Friday, December 28, 2018

மாநில செய்திகள்

முன்பதிவு ஜனவரி 9-ந் தேதி தொடங்குகிறது சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக பொங்கலுக்கு 24,708 சிறப்பு பஸ்கள் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இயக்கப்படுகின்றன




தமிழகத்தில், பொங்கலையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக ஜனவரி 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 24 ஆயிரத்து 708 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

பதிவு: டிசம்பர் 28, 2018 05:45 AM
சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) கொண்டாடப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என அரசு விடுமுறை தினங்கள் வருகின்றன.

இதையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட வசதியாக இந்த ஆண்டு தமிழக அரசு மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பஸ்களையும், சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 சிறப்பு பஸ்களையும் இயக்க முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலான 4 நாட்கள் சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 165 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 24 ஆயிரத்து 708 பஸ்கள் இயக்க போக்குவரத்து நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

கடந்த ஆண்டு சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 4 ஆயிரத்து 275 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர். ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 92 ஆயிரத்து 220 பேர் சிறப்பு பஸ்களில் பயணம் செய்து இருக்கின்றனர். கடந்த ஆண்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் பயணிகள் எண்ணிக்கை சிறிது குறைந்து இருந்தது.

இந்த வருடம் 6 லட்சம் பேர் பயணிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம். சிறப்பு பஸ்களை இயக்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் வருகிற 2-ந்தேதி நடக்கிறது. 9-ந்தேதி முதல் சிறப்பு கவுண்ட்டர்கள் இயங்கும். அன்று முதல் முன்பதிவு நடைபெறும்.

சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும், ஓசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்தும், திண்டிவனம், சிதம்பரம், கும்பகோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் தாம்பரம் மெப்ஸ் பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும், ஈ.சி.ஆர். (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக செல்லும் பஸ்கள் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்தும் புறப்பட்டு செல்லும்.

திருவண்ணாமலை மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து (ரெயில் நிலையம் முன்பு) வழக்கம்போல புறப்படும். மேலும் கோயம்பேட்டில் இருந்தும் திருவண்ணாமலை மார்க்கத்தில் பஸ்கள் இயக்கப்படும். இதுதவிர வெளியூர் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

தனியார் பஸ்களில் கட்டண கொள்ளை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறீர்கள். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் சுமார் 250 பஸ்கள் பயணிகள் வருகையின்றி இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. எனவே தனியார் பஸ்களை விரும்பி தேடிச் செல்வோரை தடுக்க முடியாது. அதேவேளையில் கட்டண கொள்ளை குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்களில் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். பயணிகளுக்கு கட்டணமும் திரும்ப கிடைத்து இருக்கிறது.

பொதுவாகவே தனியார் பஸ்களுக்கு கட்டண வரை முறையோ, வழித்தட வரை முறையோ கிடையாது. பயணி கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கட்டணத்தை உயர்த்துவார்கள். கூட்டம் இல்லையென்றால் குறைந்த கட்டணத்துக்கும் ஓட்டுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024