Tuesday, January 24, 2017

ஆறு நாள் மக்களின் நண்பன்.. ஏழாவது நாள் என்ன ஆயிற்று காவல்துறைக்கு? #Marina

தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களும் போராட எவ்வளவு எழுச்சி பெறுவார்கள், அரசாங்க இயந்திரத்தை அசைத்துப்பார்ப்பார்கள் என நாம் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடக்கும் அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம்... விறுவிறுவென தமிழகம் முழுவதிலும் தீயாக பரவியது.

இளைஞர்கள் போராட்டத்தை கையில் எடுத்தார்கள். அறவழியில் களம் இறங்கினார்கள். தமிழக அரசாங்கம் 'ஜனநாயகம்' என்ற போர்வையில், போராட்டம் நடத்தவந்த அனைவருக்கும் காவல்துறையை ஏவிவிட்டு பாதுகாப்பு வழங்கியது. 'நாங்களும் தமிழர்கள்தான். நீங்க போராட்டம் நடத்துங்க. உங்க பாதுகாப்புக்காக நாங்க இருக்கோம்' என போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் முதுகில்  தட்டிக்கொடுத்தவர்கள்.  அதே காவல்துறை முதுகில் குத்தவும் என்பது இப்போது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது.

ஜனவரி 17-ம் தேதி இருபது, முப்பது இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்தலாம் என முடிவெடுத்து பதாகைகளுடன் களத்தில் இறங்க அதுவே 'மெரினா புரட்சி'யின் தொடக்கப்புள்ளியானது. மாணவர்களுக்கு இந்தச் செய்தி பரவப்பரவ மெரினாவில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தது. அவர்கள் அனைவரையும் சின்ன எதிர்ப்பு கூட இல்லாமல், சிறு இடைஞ்சல் கூட ஏற்பட்டுவிடாமல், களத்திற்குப் போக அனைத்து வசதிகளை செய்து கொடுத்தது இதே காவல்துறை.
போராட்டத்தை ஆதரிக்கச் சென்ற ஸ்டாலினையும், அ.தி.மு.க எம்.எல்.ஏ-களையும் மாணவர்கள் கடுமையாக எதிர்க்க.. 'மாணவர்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்' என பேட்டி மட்டும் கொடுத்துச்சென்றார்கள். அப்போதும் காவல்துறை 'பாருங்க... நாங்க உங்கபக்கம். ஆளும் கட்சி. எதிர்க்கட்சி. என்ற பாகுபாடு இந்த காக்கி உடைக்கு கிடையாது. உங்களுக்காகவே நாங்கள்' என்ற ரீதியில்தான் அவர்களது மொத்த செயல்பாடுகளுமே இருந்தன. தமிழக அரசை க் கடுமையாக விமர்சித்தபோதும், மத்திய அரசை வார்த்தைகளால் வறுத்து எடுத்தபோதும்... கண்டுகொள்ளாமல் குறிப்புகள் மட்டுமே எடுத்துகொண்டது உளவுத்துறை. 

கொஞ்சம் கொஞ்சமாக மெரினா கடற்கரையின் களம் பெரிதானது... எங்கும் காணும் இளைஞர்களின் தலைகள். இருசக்கர வாகனங்கள், கார்கள் என வாகனங்களும் பெருகியது. இது அத்தனையும் ஒருங்கிணைக்க அவ்வளவு காவல்துறை பணியில் அமர்த்தப்படவில்லை. ஒரு பகுதி மாணவர்களே களத்தில் இறங்கி காவல்துறைக்குப் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதில் தொடங்கி, பாதுகாப்புப் பணி வரைக்கும் உதவியாக இருந்தனர். 'நமக்கும் வேலை மிச்சம்.' என மரத்தடியில் ரெஸ்ட் எடுக்க தொடங்கினார்கள் சில காக்கிகள். போராட்டக்காரர்களுக்கு வரும் உணவு, தண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள் வரை அனைத்தும் இவர்களுக்கு ஓடி வந்து... ஓடி வந்து கொடுத்தனர். 'நாம் இவர்களிடம் எது கேட்டலும் உடனே கிடைக்கும்.' என்னும் அளவுக்கு காவல்துறையை நினைக்க வைத்தார்கள். அவ்வளவு பெரிய இரண்டாவது கடற்கரையில்.. விவேகானந்தர் இல்லம், லைட் ஹவுஸ் சில இடங்களில் மட்டும் தற்காலிக முகாம் அமைத்துத் தங்கினார்கள். 'எவ்வளவோ டியூட்டி பார்த்திருக்கோம். இதுமாதிரி ஜாலியா நாங்க இருந்ததில்லை.' என்று இங்கு டியூட்டியில் இருக்கும் சில காவலர்களே வெளிப்படையாகச் சொன்னார்கள். 

ஒருநாள் காலை வேளையில், ஒரு காவலர் மைக் பிடித்து 'நானும் தமிழர்தான். நாங்க இந்த உடை போட்டு இருந்தாலும். நாங்களும் உங்க போராட்டத்தில் தான் இருக்கோம். நான் ஒட்டுமொத்த காவல்துறை சார்பாக பேசுகிறேன்.' என மாணவர்கள் முன் வீர உரை நிகழ்த்த அவரைக் கொண்டாடித் தீர்த்தார்கள் இளைஞர்கள். மெரினா இளைஞர்கள் மத்தியில் காவல்துறையின் இமேஜ் இரண்டுமடங்கானது. இந்த நேரத்தில்தான் ஓ.பி.எஸ் சென்னை டூ டெல்லி பயணம் முடித்து வந்தார். 'அவசரச் சட்டம் கொண்டு வரப்படும். இதுவே ஜல்லிக்கட்டுக்கான நிரந்திர சட்டம்.' என்றார். அதை மாணவர்கள் ஏற்கவில்லை. போராட்டம் தொடர்ந்தது.  மெரினாவில் இருந்து யாரும் கலையவில்லை.  
'நானே ஜல்லிக்கட்டை நடத்தி வைப்பேன்.' என்று கூறி மதுரைக்கு முதல்வர் ஒ.பி.எஸ் சென்ற அதே நாளில்தான்... ஒ.பி.எஸ் அலுவலகம் இயங்கும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு அருகே இருக்கும் மெரினாவில் மூன்று லட்சம் பேருக்கு மேல் திரண்டார்கள். மெரினாவே மிரண்டது. அப்போதும் அமைதிகாத்தது காவல்துறை. அலங்கநால்லூரில் ஒ.பி.எஸை ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் திருப்பி அனுப்பினார்கள் அங்கிருந்த போராட்டக்காரர்கள். தமிழக அரசு இதை ஈகோ பிரச்னையாகதான் பார்த்தது. அன்று இரவுதான் மெரினாவின் சூழல் மாறியது. 

காக்கிகள் தலையீடு அதிகரித்தது. அடுத்தநாள் காலை 'லத்தி சார்ஜ்' நடக்கலாம் என்ற சூழல் நிலவியபோது கூட, சில மாணவர்கள்... 'ச்சே... அப்படி எல்லாம் பண்ணமாட்டாங்க. ஆறு நாட்கள் நமக்காக நம்முடன் இருந்தவர்கள். நம்மை எப்படி அடிப்பார்கள்?' என்ற ரிதீயில்தான் பேசினார்கள்.  23-ம் தேதி அதிகாலை மூன்று மணி முதலே காவல்துறையினரின் வருகை அதிகரித்தது. இதை உணர்ந்த மாணவர்கள் அப்போதும் காவக்துறைக்கு 'டீ, காபி கொடுங்க. பிஸ்கட் கொடுங்க.' என சொல்லி ஓடியோடி கொடுத்தனர். காவல்துறையை சேர்ந்த சிலரும் அதை வாங்கி அருந்தினார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் இவர்கள் சந்திரமுகியாக மாறுவார்கள் என சொன்னால், கடற்கரைக் காற்றே அதை மறுத்திருக்கும். ஆனால், காக்கிகளின் உண்மையான முகம், கோர முகம் அடுத்த சில நிமிடங்களில் வெளிப்பட்டுவிட்டது. 

மெரினா இளைஞர்கள் கூட்டத்தைக் கலைக்க... எங்கள் கைகளில் லத்தி இல்லை என்று சொல்லி மாணவர்கள் கூட்டத்திற்குள் புகுந்தாலும்... ஒரு மணி நேரத்துக்கும் மாணவர்கள் கொடுத்த பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர் பொத்தல்களை வாங்கிய கைகளாலேயே அவர்களை அறைந்தார்கள். தாக்கினார்கள். இழுத்து எட்டி உதைத்தார்கள். ஏழு நாட்கள் பொறுத்தவர்களுக்கு, அந்த இளைஞர்கள் கேட்ட 'இரண்டு மணி நேர' அவகாசத்தைத் தரவும் மறுத்தார்கள். மீடியாவின் கண்படாத பக்கம் லத்தி வைத்து தாக்கினார்கள். இது மெரினாவில் காவல்துறைகளால் நடந்த அராஜகம் என்றால்...  இன்னொரு பக்கம் போராட்டக்காரர்கள் ஆட்டோவுக்கு தீ வைத்துவிட்டார்கள், பைக்குகளை அடித்து நொறுக்கிறார்கள்  என்று செய்திகளும் பரவின. ஆனால், கிளைமேக்ஸ் காட்சியாக ஆட்டோவுக்குத் தீ வைத்ததும்,  வாகனங்களை அடித்து நெறுக்கியதும் அதே காக்கி உடை போட்ட காவலர்கள்தான் என்பது வெளியாகி கொண்டே இருக்கும் வீடியோவிலே தெரிகிறது. போராட்டக்காரர்களுக்கு மீனவர்கள் உதவிகள் செய்தற்காக அவர்கள் வீடு புகுந்து தாக்குவதும் இவர்கள் தானே.

ஆனால், சப்பைக்கட்டுக்காக, நேற்று இரவு ஜார்ஜ் 'சமூக விரோதிகள் சிலர் கூட்டத்துக்குள் நுழைந்ததே பிரச்னைக்கு காரணம். அவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றவர் 'சென்னை மாநகரில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை.' எனவும் சொல்லி இருக்கிறார். எல்லாம் சரிதான்.  ஆனால், இந்த வீடியோவை எல்லாம் பார்த்த பின் மக்கள் அச்சப்படுவதே காவல்துறையை பார்த்துதான் என்பது காவல்துறைக்குத் தெரியாதா என்ன? லட்சம் இளைஞர்கள் திரண்டபோது நுழையாத சமூக விரோதிகள்... காவல்துறை தலையிட்ட பின் நுழைகிறார்கள் என்றால், யார் திறமை அற்றவர்களாக இருக்கிறார்கள்? 

போராட்டம் தொடங்கப்பட்டபோது அரசியல் என்றால் என்ன, காவல்துறை என்ன எல்லாம் செய்யும் என்பதை அறியாதவர்களாகதான் பலர் இருந்தார்கள். இப்போது காவலர்கள் யார், அவர்களின் உண்மையான முகம் என்ன என்பது போராட்டக் களத்தில் நின்றவர்களுக்கு இன்று புரிந்திருக்கும். எதிர்காலப் போராட்டங்களுக்கு இந்தப் பாடம் நிச்சயம் உதவும். 

அரசாங்கமும், காவல்துறையும் சேர்ந்து... தெரிந்தோ தெரியாமோ 'போராட்டம்' என்னும் விதையை மாணவர்கள் மத்தியில் விதைத்துவிட்டார்கள். இந்த விதை என்ன வெல்லாம் செய்யும் என்பதை வரும் காலங்களில் பொறுத்திருந்து பார்ப்போம். 

- நா.சிபிச்சக்கரவர்த்தி

மெரினாவில் தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்'

                      மெரினா

சென்னை மெரினா கடற்கரையில் அறவழியில் ஜல்லிக்கட்டுத் தடை நீக்க கோரியும் 'பீட்டா' மீது தடை விதிக்க கோரியும் போராடிய மாணவர்கள் இளைஞர்கள் மீது அத்துமீறித்தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 14ம் தேதி தொடங்கி சென்னை மெரினாவில் பல்வேறு குழுக்களாக இளைஞர்கள் பெண்கள் முதியவர்கள் என்று எல்லா தரப்பினரும் லட்சக்கணக்கில் கூடி மாபெரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்தினர்.ஒரு வாரத்தைத் தாண்டியும் போராட்டம் நீடித்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி நிரந்தர சட்டம் கொண்டுவந்தது.இந்த நிலையில் நேற்று(திங்கள்) அதிகாலையில் மெரினாவில் இருந்த போராட்டக்காரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.இதில் ஏராளமானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ரத்தம் சிந்தினர்.இந்த நிலையில் மெரினாவில் கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்திய போலீசார் திருவல்லிக்கேணி உள்ளிட்ட கடற்கரையை ஒட்டிய எல்லாப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தை முடக்கினர். மீறுபவர்கள் மீது தடியடி நடத்தினர்.சில இடங்களில் வீடு புகுந்து பெண்கள் மீதும் தடியடி நடத்தினர்.
இதனால் ஏற்பட்ட பதற்றம் இன்றும் தணியவில்லை.இரண்டாவது நாளாக இன்றும் மெரினா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் கடற்கரை செல்ல போலீசார் அனுமதியளிக்கவில்லை.

இந்த நிலையில் போராட்டக் களத்தில் இறுதிவரை நின்று போராடி போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக பேட்டியளித்த யுவராஜா கூறுகையில்,"இளைஞர்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர்.நான் அரசியல் கட்சி சார்பில் அங்கு செல்லவில்லை.இளைஞன் என்ற முறையில் போராட்டத்தில் கலந்துகொண்டேன்.அஹிம்சை போராட்டத்திற்கு சிறந்த உதாரணமாக இருந்தது மெரினா போராட்டம்.ஜல்லிக்கட்டு தடை நீக்கவேண்டும்.பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை.அதில் இளைஞர்கள் வென்று விட்டார்கள்.அவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஆனால் போலீசார் நடந்துகொண்டது திட்டமிட்ட ஒன்றாக இருக்கிறது.
களைந்து செல்லும் மன நிலையில் இருந்த எங்களை மிரட்டி அடித்து உதைத்து வெளியேற்றினர். பெண்கள் குழந்தைகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. அதனால் அத்துமீறி தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். கலவரத்திற்கு கமிஷனர் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி திரிபாதி புகார் மனுவை வாங்கிக்கொண்டார். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.நடவடிக்கை இல்லை என்றால் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளோம்."என்றார்.

சி.தேவராஜன்

கலவரத்தில் தீ வைத்த காவல்துறை!  -களமிறங்கும் முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன்


ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டங்களை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். 'ஆறு நாள் அமைதியாக இருந்தவர்கள், ஏழாவது நாளில் அராஜகத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? வன்முறையை நடத்தியதே காவல்துறைதான்' எனக் கொந்தளிக்கின்றனர் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள்.

' தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும்' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி, மெரினா புரட்சியை அரங்கேற்றினர் மாணவர்களும் பொதுமக்களும். இந்த எழுச்சி மாநிலம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. இதையடுத்து, மாவட்ட தலைநகரங்களில் மட்டுமல்லாமல், வீதிகள்தோறும் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டனர். மக்களின் கொந்தளிப்பால் அதிர்ந்த தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்றுத் திரும்பிவந்தார். ஆனாலும், ' நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் அகல மாட்டோம்' என மாணவர்கள் அறிவித்தனர். ' குடியரசு தினவிழா நேரத்தில் போராட்டம் நடப்பது தேவையற்ற சூழல்களை உருவாக்கும்' என்பதால், நேற்று காவல்துறை அதிகாரிகள் களமிறங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், தோழர் தியாகு, இயக்குநர் கவுதமன் உள்ளிட்டவர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேநேரம், ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் தீ வைப்பு, தடியடி, கல்வீச்சு என நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. கலவரத்தில் போலீஸ்காரர்களே ஆட்டோக்களுக்கு தீ வைக்கும் காட்சிகளால் அதிர்ந்தனர் தமிழ் ஆர்வலர்கள். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர், ' கலவரத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம். இதற்காக உண்மை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் தலைமையில் குழு செயல்படும்' என அறிவித்துள்ளனர்.

சி.பி.எம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். " மெரினா கடற்கரையில் ஆறு நாட்கள் பொறுத்திருந்தவர்கள், இன்னொரு நாள் பொறுத்திருந்தால், இப்படியொரு மோசமான பின்விளைவுகளைத் தவிர்த்திருக்கலாம்.மாநில அளவில் அரசு மற்றும் காவல்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகத்தான் பார்க்கிறோம். நான்கரை மணிக்கே மெரினா கடற்கரைக்கு ஆயிரக்கணக்கில் போலீஸார் சென்றுவிட்டனர். ஐந்து மணிக்குள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுவிட்டனர். 

முதலமைச்சர்தான் உள்துறைக்கும் பொறுப்பு வகிக்கிறார். அவர் காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டிருக்கிறார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், ' எங்களுக்கு இரண்டு மணி நேரம் அவகாசம் கொடுங்கள். அவசரச் சட்ட நகலைக் காட்டுங்கள். படித்துப் பார்த்துவிட்டு, வெளியேறுகிறோம்' என வேண்டுகோள் வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இவர்கள் செய்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நியாயப்படுத்தவே, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

ஜீப், ஆட்டோ ஆகியவற்றை எரிக்கும் வேலையில் காவல்துறையினரே ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஏராளமான உள்ளன. போலீஸார்தான் வன்முறையில் இறங்கினர். மாணவர்களோ இளைஞர்களோ அல்ல. தொடர்ந்து இன்றைக்கும் மாணவர்களை கைது செய்கிறது போலீஸ். லட்சக்கணக்கான மாணவர்கள் மெரினாவில் கூடியபோது பெரும் சக்தியாக தென்பட்டனர். கலைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டால் அவர்கள் அநாதை. அவர்கள் எந்த அரசியல் அமைப்பிலும் இல்லை. இதை உணர்ந்துதான் காவல்துறை அராஜகத்தை நடத்தி முடித்திருக்கிறது. 

இந்த வன்முறைகளுக்கான காரணத்தைக் கண்டறிய, உண்மை அறியும் குழுவை அமைத்திருக்கிறோம். 'இந்தக் குழுவை வழிநடத்த வேண்டும்' என முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமனிடம் கேட்டோம். அவரும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். உண்மை அறியும் குழுவின் அறிக்கை அடிப்படையில், சட்டரீதியான போராட்டத்தைத் தொடர உள்ளோம்" என்றார் கொந்தளிப்போடு.

காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா ? #HealthTips


பேப்பர் படிப்பது நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். சிலருக்கு அது ஓர் அடையாளமாகவே ஆகிப்போன அன்றாடச் செயல். இப்படி காபி சாப்பிடுவது நமக்கு சுறுசுறுப்பு தரும்; புத்துணர்ச்சி ஊட்டும் என்கிற நம்பிக்கையும் நிறையப் பேருக்கு இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா... அது ஆரோக்கியமானதுதானா? நிச்சயமாக இல்லை. அது நமக்குத் தரும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். நம் வயிற்றுக்குள் போகும் காபி என்ன செய்யும்... என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.













வயிறு பத்திரம் பாஸ் !

உடல் என்கிற மாயாஜாலம் நிகழ்த்துகிற அற்புதம் ஏராளம். தேர்ந்த ஓர் இயந்திரம் செய்யும் வேலையைவிட எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்துகிற உயிர் இயந்திரம் அது. உணவை செரித்து, அதில் இருந்து சத்துக்களைப் பிரித்துக் கொடுத்து, இதயத்தைத் துடிக்கவைத்து, மூளையை சிந்திக்கவைத்து, நம்மைப் பேசவைத்து, சிரிக்கவைத்து, அழவைத்து... என அது நிகழ்த்துகிற ஜாலங்கள் அநேகம். அதில் ஒரு சிறு துளி உதாரணம்... நாம் சாப்பிடும்போது, வாசனையை நுகரும்போது, சமயத்தில் உணவைப் பற்றி நினைக்கும்போதே... நம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியாகத் தொடங்கிவிடும். அன்றைய தினம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என நினைத்து நாம் அருந்தும் காபி, இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் சுரக்கச் செய்யும். ஏற்கெனவே, இரவில் சாப்பிட்டுவிட்டு, உறங்கி நீண்ட நேரத்துக்கு வயிற்றைக் காயப் போட்டு வைத்திருப்போம். அந்த வெறும் வயிற்றில் காபி குடித்தால் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அதன் செயல்பாட்டைப் பாதிக்கும். வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடும். பின்னாட்களில், இதுவே வயிறு தொடர்பான பல பெரிய பிரச்னைகளுக்கும் காரணமாகலாம்.

அசிடிட்டி உள்ளவர்கள் கவனிக்க..!

சிலருக்கு வயிற்றில் ஏற்கெனவே சில பிரச்னைகள் இருக்கும். அதாவது, அசிடிட்டி, அல்சர், `இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம்' (Irritable Bowel Syndrom) எனும் அடிக்கடி மலம் கழிக்கத் தூண்டும் பிரச்னை ஆகியவை. இப்படிப்பட்டவர்கள், காலையில் வெறும் வயிற்றில் காபியைக் கையால்கூடத் தொடக் கூடாது. காபி கொட்டையில் இருக்கும் `காஃபின்’ என்கிற பொருளும் சில அமிலங்களும் சிறுகுடலைக் கடுமையாக பாதித்து, எரிச்சலை ஏற்படுத்திவிடும்.

ஹார்மோன் அலெர்ட் !

நம் உடல் 24 மணி நேர சுழற்சிக்கு உட்பட்டது. இதை ஆங்கிலத்தில், `சர்கேடியன் ரிதம்’ (Circadian Rhythm), `சர்கேடியன் சைக்கிள்’ (Circadian Cycle) என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது, நம் உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நேரத்துக்கு, குறிப்பிட்ட சில வேலைகளைச் செய்யும். இந்தப் பணிகளை ஒழுங்குபடுத்துபவை, ஹார்மோன்கள். அவற்றில் கார்ட்டிசால் (Cartisol) என்கிற ஸ்டீராய்டு ஹார்மோன்தான் நம்மை எப்போதும் எச்சரிக்கை உணர்வோடும் விழிப்போடும் வைத்திருக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் ஒரு நாளைக்கு மூன்று முறை உச்சக்கட்ட நிலையில் இருந்து பணியாற்றும். நாம் பயத்தில் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போதும் இந்த ஹார்மோன் உச்சத்தில் இருக்கும். அப்படி ஒரு நாளின் மூன்று முறைகளில் காலையில் 8 மணி முதல் 9 மணி வரைக்கான நேரம், கார்ட்டிசால் செயல்படும் முதல் காலம். அந்த நேரத்தில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது, கார்ட்டிசாலின் செயல்பாட்டைச் சீர்குலைத்துவிடும். இப்படி காபி சாப்பிடுவது தொடர்ந்தால், அந்த ஹார்மோன் அழியும் நிலையேகூட உண்டாகி, உடலுக்கு வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

உடல் வறட்சி உஷார் !

`காலையில் வெறும் வயிற்றில் காபி சாப்பிடுவது, நாளின் பிற்பாதியில் நாக்கு மற்றும் உடலை வறட்சி அடையச் செய்துவிடும்’ என எச்சரிக்கின்றன சில ஆய்வுகள். அதன் காரணமாக, நாம் உடலில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவைக் கடுமையாகப் பாதிக்கும். சரியான அளவில் நம் உடலில் இருந்து வியர்வையாகவோ, சிறுநீராகவோ நீர் வெளியேறவில்லை என்பது, உடலுக்குப் பல பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும்.

வேண்டாமே உயர் ரத்த அழுத்தம் !

`வெறும் வயிற்றில் காபி, உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வழிவகுக்கும்’ என எச்சரிக்கிறார்கள் சில மருத்துவர்கள். உயர் ரத்த அழுத்தம் பற்றிச் சொல்லவே வேண்டாம். சர்க்கரைநோய், இதய நோய்கள் போன்ற மெகா வியாதிகளுக்கு ஆரம்பப்புள்ளியே உயர் ரத்த அழுத்தம்தான். எனவே, காலை காபியா... அதிலும் வெறும் வயிற்றில் காபியா? `நோ’ சொல்லிப் பழகுவோம். `பிறகு, எப்போதான் காபி குடிக்கலாம் பாஸ்?’ என்று கேட்கிறீர்களா? காலை சிற்றுண்டிக்குப் பிறகு 10:00 மணியில் இருந்து 11:30 காபி அருந்த அருமையான நேரம். நம் வழக்கமான உடல் செயல்பாடுகளுக்கு ஊறு ஏதும் விளைவிக்காத அற்புதமான தருணம். அந்த நேரத்தில் காபி குடிக்கலாம்... மணக்க மணக்க!

இளைஞர்களே உஷார்: கோவை காவல்துறை ஆணையரின் சிந்திக்க வைக்கும் எச்சரிக்கை By DIN | Published on : 24th January 2017 01:05 PM

கோவை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், போராட்டத்தின் போது கிடைத்த புதிய நட்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நேற்று முடிவுக்கு வந்த நிலையில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், இணையதளங்களில் வெளியாகும் அனைத்து தகவல்களும் உண்மையானவை அல்ல. அவற்றின் நம்பத்தன்மையை இளைஞர்கள் ஆராய வேண்டும். சமூக தளங்களில் வெளியாகும் தகவல்கள் அனைத்தையுமே இளைஞர்கள் நம்ப வேண்டாம். அவற்றை பரப்பவும் வேண்டாம்.
மேலும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஏராளமானோர் புதிதாக நட்பாகியிருப்பார்கள். அதுபோன்ற நட்பு வட்டத்தில் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சிலர், இளைஞர்களை தொடர்பு கொண்டு தொலைபேசி எண்களைக் கொடுத்து பேசச் சொல்வார்கள். அதுபோன்ற புதிய நட்புகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். பெற்றோர்களும், பிள்ளைகளின் நட்பு வட்டத்தை அறிந்து கவனமாக இருங்கள் என்று தெரிவித்தார்.

'இப்படியொரு அவமானத்தைப் பார்த்ததில்லை!' - மெரினா வன்முறைக்கு விதைபோட்டாரா அமைச்சர்?


சென்னை, மெரினா கடற்கரையில் அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் போலீஸ் நடத்திய அராஜகத்திற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர் மாணவர்கள். ‘அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சருக்கு சொந்த ஊரில் நேர்ந்த அவமானத்தின் காரணமாகவே, போலீஸாரால் உச்சகட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 'இதுவே நிரந்தரத் தீர்வுதான்' என ஆளும்கட்சி தரப்பில் பேசி வருகின்றனர். உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்டோர் நேற்று மாணவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று காலை முதலே மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது.



"மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, காவல்துறை அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். தடியடி, வன்முறை என ஆயுதங்களைப் பிரயோகித்தும் பலன் இல்லாததால், 'யார் வந்து பேசினால், மாணவர்கள் கேட்பார்கள்' என ஆலோசித்து, அதற்கேற்ப தமிழ் உணர்வாளர்களை கடற்கரைக்கு வரவழைத்தனர். அதேநேரம், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் போலீஸார் 'திடீர்' தாக்குதலை நடத்தினர். பெண்கள், இளைஞர்கள் என ஒருவரும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இப்படியொரு தாக்குதலின் பின்னணியில் அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சர்கள் உள்ளனர்" என அதிர்ச்சியோடு விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,

"ஜல்லிக்கட்டு தடையைப் போலவே, ரேக்ளா பந்தயத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வண்டியில் மாடுகளைப் பூட்டிக் கொண்டு நடத்தப்படும் ரேக்ளா பந்தயங்கள் கொங்கு மண்டலத்தில் வெகுபிரசித்தம். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்காகத்தான் மாணவர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் இறங்கின. வரலாறு காணாத மெரினா போராட்டத்தால், அதிர்ந்த முதல்வர் பன்னீர்செல்வம், டெல்லி சென்று ஒருநாள் தங்கியிருந்து அனுமதியைப் பெற்று வந்தார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டைத் திறந்து வைக்க மகிழ்ச்சியோடு பயணமானார் ஓ.பி.எஸ். மாவட்ட அமைச்சர்களும் தங்கள் ஊரில் போட்டிகளைத் தொடங்கி வைக்க ஆர்வத்துடன் கிளம்பினர். 'வாடிவாசலில் ஜல்லிக்கட்டுக் காளைகள் துல்லிக் குதித்து பாய்ந்தோடும்' என பேட்டியளித்த முதல்வரை, கிராமத்திற்குள்ளேயே பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. இந்தத் தகவலை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர் அமைச்சர்கள் சிலர். சேலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டார். இந்நிலையில், ரேக்ளா பந்தயத்தைத் தொடங்கி வைக்க சில அமைச்சர்கள் கிளம்பினர். 'காலையில் ஒன்பது மணிக்கு ரேக்ளா பந்தயங்கள் தொடங்கும்' என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.



ஆனால், 11 மணி கடந்தும் போட்டிகளை நடத்த முடியவில்லை. காரணம். ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதுதான். சொந்த ஊருக்குள்ளேயே தனக்கு எதிராகப் போராட்டம் நடந்ததை அமைச்சரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை முதலமைச்சரிடம் பேசிய அந்த அமைச்சர், 'இத்தனை வருஷமா எம்.எல்.ஏவாக இருக்கிறேன். என்னை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை பேசியதில்லை. என்னையே இரண்டு மணி நேரம் சிறைவைத்துவிட்டார்கள். தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்தார்கள்.

அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? மாவட்டத்திற்குள் வலுவாக இருப்பதால்தான், இவ்வளவு வெற்றிகளை வாங்கித் தர முடிந்தது. இந்த அவமானத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' எனக் கொந்தளிப்புடன் கேட்டார். இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்த முதல்வர் அலுவலக அதிகாரி, 'மினிமம் ஃபோர்ஸ் யூஸ் பண்ணுங்க. தேவையற்ற கலவரத்திற்குக் காரணமாக இருந்துவிட வேண்டாம்' என அறிவுறுத்தினாராம். இதையடுத்து, மெரினாவில் நெருக்கடியைக் கொடுத்த காவல்துறை, மாவட்டங்களின் பல பகுதிகளில் தடியடி பிரயோகத்தை அரங்கேற்றியது. ரேக்ளா பந்தயத்தால் அவமானமடைந்த அமைச்சர் ஊரிலும், பெரும் தாக்குதல் நடந்தது. போராட்டமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது" என்றார் விரிவாக.

"தொடக்கத்தில் இருந்தே, இந்த விவகாரத்தை மென்மையான போக்கிலேயே கையாண்டார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். மெரினாவில் கூட்டத்தைக் கூட அனுமதித்து, கடைசியாக மத்திய அரசிடம் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியைப் போராடி பெற்றது போன்ற, ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் மாநில அரசு இறங்கியது. 'ஆந்திர முதல்வரிடம் 2.5 டி.எம்.சி தண்ணீர் பெற்றுத் தந்தது; ஜல்லிக்கட்டுக்காக போராடி அவசரச் சட்டம் கொண்டு வந்தது' என ஆளுமையுள்ள முதல்வராகக் காட்டிக் கொள்ள முயற்சித்தார் முதலமைச்சர். ஆனால், போராட்டத்தை முடித்து வைக்க கையாண்ட விதமே விமர்சனங்களை உருவாக்கிவிட்டது. இது மாநில அரசின் உளவுத்துறைக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது. குடியரசு தின விழா ஒத்திகைக்காக மெரினா கூட்டத்தைக் கலைத்தாலும், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவசரச் சட்டத்தால் நிரந்தரத் தீர்வு கிடைக்காவிட்டால், மாணவர்கள் மீண்டும் வீதிகளில் அமர்வார்கள். நேற்று திருவல்லிக்கேணி வீதிகளில் போலீஸார் நடத்திய கோரத் தாண்டவத்தை மாணவர்கள் மறந்துவிடவில்லை" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

'அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே, மாணவர்கள் போராட்டத்தின் நகர்வு தெரியவரும்' என்கின்றனர் போராட்டக் குழுவினர்.

போலீஸார் விரட்டியடித்த பின்னரும் மெரினாவில் உறுதியுடன் இருக்கும் இளைஞர்கள் சொல்வது என்ன?



மெரினா கடற்கரை விவேகானந்தர் நினைவு இல்லம் அருகில் 7 நாட்களாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வந்த இளைஞர்களை 23 -ம் தேதியான நேற்று, காலை 7.30 மணிக்கு போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதில் வெளியேற்றும்போது, போலீஸாரின் சமரசத்தை ஏற்க மறுத்த இளைஞர்கள் சுமார் ஆயிரம் பேர் கடற்கரையில் தங்கியிருந்து போராடி வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சந்தித்தோம்.

கடற்கரையில் போராடிக்கொண்டிருக்கும் வேலூர் கணேஷ் பேசும்போது, ‘அமைதியாக சென்று கொண்டிருந்த மெரினா போராட்டத்தைப் போலீஸார் திசைதிருப்பி விட்டு விட்டனர். கலைந்துபோக...சிறிது நேரம் கேட்டோம். அதற்குள் இளைஞர்களை விரட்டி அடித்தனர். ஆண்களுக்கு அடிபட்டதைப் பற்றிகூட நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், பெண்களிடம் சிறிதும் இரக்கம் இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக போலீஸார் நடந்து கொண்டார்கள். ஆண் போலீசார் நடந்து கொண்ட அத்துமீறல்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இப்போதுதான் பெண்கள் போராட்டக்களத்துக்கு வருகிறார்கள்.

அவர்களிடம் இப்படியா? நடந்து கொள்வது. ஆண்கள் என்றால் எங்கே அடிபட்டிருக்கிறது என்று காட்டி நியாயம் கேட்க முடியும். ஆனால் பெண்களால் அப்படி முடியுமா? திருவல்லிக்கேணி கோஷா ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களை நேரில் சென்று பாருங்கள். அப்போது தெரியும் அவர்கள் படும் வேதனைகள். ஜல்லிக்கட்டுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. எங்களுக்குத் தேவையான உணவுகளை, இங்குள்ள மக்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். மீனவ மக்களின் ஆதரவு எங்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்தப்போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்று உறுதியாக சொன்னார்.



அக்கூட்டத்தில் ஒருவராக இருந்த டாக்டர் நந்தகுமார் நம்மிடம் பேசும்போது, ‘காலையில் இருந்து எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், இங்கு இருந்தவாறே எங்களது போராட்டத்தை தொடர்கிறோம். எங்களது முக்கிய கோரிக்கையான, காளைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் இங்கிருந்து வெளியேற மாட்டோம்’’ என்கிறார் முனைப்புடன். போராட்டகளத்தில் இருந்த பெண் ஒருவர் கூறுகையில், ‘‘ஜல்லிகட்டுக்காக இங்கே இருக்கிறோம். எங்களுடைய கோரிக்கை அது ஒன்றுமட்டும்தான். அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தைகளோடு குடும்பம், குடும்பமாக எங்களுக்கான அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் இவ்விடமே இருந்து போராடி வருகிறோம். வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்’’ என்றார் உணர்வுபூர்வமாக.



ஜான் என்பவர் பேசுகையில் ‘‘ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வரும் வரை எங்களது போராட்டம் ஓயாது. இங்கு இருந்து வெளியேவும் போகமாட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 9 -வது அட்டவணையில் ஜல்லிக்கட்க்ச் சட்டத்தைச் சேர்க்க வேண்டும். ஏனெனில், நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பதுதான் ஒன்பதாவது அட்டவணையாகும். தமிழ்நாட்டில் 69 சதவிகிதம், இடஒதுக்கீடு வழங்கப்படும் சட்டம் 9-வது அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளதால்தான், நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதையே, ஜல்லிகட்டுக்கும் மத்திய அரசு செய்துதரவேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே இனி, எந்த காலத்திலும் யாராலும் ஜல்லிக்கட்டுக்கு, தடைவிதிக்க முடியாத நிலை உருவாகும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழங்குகள் அனைத்தையும் அரசு, ரத்து செய்ய வேண்டும். இந்த ஜல்லிக்கட்டுக்காக போராடி, இறந்துபோனவர்கள் குடும்பத்துக்கு நஷ்டஈடும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும். அதேபோல்,போராட்டக்காரர்களின் சேதமடைந்த வாகனங்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும், நிவாரண உதவியும் வழங்கப்படவேண்டும். இதை உடனே முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிக்க வேண்டும். அடுத்த நிமிடமே இந்த போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது என்று நினைத்து, இவ்விடத்தில் இருந்து கொண்டாடிவிட்டு கிளம்பிவிடுவோம்’’ என்று சொன்னார்.

போலீஸ் பிளான் என்ன?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வெளியேற 24-ம் தேதி மாலை வரை, காலஅவகாசம் புதிதாக கொடுத்துள்ளனர். அதன் பிறகும் போராட்டக்காரர்கள் கலையவில்லை என்றால், அவர்களை எப்படியாவது அங்கிருந்து வெளியேற்றுவது என்று திட்டம் வகுத்துள்ளனர் போலீஸார். இதற்கிடையில், தமிழக காவல் துறையின் கடலோர காவல்படையினர், கடலோரத்தில் இரவும் பகலும் ரோந்து சுற்றி வருகிறார்கள். போலீஸார் தங்களை கண்காணித்து வருகிறார்கள் என்பதையும், அங்கிருக்கும் இளைஞர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும், ‘தமிழன்டா’ என்ற கோஷம் மேலோங்கி இருக்கிறது.

அந்த தமிழ் உணர்வுதான், அனைவரையும் அங்கு, அவர்களை உட்காரச் செய்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...