Saturday, December 29, 2018

சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை: சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By DIN | Published on : 29th December 2018 03:28 AM |




சிறார்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
18 வயதுக்குக் குறைவான சிறுமிகள், சிறார்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக பல்வேறு பிரிவுகளில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
அந்தத் திருத்தங்களை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், சிறார்கள் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். போக்சோ சட்டத்தின் 4, 5, 6, 9, 14, 15, 42 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்றார்.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை உள்பட கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு போக்சோ சட்டத்தின் பிரிவு 4, 5, 6 ஆகியவற்றில் கொண்டுவரப்பட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
பாலின நடுநிலையுடன் 18 வயதுக்குக் கீழுள்ளவர்களை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது.

இயற்கைப் பேரிடர்களின்போது சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதிலிருந்து தடுப்பதற்கும், சிறுமிகள் விரைவில் பூப்பெய்துவதற்காக மருந்துகளை கொடுப்பதைத் தடுப்பதற்கும் போக்சோ சட்டத்தின் 9ஆவது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இச்சட்டத்தின் 14, 15 ஆகிய பிரிவுகள், சிறார்கள் ஆபாசப் படங்களைத் தடுப்பதற்கு வகை செய்கிறது.

சிறார்களின் ஆபாசப் படங்களை அழிக்காமல் இருந்தால் சிறை தண்டனையுடன், அதிக அபராதமும் அல்லது இரண்டில் ஒன்றோ விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024