Tuesday, February 28, 2017

சீமைக் கருவேல மரம் வளர்த்தால் தண்டனை: சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவு

By DIN  |   Published on : 28th February 2017 05:11 AM  |    
maduraicourt
சீமைக் கருவேல மரங்களை வளர்க்கத் தடை விதிக்கும் சட்டத்தை இரண்டு மாதங்களில் நிறைவேற்றுமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவை ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 90 சதவீத சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 10 சதவீத மரங்களையே அகற்றியிருக்க வாய்ப்பு உள்ளது. சில மாவட்டங்களில் இப்பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களின் தீமைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை வளர்க்கத் தடை விதிக்கவும், மீறினால் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் சட்டத்தை 2 மாதங்களில் தமிழக அரசு இயற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, 15 நாள்களுக்குள் அகற்றவும் உத்தரவிட்டனர்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகங்களுக்கு நீதிபதிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எப்போது வேண்டுமானாலும் திடீர் ஆய்வு மேற்கொள்வர் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இளைஞர்களுக்கு வைகோ அழைப்பு

இவ்வழக்கில் ஆஜரான பின்பு மதிமுக பொதுச்செயலர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக ஆட்சியில் தான் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டது. ஆனால், இப்போது இதை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்துப் பேசி வருகிறார். அவரது இந்தச் செயலை மன்னிக்க முடியாது. தற்போது மீத்தேன், ஷேல் கேஸ் சேர்ந்த கலவையான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் துடிக்கிறது. இந்தியாவின் நலனுக்காக தமிழகம் தியாகம் செய்ய வேண்டும் என்று பாஜக-வின் இல.கணேசன் அறிவுரை கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் உயர தமிழகத்தை பலியாக்க முடியாது. மத்திய அரசின் இந்த நாசகாரத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளிலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...