Sunday, August 28, 2016

மாணவர்களே கட்டிய கழிப்பறை! - மலைக்க வைத்த மனிதநேயம்

vikatan.com

பள்ளிக்கே வராமல் நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு கழிப்பறை கட்டித் தந்துள்ளனர் நாகப்பட்டினம் மாணவர்கள். ' கழிப்பறை இல்லாததே நோய் வருவதற்குக் காரணம் என்பதை உணர்ந்ததால், சக மாணவர்களிடம் வசூல் செய்து கழிப்பறை கட்டும் பணியை முடித்தோம்' என உற்சாகமாகப் பேசுகின்றனர் மாணவர்கள்.

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், தேசத்தின் தூய்மை பற்றிய பிரசாரத்தை முன்னெடுக்கிறது மத்திய அரசு. ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறையின் தேவை பற்றிய விழிப்பு உணர்வு பிரசாரங்கள் வேகமெடுத்துள்ளன. ' கழிப்பறை இல்லாததால் மணமகனை மணக்காத மணப்பெண்' என்பன போன்ற செய்திகள் எல்லாம் வடஇந்தியாவில் சாதாரணம். தமிழ்நாட்டிலும், ஏழை எளிய மாணவனின் வீட்டிற்கு கழிப்பறைக் கட்டிக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் மாணவர்கள். மாணவர்களின் அசாதாரண முன்னெடுப்பை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் நாகப்பட்டினம் மக்கள்.



நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் உள்ள எஸ்.கே.அரசு உயர் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவர் அகத்தியன். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த அகத்தியன், அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். சக நண்பர்களான வசீகரன், ராகுல், நவீன்ராஜ், ஹரிஷ் ஆகியோர், ' ஏன் பள்ளிக்கு வருவதில்லை?' என விசாரித்துள்ளனர்.

அவர்களிடம், தன் காலில் இருந்து தோல் நோயைக் காட்டி அழுதிருக்கிறார் அகத்தியன். ' அடிக்கடி விஷக் காய்ச்சலும் வந்துவிடுகிறது. சரியான டாய்லெட் இல்லாததுதான் காரணம்' என அழுதிருக்கிறார். ' திறந்தவெளியில் மலம் கழித்ததால்தான் அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகிறார்' என்பதை உணர்ந்த நண்பர்கள், ' நாமே ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, கழிப்பறை கட்டினால் என்ன?' என்ற முடிவுக்கு வந்து, பள்ளி ஆசிரியர் வீரமணியிடம் கூறியுள்ளனர். அவரும், 'மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இந்தத் திட்டம் அமையும். உடனே தொடங்குங்கள்' என உற்சாகப்படுத்தினர்.



இதையடுத்து, சுதந்திரதினவிழா அன்று கழிப்பறை கட்டுவது குறித்து விழிப்பு உணர்வு பேரணியை நடத்தினர். கூடவே, சக மாணவர்களிடம் கையேந்தி காசு வசூல் செய்தனர். ஒருவழியாக கழிப்பறை கட்டுவதற்கான தொகை சேர்ந்துவிட்டது. இதையடுத்து, அகத்தியனின் நண்பர்களே முன்னின்று கழிப்பறையைக் கட்டும் பணியை நிறைவு செய்தனர்.



கொளுத்தும் வெயிலில் சக மாணவனுக்காக கழிப்பறை கட்டும் பணியில் மாணவர்கள் இறங்கியதை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர் சுற்றுவட்டார பொதுமக்கள். மாணவர்களின் செயலைக் கேள்விப்பட்டு கல்வி அதிகாரிகள், அவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டினர்.


'உயிர் காப்பான் தோழன்' என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளனர் இந்த மாணவர்கள். இந்த மாணவர்களுக்கு நாமும் வைப்போம் ஒரு ராயல் சல்யூட்!

த.அழகுதங்கம்
(மாணவ பத்திரிகையாளர்)

இது நல்லதல்ல... By ஆர். வேல்முருகன்

DINAMANI

கற்றலின் எதிரி விருப்பம் இன்மையோ, மறதியோ, அச்சமோ அல்லது வெறுப்போ கிடையாது. இவை அனைத்தையும் குழந்தைகளின் மனதில் பதிய வைக்கும் தண்டனைதான்.

அறிவியல் உலகம் எத்தனையோ முன்னேற்றத்தைக் கண்டுள்ள இந்தச் சூழ்நிலையிலும் வகுப்பில் சரியாகப் படிக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, பள்ளிக் குழந்தைகளின் கைகளில் கற்பூரத்தை ஏற்றிச் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளார் அண்மையில் தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர்.

பொதுவாக, தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியைகளை நியமிப்பது, குழந்தைகளின் மேல் அன்பு செலுத்தி நன்கு கற்றுத் தருவார் என்பதால்தான்.

ஆனால் சூடு வைத்ததன் மூலம் தான் ஆசிரியை பதவிக்குத் தகுதியில்லாதவர் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார், அந்த ஆசிரியை. எந்த ஆசிரியர் இயக்கமும் குறைந்தபட்சம் இதை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயலால் சூடுபட்ட குழந்தைகளுக்குக் கல்வியின் மேல் கண்டிப்பாக வெறுப்புத்தான் வளர்ந்திருக்கும்.

இது தவிர, பல இடங்களில் தொடரும் பாலியல் வக்கிரங்கள், வகுப்புக்கு குடிபோதையில் வரும் ஆசிரியர்கள், தனக்குப் பதிலாக வேறு ஓர் ஆசிரியரை நியமித்து விட்டு, சொந்த வேலையைப் பார்க்கச் செல்லும் ஆசிரியர்கள் என்று பிரச்னைகளின் வடிவம் வெவ்வேறு விதமாக உள்ளது.

பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு பெருகியுள்ள இந்தக் காலத்திலும் மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாகக் கருதப்பட்டுப் போற்றப்படும் குரு, இவ்வாறு செய்வதுதான் பொதுமக்கள் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கண்ட சம்பவங்கள் எல்லாம் சிறிய உதாரணங்கள்தான். இதே நிலை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் ஆசிரியர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கும் மதிப்பு குறைந்துவிடும்.

ஈடுபாடுதான் கல்வி கற்பதன் முதல் படி என்பது ஆசிரியர்களுக்குக் கண்டிப்பாகத் தெரியும். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே மிகவும் கேவலமாகப் பார்க்கும் இத்தகைய சூழ்நிலையில், எத்தனை ஆசிரியர்கள் தங்களது மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பது கேள்விக்குறிதான்.

ராமேசுவரம் தீவில் ஒரு காலத்தில் தினசரி செய்தித்தாள்களை வீடு, வீடாக விநியோகித்த ஒரு சிறுவன், தனது ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் தினசரிகளில் தலைப்புச் செய்தியாக வந்தது மட்டுமல்லாமல், நாட்டின் முதல் குடிமகனாகவும் உயர்ந்தார் என்பது வரலாறு.

தான் முதல் குடிமகனாக இருக்கும்போது, திருச்சி கல்லூரியில் படித்தபோது தனக்குப் பாடம் போதித்த ஆசிரியரை, சந்திக்க விரும்பினார் அப்துல் கலாம். பாதுகாப்பைக் காரணம் காட்டி ஆசிரியரை அப்துல் கலாம் இருக்குமிடத்துக்கு அழைத்து வரலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆனால் தனக்குப் பாடம் போதித்த ஆசிரியரை தான் சென்று பார்ப்பதுதான் சரி என்று கூறி அந்த ஆசிரியரை தானே சென்று சந்தித்து வந்தார் அப்துல் கலாம்.

நாட்டின் முதல் குடிமகனாக இருக்கும்போது சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து வரச் செய்வது என்பது அப்துல் கலாமுக்குப் பெரிய விஷயமாக இருந்திருக்க முடியாது.

இவர் சென்று பார்த்ததால் இருவரின் மீதான, ஆசிரியர், மாணவரின் மீதான எண்ணங்களும் மரியாதையும் மிகவும் உயர்ந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒரு மாணவரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பது யோசித்துப் பார்க்க வேண்டும்.

இப்போதும் பெயர் தெரியாத எத்தனையோ ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் கண்டிப்பாக எந்த விருதும் கிடைக்காது.

அதற்காக அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. தங்கள் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இப்போதும் பல ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுகிறார்கள். தங்கள் ஊதியத்தின் ஒருபகுதியை மாணவர்களின் நலன்களுக்காகச் செலவிட்டு, பாடத்திட்டத்திற்கு அப்பாலும் பல்வேறு விஷயங்களை மாணவர்களுக்கு கற்றுத் தந்து கொண்டிருக்கின்றனர்.

முதலில் குறிப்பிட்ட விவகாரத்தில் சூடுபட்ட குழந்தைகள் அச்சத்தின் பிடியில்தான் இருப்பார்கள். அப்படி அச்சத்தின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் ஒரு குழந்தையால் எதைக் கற்றுக்கொள்ள முடியும்?

கற்றல் என்பது குழந்தைக்குக் குழந்தை கண்டிப்பாக மாறுபடும். இதுதொடர்பான விழிப்புணர்வு பெற்றோர்களிடம் மட்டுமல்லாமல், பெரும்பாலான ஆசிரியர்களிடமும் இல்லை.

தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சங்கங்கள் கூக்குரலிடுகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பதற்கே உயர் அதிகாரிகள் சங்கடப்படுகின்றனர்.

இப்போதைய சூழ்நிலையில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் அடுத்துவரும் தலைமுறைக்குக் கல்வியின் மீது நாட்டத்தை ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பார்கள், படிப்பதற்கு மாணவ, மாணவியர் இருக்க மாட்டார்கள்.

இது தனியார் பள்ளிகள் மேலும் வளர்ச்சியடையவே ஊக்கமளிக்கும். இந்த நிலை நாட்டுக்கும் வருங்கால சமுதாயத்திற்கும் நல்லதல்ல.

Saturday, August 27, 2016

வி.ஏ.ஓ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த இளைஞரால் பரபரப்பு!



விழுப்புரம்: தந்தையின் இறப்பு உதவித்தொகை பெறுவதற்காக, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் இளைஞர் பிச்சை எடுத்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ம.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். கொளஞ்சியின் மனைவி விஜயா தனது மகன்கள் ஐயப்பன், அஜித்குமார், மகள் அனுசுயா ஆகியோருடன் ம.குன்னத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்த விஜயாவுக்கு, தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவர் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12,500 வந்துள்ளது. அதைப் பெற வந்த கொளஞ்சியின் மகன் அஜித்குமாரிடம், உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், எனக்கு ரூ.3,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ம.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும், நீங்கள் கேட்கும் பணத்தை தர என்னிடம் பணம் இல்லை என அஜித்குமார் கூறி இருக்கிறார். ஆனாலும், பணம் தந்தால் மட்டுமே உதவித்தொகையை பெற முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் கண்டிப்புடன் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதில் மனமுடைந்த அஜித்குமார், ம.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள கடை வீதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், ''என் அப்பாவின் ஈம சடங்கிற்கு வாங்கிய கடனை அடைக்க வக்கு இல்லை. என்னிடம் அப்பா இறப்பிற்கு வந்த ரூ.12,500 தருவதற்கு மூன்றாயிரம் ரூபாய் கேட்கிறார் ம.குன்னத்தூர் வி.ஏ.ஓ." என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியபடி, அரசின் உதவித்தொகையைப் பெற கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க, எனக்கு பிச்சை போடுங்கள் என்று அனைவரிடமும் கேட்டுள்ளார்.



இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

'சைக்கிள்' வாத்தியார் முதல் சேட்டிலைட் சேனல் வரை..! பச்சமுத்து பாரிவேந்தர் ஆனது இப்படித்தான்

vikatan.com

சைக்கிளில் சென்று ஆசிரியர் பணியைத் தொடங்கிய டி.ஆர்.பச்சமுத்து இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னணி இது!

சென்னை மேற்கு மாம்பலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து பச்சமுத்து வளர்ச்சி அத்தியாயம் தொடங்கியது. கடன் வாங்கித்தான் அந்த பள்ளியை தொடங்கியதாக அவருடன் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். கல்வி சாம்ராஜ்ஜியம் மட்டுமல்லாமல் அரசியலிலும் பச்சமுத்து கால் பதித்தார். காட்டாங்கொளத்தூரில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். இந்த அளவுக்கு அவரது வளர்ச்சி ஏற்பட்டது மற்றவர்களை வியப்புக்குள் ஆழ்த்துகிறது. ஆனால், அவர் கடந்து வந்த பாதைகளை விவரிக்கிறார் பச்சமுத்துவின் நெருங்கியவர்கள்...

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்கி தொழில் நுட்ப கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான இடங்களை தேர்வு செய்வதிலும் எஸ்.ஆர்.எம். கடைபிடிக்கும் பாலிசியே வித்தியாசமானது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல கட்டடங்களும் கட்டப்பட்டு இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மேலும், நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம்.நர்சிங் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி, எஸ்.ஆர்.எம். ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ், எஸ்.ஆர்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்மருத்துவ கல்லூரி, எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் பச்சமுத்து. இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். நட்சத்திர விடுதிகள் , எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார்.

2005ல் நாகர்கோவிலை சேர்ந்த மதன், மருத்துவ மற்றும் இன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை மூலம் பச்சமுத்துவிடம் அறிமுகம் ஆகிறார். 2007ல் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் பெரும்பாலான மாணவர் சேர்க்கை மதன் மூலமாகவே நடக்கிறது. ஒரு கட்டத்தில் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் துணை பொதுமேலாளர் என்ற பதவியும் மதனுக்கு வழங்கப்படுகிறது. நகமும், சதையும் போலவே பச்சமுத்து, மதனின் நட்பு இருந்தது. 2011ல் அரசியல் ஆசை துளிர்விட பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சியை தொடங்குகிறார். அதிலும் மதனுக்கு மாநில இளைஞரணி பொறுப்பு அளிக்கப்படுகிறது. பச்சமுத்துக்கு சினிமா பிசினஸ் ஆசை வர, ஒரு தயாரிப்பாளரால் அவமானப்படுத்தப்படுகிறார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேந்தர் மூவிஸ் உதயமாகிறது. மொட்ட சிவா, கெட்ட சிவா வரை வேந்தர் மூவிஸ் நிகழ்ச்சிகளில் பச்சமுத்து தவறாமல் ஆஜராகினார். இவர்களின் நட்பு பச்சமுத்துவின் குடும்பத்தின் சிலருக்கு பிடிக்கவில்லை.

இதன் பிறகுதான் இருவரையும் பிரிக்க சதுரங்கவேட்டை ஆரம்பமானது. பூஜை அறையில் பச்சமுத்துவின் படத்தை வைத்து பூஜித்தார். அந்த அளவுக்கு பச்சமுத்து மீது அளவு கடந்த பாசத்தையும், மரியாதையும் வைத்திருந்தார் மதன். பச்சமுத்து குடும்பத்தினர் மதன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் முழு நம்பிக்கை வைத்திருந்தார் பச்சமுத்து. இந்த சமயத்தில் பச்சமுத்துவின் உறவினர் ஒருவர் விருகம்பாக்கத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மதன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தனர் பச்சமுத்துவின் குடும்பத்தினர். இந்த சம்பவத்துக்கு பிறகு இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. திருச்சி மருத்துவக் கல்லூரி அனுமதிக்காக டெல்லிவரை சென்று காயை நகர்த்திய மதன் மீது பச்சமுத்து முதன்முறையாக கோபப்பட்டார். திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பெறப்பட்ட பணத்தில் சில கோடிகள் ஆந்திராவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க ஒரு பெண்ணிடம் கொடுக்கப்பட்டது. அந்த அசைன்மெண்டிலும் மதன் சொதப்ப, கோபத்தின் உச்சக்கே சென்றார் பச்சமுத்து.
 
2016 ஜனவரியில் தொடங்கி இவர்களது முட்டல், மோதல் மே மாதத்தில் பூதாகரமாக வெடித்தது. அதற்கு மருத்துவக்கல்வி நுழைவுத்தேர்வான நீட்டும் ஒரு காரணமாக அமைந்தது.மே 28ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் மதன் எழுதிய தற்கொலை கடிதம் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் காசிக்கு சென்று சமாதி அடைவதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக பெறப்பட்ட பணத்தை எஸ்.ஆர்.எம். நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதலில் எஸ்.ஆர்.எம். நிர்வாகம், மதனுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தது.

உரிய ஆதாரங்கள் வெளிவரத்தொடங்கியதும், மதன் மீது பச்சமுத்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, மதன் மீதும், பச்சமுத்து மீதும் மாணவர் சேர்க்கை மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை குவித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் திண்டுக்கல் மாவட்ட ஐ.ஜே.கே மாவட்ட செயலாளர் பாபு, மதனின் கூட்டாளி சுதீர், வேந்தர் மூவிஸ் மதன், எஸ்.ஆர்.எம் நிர்வாகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆனால், விசாரணை என்ற பெயரில் வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக இன்று பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உசேன் போல்ட்டுகள் ஏன் உருவாவதில்லை?!' -சீறுகிறார் சீமான்

vikatan.com

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நிதி உதவிகள் குவிந்து வருகின்றன. ' தமிழ்நாட்டிலும் உசேன் போல்ட்டுகளுக்கு பஞ்சமில்லை. அவர்களைத் தேர்வு செய்யாமல் குறுக்கீடு செய்வதே விளையாட்டுத்துறை அதிகாரிகள்தான்' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.

ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வென்றுள்ளது இந்தியா. " நம்மிடம் வீரர்களுக்குப் பஞ்சமில்லை. தினமும் என்னுடன் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஓடும் வீரர்களைப் பாருங்கள். அத்தனை பேரும் உசேன் போல்ட்டுக்கு இணையானவர்கள்தான். அவர்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம்முடைய நாட்டில் தங்கம் வெல்வதற்கு ஒருவர் கூடவா கிடைக்கவில்லை?" எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

" ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மிக நுட்பமாக கவனிக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட் போட்டியைக் கைவிட்ட நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளே, அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன. ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இரண்டாம் இடத்திற்கான போட்டிகளே தொடர்ந்தன. கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டைக் கைவிட்ட நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் சாதித்துவிட்டன. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் இரண்டு பதக்கங்களையும் பெண்கள்தான் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த நாட்டின் மானத்தைக் காத்த கண்மணிகள் அவர்கள். 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் ஒரு தங்கம் வெல்வதற்குக்கூடவா ஆட்கள் கிடைக்கவில்லை?



செர்பியாவில் இருந்து பிரிந்த கொசாவா, வெறும் பத்து லட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடு அது. தங்கம் வென்ற நாடுகள் பட்டியலில் கொசாவா இடம் பெற்றுவிட்டது. உலகின் வெல்ல முடியாத தலைசிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் உசேன் போல்ட். ஜமைக்கா என்ற சிறிய நாட்டைச் சேர்ந்தவர் அவர். அவரை அந்த நாடு எப்படி உருவாக்கியிருக்கிறது பாருங்கள். விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றை ஒரு நாட்டின் அழகான முகங்களாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு நல்ல விளையாட்டு வீரனை ஒரு நாடு உருவாக்குகிறது என்றால், அந்த நாடு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த நாட்டில் எல்லாம் வர்த்தக மயமாக்கப்பட்டுவிட்டன. சந்தைப் பொருளாதாரத்தை கவனிக்கவே அரசுக்கு நேரம் சரியாக இருக்கிறது. விளையாட்டுத் துறையின் அனைத்து மட்டத்திலும் சாதி, மத குறுக்கீடுகள் அதிகரித்துவிட்டன.

அதனால் ஏற்படுகிற பின்விளைவுகள்தான் இதெல்லாம். நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் சிறந்த நீச்சல் வீராங்கனையாக திகழ்கிறார். அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு விளையாட்டுத் துறை அதிகாரிகளின் குறுக்கீடுகள்தான் காரணம். இதை அரசியல் என்று சொல்ல விரும்பவில்லை. அரசியல் என்ற சொல்லை புனிதமாகக் கருதுகிறேன். ஆந்திராவிலிருந்து நேற்று பிரிந்து சென்ற தெலுங்கானா மாநிலம் வெள்ளிப் பதக்கம் வெல்கிறது என்றால், அந்த மண்ணைச் சேர்ந்தவர்களின் வெறிதான் வெற்றிக்குக் காரணம். 130 கோடி மக்களில் வேகமாக ஓடுவதற்கு ஓர் இளைஞன் கூடவா நம்மிடம் இல்லை? நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதலில் மிகச் சிறந்த வீரர், வீராங்கனைகள் நம்மிடம் உள்ளனர். அவர்களைத் தேர்வு செய்து இந்த நாட்டின் செல்வங்களாக மாற்ற வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பராமரித்து, விளையாட்டைத் தவிர வேறு எந்த சிந்தனையும் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளி வென்ற பி.சி.சிந்து பேட்டி கொடுக்கும்போதுகூட, ' மூன்று மாதங்களாக செல்போனைப் பயன்படுத்தவில்லை' என்கிறார். எந்த ஒரு கவனச் சிதைவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வெற்றியை நோக்கி அவர் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். நமது தடகள வீராங்கனை சாந்திக்கு உரிய நிவாரணத்தைத் தராமல் அரசு அலைக்கழிக்கிறது. அவருக்கான நீதியை தமிழக அரசே உடனே செய்து தர முடியும். இன்று வரையில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அடுத்து வரக் கூடிய காலகட்டங்களில் பதக்கம் வெல்ல வேண்டுமானால், விளையாட்டுத்துறையை விளையாட்டாக பார்க்க வேண்டும். நியாயமான தேர்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும். ' தன் மதம் சார்ந்தவன், சாதியைச் சேர்ந்தவன்தான் வர வேண்டும்' என்றால் எதுவும் உருப்படாது. மத்திய விளையாட்டுத் துறை என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார் ஆதங்கத்தோடு.

-ஆ.விஜயானந்த்

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை' அவமானத்தால் தற்கொலையா?

vikatan.com


சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஜீ தமிழ் தனியார் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒளிபரப்பாகிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தொடர்பாக
சிலர் வழக்கும் போட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் (60) என்பவர் இது போன்றதொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அவமானப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் இரண்டு லாரிகள் சொந்தமாக வைத்திருந்தார். தனது மனைவி அம்பிகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மைத்துனி ரேணுகாவிடம் நெருக்கமாக வாழ்ந்துள்ளார். ரேணுகாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரேணுகாவின் கணவர் மகேந்திரன். ரேணுகா மீது சந்தேகமடைந்த மகேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பன் தரப்பினர் போலீஸுடம் சொன்னபோது,
''சொத்து பிரச்சனை காரணமாக ரேணுகா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நாட இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட நாகப்பனை ஒளிபரப்ப மாட்டோம் என்று உறுதி கொடுத்து பேசியுள்ளனர். ஆனால் நிகழ்ச்சியில் நாகப்பன் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் ரேணுகாவின் இரண்டு மகள்களிடம் தவறாக நடக்க முயன்றார் என்று குற்றம்சாட்டியது ஒளிபரப்பானது. இதனால் மனமுடைந்த நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தங்கள் தந்தை மரணத்திற்கு சொல்வதெல்லாம் உண்மைதான் காரணம் என்று நாகப்பன் மற்றும் அம்பிகா தம்பதியின் மகள் ஆதி , மகன் மணிகண்டன் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர். தனது தந்தை சாவுக்கு நியாயம் வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. நிகழ்ச்சி தொகுப்பாளரே நீதிபதி போல் தீர்ப்பு கூறியதால் மனமுடைந்து போனார் தனது தந்தை என்று மகன் மணிகண்டன்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வியாபார நோக்கத்துடன் குடும்பங்களில் சாதாரண சண்டைகளை பூதாகரமக்கி அவர்களது அந்தரங்கத்தை படம் பிடித்து போட்டு அதன் மூல காசு பார்த்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குடும்பத்தினரை அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என நாகப்பனின் உறவினர் சந்திரசேகர் கூறுகையில், 'சமீபத்தில் மேடவாக்கத்தில் ஒரு இடத்தை 45 லட்சம் ரூபாய்க்கு நாகப்பன் விற்றார். அந்தப் பணம் தொடர்பாகவே குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரேணுகாவின் வீட்டில் நாகப்பன் குடியிருந்து வந்தார். அங்கும் தகராறு ஏற்பட்டதால் பெரும்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உறவினர் ஒருவருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். போனிலேயே தற்கொலை செய்ய வேண்டாம் என்று அந்த உறவினர் தெரிவித்தார். அப்போது, செய்யாத தவறுக்கு என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்த அவமானத்திற்குப் பிறகு என்னால் வெளியில் நடமாட முடியாது.

இதனால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று நாகப்பன் விரக்தியில் பேசியதோடு இணைப்பையும் துண்டித்துவிட்டார். உடனடியாக உறவினர்கள் எல்லோரும் அவர் வீட்டிற்க்கு சென்றோம். ஆனால் அவர் அதற்குள் தற்கொலை செய்துவிட்டார். ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டபோதே அதை நிறுத்தும் படி, போனில் தகவல் தெரிவித்தோம். ஆனால், எங்களிடம் நிறுத்துவதாக சொல்லியவர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தி நாகப்பனை கேவலமாக பேசியிருக்கிறார்கள். மேலும், நாகப்பன் ரேணுகாவின் இரண்டு மகள்களிடமும் பாசமாக நடந்துகொள்வார். பள்ளிக்கூடத்தில் கொண்டு விடுவார். அப்படி பாசமாக இருந்தவர் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் மீது நாகப்பனின் தாயார் நாகம்மாள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரில், தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் சேர்க்க நாங்க முடிவு செய்தபோது போலீஸார் அதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் அவரது பெயர் இல்லாமல் புகார் கொடுத்தும், போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். முதல்வர் தனிப்பிரிவிற்கும், சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அங்கேயும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவோம்.' என்றார்.


இதுகுறித்து ஜீ தமிழ், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினோம்,

''இந்த சம்பவம் குறித்து, ஜீ தமிழ் தொலைகாட்சி நிர்வாகம் சட்ட வல்லுநர்களை வைத்து ஆராய்ந்து வருகிறது. இந்த செய்தியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பி பெரிதுபடுத்தி வருகிறது. பொதுவாக, பிரச்னையோடு வரக்கூடிய நபர்களுக்கு நல்லது செய்வதே எங்களுடைய நோக்கம் ஆகும். எதிர்தரப்பையும் விசாரித்தே அவர்களுக்கான வழிகாட்டுதலை தருகிறோம். அந்த நிகழ்ச்சியில் நான் பேசியபோது கூட, 'குழந்தைகள் உதவி மையத்தின் தொடர்பு எண்ணான 1098 - ஐ தொடர்பு கொண்டு பிரச்னையை கூறியிருந்தாலே, அவர்கள் அதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பார்கள்', என்று சொல்லியிருந்தேன்.'' என்று கூறினார்.

-வே.கிருஷ்ணவேணி

விபத்துகள்

இங்கு விபத்துகள் விற்கப்படுகின்றன...!


சாலையோரக் கடைகளுக்கும் சாலை விபத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்விக்கு சாலையோரக் கடைகளே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று பதில் கிடைக்கிறது.

நீங்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவரா?... அப்படியென்றால், நீங்கள் ஒருநாளில் ஏதாவது ஓர் இடத்தில் திடீரென்று கண்களில் தாக்கும் நொடிப்பொழுது எரிச்சலை அனுபவித்திருக்கக் கூடும். கிராமப்புறங்களில் ஏதேனும் பூச்சி கண்களில் விழுந்துவிடுவதும், நாமும் சற்றுத் திணறி மோட்டார் சைக்கிளை ஓரம்கட்டிவிட்டுக் கண்களைக் கசக்கி, முகத்தைக் கழுவிவிட்டுப் பயணத்தைத் தொடர்வோம். நகர்ப்புறங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் அப்படி நடக்கிறது என்றால், அதற்கான காரணம் பூச்சிகள் அல்ல... சாலையோர புரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் (விரைவு உணவகங்கள்) இருந்து பறந்துவரும் மிளகாய்த்தூள் கலந்த மசாலாவே காரணம்.

குறிப்பிட்ட சில பாதைகள் வழியாகச் செல்லும்போது வாகனத்தை இயக்க முடியாமல் நாம் திணறுகிற அளவுக்கு கண்களில் வந்து காரமான அந்தத் துகள்கள் விழுவதை பலர் அனுபவித்திருப்பார்கள். அந்தவேளையில், வாகனத்தை இயக்குகிறவர், மதுபோதையில் இருந்தார் என்றால் அவரால் வாகனத்தைத் தன்னுடைய வசத்துக்குக் கொண்டுவர முடியாது. வாகனத்துக்கு அவர் வசப்பட்டு விடுவார். எங்காவது மோதி விபத்தையும் ஏற்படுத்திவிடுவார்.

தொடர்ந்து பலநாட்கள், இப்படியான ‘காரமான துகள்கள்’ கண்களில் மோதுவது எப்படி என்று விடாமல் சேசிங்கில் இருந்து கவனித்தபோதுதான் இந்த உண்மை தெரியவந்தது. மேலும் இதுபோன்ற கடைகளில் இருபுறமும் வைக்கப்பட்டிருக்கும், ‘எக்ஸார்சிஸ்ட் ஃபேன்’கள், உள்ளிருந்து காரத்துகள்களை அப்படியே இழுத்துச் சாலைக்கு அனுப்பிவைக்கின்றன. ஒன்றல்ல... இரண்டு ஃபேன்கள்!

‘‘இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்காரர்களிடம் எச்சரிக்கை செய்யவேண்டும். எக்ஸார்சிஸ்ட் ஃபேன்வைத்து உள்ளிருந்து, ‘காரப்பொடி துகள்கள்’ வெளியே வராத அளவுக்கு ஃபேனுக்கு மறைப்பாக ஓர் அட்டையைவைக்க வேண்டும். அப்படி வைத்திருக்கிறார்களா என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனையிட வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டுத் துறை, ஹெல்த் டிபார்ட்மென்ட் முதலிய துறையினரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஃபாஸ்ட் ஃபுட் கடைகளால்தான் பைக்கில் போகிறவர்கள் அதிகமான சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதனால், ஒரு ஏரியாவிலேயே வாரத்தில் 10 விபத்துகள் நடந்துவிடுகின்றன. சாலை விபத்துகளைத் தடுக்கவும், மனித உயிர்களைக் காக்கவும் அரசும், அதிகாரிகளும் இதன்மீது அதிக சிரத்தை எடுத்து கவனம் செலுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 67,250 சாலை விபத்துகளில் 77,725 பேர் காயமடைந்து உள்ளனர். 15,190 பேர் இறந்துள்ளனர். நாட்டிலேயே, தமிழகத்தில்தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. நாட்டின் மொத்த சாலை விபத்துகளில் 14.9 சதவிகிதம் தமிழகத்தில்தான் நடைபெற்று உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற விபத்துகளோடு ஒப்பிடும்போது 2014-ல் தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1.5 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.

சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 26.4 சதவிகிதமும், லாரி மற்றும் கனரக ஓட்டுநர்கள் 20.1 சதவிகிதமும், காரில் செல்பவர்கள் 12.1 சதவிகிதமும், பேருந்து ஓட்டுநர்கள் - பயணிகள் 8.8 சதவிகிதமும் பாதிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் கூறுகிறது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர், 26.4 சதவிகிதம் சாலை விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம், அதாவது, நடக்கிற விபத்துகளில் கால்பங்கைவிட 1.4 சதவிகித கூடுதல் சாலை விபத்துகள், இரு சக்கர வாகன ஓட்டிகளால் நிகழ்கிறது.

எல்லாமே அவசரம், அவசரம் என்றாகிவிட்டதில் நாடு முழுவதும் சிறு, சிறு ஹோட்டல்களாக முளைத்திருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளின் சேவை அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அவசியமாகிவிட்டது. சைவப் பிரியர்கள்தான் இந்த வகை உணவகங்களில் இருந்து தங்களின் வயிறைக் காப்பாற்றி, வாழ்க்கையின் எஞ்சிய காலத்தைப் பாதுகாப்பாக ஆக்கிக் கொண்டுள்ளனர். முந்தைய சில தினங்களுக்கு முன்னர் வாங்கிவைத்த சிக்கனையும், மட்டனையும் வினிகரில் கழுவி, ‘அவசர உணவு’ தயாரிப்புக்கான வாணலியில் மசாலாவுடன் போட்டு உருட்டி, புரட்டி கம்பியில் விட்டுத் தூக்கும்போது சொட்டுகிற எண்ணெய்யின் வழியாக ஒருபோதும்
கறிச்சுவை கெட்டுப்போனதை அறிய முடிவதில்லை.

முகர்ந்து பார்த்தால் மனசே நாற்றமடித்துப் போகும் சில்லி சாஸ், தக்காளி சாஸ்களை சிக்கனின் லெக்-பீஸை சுற்றிலும் ஊற்றி அதில் ஒரு தனிச்சுவையை தேடிடும் ஆராய்ச்சியும் அதிக அளவில் தமிழகத்தில்தான் நடக்கிறது. இது போதாதென்று உயிரைப் பறிக்கும் விபத்துகளும் நடக்கிறது.


உஷார் மக்களே!

- ந.பா.சேதுராமன்

NEWS TODAY 2.5.2024