Saturday, November 21, 2015

மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளக்குழு பரிந்துரை

logo


47 லட்சம் ஊழியர்களுக்கும், 52 லட்சம் பென்ஷன் தாரர் களுக்கும் 7–வது சம்பளக்குழு ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மத்திய அரசாங்கம், தனது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உள்ள சம்பளவிகிதம், மற்றும் அலவன்சுகளை சீரமைக்கவும், அதுபோல பென்ஷன் தொகையை மாற்றி அமைக்கவும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளக்குழு அமைப்பது வழக்கம். முதலாவது சம்பளக்குழு 1946–ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த சம்பளக்குழு மத்திய அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்
ரூ.35 ஆக நிர்ணயித்தது. தொடர்ந்து 1959–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 2–வது சம்பளக்குழு ரூ.80 ஆகவும், 1973–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 3–வது சம்பளக்குழு
ரூ.185 ஆகவும், 1986–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 4–வது சம்பளக்குழு ரூ.750 ஆகவும், 1996–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 5–வது சம்பளக்குழு ரூ.2,550 ஆகவும், 2006–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 6–வது சம்பளக்குழு ரூ.6,650 ஆகவும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை நிர்ணயித்தது.

பொதுவாக சம்பளக்குழுக்கள் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து அறிக்கை தாக்கல் செய்ய 18 மாதங்களை எடுத்துக்கொள்ளும். ஆனால், இப்போது நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7–வது சம்பளக்குழு, 2014–ம் ஆண்டு பிப்ரவரிமாதம் நியமிக்கப்பட்டது. மரபுப்படி கடந்த ஆகஸ்டு மாதம் தன் பரிந்துரையை அளித்து இருக்கவேண்டும். ஆனால், கூடுதலாக 3 மாதங்கள் எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் மத்திய அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

அதாவது மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு இந்த சம்பளக்குழு 23.55 சதவீத சம்பளஉயர்வு கிடைக்கும் வகையில் வழிவகை செய்துள்ளது. இதன்மூலம் அரசாங்கத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இந்த தொகையில் 73 ஆயிரத்து 650 கோடி ரூபாய் பொது பட்ஜெட்டிலும், 28 ஆயிரத்து 450 கோடி ரூபாய் ரெயில்வே பட்ஜெட்டிலும் ஒதுக்கப்படவேண்டியதிருக்கும். இந்த பரிந்துரையை அப்படியே நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது கட்டாய மல்ல. இ தை பரிசீலிக்க நடைமுறைப்படுத்தும் செயலகம் அரசின் செலவீனத்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலகம் ஆராய்ந்து அளிக்கும் கருத்துக்களை அரசாங்கம் பரிசீலித்து சம்பள உயர்வு தொடர்பான இறுதி அறிவிப்பை அநேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யும் பொது பட்ஜெட்டில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்புத்தான் அமலுக்கு வரும்.

இந்த பரிந்துரையில் ஒப்பந்த ஊழியர்கள் ஊதியம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. செயல்திறன் அடிப்படையில் சம்பளம் என்ற பரிந்துரை வரவேற்கப்படத்தக்கது. என்றாலும், செயல்திறனை நிர்ணயிக்கும் அளவுகோல் வெளிப்படையாக இருக்க நல்லமுறைகள் உருவாக்கப் படவேண்டும். இந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப் படும்போது மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தாலும், அவர்களிடமிருந்து மக்களும் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். 7–வது சம்பளக்குழு பரிந்துரையை பரிசீலித்து அமலுக்கு வரும்போது, மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும், பென்ஷன்தாரர்களுக்கும் கிடைக்கும் வருமான உயர்வினால் அவர்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதனால் வர்த்தகம், சேவைகள் பெருகும். அவர்களின் சேமிப்பும் நிச்சயமாக உயரும். இந்த வகையில் நிச்சயமாக பொருளாதாரம் மேம்படும். மத்திய அரசாங்க ஊழியர்களும் தங்களுக்கு கிடைக்கும் ஊதிய உயர்வை, மக்களுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கமாக மனதில்கொண்டு பணியாற்றவேண்டும்.

Thursday, November 19, 2015

இல்லாதோருக்கே இலவசமும், மானியமும்...

Dinamani


By மணவை எஸ்.கார்த்திக்

First Published : 19 November 2015 01:37 AM IST


ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எனினும், மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்க விஷயமே.
அந்தக் காலத்தில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவுமே இருந்தனர். இதனால், அவர்களுக்கு பணம் என்பது மிகப் பெரிய விஷயமாக இருந்தது. அந்தக் காலத்தில் மிதிவண்டி வைத்திருந்தாலே அவர்கள் மிகப் பெரிய பணக்காரர்களாகக் கருதப்பட்டனர்.
எனவே, நலிவடைந்த மக்கள் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட குடிமைப் பொருள்களை மானிய விலையில் வழங்கி வருகின்றன.
காலப்போக்கில் எரிவாயு பயன்பாட்டுக்கு வந்தபோது, அதையும் மத்திய அரசு மானிய விலையில் வழங்கியது. கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் தனியார் வசம் இருந்தாலும், டீசல், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றின் மானியத்தை மத்திய அரசே தீர்மானித்து வருகிறது.
அந்த வகையில், சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு ஏற்படும் கூடுதல் சுமையைக் குறைப்பதற்காக இந்த மானியத்தைத் தானாக முன்வந்து விட்டுக் கொடுக்கும்படி மத்திய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
அதன்படி, இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 42 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். ஆனால், வசதி படைத்த பலரும் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை.
இதையடுத்து சொந்த வீடு, கார், இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் நபர்களின் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஆந்திரம் - தெலங்கானா வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட வெங்கய்ய நாயுடு பேசுகையில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக உறுதிபடத் தெரிவித்தார். மேலும், வசதிபடைத்தவர்களுக்கு எதற்காக மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதாவது, இலவசங்களாகட்டும், மானியங்களாகட்டும் அவை நலிவடைந்த மக்கள் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ஆனால், இவற்றை வசதி படைத்த பலரும் அனுபவித்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.
அதாவது, "அரசு சும்மா கொடுப்பதை நாம் ஏன் இழக்க வேண்டும்' என்ற எண்ணம் மக்களிடம் நிலவுவதே இதற்குக் காரணம். அதேசமயம், இதனால் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்பதையும், இது வேறுவகையில் பொதுமக்களையே பாதிக்கிறது என்பதையும் யாருமே சிந்திப்பதில்லை.
இதுபோன்ற இலவசங்கள், மானியங்களால் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இடிக்கும். இதை ஈடுகட்ட பல்வேறு பொருள்களின் மீதான வரிகளை அரசுகள் உயர்த்தும். விளைவு... அந்தப் பொருள்களின் விலை உயர்ந்து, அது பொதுமக்களின் தலையில்தான் விடியும்.
அதுமட்டுமல்லாமல், அந்த இலவசங்களுக்குச் செலவிடும் தொகையை அரசுகள், சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட மக்களின் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தும் நல்ல நோக்கமும் தடைபடுகிறது.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 7.20 கோடி. இதில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் 82.63 லட்சம் பேர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இலவசங்களையும், மானியங்களையும் பெறத் தகுதியுடைவர்கள் இவர்கள் மட்டுமே.
ஆனால், இதையும் மீறி மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இலவசங்களையும், மானியங்களையும் பெற்று வருகின்றனர்.
கிராமப் புறங்களில்கூட இரு சக்கர வாகனங்கள் இல்லாத நபர்கள் யாரும் இல்லை என்ற நிலையே உள்ளது. அவர்கள் நாள்தோறும் பெட்ரோலுக்கு என குறைந்தது ரூ.50-ஐ செலவிடுகின்றனர். அதன்படி பார்த்தால், மாதத்துக்கு ரூ.1,500 செலவாகிறது. ஆனால், மாதத்துக்கு ஒரு எரிவாயு உருளைக்கு இவர்களுக்குக் கிடைக்கும் மானியம் ரூ.200 மட்டுமே.
அனாவசியமாக ரூ.1,500 செலவிடும் ஒரு நபர், அத்தியாவசியத் தேவைக்காக ரூ.200 ஏன் செலவிடக் கூடாது என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது. ஆகவே, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் என்பதே அதிகம்தான்.
அதேபோல், மாநில அரசு வழங்கிவரும் இலவசங்களையும் ஏழை, எளிய மக்கள், அதாவது, குறைவாக சம்பாதிக்கும் மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
இதனால், அரசுகளுக்கு செலவினங்கள் குறைவதோடு, உண்மையான பயனாளிக்கு அரசின் திட்டங்கள் போய்ச் சேரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?

Dinamani

By ஆசிரியர்

First Published : 19 November 2015 01:34 AM IST


ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்கக் கூடாது என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐ.எம்.ஏ.) மகாராஷ்டிரத்துக்கு எதிராகத் தொடுத்த வழக்கில், அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட பிறகும், தொடர்ந்து ஆங்கில மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தின் மீதான விமர்சனத்தை ஆங்காங்கே தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பதிலடியாக சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
மகாராஷ்டிர அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி, ஓராண்டு மருந்தியல் சான்றிதழ் படிப்பு முடித்த பின்னர் ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்களும் அலோபதி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.
அந்த முயற்சி ஆங்கில மருத்துவத்துக்கு தீங்காக அமைந்துவிடும் என்று இந்திய ஆங்கில மருத்துவம் செய்வோர் அச்சம் கொள்கின்றனர். இத்தகைய போக்குகள் போலியான ஆங்கில மருந்துவர்களை உருவாக்கிவிடும் என்று அவர்கள் தெரிவிக்கும் கருத்து நியாயமானதுதான். ஆனால் அதற்காக, இவ்வாறான பல்வேறு மருத்துவப் பிரிவுகளிடையே காணக்கூடிய ஒத்திசைவான சிகிச்சை முறைகளை மறுதலிப்பது தேவையற்றது. சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் அலோபதி மருந்துகள் வெறும் வலி நிவாரணிகளாக மட்டுமே இருந்தால், அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது தேவையற்றது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, இப்போதும்கூட மறுபதிப்பு காணும் டாக்டர் டேவிட் வெர்னர் எழுதிய "டாக்டர் இல்லாத இடத்தில்' (Where there is no Doctor: A village health care handbook) என்கிற புத்தகம் சாதாரண நபர்களுக்கான முதலுதவி மற்றும் அடிப்படை மருந்துகளைப் பரிந்துரைக்கிறது. இந்திய மருத்துவர்கள் சங்கம் இந்தப் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோர முடியுமா?
டாக்டர் இல்லாத கிராமத்தில் ஒரு சாதாரண நபருக்குத் தரப்படும் உரிமைகூட, ஆங்கில மருத்துவர்களைப் போலவே குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்களுக்குக் கிடையாதா? ஒரு சாதாரண நபரைக் காட்டிலும் இவர்கள் ஆங்கில மருத்துவத்தை தவறாகப் புரிந்துகொண்டு, மருந்துகளைத் தவறாகப் பரிந்துரைத்துவிடுவார்களா? உயிரிழப்பை ஏற்படுத்திவிடுவார்களா?
முதலுதவி மருத்துவத்துக்கும், போலி மருத்துவத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நுட்பமாகப் பார்த்தால் இந்த எதிர்ப்பு சாதாரண மக்களுக்கு யார் வேண்டுமானாலும் முதலுதவி அளிப்பதா என்கின்ற பிரச்னையால் வருவதில்லை. இது தொழில் போட்டி. அதுதான் இந்த எதிர்ப்புக்கு மிக அடிப்படையான காரணம். இதனால்தான், டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் நல்ல தீர்வு என்றால், அதையும் ஆங்கில மருத்துவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
ஒரு சில அலோபதி மருத்துவர்களால்கூட மஞ்சள் காமாலைக்குப் பெரிதும் பரிந்துரைக்கப்படும் லிவ்-52 என்பது மூலிகையில் தயாரிக்கப்பட்ட மருந்துதான். மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாக சீனாவில் அறியவந்த மூலிகைப்பட்டை பரவலாகத் தரப்படுகிறது. குணமாவதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எலும்பு முறிவு சிகிச்சைகளுக்கும் மூட்டுவலிக்கும் பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் மூலக்கூறுகள் நாட்டு மருத்துவர் சொல்லும் பச்சிலைகளில் இருக்கின்றன. இதை ஆங்கில மருத்துவம் படித்தவர்கள் பரிந்துரைக்கக்கூடாது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் வழக்குத் தொடுத்தால் அது நியாயமாக இருக்குமா?
ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் கொஞ்சம் தமிழ் இலக்கியத்தையும் தெரிந்து வைத்திருப்பதைப் போல, அலோபதி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில வலி நிவாரணிகளை அறிந்து வைத்திருப்பதிலும், குறுகிய கால பயிற்சிக்குப் பிறகு அதை முதலுதவி என்ற அளவில் இந்திய பாரம்பரிய மருத்துவர்கள் பரிந்துரைப்பதிலும் கூடத் தவறு இருக்க முடியாது.
இந்திய மருத்துவத்தில் ரணச் சிகிச்சையும் (அறுவைச் சிகிச்சைகள்) ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. ஆனால், இன்றைய தேதியில் அவற்றை யாரும் செய்வதில்லை. அறுவைச் சிகிச்சை முழுமையாக ஆங்கில மருத்துவர்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. அறுவைச் சிகிச்சையில் போட்டிபோட சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் தயார் இல்லை. மிக எளிய, சிறு காய்ச்சல், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மாத்திரைகள், வலிநிவாரணிகள் மட்டும் பரிந்துரைக்க அனுமதிக்கலாம். அதுவும்கூட, அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கையுள்ள நோயாளிகளுக்கு தாற்காலிக மருத்துவமாகத்தான் அவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
என்னதான் விமர்சனம் செய்தபோதிலும், இன்று தமிழ்நாட்டில் நிலவேம்புக் குடிநீர் சூரணம் விற்பனை அதிகரித்துள்ளது. சித்த மருத்துவத்தில் முதன்மையான நிறுவனங்களின் தயாரிப்புகளை மக்கள் கேட்டு வாங்கிச் செல்லும் நிலை இருக்கிறது. ஆனால், இவற்றின் தரம் என்ன? நிலவேம்புக் குடிநீரில் கலக்கப்பட வேண்டிய ஒன்பது வகை மூலிகைகளும் தரமாக, குறிப்பிட்ட அளவில் கலந்திருக்கிறதா என்பதைக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்புக் காலத்தில் ஓரிரு மாதம் எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களின் படிப்பு குறித்து தெரிந்துகொள்ளவும், அதேபோன்று அலோபதி மாணவர்கள் இந்த பாரம்பரிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓரிரு மாதம் சென்று அதனைத் தெரிந்துகொள்வதும், மாற்று மருத்துவப் பிரிவுகளின் மீது பரஸ்பரம் மரியாதைக்கும் புரிதலுக்கும் வழி வகுக்கும்.
மருத்துவ முறை எதுவாக இருந்தாலும், வியாதி குணமாக வேண்டும். தவறானவர்கள் தவறான சிகிச்சையை மேற்கொள்ள அனுமதிக்காத வரையில், அலோபதி மருத்துவர்களின் அச்சம் தேவையற்றது.

மழை அளவு படிப்படியாக குறைந்தது சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது..daily thanthi

மழை அளவு படிப்படியாக குறைந்தது சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது


மாற்றம் செய்த நாள்:
வியாழன் , நவம்பர் 19,2015, 3:45 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , நவம்பர் 19,2015, 1:27 AM IST
சென்னை,

வடகிழக்கு பருவ மழை படிப்படியாக குறைந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. மின்சாரம் வினியோகம் மற்றும் போக்குவரத்து சேவை சீரடைந்து செயல்பட தொடங்கியது.

மக்கள் தவிப்பு

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாளில் சென்னை புறநகரில் 33 செ.மீட்டர் மழை கொட்டியதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

ஆங்காங்கே மழை நீர் வெள்ளம் போல் சாலைகளில் ஓடியது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. ரெயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

பலத்த மழையால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் எதிர்பார்த்ததை விட அதிகளவு உயர்ந்தது.

மீட்பு பணியில் முப்படைகள்

புறநகரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி ஏற்கனவே தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் ஏரிகள், குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. சில குடியிருப்புகளில் தரை தளம் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அந்த வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. கீழ் தளத்தில் வசித்தவர்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி காணப்பட்டன.

மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இறங்கினர். தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ராணுவம், கடற்படை, விமானப்படையை சேர்ந்த வீரர்களும், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டரில் மீட்பு

சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆந்திரா நோக்கி சென்றதால் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. நேற்று சூரிய வெளிச்சம் லேசாக எட்டிப்பார்த்தது. இதனால் மேலும் பாதிப்பு பயத்தில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

பம்மல் அனகாபுத்தூர் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீர் தானாக வடிய தொடங்கியது. வெளியேறாமல் இருந்த மழைநீரை அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சீரான மின்சார வினியோகம் அளிக்கப்பட்டது. நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து மீண்டும் இயங்க தொடங்கியது. மின்சார ரெயில் சேவை பாதிப்பின்றி இயங்கின. பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். முகாம்களில் தங்கி இருந்த 90 சதவீத மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

வேளச்சேரியில் தொடரும் சோகம்

எனினும் சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளை இன்னும் மழைவெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு மழைநீர் வடியாததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் இரவில் கடும் குளிரில் தூங்காமல் வெட்ட வெளியில் தங்கி உள்ளனர்.

கழுத்து அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதாலும், பாம்பு மற்றும் விஷ பூச்சிகளின் பயத்தாலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் வினியோகிக்கப்பட்டன.

Wednesday, November 18, 2015

மீட்பு பணியில் முப்படை தீவிரம்; சென்னையில் மழை நின்ற பிறகும் ஓயாத துயரம்

daily thanthi

மாற்றம் செய்த நாள்:
புதன், நவம்பர் 18,2015, 6:00 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், நவம்பர் 18,2015, 4:25 AM IST
சென்னை,

சென்னை நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கி 3 நாட்களாக தொடர்ந்து பெய்த மழை நகரையே புரட்டிப்போட்டு விட்டது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சாலைகளில் தேங்கிய வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பு என மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னை நகரில் நேற்று மழை இல்லை. இதனால், தொடர் மழையில் சிக்கி தவித்த சென்னைவாசிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

மழைநீர் வடியத் தொடங்கியது

புரசைவாக்கம், புளியந்தோப்பு, ஓட்டேரி, பெரம்பூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், அரும்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம், பாடி, கொரட்டூர், கொளத்தூர், மாதவரம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீர் வடியத் தொடங்கியது.

கே.கே.நகர், எம்.எம்.டி.ஏ. காலனி, சின்மயா நகர், விஜயராகவபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அதிக குதிரை திறன் கொண்ட ‘டீசல்’ பம்புகள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மழைநீர் வடிகால்வாய்களில் மழைநீர் தங்கு, தடையின்றி வடியும் வகையில் அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன.

பஸ்கள் வழக்கம்போல் இயங்கின

பிரதான சாலைகளில் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கியிருந்த மழை நீர் வடியத் தொடங்கியதால், கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்ட மாநகர போக்குவரத்து பஸ் சேவை நேற்று சீரடைந்தது.

சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல முடிந்தது.

துயரம் ஓயவில்லை

ஆனால் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, மழை நின்ற போதிலும் மக்களின் துயரம் ஓய்ந்தபாடில்லை. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியாமல் அப்படியே உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

புறநகரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி ஏற்கனவே தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் ஏரிகள், குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் அந்த பகுதிகளில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சில குடியிருப்புகளில் தரை தளம் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. சில வீடுகளில் உள்ளவர்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்து உள்ளனர். குடிநீர், உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.

மேற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மேற்கு தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வீடுகளில் சுமார் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் நிற்கிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அப்படியே நிற்கின்றன.

மீட்பு பணியில் முப்படையினர்

மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுடன் ராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த வீரர்களும், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

தீயணைப்பு துறையினர், மீன்வளத்துறையினர் ஆகியோருடன் போலீசார் இணைந்து 130 படகுகளின் உதவியுடன் 11 இடங்களில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாம்பரம் நகராட்சி, பெருங்களத்தூர் பேரூராட்சி, வரதராஜபுரம் ஊராட்சி, திருமுடிவாக்கம் ஊராட்சி பகுதிகளில் சிக்கித்தவித்த சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சில இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் பலர் மீட்கப்பட்டனர். தாம்பரம் சி.டி.ஓ. காலனி, புளுஜாக்கர், வரதராஜபுரம், பல்லவன் குடியிருப்பு, ராயப்பா நகர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொட்டலங்கள், பிஸ்கெட், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

சிலர் வீடுகளின் மொட்டை மாடியில் நின்றபடி உணவு குடிநீர் கேட்டு குரல் எழுப்பினார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் போடப்பட்டன.

மண்ணிவாக்கம் பகுதியில், மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளில் சிக்கித்தவித்த 150 பேரை ரப்பர் படகு மூலம் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

வேளச்சேரியில் விஜயநகர் 13-வது பிரதான சாலை, 8-வது பிரதான சாலை, சங்கர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால், அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் தவித்தனர். அவர்களை தனியார் பங்களிப்புடன் போலீசார் படகுகள் மூலம் மீட்டு வெளியே கொண்டுவந்தனர். மேலும் வீடுகளின் உள்ளேயே முடங்கியவர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட், உணவு பொட்டலங்கள், பால் உள்ளிட்ட பொருட்களும் வினியோகிக்கப்பட்டது.

குடிசைகள் மூழ்கின

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டை பாலம் அருகே கரையோரம் வசித்த மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தரை தளத்தில் உள்ள வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்தது. மாடி வீடுகளில் இருப்பவர்கள் உள்ளேயே முடங்கி உள்ளனர்.

அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்ததால், அங்கு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.

ஜாபர்கான் பேட்டை பாரி நகர் கரிகாலன் தெரு, காந்தி நகர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் உள்ளவர்களை தீயணைப்பு படையினர் படகு மூலம் மீட்டு பத்திரமாக கொண்டு வந்து கரை சேர்த்தனர்.

கூவம் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, அமைந்தகரையில் கூவம் ஆற்றின் கரையோரம் வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அறிக்கை

இந்திய பாதுகாப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இந்திய ராணுவத்தினர் கடந்த 16-ந் தேதியில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை வெள்ளநீர் சூழ்ந்த பகுதியில் இருந்து 882 பேர் படகுகள் மற்றும் உயிர்காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 320 பேருக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டன. 150 பேருக்கு மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டன. குறிப்பாக நேற்று முடிச்சூர், சமத்துவ பெரியார் நகர், திருநீர்மலை, அனகாபுத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் ராணுவத்தினர் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதிய குழு அறிக்கை

logo

மாற்றம் செய்த நாள்:
செவ்வாய், நவம்பர் 17,2015, 8:53 PM IST
பதிவு செய்த நாள்:
செவ்வாய், நவம்பர் 17,2015, 8:53 PM IST

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய சிபாரிசு குழு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அமல்படுத்தப்படுவது வழக்கம். இதன்படி 6-வது ஊதிய குழுவின் சிபாரிசு, 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் 7-வது ஊதிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் வர்த்தக பிரிவினர், நிறுவனங்கள், பாதுகாப்பு துறையினர் மற்றும் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, அறிக்கை தயாரித்தனர். இந்த அறிக்கை வியாழக்கிழமை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தெரிவித்தார்.

மத்திய அரசின் பரிசீலனைக்குப்பின் உயர்த்தப்பட்ட புதிய ஊதியம், வருகிற ஜனவரி மாதம் (2016) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 28 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர். தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும், 7-வது ஊதிய குழு சிபாரிசு அமல்படுத்தப்பட உள்ளது. 

சபரிமலையில் சமுதாய மையம்

புதன், நவம்பர் 18,2015, 2:30 AM IST


logo

நேற்று கார்த்திகை மாதம் 1–ந் தேதி பிறந்தது. ஏராளமான அய்யப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருப்பதற்காக கழுத்தில் ருத்ராட்ச மாலை அல்லது துளசி மாலை அணிந்து, எளிய கருப்பு அல்லது நீலம் அல்லது காவி உடை அணிந்து தொடங்கினார்கள். இந்த 41 நாட்களும் கடுமையான விரதம் இருந்து பின்பு தலையில் இருமுடி கட்டிக்கொண்டு, கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சபரிமலைக்கு அய்யப்பனை தரிசிக்க செல்வார்கள். ஆயிரக்கணக்கில் என்று தொடங்கி, லட்சக்கணக்காகி, இப்போது கோடிக்கணக்கில் பக்தர்கள் கேரளா மட்டுமல்லாமல், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டேப்போகிறது.

மற்ற கோவில்கள் போல, சபரிமலை அய்யப்பன் கோவில் ஆண்டு முழுவதும் திறந்து இருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாளன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அடுத்த மாதம் 5–வது நாளன்று நடை சாத்தப்படும். இதுதவிர, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் 15–ந் தேதிவரை மகரஜோதிக்காகவும், கார்த்திகை மாதம் முழுவதும் மண்டல பூஜைக்காகவும் நடை திறந்து இருக்கும். இந்த நாட்களில் வரும் அய்யப்ப பக்தர்களுக்காக கேரள அரசாங்கமும், தேவஸ்தானமும் அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது. பாதுகாப்புக்காக கேரளா போலீசாருடன், தமிழ்நாடு உள்பட அண்டை மாநில போலீசாரும் நியமிக்கப்படுகிறார்கள். பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு போகும் வழியில் நிலக்கல் என்ற இடத்தில் தென்மாநிலங்கள் அனைத்துக்கும் தலா 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்–மந்திரி அறிவித்திருக்கிறார். தெலங்கானா அரசாங்கம் இந்த நிலத்தை பெற்றுக்கொண்டுவிட்டது. இதை தமிழக அரசு எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தவேண்டும். கேரள அரசாங்கம் இந்த நிலம் கொடுப்பதன் முக்கிய நோக்கம் அங்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் சமுதாய மையங்கள் அமைத்து, அந்தந்த மாநிலங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்பதுதான். தமிழக அரசும் உடனடியாக இங்கு சமுதாய மையம் அமைத்து, தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்று ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கேரள அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னையிலும், பம்பா ஆற்றின் கரையிலும், சன்னிதானத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, தமிழக பக்தர்களுக்கு துணையாக இருக்கவேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளித்துவிட்டு, தாங்கள் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் சில உடமைகளை ஆற்றில் போட்டுவிடுவது வழக்கம். ஐகோர்ட்டு ஆணைப்படி, இவ்வாறு ஆற்றில் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது, இதை மீறி போடுபவர்களுக்கு 18 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளதை, தமிழக பக்தர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

இப்படி ஆற்றில் பயன்படுத்திய ஆடைகளையும், உடமைகளையும் போடவேண்டும் என்று ஒரு தவறான நம்பிக்கைதான் இருக்கிறது. அப்படி ஒரு ஐதீகமே இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு செல்லும் பக்தர்கள் என்னென்ன நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும்?, என்னென்ன செய்யக்கூடாது?, எந்தெந்த வசதிகள் அவர்களுக்காக செய்யப்பட்டுள்ளன என்பது போன்ற தகவல்களையெல்லாம் சபரிமலை அடிவாரத்திலேயே தேவஸ்தானம், பக்தர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...