Monday, February 27, 2017

மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்துக்கு மழை: விரிவான அலசல்

By DIN  |   Published on : 27th February 2017 11:02 AM  |   
feb27

சென்னை: மிக மோசமான பருவ மழைக் காலத்தைக் கடந்திருக்கும் தமிழகத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பேரானந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரவீன் தனது பேஸ்புக் பதிவில் விரிவான தகவல்களை ஆராய்ந்து எடுத்து பதிவு செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பெய்ய விருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், அதன் மூலம் பூண்டி, புழல் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மார்ச் மாதம் மழை பெய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அந்த நாள் தற்போது வெகு விரைவில் வரவிருக்கிறது. ஆனால், இந்த மழையின் அளவு குறித்து இன்னமும் ஒரு உறுதியான தகவலை சொல்ல முடியாத நிலையிலேயே உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதங்களில் பெய்த மழை வரலாறு
வழக்கமாக தமிழகத்தில் மார்ச் மாதம் சராசரியாக 20 மி.மீ. மழை தான் பதிவாகும். 2008ம் ஆண்டு மார்ச் மாதம் போல எப்போதாவதுதான் இது அதிகமாகும். அப்போது 167 மி.மீ. மழை பதிவானது. இது கடந்த 150 ஆண்டுகளில் மிக அதிகம். அதோடு மார்ச் மாதம் வெள்ளம் ஏற்பட்டதும் அப்போதுதான். ஆனால், 2008 போல மீண்டும் ஒரு முறை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏன் என்றால் அது வாழ்நாளில் ஒரு முறை நிகழும் அதிசயம்.
கடந்த கால வரலாறு (மி.மீட்டர்களில்)
2008 - 166.9
1984 - 82.0
1879 - 76.8
1954 - 67.0
1893 - 62.0
1925 - 61.5
1944 - 57.5
2006 - 54.5
1936 - 52.9
1938 - 50.5
இந்த வரிசையில் 2017ம் ஆண்டு முதல் பத்து பட்டியலில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. அது மார்ச் மாத இறுதியில்தான் உறுதியாகும். நமது எதிர்பார்ப்பு 2006ம் ஆண்டு மழைப் பதிவையாவது இந்த ஆண்டு எட்ட வேண்டும் என்பதே.
சரி சென்னைக்கு வருவோம்.
சென்னையை எடுத்துக் கொண்டால், ஆண்டில் மிகக் குறைவான மழைப் பொழிவு இருக்கும் மாதம் பிப்ரவரி கூட இல்லை. மார்ச் மாதம் தான் என்று சொல்லலாம். சென்னையில் மார்ச் மாதங்களில் வெறும் 5 மி.மீ. மழைதான் பெய்யும். இது சாலையைக் கூட முழுதாக நனைக்காது.
சென்னையில் மார்ச் மாத மழை வரலாறு
2008 - 137.9
1933 - 86.9
1853 - 85.6
1925 - 72.6
1852 - 66.5
1919 - 49.8
1870 - 43.7
1893 - 42.2
1879 - 38.1
1938 - 36.8
சென்னைக்கு மிக அதிக மழை கூட எதிர்பார்க்கவில்லை. 10 முதல் 20 மி.மீ. மழை பெய்தால் கூட மகிழ்ச்சிதான். ஆனால் இது அணைகளின் நீர் மட்டத்தை எந்த வகையிலும் மாற்ற உதவாது.
மார்ச் 3ம் தேதி தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மன்னார் வளைகுடா பகுதியை நோக்கி நகர்கிறது. இதனால், தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா பகுதி மாவட்டங்கள், திண்டுக்கல், திருச்சி, மதுரை, மத்திய மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட தமிழகத்தைப் பொறுத்தவரை வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மழை வாய்ப்பு உள்ளது.
நன்றி: தமிழ்நாடு வெதர்மேன்

No comments:

Post a Comment

NEWS DIGEST

NEWS DIGEST  SC : Can bar overqualified person from job Sometimes overqualification becomes a disqualification. At a time when highly qualif...