Saturday, January 3, 2015

MEDICAL COUNCIL OF INDIA PUBLIC NOTICE dated 31.12.2014



பிடித்தது கிடைத்தால் போய்விடுமா பேய்?


மனநலம் பாதிக்கப்பட்ட பலருக்கும் மனநல சிகிச்சை அளிக்காமல் பேய் பிடித்துவிட்டது, ஆவி புகுந்துகொண்டது என்று கூறி குறிப்பிட்ட சில கோயில்களுக்கு அழைத்துப் போய் கட்டிப் போட்டுவிடுவது தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது. ‘சந்திரமுகி'யில் ஜோதிகாவுக்கு வரும் மனநோயும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
ஆவி புகுந்துகொள்ளுமா?
ஆவி புகுந்த கதாநாயகியின் கதையைக் கருவாகக் கொண்ட திரைப்படம் ‘சந்திரமுகி’. சந்திரமுகி என்ற நடன மங்கை வேட்டையன் ராஜாவின் அரண்மைனையில் வசித்துவருகிறாள். அரண்மனைக்கு அருகில் வசிக்கும் நடனக் கலைஞர் ஒருவர் மீது காதல் கொள்கிறாள். இதை விரும்பாத வேட்டையன் ராஜா, இருவரையும் கொன்றுவிடுகிறார்.
இந்தச் சம்பவம் நடந்து பல்லாண்டுகளுக்குப் பிறகு அந்த அரண்மைனைக்குக் குடிவரும் கதாநாயகி, சந்திரமுகியைப் பற்றித் தெரிந்துகொள்கிறாள். அவர் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளின் மீதும் ஈடுபாடு கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாகவே மாறத் தொடங்குகிறாள்.
சந்திரமுகியைப் போலவே எதிர்வீட்டில் இருக்கும் ஒரு இளைஞனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ஒரு கட்டத்தில் முழுமையாக சந்திரமுகியாக உருமாறித் தன் கணவனை வேட்டையன் ராஜாவாக நினைத்துக் கொன்றுவிடத் துடிக்கிறாள். இறுதியில் அவளைச் சமாதானப்படுத்த வேண்டி, வேட்டையன் ராஜாவாக ரஜினி கதாபாத்திரம் மாறித் தன்னைப் பலிகொடுப்பதாகப் பாவனை செய்கிறார்.
பேய்ப் பிடிப்பது போன்ற நம்பிக்கைகளை மனநல மருத்துவம் நம்புவதில்லை. இது மட்டுமல்ல பிசாசு, பில்லி, சூனியம் போன்ற அறிவியலுக்குப் புறம்பான எதையும் நம்புவதில்லை. ஆனால், மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் பல்லாண்டுக் காலமாகப் பரவலாக உள்ளன.
உண்மையில் பேய்ப் பிடிப்பது எனச் சொல்லப்படுவதும் ஒருவகையில் மனநோய்தான். இளகிய மனம் கொண்டவர்கள், கிராமியப் பின்னணி கொண்டவர்கள்தான் இந்த வகை நோய்க்கு அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நகரத்தில் பேய்ப் பிடிப்பது குறித்த நம்பிக்கைகள் குறைவு.
மூடநம்பிக்கைகளின் நோய்
உதாரணமாக கிராமத்தில் துர்மரணச் சம்பவத்தால் இறந்து போனவர்கள் ஆவியாக அலைவதாக நம்பிக்கை உண்டு. கண்மாயில், கிணற்றில் விழுந்து மாண்டவர்கள் அங்கேயே ஆவியாக அலைவதாக நம்பிக்கை உண்டு. அந்தப் பக்கம் செல்லும் திருமணமாகாத கன்னிப் பெண்கள் மீது ஆவி புகுந்துவிடும் எனவும் சொல்வார்கள். இதனால் இளகிய மனம் படைத்த இளம் பெண்களின் மனநிலை பாதிப்புக்குள்ளாகி, அவர்களே தங்களுக்குள் ஆவி புகுந்துவிட்டதாக நம்பி மனநோய்க்கு ஆளாவார்கள். பெரும்பாலும் இளம் பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு உள்ளாவதாகச் சொல்லப்படுகிறது.
மனநோய் பாதிப்பு இருக்கும்போது அவர்கள் உச்சபட்ச வன்முறையை வெளிப்படுத்துவார்கள். ‘சந்திரமுகி' திரைப்படத்தில் சந்திரமுகியாக மாறிய ஜோதிகா, நான்கு ஆண்கள் சேர்ந்து தூக்கும் கட்டிலை ஒற்றைக் கையில் தூக்கிவிடுவார். இது அதிகபட்சமான சித்திரிப்புதான். ஆனாலும், சரியான ஒன்றே.
இம்மாதிரியான நம்பிக்கை அடிப்படையிலான மனநலப் பாதிப்பு Possession Trance Disorder என அழைக்கப்படுகிறது. மனதின் சுய கட்டுப்பாட்டை இழந்து வேறு சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும். அதாவது நமது வழக்கமான நடவடிக்கைகளில் மாறுபட்டு வேறு யாரோ ஒருவர்போலச் செயல்படும். இதைத்தான் பேய்ப் பிடிப்பது என்கிறோம்.
கலாச்சார ரீதியாகப் பார்த்தால் ஆப்பிரிக்க, தெற்கு ஆசிய நாடுகளில்தான் இந்த வகை மனநலப் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. இதர நாடுகளில் இந்த நிலை மிகக் குறைவு. ஏனென்றால் தெற்காசிய நாடுகளில்தான் இம்மாதிரியான மூடநம்பிக்கைகள் அதிகம்.
பேயின் விருப்பம்
பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மனநோயாளிகளைப் பொதுவாக மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல மாட்டார்கள். அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப மத வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். தமிழ்நாட்டில் இம்மாதிரி பாதிப்புக்கு உள்ளானவர்களை மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு குணசீலம், ஏர்வாடி, ராஜாவூர் போன்ற ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் உள்ளது.
இது போன்ற மனநோய் வழிபாட்டுத் தலங்களிலேயே குணமாகிவிடுவதும் உண்டு. அதாவது இம்மாதிரி மனநோய் உள்ளவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் போது, அந்த மனநலப் பாதிப்பில் இருந்து அவர்கள் குணமடைய வாய்ப்புள்ளது. ‘சந்திரமுகி' திரைப்படத்தில் இதைச் சரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சந்திரமுகியாக மாறும் கதாநாயகியின் விருப்பம், வேட்டையன் ராஜாவைக் கொல்ல வேண்டும் என்பது. அதை நாடகமாக அவர்கள் நிகழ்த்திக் காட்டும்போது திருப்தியடைந்து, அவரது மனநோய் குணமாகிறது.
இதைத்தான் குடிகொண்டுள்ள ஆவியின் விருப்பத்தை நிறைவேற்றும்போது, அந்த ஆவி உடலைவிட்டு வெளியேறி விடுவதாக நம்பப்படுகிறது. இந்த வகை மனநோய்க்கு இது சரி. ஆனால், இந்த நோய்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் கண்டறிந்துவிட முடியாது.
மனநல மருத்துவர்களே கண்டறிய முடியும். மக்கள் எல்லாவிதமான மனநோயாளிகளையும் வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிடுகிறார்கள். இப்படிச் செய்வதால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதலாக மனச்சிதைவுக்கு உள்ளாவார்களே தவிர குணமடையமாட்டார்கள்.
கிணற்றில் இருந்த பேய்
சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற மனநலப் பாதிப்புடன் ஒரு பெண் சிகிச்சைக்காக என்னிடம் அழைத்து வரப்பட்டார். அவருக்குப் பேய் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். அவர்களுடைய ஊரில் உள்ள ஒரு கிணற்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அந்தப் பெண் பேயாக அலைவதாக, அந்த ஊர் மக்கள் நம்பினார்கள். அந்தக் கிணற்றுப் பக்கம் போனால் அந்தப் பெண்ணின் ஆவி பிடித்துக்கொண்டுவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்த நம்பிக்கையுடன் வளர்ந்த இந்தப் பெண், அந்தக் கிணற்றுப் பக்கம் சென்றுள்ளார். அதனால் இயல்பாகவே இளகிய மனம் கொண்ட அவர், இந்த மனநலப் பாதிப்புக்கு ஆளாகிவிட்டார். நடக்கவே முடியாதபடி ஆகிவிட்டார். கிணற்றில் விழுந்து இறந்த பெண்ணுக்கும் இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது. பிறகு மனநல ஆலோசனை மூலம் அந்தப் பெண் குணமடைந்தார்.
சிகிச்சை முறை
இந்த மனநலப் பாதிப்பு உள்ளானவர்கள், மற்ற நேரங்களில் சரியாகத்தான் இருப்பார்கள். குறிப்பிட்ட நேரங்களில்தான் புத்தி பேதலித்த மாதிரி நடந்துகொள்வார்கள். மனச்சிதைவு நோயாளிகள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். ஆகவே, முதலில் மனநலப் பாதிப்பைப் பிரித்தறிவது அவசியம். இது Possession Trance Disorder தான் என உறுதிசெய்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு விஞ்ஞான அறிவை அளிக்க வேண்டும். பேய் பிடிப்பது மூடநம்பிக்கை என்பதைப் புரியவைக்க வேண்டும். ஹிப்னாடிஸ முறையில் இந்த நோய்க்கு சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

- கட்டுரையாளர்,
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்,
மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: arulmanas@gmail.com

ஸர்ஃப் கொடுத்த பதிலடி!



யூனிலீவர், இங்கிலாந்தைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம். 1888 – இல் ஸன்லைட் சோப் இறக்குமதியோடு இந்தியாவில் தொடங்கிய லீவர் வரலாறு, இன்று நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. பெப்சோடென்ட், குளோஸப் டூத்பேஸ்ட்கள், டவ், லைபாய், லிரில், லக்ஸ், ரெக்ஸோனா, ஹமாம், பியர்ஸ் சோப்கள், கிளினிக், ஸன்ஸில்க் ஷாம்பூக்கள், பான்ட்ஸ், லக்மே அழகுப் பொருட்கள், ரின், வீல், ஸன்லைட், ஸர்ஃப் சோப் பவுடர்கள், அன்னபூர்ணா கோதுமை மாவு, மாடர்ன் பிரெட், கிஸான் ஜாம், பியூர் தண்ணீர், ப்ரூக் பாண்ட் காபி, டீ, லிப்டன் டீ – ஆமாம், நாம் கண் விழிப்பது முதல், தூங்குவது வரை, ஏராளமான லீவர் தயாரிப்புப் பொருட்களோடு வாழ்கிறோம்.

சரியான கணிப்பு

லீவர் கம்பெனி 1959- ல், ஸர்ஃப் சோப் பவுடரை இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். கவர்ச்சிகரமான அட்டைப் பெட்டிகளில் ஸர்ஃப் விற்பனையானது. கிலோ விலை 13 ரூபாய். இந்த விலை உயர்மட்டக் குடும்பங்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும் விலை. தெரிந்தேதான், லீவர் அதிக விலையை நிர்ணயித்தார்கள். வசதி படைத்தவர்கள் சோப் பவுடர் உபயோகிப்பார்கள், மற்றவர்கள் ஸன்லைட் சோப் உபயோகிப்பார்கள் என்பது லீவர் கம்பெனியின் கணிப்பு. இந்த மார்க்கெட்டிங் வியூகத்தால், ஸர்ஃப் சோப் பவுடர், ஸன்லைட் சோப் ஆகிய தங்களுடைய இரண்டு தயாரிப்புப் பொருட்களின் விற்பனையையும் அதிகமாக்க முடியும் என்பது அவர்கள் கணிப்பு. அவர்கள் கணக்கு சரியாக இருந்தது. ஸர்ஃப் இந்தியாவின் நம்பர் 1 சோப் பவுடர் ஆனது.

நிர்மா வரவு, ஸர்ஃபுக்கு சரிவு

லீவரின் கனவுகளைக் கலைக்க வந்தார், குஜராத் மாநிலத்தின் கஸன்பாய் பட்டேல். ஸர்ஃப் கிலோ 13 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. 1969 – ம் ஆண்டு. கிலோ 3 ரூபாய் என அடிமாட்டு விலையில் கஸன்பாய் தன் நிர்மா சோப் பவுடரை அறிமுகம் செய்தார். ரேடியோ, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் ஏகப்பட்ட விளம்பரம் செய்தார். ஸர்ஃப் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் என்னும் அபிப்பிராயத்தை மக்கள் மனங்களில் உருவாக்கிவிட்டார். ஸர்ஃப் விற்பனை குறையத் தொடங்கியது. நிர்மா அந்த இடத்தைப் பிடித்தது. இந்தியாவில் அதிக விற்பனையாகும் சோப் பவுடரானது.

லீவர் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு அதிகமான பணபலம் உண்டு. அதே சமயம், அவர்களுக்குச் சில பலவீனங்களும் உண்டு. பணபலத்தால், கிடைக்கும் வெற்றிகளால், அவர்களுக்கு ஒரு மெத்தனம் வந்துவிடும். சிறிய போட்டியாளர்களை மதிக்கமாட்டார்கள். ”நாம் ஒரு ஆலமரம், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்தக் காளான்கள் நம்மை என்ன செய்துவிடுவார்கள்” என்று உதாசீனம் செய்வார்கள். அதற்குள், சிறிய போட்டியாளர் விஸ்வரூபமெடுத்து வளர்ந்துவிடுவார்.

பெரிய கம்பெனிகளில் இன்னொரு சிக்கலும் உண்டு. சிறிய கம்பெனிகளில், முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமையும், அதிகாரமும், முதலாளிகளிடம் இருக்கும். இதனால், பிரச்சினைகள் வரும் போது, அவற்றை முளையிலேயே கிள்ளி எறியமுடியும். பெரிய நிறுவ னங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் பரவலாக இருக்கும். இதனால், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் காலதாமதமாகும்.

வியூகம் வகுக்க 11 ஆண்டு

லீவர் கம்பெனி திறமைசாலிகளின் கூடாரம். ஆனால், மேற்சொன்ன காரணங்களால், நிர்மாவைச் சமா ளிக்கும் வியூகம் வகுக்கக் காலதாமதமானது. ஒருசில வருடங்களல்ல, நிர்மா மார்க்கெட்டுக்கு வந்ததிலிருந்து 11 வருடங்கள்!

ஸர்ஃப், நிர்மா ஆகிய இரண்டு சோப் பவுடர்களையும் லீவர் மார்க்கெட்டிங் அதிகாரிகள் அலசி ஆராய்ந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு மாபெரும் உண்மை புரிந்த்து. நிர்மா வரும்வரை, சோப் பவுடர் என்றால், அது மிக உயர்ந்த தரமாக, எரிச்சலே ஏற்படுத்தாததாக இருக்கவேண்டும், இப்படிப்பட்ட தயாரிப்புக்கு அதிக விலை தரவேண்டும் என்னும் அபிப்பிராயம் மக்கள் மனங்களில் இருந்தது. இது ஸர்ஃப் உண்டாக்கிய பிம்பம், பொசிஷனிங்.

இரு வகை வாடிக்கையாளர்கள்

நிர்மாவின் வருகைக்குப் பின், வாடிக்கையாளர்கள் இரண்டு வகையினர் ஆகிவிட்டார்கள். ஒரு பிரிவினர் உயர்ந்த தரத்துக்காக அதிக விலை தரத் தயாராக இருப்பவர்கள்: இன்னொரு பிரிவினர் மலிவு விலையில் சுமார் தரத்தை ஏற்றுக்கொள்பவர்கள்.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல், உயர் தரம் – அதிக விலை என்னும் ஒரே பொசிஷனிங்கைப் பின்பற்றியதுதான் தங்கள் சறுக்கலுக்குக் காரணம் என்று லீவர் கம்பெனி புரிந்துகொண்டார்கள். இரண்டு பிரிவினரிடமும், இரண்டு மாறுபட்ட பொசிஷனிங்கை உண்டாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

இதன்படி, நிர்மா மீதான தாக்குதலை, ஸர்ஃப் இரண்டு வியூகங்களில் தொடங்கினார்கள். முதல் வியூகத்தில், லீவர் பயன்படுத்திய முக்கிய ஆயுதம் – லலிதாஜி. 1980 காலகட்டத்தில், கவிதா சவுத்ரி என்னும் சுமார் 40 வயது நடிகை டி.வி. சீரியல்களில் பிரபலமாக இருந்தார். கண்டிப்பான போலீஸ் அதிகாரி, கண்ணியமான குடும்பத் தலைவி போன்ற வேடங்களில் நடித்தார். நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணாக, தங்களுக்கு நல்ல அறிவுரை தரும் மூத்த சகோதரியாக இவருக்கு மக்களிடம் இமேஜூம், நல்ல மதிப்பும் இருந்தது. லீவர் கம்பெனி, ”ஸர்ஃப் வாங்குவது புத்திசாலித்தனம்” என்னும் கருத்தை மையமாக வைத்து, சின்னச் சின்ன அனுபவங்களாக விளம்பரங்கள் தயாரித்தார்கள். இவற்றின் கதாநாயகி பெயர் லலிதாஜி.

விளம்பர உத்தி

விளம்பரங்களில் லலிதாஜி வருவார். கடைக்குப் போவார். காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவார். பேரம் பேசுவார். அவர் வாங்கிய சாமான்களுக்கு இடையில் ஒரு ஸர்ஃப் பாக்கெட் இருக்கும். ஒரு குரல் கேட்கும், “லலிதாஜி, எல்லாப் பொருட்களையும் வாங்கும்போது ஆலோசிக்கிறீர்கள், கணக்குப் போடுகிறீர்கள். நீங்கள் விலை அதிகமான ஸர்ஃப் வாங்குவது ஏன்?”

லலிதாஜி பதில் சொல்லுவார், “குறைந்த விலைக்கு வாங்குவதற்கும், கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள பொருளை வாங்குவதற்குமிடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது.” .

இப்போது லலிதாஜி கையைச் சுட்டிக் காட்டுவார். அங்கே, ஒரு ஜாடியில் பெயரிடப்படாத ஒரு கிலோ மஞ்சள் நிற சோப் பவுடர் இருக்கும்: இன்னொரு ஜாடியில் அரைக் கிலோ நீல நிற ஸர்ஃப் பவுடர். (நிர்மா மஞ்சள் நிறம்.) ”ஒரு கிலோ மலிவு விலை பவுடரால் எவ்வளவு துணிகளைத் தோய்க்கலாமோ, அதே அளவு துணிகளை அரைக் கிலோ ஸர்ஃபால் துவைக்கமுடியும். எனவே, ஸர்ஃப் வாங்குவதுதான் புத்திசாலித்தனம்” என்று ஆணித்தரமாகச் சொல்லுவார். ஸர்ஃப் உபயோகித்தால் துணிகளும் கெட்டுப் போகாமல் நீண்ட நாள் உழைக்கும் என்று தன் ”பளிச்” வெள்ளைப் புடவையைக் காட்டுவார்.

கை எரிச்சலைக் கருத்தில் கொள்ளாமல், விலையை மட்டுமே பார்த்து நிர்மா வாங்கிய கஸ்டமர்களை லலிதாஜி விளம்பரம் விலையைத் தாண்டி, உடல்நலம், துணிகளின் பாதுகாப்பு எனப் பல கோணங்களில் சிந்திக்கவைத்தது. ஏராளமானோர் நிர்மாவிலிருந்து ஸர்ஃபுக்குத் திரும்பினார்கள்,

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் வெளியான விளம்பரங்களில் டாப் 10 தேர்ந்தெடுக்கச் சொன்னால், எல்லோர் பட்டியலிலும் தவறாமல் இடம் பிடிப்பவர் லலிதாஜி. இந்தியாவின் விளம்பர மேதைகளில் ஒருவரான அலெக் பதம்ஸீ (காந்தி சினிமாவில் ஜின்னாவாக நடித்தவர்.) உருவாக்கிய விளம்பரம் இது.

You Tube – Lalitaji Surf ads என்று கிளிக்குங்கள். இந்த விளம்பரப் படங்களை (பாடங்களை)ப் பார்க்கலாம்.

குறைந்த விலையில் `வீல்’!

லலிதாஜி ஜெயித்தவுடன், இரண்டாம் வியூகமாக, 1988 – இல், லீவர் வீல் (Wheel) என்னும் சோப் பவுடரைக் குறைந்த விலையில் அறிமுகம் செய்தார்கள். ஏகப்பட்ட விளம்பரங்கள். ஒன்றிரண்டு வருடங்களில், கணிசமான கஸ்டமர்கள் நிர்மாவிடமிருந்து வீல் பவுடருக்கு மாறினார்கள்.

இன்று, ஸர்ஃப், நிர்மா, வீல் ஆகிய மூன்று சோப் பவுடர்களுமே வெற்றிகரமான பிரான்ட்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்திய பொசிஷனிங் முறைகள் வித்தியாசமானவை. ஆமாம், பொசிஷனிங் என்பது ஒருவழிப் பாதையல்ல, கற்பனையைக் காட்டி, நாம் எல்லோருமே, கஸ்டமர்கள் மனங்களில் தனித்துவப் பொசிஷனிங்கை உருவாக் கலாம், விற்பனையில் சிகரங்கள் தொடலாம்.

slvmoorthy@gmail.com

எஸ்.எல்.வி. மூர்த்தி

அடிக்க மறுத்த பைங்கிளி

Return to frontpage


14 வயதில் சரோஜா தேவி - தூஜ் கா சந்த் இந்திப்படத்தில்

சரோஜா தேவி 77-வது பிறந்த தினம்: ஜனவரி 7

தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜாதேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி.

இவர்களுக்கு நான்காவது மகளாகப் பிறந்த சரோஜாதேவி, பெங்களூரின் செயிண்ட் தெரசா கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். எல்லாரும் கன்னடக் கீர்த்தனைகள், கன்னட சினிமா பாடல்கள் என்று பாட, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் நமது ஹீரோயின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ‘ஏ ஜிந்தகி ஹே மேளே' என்ற இந்திப் படப் பாடலைப் பாடிக் கவர்ந்தார்.

நௌஷா இசையில் முகமது ரஃபி பாடிப் பிரபல்யம் அடைந்த அந்தத் தத்துவப் பாடலைத் தனது இனிமையான கீச்சுக் குரலில் இவர் பாடியது சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகரும் தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதருக்குப் பிடித்துவிட்டது.

நிகழ்ச்சி முடிந்ததும் சரோஜாதேவியை அழைத்த ஹொன்னப்பர், “அப்பா அல்லது அம்மா யாரையாவது அழைத்துக்கொண்டு, என் ஸ்டூடியோவுக்கு வா. உன்னைப் பாடகி ஆக்குகிறேன்” என்றார்.

அம்மாவுடன் கிளம்பிப் போனார். வசதியான குடும்பத்துப் பெண் என்பதால் ஜொலிக்கும் உடை, அம்மா பார்த்துப் பார்த்துச் செய்த மேக்- அப் ஆகியவற்றுடன் வந்து நின்ற சரோஜா தேவியைப் பார்த்த பாகவதருக்கு ஷாக். பள்ளிச் சீருடையில் வந்து பாடிய அந்தச் சின்னப் பெண்ணா இப்படி ஜொலிக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டார்.

“நீ பாடுவது இருக்கட்டும், கதாநாயகியாக நடிக்கவே செய்யலாமே! நீங்கள் சரியென்றால் உங்கள் மகளை எனது படத்திலேயே கதாநாயகி ஆக்குகிறேன்” என்றார். ஆனால் சரோஜாதேவியின் அப்பா மறுத்துவிட்டார். அவரது அலுவலகத்துக்கே சென்று அவரைச் சந்தித்து, இது காளிதாஸனின் வாழ்க்கை வரலாறு; கவுரவமான வேடம் என்று எடுத்துக்கூறிச் சம்மதிக்க வைத்தார். இந்த ஒரு படத்தில் மட்டுமே என் மகள் நடிப்பாள் என்று கண்டிப்பாகக் கூறினார் பைரவப்பா.

இப்படித்தான் ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. அந்தப் படத்தில் “ பாரொ கிளியே.. மரளி மனகெ..” என்று சி. எஸ். சரோஜினி பாடிய சோகப் பாடலை வீணை வாசித்தபடியே பாடுவதாக அமைந்த சரோஜாதேவியின் அறிமுகக் காட்சியைக் கண்டு ரசிகர்கள் கண்ணீர்விட்டார்ககள்.

படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது. ஒரே படத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு இந்தப் படம் கொண்டுவந்த புகழ், வீட்டின் முன் ரசிகர் கூட்டத்தைக் கூட்டியது. ராசியான ஹீரோயின் என்ற சென்டிமென்டும் சேர்ந்துகொள்ளப் பாகவதர் தனது ‘ஆஷாடபூதி’, 'பஞ்ச ரத்தினம்' ஆகிய படங்களிலும் இவரைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

தமிழுக்கு வந்தார்

தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன. இங்கே பானுமதி, சாவித்திரி, அஞ்சலிதேவி ஆகியோர் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார்கள். இந்த நேரத்தில் ‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி.பி. பிள்ளையா இயக்கத்தில் ஜெமினி – அஞ்சலிதேவி நடிப்பில் 1958-ல் வெளியான இந்தப் படத்தில் சரளாதேவி என்ற நாட்டியப் பெண்மணியாகச் சின்ன வேடத்தில் நடித்து யார் இந்தப்பெண் என்று ரசிகர்களைக் கேட்க வைத்தார்.

பரிசாக அமைந்த படம்

அதன் பின்னர் இரண்டாவது கதாநாயகி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின. அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் முதல்பாதி முழுவதும் பானுமதி கதாநாயகியாகத் தோன்ற, இரண்டாவது பாதியை ‘ரத்னா’வாக வந்து அலங்கரித்தவர் சரோஜாதேவி. இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவினார்.

எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் தொடங்கித் திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் காதல் கனிரசம் சொட்டிய, கதையம்சத்தில் குறையாத படங்கள். காதல் காட்சிகளில் கிள்ளையின் குரலில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கிய அவரது நடிப்பைக் கண்ட தமிழகம் அவரை ‘கன்னடத்துப் பைங்கிளியாக’க் கொண்டாட ஆரம்பித்தது. தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தார்.

எம்.ஜி.ஆருடன் ஆரம்பக் கவனம் கிடைத்தாலும் சரோஜாதேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே கல்யாணப் பரிசு படத்தைக் கூறிவிடலாம். ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி.

கல்லூரிக்குப் புறப்படும்போது, 'அம்மா போயிட்டு வர்றேன்' என்று, மாடியில் குடியிருக்கும் ஜெமினி கணேசனுக்கு கேட்க வேண்டும் என்று இருமுறை கத்தி சொல்லிவிட்டுப் போவார். குறும்பான இந்தக் காதல் காட்சி உட்படப் படம் முழுவதும் சரோஜாதேவியின் நடிப்பு காந்தமாகக் கல்லூரி மாணவ- மாணவியரைக் கவர்ந்து இழுத்தது.

சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என்று தொடங்கி ‘புதிய பறவை’யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார்.

அடிக்க மறுத்தார்

சிவாஜியுடன் நடித்த படங்களும் சாதனை வெற்றிகளாக அமையக் கல்யாணப் பரிசு வெளியான அதே 1959-ல் வெளியானது பாகப்பிரிவினை. எம்.ஆர்.ராதாவுக்கு ரத்தக்கண்ணீருக்குப் பிறகு பெரும் திருப்பு முனையைக் கொடுத்த படம். வில்லனாக நடித்த எம்.ஆர். ராதாவை சரோஜாதேவி துடைப்பத்தால் அடிப்பது போன்ற காட்சி கதையில் முக்கியமானது. ஆனால் “அவரை நான் அடிக்க மாட்டேன்” என்று மறுத்து அழ ஆரம்பித்துவிட்டார் சரோஜாதேவி.

இது நடிப்புதானே என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் ராதா. அப்படியும் அவருக்குத் தைரியம் வரவில்லை..இனி வேலைக்கு ஆகாது என்று முடிவுசெய்த இயக்குநர் ராதாவையும் சரோஜாதேவியும் ஒரு அறையில் இருக்கவைத்து முதலில் அலறியபடி ராதாவை வெளியே ஓடிவரச்செய்து படம்பிடித்தார். பிறகு துடைப்பத்துடன் சரோஜாதேவியை ஆவேசமாக வெளியே ஓடிவரச் செய்து படமாக்கினார்.

கதையம்சம், பாத்திரப்படைப்பு இவற்றில் அபத்தங்கள் தென்பட்டாலும் அவற்றையும் மீறித் தன் நடிப்பில் ஒரு கண்ணியத்தை நேர்த்தியான நளினத்துடன் வெளிப்படுத்தியதில் இவருக்கு இணை இவரென்றே மாறினார். தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட்டிலும் புகழ்பெற்றார்.

மாயையைத் தகர்த்த மகத்தான நாயகி

படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். சரோஜாதேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே. ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர் இன்றும் நடித்துக்கொண்டிருக்கும் கன்னடத்துப் பைங்கிளிதான்.

சிரிக்க வைத்தார்களா இவர்கள்? - 2014ல் நகைச்சுவைப் படங்கள்



முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே பின்னணியாகக் கொண்ட படங்களின் வரிசையில், ‘முண்டாசுப்பட்டி', ‘ஆடாம ஜெயிச்சோமடா', ‘பப்பாளி', ‘ஜிகிர்தண்டா', ‘பட்டையக் கெளப்பணும் பாண்டியா', ‘வானவராயன் வல்லவராயன்', ‘கப்பல்', ‘வெள்ளக்கார துரை'ஆகிய படங்களைச் சொல்லலாம்.

இவற்றில், ‘முண்டாசுப்பட்டி'யும் 'ஜிகிர்தண்டா'வும் தனிக் கவனம் ஈர்த்தவை. கடுமையான விமர்சனங்களைக் கடந்தும் ‘வெள்ளக்கார துரை' பி அன்ட் சி எனச் சொல்லப்படும் மையங்களைத் திருவிழாத் தலங்களாக மாற்றியிருக்கிறது.

காமெடி பிரதானமாக இல்லாவிட்டாலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இதர படங்களின் வரிசையில் 'ஜில்லா', ‘வீரம்', ‘மான் கராத்தே', ‘வேலையில்லா பட்டதாரி', ‘திருடன் போலீஸ்', ‘ஜீவா', ‘பூஜை' உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம். 2013-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 2014-ல் காமெடிப் பஞ்சம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காரணம், காமெடியன்கள் பலருக்கும் கதாநாயகன் ஆசை தொற்றிக்கொண்டதுதான்.

வடிவேலுவின் மறுபிரவேசம் தமிழ் சினிமாவை மீண்டும் குலுங்க வைக்கப் போகிறது எனப் பொடிசுகள் முதல் பெரியவர்கள் வரை காத்திருக்க, ‘தெனாலிராமன்' படத்தில் ஹீரோவாகக் களம் இறங்கினார் வடிவேலு. காமெடியை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டுக் கருத்து சொல்கிறேன் பேர்வழி என வடிவேலு கிளம்ப, மழை நாள் விறகாக நமத்துப் போனது அவருடைய மறுவரவு.

வடிவேலுவின் வனவாசத்தால் உருவான வெற்றிடத்தை நிரப்பியிருக்க வேண்டியவர்கள் சந்தானம், விவேக் உள்ளிட்ட காமெடியன்கள். ஆனால், அவர்களுடைய ஹீரோ கனவுகளும் கிட்டத்தட்ட அரைவேக்காடாக அமைய, 'உள்ளதும் போச்சுடா' கணக்காகத் தவித்துப் போனது நகைச்சுவை உலகம். சந்தானத்தின் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்', விவேக்கின் ‘நான்தான் பாலா', கஞ்சா கருப்பின் ‘வேல்முருகன் போர்வெல்ஸ்' என வரிசையாகக் காமெடியன்களின் ஹீரோ கனவுகள் கெட்ட கனவுகளாகின.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது சந்தானத்தின் முயற்சி ஓரளவு வெற்றிதான் என்றாலும் தொடர்ந்து மையப் பாத்திரமாக நடிக்கும் அளவுக்கு அந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை. வடிவேலு பாணியிலேயே ‘மீண்டும் ஹீரோதான்' எனச் சந்தானம் முறுக்கினாலும், அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைகாட்டத் தவறவில்லை. 'வீரம்' படத்தின் வெற்றிக்கும் ‘அரண்மனை' படத்தின் வரவேற்புக்கும் சந்தானத்தின் பங்களிப்பை மறுக்க முடியாது.

விவேக், ‘வேலையில்லா பட்டதாரி'யில் தன் தனித்துவமான காமெடியை நிரூபித்தார். நிறைய படங்களில் சதீஷ், கருணாகரன், காளி, பாலசரவணன் ஆகியோரும் சில படங்களில் பாபி சிம்ஹாவும் காமெடியில் களமிறங்கினர். இவர்களில் சிம்ஹா தேறிவிட்டார் என்று சொல்லலாம். கருணாகரன் ஓகே ரகம். சதீஷ் இன்னமும் திணறிக்கொண்டிருக்கிறார்.

இத்தனை ரணகளங்களுக்கு மத்தியில் சுயேச்சை வேட்பாளர் வாகை சூடியதைப்போல் தனித்து நின்று ரகளை கட்டி வயிறு குலுங்க வைத்துவிட்டார் சூரி. 'நானா... கதாநாயகனா... இப்புடியெல்லாம் பேசிட்டுத் திரியாதிய அப்பு... அப்புறம் பொதுநல வழக்கு போட்டுட்டாய்ங்கன்னா என்னய பொல்லாப்பு சொல்லக் கூடாது' என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்து மிகுந்த சாதுரியமாகக் காய் நகர்த்தினார் சூரி. அதனால், 2014-ம் வருடத்தின் காமெடி முகமாக மாறினார்.

விஜயுடன் ‘ஜில்லா', சூர்யாவுடன் ‘அஞ்சான்', விஷாலுடன் ‘பூஜை', சிவகார்த்திகேயனுடன் ‘மான் கராத்தே', ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்', விக்ரம் பிரபுவுடன் ‘வெள்ளக்காரதுரை' எனத் தனது கூட்டணியை வலுவாக்கிக்கொண்டார் சூரி. ஹீரோவாக நடிக்கவில்லையே தவிர, ‘பட்டையக் கெளப்பணும் பாண்டியா', ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா', ‘வெள்ளக்காரதுரை' படங்களில் ஹீரோக்களை மிஞ்சும் அளவுக்குத் திரையில் அதிக நேரம் தோன்றிப் பாட்டு, நடனம், சண்டை எனக் கிடுகிடுக்க வைத்தார் சூரி. அப்பாவித்தனமான உடல்மொழியும், வார்த்தை சுழட்டல்களும், அசலான வட்டார வழக்கும், டங்கிலீஷும் சூரியை வடிவேலுவுக்கு மாற்றாகவே மாற்றிவிட்டன.

மொத்தத்தில் 2014-ல் காமெடி கம்மிதான் என்றாலும், கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சூரி காமெடி களத்தில் முன்னணியில் நிற்கிறார். இவருக்குப் ‘பெயர்’ பெற்றுத்தந்த பரோட்டா காட்சியைப் போல நினைத்து நினைத்துச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் காட்சிகளை உருவாக்கும் பட்சத்தில் காமெடியன்கள் வரலாற்றில் அவருக்கும் ஒரு இடம் கிடைக்கும்.

கிட்டத்தட்ட எல்லாப் படங்களுமே சிரிக்கவைக்க முயற்சிக்கின்றன. முழு நீள காமெடிப் படங்களும் வந்துள்ளன. ஆனால் ‘ஜிகர்தண்டா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘மான் கராத்தே’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’என்று ஒரு சில படங்கள் மட்டுமே அந்த நோக்கத்தை நிறைவேற்றியிருக்கின்றன. தனி காமெடியன் என்று பார்த்தால் சூரி வாகை சூடுகிறார். வாய்விட்டுச் சிரிக்க வைத்த படம் எதிலும் சூரி இல்லை என்பதைப் பார்க்கும்போது முரணாகத் தெரியும். இந்த முரண்தான் 2014-ன் சிரிப்புக் களத்தின் சாரம்.

கா. இசக்கிமுத்து

Friday, January 2, 2015

Bodies of 30 AirAsia passengers found

16:57 02-01-2015
IPN
Rescuers have found bodies of 8 more AirAsia passengers. According to foreign media, 30 bodies in total have been recovered so far.

Underwater search efforts were recently stopped because of strong waves.

The A320-200 plane disappeared 42 minutes into its flight. 162 people were on board. 157 of them were from Indonesia, 3 - from South Korea and one - from Singapore.

GRANT OF NOTIONAL INCREMENT TO GOVERNMENT SERVANTS WHO RETIRES ON SUPERANNUATION ON THE PRECEDING DAY OF INCREMENT DUE DATE- ORDERS




NEWS TODAY 25.05.2026