Tuesday, October 20, 2015

இ-மெயில் திருத்த சேவை!..vikatan

இ-மெயில்-மெயிலை பயன்படுத்துவது எப்படி என பாடம் நடத்துவது எல்லாம் இனி தேவையில்லாத விஷயம் என்றுதான் நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் இ-மெயிலை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக எல்லோரும் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. சரியாக எனும் போது மறுமுனையில் இருப்பவர் அதிருப்தியோ,ஆவேசமோ அடையாத வகையில் வாசகங்களை மெயிலில் இடம்பெறச்செய்வது!

ஏனெனில் மெயிலில் நாம் பயன்படுத்திம் தொனி அதை வாசிப்பவர் மனதில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதிலும் போகிற போக்கில் அதிகம் யோசிக்காமல் அனுப்பி வைக்கப்படும் மெயில்கள் வர்த்தக முறிவுகளை கூட உண்டாக்கலாம்.
இதற்கு முக்கிய காரணம், கடிதம் எழுதும் போது அதற்கென ஒரு வடிவத்தை, அலுவல் மொழியை பயன்படுத்த பழகியிருப்பது போல அதன் நவீன கால வடிவமான ஈ-மெயிலுக்கு என ஒரு அமைப்புக்கு நாம் பழகியிருக்கவில்லை என்பதுதான்.

அலுவலகத்தில் உடன் பார்க்கும் நண்பருக்கு மெயில் அனுப்பும் போது, கோப்பு தேவை அனுப்பவும் என ஒற்றை வரியை டைப் செய்வதற்கும், தயவு செய்து,இந்த கோப்பை உடனே அனுப்பி வைக்கவும் என கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இப்படி இ-மெயில் அனுப்பும் போது அதில் இடம்பெறும் வாசகங்களில் அலட்சியம், ஆணவம் போன்ற தொனி கேட்பதை தவிர்கக்ச்செய்யும் சேவையை, பாக்ஸ்டைப் அறிமுகம் செய்துள்ளது. இ-மெயில் திருத்தச்சேவையான இதில், நாம் உத்தேசித்துள்ள வாசகங்களை டைப் செய்தால் அவற்றை சரி பார்த்து, பணிவு அம்சம் கொண்ட வாசகங்களாக மாற்றித்தருகிறது.

மெயிலில் உள்ள வார்த்தைகளில் எவை பணிவற்றவை என சுட்டிக்காட்டி, அவற்றை எப்படி மாற்றலாம் எனும் ஆலோசனை சொல்கிறது. நண்பர்களுக்கு அனுப்பும் மெயில்களை கூட விட்டுவிடலாம். ஆனால் வர்த்தக நோக்கிலான மற்றும் அலுவல் நோக்கிலான மெயில்களில் இந்த கவனம் மிகவும் அவசியம். இந்த சரி பார்த்தல் சேவையை ஜிமெயிலுடன் இணைந்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

இதன் பரிந்துரைகள் 100 சதவீதம் துல்லியமானவை என்று சொல்ல முடியாது என்றாலும், இ-மெயில் நாகரீகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சேவை. ஆங்கில மொழியில் உள்ள வாசகங்களை மட்டுமே இந்த சேவை திருத்தி தருகிறது என்றாலும் கூட, இதன் பின்னே இருக்கும் அடிப்படை அம்சங்கள் எந்த மொழியில் இ-மெயில் அனுப்பும் போதும் கவனிக்க வேண்டியவைதான்.

இணைய முகவரி:https://labs.foxtype.com/politeness

- சைபர் சிம்மன்

Monday, October 19, 2015

நுகர்வோரே விழித்திருங்கள்.....dinamani


By எஸ். பாலசுந்தரராஜ்

First Published : 19 October 2015 02:01 AM IST


நாம் கடையில் சென்று ஒரு பொருளை வாங்கும்போது, பெரும்பாலானோர் அதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை அல்லது அக்மார்க் முத்திரை உள்ளதா என கவனிப்பதில்லை.
மேலும் பலர் தயாரிப்பு தேதி, காலாவதி தேதியையும் பார்ப்பதில்லை. பொதுமக்களின் இந்த அறியாமையை சில வியாபாரிகள் பயன்படுத்தி தங்களது பொருள்களை விற்பனை செய்து விடுகிறார்கள். எனவே, நுகர்வோர் விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமாகிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, பகுதி2(1)(டி) பிரிவின்படி நுகர்வோர் என்பதன் விளக்கம், பணம் கொடுத்து ஒரு பொருளையோ, பணியையோ, சேவையையோ தன் சொந்த உபயோகத்திற்கு பெறும் ஒருவர் நுகர்வோர் ஆவர். பொருளை வணிக நோக்கத்துடன் வாங்கும் நபர் நுகர்வோராக இருக்க முடியாது.
இருப்பினும், தனது சுய வேலைவாய்ப்பிற்காக அல்லது தனது வாழ்வின் ஆதாரத்திற்கான பொருளை வாங்கியிருப்பவர் அவர் நுகர்வோராகக் கருதப்படுவார். பொருளின் தரம், எடை, அளவு, தூய்மை போன்றவற்றில் குறைபாடு இருந்தால் அந்தப் பொருளை தரமற்ற பொருள் என கருத வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, பிரிவு2(1)(ஜி) பிரிவின் படி பணம் கொடுத்து சேவையைப் பெற்றுக்கொள்ளும்போது, வாக்களித்தபடி சேவை கொடுக்கப்படாமல் சேவை பெற்றவரை இன்னல்களுக்கு ஆளாக்குவது சேவை குறைபாடு ஆகும்.
உதாரணமாக, பேருந்து பயணத்தின் போது பணம் கொடுத்து பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர் அல்லது நடத்துநர் நம்மை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினால் அல்லது குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாவிட்டால் அது சேவை குறைபாடு ஆகிறது. இது பணம் கொடுத்து வாங்கும் சேவைகள் (சர்வீஸ்) எனப்படும்.
தொலைபேசி சேவை, காப்பீடு சேவை, பணம் கொடுத்துப் பெறும் மருத்துவச் சேவை, வங்கிச் சேவை, ரயில்வே சேவை, உணவு விடுதி உள்ளிட்டவையும் இதுபோன்ற பணம் கொடுத்து வாங்கும் இதர சேவைகள்.
நுகர்வோர் சேவை குறைபாடுகள், பொருள்களின் அளவு, தரம் குறித்து புகாரின் தன்மையைப் பொருத்து மாவட்ட, மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் செய்யலாம்.
கோரும் நஷ்டஈட்டுத் தொகை ரூ.20 லட்சம் வரை இருந்தால் மாவட்ட நீதிமன்றத்திலும், ரூ.20 லட்சத்திற்குமேல் ஒரு கோடி ரூபாய் வரை இருந்தால் மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலும், ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்டு இருந்தால் தேசிய நுகர்வோர் தீர் ஆணையத்திடம் நேரடியாகப் புகார் செய்யலாம்.
பொருள் அல்லது சேவையை விலைகொடுத்து வாங்கிய நபர், பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பு, மத்திய, மாநில அரசு, ஒத்த நோக்கங்களைக் கொண்ட நுகர்வோரின் சார்பில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நுகர்வோர் கூட்டாக புகார் செய்யலாம்.
நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யும் முன்னர் வாங்கிய பொருள்களுக்கான ரசீதை அவசியம் வைத்திருக்க வேண்டும்.
அனைத்து மூல ஆவணங்களையும் ஒரு கோப்பில் வைத்திருங்கள். நீதிமன்ற உத்தரவின்றி வேறு எவரிடமும் அதைக் கொடுக்காதீர்கள். தேவைப்படும்போது நகல் எடுத்து பயன்படுத்துங்கள்.
புகார் செய்பவரின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, எதிர்தரப்பினர் பெயர் மற்றும் முழுமையான முகவரி, பொருள் வாங்கிய மற்றும் சேவை பெற்ற தேதி, செலுத்தப்பட்ட தொகை, பொருள்களின் விவரம், வர்த்தக நடைமுறை, குறையுள்ள பொருள், சேவையில் குறைபாடு, கூடுதல் கட்டணம் வசூலித்தது, இவற்றில் எதைப் பற்றி கூற வேண்டுமோ அது குறித்து தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
பட்டியல், ரசீது நகல்கள், இதுதொடர்பான கடிதப் போக்குவரத்து இருப்பின் அதன் நகல்கள், இந்தச் சட்டத்தின் கீழ் எதிர்நோக்கும் நிவாரணத் தொகை உள்ளிட்ட விவரங்கள் நீங்கள் அளிக்கும் புகாரில் இருக்க வேண்டும்.
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய, ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு கோரினால் ரூ.100-ம், ஒன்று முதல் ஐந்து லட்சம் வரை ரூ.200-ம், ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் வரை ரூ.400-ம், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ரூ.500-ம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வரைவு காசோலையாக புகாருடன் இணைக்க வேண்டும்.
மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ரூ.2,000-ம், 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை ரூ.4,000-ம் வரைவு காசோலை இணைக்க வேண்டும்.
தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரூ.5,000}துக்கு வரைவு காசோலையை இணைக்க வேண்டும்.
தில்லியில் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி அமர்ந்திருந்த பயணியிடம், திருடன் ஜன்னல் வழியே நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டான். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் ரயில்வே சேவை குறைபாட்டினால்தான் திருட்டு நடைபெற்றது என நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ரயில்வே நிலையத்திற்குள் கட்டணம் செலுத்திய பின்னர்தான் பயணி நிலையத்திற்குள் வருகிறார்.
எனவே, திருட்டு நடைபெற்றது ரயில்வே துறையின் சேவை குறைபாடுதான். உரிய நஷ்டஈட்டை ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, நுகர்வோரே விழித்திருங்கள்.

திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு!


Dinamani


By ஆசிரியர்

First Published : 19 October 2015 01:58 AM IST


உச்சநீதிமன்றம், 99-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தையும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014-ஐயும், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும், நீதிபதிகளே நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழிமுறையே தொடர வேண்டும் என்று ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறிவிட்டது. நடைமுறையில் இருக்கும் முறையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தவும், மாற்றங்களைக் கொண்டு வரவும் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் நவம்பர் 3-ஆம் தேதி அமர்வு மறுபடி கூடும்போது அரசு முன்வைக்கலாம் என்றும் தீர்ப்பு கூறியிருக்கிறது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014, நாடாளுமன்றத்தால் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, 20 சட்டப்பேரவைகளின் ஒப்புதலையும் பெற்ற சட்டம். இந்தச் சட்டத்தின் மூலம் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், எந்தத் தகுதி, காரணங்களுக்காக ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் என்பதை மக்கள் மன்றத்துக்குத் தெரிவிக்காமல், நீதிபதிகளே நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றது நாடாளுமன்றம்.
இதை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம், நாடாளுமன்றத்தால்கூடக் கேள்வி கேட்க முடியாத அதீத அதிகாரம் தங்களுக்கு இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிவிட்டிருக்கிறது நீதித் துறை. அரசியலமைப்புச் சட்டம், மத்திய அரசு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறதே தவிர, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனைப்படி என்றோ, பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு என்றோ குறிப்பிடவில்லை.
மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கல் போன்ற இந்திரா அரசின் நடவடிக்கைகளை, அன்றைய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது, அரசுக்குக் கட்டுப்பட்ட நீதித் துறையை இந்திரா காங்கிரஸ் அரசு ஏற்படுத்த முற்பட்டது. கேசவானந்த பாரதி வழக்கில், நாடாளுமன்றத்துக்கு அரசியல் சாசனத்தை மாற்றவோ, சுருக்கவோ அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பிரதமர் இந்திரா காந்தியை மேலும் கோபப்படுத்தியது. அந்தத் தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளையும், பதவிமூப்பு வழக்கத்தைப் புறக்கணித்துவிட்டு தமக்கு வேண்டிய ஒருவரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்தார் பிரதமர் இந்திரா காந்தி.
அப்போது முதல் தொடங்கியது நீதித் துறைக்கும் நாடாளுமன்றத்துக்குமான மோதல். 1980 முதல் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் அரசுக்குத்தான் முன்னுரிமை நிலவி வந்தது. 1993-இல், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, நீதிபதி ஜே.எஸ். வர்மா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் "கலந்தாலோசித்து' என்பதை மாற்றி "ஆலோசனையின் பேரில்' என்று புதிய விளக்கத்தைக் கொடுத்தார். அதுமுதல் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் முறை தொடங்கியது. ஓய்வுபெற்ற பிறகு, நீதிபதி வர்மாவே தனது தீர்ப்பின் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டார். நீதித் துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.
நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை அரசுக்கு எதிரானவை எனும் நிலையில், அரசின் கைப்பாவையாக நீதித் துறை செயல்பட்டால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்கிற நீதித் துறையின் வாதத்தைத் தள்ளிவிட முடியாது. நீதித் துறையின் சுதந்திரம் அரசியல் தலைமையின் தலையீட்டால் பாதிக்கப்படுவதும், ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அதேநேரத்தில், தலைமை நீதிபதிக்கும் அவரால் தேர்ந்தெடுக்கப்படும் குழுவினருக்கும் வேண்டப்பட்டவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லைதான். ஊழலும் முறைகேடுகளும் அதிகரித்துவிட்ட நிலைமையில், அரசுக்கு நீதிபதிகள் நியமனத்தில் முழு அதிகாரம் அளிப்பது என்பது, உச்ச, உயர்நீதிமன்ற நியமனங்கள்கூட விலை பேசப்படும் அவலத்துக்குத் தள்ளப்படும் அவலத்தை ஏற்படுத்தக்கூடும். நீதித் துறையிலும் ஊழலும், வேண்டியவர் வேண்டாதவர் என்கிற பாகுபாடும், திறமையைவிடத் தோழமைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் செயல்பாடும் காணப்படுவதாக ஓய்வுபெற்ற சில நீதிபதிகளே வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் இப்போதைய முறை தொடர்வதும் சரியல்ல.
அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிபரால் நியமிக்கப்பட்டு மேலவையின் ஒப்புதலைப் பெறுவதாக இருக்கிறது. இங்கிலாந்தில், இதற்கென்று ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளிலிருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் நீதிபதிகளாக அரசியால் நியமிக்கப்படுகிறார்கள். அரசுக்கு நியமனத்தில் எந்தவித அதிகாரமோ, கருத்தோ இருக்க முடியாது என்கிற வாதம் மக்களாட்சியில் ஏற்புடையதல்ல.
ஆலோசனைகளும், பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன என்று நீதிபதிகளின் அமர்வே கூறியிருக்கும் நிலையில், இப்போதைய முறையில் தவறுகள் இருப்பதை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருள். தவறு திருத்தப்படுவதுதான் முறை. மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது இப்போதைய நியமன முறையில் அல்ல. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தில்தான். எங்கெல்லாம் திருத்தங்கள் தேவை என்பதைத்தான் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்க வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்தின் முடிவை ஒட்டுமொத்தமாக விசிறி அடித்திருப்பது நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தின் தேவைக்கு மேலும் வலு சேர்க்கிறது!

Sunday, October 18, 2015

சீனப்பட்டாசை தடுக்கவேண்டியது யார்?...daily thanthi

அடுத்த மாதம் 10–ந் தேதி தீப ஒளித்திருநாளாம் தீபாவளி வருகிறது. எவ்வளவு போனஸ் வரும்?, அதற்கு என்னென்ன செலவுகள் இருக்கும்? என்று மனதில் உள்ள கால்குலேட்டர்களை வைத்து கணக்கிடும் வேலைகள் இப்போதே குடும்ப தலைவர்களுக்கு தொடங்கிவிட்டது. இல்லத்தரசிகளுக்கோ இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன பலகாரங்கள் செய்யலாம்? என்பது தொடங்கி துணிமணிகள் உள்பட பல யோசனைகள் நிழலாடும். ஆனால், எது இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பட்டாசு என்றால் தனி மகிழ்ச்சிதான். பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை.

தீபாவளி நெருங்கும் இந்த வேளையில், சென்னை முதன்மை சுங்க ஆணையர் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரம், ஒரு அபாய எச்சரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. ‘‘வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பட்டாசுகள் தொடர்பாக ஓர் எச்சரிக்கை’’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த விளம்பரத்தில், ‘‘இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், பட்டாசுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது. ஏனென்றால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரைடு என்னும் வேதிப்பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது மட்டுமன்றி, திடீரென்று வெடிக்கக்கூடியதாகும். மேலும், இவ்வகைப் பட்டாசுகள் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவதோடு, சுகாதாரக்கேடுகளையும் விளைவிக்கும். பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு நலன் கருதி, மேற்கூறிய வெளிநாட்டு பட்டாசுகளை யாராவது கையிருப்பில் வைத்திருந்தாலோ, அல்லது விற்பனை செய்தாலோ, அதன் விவரங்களை உடனே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று கூறப்பட்டு இருந்தது. சீனாவில் இருந்துதான் சட்டவிரோதமாக இந்த பட்டாசு இறக்குமதி செய்யப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை சொல்வதற்கு ஏன் தயக்கம்?

சீனாவில் உற்பத்தி செய்து கள்ளத்தனமாக கொண்டுவரப்படும் பட்டாசுகள் பொட்டாசியம் குளோரைடு கொண்டும், தமிழ்நாட்டில் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசு அலுமினியம் நைட்ரேட்டாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பொட்டாசியம் குளோரைடால் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அதிக குளிர் பிரதேசத்துக்குத்தான் பொருத்தமானது. இந்தியா போன்ற வெப்பமான பிரதேசங்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. திடீர் விபத்துக்களை உருவாக்கி ஆனந்த தீபாவளியை கண்ணீர் தீபாவளியாக்கிவிடும். பொட்டாசியம் குளோரைடைவிட, அலுமினியம் நைட்ரேட் விலை இருமடங்குக்கு மேல் அதிகம், அதுமட்டுமல்லாமல், அலுமினியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் அளவில் 10–ல் ஒரு பங்கு பொட்டாசியம் குளோரைடை பயன்படுத்தினால் போதும். இதுபோல பல காரணங்களால்தான் ஆபத்து மிகுந்த சீன பட்டாசின் விலை மிகக்குறைவாக இருக்கிறது. ஆனால் குறைந்த விலை என்பதால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கமுடியுமா? சீனபட்டாசு இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. அப்படியும் இந்தியாவுக்குள் நுழைகிறது, தாராளமாக கிடைக்கிறது என்றால் அதைத்தடுக்கவேண்டிய அதிகாரிகள் ஏன் செய்யவில்லை? என்று மத்திய–மாநில அரசுகள் கேட்கவேண்டும்.

இந்த பட்டாசுகள் சீனாவில் இருந்து திருட்டுத்தனமாகத்தான் கொண்டுவரப்படுகின்றன, மும்பையில் இருந்தும், தூத்துக்குடி துறைமுகம் மூலமாகவும் கண்டெய்னர்களில் கொண்டுவரப்படுகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக சட்டசபையில் அமைச்சரே சொல்லியிருக்கிறார். எனவே, சுங்கத்துறை பொதுமக்களுக்கு சொல்வதுபோல, எப்படி வந்தது? என்று அந்த துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவேண்டும். மேலும், சீன பட்டாசை விற்பனை செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் சரக்குகள் தேங்கிப்போய்விடும், இனி வியாபாரிகள் யாரும் வாங்கவும்மாட்டார்கள். அதை தீவிரமாக செய்யவேண்டும்.

பம்பையில் ஆடைகளை வீசினால் ஆறு ஆண்டு சிறை: கேரள ஐகோர்ட் உத்தரவு..dinamalar

சபரிமலை: பம்பையில் பக்தர்கள் ஆடைகளை வீசி எறிந்தால் அவர்களுக்கு ஆறு ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும், இல்லாத ஆச்சாரங்களை உருவாக்கும் குருசாமிக்கும் தண்டனை உண்டு என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சபரிமலை பயணத்தில் பக்தர்கள் பம்பையில் குளிக்க வேண்டும். பம்பையில் குளிப்பதன் மூலம் பாவங்கள் களையப்படுகிறது என்பது நம்பிக்கை. ஆனால் பக்தர்கள் இந்த நதியையும் அசுத்தப்படுத்துவதுதான் வேதனை. தரிசனம் முடிந்து வரும் போது தங்கள் உள்ளாடைகள் உள்ளிட்ட அனைத்து ஆடைகளையும் வீசி எறிவது, பம்பையில் உணவு சாப்பிட்டு விட்டு அதன் எச்சில் இலைகளை பம்பையில் கொண்டு போடுவது என இல்லாத ஆச்சாரங்கள் சமீப காலமாக வளர்ந்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்று தந்திரிகள், தேவசம்போர்டு என அனைத்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. மகரவிளக்கு காலத்தில் பம்பை நதி மிக மோசமாக அசுத்தமாகிறது.
இது தொடர்பாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு ஆணையர் அளித்த அறிக்கையின் பேரில் நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், அனு சிவராமன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
பம்பை நதி அசுத்தம் அடையாமல் இருக்க மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் அணிந்த ஆடைகளை பம்பையில் போட வேண்டும் என்ற ஆச்சாரம் சபரிமலையில் கிடையாது. ஆனாலும் பக்தர்கள் இவ்வாறு செய்கின்றனர். இவ்வாறு ஆடைகளை வீசுவது தடை செய்யப்படுகிறது. மீறி வீசுபவர்களுக்கு ஒன்றரை முதல் ஆறு ஆண்டு வரை சிறைத்தடைனையும், அபராதமும் விதிக்கலாம்.
பக்தர்களை அழைத்து வரும் குருசாமிகளின் உத்தரவு படிதான் பக்தர்கள் பம்பையில் ஆடைகளை வீசுகிறார்கள். இனி குருசாமிகள் அப்படி செய்தால், குற்றம் செய்ய துண்டியதாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆடைகளை போடுவதற்கு இணையான தண்டனை வழங்கலாம். இந்த விஷயத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தேவசம்போர்டும், போலீசும் உறுதுணையாக இருக்க வேண்டும். பம்பை நதிக்கரையில் அந்தந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளும், பம்பையில் ஸ்பெஷல் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பம்பையில் ஆடைகளை வீசினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற விபரத்தை பக்தர்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்த தேவசம்போர்டும், மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பை முடிக்க யு.ஜி.சி., புது கெடு

'படிப்பு காலம் தவிர கூடுதலாக, மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, 'ரேங்கிங்' வழங்கப்படும்' என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி, அறிவித்துள்ளது.இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட பட்டப்படிப்புகள் படிப்போர், பல காரணங்களால், இடையில் படிப்பை விட்டாலோ, சில பாடங்களில் தேர்ச்சி அடையா விட்டாலோ, ௧௦ ஆண்டுகளுக்குள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். இந்த காலநீட்டிப்பு பல்கலைக்கு பல்கலை, கல்லுாரிக்கு கல்லுாரி மாறுபடும்.இந்த நிலையில், யு.ஜி.சி., புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'இளங்கலை அல்லது முதுகலை படிப்பில், அதற்கான கால அளவுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். முடிக்காதவர்கள், இரண்டு ஆண்டுகளில் முடிக்கலாம். அதையும் தாண்டினால், ஓர் ஆண்டு கூடுதலாக வழங்க முடியும். அதற்கு மேல் கால தாமதம் ஆனால், அந்த பட்டத்துக்கு,'ரேங்கிங்' வழங்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.இந்த அறிவிப்புக்கு கல்லுாரி ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர்கள் கூறியதாவது:எப்படியாவது படிக்க வேண்டும் என முயற்சி எடுப்போர் மட்டுமே, தேர்வை இடைவெளி விட்டு எழுதியாவது பட்டம் பெறுவர். அந்த வாய்ப்பு மறுக்கப்படுவோருக்கு இந்த உத்தரவு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

பெண் எனும் பகடைக்காய்: மதிப்பிழந்துபோன பெண் உழைப்பு ...............பா.ஜீவசுந்தரி



வீட்டுப் பணிப்பெண்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெறாத பத்திரிகைகள் ஏதும் உண்டா? உண்மையில் வீட்டு வேலை செய்யும் இந்தப் பெண்களின் நிலை நகைச்சுவைக்கு உரியது மட்டும்தானா? வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை வீட்டுப் பணிப்பெண் ஒருநாள் வேலைக்கு வராவிட்டாலும்கூட அந்த வீடு வீடாக இருக்காது. வீட்டுப்பணி என்பது நச்சரிக்கும் பணி; அதற்கு முடிவென்பதே இல்லை. எவ்வளவு வேலைகள் வளர்ந்தால்தான் என்ன? வீட்டு ஆண்கள் உதவிடவா போகிறார்கள்? அந்த மனமாற்றம் இன்னமும் இங்கு வராதது ஆகப் பெரும் சோகம். விதிவிலக்குகள் எங்கும் உண்டு.

வேலைக்குப் போகும் இல்லத்தரசிகளின் இமாலயப் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்பவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள் மட்டும்தான். பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்கித் துடைத்தல் இவை மூன்றும் மிக அவசியமான, கடினமான பணிகள். சில வீடுகளில் தேவை கருதி சமையலுக்கும் ஆட்களை அமர்த்திக்கொள்கிறார்கள். இன்னும் குழந்தையைக் கவனிப்பது, முதியோரைக் கவனிப்பது போன்றவையும் இதில் அடக்கம்.

இளக்காரமான பணி

இவ்வளவு பணிகளைச் செய்யும் பணிப்பெண்ணுக்கு ‘வேலைக்காரி’என்ற ஏளனமான ஒற்றைச் சொல் தவிர்த்து என்ன மதிப்பு இருக்கிறது? ஆண்டாண்டு காலமாக நம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்குள் செய்துகொண்டிருக்கும் இந்த வேலைகள் மீது எந்த மதிப்பும் இல்லாததே இதற்கு மூல காரணம். ஊதியம் ஏதுமின்றித் தங்கள் உழைப்பை அவர்கள் செலுத்திக் கொண்டேயிருப்பதால், அது மதிப்பிழந்து போகிறது. அதனால்தான் நாள் முழுதும் சிறுகச் சிறுக வேலைகளைக் கவனித்துக்கொண்டே ‘சும்மா’ இருப்பதாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் மனநிலையை நோக்கி ‘இல்லத்தரசிகள்’ தள்ளப்பட்டிருக்கிறார்கள். தங்கள் பணியைத் தாங்களே மதிக்காத பெண்களால் பணிப்பெண்களின் உழைப்பை எப்படி மதிப்பீடு செய்ய இயலும்? அவர்கள் கனிவோடு அணுகப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.

கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த சக மாணவியைப் பார்த்து ‘நீயெல்லாம் கரிச்சட்டி கழுவத்தான் லாயக்கு’ என்று ஆசிரியப் பெருந்தகை இட்ட சாபத்தைக் கேட்டு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவள் நான்! கரிச்சட்டி கழுவுதல் அவ்வளவு கேவலமா?

வீட்டுப் பணிப் பெண்கள் யார்?

பெரும்பாலும் முறையான பள்ளிக் கல்வியை முடிக்காதவர்கள். கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள். ஆண்களின் வருமானம் முழுமையாகக் குடும்பத் தேவைகளுக்குச் சென்று சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத குடும்பங்களிலிருந்து வருபவர் கள். ஏனென்றால், வந்தால் வீட்டுக்கு லாபம், இல்லையேல் நாட்டுக்கு என்று ‘டாஸ்மாக்’ கடைக்குச் சென்று சேரும்.

எளிதானதா வீட்டுப் பணி?

விடியும் முன்பே தொடங்கும் இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை. கணவன், குழந்தைகளுக்கான உணவு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஆறு, ஆறரை மணிக்குக் கிளம்பினால் நாலு அல்லது ஐந்து வீடுகளை முடித்துவிட்டுத் திரும்புவதற்குப் பிற்பகல் 2 அல்லது 3 மணிகூட ஆகலாம். பணி செய்யும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு திக்கில் இருக்கும். அதற்கான போக்குவரத்து அல்லது நடை நேரம் பணி நேரமாகக் கணக்கில் வராது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பவும் முடியாது. கொசுறாக அவர்கள் சொல்லும் வேலைகளை முடித்துவிட்டுத்தான் செல்ல முடியும். மாலையிலும் சில வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். மொத்தமாக வெளியில் 14 மணிநேரம், தனது வீட்டில் ஐந்து, ஆறு மணிநேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது.

பணிச் சுமையை மிஞ்சும் மன வலி

தனது நேர்மையை எப்போதுமே நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஏழ்மை நிலைதான் அதற்கும் காரணம்! நம்பிக்கையின்மை, எப்போதும் சந்தேகக் கண் கொண்டு அணுகுவது, வேலைக்குதான் வந்துவிட்டார்களே என்பதற்காக மிகவும் கீழ்த்தரமாக நடத்துவது, அவர்களுக்காகவே ‘ஸ்பெஷலாக’ தயாரித்து அளிக்கப்படும் காபி, டீ, சில வீணாய்ப்போன, எஞ்சிப்போன உணவு வகைகள், ஓயாமல் வேலைகளை ஏவிக்கொண்டே இருப்பது, விடுமுறை அளிக்க மறுப்பது இப்படிப் பல.

பிரச்சினைகளிலேயே மிகவும் சிக்கலானது, வீட்டு எஜமானர்களால் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். பெரும்பாலும் அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை; அப்படியே சொன்னாலும், உண்மை என்ன என்பது மனசாட்சிக்குத் தெரிந்தே இருந்தாலும் எந்த வீட்டு எஜமானியும் தங்கள் வீட்டு ஆணை அது கணவனோ, மகனோ, அண்ணன், தம்பியோ யாராக இருந்தாலும் விட்டுத்தரத் தயாராக இருப்பதில்லை. இங்கும் பணிப்பெண்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவாள். அவள் வேலை பறிபோகும் அபாயமும் இருக்கிறது.

பணிப்பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்றால், ஒரு சிலர் கைக்கு அகப்படும் எளிய பொருட்களை எடுத்துக்கொண்டு போவது, முன்னறி விப்பின்றி விடுமுறை எடுத்துக்கொண்டு காலை வாரி விடுதல் போன்றவை சொல்லப்படுகின்றன.

எத்தனை காலத்துக்கு இந்த வேலை?

சரி, ஒரு பெண் எத்தனை காலத்துக்கு வீட்டு வேலைகளைச் செய்து பிழைக்க முடியும்? மேலும் அளவுக்கு அதிகமான வீட்டுப் பணிகளால் ஏற்படும் உடல் பாதிப்புக்கு யார் பாதுகாப்பு? அனைத்து விதமான துணிகளையும் சலவை இயந்திரத்தில் துவைத்துவிட முடியாது. கால் மிதி, குழந்தைகளின் துணிகள், பள்ளிச் சீருடை, அதிலும் குறிப்பாக வெள்ளைத் துணிகள், சாக்ஸ் போன்றவை இவர்களின் ‘கைவண்ண’த்துக்காகவே காத்திருக்கும்.

சோப்புத் தூள், சோப்புக் கட்டிகள், பாத்திரம் துலக்கும் பவுடர், சோப்பு, சோப்பு நீர்க் கரைசல்கள் போன்ற வேதியியல் பொருட்களை நாள் முழுவதும் கையாள்வதால் அவை கைகளைப் பதம் பார்க்கின்றன. கைகள் எப்போதும் ஈரத்தில் ஊறியபடி இருப்பதால் எந்த நேரமும் வலி இருக்கிறது. சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படுகிறது. இவ்வளவு கடினமான பணிகளைச் செய்ய வேண்டுமானால் அதற்கேற்ப நல்ல சத்துள்ள உணவும் வேண்டுமல்லவா? அது இல்லாததனால் உடல்ரீதியாகவும் தளர்ந்து போகிறார்கள்.

எல்லா வீட்டிலும் எல்லா வேலைகளையும் எல்லோரும் ஏற்பதில்லை. ஏதாவது ஒரு வேலையை மட்டும் ஒவ்வொரு வீட்டில் ஏற்பது என்ற நிலையும் இருக்கிறது. அப்படியானால் எந்த வேலைக்கு எவ்வளவு ஊதியம்? வீட்டுப் பணிப்பெண்களுக்கான அமைப்புகள் இருந்தபோதும் அனைவரும் அதில் பங்கேற்பதில்லை. எத்தனையோ முறைசாராத் தொழில்களுக்கு அரசே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கிறது. அவர்களுக்கு வாரியம் அமைக்கிறது. ஈ.எஸ்.ஐ., காப்பீடு வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால் பணிப்பெண்களுக்கு இது எதுவும் இல்லை. ஊதியத்தைப் பொறுத்தவரை குத்துமதிப்பாக ஏதோ கொடுக்கப்படுகிறது.

நடப்பிலுள்ள இந்த நிலையை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பணிப்பெண் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறார். அவர்களின் பாதுகாப்பில் நமக்கும் அக்கறை இருக்கிறது.

கொசுறு



கடந்த 2009-ம் ஆண்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக ஆலோசனைக் குழு ஒன்றை அரசு நியமித்தது. வேலை செய்யக்கூடிய நகரங்களுக்கு ஏற்ப ஒரு மணி நேரத்துக்கு தலா ரூ. 25/- முதல் ரூ. 30/- வரை ஊதியமாக நிர்ணயிக்கலாம் என்று அந்தக் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. ஆனால், அரசு அதைச் செயல்படுத்தவில்லை. இப்போது ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50/- ஊதியமாக அளிக்கப்பட வேண்டுமென்று தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர்கள் இயக்கம் மீண்டும் கோரிக்கை வைத்திருப்பதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வருமா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...