Showing posts with label MGR. Show all posts
Showing posts with label MGR. Show all posts

Wednesday, May 4, 2016

எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்!

பட பூஜை ஒன்றில் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் தர் (இடது ஓரம்), நடிகை லதா, அவர் அருகே இயக்குநர் கே.சங்கர்.

எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்!

M.G.R. சொந்தமாக மூன்று படங்களை தயாரித்தார். ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய இரண்டு படங்களை அவரே இயக்கினார். மற்றொரு படமான ‘அடிமைப் பெண்’ படத்தை அவர் இயக்கவில்லை. தானே சிறந்த இயக்குநராக இருந்தும் தனது சொந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வேறு இயக்குநருக்கு கொடுத்தார். அந்தப் பெருமையைப் பெற்றவர் இயக்குநர் கே.சங்கர்.
‘நல்லவன் வாழ்வான்’ படப்பிடிப்பு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தபோது, முதன்முத லாக எம்.ஜி.ஆரை சந்தித்தார் கே.சங்கர். தான் பணியாற்றிய படங்களைப் பற்றி கே.சங்கர் கூறினார். ஒவ்வொரு படத்திலும் சிறந்த காட்சிகளையும் ‘ஷாட்’களையும் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பாராட்ட, இந்த அளவுக்கு தனது படங்களை கவனித்திருக்கிறாரே என்று வியந்துபோனார் கே.சங்கர்.
ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் தான் நடித்த ‘பணத்தோட்டம்’ படத்தை கே.சங்கர் இயக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். சங்கர் அதுவரை எம்.ஜி.ஆர். பாணியிலான படங்களை இயக்கியதில்லை. இந்த தயக்கத்தால், கதையை காரணம் காட்டி படத்தை தட்டிக் கழிக்க விரும்பினார். ஆனால், கதையை மாற்றும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டதால், கள்ள நோட்டு பிரச்சினையை மையமாக வைத்து 18 நாட்களில் தயாரிக்கப்பட்டது ‘பணத்தோட்டம்’ படம்.
‘‘எம்.ஜி.ஆர். படங்களில் வேலை செய் தால் நிறைய குறுக்கீடுகள் இருக்கும். தொந்தரவுகள் இருக்கும் என்று படவுல கில் பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர் நல்ல ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் கேமரா கோணத்தில் கண்டு மகிழ்வார்’’ என்று சங்கர் பின்னர் தனது அனுபவத்தைக் குறிப்பிட்டார். ‘பணத்தோட்டம்’ பட வெற்றிக்குப் பின், சங்கரிடம் எம்.ஜி.ஆர். , ‘‘என் படத்தை டைரக்ட் செய்யத் தயங்கி னீர்களே? இப்போது என்ன சொல்கிறீர் கள்?’’ என்று கேட்டார். அதற்கு சங்கரின் பதில், ‘‘என்னை மன்னித்து விடுங்கள்.’’
பின்னர், ‘கலங்கரை விளக்கம்’, ‘சந்தி ரோதயம்’, ‘குடி யிருந்த கோயில்’, ‘உழைக்கும் கரங் கள்’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்று இரு வர் கூட்டணியில் வெற்றிப் படங்கள் வந் தன. தனது சொந்தத் தயா ரிப்பான ‘அடிமைப் பெண்’ படத்தை இயக்கும் வாய்ப்பை சங்க ருக்கு எம்.ஜி.ஆர். கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பும் பலப்பட்டது. படத்தை ஜெய்ப்பூரில் எடுக்கலாம் என்று யோசனை சொன்னதே சங்கர்தான். அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்.
சாதாரணமாகவே எம்.ஜி.ஆர். செலவு செய்வார். தனது சொந்தப் படம் என் றால் கேட்கவே வேண்டாம். படத்துக்காக மட்டுமின்றி, படப்பிடிப்புக் குழுவினருக் கும் எந்த குறையும் வைக்காமல் தாராள மாக செலவு செய்தார். பாலைவனப் பகுதியில் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் ‘கோக கோலா’ வேனையே கொண்டுவந்து நிறுத்தினார்.
‘‘ஜெய்ப்பூர் அரண்மனையில் ஆறா வது மாடியில் உள்ள மன்னரின் அறையில் காட்சிகளை படமாக்கினால் நன்றாக இருக்கும். ஆனால், தரையில் உள்ள விரிப்புக்கு பதிலாக சன்மைக்கா பதித்து காட்சிகளை எடுத் தால் சிறப்பாக இருக்கும்’’ என்பது சங்கரின் யோசனை. சன்மைக்கா அறிமுக மான சமயம் அது. எம்.ஜி.ஆர். உடனே, டெல் லிக்கு ஆள் அனுப்பி விமானம் மூலம் சன்மைக்காவை வரவழைத்தார். அந்த நாளிலேயே அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். படத்தின் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அரண்மனை யில் தன் செலவிலேயே சன்மைக்காவை பதித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.! ‘ஆயிரம் நிலவே வா…’ பாடலின் இறுதியில் வரும் காட்சிகள் அந்த அறையில்தான் படமாக்கப்பட்டன.
‘கலங்கரை விளக்கம்’ படத்தின் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷ யத்தை எம்.ஜி.ஆரிடம் சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட் டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீங்க?’’ என்றார்.
அதற்கு, ‘‘ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்த ரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டு மின்றி, அவருக்கே சம்பந்தியாக என்னை ஆக்கியது ஐயப்பனின் கருணை’’ என்று சிலிர்த்துப் போனார்.
‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயி லுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரத் துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘‘நிம்மதியாக இருந்த இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.
சங்கர் வீட்டில் மற்றொரு திருமணத் தின்போது, அவருக்கு பண உதவி செய் வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.
சங்கர் நெகிழ்ந்து கூறினார்: ‘‘மகாபார தக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே மற்றவர் களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!’’
- தொடரும்...
படங்கள் உதவி : ஞானம்
பிறருக்கு உதவும் குணமும் மொழி, இன, மாநில எல்லைகளைத் தாண்டி மக்களின் துயரைத் துடைக்க உதவும் மனப்பான்மையும் எம்.ஜி.ஆரின் உடன்பிறந்தவை. ‘அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக அவர் ராஜஸ்தான் சென்றபோது, அங்கு கடும் வறட்சி. மாநில அரசிடம் வறட்சி நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை எம்.ஜி.ஆர். அளித்தார்.

Monday, May 2, 2016

கேரளாவில் பாழடைந்து வரும் எம்ஜிஆர் வீடு

எம்ஜிஆரின் புகழ்பாடி, அவரின் பிரபலத்தை அதிமுக இன்றும் பயன்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் எம்ஜிஆர் சிறு வயதில் வசித்த வீடு, போதிய பராமரிப்பு இன்றி பாழடைந்து வருகிறது.
இலங்கையின் கண்டியி லிருந்து எம்ஜிஆர் குடும்பத்தினர் கேரளத்துக்கு வந்தபோது, அவரது தாயின் பரம்பரை வீடான இங்குதான் குடிபுகுந்தனர். இந்த சிறிய ஓட்டு வீட்டில்தான் எம்ஜிஆர் தனது சிறு வயதைக் கழித்தார். பிற்காலத்தில் தமிழக முதல்வராக இருந்தபோதும் அவ்வப்போது தனது பழைய வீட்டை அடிக்கடி பார்க்க வருவார் எம்ஜிஆர்.
பாலக்காட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த வடவன்னூர் கிராமம்.
இந்த வீடு எம்ஜிஆரின் தாய் சத்தியபாமாவின் உறவினர்கள் வசம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர்கள்தான் வசித்து வந்தனர். பின்னர் அக்குடும்பத் தினர் பாலக்காடு சென்றுவிட்டனர்.
இந்த வீட்டை அங்கன்வாடிக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். எம்ஜிஆரின் 
Inline image 1
பழைய புகைப்படம் தவிர, தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டி ருக்கின்றன. தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அளித்த அதிமுக காலண்டரும் மாட்டப் பட்டுள்ளது.
“இந்த வீடு பராமரிப்பில்லாத தால் பாழடைந்து வருகிறது. தமிழகத்திலிருந்து அதிமுக பிரமுகர்கள் அவ்வப்போது இங்கு வந்து பார்த்தாலும், இது புறக் கணிக்கப்படும் நிலையில்தான் உள்ளது. இது தனியாருக்குச் சொந்தமானது என்பதால், கேரள அரசும் எம்ஜிஆரின் நினைவிடமாக மாற்றுவதில் தயக்கம் காட்டு கிறது” என அங்கவான்வாடி மையத்தின் பகுதி நேர ஆசிரியை எம்.புஷ்பலதா கூறுகிறார்.
“எம்ஜிஆரின் தந்தை மருதூர் கோபாலமேனன், இங்கு அருகி லுள்ள நல்லெப்பிளி கிராமத்தைச் சேர்ந்தவர். கண்டியில் பணி ஓய்வு பெற்ற பிறகு, இங்கு வடவன்னூ ருக்கு வந்துவிட்டார். இங்குதான் சில காலம் வாழ்ந்தனர். அவரின் இறப்புக்குப் பிறகு, எம்ஜிஆரை யும், அவரது அண்ணன் சக்கர பாணியையும் அவர்களின் தாய் கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். கும்பகோணத் தில் வாழ்ந்தபோதுதான், இரு சகோதரர்களும் திரைத்துறையில் நுழைந்தனர்” என சித்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.மயில்சாமி தெரிவித்துள்ளார்.

Saturday, April 30, 2016

எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!

1985-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இருந்து நடராஜர் சிலையை பரிசாக பெறுகிறார் மாண்டலின் னிவாஸ்.

எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!


M.G.R. ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!

கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.

ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.

அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.

1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.

இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




இந்தத் தலைமுறையினர் பலர் அறிந் திராத செய்தி இது. எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையமைப்பாளர் வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் என்றுதான் முதலில் விளம்பரம் வெளியானது. ஆனால், பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 1977-ம் ஆண்டு மார்ச் 5-ல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த ‘நவரத்தினம்’ படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். அவர் இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர். படம் ‘நவரத்தினம்’.

Friday, April 29, 2016

எம்ஜிஆர் 100 | 54 - ரத்தம் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள்! ....தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் என்கிறாரோ? ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

M.G.R. தன் ரசிகர்களை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அதேபோல அவர் மீதும் ரசிகர்கள் உயிரையே வைத்திருந்தனர். உயிருக்கு ஆதாரமான ரத்தத்தைக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் படம் பார்த்த வெறி பிடித்த ரசிகர்களும், உயிரைப் பற்றி கவலைப்படாமல் அவரை பார்க்கத் துடித்த, அளவுக்கு மீறிய பாசக்கார ரசிகர்களும் உண்டு.

எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த ‘நாளை நமதே’ படத்தின் சில காட்சி கள் பெங்களூர் விமான நிலையத் துக்கு உள்ளேயும் வெளியேயும் படமாக் கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம். எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் எம்.ஜி.ஆர். ஒரு கண் வைத்திருப்பார். திடீரென, கேமரா இருந்த இடத்தைத் தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர். மேலே பார்த்தபடி, ‘‘இறங்கு… இறங்கு’’ என்று சத்தம் போட்டார். எல்லோரும் மேலே பார்த்தால், அங்கே ஒரு ரசிகர் மின்சாரக் கம்பத்தில் ஏறிக் கொண்டிருந்தார்.

உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறக்கி அழைத்துவரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரிடம் விசாரித் தார். குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்பவர் அவர். கூட்டம் சூழ்ந்திருந்த தால் அதைத் தாண்டி வரமுடியவில்லை. எம்.ஜி.ஆரை பார்க்க வேண் டும் என்ற ஆவலில் ஆபத்தை உணரா மல் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.

அந்த ரசிகரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., படப் பிடிப்பு நடக்கும் இடத் திலேயே ஒரு நாற் காலி போடச் சொல்லி அவரை உட்காரச் சொன் னார். படப் பிடிப்பு குழு வினருக்கு அளிக்கப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவ தும் நாற்காலியில் அமர்ந்தபடி படப்பிடிப்பைக் கண்டு ரசித்தார் அந்த ரசிகர். படப்பிடிப்பு முடிந்ததும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., 500 ரூபாயையும் அன்பளிப் பாகக் கொடுத்தார். நடப்பது கனவா? நனவா? என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைபெற்றார் அந்த ரசிகர். படப்பிடிப்பை காண வந்த ஏராளமான ரசிகர்களோடும் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எப்போது திரையிடப்பட்டாலும் அரங்கு நிறையும். அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக ஏழை ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை ஆஸ்பத்திரியில் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாங்கி படம் பார்ப்பதாகவும் அடிக்கடி ரத்தம் கொடுப்பது அவர்களுக்கே ஆபத்தாகி விடும் என்றும் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத் துக்கு கடிதம் எழுதினார். இதைத் தடுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஏதாவது செய்யுமாறும் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப் பட்டார். போடிநாயக்கனூரில் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சென்னையில் இருந்து இதற் காகவே போடிநாயக்கனூருக்கு எம்.ஜி.ஆர். சென்றார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் என் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனாலும் உங்களை உடன் பிறப்புகளாக நினைக்கும் நான், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். என் படங்களை பார்ப்பதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.

கூட்டத்தில் இருந்த பலர், ‘‘உங் கள் படத்தை தினமும் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறோம்’’ என்றனர்

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘பணம் இருக் கும்போது பாருங்கள். என்னை நேசிப் பது உண்மையாக இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். பணம் தேவை என்றால் எனக்கு கடிதம் எழு துங்கள். நான் மணியார்டரில் பணம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். கூட்டம் நடந்த மண்டபமே இடிந்துவிழும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

பின்னர், ஏராளமான ரசிகர்கள் பணம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதி, அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களை விட்டு மணியார்டர் மூலம் எம்.ஜி.ஆர் பணம் அனுப்பச் சொன்னார்.

ஒருமுறை ஒரு பத்திரிகையில் ரசிகர் களின் கேள்விக்கு எம்.ஜி.ஆர். பதிலளித் தார். அதில் ஒரு ரசிகர், ‘‘நான் மீண்டும் மீண்டும் உங்கள் படங்களைப் பார்க் கிறேன். எனக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டிருந்தார். ‘மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு முடியமோ அவ்வளவு முறை பாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் வருமானம் எவ்வளவு?’’ என்று நறுக்கென மூன்றே வார்த்தைகளில் பொருள் பொதிந்த கேள்வியையே பதிலாக அளித்தார்.

தனது படங்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்வதையோ, உடலை வருத்திக் கொள்வதையோ எம்.ஜி.ஆர். விரும்பிய தில்லை. தங்களுக்கு பிடித்தமான நடிகர் என்பதைத் தாண்டி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டிய இந்த அக்கறையும் அன்பும்தான், அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் பற்றை ஏற்படுத்தின.

நடிகரும் பத்திரிகையாளருமான சோ ஒருமுறை கூறினார்… ‘‘எல்லா நடிகர் களுக்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு!’’

- தொடரும்...

எம்.ஜி.ஆர். புகழேணி யில் ஏறிக் கொண்டிருந்த போது, 1950-ம் ஆண்டி லேயே மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங் கப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆர். பெயரில் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டன. 1960களில் இவற்றை ஆர்.எம்.வீரப்பன் ஒருங்கிணைத்து ‘எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றங்கள்’ என்று பெயர் சூட்டினார். பிறகு, திமுக தலைமையின் அங்கீ காரத்தோடு, ‘அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்’ உருவானது.

Thursday, April 28, 2016

எம்ஜிஆர் 100 | 53 - உச்சம், தாழ்வு என்பதெல்லாம் ஒரு மயக்க நிலை!

‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

M.G.R. எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றபோதும் பட்டங்களும் பதவிகளும் வந்து குவிந்து, நாடே அவரைக் கொண்டாடியபோதும் அந்தப் புகழையெல்லாம் அவர் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதில்லை. ஏற்றத் தாழ்வுகளை சமமாகவே பாவித்தார்.

ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வாய்ப்புகளுக்காக காத்திருந்தபோது எம்.ஜி.ஆர். துவண்டதுமில்லை. பின்னர், தமிழ் திரையுலகின் சக்கரவர்த்தியாக இருந்தபோது துள்ளியதும் இல்லை.

1968-ம் ஆண்டு ‘பொம்மை' இதழின் ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரை ஜெய லலிதா பேட்டி கண்டார். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கேட்ட கேள்வி இது: ‘‘சினிமா உலகில் நீங்கள் யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்குப் போய்விட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ’’

இந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில், அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மை யார் கதாநாயகியாக நடித்த ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் புலிக்குட்டி பி.எஸ்.கோவிந்தன். அதே போல, நாடக மேடைகளிலும் திரைப் படங்களிலும் நடித்து ‘இந்திய மேடைப் புலி’ என்று பட்டம் பெற்றவர் கே.பி.கேசவன். இவர்களைப் போன்று பல நடிகர்கள் ஒருகாலத்தில் மிகுந்த புகழோடு இருந்தனர்.

‘இரு சகோதரர்கள்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம். அந்தப் படத்தின் கதாநாயகன் கே.பி.கேசவன். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண் டவர். ‘இரு சகோதரர்கள்’ திரைப்படம் சென்னையில் ‘நியூ எல்பின்ஸ்டன்’ திரை யரங்கில் வெளியானது. அந்த தியேட்ட ரெல்லாம் இப்போது இல்லை. படத்தைப் பார்க்க கே.பி.கேச வனும் எம்.ஜி.ஆரும் சென்றனர். இடைவேளையின்போது கே.பி.கேச வனைக் கண்டுகொண்ட ரசிகர்கள் எழுந்து நின்று அவரைப் பார்த்து உற்சாகமாகக் கூச்சலிட்டனர். இதைக் கண்டு திகைத்துப் போன எம்.ஜி.ஆர்., இவ்வளவு ஆதரவும் செல்வாக்கும் உள்ளவரின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோமே என்று மனதுக்குள் பெருமைப்பட்டார்.

ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்க, எம்.ஜி.ஆரும் கே.பி.கேச வனும் படம் முடிவதற்குள் எழுந்து வெளியே வந்தனர். அவர்கள் புறப் படுவதை அறிந்து மக்களும் வந்துவிட்டனர். அவர்களிடம் இருந்து கே.பி.கேசவனை எம்.ஜி.ஆர். பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது, அந்தப் படத்தில் சிறிய வேடத் தில் நடித்திருந்த தன்னை மக் களுக்கு அடையாளம் தெரிய வில்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

சில ஆண்டுகள் கழிந்தன. எம்.ஜி.ஆர். கதாநாயக னாகி புகழ் பெற்றிருந்தார். அவர் நடித்த ‘மர்மயோகி’ படம் சென்னையில் ‘நியூ குளோப்’ திரையரங்கில் திரை யிடப்பட்டது. படத்தைப் பார்க்க எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும் சென்றனர். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். எம்.ஜி.ஆருக்கு பக்கத்திலேயே கே.பி.கேசவன் அமர்ந் திருந்தார். அவரை யார் என்று கூட மக்கள் அறிந்துகொள்ளவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தபோது, மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார் கேசவன். காரில் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் செல்லும்போது மக்களோடு ஒருவராக கேசவனும் நின்று கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆர். தொடர்ந்து, ‘‘கே.பி.கேசவ னின் நடிப்பாற்றல் ‘மர்மயோகி’ படம் வெளியானபோதும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. கலைஞர் களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. கலைஞனைப் பொறுத்த வரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும், தாழ்த் தும்’’ என்று கூறியுள்ளார். இப்படி புகழைப் பற்றி தெளிவான மன நிலையில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

பேரறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது, திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவரும் பல படங்களைத் தயாரித்தவருமான இராம. அரங்கண்ணலும் உடன் சென்றிருந்தார். பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் சென்றனர். அங்கிருந்து காட்சிகளின் அழகை ரசித்துக் கொண்டே அண்ணாவிடம், ‘‘அடேயப்பா, எவ் வளவு உயரத்தில் இருக்கிறோம் அண்ணா? ’’ என்று அரங்கண்ணல் வியப்புடன் கூறினார்.

அதற்கு அண்ணா கூறிய பதிலை எல்லோரும், குறிப்பாக இன்றைய அரசியல் வாதிகள் மனதில் கொள்ள வேண்டும். சிரித்துக் கொண்டே அண்ணா சொன் னார்: ‘‘இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி தரையில் நடக்கப் போகிறோம் அரங்கண்ணல்.’’

அண்ணாவுக்கு இருந்த அதே மன நிலையோடு, உயர்வு வந்தாலும் தாழ்வு வந்தாலும் சமமாக பாவிக்கிற எண்ண ஓட்டத்தோடு எம்.ஜி.ஆர். இருந்தார். ‘உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல் லாம் ஒரு மயக்க நிலை’ என்று கருதி, அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை காட்டியதால்தான், மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். உச்ச நிலையிலேயே இருந்தார், இருக்கிறார், இருப்பார்!

- தொடரும்...

‘நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு நாடகத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு கால்முறிவு ஏற்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததால் படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் 1959-ம் ஆண்டு அவர் நடித்த ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ படம் மட்டுமே டிசம்பர் 31-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் கதையை எழுதி யவர் அண்ணா. வசனம் இராம.அரங்கண்ணல். எம்.ஜி.ஆருடன் நடிகை ஜமுனா இந்த ஒரு படத்தில் தான் நடித்து உள்ளார்.

Wednesday, April 27, 2016

எம்ஜிஆர் 100 | 52 - புரட்சித் தலைவர் வாழ்க!

திருமண விழா ஒன்றில் தனது காலில் விழ முயற்சிக்கும் மணமகனை எம்.ஜி.ஆர். தடுத்து ஆசி கூறுகிறார். அருகே படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலு.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தனது ரசிகர்கள், தொண்டர்களின் சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர். நடிகர் ரசிகர் என்ற தொடர்பையும் தாண்டி தனது ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.

ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.

இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.

சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.

கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.

வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.

எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.

பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.

மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்...

‘‘புரட்சித் தலைவர் வாழ்க!’’

Tuesday, April 26, 2016

எம்ஜிஆர் 100 | 51 - எம்.ஜி.ஆரின் வாரிசுகள்!


‘கன்னித்தாய்’ படத்தில் எம்.ஜி.ஆர்., பேபி ஷகிலா.

M.G.R. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கிடையே முக்கியமான ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருக்குமே நேரடி வாரிசுகள் இல்லை. எம்.ஜி.ஆர். தனது படங்களில் பாடி நடித்த கருத்துக்கள் எல்லாம் பிறகு அவர் வாழ்வில் அப்படியே நடந்துள்ளன. திரையில் அவர் பாடி நடக்காமல் போன பாடல், ‘பணம் படைத்தவன்’ படத்தில் இடம்பெற்ற, ‘எனக்கொரு மகன் பிறப்பான்… அவன் என்னைப் போலவே இருப்பான்…’

சத்யா ஸ்டுடியோவில் ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் ப.நீலகண் டன், ஜெயந்தி பிலிம்ஸ் அதிபரும் படத்தின் தயாரிப்பாளருமான கனகசபை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ப.நீலகண் டன், ‘‘உங்களுக்கு குழந்தை இருந்திருந் தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும். நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷப் பட்டிருப்போம். கடவுள் எங்களுக்கு அப்படிக் கொஞ்சி மகிழும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை’’ என்றார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘என் இரண்டா வது மனைவி சதானந்தவதிக்கு இரண்டு முறை கரு உண்டாகி ‘அபார்ஷன்’ ஆகி விட்டது. அதுகூட எனக்கு பெரிய வருத்தம் இல்லே. நான் கஷ்டப்படற காலத்திலே எங்க அம்மா இருந்தாங்க. இப்போ நான் வசதியா இருக்கும்போது எங்க அம்மா என் கூட இல்லே. கஷ்டத்தை அனுபவிச்சவங்க கொஞ்சம் சுகத்தை அனு பவிக்கவில்லேயே என்பது தான் என் வருத்தம்’’ என்று சொன்னார். கூட இருந்தவர் களின் இதயம் கனத்தது.

ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.

ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட் டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.

பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.

எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வர வில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.

சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.

ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங் கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரி யாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.

எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டோர். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தன்னோடு தொடர்புடைய எல்லோருக்கும் எதையாவது கொடுக்க வேண்டும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் வள்ளல் தன்மையும் அவருக்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தனது ரசிகர்களை ஒவ்வொருவராக எம்.ஜி.ஆர். சந்தித்து, தனித்தனியே அவர்களுக்கு ஏதாவது கொடுப்பது நடக்காத காரியம்.

எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இருந் திருந்தால் இரண்டு மூன்றோ அல்லது நான்கைந்து பேரோ இருந்திருக்கலாம். அவர்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இப்போதோ, ‘எம்.ஜி.ஆரின் வாரிசுகள்’ என்ற பெருமையையும் தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கே வழங்கிவிட்டார் அந்த வள்ளல்.

- தொடரும்...

Saturday, April 23, 2016

எம்ஜிஆர் 100 | 50 - எம்ஜிஆரின் அபார நினைவாற்றல்! தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

நிகழ்ச்சி ஒன்றில் சோ பேசுவதை எம்.ஜி.ஆர். ரசிக்கிறார்.

M.G.R. வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையையும் பார்த்து வியந்தவர்களில், தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமியும் ஒருவர்.
எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். இப்போதும் கூட ‘சோ ஒரு அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல் பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.
‘அடிமைப் பெண்’, ‘ஒளிவிளக்கு’, ‘என் அண்ணன்’ உட்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை மும்பைக்கு சோ சென்றார். வழியில் ஒரு மூதாட்டி சோவைப் பார்த்து, ‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு’’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதை யும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து வியந்துபோனார் சோ.
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’
‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’
எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடை யாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப் பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும் தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘‘எத்தனை பேருக்கு இதுபோன்ற சான்றிதழ் கிடைக்கும்? எனக்குத் தெரிந்து பலருக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை’’ என்று சோ மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
‘அடிமைப் பெண்’ படத்துக்காக ஜெய்ப்பூரில் சோ நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி. தனது டாக்டரை விட்டு சோவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்து ‘‘உடல் நிலை சரியாகும் வரையில் நீங்கள் நடிக்க வேண்டாம்’’என்று எம்.ஜி.ஆர். பரிவுடன் கூறி அவரை கவனித்துக் கொண்டார்.
சோவின் நெருங்கிய நண்பர் நீலு. நாடகங்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்த அவர், ஒருமுறை சென்னை வந்தபோது சோவை சந்தித் தார். ஒரு ஆண்டு கழித்து அன்றுதான் அவர் சென்னை வந்திருந்தார். நீலு சென்றபோது, எம்.ஜி.ஆருடன் சோ படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரிடம் நீலுவை அறிமுகம் செய்த சோ, ‘‘இவர் என்னுடைய நண்பர்’’ என்று கூறினார்.
‘‘இவரை எனக்கு தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்திருக்கறேன்’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும் சோவுக்கும் நீலுவுக்கும் குழப்பம்.
இரண்டு நாட்கள் முன்புதான் எம்.ஜி.ஆர். தலைமையில் சோவின் நாடகம் நடந்தது. ‘அதில் எப்படி நீலுவை எம்.ஜி.ஆர். பார்த்திருக்க முடியும்? இன்றுதானே அவர் சென்னை வந்தார்’ என்பதுதான் அவர்கள் குழப்பத்துக்கு காரணம். தங்கள் குழப்பத்தை எம்.ஜி.ஆரிடமே சோ தெரிவித்தார்.
‘‘இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடகத்தில் இவரைப் பார்த்தேன் என்று சொன்னேனா? போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதும் சோவும் நீலுவும் மயங்கி விழாத குறை. அவ்வளவு அபார மான நினைவாற்றல் எம்.ஜி.ஆருக்கு.
‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு சுவை யான காட்சி. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் வேங்கையன். வில்லன் மனோ கரின் அரச பரிவாரங்களுடன் ஒருவராக வரும் சோவை எம்.ஜி.ஆரின் வீரர்கள் பிடித்துவைத்து அவரை துன்புறுத்த முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சோ, ‘‘வேங்கையனிடம் சொல்லிவிடுவேன்’’ என்று மிரட்டுவார். உடனே, சோவை அவர்கள் விட்டுவிட்டு மன்னிப்பு கேட்பார்கள். அப்போது, சோ சொல்லும் வசனத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். சோ கூறுவார்...
‘‘தலைவன் பெயரை சொன்னவுடன் என்ன ஒரு பயம், பக்தி. தலைவன் என்றால் இவரல்லவோ தலைவன்’’
- தொடரும்...

எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படம் 1976-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி வெளியானது. கிளைமாக்ஸில் எம்.ஜி.ஆரும் மும்பையைச் சேர்ந்த பிரபல சண்டைக் கலைஞர் ஷெட்டியும் மோதும் காட்சி பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் நாடெங்கும் நெருக்கடி நிலை அமலில் இருந்தது. அதனால், சண்டைக் காட்சிகளில் தணிக்கை கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

Friday, April 22, 2016

எம்ஜிஆர் 100 | 49 - ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!


M.G.R. படங்களை ரசிகர்கள் அவருக்காக மட்டுமே பார்க்கக் கூடியவர்கள். என்றாலும், அவரது ரசிகர்களிடமும் சரி; பொதுமக்களிடமும் சரி. எம்.ஜி.ஆருக்கேற்ற பொருத்தமான ஜோடியாக கருதப்பட்டவர்களில் நடிகை சரோஜா தேவிக்கு தனி இடம் உண்டு.

‘கன்னடத்துப் பைங்கிளி’ என்று புகழப்பட்ட சரோஜா தேவி, சில கன்னடப் படங்களில் நடித்திருந்தா லும் தமிழிலும் நடிக்க ஆசைப்பட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்துக் கொண்டிருந்போது, கருத்து வேறுபாடு காரணமாக கதாநாயகியாக நடித்த பானுமதி பாதியில் விலகிக் கொண்டார். ஏற்கெனவே இதுபற்றி குறிப் பிட்டுள்ளோம். பின்னர், கதை மாற்றப் பட்டு சரோஜா தேவி நாயகியானார்.

‘நாடோடி மன்னன்’ படத்தை தானே தயாரித்து, இயக்கி, இரட்டை வேடங் களில் நடித்ததோடு, படத்தில் இன்னொரு புதுமையையும் எம்.ஜி.ஆர். செய்தார். இடைவேளைக்குப் பின், கதைப்படி சரோஜா தேவி இருக்கும் தீவில் நடப்ப தாக காட்டப்படும் காட்சிகளில் இருந்து படம் வண்ணத்தில் இருக்கும். பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் என்ற சிறப் பும் ‘நாடோடி மன்னன்’ படத்துக்கு உண்டு. எம்.ஜி.ஆருடன் நடிக்க ‘திருடாதே’ படத்துக்காகத்தான் முதலில் சரோஜா தேவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், ‘நாடோடி மன்னன்’ படம்தான் முன்னதாக வெளியானது.

‘திருடாதே’ படத்தில் நடித்துக் கொண் டிருந்த சமயத்தில் சீர்காழியில் நாடகத் தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டது. ‘திருடாதே’ படத்தை முதலில் பழம்பெரும் காங்கிரஸ்காரர் சின்ன அண்ணாமலை தயாரித்தார். தன் னால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்துக்கு இங்கே ஒரு உதாரணம்.

கால் முறிவு காரணமாக எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயம். சின்ன அண்ணாமலையை அழைத்தார். ‘‘எனக்கு எப்போது கால் குணமாகி மீண்டும் நடிக்க வருவேன் என்று தெரி யாது. அதுவரை காத்திருந்தால் படத்துக் காக நீங்கள் வாங்கியிருக்கும் கடனுக்கு வட்டியும் ஏறிவிடும். எனவே, படத்தை ஏ.எல். சீனிவாசனுக்கு விற்றுவிடுங்கள். உங்களுக்கு லாபமாக நல்ல தொகை யைத் தரச் சொல்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

கவியரசு கண்ணதாசனின் சகோ தரர் ஏ.எல்.சீனிவாசன். பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். எம்.ஜி.ஆர். கூறியபடி ஏ.எல்.சீனிவாசனிடம் ‘திருடாதே’ படத்தை நல்ல விலைக்கு சின்ன அண்ணாமலை விற்றுவிட்டார். ஏ.எல்.எஸ். பேனரில் படம் வெளி யாகி வெற்றி பெற்றது. சின்ன அண்ணா மலையும் கடன் சுமையில் சிக்காமல் தப்பினார். இப்படி எல்லா விஷயங் களிலும் மற்றவர்கள் நலனை முன்னிறுத் தியே எம்.ஜி.ஆர். சிந்திப்பார்.

‘திருடாதே’ படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை நேரடி யாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு சரோஜா தேவிக்கு கிடைத்தது. படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கண்ணாடித் துண்டுகள் சரோஜா தேவியின் பாதத்தை குத்திக் கிழித்துவிட்டன. வலி தாங்காமல் சரோஜா தேவி துடித்தார்.

அவரது பாதத்தில் குத்தியிருந்த கண்ணாடித் துண்டுகளை அகற்றி தன் கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து கட்டுப்போட்டு முதல் உதவி செய்தார் எம்.ஜி.ஆர்.! அப்போது முதலே எம்.ஜி.ஆர். மீது சரோஜா தேவிக்கு மதிப்பு, மரியாதை மட்டுமல்ல; பக்தியே உண்டு. எப்போது பேட்டியளித்தாலும், நிகழ்ச்சிகளில் பேசினாலும் எம்.ஜி.ஆரைப் பற்றி குறிப்பிடும்போது தனது கொஞ்சு தமிழில் ‘‘என் த(தெ)ய்வம்’’ என்று கூறுவார்.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் எம்.ஜி.ஆர். வசித்த ராமாவரம் தோட் டத்திலும் வெள்ள நீர் புகுந்தது. அவர் பயன்படுத்திய சில பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. அது குறித்து வேதனைப்பட்டு பேட்டியளித்த சரோஜா தேவி, ‘‘எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு அவர் வாழ்ந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். பின்னர், முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி எம்.ஜி.ஆர். வீடு இப்போது புதுப்பிக்கப் பட்டுள்ளது.

முன்பெல்லாம் ‘கெமிஸ்ட்ரி’ என்றால் அறிவியல் பாடத்தின் ஒருபகுதியான வேதியியல் என்றுதான் தெரியும். இப்போது, ‘கெமிஸ்ட்ரி’ என்பதற்கு புதிய அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. அதன்படி பார்த்தால், படங்களில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜா தேவிக்கும் ‘கெமிஸ்ட்ரி’ அற்புதமாக பொருந்தியிருக் கும். ‘படகோட்டி’ படத்தில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட, ‘தொட்டால் பூ மலரும்...’ பாடல் அதற்கு ஒரு உதாரணம்.

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜா தேவி. சிம்லாவில் படப்பிடிப்பு. அப்போது நடந்த பயங்கர சம்ப வத்தை சரோஜா தேவியே பின்னர் கூறியிருந்தார்.

சிம்லாவில் புல்வெளியில் ஒரு காட்சி யில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர். எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய் விழுந்தார். படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர். ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’ என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, அவர் களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல் வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.

அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்தபோதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது. தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே தோன் றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…

‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’

எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!

- தொடரும்...

Thursday, April 21, 2016

எம்ஜிஆர் 100 | 48 - அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்!


M.G.R. திரைப்படத் துறையில் இருந்தபோதும் சரி, ஆட்சியில் இருந்தபோதும் சரி, தனக்கு உள்ள செல்வாக்கை தனது குடும்பத்தார் தவறாகப் பயன்படுத்த அனுமதித்தது இல்லை. அரசு நிர்வாகத்தில் அவர்களது குறுக்கீட்டை விரும்பியதும் இல்லை. தனது உதவியாளர்கள் தவறு செய்தபோதும் அதற்கு பரிகாரம் கண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு நாள் கோட்டைக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவிக்கவும் மனு கொடுக்கவும் அவரது ராமாவரம் தோட்ட வீட்டில் எப்போ தும் கூட்டம் இருக்கும். காரில் எம்.ஜி.ஆர். ஏறும் சமயத்தில், கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென ஓடிவந்து அவரது காலில் விழுந்தார். பதற்றமடைந்த உதவியாளர்கள் அந்த நபரை தூக்கிப் பிடித்தனர். அவரை விட்டுவிடும்படி கூறிய எம்.ஜி.ஆர். அந்த நபரைப் பார்த்து, ‘‘என்ன விஷயம்?’’ என்றார்.

‘‘நான் ஈரோட்டைச் சேர்ந்தவன். உங்களைப் பார்த்து என் குறையை சொல்ல வந்தேன்’’ என்றார் அந்த நபர். ‘‘என்ன குறை?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

அங்கே நின்றுகொண்டிருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்களில் ஒருவரை சுட்டிக்காட்டி, ‘‘இந்த ஆளு என்னை 45 ஆயிரம் ரூபாய் ஏமாத்தி விட்டாருங்க’’ என்று அந்த நபர் விசும்பலுடன் சொன்னார்.

எம்.ஜி.ஆர். சற்று நம்ப முடியாமல் கேட்டார்… ‘‘யாரு?’’

‘‘இதோ இங்கே நிக் கிறாரே, இவர்தாங்க’’ என்று மீண்டும் அந்த உதவியாளரை காண் பித்து சொன்னார் வந்த வர். தொடர்ந்து, ‘‘இன் ஜினீயரிங் காலேஜ்லே சீட் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு 45 ஆயிரம் ரூபாயை வாங்கிட்டு ஏமாத் திட்டாருங்க’’ என்றார்.

கோபத்தில் ரத்த நிற மாக மாறிய முகத்துடன் உதவியாளரை எம்.ஜி.ஆர். பார்த்தார். கருப்புக் கண்ணாடியையும் மீறி அவரது கண்கள் தகிப்பது தெரிந்தது. உண்மையை மறுக்க முடியாததோடு, எம்.ஜி.ஆரின் கோபமும் சேர, உதவியாளர் சப்தநாடியும் ஒடுங்கி சிலை போல நின்றார்.

புகார் சொன்னவரை பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘சொன்ன மாதிரி சீட் கிடைச்சிருந்தால் என்கிட்ட வருவீங்களா? இல்லை, பணம் கொடுக்கும் போது என்னைக் கேட்டுவிட்டு கொடுத்தீங் களா?’’ என்று கோபம் அடங்காமல் கேட்டார். பதிலளிக்க முடியாமல் வந்த வர் மவுனமானார். ‘‘உங்க அட்ரஸை கொடுத்துவிட்டு போங்க’’ என்று அவரை அனுப்பிவைத்தார். பொது மக்கள் எல்லாரும் சென்றபிறகு அந்த உதவியாளரை எம்.ஜி.ஆர். அழைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டார். ‘‘ஏன் இப்படி செஞ்சே? உன்னாலே எனக்கில்லே கெட்ட பேரு. நீ பண்ணின காரியத்தாலே என்னை இல்லே வந்து கேட்கிறான்’’ என்று சத்தம்போட்டு அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டார்.

அப்போது, சட்டப்பேரவை நடந்து கொண் டிருந்த சமயம். எதிர்க்கட்சித் தலைவர் கருணா நிதி. அவருக்கு இந்த விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டது. மறுநாளே இந்தப் பிரச் சினையை சட்டப்பேரவையில் எழுப்பினார். ‘‘முதல்வரின் உதவியாளர் ஒருவர், இன்ஜினீ யரிங் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ஒருவரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தாராமே?’’ என்று கேட்டார்.

முதல்வர் எம்.ஜி.ஆர். எழுந்தார். எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதியைப் பார்த்து, ‘‘நீங்கள் கூறுவது உண்மைதான். சம்பந்தப் பட்ட உதவியாளரை நேற்றே பதவியில் இருந்து நீக்கிவிட்டேன். பணத்தை இழந்தவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தாகிவிட்டது.’’ என்று கூறினார்.

தனது வீட்டில் நடந்த விஷயம் வெளியில் தெரிந்து விட்டதே என்று எம்.ஜி.ஆர். நினைக்கவில்லை. குற்றச்சாட்டை மறுக் கவோ, சப்பைக்கட்டு கட்டவோ இல்லை. நடந்த விஷயத்தையும் அதற்கு பரிகாரம் காணப்பட்டதையும் தெளிவாக சொல்லி விட்டார்.

தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏகபோக சக்கரவர்த்தியாக இருந்த நிலையில், தனது அண்ணன் சக்ரபாணி நடிகராக இருந்தபோதும், தான் நடிக்கும் படங்களில் சக்ரபாணிக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரையும் அவர் வற்புறுத்தியதில்லை. தயாரிப்பாளர்கள் தாங்களாக விரும்பினால் எம்.ஜி.ஆரின் அண்ணனாகவோ, தந்தையாகவோ நடிக்க சக்ரபாணியை ஒப்பந்தம் செய்வார்களே தவிர, எம்.ஜி.ஆர். கட்டாயப்படுத்தியதில்லை.

சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் சில படங்களில் நடித்தார். அவரையும் கூட, தனது செல்வாக்கை பயன்படுத்தி திரையுலகில் முன்னேற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததில்லை.

உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவரது குடும்பத்தினர் சிலர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனே, ‘அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும் குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந் தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ரா யத்தை அறிந்து நடக்க வேண்டும்’ என்று 13-6-86 தேதியிட்டு முக்கிய அறிவிப்பை முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

அந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளிவந் தது. தன் குடும்பத்தார் அரசு நிர்வாகத்தை பயன் படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வதை எம்.ஜி.ஆர். ஒருபோதும் அனுமதித்த தில்லை. பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் இப்போதைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு 2014-ல் அறி வித்தது. பிரதமர் மோடி, டெல்லியில் தெருவை சுத்தம் செய்தார். இதை ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்திலேயே எம்.ஜி.ஆர். கூறியிருப்பார். சேரிப் பகுதியில் வசிக்கும் எம்.ஜி.ஆர்., சுகாதாரத்தையும் தூய்மையை யும் வலியுறுத்தி அந்தப் பகுதியில் தெருவை கூட்டி சுத்தம் செய்வார். அப்போது, ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…’ பாடல் இடம் பெறும். அந்தப் பாடலில் வரும் அர்த்தம் நிறைந்த வரிகள் இவை…

‘தெருத் தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு

ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்

தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட் டத்தை அமல்படுத்தினார். மீனவர்களுக்கும் நெசவாளர் களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தார்.

எம்ஜிஆர் 100 | 47 - உண்பது, உறங்குவது போல கொடுப்பதும் அவரது இயல்பு!


M.G.R. பிறருக்கு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் கையில் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார். அப்போதுதான் அவருக்கு நிம்மதி. உண்பது, உறங்குவது போல, கொடுப்பதும் அவருக்கு இயல்பானது.

‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு எம்.ஜி.ஆர். சென் றிருந்தார். அங்கிருந்த பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இதை அறிந்து ராணுவத்தினர் அவருக்கு வர வேற்பு அளித்தனர். பின்னர், தங்களின் ராணுவ நலச் சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டு கோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவர்தான் எங்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று பழக்கமில்லையே. ராணுவ நலச் சங்கத்துக்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரான மணியனிடமும் படப் பிடிப்பு செலவுக்கு வைத்திருந்ததைத் தவிர பெரிதாக தொகை இல்லை.

அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு ‘‘கடனாக கிடைக்குமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு தொழிலதிபர், ‘‘தாராளமாக. ஆமாம், அப்படி என்ன தேவை உங்களுக்கு?’’ என்று வினவினார். எம்.ஜி.ஆர். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தொழிலதிபர் அசந்துபோய்விட்டார். ‘கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே?’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை எம்.ஜி.ஆரிடமும் சொன்னார்.

‘‘தவறாக நினைக்காதீர்கள். ராணு வத்தினர் விரும்பி உங்களை அழைக் கிறார்கள். ஏதாவது தொகை கொடுக்க வேண்டுமென்றால் கொடுங்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா?’’ என்றார். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.

‘‘நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித் துக்கொண்டு பாதுகாப்பாக இருப் பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர்தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை திரும்பியதும் தருகிறேன்’’ என்று தொழிலதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வேகமாகச் சென்றுவிட்டார். பிறகு தொழிலதிபரிடம் மறுப்பேது? அவர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்.ஜி.ஆர். வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர்.

காஷ்மீரில் இன்னொரு சுவையான, ஜில்லென்ற சம்பவம். எம்.ஜி.ஆர். தங்கியிருந்த அதே ஓட்டலில் இன்னொரு பகுதியில் அவரது உதவியாளர்களும் தங்கியிருந்தனர். அந்த ஓட்டலில் உணவு வகைகள் மட்டுமின்றி ஐஸ்கிரீமும் தனிச்சுவையுடன் இருக்கும். ஒரு நாள் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும் ஓட்டல் பணியாளரிடம் ஐஸ்கிரீம் பற்றி எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் விசாரித் தனர். விதவிதமான ஐஸ்கிரீம்கள் பட்டி யலை சொல்லிய பணியாளர் அதன் விலைகளையும் சொன்னவுடன் எம்.ஜி.ஆரின் உதவியாளர்களுக்கு ஐஸ் கிரீம் மீதான ஆசையே போய்விட்டது.

மறுநாள் படப்பிடிப்பு முடிந்து இரவு உணவுக்குப் பின் தங்கள் அறையில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் படுத்திருந்தபோது, அழைப்பு மணி ஒலியை கேட்டு கதவைத் திறந்தனர். பெரிய தட்டில் வகை வகையான ஐஸ்கிரீம் களோடு வந்த பணியாளர் ஒருவர், உள்ளே வைத்துவிட்டுச் சென்றார். நாம் ஆர்டர் கொடுக்காத நிலையில் யாருடைய அறைக்கோ செல்ல வேண்டிய ஐஸ்கிரீம்கள் தங்களுக்கு வந்ததாக நினைத்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள், ‘வந்தவரையில் லாபம்’ என்று சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம்களை காலி செய்தனர்.

மறுநாள் காலை படப்பிடிப்பில் உதவியாளர்களை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி, ‘‘என்ன, நேற்றிரவு ஐஸ்கிரீம் அனுப்பினேனே, சாப்பிட்டீர்களா?’’

உதவியாளர்களுக்கு அதிர்ச்சி...குழப்பம். “வந்தது... நன்றாக இருந்தது” என்று ஒருவர் தட்டுத் தடுமாறி ஒருவழியாகக் கூறிவிட்டார்.

‘‘வேறு யாருடைய அறைக்கோ செல்ல வேண்டியது, உங்களுக்கு வந்துவிட்டது என்று நினைத்தீர்களா?’’ என்று அடுத்த ஏவுகணையை கேள்வியாக எம்.ஜி.ஆர். வீசினார்.

உதவியாளர்களின் உடல் இரவில் சாப்பிட்ட ஐஸ்கிரீமை விட ஜில்லிட்டது. ‘‘இல்லை...’’ என்று மென்று விழுங்கினர். தனக்கே உரிய புன்னகையுடன் எம்.ஜி.ஆர். போய்விட்டார்.

விஷயம் என்னவென்றால், ஓட்டல் பணியாளர்களை எம்.ஜி.ஆர். அழைத்து தன்னுடன் வந்திருக்கும் எல்லோரும் என்ன வேண்டுமென்று கேட்டனர் என்று விசாரித்து, அவரவர்கள் கேட்ட உணவு வகைகளை தன் செலவில் அனுப்பச் சொல்லியிருக்கிறார்.

இதை அறியாத எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதியும் மற்றவர்களும், ‘‘இந்த அதிசய மனிதருக்கு எப்படித்தான் பிறர் மனதில் உள்ளது தெரிகிறதோ?’’ என்று சொல்லிச் சொல்லி வியந்தனர்.

ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் ‘ரகசிய போலீஸ் 115’. எம்.ஜி.ஆரின் ஸ்டைலான நடிப்பில் பாடல், சண்டைக் காட்சிகள் ரசிகர் களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவுக்கு தங்க வளையலை எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். அது அவரது கைக்கு சரியாக பொருந்தும். ‘அளவு சரியாக இருக்கிறதே?’ என்று ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆச்சரியப்படுவார்.

அதற்கு எம்.ஜி.ஆர். அளிக்கும் பதிலை கவனித்துக் கேட்டால்தான் புரியும். ஏனென்றால், ரசிகர்களின் கைதட்டலாலும் ஆரவாரத்தாலும் தியேட்டரே இடிந்து விழுவது போலிருக்கும். எம்.ஜி.ஆர். கூறுவார்...

‘‘நான் எப்பவுமே, யாரையுமே சரியா அளவெடுத்து வெச்சிருப்பேன்!’’

எம்.ஜி.ஆர். ராணுவ அதிகாரி யாக ‘கேப்டன் சரவணன்’ என்ற பாத்திரத்தில் நடித்த படம் ‘கன்னித்தாய்’. சென்னையில் ஆங்கில படங்களே திரையிடப்பட்டு வந்த சபையர் திரையரங்கில் முதன்முதலில் ஆறு வாரங்கள் மட்டுமே என்ற விளம்பரத்துடன் வெளியான தமிழ் படம் ‘கன்னித்தாய்’.

Sunday, April 17, 2016



M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில் அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார். அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு, பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.

அ ந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியவர்.

அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர் என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை.

பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம் கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்துவிட்டார்கள். ‘‘வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார் கக்கனின் மனைவி.

கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின் குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத் துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச் செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை.

தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின் தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். மறுநாளே உத்தரவு போட்டார்.

‘‘முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின் மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்’’ என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு.

அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப் பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.

எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ‘‘இதை ஏன் முதலிலேயே தெரிவிக்கவில்லை?’' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.

அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில் தனக்கு தெரி விக்காமல் சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.

தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். .

கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது, உண்மையும் கூட. அவர் சொன்னார்... ‘‘கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.’’

எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘தூங்காதே தம்பி தூங்காதே....’, ‘ அரசிளங் குமரி' படத்தில் ‘சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா...’ போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1959-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., ‘நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தப் படத்தின் பாடல்கள் ரெக்கார்டு உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்!

- தொடரும்...

Friday, April 15, 2016

எம்ஜிஆர் 100 | 39 -படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.

1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.

இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.

அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.

சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் தென்பாண்டி மண்டலமே குலுங்கியது.

மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கியது.

சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.

1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.

அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.

1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு. மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது. 1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!

ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.

நிதானத்துக்கு வந்த ஜப்பானியர், தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் இரு கைகளையும் கோர்த்து இடுப்பு வரை முன்னோக்கி வளைந்து ‘‘மன்னியுங்கள்’’ என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு பின்னோக்கி நகர்ந்து போய்விட்டார்.

படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’ எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’, ‘அன்பே வா’, ‘ஒளிவிளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘ரிக் ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக்குரல்’ ஆகிய படங்கள் மதுரையில் 20 வாரங்களுக்கு மேலும், ‘குடியிருந்த கோயில்‘, ‘நம்நாடு’, ‘இதயக்கனி’ ஆகிய படங்கள் 19 வாரங்களும் ஓடி சாதனை படைத்தன.

- தொடரும்...

எம்ஜிஆர் 100 | 40 - சகலகலாவல்லவர்!


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. போலவே அவரது ரசிகர்களும் கூர்மையானவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம். நேற்றைய தொடரில் மதுரையில் எம்.ஜி.ஆர். படங்களின் சாதனைகளை பெட்டிச் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதில் ‘மதுரை வீரன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக்குரல்’ ஆகிய 6 வெள்ளிவிழாப் படங்களில் ஒன்றான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ விடுபட்டுவிட்டது என்றும் ‘இதயக்கனி’ படம் 20 வாரங்களுக்கு மேல் ஓடியதாகவும் ஏராளமான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மதுரையில் 20 வாரங்கள் ஓடிய படங்களை பட்டியலிட்டால் அதில் சதவீத அடிப்படையில் எம்.ஜி.ஆர். படங்களே அதிகம் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

இதுபோன்ற கூர்மையான ரசிகர் களுள் ‘கவர்ச்சி வில்லன்’ என்று புகழப்பட்ட நடிகர் கே.கண்ண னும் ஒருவர். பின்னாளில் எம்.ஜி.ஆர். காலத்தில் அவரது ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றியவர். சொந்த ஊரான சிவகங்கையில் ராம் தியேட்டரில் எம்.ஜி.ஆர். படங்கள் எல்லாவற்றையும் கண்ணன் விடாமல் பார்த்து விடுவார். அவரது நடிப்பையும் வசனங்களையும் கூர்ந்து கவனித்து, மாலை வேளைகளில் நண் பர்களிடம் எம்.ஜி.ஆரைப் போலவே நடித்து அவர்களை மகிழ வைப்பார்.

பின்னர், சினிமா ஆசையால் சென்னைக்கு வந்த கண்ணன் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தபோது, ‘மதுரை வீரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. முதல் நாளே எம்.ஜி.ஆருடன் வசனம் பேசி நடிக்கும் காட்சி. கதைப்படி வீரனின் நண்பர்களில் ஒருவராக கண்ணன் நடித்திருப்பார். வீரனின் நண்பர்களை தளபதியாக வரும் நடிகர் பாலையா கொடுமைப்படுத்துவார். அங்கு வரும் எம்.ஜி.ஆர். தனது நண்பர்களை காப்பாற்றுவார். ‘‘அது சென்டிமென்டாக அமைந்து நிஜவாழ்க் கையிலும் அப்படியே எம்.ஜி.ஆர். எங்களை எல்லாம் காப்பாற்றினார்’’ என்று பின்னர், கண்ணன் நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார்.

‘மதுரை வீரன்’ படம் தொடங்கி எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவருடன் பல படங்களில் கண் ணன் நடித்திருக்கிறார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தின் பல காட்சிகள் ஜெய்ப்பூரில் படமாக் கப்பட்டன. 26 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்தது.

எம்.ஜி.ஆரும் மற்றவர்களும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டனவே தவிர, கண்ணனுக்கு வேலை இல்லை. மாலையில் படப்பிடிப்பு முடிந்து கண்ணனை சந்திக்கும் எம்.ஜி.ஆர். அவரிடம் ‘‘என்ன கண்ணன்? நன்றாக சாப்பிட்டாயா? தூங்கினாயா?’’ என்று விசாரிப்பார். கண்ணன் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டு போய்விடுவார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் பிற்பகல் இரண்டு மணிக்கு எம்.ஜி.ஆர். திடீரென ஏழு பக்க வசனங்களை கொண்டுவந்து அதன் ஒரு பகுதியை கண்ணனிடம் கொடுத்தார். மற்றொரு பகுதியை நடிகை லதாவிடம் கொடுத்தார். ‘‘இருவரும் வசனங்களை பாடம் செய்து விட்டு நான்கு மணிக்கு தயாராக இருங்கள். படப்பிடிப்பு இருக்கிறது’’ என்றார்.

படம் சரித்திரக் கதை என்பதால் நீண்ட வசனங்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாடம் செய்து தயாராக வேண்டுமே என்று கண்ணனுக்கு குழப்பம். அதை எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். ‘‘இன்றுடன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாளை சென்னை புறப்படு கிறோம். நாடகத்தில் பல பக்க வசனங்களை மனப்பாடம் செய்த உனக்கு இது பெரிய காரியமா? ஐந்து மணிக்கு மேல் சூரிய வெளிச்சம் சரியாக இருக்காது. சீக்கிரம் தயாராகு’’ என்று சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டார்.

எம்.ஜி.ஆர். சொன்னபடி கண்ணன் வசனங்களை பாடம் செய்து நான்கு மணிக்குத் தயாராக இருந்தார். கதைப்படி ஒரு நாட்டின் மன்னராக இருக்கும் கண்ணன், போருக்கு புறப்படுவார். அவரை லதா தடுத்து நிறுத்த முயற்சிப்பார். அப்போது இருவருக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிகரமான வாதங்கள்தான் அன்று எடுக்கப்பட இருந்த காட்சி.

இந்தக் காட்சியை எடுக்க எப்படியும் ஒரு நாளாவது ஆகும். படம் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் வெவ்வேறு கோணங்களில் படமாக்க வேண்டும். நான்கு மணிக்கு படப்பிடிப்பை ஆரம்பித்து ஐந்து மணிக்குள் எப்படி எம்.ஜி.ஆர். படமாக்கப் போகிறார் என்று கண்ணனுக்கு ஆர்வம்.

கண்ணனை விட சுறுசுறுப்பாக காட்சியை படமாக்குவதற்காக எம்.ஜி.ஆரும் தயாராக வந்தார். வசனங்களை கண்ணனும் லதாவும் பாடம் செய்து கொண்டிருந்த நேரத்துக் குள், காட்சியை விரைவாக படமாக்க எம்.ஜி.ஆர். செய்திருந்த ஏற்பாடுகளை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் கண்ணன்.

படத்தில் இடம்பெறும் பிரம் மாண்டமான போர்க் காட்சிகளை பட மாக்குவதற்காக ஒன்பது கேமராக்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. கண்ண னும் லதாவும் பேசும் வசனக் காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்து அதற்காக, ஒன்பது கேமராக்களையும் ஒன்றின் பார்வை ஒன்றின் மீது விழாத வகையில் திறமையாக கோணங்களை அமைத் திருந்தார். 4.15 மணிக்கு எம்.ஜி.ஆர். ‘ஸ்டார்ட்’ சொல்ல, 4.30 மணிக்கு காட்சி ஓ.கே. ஆகிவிட்டது. கண்ணனும் லதாவும் ஒரே ‘டேக்’கில் நடித்த காட்சி இது.

ஒரு நாள் முழுக்க படப்பிடிப்பு நடத்தி எடுக்க வேண்டிய காட்சியை பதினைந்து நிமிடத்தில் எம்.ஜி.ஆர். எடுத்து முடித்து விட்டார். அந்தக் காட்சியை ஒரே நேரத்தில் படமாக்கியது கூட பெரிதல்ல; அதை மிகச் சரியாக ஒன்பது ‘ஷாட்’களாக பிரித்து எடிட் செய்தார். இப்போதுகூட படத்தில் அந்தக் காட்சி பல கோணங்களில் பல முறை எடுக்கப்பட்ட காட்சி போலத் தெரியும்.

எம்.ஜி.ஆர். நடிகர் மட்டுமல்ல; திரைப்படத்துறையில் எல்லாம் அறிந்த சகலகலாவல்லவர்.


தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலுவுக்கு உதவுவதற்காக அவரது ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். ‘‘தொலைபேசியில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டு ‘கால்ஷீட்’ கொடுத்தார்’’ என்று பின்னர், 5-2-1971 தேதியிட்ட ‘சித்ராலயா’ இதழில் பந்துலு நன்றியுடன் கூறியிருந்தார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பந்துலுதான் இயக்குவதாக இருந்தது. இடையே அவர் இறந்து விட்டதால் எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

- தொடரும்...

எம்ஜிஆர் 100 | 43 - மழையில் உதவிய கரங்கள்

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R.புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்களை பெருமளவில் இன்றும் காணலாம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது ரிக்ஷாக்காரர்கள் அன்பைக் காட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம், அவர்களின் நலனில் எம்.ஜி.ஆர். அக்கறை காட்டியதுதான்.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையையும் ஊரே வெள்ளக்காடானதையும் யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எங்கே கடும் மழை என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முதலில் நீண்ட கரங்கள் எம்.ஜி.ஆருடையவை.

சென்னையில் மழை பாதிப்பு நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டில் பெரிய, பெரிய அண்டாக்களில் சோறு வடிக்கப்படும். பொட்டலங்களாக கட்டி கொடுக்கப்பட்டால் அவை சூடு ஆறி விடும் என்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வேன்களி லும் கார்களிலும் உணவு எடுத்துச் செல்லப்பட்டு சூடாக வழங்கப்படும். சில நேரங்களில் எம்.ஜி.ஆரே சென்று பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு பரிமாறியதும் உண்டு.

ஒருமுறை, வாஹினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஆற்காடு சாலையில் காரில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தார். இப்போது இருக்கும் கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட்டில் நட்சத்திரங்களின் கார்கள் காத்து நிற்கும். அவர்களை பார்ப்பதற்காகவே எப்போதும் அங்கு ஒரு கூட்டம் இருக்கும்.

கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் எம்.ஜி.ஆரின் கார் காத்திருந்தது. அப்போது, நல்ல மழை பெய்து கொண் டிருந்தது. ரிக் ஷாக்காரர் ஒருவர் மழை யில் நனைந்து கொண்டே முகத்தில் வழியும் தண்ணீரை துடைத்தபடி இருந்தார். இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்தது.

தனது அண்ணன் சக்ரபாணியிடம் ரிக் ஷாக்காரரின் நிலைமையைச் சொல்லி எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார். சக்ரபாணியும் பரிதாபப்பட்டார். அவர் இயல்பாகவே கொஞ்சம் வேடிக்கையாக பேசக் கூடியவர். ‘‘பாவம்தான். ஆனால், அதற்காக ரிக் ஷாக்காரர்கள் ரெயின் கோட் போட்டுக் கொண்டா ரிக் ஷாவை ஓட்டுவார்கள்?’’ என்று கேட்டார்.

மழைக்கு பதில் சொல்வது போல, எம்.ஜி.ஆரின் மூளையில் மின்னல் அடித்தது. ‘‘ஏன் கூடாது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்ட தருணம்தான், ரிக் ஷாக்காரர்களுக்கு இலவசமாக அவர் ரெயின் கோட் வழங்குவதற்கான திட்டம் உதித்த நேரம். உடனடியாக, எம்.ஜி.ஆர். செயலில் இறங்கிவிட்டார். ஆர்.எம்.வீரப்பனை அழைத்தார். ‘‘சென்னையில் எவ்வளவு ரிக் ஷாக் காரர்கள் இருப்பார்கள்? அவ்வளவு பேருக்கும் ரெயின் கோட் தைக்க எவ்வளவு செலவாகும்? விசாரித்து சொல்லுங்கள்’’ என்று கூறினார்.

தொப்பியுடன் கூடிய பிளாஸ்டிக் மழைக் கோட்டுகள் வாங்கப்பட்டன. நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் பேரறிஞர் அண்ணா தலைமையில் விழா. 5,000-க்கும் மேற்பட்ட ரிக் ஷாக் காரர்களுக்கு எம்.ஜி.ஆர். செலவில் ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டன. அண்ணாவின் அருகே புன்னகையுடன் நின்ற எம்.ஜி.ஆரை ரிக் ஷா ஓட்டுநர் கள் நன்றியுடன் வணங்கினர். நன்றியை செயலிலும் காட்டினர். தங்கள் ரிக் ஷாக் களில் எம்.ஜி.ஆரின் படங்களையும் போஸ்டர்களையும் ஒட்டினர்.

1969-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த ‘அடிமைப் பெண்’ படத்துக்கு அடுத்த படியாக பெரிய வெற்றி பெற்ற படம் ‘நம்நாடு’. இப்படத்தில் தனது அண் ணனாக நடிக்கும் டி.கே.பகவதியின் முதலாளியாக வரும் எஸ்.வி.ரங்கா ராவின் தவறுகளை எம்.ஜி.ஆர். கண் டிப்பார். இதனால், கோபமடைந்து

எம்.ஜி.ஆரை வீட்டை விட்டு வெளி யேறுமாறு டி.கே.பகவதி கூறுவார். எம்.ஜி.ஆரும் வீட்டில் இருந்து வெளி யேறி சேரிப் பகுதியில் தங்கியிருப்பார்.

நடிகைகள் குட்டி பத்மினி யும் தேவியும் டி.கே.பகவதியின் குழந்தைகளாக நடித்திருப்பார்கள். சித்தப்பாவான எம்.ஜி.ஆரைத் தேடி அவர் இருக்கும் வீட்டுக்கு இரு குழந்தைகளும் வந்து விடும். அவர்களிடம், ‘‘எப்படி இங்கே வந்தீர் கள்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்பார்.

‘‘ரிக் ஷாக்காரரிடம் உங்கள் பெயரை சொன்னோம். அவர் இங்கே கொண்டு வந்து விட்டார்’’ என்று குட்டி பத்மினி சொல்வார். எம்.ஜி.ஆர். பெயரை சொன் னாலே ரிக் ஷாக்காரர்களுக்கு அவர் இருக்கும் இடம் தெரியும் என்பதைப் போல இந்த வசனம் அமைந்திருக்கும்.

இதைவிட முக்கியமாக, எம்.ஜி.ஆர். மீது ரிக் ஷாக்காரர்களுக்கு இருக் கும் அளவற்ற அன்பையும் மரியாதை யையும் வெளிப்படுத்துவது போல, குழந்தையாக நடிக்கும் தேவி, எம்.ஜி.ஆரிடம் சொல்வார்....

‘‘காசு கூட வாங்கலே சித்தப்பா’’




எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, மழை காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க கூவம் நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப் படுத்தி தூர்வார ஏற்பாடுகள் செய்தார். மழை யால் வெள்ளம் ஏற்பட்டபோது முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்தார்.

எம்ஜிஆர் 100 | 44 - போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

எம்ஜிஆர் 100 | 44 - போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார். நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை.

படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார். பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது. விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடும்.

‘உரிமைக்குரல்’ படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. ‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது. படத்தின் நடன இயக்குனர் சலீம். அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.

பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்.

‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார். பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்.

ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார். விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் தரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் தருக்கு பயம் வந்து விட்டது.

‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது? அவரது உடல் நலம் பாதிக்கப்படுவ தோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே?’ என்று தர் கவலை அடைந்தார். பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர். ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார். பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் தர் ஜாடை காண்பித்தார். எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார். எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார். எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு தரை நெகிழ வைத்தது.

‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பெக்டர் ராமு, அப்துல் ரஹ்மான் என இரட்டை வேடங்கள். அப்துல் ரஹ்மானாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில் ‘ஒன்றே சொல்வான், நன்றே செய்வான், அவனே அப்துல் ரஹ்மானாம்…’ என்ற கருத்துள்ள பாடல் இடம்பெறும். அந்தப் பாடலில் வரும் வரிகள் இவை…

‘ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள்

ஆனாலும் உழைத்தே வாழுங்கள்

வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்

இரண்டும் உலகில் தேவை

ஆடும்போதும் நேர்மை வேண்டும்

என்றோர் கொள்கை தேவை’

படங்கள் உதவி: ஞானம்

‘உரிமைக்குரல்’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் வண்டலூர் அருகே நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் படமாக்கப்பட்டன. வில்லனின் ஆட்கள் பயிர்களுக்கு நெருப்பு வைப்பதுபோல காட்சி.

படத்துக்காக பயிர்களுக்கு நெருப்பு வைக்கப் போவதை அறிந்த எம்.ஜி.ஆர்., ‘‘மக்களுக்கு உணவாக பயன்படும் நெற்பயிரை கொளுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். பின்னர், வைக்கோல்களுக்கு தீ வைக்கப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது.

- தொடரும்...

Thursday, April 14, 2016


எம்ஜிஆர் 100 | 42 - ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R.மீது மக்கள் அன்பை பொழிந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைத்ததற்கு வெறும் சினிமாக் கவர்ச்சி மட்டுமே காரணமல்ல; அதையும் தாண்டிய அவரது மனிதநேய செயல்பாடுகள்தான் காரணம். இதற்கு ஏராளமான ஆதாரங்கள்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பரிசு’ படம் 1963-ம் ஆண்டு வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாக நடிகை சாவித்திரி நடித்திருந்தார். படத்தின் கதையை எழுதிய கே.பி. கொட்டாரக்கரா, படத்தின் இயக்குநர் டி.யோகானந்த் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ‘பரிசு’ படத்தின் சில காட் சிகள் தேக்கடியில் படமாக்கப்பட்டன.

தேக்கடியில் நடந்த படப்பிடிப்பின் போது ஒருநாள் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென வேகமாக வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார். அவரது இரு பெண் குழந்தைகளும் பரிதாபமாக அருகே நின்றன. அவரை எழுந்திருக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., ‘‘என்ன விஷயம்?” என்று விசாரித்தார்.

அந்தப் பெண்ணின் பெயர் தேவகி. ‘‘என் கணவருக்கு குடிப் பழக்கம் உண்டு. வனத்துறையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சரியாக போவதில்லை. ஒரு நாள் குடித்துவிட்டு சென்ற என் கணவர் காட்டு யானை தாக்கி இறந்துவிட்டார். அரசு நிர்வாகம் நஷ்ட ஈடோ, கருணைத் தொகையோ தரவில்லை. எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் அழுதவாறே முறையிட்டார் தேவகி.

அதோடு, ‘‘இரண்டு பெண் குழந்தை களை வைத்துக் கொண்டு தனியாக இருக்கும் என் குடிசைக்கு இரவு நேரங் களில் சிலர் தவறான நோக்கத்தோடு வந்து வாசலில் நின்று கலாட்டா செய் கிறார்கள்’’ என்று சொல்லிக் கதறினார். எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கிவிட்டன.

தேவகியிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அழா தேம்மா. உன் கணவர் பணியாற்றிய வனத்துறையில் உனக்குத் தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான் கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா. உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து உனக்குத் தெரிந்த டீச்சரையும் கூட்டிக் கொண்டு வா’’ என்று சொல்லி அனுப்பினார்.

அதேபோல, வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக் கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒரு வரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக் கும் இடத்துக்கு தேவகி அழைத்து வந் தார். அவரது அதிர்ஷ்டமோ என் னவோ, அந்த வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்து மீளவே அவருக்கு வெகுநேரம் பிடித் தது. அவரிடம் எம்.ஜி.ஆர். விசாரித்தார்.

‘‘பலமுறை எச்சரித்தும் குடிப் பழக்கத்தால் தேவகியின் கணவர் சரியாக பணிக்கு வருவதில்லை. அவரது சாவுக்குக் கூட குடிதான் காரணம். தெளிவாக இருந்திருந்தால் யானையிடம் இருந்து தப்பித்து இருக்கலாம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் வனத்துறை அதிகாரி கூறினார்.

அவரிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அது இருக்கட்டும். இப்போது இவர்கள் நிலை ரொம்ப பரிதாபமாக உள்ளது. உங்கள் அலுவலக விதிமுறைகள்படி இவர்களுக்கு அதிகபட்சமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள். இது சம்பந்த மாக உயர் அதிகாரிகள் யாரிடமாவது பேச வேண்டும் என்றாலும் நானே பேசுகிறேன்’’ என்றார்.

அந்த அதிகாரியும், ‘‘நீங்கள் இவ் வளவு தூரம் சொல்லும்போது நான் முடிந்தவரை உதவுகிறேன்’’ என்றார்.

மேலும், ‘‘இப்போது குடிசையில் இருக்கும் இவர்கள் கவுரவமாக தங்கும் வகையில் வாடகைக்கு சிறிய வீட்டை இவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா?’’ என்றும் வனத்துறை அதிகாரியிடம் கேட்ட எம்.ஜி.ஆர்., அதோடு நிற்கவில்லை. ‘‘தேவகிக்கு ஏதாவது வேலை வாங்கித் தர முடியுமா?’ என்றும் கேட்டார்.

எம்.ஜி.ஆரே கேட்கும்போது அதுவும் அவரது ரசிகரான அதிகாரி மறுப்பாரா? இரண்டுக்கும் ஒப்புக் கொண்டார். வீடு ஏற்பாடு செய்து தருவதுடன் தனக் குத் தெரிந்த ஒரு வீட்டில் தேவகியை வீட்டு வேலை செய்ய சேர்த்து விடுவதாகவும் கூறினார்.

தேவகியைப் பார்த்து, ‘‘என்னம்மா? வீட்டு வேலை செய்ய உனக்கு சம் மதமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தேவகியும் சம்மதித்தார்.

பின்னர், அவரது பிள்ளைகள் படிக் கும் பள்ளியின் டீச்சரை அழைத்து, எஸ்.எஸ்.எல்.சி. வரை இரண்டு பிள்ளை களும் படிப்பதற்கான செலவுகளை எம்.ஜி.ஆர். விசாரித்தார். தயாரிப்பாளர் கொட்டாரக்கராவிடம் தனியாகப் பேசி கணிசமான ஒரு தொகையை வாங்கினார். அதை தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, அந்தத் தொகையை அப்படியே தேவகியிடம் எம்.ஜி.ஆர். கொடுத்தார்.

ஒருவாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அந்த வனத்துறை அதிகாரி வந்தார். உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம் தேவகிக்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்தப் பணம் கிடைத்துவிடும் எனவும் கூறினார். இதைக் கேட்டு எம்.ஜி.ஆர். மிகவும் மகிழ்ச்சி அடைந் தார். 1963-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் என்பது பெரிய தொகை.

இப்போதும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழுதார் தேவகி. இந்த முறை அவரது கண்களில் இருந்து வந்தது, நன்றிப் பெருக்கால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்!

- தொடரும்...

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.

NEWS TODAY 2.5.2024