்வாய்க்கிழமை ப்ரதமையில் ஆரம்பித்து 8.10.2018 திங்கட்கிழமை வரை இந்த மஹாளய பக்ஷம் வருகிறது. இந்த நாட்களில் இந்துக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்திலோ; அருகிலுள்ள நீர்நிலைகளிலோ தங்கள் பிதுர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களின் ஆசியினால் நம் குடும்பத்தில் நமக்குத்தெரியாமல் நடந்துவரும் வினைகள் பனி போல் விலகும் என்பது சத்தியம்.



வருடம் ஒருமுறை நம் தந்தைக்கு செய்யும் சிராத்தத்தை காட்டிலும் மஹாளய சிராத்தத்திற்கு ஒரு விசேஷம் என்னவென்றால், வருட சிராத்தத்தில் நம் தந்தை, பாட்டன், முப்பாட்டனார் இவர்களுக்கு மட்டும் தான் திதி கொடுப்போம். ஆனால், மஹாளயத்தில் இவர்களுடன் சேர்த்து நெருங்கிய அனைத்து பிதுர்களுக்கும் பிண்ட தானம் செய்யப்படுவதால், மஹாளய சிராத்தம் சால சிறந்தது. மஹாளய சிராத்தம் நாம் செய்வதால் நம் குடும்பத்தில் காரணமே தெரியாமல் உள்ள தடங்கல்கள் நீங்கி வளர்ச்சிக்கு வழி செய்து, நற்பேற்றினை அடையச் செய்யும்.

இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். மகாளய பட்சத்தில் வரும் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு, கொடுக்க இயலாதவர்கள், அமாவாசை திதியிலாவது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

மகாளய பட்சம் என்னும் இந்த அரியச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நம் குழந்தைகளின் வாழ்க்கையும் செழிப்பாகும் என்பது உறுதி.

காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைவதில்...சிக்கல்!நிலத்தை பயன்படுத்தியவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு

Updated : செப் 25, 2018 23:31 | Added : செப் 25, 2018 23:28

காஞ்சிபுரம்;காஞ்சிபுரத்தில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க, அரசு, 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இடத்தை தேர்வு செய்துள்ளது. ஆனால், அந்த இடத்தை அனுபவித்து வந்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பணி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரை சுற்றிலும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன. இதனால் வாகனங்களும் பெருகி விட்டன. தற்போது உள்ள பேருந்து நிலையம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
அப்போது உள்ள வாகன போக்குவரத்திற்கு இது, வசதியாக இருந்தது. பின், குடியிருப்புகள் அதிகரித்தன. இதனால், இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், அரசு, மற்றும் தனியார் பேருந்துகள் பல மடங்கு அதிகரித்து விட்டன.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் நெரிசல் அதிகரித்து வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் அன்றாடம் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, அரசு புதிய பேருந்து நிலையம் கட்ட, 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை பிறப்பித்தது.

இதை தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் கட்ட, காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில், 10.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை, பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தவர்கள், பட்டா வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்தில் பல முறை முறையிட்டனர். பின், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்,அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அவர்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை, இரு மாதங்களுக்கு முன் புதிய பேருந்து நிலையம் அமைக்க, சர்வேயர் மூலம் அளந்தனர். அப்போது, அந்த நிலத்தை பயன்படுத்தி வந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப் படுகிறது. 

அவர்களில் ஏழு பேர், நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரும், புதிய பேருந்து நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர் கூறியதாவது:புதிய பேருந்து நிலையம் அமைவதற்கான இடத்தை நாங்கள், 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம். அதற்கான பத்திரம் எங்களிடம் உள்ளது.பட்டா வழங்கக் கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டோம்; பலன் கிடைக்க வில்லை. அதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, நிலத்தில் கட்டுமான பணி நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளோம்.எங்களுக்கு பட்டா கொடுத்த பின், அந்த இடத்தை பேருந்து நிலையம் கட்ட எடுத்து கொள்ளட்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல்வர் அறிவித்த புதிய பேருந்து நிலைய பணி துவங்குவதற்கான ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில், சிலர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை எதிர் கொண்டு தீர்ப்புக்கு பின், அதற்கான பணியை துவங்குவோம். இதனால் சிறிது காலதாமதமாகிறது.நகராட்சி அதிகாரி ஒருவர், காஞ்சிபுரம்
ரேஷன் அட்டையில் நாய் பெயர் சேர்ப்பு

Added : செப் 25, 2018 23:55

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ரேஷன் அட்டையில், வளர்ப்பு நாயின் பெயரை சேர்த்து, பொருட்கள் வாங்கியது, 'ஆதார்' கார்டால் அம்பலமானது. ம.பி.,யில் தார் மாவட்டத்தைச் சேர்ந்த, நிருசிங் போதர், 70, என்பவரது ரேஷன் அட்டையில், மனைவி மற்றும் வளர்ப்பு மகன் ராஜு என, மூன்று பெயர்கள் இடம் பெற்றிருந்தன. சமீபத்தில், 'ரேஷன் அட்டையுடன், அதில் உள்ள நபர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என, நிருசிங்கிடம், ரேஷன் கடை ஊழியர் கூறினார். இதையடுத்து, நிருசிங் மற்றும் அவரது மனைவியின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டன. ஆனால், ராஜுவின் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. 

இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர், நிருசிங்கிடம் கேட்டபோது, ராஜு, தன் வளர்ப்பு நாய் என, அவர் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த ரேஷன் கடை ஊழியர், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி, அனுராக் வர்மாவுக்கு, தகவல் தெரிவித்தார். ரேஷன் அட்டையில் உள்ள நாயின் பெயரை நீக்க, வர்மா உத்தரவிட்டுள்ளார்.

ரயில்வே ஊழியர்களுக்கு இலவச விமான பயணம்

Added : செப் 26, 2018 04:27

மொராதாபாத்: ரயில்வே ஊழியர்கள், குடும்பத்துடன் இலவச விமான பயணம் மேற்கொள்ள, ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.ரயில்வேயில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு மூன்று முறை, குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வர, இலவச ரயில், 'பாஸ்' வழங்கப்படுகிறது.புதிதாக பணியில் சேர்ந்த நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு, படுக்கை வசதி உண்டு.மற்ற ஊழியர்களுக்கு அவரவர் சம்பள விகிதத்தை பொறுத்து, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' மற்றும் இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளில் பயணிக்க, இலவச, 'பாஸ்' வழங்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு, குடும்பத்துடன் ஆறு முறை பயணம் செய்ய, இலவச பாஸ் வழங்கப்படுகிறது.இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், விமானத்தில், குடும்பத்துடன் இலவசமாக சென்று வருவதற்கு, ரயில்வே அமைச்சகம், நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து, ரயில்வே வாரிய உதவி இயக்குனர், முரளிதரன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், குடும்பத்துடன் விமானத்தில், இலவசமாக சென்று வரலாம். அதற்கு, அவர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்படும் மூன்று இலவச ரயில்வே பாசை விட்டுத் தர வேண்டும்.நாட்டின் எந்தப் பகுதிக்கும், விமானத்தில் சென்று வரலாம். விமான பயணம் செல்ல விரும்பும் ஊழியர்கள் அல்லது அதிகாரிகள், விண்ணப்பித்து, இலவச விமான பயணத்துக்கான, 'பாஸ்' பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணியால் பரபரப்பு

Added : செப் 26, 2018 06:19



பாட்னா: டில்லியில் இருந்து பீஹார் மாநிலம், பாட்னா சென்ற, 'கோ ஏர்' நிறுவன விமானத்தில், கழிப்பறை கதவு என நினைத்து, விமான கதவை திறக்க முயன்ற பயணியை, சக பயணியர் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால், விபத்து தவிர்க்கப்பட்டது. முதல் முறையாக விமானத்தில் பயணிக்கும் அப்பயணி, கழிவறை கதவென விமானத்தின் அவசர கதவை திறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்

NEWS TODAY 05.07.2026