Friday, December 28, 2018


வருமான வரித்துறை விவகாரம் ராமமோகன ராவ் மனு தள்ளுபடி

Added : டிச 28, 2018 01:20



சென்னை, வருமான வரி வழக்கில், சாட்சிகள் குறுக்கு விசாரணைக்கு அனுமதி கோரி, முன்னாள் தலைமை செயலர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ் தாக்கல் செய்த மனு:என் மகன் விவேக், தனியாக வணிகம் செய்கிறார். 'எஸ்.ஆர்.எஸ்., மைன்ஸ்' என்ற நிறுவனத்துடன், சீனிவாசலு என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்த வணிகத்தில், என் மகனின் தொடர்பு பற்றி, சீனிவாசலு வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து, என் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினர். அதில், நான் குறுக்கிடவில்லை. அதிகாரிகள் கடமையாற்ற, எந்த இடையூறும் இன்றி அனுமதித்தேன். சோதனைக்கு பின், என் பெயரையும், வழக்கில் சேர்த்துள்ளனர்.வருமான வரித்துறை எந்த வாக்குமூலத்தை நம்பியதோ, அதை அளித்த சீனிவாசலுவிடம், குறுக்கு விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரினேன். அதற்கு, வருமான வரி துறை துணை ஆணையர் முதலில் அனுமதி அளித்தார். பின், சீனிவாசலு பிறழ் சாட்சியாக மாறியதால், குறுக்கு விசாரணை மேற்கொள்ள, என்னை அனுமதிக்கவில்லை.எனவே, வருமான வரித்துறை நம்பியுள்ள சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய, என்னை அனுமதிக்கும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, பி.டி.ஆஷா முன், விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறை சார்பில், வழக்கறிஞர், ஏ.பி.சீனிவாஸ் ஆஜராகி பதில் அளித்தார். இதையடுத்து, வருமான வரித்துறை துணை ஆணையர் பிறப்பித்த உத்தரவில் தவறில்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

மலரினும் மெல்லிது...

By முனைவர் அருணன் கபிலன் | Published on : 28th December 2018 01:34 AM |

மனிதனின் உணர்வுகளில் மிகவும் நுண்மையானது - மென்மையானது காமம் என்னும் உணர்வேயாகும். எல்லா உயிர்களுக்குமே பொதுவான இந்த உணர்வு மனிதனுக்கு மட்டும் ஐம்புல நுகர்ச்சியாக அறிவுடன் இணைந்திருக்கிறது.

இந்த உணர்வு நன்மையா தீமையா என்பதை பெற்றோரின் மனநிலையில் இருந்தே அறிந்துகொள்ள முடியும். இயல்பாக குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவத்திற்குள் அடியெடுத்து வைக்கும் தங்கள் குழந்தைகளின் காம உணர்வினைக் கண்டறிந்து, பக்குவப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்க்கு உண்டு. இது அத்தனை வெளிப்படையாக அமைந்துவிடாது.
கிராம வழக்கில் இன்றும் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன் என்பார்கள். பிள்ளைகளுக்கு அந்த உணர்வினைப் புரியச் செய்வதற்கு - பக்குவப்படுத்துவதற்குத் தங்களால் நேரடியாக முடியாமலும், ஆனால் அது குறித்த விளக்கங்களைப் புகட்ட வேண்டியும் அவர்கள் படுகிறபாடு - முறைப்படுத்த மேற்கொள்ளுகிற சிரமங்கள் உணர்ந்தவர்களுக்கே புரியும்.
ஒரு காலத்தில் சொல்லித் தெரிவதில்லை இக்கலை என்று சொல்லப்பட்ட காம உணர்வு இன்றைய காலகட்டத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கும் அளவுக்கு வெளிப்படைத் தன்மையாகிவிட்டது, அறிவு - அறிவியல் வளர்ச்சியின் உதவியினாலேயாகும். ஆனாலும், முன்னெப்போதும் இல்லாத பாலியல் வன்முறைகளும் அதிகரித்திருப்பது இது குறித்த புரிதலை அவசியப்படுத்துகிறது.

புரிந்தும் புரியாமலும் இருக்கிற தன் குழந்தையோடு தொலைக்காட்சியில் பொழுது போக்கிக் கொண்டிருக்கிற தந்தை ஒருவர், குறிப்பிட்ட ஒரு விளம்பரம் வருகிற வேளையில் அதனைத் தன் குழந்தை பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, சமையலறைக்குச் சென்று தண்ணீர் எடுத்து வா என்கிறார். அவருடைய கணிப்பு அந்த உணர்வினைப் புரிந்து கொள்ளும் பக்குவம் தன் பிள்ளைக்கு வரவில்லை என்பதே. அந்தப் பிள்ளையும் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து தருகிறது. இப்போது மீண்டும் அதே விளம்பரம் வருகிறது. தந்தை பிள்ளையைப் பார்க்கிறார். அதற்குள் முந்திக்கொண்டு பிள்ளை வேகமாகக் கேட்கிறது, நான் போய் மீண்டும் தண்ணீர் கொண்டு வரட்டுமா? என்று. இங்கு யார் யாரைச் சரியாகக் கணித்திருக்கிறார்கள்?
தன் பிள்ளைகளின் வளர்ச்சியை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கண்காணித்து வளர்க்கிற பெற்றோருக்கு பிள்ளைகளின் பருவ வயது மட்டும் பெரும் பொறுப்பைத் தந்து விடுகிறது. வேண்டாத பண்பு என்றும் காமத்தைச் சொல்லிவிட முடியாது. ஆனால், அது மட்டும்தான் வாழ்க்கை என்றும் இருந்து விடக்கூடாது என்கிற இரட்டை மனநிலையில் தங்கள் பிள்ளைகள் சரியான புரிதலைப் பெறவேண்டும் என்று அவர்கள் தவிக்கிற தவிப்பு வார்த்தைகளால் கூறுவதற்கு இயலாதது.
காமம் மட்டுமல்ல, எந்த ஒன்றையும் மறைக்க மறைக்க அதன் மீது விருப்பம் பெருகும். அதேவேளையில், பழகப் பழகப் புளித்துப் போவதும் உண்டு.
தன் மகன் துறவு மேற்கொண்டு விடுவான் என்று பயந்துபோய் உலகத்தில் இருக்கிற அத்தனை சுகங்களையும் அரண்மனையில் குவித்து, துயரத்தின் நிழல்கூட அவனை அண்டவிடாமல் செய்வேன் என்று இன்பச் சிறைக்குள் அடைத்து வைத்த சுத்தோதனர், சித்தார்த்தனிடம் தோற்றுப்போக நேர்ந்தது. வாழ்வின் பொருள் இந்த உணர்வினால் மட்டும் கிடைப்பதில்லை என்று வெறுத்து உதறிவிட்டு, நடுநிசியில் அரண்மனையிலிருந்து கிளம்பிப்போய் புத்தனாகி விட்டார் அந்த மகன்.

உலகத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் காமமே என்று கருத்து கொண்டு தன் மகனுக்கு அந்த உணர்வு தெரியாமலே வளர்க்க வேண்டும் என்று கருதிய விபாண்ட முனிவரின் மகன் கலைக்கோட்டு முனிவர் என்ன ஆனார்? முடிவில் அரசன் மகளையே காதலித்து மணந்து கொண்டார்.
உலக இன்பங்களில் முதன்மையானது என்றும், அறங்களுள் போற்றுதற்குரியது என்றும் கூறப்படும் இந்த உணர்வு கடவுட் பண்புக்கு இணையானது என்று கருதுவாரும் உளர். அதனால்தான் வாத்ஸாயனரும் கொக்கோகரும் இதனை முறைப்படுத்தி இலக்கணம் வகுத்துத் தந்தனர்.
ஆனால், இதன் முறைமை கெடுகிறபோது அதுவே விகாரமாகி விடுகிறது. காமம் இரண்டுக்கும் இடையிலான நடுநிலைப் பண்பாக இருத்தல் வேண்டும்; காரணம் அது உடல் சார்ந்தது மட்டுமன்று, உளமும், அறிவும், மரபும் சார்ந்தது.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி விட்டு இறையருளே தனக்கு வேண்டும் என்று துறந்தவர்கள் பேறு பெற்றார்கள்.
என்ன கேட்டாலும் உடனே தருவதற்குச் சிவபெருமானே காத்துக் கொண்டிருக்கும் பேறு பெற்றிருந்தும், ராவணேஸ்வரன் அதைப் பெரிதாகப் போற்றாமல், காமத்தில் சிக்குண்டு அழியாப் பழி
பெற்றான்.

திருவள்ளுவர் அறம், பொருள் என்னும் வரிசையில் இன்பமாகிய காமத்தையும் சுட்டத் தவறவில்லை. அதில், காமத்தை மட்டுமே தனித்துப் பேசாது தமிழ், மரபாகிய இல்லறத்தின் பெருமையை, பெண்மையின் சக்தியை விளக்கிக் கூறுகிறார். அதற்கு அவர் கையாளும் உவமை ஆழ்ந்த பொருளுடையது. மலரினும் மெல்லிது காமம்; சிலர் அதன் செவ்வி தலைப்படு வார் என்று நுண்மைப்படுத்துகிறார்.
காம உணர்வு என்பது மென்மையான மலரைப் போன்றது. மலரை நுகரத்தான் வேண்டும்; ஆனால், உணர்வின் உந்துதலால் கசக்கியோ, வலிந்தோ, தின்றோ அதன் மணத்தை நுகர்ந்து உணர முற்படுவது அறிவீனம். மேலும், மலர் மலராகவே இருப்பதற்காகத் தோன்றவில்லை.
அது மலர்ந்து சுரந்து, காயாக இறுகிப் பின்னர் விளைந்து முழுமையாய்க் கனிந்து நிறைந்து வேரிலிருந்து பெற்ற மரபெனும் விதையைத் தன்னுள் பொதித்து விளங்க வேண்டும் என்பதுதான் அதன் உட்பொருள்.
காமம் என்பது துய்ப்புணர்வு மட்டுமல்ல. மரபினைப் பெருக்குகிற மானுடத் தவம். ஆதலால், அதனை மலரை நுகரும் பண்பு போல் அணுகுக என்று தன் பிள்ளைகளாகிய உலக மக்களுக்கு அறிவுறுத்தினார் திருவள்ளுவர். ஆனாலும் என்ன பயன்? சிலர்தானே அதன் செவ்வி தலைப்படுகிறார்கள்!

இரக்கம் இல்லா இதயங்கள்...

By வெ. இன்சுவை | Published on : 28th December 2018 01:35 AM |


இப்போதெல்லாம் கொலை செய்வது என்பது அல்வா சாப்பிடுவது போல எளிதாகி விட்டது. யாரைக் கொலை செய்ய வேண்டும் என்று அடையாளம் காட்டிவிட்டு, பணத்தையும் கொடுத்து விட்டால் போதும், காரியம் கச்சிதமாக முடிந்து விடும். கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளது ஒரு கும்பல். அதற்குப் பெயர் கூலிப்படை. மனிதர்களிடையே மனிதம் மரத்துப் போய் விட்டது.

கொலையும், கொள்ளையும் சர்வ சாதாரண நிகழ்வுகளாகி வருகின்றன. கூலிப்படையை ஏவி கணவன் கொலை, கூலிப்படையை ஏவி மனைவி கொலை, கூலிப்படையை ஏவி கௌரவக் கொலை போன்ற செய்திகள் பழகிப்போய் விட்டன. அவற்றை வெறும் செய்திகளாகத்தான் பார்க்கிறோமேயொழிய, அவற்றின் பின் உள்ள வலியையும், வேதனையையும் யாரும் உணர்வதில்லை. ஆளைக் கொல்ல கூலிப்படையை அனுப்பிவிட்டு அந்தக் கொலை செய்யும் பாவம் தன்னைச் சேராது; கொன்றவர்களைத்தான் சேரும் என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்களோ? தெரியவில்லை.
கௌரவக் கொலைக்கு ஒரு விலை. அரசியல் கொலைக்கு ஒரு விலை, கணவன், மனைவி, காதலன், காதலிக்கு ஒரு விலை என்றுள்ளது. காரணம் இதுவும் ஒரு தொழிலாகி வருகிறது!

இவர்களுக்கும் மனைவி, குழந்தைகள் குடும்பம் என்று ஒன்று உள்ளதே? அவர்கள் இந்தப் பாவப்பட்ட பணத்திலா உண்டு, உடுக்க வேண்டும்? கணவன் என்ன தொழில் செய்கிறான் என்று மனைவிக்குத் தெரியாமலா இருக்கும்? தெரிந்தும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இவர்களுக்குப் பணம் மட்டுமே முக்கியம்; பாவம் அல்ல. இந்த விஷயத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது வருத்தமளிக்கிறது.

மருத்துவர் பிள்ளை மருத்துவராக ஆசைப்படுவான்; பொறியாளர் பிள்ளை பொறியாளராக ஆசைப்படுவான். தந்தையைப் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதுதானே இயல்பு? அதே போல இவர்களின் பிள்ளைகளும் இவர்களைப் போல கூலிப்படை ஆகிவிடுவார்களோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. அதே போல உன் அப்பா என்ற வேலை செய்கிறார்? என்று இவர்களின் பிள்ளைகளிடம் கேட்டால், கொலைத் தொழில் என்று கூசாமல் சொல்வார்களா? அப்படிச் சொல்லும் அந்தக் காலம் வந்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. 

போகிற போக்கைப் பார்த்தால், பல்வேறு விண்ணப்பப் படிவங்களில் தொழில் என்ற கேள்விக்கு கூலிப்படை என்று எழுதும் காலமும் வந்துவிடும் போலிருக்கிறது. 

சமூகத்தைப் பீடித்துள்ள இந்த நோய் கொடிய புற்றுநோயாக மாறி விடக்கூடும். எந்தக் குற்றப் பின்னணியும் இல்லாத மிக மிக சாதாரணமானவர்கள் கூடக் கூலிப்படை மூலம் காரியத்தை முடிக்கிறார்கள். இவர்கள் எப்படி அவர்களை அடையாளம் காண்கிறார்கள் என்பது புரியவில்லை. 20 வயதுக்கும் குறைவானவர்கள் கூட கையில் ஆயுதங்களோடு அலைகிறார்கள்; தூக்கு, போட்டுடு, செஞ்சிடு - போன்ற புதிய வார்த்தைகள் பேச்சு வழக்கில் உலா வருகின்றன.
உலகில் வாழ்வதற்குப் பொருள் வேண்டும் என்பது உண்மை; ஆனால், நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும். பகை உணர்ச்சி, பழி வாங்குதல், என்று ஒவ்வொருவரும் ஆயுதத்தைக் கையில் எடுத்தால் என்னாவது? கொலை செய்வதற்குப் பணம் வாங்குகிறார்கள். அந்தப் பணத்தில் பல குடும்பங்களின் அழுகையும், சாபமும், மரணமும் அடங்கி இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்.

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா முகசாயல் குழந்தைகளுக்கு வருகிறது. இவர்களுக்கு இருக்கும் சில பரம்பரை வியாதிகளும் குழந்தைகளுக்கும் வருகின்றன. தாத்தா, அப்பா சேர்த்த சொத்து அந்தக் குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய் சேர வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அப்படியானால், மூதாதையர் செய்யும் பாவமும் அவர்களின் குழந்தைகளுக்குத்தானே சென்று சேரவேண்டும்? பாவ வழியில் பணத்தைச் சேர்த்து பாவத்தை பிள்ளைகளுக்குத் தர வேண்டுமா என்ன?
இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் செய்யும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக அவர்கள் மாவட்ட சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். வருங்காலங்களில் அவர்கள் தீய வழிகளில் மனதைச் செலுத்தாமல் இருக்க பயிற்சி தரப்படுகிறது. அங்கு அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வி வழங்கப்படுகிறது.
எதிர்காலத்தில் தவறான பாதையில் செல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்த அந்த சிறார் பள்ளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறார் இல்லத்தில் இருந்து வெளியே வரும்போது, அவர்கள் புதிய மனிதர்களாக மாறியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லை என்பதே உண்மை. பிஞ்சிலேயே பழுத்து விடுகிறார்கள். சிறை அனுபவமும், அந்த அவமானமும், சமுதாயத்தின் புறக்கணிப்பும் மீண்டும் அவர்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது. இரக்கம் அவர்கள் இதயத்தில் இருந்து சுத்தமாக வழித்து எடுக்கப்பட்டு விடுகிறது. அதன்பின் பணம் மட்டுமே அவர்களின் குறிக்கோள் ஆகிறது.

அடுத்தவர் வலி, வேதனை, இழப்பு எதுவும் புரிவதில்லை. இவர்கள்தான் எளிதாக கூலிக்குக் கொலை செய்யத் துணிகிறார்கள். கூலிப்படையாக இருப்பது இப்போது சர்வசாதாரணமாகி விட்டது.

இதற்கு சமுதாயமும் ஒரு காரணம். முன்பெல்லாம் கதாநாயகன் என்றால் அதற்கு ஓர் இலக்கணம் உண்டு. ஒழுக்கம் தவறாத உத்தமனாகக் காட்டப்படுவான். பூதக் கண்ணாடி போட்டு தேடினாலும் அவனிடம் ஒரு சிறு குறையைக் கூட காண முடியாது. அந்த அளவுக்கு அப்பழுக்கு அற்றவனாகக் காட்டப்படுவான்.

ஆனால், ஒழுங்கற்ற கேசம், உடை, ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் ரவுடிகள்தான் இன்றைய கதாநாயகர்கள். சாதுர்யமாகப் பிறரை ஏமாற்றுவது, கொலை செய்வது இதெல்லாம் ஹீரோயிஸம் என்று ஆன பின், அதைத்தானே இளைய சமுதாயமும் கற்றுக் கொள்ளும்? நாட்டு நடப்பைத்தானே காட்டுகிறோம் என்று திரைத்துறையினர் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

படத்தின் வன்முறை காட்சிகளைப் பார்த்துப் பழகிப் போய் அது வெறும் சம்பவமாக மட்டுமே மனதில் பதிகிறது. கொலை செய்வது பாவச் செயல் அல்ல என்றும் தோன்றி விடுகிறது. இந்த இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அது அனைவரின் தார்மீகக் கடமை என்பதை உணர வேண்டும்.
சிறுவர்களிடம் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி, அதற்கு அவர்களை அடிமைப்படுத்தி, காசு பார்க்க வேண்டுமா? மேலும், சிறுவர் - சிறுமிகளைத் தவறான பல தீய பழக்கத்திற்கு அடிமையாக்கும் அவலமும் நடக்கிறது. இப்படித் தடம் மாறிப்போகும் தளிர்கள் கொஞ்சம் வளர்ந்ததும் கையில் ஆயுதத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மனசாட்சியாவாது? மண்ணாங்கட்டியாவது? பணம் வேண்டும், நிறைய பணம் வேண்டும். அவ்வளவே அவர்களின் குறிக்கோள்.

ஒரு சிலரின் கொலை வெறிக்கும், பழி வாங்கும் உணர்ச்சிக்கும் இவர்கள் ஆயுதங்களாக்கப் படுகிறார்கள். கூலிப்படை உருவாக்கப்படுகிறது. மென்மையும், ஈரமும், இரக்கமும் வற்றிய கல்லாகிப்போன இதயங்களாக மாற்றப்படுகின்றனர்.

கூலிப்படையை ஏவி கொலை செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பது ஒருவரைப் பழி வாங்குவதில் இல்லை. நமக்குத் தீங்கு விளைவித்தவரையும் மன்னித்து, அன்பு காட்டுவதில்தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது. 

வாழும் நாள்களில் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தேடுவதை விடுத்து, கூலிப்படையைத் தேட வேண்டுமா? வாழ்க்கை மிகச் சிறியது; மிக மிகச் சிறியது. 

அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்
கப்பலில் கடல் நடுவில்
பயணப்படும்போது கிடைப்பதில்லை
எங்கோ படித்த நினைவு. இதுதான் எதார்த்தம். ஓர் உயிரை வதைப்பதா மகிழ்ச்சி! கோபம் கொப்பளிக்கும் போதெல்லாம், கூலிப் படையைத் தேட ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும்? ஒருவரை வெட்டிச் சாய்ப்பதல்ல வீரம்; பிரியும்போது அந்த உயிர் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்? எப்படியெல்லாம் போராடியிருக்கும்? துடித்திருக்கும்? வலியில் அலறியிருக்கும்? கூலிப்படையினர் இதனை யோசிக்க மாட்டார்களா? அவர்களை ஏவியவர்கள் நினைத்துப் பார்க்க மாட்டார்களா?
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

இந்த நான்கில் ஒன்று இருந்தாலும் அங்கு அறம் இருக்காது என்கிறார் திருவள்ளுவர். கொலை செய்யும் மனித இதயங்களை உருவாக்க வேண்டாம்; கேடு கெட்ட சமுதாயத்தைப் படைக்க வேண்டாம். சிதை நெருப்பாய் கனன்று கொண்டிருக்கும் பழி உணர்ச்சியை அன்பால் அணைத்திடுவோம்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
மாவட்ட செய்திகள்

சென்னையில் ‘ஜம்போ சர்க்கஸ்’: அந்தரத்தில் துள்ளி குதிக்கும் சாகச பெண்கள் உடலை வில்லாக வளைத்து கலைஞர்கள் அசத்தல்



சென்னையில் நடந்து வரும் ‘ஜம்போ சர்க்கஸ்’ நிகழ்ச்சியில், அந்தரத்தில் துள்ளி குதித்து இளம்பெண்கள் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடலை வில்லாக வளைத்து தங்கள் திறமையால் பார்வையாளர்களை சர்க்கஸ் கலைஞர்கள் அசத்தி வருகின்றனர்.

பதிவு: டிசம்பர் 28, 2018 03:00 AM

சென்னை,

சென்னை சென்டிரல் அருகேயுள்ள ரெயில்வே மைதானத்தில் ஜம்போ சர்க்கஸ் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு சாகச காட்சிகள் இடம்பெறுகின்றன. 30 ஆண் கலைஞர்களும், 30 பெண் கலைஞர்களும் பல்வேறு அசத்தல் நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

‘லேடர் பேலன்ஸ்’, ‘ரோலர் பேலன்ஸ்’ போன்ற அந்தரத்தில் உயர பறந்து கண் இமைக்கும் நேரத்துக்குள் துள்ளி பறந்து ஒரு கயிற்றில் இருந்து மற்றொரு கயிற்றுக்கு சென்று அசத்தி வருகின்றனர். ‘யுனிசைக்கிளிஸ்ட்’ எனும் நிகழ்ச்சியில் இரும்பு கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டியும் கலைஞர்கள் அசத்துகின்றனர்.

பல வளையங்களை உடலில் கட்டி ஆடுவது, எண்ணற்ற தீபங்களை உடலில் கட்டி நடனமாடுவது, சுழலும் பலகையில் ‘ஸ்கேட்டிங்’ செய்வது, ஏணியில் நடனம் என பார்வையாளர்களுக்கு கலைஞர்கள் விருந்தளிக்கின்றனர். கயிற்றில் தன் உடலை சுற்றி பெண் கலைஞர் ஒருவர் தன் உடலை வில்லாக வளைத்து சாகசம் செய்வது பார்வையாளர்களை மயிர்க்கூச்செரிய செய்கிறது.

இதுதவிர நாய்களின் விளையாட்டுகள், குதிரை சவாரி, கோமாளிகளின் குசும்புகள், மாயாஜாலம் என அரங்கத்தில் உள்ள பார்வையாளர் களை ரசிக்க செய்யும் பல விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன. குறிப்பாக கயிற்றை பற்களால் கடித்துக்கொண்டே கலைஞர்கள் தன் உடலை சுற்றச்செய்வது பார்வையாளர்களை சிலிர்ப்பூட்டுகிறது.

இதுகுறித்து ஜம்போ சர்க்கஸ்-ன் மேலாளர் மது கூறுகையில், “பார்வையாளர்களை ரசிக்க செய்வதற்கான பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என தினசரி 3 காட்சிகள் நடக்கிறது. ரூ.100, ரூ.200, ரூ.300 என கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி 17-ந்தேதி வரை சர்க்கஸ் நடக்கிறது”, என்றார்.
மாவட்ட செய்திகள்

தாம்பரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: டிசம்பர் 28, 2018 05:00 AM
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் அம்பிகா நகர் 1-வது குறுக்குதெருவைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 35). இவர், சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி பிரவீணா(27). இவர்களுக்கு பிரஜித்(9) என்ற மகன் உள்ளான். இவன், அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். ஜெய்கணேஷ்-பிரவீணா இருவரும் காதலித்து, கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஜெய்கணேசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. 10 மாதங்களுக்கு முன்பு சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.

நேற்று முன்தினம் ஜெய்கணேசுக்கு பிறந்தநாள் என்பதால் வீட்டில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடினார். பின்னர் ஜெய்கணேஷ் வெளியில் சென்றுவிட்டார். மகன் பிரஜித், வெளியில் விளையாட சென்றுவிட்டான்.

வீட்டில் தனியாக இருந்த பிரவீணா, திடீரென வீட்டின் உள்அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விளையாடசென்ற பிரஜித், வீட்டுக்கு வந்தபோது தனது தாய் பிரவீணா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அலறினான். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து ஜெய்கணேசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சேலையூர் போலீசார், பிரவீணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரவீணா தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் மதுரையில் இருந்து அவரது உறவினர்கள் ஏராளமானவர்கள் சேலையூர் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்கள் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

பிரவீணாவின் பெற்றோர், கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டனர். பிரவீணாவை அவருடைய அத்தை கலாதான் வளர்த்து வந்தார். 2009-ம் ஆண்டு ஜெய்கணேஷ், பிரவீணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளான்.

2013-ம் ஆண்டு ஜெய்கணேஷ் போலீசில் சேர்ந்தார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்குதேர்வு எழுதி, 2016-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வானார். 10 மாதங்களுக்கு முன்பு ஜெய்கணேசுக்கு சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு பணி மாற்றப்பட்டதால் மாடம்பாக்கத்தில் வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

ஜெய்கணேஷ், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கித்தராமலும், சம்பள பணத்தை மனைவியிடம் சரிவர கொடுக்காமலும் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இதனால் பிரவீணா தற்கொலை செய்து உள்ளார். இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீசில் புகார் செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, “கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பிரவீணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார். பிரவீணாவின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
தலையங்கம்

இலவச பஸ் பாஸ் இன்னும் வழங்கவில்லை



தமிழ்நாட்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளே இருக்கக்கூடாது என்ற வகையில், தமிழக அரசு தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

டிசம்பர் 28 2018, 04:00

தமிழ்நாட்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளே இருக்கக்கூடாது என்ற வகையில், தமிழக அரசு தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. பள்ளிக்கூடங்களுக்கு சென்று படிப்பதற்கு வறுமை ஒரு தடையாக இருந்து விடக் கூடாது என்பதால்தான் சத்துணவு, இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், லேப்–டாப், சீருடைகள், காலணிகள், புத்தக பை, கிரையான்ஸ், வண்ண பென்சில்கள், கணித உபகரண பெட்டி, மலைப்பகுதிகளில் கம்பளிசட்டை, மழைக்கால ஆடை, உறை காலணி, கால் உறை, புவியியல் வரைபடம் என்று பல பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுதவிர, அரசு மற்றும் அரசால் அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள், அரசு கல்லூரி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கும், மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வருவதற்கும் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த பஸ் பாஸ் வழங்கும் திட்டம் 1996–97–ம் ஆண்டில் முதல்–அமைச்சராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது போல, தனியார் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது. இந்த பஸ் பாஸ்க்கான செலவு தொகையை போக்குவரத்துக்கழகங்களுக்கு, போக்குவரத்துத்துறை வழங்கி விடுகிறது. இந்த ஆண்டு 27 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.766 கோடி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு தொடங்கி அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் அரையாண்டு தேர்வு முடிந்துவிட்டது. கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு முடிந்துவிட்டது. ஆனால், போக்குவரத்துக்கழகங்கள், பள்ளிக்கூட மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் இன்னும் வழங்கவில்லை.

இவ்வளவுக்கும் இதுவரை காகித அட்டையில் கொடுக்கப்பட்ட பஸ் பாஸ்க்கு பதிலாக, ஸ்மார்ட் கார்டு கொடுக்க கூடுதல் நிதியும் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ் பாஸ் இல்லாமல் பயணம் செய்ய மாணவர்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சர், சீருடை அணிந்து, அடையாள அட்டையை காட்டினால்போதும். கண்டக்டர் டிக்கெட் கேட்கமாட்டார்கள் என்று அறிவித்திருக்கிறார். ஆனாலும், கிராமப்புறங்களில் உள்ள கண்டக்டர்கள் இதன்படி செயல்படவில்லை. பல இடங்களில் மாணவர்களை கீழே இறக்கி விடுகிறார்கள் என்று புகார் கூறப்படுகிறது. மேலும், புதிதாக சேரும் மாணவர்களுக்கு ஆண்டு தொடக்கத்திலேயே சீருடை வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் அடையாள அட்டை வழங்க தாமதமாகிறது. இந்தநிலையில், பஸ் பாஸ் மட்டுமல்லாமல், அரசு நிதி ஒதுக்கி வழங்கப்படும் பல்வேறு இலவச பொருட்களும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வழங்கப்படாததால், மாணவர்கள் அதன் முழுபயனையும் அனுபவிக்கமுடியவில்லை.

இந்தநிலையை தவிர்க்க, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை போன்ற துறைகள் மிகத்தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வியாண்டு தொடங்கும்போதே பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதுபோல, மற்ற இலவச உபகரணங்களும் வழங்கப்பட்டுவிட வேண்டும். இதுபோல, பஸ் பாஸ் வழங்கப்படுவதும், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் தொடங்கும்போதே வழங்கப்பட்டுவிடவேண்டும். கல்வியாண்டு தொடக்கத்தில் வழங்கப்படாமல், ஆண்டு இறுதியில் பொருட்களை வழங்குவதில் எந்தப்பயனும் இல்லை. எனவே, அடுத்த கல்வியாண்டிலாவது முதல் ஒரு வாரத்துக்குள் அனைத்து இலவச பொருட்களும் வழங்கப்பட்டுவிடும் என்பதை ஒரு கொள்கை முடிவாக அரசு எடுத்துக்கொள்ளவேண்டும்.
மாநில செய்திகள்

முன்பதிவு ஜனவரி 9-ந் தேதி தொடங்குகிறது சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக பொங்கலுக்கு 24,708 சிறப்பு பஸ்கள் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இயக்கப்படுகின்றன




தமிழகத்தில், பொங்கலையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக ஜனவரி 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 24 ஆயிரத்து 708 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

பதிவு: டிசம்பர் 28, 2018 05:45 AM
சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) கொண்டாடப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என அரசு விடுமுறை தினங்கள் வருகின்றன.

இதையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட வசதியாக இந்த ஆண்டு தமிழக அரசு மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பஸ்களையும், சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 சிறப்பு பஸ்களையும் இயக்க முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலான 4 நாட்கள் சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 165 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 24 ஆயிரத்து 708 பஸ்கள் இயக்க போக்குவரத்து நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

கடந்த ஆண்டு சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 4 ஆயிரத்து 275 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர். ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 92 ஆயிரத்து 220 பேர் சிறப்பு பஸ்களில் பயணம் செய்து இருக்கின்றனர். கடந்த ஆண்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் பயணிகள் எண்ணிக்கை சிறிது குறைந்து இருந்தது.

இந்த வருடம் 6 லட்சம் பேர் பயணிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம். சிறப்பு பஸ்களை இயக்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் வருகிற 2-ந்தேதி நடக்கிறது. 9-ந்தேதி முதல் சிறப்பு கவுண்ட்டர்கள் இயங்கும். அன்று முதல் முன்பதிவு நடைபெறும்.

சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும், ஓசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்தும், திண்டிவனம், சிதம்பரம், கும்பகோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் தாம்பரம் மெப்ஸ் பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும், ஈ.சி.ஆர். (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக செல்லும் பஸ்கள் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்தும் புறப்பட்டு செல்லும்.

திருவண்ணாமலை மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து (ரெயில் நிலையம் முன்பு) வழக்கம்போல புறப்படும். மேலும் கோயம்பேட்டில் இருந்தும் திருவண்ணாமலை மார்க்கத்தில் பஸ்கள் இயக்கப்படும். இதுதவிர வெளியூர் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

தனியார் பஸ்களில் கட்டண கொள்ளை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறீர்கள். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் சுமார் 250 பஸ்கள் பயணிகள் வருகையின்றி இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. எனவே தனியார் பஸ்களை விரும்பி தேடிச் செல்வோரை தடுக்க முடியாது. அதேவேளையில் கட்டண கொள்ளை குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்களில் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். பயணிகளுக்கு கட்டணமும் திரும்ப கிடைத்து இருக்கிறது.

பொதுவாகவே தனியார் பஸ்களுக்கு கட்டண வரை முறையோ, வழித்தட வரை முறையோ கிடையாது. பயணி கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கட்டணத்தை உயர்த்துவார்கள். கூட்டம் இல்லையென்றால் குறைந்த கட்டணத்துக்கும் ஓட்டுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...