Saturday, December 29, 2018

மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு டாக்டரின் கழுத்தை அறுத்த காற்றாடி மாஞ்சா கயிறு



இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு மருத்துவமனை டாக்டரின் கழுத்தை காற்றாடி மாஞ்சா கயிறு அறுத்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பதிவு: டிசம்பர் 29, 2018 04:15 AM
அம்பத்தூர்,

சென்னை கொளத்தூர் வெங்கடேசன் நகர், அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 36). டாக்டரான இவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை இவர், பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் அயனாவரம் வழியாக கொளத்தூர் சென்று கொண்டிருந்தார். பெரம்பூர் லோகோ பாலம் மீது சென்றபோது, எங்கிருந்தோ பறந்துவந்த காற்றாடி மாஞ்சா கயிறு டாக்டர் சரவணனின் கழுத்தை அறுத்தது.

இதில் நிலைதடுமாறிய அவர், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். மாஞ்சா கயிறு அறுத்ததால் ரத்தம் கொட்டியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், உடனடியாக டாக்டர் சர வணனை மீட்டு ஐ.சி.எப். ரெயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 6 தையல் போடப்பட்டது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவருடைய மனைவி இதயலேகா(32) அளித்த புகாரின்பேரில் ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் சரவணனின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் காற்றாடி எங்கிருந்து பறந்து வந்தது? அதை பறக்க விட்டவர்கள் யார்? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024