Monday, February 27, 2017

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு: அரசு உரிய தகவல்களை தெரிவிக்காததால் பெற்றோர் அவதி

ச.கார்த்திகேயன்

அரசு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கான ஆதார் பதிவு தொடர்பாக உரிய தகவல்களை தெரிவிக்காததால் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 6 கோடி பேருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு இ-சேவை மையங்களில் செயல்பட்டு வரும் ஆதார் நிரந்தர மையங்கள் மூலமாக ஆதார் பதிவு செய்யப்படுகிறது.

தற்போது குடும்ப அட்டை களில் குழந்தைகள் உள்பட அனைவரின் ஆதார் விவரங் களையும் அளிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், 5 வயதுக்கு உட்பட்ட குழந் தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை? யாரை? எங்கு? அணுகுவது என்பது குறித்து அரசால் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், தங்கள் குழந்தைகளின் ஆதார் விவரங் களை நியாயவிலைக் கடைகளில் பதிவு செய்ய முடியாமல், அங்கு கிடைத்து வந்த பொருட்கள் முழுமையாக கிடைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதார் நிறுவ னமான யூஐடிஏஐ இடம் அங்கீ காரம் பெற்ற சில தனியார் நிறுவனங்கள், எந்தவித அறி விப்பும் இன்றி, ஆங்காங்கே 5 வயதுக்கு உட்பட்ட குழந் தைகளுக்கு ஆதார் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பதிவு, சம்மந்தப்பட்ட பகுதியில் எத்தனை நாட்கள் நடைபெறும் என்ற விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக் காததால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவுக்கு பெற்றோர்கள் குழந்தைகளுடன் குவிந்து விடுகின்றனர்.

இது தொடர்பாக வியாசர் பாடியைச் சேர்ந்த அசோக் கூறும்போது, சில தினங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு நடைபெற்றது. அது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. முகாம் ஒருநாள் மட்டுமே நடைபெறும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அங்கு அதிக அளவில் கூடிவிட்டனர். அதனால் குழந்தைகள் நெரி சலில் சிக்கி அழும் நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் தங்கள் குழந் தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய விரும்புகின்றனர். ஆனால் எங்கு செல்வது என்றே தெரிய வில்லை. அதனால் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.
எனவே அரசே ஆதார் பதிவை மேற்கொள்ள வேண்டும். ஆதார் பதிவு செய்யும் நேரம், நாள் குறித்து முன்கூட்டியே அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக யூஐடிஏஐ நிறுவனத்தின் துணை இயக்குநர் அசோக் லெனினிடம் கேட்டபோது, யூஐடிஏஐ தலைமையகம் சார்பில் நாடு முழுவதும் சில தனியார் நிறுவனங்களுக்கு, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யும் உரி மத்தை வழங்கியுள்ளது. அவர் கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக பல நிறுவனங் களுக்கு, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யும் உரிமம் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் மார்ச் மாதம் பணிகளைத் தொடங்குவார்கள். அப்போது அவர்கள் முறையான அறிவிப்பை செய்து, ஆதார் பதிவு மேற்கொள்வார்கள் என்றார்.

இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டபோது, தமிழகத்தில் மொத்தம் 5 வயதுக்கு உட்பட்ட 67 லட்சம் குழந்தைகள் உள்ள னர். எங்கள் சார்பில் 3 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் மார்ச் 2-வது வாரம் முதல் முறையாக அறிவிப்பு செய்து, பள்ளிகள், அங்கன்வாடி மையங் களில் குழந்தைகளுக்கு ஆதார் பதிவு மேற்கொள் வார்கள்.

மாவட்ட வாரியாக பணிகள் ஒதுக்க அந்தந்த மாவட்ட ஆட்சி யர்களுக்கும், சமூகநலத்துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன என்றார்.

குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பது எப்படி?
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பொருத்தவரை அவர்களின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்படாது. குழந்தைகளின் பிறப்புச் சான்று, பெற்றோரின் ஆதார் எண் ஆகியவை டேப்லெட் கணினியில் பதிவு செய்து, அதன்மூலம் குழந்தைகளின் படம் எடுக்கப்பட்டு, பின்னர் ஆதார் அட்டை வழங்கப்படும். குழந்தை 5 வயதை நிறைவுசெய்த பின், அந்த குழந்தையின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் பதிவு செய்யப்படும்

இனிது இனிது... பிளஸ் 2 தேர்வு எழுதுவது இனிது!

டி.எல்.சஞ்சீவிகுமார்



பிளஸ் 2 பொதுத் தேர்வு என்றதும் பலருக்கும் இனம் புரியாத காய்ச்சல் ஒன்று எட்டிப்பார்க்கும். அது காய்ச்சல் அல்ல, கற்பிதம். தேர்வு பயத்தை விரட்டி அடிப்பது எப்படி என்பதை முதலில் கண்டறியுங்கள். தேர்வு சமயத் தில் உங்களை எந்தெந்த விஷயங்கள் பயமுறுத்துகின்றன என்பதை முதலில் பட்டியலிடுங்கள். அந்த விஷயங்களை மனதில் இருந்து விலக்கி வையுங்கள்.
நாளை தேர்வு எனில் முதல் நாள் இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படித்ததையே படிப்பதை நிறுத்துங்கள். தூக்கம் கெட்டால் புத்தி கெடும். மூளையின் நியூரான் சோர்வடைந்து அங்குமிங்கும் நினைவலைகள் அலை பாயும். நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் படித்தாலும் படிப்பதை ரசித்துப் படி யுங்கள். புரிந்துக்கொண்டுப் படியுங் கள். ஆராய்ந்துப் படியுங்கள். இப்படி படித்தீர்களேயானால் வேதியியல், கணிதம் முதலான பாடங்கள் சுவாரஸ்ய மான சதுரங்க விளையாட்டைப்போல உங்களை உள்ளே இழுத்துக்கொண்டு போய்விடும்.

தேர்வு அறைக்குச் செல்லும் முன்பு நண்பர்களுடன் ஆலோசிக்க வேண்டாம். நமக்கு தெரியாத கேள்வி, பதில் குறித்து நண்பர்கள் கூறினால் பதற்றம் தொற்றிக் கொள்ளும். தெரிந்த பதிலைக்கூட பயம் மறக்கடித்துவிடும். அன்றைய தினம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை தனிமையாக இருங்கள். புத்துணர்வுடன் இருங்கள். மனதைத் தெளிவாக வையுங்கள். தேவையற்ற பேச்சுக்களையும், சுய சந்தேகங்களையும் தவிருங்கள். இதனால், நினைவு சக்தி அதிகரிக்கும். கண்ணை மூடி 4 முறை மூச்சை ஆழ்ந்து இழுத்து, மெதுவாக மூச்சை விடுவதன் மூலம் புத்துணர்வு பெறலாம்.

தேர்வு அறையில் கேள்விகளை படிக்க அளிக்கப்படும் 5 நிமிடத்தைப் பதற்றம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தெளிந்த மனதுடன் புரிதலுடன் கேள்வித்தாளைப் படியுங் கள். தேர்வுக்கு செல்லும்போது பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேலைத் தேடி அலைவதைத் தவிர்க்கவும். பெற்றோர் இதற்கு உதவ வேண்டும். பெரும்பாலும் மாதிரித் தேர்வில் பயன்படுத்திய பேனாவையே பொதுத் தேர்விலும் பயன் படுத்துங்கள். பழைய பேனா தவ றில்லை. புதுப் பேனா மக்கர் செய்தால், தேவையில்லாத குழப்பம் தானே. தெரியாத கேள்விக்கான விடையை எழுத வேண்டாம்.
குளிர் காலத்தில் இருந்து கோடைக் காலம் ஆரம்பிக்க உள்ளதால், உடல் நிலையைப் பராமரிப்பது அவசியம். படிப்பே கதி என்று வீட்டில் முடங்கியிருக் காமல், தினமும் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி செல்லுங்கள். தேர்வு அறையில் தலைவலி, ஜலதோஷம் உள்ளிட்ட உடல் உபாதைகளைத் தவிர்க்க உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அடிக்கடி காஃபி, சாக்லெட், குளிர்பானங்கள் அருந்த வேண்டாம். காஃபியிலுள்ள கோக்கைன் ரசாயனம் மந்தநிலையை ஏற்படுத்தக் கூடியது.

நேரம் திட்டமிடல் அவசியம்!

இன்ன பாடத்துக்கு இத்தனை நாட்கள் என்று ஓர் அட்டவணையை தயார் செய்து உங்கள் மேஜையில் ஒட்டிக் கொள்ளுங்கள். பொதுவாக ஆங்கிலம், தமிழ், பிரெஞ்ச், ஹிந்தி ஆகிய மொழிப் பாடங்களுக்கு தலா 2 நாட்கள் ஒதுக்கிக்கொள்ளுங்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு தலா 4 நாட்கள் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். மீதி உள்ள நாட்களை எந்த பாடத்துக்கு ஒதுக்கிப் படிக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டமிடுதலில் முக்கியமான விஷயம்.

கடைசித் தேர்வும் முக்கியம்
உதாரணத்துக்கு, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியலுக்கு கூடுதலாக ஒரு நாளை எடுத்து படிக்கலாம். ஏனெனில், மருத்துவப் படிப்புக்கு கடும்போட்டி நிலவி வருகிறது. அதேபோல, பிற பிரிவு மாணவர்களும், அவர்கள் படிக்கக் கூடிய மேற்படிப்புக்கு ஏற்ற பாடத்துக்கு ஒருநாள் கூடுதலாக ஒதுக்கிக்கொண்டு படிக்க வேண்டும். இதுதவிர மீதம் உள்ள நாட்களில், எந்தெந்த தேர்வுக்கு இடையே விடுமுறை இல்லாமல் தேர்வு வருகிறது என்பதைப் பார்த்து, அந்த தேர்வுக்கான பாடத்தைப் படிக்க கூடுதல் நாட்களை ஒதுக்கலாம்.
ஆண்டுதோறும் பொதுத் தேர்வில், கடைசித் தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் அக்கறை காட்டுவதில்லை. முந்தைய தேர்வுகள் எழுதிய களைப்பில், நாளை முதல் பள்ளி நாட்கள் நிறைவடைகிற உற்சாகத்தில் கொண்டாட்டம் மற்றும் அலட்சியம் கலந்த மனோபாவத்தில் இறுதித் தேர்வை எதிர்கொள்கின்றனர்.

இறுதித் தேர்வு என்பது இறுதிப் போட்டி போன்றது. கடைசி நேர கட் ஆஃபை நிர்ணயிப்பதில் இறுதித் தேர் வுக்கும் பங்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். எனவே, இறுதித் தேர் வில் அலட்சிய போக்கைக் கைவிட்டு, அந்தத் தேர்வுக்கு கூடுதல் முக்கியத் துவம் கொடுத்து, ஆர்வமுடன் படித்தால் கூடுதல் மதிப்பெண் பெறலாம்.

தேர்வுக்கு தயாராகி வரும் நீங்கள் இரவு வழக்கமாக எத்தனை மணிக்கு படித்துவிட்டு படுக்கைக்கு உறங்கப் போவீர்கள் என்கிற நேரத்தை வரை யறுத்துக்கொள்ள வேண்டும். வழக்க மாக நீங்கள் இரவு உறங்கச் செல்லும் நேரம் 10 மணி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், தேர்வுக்காக ஒரு மணி நேரம் கூடுதலாக செல விடுகிறீர்கள். அதாவது, இரவு 11 மணி வரை படித்துவிட்டு உறங்கச் செல்கி றீர்கள். அப்படி எனில் இரவு 10 மணியுடன் படிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஃபார்முலா, வரை படம், ஜாமின்டரி என எழுத்து சார்ந்த பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஏனெனில், வழக்கமாக இரவு 10 மணிக்கு தூங்குவதற்கு பழக்கப்பட்ட நிலையில், அந்த நேரத்துக்கு கண்கள் சொருக ஆரம்பித்துவிடும். இதனைத் தவிர்க்கவே, எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவது அவசியமாகிறது.

தேர்வு அறைக்கு கண்டிப்பாக கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு போக வேண்டாம். அடிக்கடி மணி பார்த்து தேவையில்லாத பதற்றம் அடைவார்கள். தேர்வுத் தாளில் அலங்காரம், ஜோடனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். கேள்விக்கான பதிலை முதலில் எழுதுங்கள். முதல் பிரிவில் உள்ள அனைத்து கேள்வி-பதிலும் எழுதி முடித்த பின், நேரம் இருந்தால் மட்டுமே நீங்கள் எழுதிய பதிலுக்கு தேவையான இடங்களில் அடிக்கோடு இடுவதும், வண்ணம் தீட்டுவதையும் வைத்துக் கொள்ளலாம்.

இரண்டு வரியில் இடைவெளி
ஒரு கேள்விக்கான பதிலை எழுதி முடித்தப் பின்பு, இரண்டு வரிகள் எழுதுவதற்கு தேவையான இடங்களை விட்டு, அடிகோடு போடுங்கள். ஏனெனில், கடைசி தருணத்தில் முதலில் எழுதிய பதில்களுக்கான முக்கிய குறிப்புகள் மனதில் தோன்றும். அப்போது, ஏற் கெனவே விட்டு வைத்துள்ள இடத்தில், பதிலுக்கான முக்கியக் குறிப்புகளை எழுத வசதியாக இருக்கும்.
கணிதம், அறிவியல் பாடங்களில் வரைபடங்கள் மிகவும் நேர்த்தியாகவும், கோடு பிசகாமலும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வரை படத்துக்கான தோற்றம், வரைபடம், குறிப்புகள் சரியானதாக இருந்தாலே முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்கிறது விதிமுறைகள். அதற்காக கிறுக்கி வைக்க வேண்டும் என்பதில்லை.

கட்டம் கோணையாக இருக்கிறதே என்று மதிப்பெண்கள் குறைக்க போவதில்லை. ஸ்கேலை வைத்துக் கொண்டு நேராக கோடு போடுகிறேன் என நேரத்தை வீணடிக்க வேண்டாம். கையாலே கோடு போட்டு, சரியான விடை எழுதுங்கள்.

தேர்வு அறையை விட்டு வெளியே வந்ததும், அடுத்த தேர்வுக்கான பாடத்தை படிப்பதில் மட்டுமே அக்கறை செலுத்த வேண்டும். நடந்து முடிந்த தேர்வைப் பேசி பயனில்லை. நண்பர்களுடன் விவாதம் செய்து நேரத்தை வீணாக் காதீர். தேர்வு ஆரம்பித்து முடியும் வரை ஒவ்வொரு நொடியையும் உங்கள் பாடத்துக்கானதாகவும், தேர்வுக் கானதுமாக பயன்படுத்திக் கொள்ளுங் கள். உங்கள் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும்!

பெற்றோர் செய்ய வேண்டியவை
பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கும்போது பெற்றோர் வீட்டு பிரச்சினைகளை பேச வேண்டாம். குடும்ப சச்சரவுகளை தவிர்க்கவும். தொலைக்காட்சி சீரியல்களையும் தவிர்க்கவும். அதேபோல் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் வகையில் பேச வேண்டாம்.

கர்நாடகா மாநிலம் யாதகிரியில் பிணமாக கிடந்தவர் ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி

இரா.வினோத்
குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் நிங்கப்பா.

கர்நாடகாவில் யாதகிரியில் இறந்ததாக கருதப்பட்டு, இரவெல்லாம் பிணமாக கிடந்தவர் திடீரென‌ எழுந்து ‘‘பசிக்குது. ஆப்பிள் ஜூஸ் கொடுங்க'' என கேட்டதால் அங்கு அழுது கொண்டிருந்த உறவினர்கள் அல‌றி அடித்து ஓடினர்.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் மட‌லிங்கனாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நிங்கப்பா (57). விவசாயியான இவர் க‌டந்த 16-ம் தேதி இரவு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நிங்கப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த 23-ம் தேதி மருத்துவர்கள் கூறியபோது, ‘‘நிங்கப்பா உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உயிர் பிழைப்பது கஷ்டம். இன்னும் 3 மணி நேரம்தான் உயிரோடு இருப்பார்'' என நேரம் குறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ‘‘நிங்கப்பாவின் ஆசைப்படி அவரது சொந்த வீட்டில்தான் உயிர் போக வேண்டும். எனவே வீட்டுக்கு கொண்டு போகிறோம்'' என கூறி மருத்துவமனையில் இருந்து கிளம்பினர். ஆம்புலன்ஸ் மூலமாக யாதகிரியில் இருந்து மட‌லிங்கனாலா கிராமத்துக்கு கொண்டு சென்றனர். பாதி வழியிலே நிங்கப்பாவின் உடலில் வெப்பம் குறைந்ததால் உறவினர்கள் பதறினர்.

நிங்கப்பாவை பரிசோதித்த ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவமனையின் ஊழியர், ‘‘இப்போதுதான் உயிர் பிரிந்து இருக்கிறது.அவர் இறந்துவிட்டார்'' என அறிவித்தார். இதனால் கதறி அழுத உறவினர்கள், வீட்டுக்கு கொண்டு சென்று படுக்க வைத்தனர். நிங்கப்பா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் ஊர் மக்கள் எல்லாம் கூடி விடிய விடிய அழுதனர்.

அதிகாலை 3 மணியளவில் நிங்கப்பா திடீரென எழுந்து உட்கார்ந்து, ''பசிக்குது. ஆப்பிள் ஜூஸ் கொடுங்க'' என கேட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்தில் அழுது கொண்டிருந்த பலர் பீதி அடைந்து சிதறி ஓடினர். இறந்ததாக கூறப்பட்டவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் அங்கு பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு யாதகிரியில் 17 வயதான குமார் என்ற இளைஞர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. சுடுகாட்டுக்கு கொண்டு சென்றபோது அவர் திடீரென எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. (குறள் 635)

குறள் இனிது: ஆலோசனை சொல்வது யார்?

சோம.வீரப்பன்

ஸ்ரீ ராம் குழுமத்தின் தியாகராசன் ஐயாவுக்கு 2013-ல் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது ஞாபகம் இருக்கா? நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர் 1974ல் தொடங்கிய சீட்டு நிறுவனம் தான் இன்று வாகனக்கடன், காற்றாலைகள், கட்டுமானம், காப்பீடு எனப் பரந்து விரிந்து பிரகாசிக்கிறது!
விக்கிப்பீடியாவையும் அவர்களது ராம் காப்பிடல் வலைதளத்தையும் பாருங்கள். மலைத் துப் போவீர்கள்! இன்று இக்குழுமத்தில் சுமார் 3,000 கிளைகள்,60,000 பணியாளர்கள்! மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையோ 1.2 கோடி.
இவை மட்டுமில்லைங்க. இக்குழுமம் நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு (AUM) ரூ 90,000 கோடியாம். லாபமா. ரூ.2,200 கோடி! ஸ்ரீ ராம் சிட்ஸ் இன்று 22 லட்சம் சந்தாதாரர்களுடனும் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறதாம்! ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனமும் 8.5 லட்சம் வாகன உரிமையாளர்கள் கடன்களுடன் அதன் துறையில் அதே முதலிடம் தானாம்!
நம்ம தியாகராசர் ஐயா கல்லூரியில் படித்தது புள்ளியல்.எந்த வங்கியிலும் பணிபுரிந்த அனுபவம் இல்லை. அப்புறம் எப்படி இப்படி நிதித்துறையில் சக்கை போடு போட்டார்? இது மட்டுமில்லைங்க. ராம் நிறுவனத்தினர் சிறு தொழில்களுக்கும் கடன் கொடுக்கின்றனர். பெரிய வீடுகள் கட்டிக் கொடுக்கின்றனர். மிகப் பெரிய தொழிற்சாலைகள் அமைத்துக் கொடுக்கின்றனர். நான் இன்னும் முடிக்கலைங்க! முதலீட்டிற்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர். உயிருக்கும் உடமைகளுக்கும் காப்பீடு வழங்குகின்றனர்.
இப்படி எப்படிங்க வெவ்வேறு தொழில்களில் அவர்களால் அசாத்திய வெற்றி பெற முடிந்தது? அதற்கு உத்வேகமும் உழைப்பும் போதுமா? ஒவ்வொரு தொழிலிலும் உள்ள நெளிவு சுளிவுகள் வெவ்வேறு ஆயிற்றே? இந்த இமாலய வெற்றியின் இரகசியம்? அசாத்திய வெற்றி பெற்றவர்கள் எல்லோரிடமும் ஏதோ ஓர் அசாத்தியத் திறமை இருக்குமே என்கின்றீர்களா? இவரிடம் இருந்த அந்தத் தனிக் குணம் என்ன? அது என்ன? இந்நிறுவனத்தில் பணிபுரிந்த நண்பர்களிடம் பேசிய பொழுது தெரிந்து கொண்டேன்.
நம்ம தலைவரிடம் ஒரு தனிப் பழக்கம், நல்ல வழக்கம் இருக்கிறது. தனக்கு நல் யோசனைகள் சொல்ல எப்பவும் ஒர் ஆலோசனைக் குழு (Think tank) வைத்து இருப்பார். அதில் பழுத்த அனுபவம் உள்ள அரசாங்க அதிகாரிகள், மூத்த முதலீட்டாளர்கள், சாதித்துக் காட்டிய வங்கியாளர்கள், சிறந்த பொறியாளர்கள் இருப்பார்கள்! அப்புறம் என்ன? 35 வருட நல்ல அனுபவம் உள்ள 10 பேர் இருப்பது அவருக்கு பல ஆண்டுகளின் பல்வேறு வகைப்பட்ட அனுபவத்தின் பலனைக் கொடுக்குமில்லையா?
'உங்களை விடக் குறைவாக விஷயம் தெரிந்தவர்களை எப்பொழுதும் பணியமர்த்தி விடாதீர்கள்' என்கிறார் மால்கம் போர்ஃஸ்! நம்ம தலைவரிடம் சட்ட நடைமுறைகள் தெரிந்த, வியாபார நுணுக்கங்கள் அறிந்த கெட்டிக்காரர்களைக் துணையாக வைத்துக்கொள்ளும் கெட்டிக்காரத்தனம் இருந்தது! பெரும் பலன் தந்தது! அறங்களை அறிந்து, சொல்வன்மை உடையவனாய், எக்காலத்திலும் நாட்டை ஆளும் திறனை அறிந்தவனே அரசர்க்குக் கலந்தாலோசிக்க துணையாவான் எனும் குறள் வர்த்தக ஆளுமைக்கும் பொருந்துகிறதல்லவா?
- somaiah.veerappan@gmail.com

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 'ஆதார்' பெறுவது எப்படி??

வெளிநாடு வாழ் இந்தியர்கள், 'ஆதார்' அட்டை பெறுவதில், சில பிரச்னைகள் நீடித்து வருகின்றன.வெளிநாடு வாழ் இந்தியர்கள், சில காரணங்களால், ஆதார் அட்டையை எளிதில் பெற முடிவதில்லை. முதலில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, ஆதார் அட்டை வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதால்,

அவர்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என, மத்திய அரசு கருதியது; தற்போது, அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை, ஆதார் அட்டை பதிவை, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இங்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆதார் பதிவு செய்வதில், சில பிரச்னைகள் உள்ளன.இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆதார் அட்டை பெறுவதற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், நேரில் வர வேண்டும். இந்திய குடிமக்களுக்கு என்ன நடைமுறைகள் உள்ளனவோ, அவையே அவர்களுக்கும் பொருந்தும். ஆனால், அவர்களது பெயர், 2011 மக்கள் தொகை பட்டியலில் இருப்பது அவசியம்; தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும் இருக்க வேண்டும்.

அதில் பெயர் இல்லாதவர்கள், இ - சேவை மையங்களுக்கு சென்று, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும். பின், அவர்களுக்கு, 'டின்' எனப்படும் அடையாள எண் வழங்கப்படும். அதன் அடிப்படையில், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.அத்துடன், அடையாள சான்று, வயது சான்று மற்றும் முகவரி சான்றுகளுக்கான அத்தாட்சியை இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்துக்கு மழை: விரிவான அலசல்

By DIN  |   Published on : 27th February 2017 11:02 AM  |   
feb27

சென்னை: மிக மோசமான பருவ மழைக் காலத்தைக் கடந்திருக்கும் தமிழகத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பேரானந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரவீன் தனது பேஸ்புக் பதிவில் விரிவான தகவல்களை ஆராய்ந்து எடுத்து பதிவு செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பெய்ய விருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், அதன் மூலம் பூண்டி, புழல் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மார்ச் மாதம் மழை பெய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அந்த நாள் தற்போது வெகு விரைவில் வரவிருக்கிறது. ஆனால், இந்த மழையின் அளவு குறித்து இன்னமும் ஒரு உறுதியான தகவலை சொல்ல முடியாத நிலையிலேயே உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதங்களில் பெய்த மழை வரலாறு
வழக்கமாக தமிழகத்தில் மார்ச் மாதம் சராசரியாக 20 மி.மீ. மழை தான் பதிவாகும். 2008ம் ஆண்டு மார்ச் மாதம் போல எப்போதாவதுதான் இது அதிகமாகும். அப்போது 167 மி.மீ. மழை பதிவானது. இது கடந்த 150 ஆண்டுகளில் மிக அதிகம். அதோடு மார்ச் மாதம் வெள்ளம் ஏற்பட்டதும் அப்போதுதான். ஆனால், 2008 போல மீண்டும் ஒரு முறை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏன் என்றால் அது வாழ்நாளில் ஒரு முறை நிகழும் அதிசயம்.
கடந்த கால வரலாறு (மி.மீட்டர்களில்)
2008 - 166.9
1984 - 82.0
1879 - 76.8
1954 - 67.0
1893 - 62.0
1925 - 61.5
1944 - 57.5
2006 - 54.5
1936 - 52.9
1938 - 50.5
இந்த வரிசையில் 2017ம் ஆண்டு முதல் பத்து பட்டியலில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. அது மார்ச் மாத இறுதியில்தான் உறுதியாகும். நமது எதிர்பார்ப்பு 2006ம் ஆண்டு மழைப் பதிவையாவது இந்த ஆண்டு எட்ட வேண்டும் என்பதே.
சரி சென்னைக்கு வருவோம்.
சென்னையை எடுத்துக் கொண்டால், ஆண்டில் மிகக் குறைவான மழைப் பொழிவு இருக்கும் மாதம் பிப்ரவரி கூட இல்லை. மார்ச் மாதம் தான் என்று சொல்லலாம். சென்னையில் மார்ச் மாதங்களில் வெறும் 5 மி.மீ. மழைதான் பெய்யும். இது சாலையைக் கூட முழுதாக நனைக்காது.
சென்னையில் மார்ச் மாத மழை வரலாறு
2008 - 137.9
1933 - 86.9
1853 - 85.6
1925 - 72.6
1852 - 66.5
1919 - 49.8
1870 - 43.7
1893 - 42.2
1879 - 38.1
1938 - 36.8
சென்னைக்கு மிக அதிக மழை கூட எதிர்பார்க்கவில்லை. 10 முதல் 20 மி.மீ. மழை பெய்தால் கூட மகிழ்ச்சிதான். ஆனால் இது அணைகளின் நீர் மட்டத்தை எந்த வகையிலும் மாற்ற உதவாது.
மார்ச் 3ம் தேதி தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மன்னார் வளைகுடா பகுதியை நோக்கி நகர்கிறது. இதனால், தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா பகுதி மாவட்டங்கள், திண்டுக்கல், திருச்சி, மதுரை, மத்திய மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட தமிழகத்தைப் பொறுத்தவரை வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மழை வாய்ப்பு உள்ளது.
நன்றி: தமிழ்நாடு வெதர்மேன்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியா? நீடிக்கும் குழப்பம்

By வாணிஸ்ரீ சிவக்குமார்  |   Published on : 27th February 2017 01:14 PM  |   
jaya

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியா? இல்லையா? என்ற குழப்பம் நீடிக்கிறது. இதற்கு தொடர்ந்து பல தரப்பில் இருந்து விளக்கம் வந்து கொண்டுதான்  இருக்கிறது.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம்  உறுதிப்படுத்தியது.

எனினும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை என்பதால் அவருக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் அளித்தனர். இருவரும் சேர்ந்து மொத்தம் 563 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை அளித்தனர். மேலும், நீதிபதி அமிதவா ராய் தனியாக ஏழு பக்கத் தீர்ப்பை அளித்தார்.
ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான தண்டனை நீக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருக்கும் கருத்துக்கு பல்வேறு வகையான சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் திமுக, அவரது படத்தை அரசு அலுவலகங்களிலோ, அரசு நிகழ்ச்சிகளிலோ பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில்,அரசியல் விமரிசகர் சுமந்த் ராமன் நேற்று தனது டிவிட்டரில் இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான ஜெயலலிதாவுக்கு (எ1) சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவில்லை, எனவே, சட்டப்படி அவரை உச்ச நீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கவில்லை.
மேலும், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான தண்டனை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது, ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான மேல்முறையீடே தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து சட்ட நிபுணர்களின் கருத்தையும் கேட்டுள்ளேன் என்று  கூறியுள்ள சுமந்த் ராமன், Dr. ராஜேந்திர கோயலின் டிவிட்டர் பதிவையும் ரீ-டிவீட் செய்துள்ளார்.
அந்த பதிவில்,
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் இருந்து நேரடியாக விளக்கம் எடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது,
பாரா 2. இறுதியாக வைக்கப்பட்ட வாதங்களின் நிறைவாக, குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் மரணம் அடைந்துவிட்டதால் சட்டப்படி, அவர் மீதான மேல்முறையீடு நீக்கப்படுகிறது.
பாரா 541. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசு ஊழியர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். எனவே, அவர் மீதான மேல்முறையீடு கைவிடப்படுகிறது. அதே சமயம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
பாரா 542ல். இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, மற்ற குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதற்கு உரிய ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவர் மரணம் அடைந்துவிட்டதால், அவர் மீதான முறையீடு நீக்கப்படுகிறது. அதே சமயம், மற்ற மூன்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்கள் சரியாக நிரூபிக்கப்பட்டிருப்பதால், சிறப்பு விசாரணை நீதிமன்றம் சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஆராய்ந்து அளித்த தீர்ப்பு முழுமையாக உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கங்களை அடிப்படையாக வைத்து, சுமந்த் ராமன் தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் இறந்துவிட்ட நிலையில், மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தீர்ப்பில், ஊழல் தடுப்புத் சட்டத்தின்படி, தண்டனை விதிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட அரசுப் பதவி வகித்தவர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது, உயிரிழந்து விட்டால் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு தண்டனை விதிக்க முகாந்திரம் உள்ளது என்று ஏற்கெனவே 2014-இல் உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு பெங்களூரு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபரான ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கான தண்டனை நீக்கப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவர் மீதான தண்டனை உறுதிப்படுத்தப்படுவதால், அவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைந்து மீதமுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவர்களுக்கான மீதமுள்ள தண்டனைக் காலத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கையை பெங்களூரு தனி நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...